அவள் கோபப்படுவதற்கும், காதலை வெளிப்படுத்துவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் கண் சிமிட்டும் நேரமும், மிகச் சில காரணங்களுமே போதுமானதாக இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. கோபம் கண்ணை மறைக்கும் அந்த கணத்தை கடந்து விட்டால், தானாக அன்பு அடிமனதில் இருந்து வெளிப்பட்டு விடுகிறது. அந்த அன்பு ஒன்று தான் அவர்களை இணைத்திருக்கிறது, ஒன்றாக பிணைத்திருக்கிறது. இப்போது அவளை அலைக்கழிக்கவும் செய்கிறது.
“வானதி…” இளங்கோ அழுத்தமாக அழைக்க, “நாம லவ் பண்றோம்னு சொன்னதும், நம்ம ரெண்டு பேர் வீட்லயும் ஏத்துக்கவே இல்லை. இல்லையா?” மனைவி எதற்கு கேட்கிறாள் என்றே தெரியாமல், “எஸ்.” என்று பதில் கொடுத்திருந்தான்.
“நாம காதலிக்கும் போது நம்ம காதல் மட்டும்தானே அவங்களுக்கு பிரச்சினையா இருந்தது. ஆனா, கல்யாணமானதும் பல பல பிரச்சினைகளை அவங்களே டெய்லி நமக்கு குடுத்திடுறாங்க.”
“உண்மைதான் வானதி. இப்போ ஏன் இந்த பேச்சு?”
“ஏன்னா எனக்கு சொல்லணும்னு தோனுது. நீங்க கேட்டுதான் ஆகணும்” வானதி அழுத்தமாக சொல்ல, “ஓகே” ஆழ்ந்த அமைதியுடன் வந்தது அவன் பதில்.
“கல்யாண பேச்சு வார்த்தையில் ஆரம்பிச்சு, மண்டபம், சீர், செலவுன்னு பொண்ணை பெத்தவங்களை ஒரு வழியாக்கிடுறீங்க. எங்க வீட்டு ஆளுங்களுக்கு மரியாதையே கொடுக்கிறது கிடையாது. சரின்னு அதையெல்லாம் கண்டுக்காம ஓரமாக வச்சுட்டுதான் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்றோம் நாம. பத்து வருஷத்துல நமக்குள்ள ஆயிரம் பிரச்சினை வந்து நாம விலகிப் போகும் போது, திரும்பவும் வந்து புது பிரச்சனையை கிளப்பி விட்டு நம்மளை மொத்தமா பிரிச்சு விடப் பார்க்கறாங்க. தினம் ஒன்னு. புதுசு புதுசா, தினுசு தினுசா. உங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைனு அவங்ககிட்ட இருந்து ஒதுங்கியும் போக முடியாது. ஏன்னா, அவங்க நம்ம குடும்பம். ஆனா, முக்கால் வாசி இவங்களாலதான் நமக்குள்ள சண்டை வர்றதே. குடும்பத்துக்குள்ள பிளவு வருதுன்னா இவங்கதான் அதுக்கு ரீசன். உங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்க. உங்க தங்கச்சி இப்படி சொல்லிட்டான்னு நான் புலம்பினா? நீங்க யாருக்கு சப்போர்ட் பண்ணுவீங்க?”
“உனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்”
“அப்படியே அளந்து விடாதீங்க.”
“இதுவரை யார் முன்னாடியும் நான் உன்னை விட்டுக் கொடுத்து கிடையாது வானதி. இனியும் பண்ண மாட்டேன்” அதில் உண்மை இருக்க, ஒரு நொடி மௌனமானாள் வானதி.
“எனக்கு எல்லாத்தையும் விட, எல்லாரையும் விட நீங்களும், நம்ம பிள்ளைங்களும் தான் முக்கியம்.” வானதி சொல்ல, இளங்கோவின் கண்கள் அவளை கேள்வியுடன் பார்த்தது. உதட்டில் கிண்டல் புன்னகை நெளிந்தது.
