கணவனின் புகைப்படத்தை பார்த்ததும், அதில் ஏதோ முக்கியமான குறிப்பிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. காதல், கல்யாணம் வரை அவளுக்கு இளங்கோதான் எல்லாமும். ஆனால், பிள்ளைகள் வந்த பின் அன்பு தொடங்கி அனைத்தும் அவர்களின் பெயரில் மாறியிருந்தது. அவர்களின் பெயராலேயே நிறைந்திருந்தது. முதலும், முடிவும் அவர்களாகவே இருந்தார்கள்.
அவளுக்குத் தன் மனதில் மாற்றம் வந்திருந்தாலும் மடிக்கணினியில் மாற்றம் ஏதுமில்லையே என்றுணர்ந்து நாக்கைக் கடித்தாள் வானதி.
“என் ஃபோட்டோ கேட்கலையா நீ? ம்ம், அப்போ இது ஓகேவா பாரு?” என்று பதிலாக இம்முறை இளங்கோ அவளது புகைப்படத்தை அனுப்பியதும், நெருப்பை தூண்டி விட்டது போல அவளுக்கு பதில் நினைவில் வந்து விட்டது.
“கடவுளே, கடவுளே, இப்படியா மறந்து தொலைப்பேன்” தன்னைத்தானே அர்ச்சித்தபடி, “என் ஃபோட்டோவும் நான் கேட்கல.” என்று மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல கோபமாக பதிலளித்து, அதனுடன், “பாஸ்வோர்ட் ஞாபகம் வந்துடுச்சு” என்றும் சேர்த்து அனுப்பினாள்.
இளங்கோ குறுஞ்சிரிப்புடன் இப்போது அவர்களின் புகைப்படத்தை அனுப்பி வைத்தான்.
அந்தப் புகைப்படம் நேத்ரனை வானதி சுமந்து கொண்டிருக்கும் போது எடுத்தது.
ஊதா நிறப் பட்டு அவள் மேனியில் படர்ந்திருக்க, தோளின் ஒரு புறம் நீண்ட பின்னலும், அதில் சூடியிருந்த மல்லிகை சரமும் வழிய, அவளின் தோளை சுற்றியிருந்தது இளங்கோவின் கரம். இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்களுடன், காதில் நீண்ட கம்மல் அணிந்து, வட்டப் பொட்டும், கண்களில் மையும் தீட்டி, பிள்ளை சுமக்கும் பெண்ணின் பேரழகுடன் முகம் நிமிர்த்தி இளங்கோவை ஏறிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.
மெல்லிய புன்னகையுடன் கண்களை தழைத்து வானதியை பார்த்துக் கொண்டிருந்த இளங்கோவின் கண்களில் காதலும், அன்பும் கொட்டிக் கிடந்தது.
வானதிக்கு அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் வாயடைத்து போனது.
“பாஸ்வேர்ட் சொல்லவா?” குறும்புடன் வந்து விழுந்தது கேள்வி.
“நான்தான் ஞாபகம் வந்துடுச்சுன்னு சொன்னேனே?”
“ம்ம். ஆனா, நம்மளை மறந்துட்ட…” அந்த ‘ம்ம்ம்’ மட்டுமே ஒரு முழு வரியாக நீண்டிருந்தது. இளங்கோ சொன்னதில் வருத்தமும், குற்றச்சாட்டும், இன்னும் சொல்லப்படாத பல உணர்வுகளும் இருப்பதாக அவளுக்குப்பட்டது.
“ம்ம், ரொம்ப பெருசா போகுதே? நான் ஒன்னும் நம்மளை மறக்கல. பாஸ்வேர்ட்டும் மறக்கல. சட்டுனு அந்த நிமிஷம் ஞாபகம் வரல. அவ்ளோதான். அதுக்காக மறந்துட்டேன்னு என்னை பிளேம் பண்ணாதீங்க” ஒருவித வேகத்துடன் பதிலை அனுப்பி வைத்தாள்.
