பாக்கியம் கோபத்தில் கொந்தளிக்க அவரின் இரு தோள்களிலும் கரம் பதித்து, “அம்மா, திட்டாதீங்க பிளீஸ். முதல்ல நான் சொல்றதை கேளுங்க” என்று அமைதியாக, அழுத்தமாகச் சொன்னாள் வானதி.
“எப்படி வானதி அமைதியா இருக்க முடியும்? நீ உன் இஷ்டத்துக்கு எல்லா முடிவையும் எடுக்கிற. என்கிட்ட ஒரு வார்த்தை வேலையை விடப் போறேன்னு சொன்னியா நீ? சரி என்கிட்டதான் சொல்லலன்னு பார்த்தா மாப்பிள்ளைகிட்டயும் சொல்லல போல. அவர் ஊருக்கு வந்ததும் கோபத்துல கத்தப் போறார்” பாக்கியம் படபடக்க, “அம்….மா” என்றாள் வானதி.
“போ..” தோளில் இருந்த மகளின் கையை உதறி விட்டு சமையல் அறையின் சுவரில் சாய்ந்து நின்றார் பாக்கியம்.
“உன் மாப்பிள்ளைகிட்ட சொல்லாம எப்படிமா வேலையை விடுவேன் நான்? அவருக்குத் தெரியும். ஆனா, இந்த முடிவு என்னோடது. நான் வேலையை விடுறதில் அவருக்கு விருப்பம் இல்லைன்னு எனக்குத் தெரியும். அதான், ரெண்டு மனசா இருக்கேன் மா”
“மாப்பிள்ளைக்கு பிடிக்கலைன்னா ஏன் வேலையை விடுற? இந்நேரம் உங்கப்பா இருந்திருந்தாலும், இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார். அவருக்கும் நீ வேலையை விடுறதுல விருப்பமே இருந்திருக்காது.”
“உண்மைதான் மா. ஆனா, நான் ஒன்னும் சும்மா வேலையை விடலையே. இப்போ வீடு இருக்கிற நிலைமையை நீங்களே பார்க்கறீங்கதானே? வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கல. மாமா, அத்தையை தனியா வீட்ல விட்டுட்டு நான் வேலைக்கு போய்ட்டு வர முடியாது. வீட்டு வேலைகளை அத்தையை பார்க்க சொல்ல முடியாது. இன்னும் ஒரு வாரத்துல மாமாவை திரும்ப செக் அப்க்கு காஞ்சீபுரம் கூட்டிட்டு போகணும். அதுக்கும் நான்தான் போயாகணும். இதுக்கெல்லாம் நான் வீட்ல இருந்தாகணும். அவர் இன்னும் அஞ்சு நாள்ல ஊருக்கு வந்தாலும் வீட்ல இருப்பார்ன்னு எதிர்பார்க்க முடியாது மா.”
“அதுவும் இல்லாம பாப்பாக்கு ஸ்கூல் அட்மிஷன் போட்டாச்சு. அடுத்த வருஷம் அவ ஸ்கூலுக்கு போய்ட்டா நான் ஃப்ரீ ஆவேன்னு நினைச்சேன் மா. ஆனா..” என்று அவள் இழுக்க,
“இது எல்லாத்தையும் நீ வேலைக்கு போய்ட்டும் பார்க்கலாம் வானு. நீ மனசு வச்சா போதும். எல்லாமே நடக்கும்.” மகளின் நீண்ட விளக்கத்திற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்தார் பாக்கியம்.
“நீ சிஏ படிக்கணும்னு நினைச்சார் உங்கப்பா. அதை நீ முடிக்கல. மாப்பிள்ளை சிஏ படிச்சிருக்கார்ன்ற காரணம்தான் உங்க கல்யாணத்துக்கு உங்கப்பாவை சம்மதிக்க வச்சது. மாப்பிள்ளை இன்னைக்கு எங்கயோ போய்ட்டார். ஆனா, நீ? உங்கப்பா ஆசைப்பட்ட படிப்பையும் படிக்கல. சரி நல்ல வேலையிலயாவது மக இருக்கான்னு அவர் சந்தோஷப்பட்ட வேலையையும் விடப் போறேன்னு வந்து நிக்கிற? என்னமோ பண்ணு போ..” பாக்கியம் வருத்தத்துடன் சொல்ல,
“என்னம்மா நீ இப்படி பேசுற? அன்னைக்கு நீதானே இருக்கிறதை வச்சு சந்தோசமா வாழணும்னு அட்வைஸ் எல்லாம் பண்ண?” என்று கோபமாக கேட்டாள் வானதி.
