அவள் கவனம் முழுவதும் வேலையில் இருந்தாலும், மனம் விடுமுறை குறித்தே யோசித்து அதிலேயே உழன்று கொண்டிருந்தது.
விடுமுறைக்கு விண்ணப்பித்து ஈமெயில் அனுப்பினாள். அதற்கு வந்த பதில் அவளுக்கு உகந்ததாக இல்லை.
“உனக்கு ரெண்டு வாரம் டைம் இருக்கு. நல்லா யோசிச்சு முடிவெடு” என்று இளங்கோ சொன்னதும் இப்போது மனதில் வந்துப் போனது. அவள் தற்போது இருக்கும் சூழலில் வேலைக்கு வருவதே பெரிதாக இருக்கையில், சிஏ இறுதி தேர்வு எழுதுவது குறித்த எண்ணமே அபத்தமாக தோன்றியது. மீண்டும் அவளின் ஆசை நிராசையாகப் போவதின் அறிகுறி அப்பட்டமாக தெரிய, தலையை உலுக்கி கவனத்தை வேலையில் பதித்தாள்.
மாலை அலுவலக நேரம் முடிந்தும், அவள் முன் முடிக்கப்படாத வேலைகள் குவிந்திருக்க, அதை மறுநாளுக்கு ஒத்தி வைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
ஏழு மணிக்கு வீடு வந்த மகளை கண்களால் கண்டித்து கதவை திறந்து விட்டார் பாக்கியம்.
அம்மாவின் வாசத்தை நட்சத்திரா எப்படித்தான் கண்டுபிடிப்பாளோ, அறையின் உள்ளிருந்து ஓடி வந்து, “அம்மா” என்று வானதியின் காலைக் கட்டிக் கொண்டாள்.
“நல்ல மழை இல்லம்மா? இப்படி விடாம கொட்டுது. பாவம், எப்படித்தான் வேலைக்கு போய்ட்டு வர்றீங்களோ?” என்று ஹாலில் அமர்ந்திருந்த சந்திர சேகர் அவளிடம் அக்கறையுடன் கேட்க, “இந்த ரெண்டு மாசம் இப்படித்தான் மாமா இருக்கும். எங்களுக்கு பழகிடுச்சு.” என்றாள்.
“நீங்க காஃபி குடிச்சீங்களா? நான் போட்டு எடுத்துட்டு வரவா?”
“இல்லம்மா. காஃபி வேணாம். ஆனா, அதை குடிக்காமயும் இருக்க முடியல. கொஞ்சமா சுக்குத் தண்ணி வச்சு தர்றியா?”
“இந்தா போட்டு எடுத்துட்டு வர்றேன் மாமா” என்ற வானதி மகனை தேட, அவளுக்கான காஃபியுடன் சமையல் அறைக்குள் இருந்து வந்தான் நேத்ரன்.
அவள் புன்னகையுடன் பார்க்கவும், “ஆச்சி போட்டு கொடுத்தாங்க” என்றான் சிரித்துக் கொண்டே.
“தேங்க்ஸ் செல்லக் குட்டி” கோப்பையை கையில் வாங்கி, மகனின் தோளில் தட்டினாள். ஹரிணியும் சிறிய தட்டில் வடையுடன் வர, கைப்பையில் இருந்து அவளுக்காக வாங்கிய வண்ண வண்ண பேனாக்களை தேடி எடுத்துக் கொடுத்தாள்.
“தேங்க்யூ அத்த” மலர்ந்த முகத்துடன் சொன்னாள் ஹரிணி. நேத்ரன் அவள் முன்னே வந்து கைக் கட்டிக் கொண்டு நிற்க, அவனுக்கும் அவன் பல நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த பேனாவை எடுத்து நீட்டினாள்.
“அப்பா வாங்கித் தருவாங்கன்னு நினைச்சேன். பரவாயில்ல மா, நீங்களே வாங்கித் தந்துட்டீங்க” என்று அவன் சொல்லவும், செல்லமாய் அவன் தலையில் குட்டு வைத்தாள்.
“ஆ..” என்று வலிப்பது போல கத்திக் கொண்டு உள்ளே ஓடினான் அவன்.
“நீ இப்பத்தான் வர்றியா மா? டெய்லி இந்நேரம் வந்து, எப்போ சமைச்சு சாப்பிடுவீங்க? பக்கத்துல எங்கயாவது வேலைக்கு போகலாம் இல்ல? நானும் வரும் போதெல்லாம் இதைச் சொல்றேன். யார் நம்மை மதிச்சு, நாம சொல்றதை காதுல போட்டுக்கறாங்க” தாமரை கையில் அலைபேசியுடன் வெளியில் வந்து, அவளையும், பாக்கியத்தையும் மாறி மாறிப் பார்த்து சொல்ல, வானதிக்கு அவர் சொல்வதில் இருந்த நியாயமும், வருத்தமும் புரிந்ததால், பதில் சொல்லாமல் மௌனமாய் நின்றாள்.