அவள் சொன்ன மற்றதை எல்லாம் ஒதுக்கி விட்டு, “உன்னை இப்படி ம்ம்ம் சொல்ல வச்சு, நானும் இப்படி ம்ம்ம் சொல்லி கூட ரொம்ப நாள் ஆச்சு. அதுவாவது ஞாபகம் இருக்கா வானதி?” இப்போது அந்தக் கேள்வியில் இருந்த ‘ரொம்ப நாள்’ மிக நீளமாக அடிக்கப்பட்டிருந்தது.
“வசமா சிக்கினேன்” என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டாள் அவள். இளங்கோ அருகில் இருக்கும் போதெல்லாம் மனைவி, மக்களுக்காக தனிப்பட்டு நேரம் ஒதுக்கியது கிடையாது. அதாவது சமீப காலங்களில்.
இப்பொழுது அலுவலக பணி நிமித்தம் ஜப்பான் சென்றிருந்தாலும், கழுத்தை நெரிக்கும் அலுவலக பணிகள் இருந்தாலும், இரவும், தனிமையும் வாய்க்கும் போது மனம் அனிச்சையாக குடும்பத்தை தேடியது. இதுவே சென்னையாக இருந்திருந்தால் அவன் வீட்டுக்குள் வரும் போதே, வீடு உறங்கியிருக்கும். அப்போதும் பிள்ளைகளின் அறைக்குள் சென்று அவர்களை பார்த்து விட்டுத்தான் உறங்கச் செல்வான். மகளை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனைவியின் அருகில் ஒரு கணம் நின்று பின் பெருமூச்சுடன் விலகிச் சென்று விடுவான்.
“நான் எதுவும் மறக்கல. பாஸ்வேர்ட் நிஜமா எனக்கு ஞாபகமிருக்கு.” கோபத்துடன் பதிலை அனுப்பினாள்.
“அப்படியா?” என்ற அவன் கேள்வியில் நிச்சயம் கேலியிருந்தது. வானதி தூண்டி விடப்படவளாக மின்னல் வேகத்தில் கடவுச் சொல்லை அனுப்பி வைத்தாள்.
“வான்இளா” (Vanila) ஆங்கிலத்தில் அவர்கள் இருவர் பெயரின் முதல் மூன்று எழுத்துகளை கொண்ட அந்த கடவுச்சொல் அடுத்தடுத்து திரையில் வந்து விழுந்தது. இருவரும் ஒரே நேரத்தில் அனுப்பியிருந்தார்கள்.
வானதியின் செய்தி திரையில் முதலில் வர, “அப்பாடா, தப்பிச்சேன்” என்று மனதில் நினைத்ததை செய்தியாக அனுப்பி விட்டு அவள் நாக்கை கடிக்க, “ஹா ஹா ஹா” என்று குறுஞ்செய்தியில் சிரித்து வைத்தான் இளங்கோ.
“உங்களுக்கு என்னமோ ஆச்சு போங்க. ஜப்பான் போய் ஆளே மாறிட்டீங்க”
“அப்படியா ஃபீல் பண்ற? பத்தே நிமிஷம் வெயிட் பண்ணு. ரூமுக்கு வந்துட்டு வீடியோ கால் பண்ணி நான்தான்னு ப்ரூஃப் பண்றேன் வானதி” என்ற இளங்கோவின் பதிலில் சிரிப்பும், கோபமும், துளி வெட்கமும் சேர்ந்தே வர, பதில் அனுப்பவில்லை வானதி.
குறுஞ்செய்தியில் இதுவொரு சௌகரியம். பதில் சொல்ல முடியா சங்கட சூழ்நிலைகளை சட்டென தவிர்த்து விடலாம். இதுவே அலைபேசி அழைப்பில் என்றால் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும்.