“சொன்னேன்தான். இல்லைனு சொல்லலியே. நாங்க எவ்வளவு ஆசைப்பட்டு உன்னை படிக்க வச்சோம். உங்கப்பா நீ பச்சை இங்க்கில் கையெழுத்து போடணும்னு மனசு நிறைய ஆசைப்பட்டார். சரி, அதுதான் நடக்கல. ஆனா, இத்தனை வருஷம் கழிச்சு நீ ஒன்னுமில்லாம வீட்ல இருக்கப் போறேன்னு சொன்னா எனக்கு வருத்தமா இருக்காதா?”
வானதி சில நொடிகள் அம்மாவை இமைக்காமல் பார்த்து, “இல்லம்மா. உன் வருத்தம் எனக்கு புரியுது மா. நீ என்னையும் புரிஞ்சிக்க, பிளீஸ். என்னால முடியல. கால்ல சக்கரம் கட்டின மாதிரி என்னால ஓட முடியும். ஆனா, எனக்கு அது வேணாம். வேலையை விட்டுட்டு, கொஞ்ச நாளைக்கு குடும்பத்தை பார்த்திட்டு, அப்படியே நீயும், அப்பாவும் ஆசைப்பட்ட மாதிரி சிஏ ஃபைனல்ஸ் எழுதலாம்னு பார்க்கறேன். என் ஆசையும் கூட அதானே மா?” என்று அவள் சொல்ல, ஒரு நொடி மகிழ்ச்சியின் சாயல் பாக்கியத்தின் கண்களில் வந்துப் போனது. அதன் பின் மகளை நம்பாதது போல அவர் முகத்தைத் திருப்பிக் கொள்ள, வலுக்கட்டாயமாக அவரைப் பிடித்துத் திருப்பினாள் வானதி.
“என்னை வேறென்னம்மா பண்ண சொல்ற? ஒரு அவசியம்னா, அவசரம்னா நான்தான் வேலையை விட்டாகணும். இளங்கோ வேலையை விட்டுட்டு வீட்டை பார்த்துக்கணும்னு நாம எதிர்பார்க்க முடியுமா? இல்ல, அது நடக்கிற காரியமா நீயே சொல்லு” வானதி கேட்கவும், அவளின் தோளில் பட்டென்று அடித்தார் பாக்கியம்.
“மாப்பிள்ளை பேரைச் சொல்லி பேசாத. மரியாதை இல்லாம. அதுவும் அவங்கம்மா இங்கருக்கற நேரம் நீ பாட்டுக்கு சத்தமா சொல்லி, அவங்க காதுல விழுந்து தொலைச்சிடப் போகுது. பெரிய மனுஷி அதுக்கும் பேசி தீர்க்க போறாங்க.” கோபமும், கண்டிப்பும் கலந்து அவர் சொல்ல, வானதி புன்னகையுடன் அம்மாவைப் பார்த்தாள்.
“அவர் பேரை தெரியாம சொல்லிட்டேன் மா. சாரி. ஆனாலும், நீ என் மாமியாருக்கு இப்படி பயப்பட தேவையில்ல. அவங்க வீட்ல நீ இருக்கிறது போல ஜாடை மாடையா பேசினா, பார்த்திட்டு சும்மா இருப்பியா நீ? என் பொண்ணு வீடு இதுன்னு பதிலுக்கு நீ சொல்ல வேண்டியது தானே மா?”
