அவளுக்குத் தேவை நீண்ட கால தீர்வு. இப்போது விடுமுறை எடுத்தாலும் பின்னாட்களில் அவளுக்கு மேலும் விடுமுறை தேவைப்படும் போது, அதற்கு நிறுவனம் அனுமதி அளிக்குமா என்றும் அவள் சிந்திக்க வேண்டியிருந்தது. உடனேயே இளங்கோவிற்கு அழைக்க, அவன் முக்கிய வேலையில் இருந்தான். ஆக, தகவலை மட்டும் தெரிவித்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து, “லீவ் வேணாம். ரிசைன் பண்றேன்னு முடிவா சொல்லிடு” என்று அவளின் முடிவையே, அவனும் பிரதிபலிக்க, திடமானாள்.
எந்தவொரு நிறுவனமும் நல்லதொரு ஊழியனை இழக்க விரும்பாது. அதைத்தான் அவளின் நிறுவனமும் செய்தது. அவர்களை பொறுத்தவரை அவள் வேறு வேலைக்கு சொல்லப் போகிறாள் என்றே சந்தேகித்தனர். அவளுக்கான ஊதியத்தையும், இதர சலுகைகளையும் உயர்த்தித் தருகிறோம் என்று வாக்களித்தனர். அவள் அங்கிருக்கும் போதே அதற்கான கடிதமும், அவள் முன் நீட்டப்பட ஒரு கணம் தன் முடிவையே மாற்றிக் கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தாள் வானதி.
இளங்கோதான், “இதெல்லாம் கார்பரேட் டெக்னிக் வானதி. ஜஸ்ட் சே நோ டைரக்ட்லி” என்று அவளை உந்தினான்.
“ஓகே” என்று கணவனுக்கு பதில் அனுப்பிய வானதி அவன் சொன்னதை அப்படியே செய்தாள்.
அன்றைய தினம் முடிகையில் அவள் பணிபுரிந்த நிறுவனம் மிகப் பெரிய அதிருப்தியுடன் அவளின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது.
அத்தோடு நிற்காமல் சட்டத் திட்டங்களை எல்லாம் அவர்கள் பேச, வானதிக்கு மூச்சடைத்தது.
வேலையை ராஜினாமா செய்தாலும் இன்னும் இரண்டு மாதங்கள் அவள் வேலைக்கு வந்தேயாக வேண்டும். அவளின் இடத்தை நிரப்பப் போகும் நபருக்கு, அவள் அத்தனை பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் அறியாதவள் அல்ல அவள். ஆனாலும், உடனேயே பணியில் இருந்து விடுபட முடிந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்தாள் வானதி.
“இட்ஸ் ஓகே. ரெண்டு மாசம்தானே. வீ வில் மேனேஜ்” என்று இளங்கோ அனுப்பவும்தான் தணிந்தாள் வானதி.
“ஹாய், வானதி வீட்லதானே இருக்க? அம்மாப்பா உங்க வீட்டுக்கு வந்துட்டே இருக்காங்க” என்று அர்ச்சனா அழைத்துக் கேட்கவும்தான், நேரத்தைப் பார்த்தாள் வானதி. மாலை ஐந்து என்றது கடிகாரம்.
“ஆபீஸ்ல இருக்கேன் அண்ணி. வீட்ல அம்மா இருக்காங்க, பார்த்துப்பாங்க” என்று அவள் சொல்லவும், “அப்போ ஓகே” என்றாள் அர்ச்சனா.
ஆனால், தாமரைக்குதான் பிடிக்கவில்லை.
“பாருங்க. எங்க மருமகளோட, அண்ணியோட அம்மா, அப்பா நீங்க. எங்க மேல அக்கறையா நீங்களே எங்களை பார்க்க வந்திருக்கீங்க. ஆனா, பாருங்க. உங்களை கவனிக்க எங்க மருமக வீட்ல இல்ல. காலையிலயே வேலைக்கு போயாச்சு அந்த மேடம். நாங்க வந்த நாள்ல இருந்து…” மேலும் என்ன சொல்லி இருப்பாரோ, அவர்களுக்கு சிற்றுண்டியும், தேநீரும் கொண்டு வந்த பாக்கியத்தையும் பார்த்ததும் பேச்சை நிறுத்தினார்.