அவர் சமையல் அறையை நோக்கி நடக்க, வானதி பின் தொடர்ந்தாள்.
“முதல்ல போய் முகம் கழுவி, ட்ரெஸ் மாத்திட்டு வா” என்று அவர் கடுமையாக சொல்லவும், மறுக்க தோன்றாமல் சென்று முகம் கழுவி, தலையை சீர் செய்து வந்தாள்.
“நீ ட்ரெஸ் மாத்தலையா?” என்று அவளை கடிந்துக் கொண்ட பாக்கியம், “நைட்டுக்கு இடியாப்பம், கார சட்னி, குருமா செஞ்சிருக்கேன். உங்கத்தை, மாமாவுக்கு அதை சாப்பிடக் குடு. பூரிக்கு மாவு பிசைஞ்சு வச்சுட்டேன். உன் மகனுக்கு பூரி போட்டு, குருமா வச்சு குடு, சாப்பிட்டுப்பான். சரியா?” என்று கேட்டார்.
“ஏம்மா, இத்தனை வேலை பார்த்திருக்க? நான் வந்து டின்னர் செஞ்சுக்க மாட்டேனா?” வானதி ஆதங்கத்துடன் கேட்கவும், “நடிக்காத வானு. உனக்கு இப்போ அப்பாடான்னு இருக்குதானே? அப்புறம் ஏன் கதை விடுற? அதுவும் என்கிட்ட?” என்று மகளை அறிந்தவராக அவர் சொல்ல, “போம்மா” என்று சிரித்தாள் வானதி.
“உங்கண்ணா, அண்ணி வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி நானும் கிளம்பறேன். நாளைக்கு என்னனு பார்த்திட்டு போன் பண்ணு. நான் முடிஞ்சா வர்றேன்”
“ம்ம். ஓகே. நீ இப்போ எப்படிம்மா போவ? நான் உங்களை ட்ராப் பண்றேன்.”
“வேணாம், உனக்கு அலைச்சல். நான் ஆட்டோ எடுத்துக்கறேன்” என்று மறுத்து விட்டார் பாக்கியம்.
“ஆமா, உன் லீவ் என்னாச்சு? அதைச் சொல்ல மாட்டேங்கறியோ?” போகும் முன் பாக்கியம் அழுத்தமாக கேட்க, அவர் தோளில் தலை சாய்த்து அசையாமல் நின்றாள் வானதி.
“என்ன வானு?” மகளின் முகத்தை பார்த்து அவர் கேட்க, “நாளைக்கு சொல்றேன் மா” என்றாள்.
அவளே சென்று அம்மாவையும், ஹரிணியையும் ஆட்டோ ஏற்றி விட்டு வந்தாள்.
தாமரை, மதியழகியுடன் பேசிக் கொண்டிருந்தார். “ஆனாலும், இந்த அண்ணி ரொம்பத்தான் மா பண்றாங்க. அவங்க வேலைக்கு போகலன்னு இப்போ யார் அழுதா? அண்ணா இருக்கற போஸ்டிங்க்கு, இவங்க வேலைக்கு போய்தான் ஆகணுமா என்ன? அண்ணாக்கு மாச சம்பளமே பல லட்சம் வரும் இல்லம்மா?” என்று அவள் பேசுவது ஸ்பீக்கரில் தெளிவாக கேட்க, வானதி பல்லைக் கடித்துக்கொண்டு, “என்னத்த கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்.
தாமரை ஒரு நொடி தடுமாறினார். சட்டென தெளிந்து, “அது, இந்த வாட்ஸ்அப்ல வீடியோ சரியா வேலை செய்யல. பேசுறதும் விட்டு விட்டு கேட்குது. மதி ஏதோ பேர் சொல்றா. உன் லேப்டாப்பில இருந்து அதுல கால் பண்ணி குடு. அவங்கப்பாவை பார்க்கணுமாம் அவங்களுக்கு” என்றார்.
வானதி அறைக்குச் சென்று மடிக்கணினி எடுத்து இயக்கினாள்.
அவளைப் பின் தொடர்ந்து வந்த நட்சத்திரா அறையில் இருந்த பொருட்களை எல்லாம் உருட்ட, நேத்ரன் அவளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான்.