“நல்லா கேட்கட்டும் மா. என்ன இப்போ? அவங்களுக்குத் தெரியாததா என்ன? இந்த வீடு என் பேர்லதான் இருக்கு. வீடு மட்டுமில்ல, வீட்ல இருக்கிற எல்லா பொருளும் என் பேர்லதான் இருக்கு. அவ்ளோ ஏன், அவங்க பையனே என் பக்கம்தான்..” கிளுக்கி சிரித்தபடி சொன்ன மகளின் வாயில் பட்டென்று அடித்து மூடினார் பாக்கியம். உடல் குலுங்க சிரித்துக் கொண்டிருந்தாள் வானதி.
“மாமியார்னா அப்படித்தான் மா இருப்பாங்க. எப்பவும் மூஞ்சியை தூக்கி வச்சுட்டு, அதிகாரம் பண்ணிட்டு, எனக்கு கீழதான் நீன்னு அலட்சியமா மருமகளை நடத்திட்டு..”
வானதி முடிக்கும் முன்பே இடையிட்டு, “நான்லாம் அப்படி இல்லையே. நீ வேணும்னா உங்கண்ணி அர்ச்சனாகிட்ட கேட்டு பாரு. இவ்வளவு மோசமா மாமியார் கொடுமை எல்லாம் நான் எப்பவும் பண்ணதே கிடையாது.” என்று சொன்னார் பாக்கியம்.
“அர்ச்சனா அண்ணிகிட்ட எதுக்கு கேட்கணும்? என்னைக் கேட்டா போதாதா மா? நீ மகளுக்கு இல்ல மாமியாரா இருக்க. என்னை கேளு. நான் சொல்றேன்” என்று வானதி கிண்டலாக சொல்ல,
“அடிப்பாவி மகளே. நான் உனக்கு மாமியார் போல தெரியறேனா? என்னைக்கு உன்னை அப்படி நடத்தினேன்?” என்று ஆரம்பித்தவர், மகளின் முகத்தை பார்த்து சிரித்து விட்டார்.
“சும்மாவா சொன்னாங்க. நல்லதுக்கே காலம் இல்லைனு..” பாக்கியம் புலம்ப, “விடும்மா, விடும்மா” என்று விளையாட்டாக சொன்னாள் வானதி.
மகளின் விளையாட்டு பேச்சை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல், “நீ சொல்ற எல்லா காரணமும் எனக்கு புரியுது வானு. ஆனா, எனக்கு மனசு கேட்கல. சட்டுனு வேலையை விடாம, நல்லா யோசிச்சு முடிவெடு. இந்த வேலை மூலமா வர்ற பணம் உனக்கு பெருசா இல்லாம இருக்கலாம். ஆனா, இந்த வேலையும், சுய சம்பாத்தியமும், அது தர்ற தன்னம்பிக்கையும், தைரியமும் நிச்சயமா உனக்குத் தேவைப்படும். புரியுதா?” என்று அறிவுரை சொன்னார்.
“புரியுது மா” என்றாள் வானதி.
முந்தின இரவு அத்தனை பேச்சுக்களுக்கு பின் கணவனிடம் அவள் தன் முடிவினை தெரிவிக்க, “என்ன சொன்ன வானதி?” என்று அதிர்ந்து அவளை காணொளியில் கூர்ந்துப் பார்த்தான் இளங்கோ.
“ம்ம், தெரியும். நீங்கதானே இரண்டு வாரத்துல யோசிச்சு ஒரு முடிவுக்கு வரச் சொன்னீங்க. அதான் வேலையை விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“ஓகே, வானதி. பட் இந்த முடிவு என் அப்பா, அம்மாவால இல்லையே?”
“இல்லைங்க. ஆனா, அவங்களும் ஒரு வகையில் காரணம். ஆபீஸ்ல ஒரு வாரம் லீவ் கேட்டேன். தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இதுக்கே இப்படின்னா நாளைக்கு சிஏ ஃபைனல்ஸ் படிக்க, எக்ஸாம் எழுத எனக்கு எவ்வளவு லீவ் தேவைப்படும்? அப்போ என்ன பண்றது? அதான் அப்ப எடுக்கப் போற முடிவை, எல்லோருக்கும் சாதகமா இப்பவே எடுத்துட்டேன்”
வானதி சொல்ல, இளங்கோவின் கண்கள் அவள் மேலேயே அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. அவனுக்கு பிடித்தமில்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், அவளுக்காக சம்மதிப்பான் என்பதுவும் அவளுக்குத் தெரியும்.