“ம்ம், என்ன பண்றது? இன்னைக்கு இருக்குற விலை வாசிக்கு புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்கு போனாதானே குடும்பத்தை சமாளிக்க முடியுது. நம்ம காலத்துல படிப்பு ஃப்ரீ. இன்னைக்கு ஸ்கூல் ஃபீஸ் மட்டுமே லட்சத்துல கட்டுறாங்க இவங்க. எங்க மக அர்ச்சனாவும் வேலைக்கு போறாளே. உங்களுக்கு ஒரு அவசரம்னா வானதி பிள்ளைங்கள கூட்டிட்டு ஓடி வந்திருக்கா. அதுக்கே அவளை பாராட்டணும்” என்று சொல்லவும் அவரை அசட்டையாக பார்த்தார் தாமரை. மருமகளை தன்னோடு சேர்ந்து மெல்லுவார் என்று அவர் எதிர்பார்த்திருக்க, அவளை புகழ்ந்து பேசவும் அவருக்கு ஏமாற்றமாகப் போனது.
அர்ச்சனா வீட்டினர் அதிக நேரம் செலவழிக்காமல், நலம் விசாரித்து, வாங்கி வந்திருந்த பழங்களை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர். பாக்கியம் நடந்ததை அமைதியாக பார்த்ததோடு சரி, எதுவும் பேசவில்லை.
மறுநாளே அருள் செல்வன் மனைவி நிகிதாவின் குடும்பம் கோயம்புத்தூரில் இருந்து வந்திறங்கியது. அதற்கடுத்த நாள் மதியழகியின் மாமியார் வீடு திருச்சியில் இருந்து வந்தனர். ஓரிரவு அங்கு தங்கியே சென்றனர். மழை குறைந்திருக்க, பிள்ளைகள் பள்ளிக்கு சென்று விட்டார்கள். ஆனால், வானதி தொடர்ந்து வேலைக்கு செல்லவும் பாக்கியமே தினம் மகள் வீட்டிற்கு வந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.
இளங்கோ பேசி வைத்திருந்த நிறுவனத்தில் இருந்து குறித்த நாளில் வீட்டு உதவிக்கு ஆள் அனுப்பவில்லை அவர்கள். அப்போது பக்கத்து வீட்டு பத்மாதான் அவளுக்கு உதவினார். அவர்கள் வீட்டில் பெரியவர்களை பார்த்துக் கொள்ளவென்று வீட்டோடு உதவிக்கு ஒரு ஆளை அமர்த்தியிருந்தார்கள். அவரையே வானதி வீட்டிற்கும் அனுப்பி வைத்தார்கள். காலை, மாலை என வேலை நேரமும், சம்பளமும் பேசி, அப்போதே ஒரு தொகையை முன் பணமாக வானதி கொடுத்து விட, மறுநாளில் இருந்து வேலைக்கு வந்து விட்டார் அவர்.
அந்த வீட்டில் அனைத்தும் சீராக சென்றது. ஆனால், அனைத்திலும் குற்றம், குறைகள் கண்டுபிடித்து புலம்பித் தள்ளினார் தாமரை. அவரோடு சேர்ந்து கொண்டாள் மதியழகி. சந்திரசேகர் மனைவியை அதட்டிப் பார்த்தும் அதற்கெல்லாம் கட்டுப்படவில்லை அவர். சதா வார்த்தைகளால் வானதியை சொடுக்கிக் கொண்டேயிருந்தார்.
அவளும் அம்மாவிடம் சொன்னது போல, “மாமியார்னா அப்படித்தான் இருப்பார்” என தனக்குத்தானே பல முறை சொல்லிக் கொண்டாள். ஆனாலும், அவரின் பேச்சுகள் அவளின் மனநிம்மதியை குலைத்து போடுவதாகவே இருந்தது.
“மதிக்கு ஒரே வருத்தம். அவங்க புகுந்த வீட்டு ஆளுங்களை நீ சரியாவே கவனிக்கலையாம். அதையே சொல்லி சொல்லி மாஞ்சு போறா. அவ மாமியார்காரி பொல்லாத பொம்பளை” அவர் சொல்லும் போதே வானதி சிரிப்பை அடக்க, “உன்னை விடவா?” என்று கேட்டே விட்டார் சந்திரசேகர்.
“என்ன சொன்னீங்க நீங்க? நானும், அந்த பொம்பளையும் ஒன்னா?” என்று தாமரை கத்தத் தொடங்கவும், குழந்தைகளுடன் தங்கள் அறைக்குச் சென்று விட்டாள் வானதி.