“அத்தை லேப்டாப் கேட்டாங்க. அருள், மதிகிட்ட வீடியோ கால் பேசணுமாம். நான் போய் அவங்களை கவனிக்கிறேன்” ஒரு நிமிடம் கழித்து அதை மட்டும் அனுப்பி விட்டு அலைபேசியை ஓரமாக வைத்து விட்டு எழுந்துக் கொண்டாள்.
“டொம்” என்று சத்தத்தைத் தொடர்ந்து நட்சத்திரா கையை உதறிக் கொண்டு நிற்க, அவள் தட்டி விட்ட புத்தகத்தை எடுத்து படுக்கையின் அருகில் இருந்த சிறிய மேஜையின் மேல் வைத்தான் நேத்ரன். அவன் கண்கள் தங்கையை கண்டிப்புடன் பார்க்க, அவளோ அண்ணனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ம்ம்மா, இவ எல்லாத்தையும் தட்டி தட்டி விடுறா. சொன்ன பேச்சே கேட்க மாட்டேங்குறா. அதைத் தொடாதன்னா அதைத்தான் தொடுறா. நீங்க எனக்கு தங்கச்சிக்கு பதிலா, அக்கா கொடுத்திருக்கலாம்.” முகத்தை சுருக்கிக் கொண்டு அவன் சொல்ல, மகளை கையில் தூக்கிக் கொண்டு, மகனின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள் வானதி.
“அவ சின்ன குழந்தைடா குட்டி. அவளைப் போல இருக்கும் போது நீ இதை விட பயங்கரமா சேட்டை பண்ணுவ தெரியுமா?”
“அப்பா அவங்க லேப்டாப்ல இருந்து வீடியோ காட்டினாங்க, அதுல நான் டேபிள்ல இருந்து டீவியை தள்ளி விட டிரை பண்ணிட்டு இருந்தேன் மா” புன்னகையுடன் நேத்ரன் சொல்ல, “இப்போ பாப்பா பண்ணது தப்பா சொல்லு?” வானதி மகனை கேள்வியால் மடக்கினாள்.
“அதெல்லாம் தப்புதான் ம்மா” பெரிய மனித தோரணையுடன் சொன்னான் நேத்ரன். அதில் இளங்கோவின் சாயல் தெரிய, “நல்லா பேசுறடா நியாயம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வானதி.
“நீ சும்மாவே இருக்க மாட்டியா வாலு?” மகளிடம் அவள் கேட்க, கண்ணை சுருக்கி, பால் பற்களை காட்டி சிரித்து, இடுப்பில் இருந்து எக்கி வானதியின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் நட்சத்திரா.
“என்னை எப்படி ஆஃப் பண்றதுன்னு இந்த வீட்ல எல்லோருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கு” தனக்குள் முணுமுணுத்து கொண்டு, மகளின் கன்னத்தில் முத்தமிட்டாள். நேத்ரன், தலையை சாய்த்து, கண்ணை உருட்டி அவளைப் பார்க்க, குனிந்து அவன் கன்னத்திலும் முத்தமிட்டாள் வானதி.
மடிக்கணினியை எடுத்துப் போய் தாமரையிடம் கொடுத்தாள். மதியழகிக்கு நள்ளிரவாகி இருந்ததால் அவள் உறங்க சென்று விட்டாள். அமெரிக்காவில் அந்நேரம் பகல் பொழுது என்பதால் மகனுடன் பேச விரும்பினார் தாமரை.
அவர்களை காணொளி அழைப்பில் இணைத்து, அவர்கள் பேசுவதற்கான தனிமையை தந்து தனதறைக்கு வந்தாள்.
அருள்செல்வன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க, அவன் மனைவி நிகிதா வாட்ஸ்ஆப்பில் வானதியை அழைத்தாள்.
முதல் சில நிமிட நலவிசாரிப்புக்கு பிறகு, “மதி அண்ணி கால் பண்ணாங்க. இவர்கிட்ட சொத்து பிரிக்கிறது பத்தி பேசணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. அத்தைகிட்ட சீக்கிரம் இதைப் பத்தி பேசணும்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க கா. நான் ஜஸ்ட் உங்களுக்கு இன்பார்ம் பண்றேன். ஓகே?” என்று நேரடியாக விஷயத்தை பகிர்ந்தாள் நிகிதா.