“என்னங்க, ஒன்னுமே சொல்லல?”
“நீ என்ன முடிவெடுத்தாலும், உனக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்ன ஞாபகம்.” என்றான் இளங்கோ குறுஞ்சிரிப்புடன்.
“ஓகே” என்ற வானதியின் உதடுகளிலும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது.
தற்போது பாக்கியம் ஏதோ புலம்பவும், நினைவுகள் கலைந்து அவரை நிமிர்ந்து பார்த்தாள் வானதி.
“நீ விடிஞ்சதும் வேலையை விடுறேன்னு சொல்ற. நேத்து ராத்திரி உங்கண்ணி அமெரிக்கா போறேன்னு சொன்னா தெரியுமா? அவங்க கம்பெனியில இருந்து அனுப்பறாங்களாம். எனக்கு வாய்ப்பு வரும் போதே நான் போறேன்னு சொல்றா. எல்லாம் ஒரே நேரத்துல என் தலையில குண்டைப் போடணும்னு முடிவு பண்ணிட்டீங்க போல. அதெப்படி புருஷன், பிள்ளைகளை விட்டுட்டு வெளிநாடு போவா அர்ச்சனா? அதைக் கேட்ட உங்க அண்ணனை போட்டு ஒரு வழி பண்ணிட்டு இருந்தா..” பாக்கியம் மகள் சிரிப்பதைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டு அவளை முறைத்தார்.
“அண்ணா போகலைன்னா அண்ணி போகட்டுமே மா. அதுல என்ன தப்பு? உன் மாப்பிள்ளை வேலை விஷயமா வருஷத்துக்கு நாலு தடவை வெளியூர், வெளிநாடு போகலாம். ஆனா, உன் மருமக போக கூடாதா மா? ரொம்ப மோசமான மாமியார் மா நீ” வானதி நமுட்டு சிரிப்புடன் சொல்ல, “கொட்டுற மழையில உனக்கு ஹெல்ப் பண்ண கிளம்பி வந்தேன் பாரு. என்னைச் சொல்லணும் வானு.” என்று சடைத்தார் பாக்கியம்.
“அப்படி நகர்ந்து ஓரமா நில்லு. போ” மகளை அதட்டி விட்டு, சமையல் வேலையை அவர் தொடர, “அம்மா, நான் சீரியஸா சொல்றேன் மா. அண்ணி அமெரிக்கா போகணும்னா போகட்டும் மா. அதுல முடிவெடுக்க வேண்டியது அண்ணன்தான். நீ தலையிடாத” என்று சொன்ன மகளை கையில் இருந்த கரண்டியால் ஒன்று போட்டார் பாக்கியம்.
“ஆஆஆ, ஏன்மா அடிக்கிற? என்னை வேலைக்கு போன்னு மிரட்டுற. ஆனா, வேலைக்கு போறேன்னு சொல்ற அண்ணியை திட்டுற. இப்படி மகளுக்கும், மருமகளுக்கும் நடுவுல பாரபட்சம் பார்க்காத மா”
“விளையாடாத வானதி. போய் உன் பொண்ணு எழுந்துட்டாளான்னு பாரு, போ. இங்க நின்னு எதையாவது ஏடாகூடமா பேசி, என் கோபத்தை கிளப்பி விடாத” பாக்கியம் தீவிரமாக சொல்ல, வானதி வேண்டுமென்று அம்மாவை இடித்துக் கொண்டு நெருங்கி நின்றாள்.
“அண்ணி வேலைக்கு போகணும். அண்ணா வீட்டை பார்த்துக்கணும்னு நான் சொன்னது போல ஏன் மா இப்படி டென்ஷன் ஆகுற?”
“அப்படி வேற சொல்வியா நீ?” கரண்டியை அவளின் முகத்துக்கு நேராக பிடித்தபடி பாக்கியம் கேட்க, “ஆயுதத்தை கீழ போடு மா” என்று அவரின் கையை தட்டி விட்டாள் வானதி.