“வீட்டுக்கு வந்துட்டன்னா கால் பண்ணு வானதி” இளங்கோ குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
அதைப் படித்து விட்டு மடிக்கணினியை திறந்தவளுக்கு அதன் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) மறந்துப் போனது. அவளுக்கு நினைவில் இருந்ததை, தவறான கடவுச்சொல் என நிராகரித்தது கணினி.
அலைபேசியை திறப்பதில் இருந்து ஆயிரத்தெட்டு கடவுச்சொற்களை அனுதினமும் நினைவில் வைத்திருக்க வேண்டியிருப்பதால் அவற்றையெல்லாம் பொறுப்பாக, ரகசியமாக பதிந்து வைத்திருப்பாள் அவள். தற்போது அதில் தேட, வங்கிக் கணக்குகள், இணையதள கணக்குகள், என நீண்ட வரிசையில் மடிக்கணினி குறித்து எதுவும் இல்லை.
கடந்த மாதம் தான் வங்கித் தொடர்பான இணைய வழி பரிவர்த்தனைக்காக கடவுச்சொல்லை, பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கி பரிந்துரைத்ததால் மாற்றியது நினைவுக்கு வந்தது. அதே சொல்லை இப்போது போட்டுப் பார்த்தாள். பிள்ளைகளின் பெயர்தான். ம்ஹூம், வேலை செய்யவில்லை.
அதற்கு மேலும் சோதித்து பார்த்து, கணினியை முடக்க விரும்பாமல், கணவனுக்கு அழைத்தாள்.
“எதுவும் எமர்ஜென்ஸியா வானதி?” இளங்கோ எடுத்ததும் அப்படிக் கேட்க, “ம்ம், எனக்கு உங்களை உடனே பார்க்கலைன்னா தலை வெடிச்சுடும் போல இருந்தது. அதான் கால் பண்ணேன். அது எமர்ஜென்ஸிதானே?” கடுப்புடன் கேட்டாள் வானதி. அதற்கு கோபம் கொள்ளாமல், ரசனையாய் புன்னகைத்தான் இளங்கோ.
“ம்ம். அழகா இருக்கியே” அவளின் செம்பவள சேலையின் மேல் ரசனையாய் படிந்து, அவள் முகத்தில் நிலைத்தது அவன் பார்வை.
“எங்க இருக்கீங்க நீங்க?” அவனது பின்னணியை பார்த்து அவள் கேட்க, அலைபேசியை லேசாக திருப்பினான்.
“அச்சோ, சொல்ல மாட்டீங்களா? சாரி” படபடத்து, இளங்கோ சொல்ல வந்ததை காதில் வாங்காமல் அழைப்பை துண்டித்தாள்.
இளங்கோ அவனது நிறுவனம் வழங்கிய இரவு உணவு விருந்தில் இருந்தான். அது பெயருக்கு தான் டின்னர். ஆனால், பெரும்பாலும் தொழில் பற்றியே பேசுவார்கள். அன்றும் தொழில் பேச்சுகள் முடிந்து, மற்றவர்கள் அனைவரும் உணவிலும், பொதுவான பேச்சிலும் மூழ்கியிருக்க, அந்நேரம் வந்த மனைவியின் அழைப்பை ஏற்று பேசியிருந்தான் அவன்.
பொதுவாக இது போன்ற நேரங்களில் அவளின் அழைப்பை ஏற்க மாட்டான். அப்படியே எடுத்தாலும், “டின்னர் போறேன்னு சொல்லிட்டுதானே வந்தேன்? டிஸ்டர்ப் பண்ற நீ” என்று வார்த்தையால் கடிப்பான். அதனாலேயே இப்போதும் அவசரமாக அழைப்பை துண்டித்திருந்தாள் வானதி.
“பத்து நிமிஷத்துல ரூமுக்கு வந்துட்டு கூப்பிடுறேன்” என்று அவன் குறுஞ்செய்தி அனுப்ப, “ஓகே. என் லேப்டாப் பாஸ்வோர்ட் என்ன?” என்று கேட்டு அனுப்பினாள். அதற்கு பதிலாக அவனது புகைப்படம் வந்தது.
கருநீல நிற சூட்டில், கச்சிதமாக மேல் நோக்கி சீவப்பட்ட அடர்ந்த சிகையுடன், அளவான புன்னகை உதட்டில் நெளிய இருந்த கணவனின் புகைப்படத்தை ஓரிரு நொடிகள் ரசித்து பின் குழப்பத்துடன் பார்த்தாள் வானதி.
“பாஸ்வோர்ட் கேட்டேன். உங்க போட்டோ இல்ல.” முறைக்கும், உதடு சுளிக்கும் எமோஜிக்களை சேர்த்து அனுப்பி வைத்தாள் வானதி.