“ஓகே, நிகிதா.” என்றாள் வானதி. நிகிதா மாமனாரின் நலம் விசாரித்து, பிள்ளைகளை பற்றி பேசி, பிள்ளைகளுடன் பேசி அழைப்பை துண்டித்தாள்.
வானதி வேலைகளை முடித்து படுக்கைக்கு வந்தப் பிறகு, அடுத்த தலைவலியா என்று சிந்தித்து ஓய்ந்துப் போனாள்.
மதியழகியின் திருமணம் முடிந்ததுமே சொத்துக்களை பிள்ளைகள் மூவருக்கும் பிரித்து எழுத விரும்பினார் சந்திரசேகர். ஆனால், மகள் கல்யாணத்திற்கு வாங்கிய நகைகள், கல்யாணச் செலவு மற்றும் அவர்களின் வீட்டை எடுத்துக் கட்டியது, தாமரை பெயரில் வாங்கியிருந்த வீட்டு மனைகள் என அனைத்திற்கும் இளங்கோதான் பணம் கொடுத்திருந்தான். ஆக, மூத்த மகனுக்கு அதிகம் கொடுக்க முடிவெடுத்தார் அவர்.
“அதெப்படி சரி வரும்?” என்று எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள் இளையவர்கள் இருவரும். சந்திரசேகரின் நியாயம் எல்லாம் தாமரையின் வாதத்தின் முன் எடுபடவில்லை.
“எங்களுக்கு எதுவும் வேணாம் ப்பா” என்று இளங்கோவே அறிவித்து விட்டான். “என்னடா பேசுற தம்பி நீ?” என்று சந்திரசேகர் மகனிடம் கோபத்துடன் கேட்க, “அதான் அவனே வேணாம்னு சொல்லிட்டான் இல்ல. நீங்க சொத்தை மூனு பேருக்கும் சமமா பிரிச்சு கொடுங்க” என்றார் தாமரை.
“தாமர, கொஞ்சமாவது நியாயமா பேசுறியா நீ? எல்லாம் அவன் பணத்துல வாங்கி போட்டது. அதை எப்படி பங்கு போட சொல்ற?”
“அருளு கூடத்தான் நமக்கு செலவுக்கு காசு அனுப்பினான்”
“எது? அந்த ஆறு மாசத்துக்கு ஒரு தரம் தர்மத்துக்கு அஞ்சாயிரம் அனுப்புறானே அதுவா?”
“அவனுக்கு அங்க செலவு ஜாஸ்திங்க”
“இளங்கோக்கும் செலவு இருக்கு தாமர. அவனுக்கும் குடும்பம் இருக்கு. ஆனாலும், நமக்காக செய்யறான். அதுவும் நாம கேட்காமயே செய்யறான்..” அன்றைய இரவின் பெரும் பகுதியை அவர்களின் வாக்குவாதம் நீட்டித்தது. அறைக்குள் இருந்து அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த வானதி எதுவுமே சொல்லவில்லை.
இளங்கோ கூட, “என்ன பண்ணலாம் வானதி?” என்று அவளிடம் கேட்கவே செய்தான்.
“அத்தையை பொறுத்த வரைக்கும் அவங்க ரெண்டு பிள்ளைங்களும் வெளிநாட்ல வேலைக்கு போய் கஷ்டப்படுறாங்க, அவ்ளோதான். நாம இங்க நல்லா செட்டிலாகிட்டோம். வசதியா இருக்கோம். அது மட்டும்தான் அவங்க கண்ணுக்குத் தெரிய போகுது. சோ, சும்மா சண்டை போட்டு பிரச்சினை பண்ணி, நம்மளோட பீஸ் ஆஃப் மைண்டை கெடுத்துக்காம, நாம கண்டுக்காம ஒதுங்கிடலாம். அதான் எல்லோருக்கும் நல்லது” என்ற வானதியை மெல்லிய அதிர்ச்சியுடன்தான் பார்த்தான் இளங்கோ.