“கி அண்ட் கா, அப்படினு ஒரு ஹிந்தி படம் மா. அதுல கி, அதாவது ஹீரோயின் வேலைக்கு போவா. கா, அதான் ஹீரோ வீட்டை பார்த்துப்பான். தெரியுமா? ஹீரோவோட அப்பா பெரிய பிசினஸ்மேன். பையன் இப்படி ஹவுஸ் ஹஸ்பண்ட்டா இருக்குறது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அவன் மேல ரொம்ப ரொம்ப கோபமா இருப்பார். ஆனாலும், அவன் மாற மாட்டான். ஹீரோ, ஹீரோயின் சந்தோசமா இருப்பாங்க. ஹீரோயின் பெரிய சக்சஸ்ஃபுல் விமனா வருவா. அப்போ அவளை பேட்டி எடுக்கும் போது கணவனை பத்தி சொல்லுவா. அப்புறம் அவனும் ஃபேமஸ் ஆவான். அது தனிக் கதை. ஆனா, படத்தின் கிளைமாக்ஸ்ல மருமகளின் திறமையை பார்த்து, அந்த மாமனார் அவளை அவரோட கம்பெனிக்கு சிஇஓ ஆக்கிடுவார் மா. தெரியுமா?” வானதி கதைச் சொல்ல,
“அடக் கடவுளே, இப்படி எல்லாமா படம் எடுக்கிறான்? கழுதை கெட்டு குட்டிச் சுவரா போக போகுது” பாக்கியம் தலையை எல்லாப் பக்கமும் அசைத்து புலம்ப, சத்தமாக சிரித்தாள் வானதி.
“அந்தப் படத்துல இருந்து இன்னொரு சீன் சொல்றேன் கேளு மா.”
“நீ சொன்னதே போதும் போ”
“அடக் கேளு மா. ஹீரோயின் அவனைப் பத்தி பெருமை பேசுவா இல்ல? அதுக்கு அப்புறம் ஹீரோ எப்படி ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆனான்னு பேட்டி கொடுத்தே ஃபேமஸ் ஆகிடுவான். அதைப் பார்த்து நடிகர் அமிதாப்பச்சன் வைஃப் ஜெயா பச்சன் இருக்காங்க இல்ல, அவங்களும் அவனோட பேட்டியை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, அவனை பார்க்கணும்னு அமிதாப்கிட்ட கேட்பாங்க. அவரும் பொண்டாட்டி கேட்கவும் அவனை பார்க்க ஏற்பாடு பண்ணுவார்”
“இப்போ என்ன சொல்ல வர்ற வானு நீ?” சலிப்புடன் அவர் கேட்க,
“ஒழுங்கா கதையை கேளு மா” என்று மிரட்டி விட்டு கதையைத் தொடர்ந்தாள்.
“ஜெயா பச்சன் அவனை மீட் பண்ணி, பாராட்ட எல்லாம் செய்வாங்க. அப்போ அவன் வைஃப் கியாவுக்கு ஒரு லெட்டர் எழுதி கொடுத்து விடுவாங்க. அதுல என்ன எழுதி இருக்கும்னா, கபீர் எடுத்தது ரொம்ப தைரியமான ஒரு முடிவா இருக்கலாம். ஆனா, அந்த முடிவை எடுத்த ஒருவனின் மனைவியா இந்த சமூகத்தில் இருக்கிறதுதான் அதை விட பெரிய சவாலான விஷயம் கியா. சோ, நீ எடுத்தது அதைவிட ரொம்ப தைரியமான முடிவு அப்படினு அவளை பாராட்டுவாங்க மா. என் ஞாபகத்தில் இருக்கறதை வச்சு கதையை சொன்னேன். ஒரு நாள் உனக்கு அந்த படம் போட்டு விடுறேன். நீயும் பாரு மா. உனக்கு ரொம்ப பிடிக்கும்”
“எனக்குத்தானே? பிடிக்கும், பிடிக்கும். நேத்து வாங்கின வெங்காயத்தை எங்க வச்சன்னு கேளு, மறந்துட்டேன் சொல்லுவா. ஆனா, படம் பார்த்திட்டு முழுசா மறக்காம கதை சொல்றா பார். கழுதை” பாக்கியம் மகளைத் திட்ட, “உன் மருமகன்தான் என்னை இந்தப் படத்துக்கு கூட்டிட்டு போனார். சோ, அவரை திட்டு மா நீ” என்று வானதி சொல்லவும், பட்டென வாயை மூடிக் கொண்டார் பாக்கியம்.