“இளங்கோ வரவும் முதல் வேலையா அவன்கிட்ட சொத்து பிரிக்கறதை பத்தி பேசணும். அருளும், மதியும் கூட ஊருக்கு வர்றேன்னு சொன்னாங்க” என்று மறுநாள் காலை வானதி காஃபி கொடுக்கும் போதே தாமரை அறிவிக்க, “அட, உன் பிள்ளைங்களுக்கு காசுன்னு காதுல விழுந்ததும் லீவ் கிடைச்சு, ஊருக்கு வர வழி தெரிஞ்சுடுச்சுப் பாரேன்” என்று அவரின் காலை வாரினார் சந்திரசேகர்.
“ஆ, அது உங்களைப் பார்க்கத்தான் வருதுங்க பிள்ளைங்க. அதுங்களை எப்படி இப்படி அபாண்டமா பேச மனசு வருது உங்களுக்கு? உங்களை மாதிரி இல்லாம, நம்ம பிள்ளைங்களுக்கு உங்க மேல பாசம் அதிகம்”
“அந்த பாசம் ரொம்ப பொங்கி வழிஞ்சுடாம பார்த்துக்கோ தாமரை. இப்போதான் மைனர் ஹார்ட் அட்டாக் வந்து தப்பியிருக்கேன் நான். உன் புள்ளைங்களுக்கு சொல்லி வை” என்று அவர் சொல்லவும், தாமரை பதிலுக்கு கத்த, வானதிக்கு வருத்தமாகப் போனது.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அந்த வார விடுமுறை வர, வானதி உதவியாளருடன் வீட்டை ஒதுக்கி அம்மாவுக்கு ஓய்வு தந்து அனுப்பினாள். பெரியவர்களுக்கு, பிள்ளைகளுக்கு பிடித்தது என தனித்தனியாக சமையல் செய்து, சாப்பிட வைத்து, மாலை அவர்களை மாலுக்கு அழைத்துச் சென்றாள். பெரியவர்கள் வேடிக்கைப் பார்த்தபடி சுற்றி வர, பிள்ளைகளை விளையாட வைத்து கூட்டி வந்தாள்.
அன்றிரவு இளங்கோவும் ஜப்பானில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தான்.
“ஃப்ளைட் மிட்நைட் லாண்ட்டாகும். அதனால, நானே டாக்ஸி எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுறேன் வானதி” என்ற கணவனின் குறுஞ்செய்தியை பார்த்ததும் முகம் முழுவதும் புன்னகை பரவ, மனம் முழுக்க எதிர்பார்ப்புடன், கணவனைக் காணும் ஆவலுடன் காத்திருக்க முடியாமல் தவித்தாள் வானதி.
“இந்தாடா அண்ணா. அவர் இன்னைக்கு நைட் சென்னை வர்றார். ஜஸ்ட் இன்ஃபார்மிங் யூ” என்று மாதவனுக்கு செய்தி அனுப்பினாள். அம்மா சொல்லி அவனுக்கும் செய்தி தெரியும். ஆனாலும், தங்கையின் செய்தி தாங்கி வந்திருந்த மறைமுக கோரிக்கையை அல்லது மிரட்டலை அவன் அறிவான். ஆக, நள்ளிரவில் விமான நிலையம் சென்று காத்திருந்து வீட்டு மாப்பிள்ளையை அழைத்து வந்து அவன் வீட்டில் பத்திரமாக சேர்ப்பித்தான் மாதவன்.
“ஹாய் மாதவன், என்ன நீங்க வந்திருக்கீங்க?” என்று ஆச்சரியப்பட்ட இளங்கோ, “உங்களை யார் வரச் சொன்னது? நானே வீட்டுக்கு வந்திருப்பேன் இல்ல?. உங்க தங்கச்சி சொன்னா, தூக்கத்தை விட்டு வரணுமா நீங்க?” என்று ஆதங்கத்துடன் அவன் கேட்கவும்,
“ஓகே, ஓகே, நம்பிட்டேன். ஆனாலும், என்னை ரிசீவ் பண்ண நீங்க வந்ததுக்கு தேங்க்ஸ்” என்று சிரிப்புடன் இளங்கோ சொல்லவும், மாதவனும் புன்னகைத்தான்.
பெற்றோருடன் தினமும் பத்து நிமிடமாவது காணொளி அழைப்பில் பேசி விடுவான் இளங்கோ. அதிலும் அப்பாவிடம் அதிகமாக பேசினான். ஆனாலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல் நலம் குன்றியிருக்கிறார் என்பதை இன்னமும் அவனால் நம்பவே முடியவில்லை. இப்போது அவரை நேரில் பார்த்தால், அதை நம்ப வேண்டியிருக்கும் என்ற பயம் அவன் மனதை அழுத்தியது.