“எங்கம்மாக்காக யோசிக்காத வானதி.”
“நான் என்ன பண்ணாலும் அத்தைக்கு பிடிக்கப் போறதில்ல. இன்னும் பத்து வருஷமானாலும் அவங்க என்னைய மருமகளா தலை மேல தூக்கி வைக்கப் போறதில்ல. அவங்ககிட்ட போராடி சொத்தை வாங்கி, என்ன கோட்டை கட்டிடப் போறோம் நாம?” வானதி கேட்கவும் இளங்கோ அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“நாம கல்யாணமாகி வாடகை வீட்ல தான் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணோம். உங்ககிட்ட அப்போ ஒரு நார்மல் பைக்தான் இருந்தது. ஆனா, இன்னைக்கு நம்மகிட்ட எல்லாமே இருக்கு. இன்னுமே நீங்க சம்பாதிக்கத்தான் போறீங்க. சோ, சொத்துக்காக கூட பிறந்தவங்களோட தேவையில்லாத பிரச்சினை நமக்கு வேணாம். ஓகே?”
“ஓகே” மனைவி சொல்லே மந்திரம் என்றான் இளங்கோ. வானதி சிரிக்க, அணைத்தான்.
சந்திரசேகரால் மகனது முடிவை ஏற்க முடியவில்லை. சொத்து பற்றிய பேச்சை அப்போதைக்கு ஒத்திப் போட்டார் அவர். இன்று அவரின் உடல் நலம் குன்றவும் மீண்டும் அந்தப் பேச்சு தலையெடுத்திருந்தது.
குடும்ப வாழ்வில் தம்பதிகளின் மகிழ்ச்சியை, நிம்மதியை குலைப்பது பெரும்பாலும் அவர்களுடனே இருக்கும் குடும்பமாகத்தான் இருக்கிறது.
வானதியின் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே மாமியார், நாத்தனார் பிரச்சினை இருந்து கொண்டே தானிருந்தது. ஆனால், அவர்கள் தரும் பிரச்சினைகளை சரியாக கையாள அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளின் முடிவுகளை எல்லாம் ஆதரித்த இளங்கோவும் அதற்கொரு காரணம்.
ஆனால், தற்போது என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தபடி படுத்திருந்தாள் அவள்.
“வானதி, தூங்கிட்டியா? உங்க மாமாவை பார்க்க வரணும்னு அம்மாப்பா சொல்லிட்டு இருந்தாங்க?அவங்களை நாளைக்கு வரச் சொல்லவா? உனக்கு ஓகேவா?” என்று அர்ச்சனா செய்தி அனுப்பியிருந்தாள். சற்று முன்னர் நிகிதாவும் அதையே கேட்டிருக்க, வானதிக்கு மண்டையை எதிலாவது முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.
அவர்கள் மட்டுமல்ல, மிக நெருங்கிய உறவினர்கள் எல்லாம் நலம் விசாரிக்க வீட்டிற்கு வருவார்கள் என்பதை அறியாதாவள் அல்ல அவள்.
தாமரை தனியாக சமாளிக்கலாம்தான். ஆனால், செய்ய மாட்டாரே. மாமனாருக்கு உடல்நலம் சரியில்லாத போது, அவள் வீட்டில் இல்லாமல், வேலைக்கு சென்றால் என்பதுதான் பெருங்குற்றமாக பார்க்கப்படும்.
“நாளைக்கு நான் வேலைக்கு போயே ஆகணும் அண்ணி. ஆனா, பெர்மிஷன் போட்டு ஈவ்னிங் சீக்கிரம் வரப் பார்க்கறேன். அத்தை, மாமாவை நாலு மணிக்கு மேல வரச் சொல்லுங்க” என்று அர்ச்சனாவுக்கு பதில் அனுப்பி வைத்தாள்.