“இங்க நின்னு வாய் பேசி என்னை டென்ஷன் பண்ணாம, ஆபீஸ் கிளம்புற வழியை பாரு போ. எவனோ அறிவில்லாம படம் எடுத்து வச்சிருக்கான். அதைப் பார்த்து நாலு அறிவாளிங்க, நீ வீட்ல இரு. நான் வேலைக்கு போறேன்னு கிளம்பும். அதுல உங்கண்ணியும் ஒருத்தியா இருப்பா. காலையில கதை சொல்லி என் கடுப்பை கிளப்புற நீ” பாக்கியம் கத்த, சிரித்தாள் வானதி.
“போம்மா போ. இந்த படம் வந்து பல வருஷம் ஆச்சு. ஆனா, நம்ம ஊரு அப்படியேதான் இருக்கு. குடும்பம், பிள்ளை குட்டி, பொறுப்பு, புண்ணாக்கு எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும்தான் போல.”
“அய்யயோ, வானதி. அடி வாங்க போற நீ” என்று கரண்டி காட்டி மிரட்டினார் பாக்கியம்.
“இந்தா தண்ணியை குடி மா. சில், நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நாங்க என்னதான் புரட்சி பேசினாலும், இங்கேயே குடும்பம் குட்டினுதான் மா சுத்த போறோம். சோ, நீ பதட்டப்படாம வேலையை பாரு.”
“என்கிட்ட விளையாட்டா சொல்ற மாதிரி உங்கண்ணி முன்னாடி பேசிடாத. அவ்வளவுதான். இதையே பிடிச்சுட்டு தொங்கப் போறா, அப்புறம் வேற வழியில்லாம நானும் சரின்னு சொல்லப் போறேன்” பாக்கியம் தீவிரமாக சொல்ல, அந்த எதிர்பாராத பதிலில் அதிர்ந்து பின் சத்தமாக சிரித்தாள் வானதி.
அன்றும் கன மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால்தான், காலையிலேயே மகளின் வீட்டிற்கு வந்து விட்டார் பாக்கியம். அவருடன் வந்த ஹரிணிக்கு லேப்டாப்பில் ஐஸ் ஏஜ் அனிமேஷன் படம் போட்டு விட்டிருந்தாள் வானதி. நேத்ரனும் அவளுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்க, நட்சத்திரா இன்னமும் உறக்கத்தில் இருந்தாள்.
பிள்ளைகளை அம்மா பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அத்தை, மாமாவை மட்டும் கவனித்து, அவர்களுக்கு காலை உணவை கொடுத்து விட்டு அலுவலகம் கிளம்பினாள் வானதி.
அங்கிருந்து மீண்டும் ஒருமுறை இளங்கோவிற்கு வேலையை விடப் போகும் தன் முடிவை குறுஞ்செய்தி அனுப்பி தெரியப்படுத்தினாள்.
“உன் விருப்பம்” என்று ஆங்கிலத்தில் பதிலும் குறுஞ்செய்தியாக வந்து விழுந்தது.
ஒரு முடிவை எடுத்தப் பிறகு அதை செயலாக்க தாமதிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. ஆகையால், காலை பத்து மணிக்கு எல்லாம் தலைமைக்கு ராஜினாமாவை இமெயில் அனுப்பி விட்டாள். அடுத்த பத்தே நிமிடங்களில் அவளுக்கு அழைப்பு வந்து விட்டது.
அவளது முடிவை நிர்வாகம் ஏற்க மறுத்தது. ஆனால், வானதி தன் முடிவில் உறுதியாக நிற்கவும், ஊதியத்துடன் கூடிய இரண்டு வார விடுமுறையை அவளுக்கு வழங்க நிறுவனம் இறங்கி வந்தது.