“உலகத்தில இருக்குற முக்கால் வாசி மக்களை போல நாமளும் நாப்பது வயசாகும் போது சண்டை போட்டு, மூஞ்சி திருப்பிட்டு, ஒரே வீட்ல பேசாம சுத்துற ஜோடியா இருக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. பிள்ளைகளை காரணம் காட்டி, அவங்களுக்காக ஒருத்தரை ஒருத்தர் சகிச்சுக்கிட்டு வாழ்ற லிஸ்ட்ல நாமளும் வர எனக்கு இஷ்டமில்ல. பிள்ளைங்க முன்னாடி சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சுட்டு, அவங்க இல்லாதப்போ வெறுப்பை காட்டவும் என்னால முடியாது. அதையெல்லாம் விட யார் யாருக்காகவோ நம்ம காதலை தொலச்சுட்டு ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சு போறதில்…” படப்படப்புடன் பேசிக் கொண்டிருந்தவளுக்கு அதைச் சொல்லும் போதே தொண்டையடைக்க சட்டென கேவல் வந்து விட்டது.
அவளை முந்திக் கொண்டு, “வானதி, என்ன பேசுற நீ? நீ பயப்படுற மாதிரி எதுவும் நம்ம லைஃப்ல நடக்காது. நானும் சரி, நீயும் சரி அப்படி நடக்க விட மாட்டோம்.” என்றான் இளங்கோ.
“அப்படியா? அப்போ ஏன் இத்தனை நாள் என்கிட்ட பேசாம இருந்தீங்க?”
“ஓகே. ஓகே. என்னால இப்படி போன்ல சண்டை போட முடியாது. எனக்கு உங்க முன்னாடி நின்னு கத்தணும்” அவள் சொன்ன விதத்தில் இளங்கோ சட்டென புன்னகைத்து விட்டான்.
“நாம இப்படி இருக்கறது எனக்கு பிடிக்கவே இல்லங்க. நம்மளை நான் மறக்கல. ஆனா, இப்படியே ஓடிட்டே இருந்தா கண்டிப்பா மறந்திடுவேன் போல. சும்மாவே எதுவும் ஞாபகம் இருக்க மாட்டேங்குது. ப்ச், இதுல நம்ம ரெண்டு குடும்பமும் பண்ற பாலிடிக்ஸ், டிராமாவில நமக்கு நடுவுல அன்பு, புரிதல் எல்லாம் கரஞ்சு காணாம போய்டும் போல இருக்கு எனக்கு. சோ, இவங்க அரசியலை எல்லாம் நான் கண்டுக்க போறதில்லை. எனக்கு எது சரின்னு படுதோ, அதைத்தான் செய்யப் போறேன். என் முடிவு எல்லாத்துக்கும் நானும், நீங்களும் மட்டும்தான் காரணம். அண்ட் நான் உங்களுக்கு மட்டும்தான் பதில் சொல்லுவேன். ஓகே?”
“நீ சொல்லி நான் மறுக்க..”
இளங்கோவை பேச விடாமல் இடையிட்டு கத்தினாள். “இந்த சோப் போடுற வேலை எல்லாம் வேணாம். நேரா பதிலை சொல்லுங்க” என்றாள் கறாராக. அவள் சொன்ன விதத்தை ரசித்து சிரித்தான்.
“பத்து வருஷத்துக்கு முன்னாடி சொன்னதுதான் இப்பவும் சொல்றேன். உன் முடிவு எதுவா இருந்தாலும்..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் முறைக்க, “ஓகே, ஓகே, ஓகே” என்றான் இளங்கோ சத்தமாக சிரித்து.