இளங்கோவிடம் இருந்து நான்கு அழைப்புகள் வந்திருந்ததை பார்த்தாள்.
“நம்மளை மறந்துட்ட..” என்று அவன் குற்றம் சாட்டியது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே அவனது அழைப்பை ஏற்காமல் தவற விட்டிருந்தாள்.
அவளுடன் இருக்கும் போது அலுவலகமே கதியென்று கிடப்பான். வீட்டிற்கு வந்தப் பின்பும் தொடரும் வேலைகள், தொலைபேசி பேச்சுகள், அவர்களது நேரத்தை திருடிக் கொள்ளும்.
அதையும் மீறி பேசினால், இருவரும் எலியும் பூனையுமாக முட்டிக் கொள்வார்கள்.
இளங்கோவின் புதிய அலைபேசியில் அவர்களின் பத்து வருடத்திற்கு முந்தைய புகைப்படம் இருந்ததே அவளுக்கு இன்ப அதிர்ச்சிதான். இப்போதெல்லாம் குடும்பப் புகைப்படமும், பிள்ளைகளின் புகைப்படமும் அவளது அலைபேசியில் எடுத்து, அவனுக்கு அனுப்பி வைக்கிறாள். அப்படியிருக்கையில் அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அவள் அதிர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பிள்ளைகள் காரில் ஏறினால், அனிருத் தான் அலறுகிறான்.
“நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா?” காதல் காலங்களில் ரசித்த இந்தப் பாடல் வரிகளை எல்லாம் கால ஓட்டத்தில் இருவருமே மறந்து விட்டதாக அவள் நினைத்திருக்க, இன்னமும் அதை கேட்டுக் கொண்டு காரில் பயணிக்கிறான் கணவன் என்பது அவளுக்கு ஆச்சரியம்தான்.
அங்கிருந்து கொண்டு காதல் வசனம் பேசுகிறான். அதுவே இங்கு வந்த பின் தொடருமா என்ற கேள்வி அவள் மனதை குடைந்தது. ஜப்பானில் இருந்து வந்ததும், அவனது வேலை இரட்டிப்பாகும் என்பதில் அவளுக்கு சந்தேகமேயில்லை. மீண்டும் பேசுவதற்கு கூட நேரம் கிடைக்காமல், நிமிர்ந்து முகத்தை கூட பார்க்காமல், ஒரு புன்னகைக்கு கூட பஞ்சமாகி போய், முகத்தை திருப்பிக் கொண்டு திரிய போகிறார்கள்.
கணவனுக்கு தன் மேலிருந்த காதல் எல்லாம் காணாமல் போய் விட்டது என்று மனதிற்குள் மருகி, அவனை தூர விலக்கி நிறுத்தி, தங்கள் முன் மீண்டும் ஒரு மிகப் பெரிய பாலத்தை எழுப்பப் போகிறாள் வானதி.
அவர்களின் நேசமும், நெருக்கமும் அவர்களைப் போலவே திண்டாடி, தவித்துப் போக போகிறது.
பலத்த யோசனைகள் மனதை அழுத்த, அவளுக்கு கணவனின் மேல் கோபமும், தன் மேல் சுய இரக்கமும் சேர்ந்தே வர, கண்கள் கலங்கி இரு பக்கமும் கண்ணீர் கன்னத்தைத் தொட்டது.
“தூங்கிட்டியா வானதி?” என்று இளங்கோ குறுஞ்செய்தி அனுப்பவும், அவசரமாக அவனை அழைத்து விட்டாள். அவளின் அழைப்பை துண்டித்து விட்டு, காணொளி அழைப்பில் வந்தான் இளங்கோ.
மனைவியின் முகத்தை கவலையும், கரிசனமுமாக பார்த்து, “என்னாச்சு வானதி? அழுதியா?” என்று கேட்டான்.
வானதி கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.