அவர்கள் வீடு வருகையில் சென்னை இன்னமும் மெல்லிய இருளில் மூழ்கியிருக்க, தன் பையில் இருந்த வீட்டுச் சாவியை தேடினான் இளங்கோ. அதற்குள் அழைப்பு மணியை அழுத்தி விட்டான் மாதவன்.
வானதி முன்னிரவில் உறங்கி எழுந்து விட்டாள். இணையத்தில் கணவன் வரும் விமானத்தின் எண்ணை போட்டு அது எங்கிருக்கிறது, தரையிறங்கி விட்டதா என நொடிக்கொரு தரம் சோதனையிட்டு கொண்டிருந்தாள் அவள். ஆக, கணவனின் விமானம் தரையிறங்கிய நேரம் அவளுக்கு சரியாகத் தெரியும். அதற்கு பிறகு தான் இளங்கோவே அவளுக்கு செய்தி அனுப்பினான்.
இப்போது அழைப்பு மணியோசை கேட்கவும் அவசரமாக எழுந்து கதவை திறக்கச் சென்றாள். அந்த சத்தத்தில் ஹாலில் படுத்திருந்த தாமரையும் கண் விழித்து விட, மருமகளை அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக பார்த்தார் அவர்.
அவளோ மிக சாதாரணமாக சென்று கதவை திறந்துப் புன்னகைத்தாள்.
“வாங்க” வானதி சொல்ல, “ம்ம்” என்று மனைவியை நெருங்கினான் இளங்கோ. அவனது பயண பெட்டிகளை உள்ளே கொண்டு வந்த மாதவன் தங்கையை பார்த்து புன்னகைத்து, “குட் நைட். நான் காலைல வர்றேன்” என்று பொதுவாக சொல்லி விடை பெற்றுக் கொண்டான்.
“வாப்பா இளங்கோ” தாமரை மகனின் முகம் பார்த்து சொல்ல, “எப்படி இருக்கீங்க மா? இந்நேரம் நீங்க ஏன் எழுந்தீங்க தூக்கத்தை கெடுத்துட்டு?” என்று கேட்க, “எனக்கென்ன நல்லாதான் இருக்கேன்” என்றவரின் பார்வை முழுவதும் மருமகளின் மேலேயே இருந்தது.
“ம்ம், அப்பா எப்படி இருக்கார்? நீங்க போய் படுங்கம்மா. மணி மூனுதான் ஆகுது. நாம காலையில பேசலாம்” இளங்கோ அவரிடம் பேசிக் கொண்டிருக்க, அவனது பெட்டியை நகர்த்திக் கொண்டு, மாமியாரின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் தங்களின் அறைக்குச் சென்று விட்டாள் வானதி.
அம்மாவுடன் பேசி முடித்து அவன் அறைக்குள் நுழைந்து கதவடைத்து திரும்ப, வானதி உறங்கியிருந்தாள்.
இளங்கோ குளித்து உடை மாற்றி வந்து, மனைவியை இழுத்து வாசம் பிடித்தான்.
“ப்ச், தூக்கம் வருது. தள்ளிப் போங்க” அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டாள்.
“எப்படி வானதி, ஒரே வசனத்தை அலுக்காம இத்தனை வருஷமா சொல்ற?” இன்னும் அழுத்தமாக மனைவியை தனக்குள் இழுத்தான் இளங்கோ.
“நல்லா ஆக்டோபஸ் மாதிரி ஆளை சுருட்டி விழுங்கிடுங்க” அவளின் இடையில் பதிந்திருந்த கணவனின் கரத்தில் அடித்து அவள் சொல்ல, “யாரு ஆளை விழுங்கறா? நானா நீயா? மயக்கி. இப்படித்தான் நடுராத்திரில சேலை கட்டிட்டு சுத்துவீயோ?” என்று இளங்கோ அவளை மடக்க, சட்டென அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் வானதி. இளங்கோவின் கண்கள் மனைவியின் மேல் அழுத்தமாக நிலைத்திருந்தது.
ரோஜா நிற உடம்பில், ஊதா நிறப் பூக்கள் நெய்யப்பட்டிருந்த சேலையில் நேர்த்தியாக இருந்தாள் வானதி. கூந்தலை தளர பின்னி, முல்லை பூ சூடியிருந்தவளை ரசித்து அவள் விழிகளில் தன் விழிகளை பதித்தான் இளங்கோ.