“நான் ஊருக்கு வந்ததும் எங்கயாவது போகலாமா? ஒரு நாலு நாளைக்கு எந்த டிஸ்டர்பென்சும் இல்லாம, நாம மட்டும் போய்ட்டு வருவோம். அங்க நிறைய பேசலாம். எல்லாத்தையும் சரி பண்ணலாம். சரியா?” இளங்கோ, வானதியின் கண்களை ஊடுருவி கேட்க, “சத்தியமா கூட்டிட்டு போவீங்கதானே? அப்புறம் ஊருக்கு வந்துட்டு வேலை இருக்கு, மீட்டிங் இருக்கு, ஃபேக்டரி விசிட் இருக்குன்னு காரணம் சொன்னீங்க?” என்று இப்போதே சண்டைக்கு அடித்தளம் போட்டாள் வானதி.
“சத்தியமா கூட்டிட்டு போறேன் வானதி. ஆனா, அப்போ நீ வந்து நின்னு பாப்பா அழுவா, நேத்ரனுக்கு ஸ்கூல் லீவ் போடணுமே. பாப்பாக்கு கிளைமேட் ஒத்துக்குமான்னு கேட்டன்னு வச்சுக்கோ..”
“என்ன பண்ணுவீங்க?”
“வேற என்ன பண்ண போறேன்? அடுத்த பத்து நாளைக்கு உன் கூட பேசாம, உன்னை கண்ணால முழுங்கிட்டு, கெத்தா சுத்த வேண்டியதுதான்” என்றதும் கோபம் வர,
“இதான் சாக்குன்னு டேய் சொல்லிட்ட வானதி” வலக் கரத்தால் தலை முடியை கலைத்துக் கோதியபடி அவன் சொல்ல, “ஆமா, இதுக்கு முன்னாடி சொன்னதே இல்ல பாருங்க” என்று முணுமுணுத்தாள் வானதி. அதில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து இருவருமே சிரித்து விட்டார்கள்.
மறுநாள் காலையிலேயே மகளின் வீட்டிற்கு வந்து விட்டார் பாக்கியம்.
“இங்க பாரு வானு, உனக்கு செய்யுறதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. ஆனா, நான் இங்க வர்றது உங்கத்தைக்கு பிடிக்கல போல. நேத்தே அவங்க வீட்ல நான் வந்து உட்கார்ந்திருக்கிறது போல ஜாடை மாடையா பேசினாங்க. நீ மாப்பிள்ளை ஊர்ல இருந்து வர்ற வரைக்குமாவது லீவ் போட பாரு. புரிஞ்சுதா?”
“லீவ் போட அவசியம் இல்லம்மா..”
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ பொறுப்பே இல்லாம பதில் சொல்ற வானு”
“முழுசா கேளு மா. நான் வேலையை விட்டுட்டா லீவ் போட வேண்டிய அவசியம் இல்லதானே?”
“என்ன வானு சொல்ற? மாப்பிள்ளைக்கு தெரியுமா?” அதிர்ச்சியுடன் பாக்கியம் கேட்க, முதலில் மறுப்பாக தலையசைத்தாள் வானதி. ஆனால், நேர்மாறாக, “ம்ம்” என்று பதில் சொன்னாள்.
“அப்போ மாப்பிள்ளைக்கு தெரியாது. அப்படித்தானே?” என்று கோபமாக கேட்டார் பாக்கியம். “ஏற்கனவே சண்டை போட்டு பேசாம இருந்தீங்க. இப்போ அவர் ஊர்ல இல்லாத நேரம் இப்படியொரு முடிவெடுத்து, தேவையில்லாத பிரச்சினையை இழுத்து விடப் பார்க்கிற நீ. ரெண்டு பிள்ளைங்க பெத்துட்ட. ஆனா, இன்னமும் பொறுப்பும் வர மாட்டேங்குது. உன் அறிவும் வளர மாட்டேங்குது” மகளை வார்த்தைகளால் சரமாரியாகத் தாளித்தார் பாக்கியம். வானதி அமைதியாக அம்மாவை பார்த்து நின்றாள்.