அதிகாலை ஐந்து மணிக்கு கிரௌண்டிற்க்கு வந்தவன் முதலில் ஸ்ட்ரெச்சிங்.. பிறகு ஜாகிங்.. பின்னே சீரான வேகத்தில் அரைமணிநேர ஓட்டப்பயிற்சி.. பிறகு இரண்டு மணிநேர கடின உடற்ப்பயிற்சி என வழக்கம்போல் செய்து முடித்து.. தனது உடலை நனைத்திருந்த வியர்வைகளை துடைத்த கலையரசன்.. தனது அடுத்த முக்கிய பயிற்சியாகபாக்சிங் கேம்பிற்க்குள் நுழைந்தான் அதீத உற்சாகத்தோடும் வெறியோடும்.
நேரம் போனதே தெரியாமல் இரண்டு மணிநேர பாக்ஸிங் பயிற்சி போய்கொண்டிருக்க.. ‘கலையரசா போதும் இறங்கு..” என்றார் பயிற்சியாளர்.
தனது கோச்சின் குரலில் சட்டென தனது பயிற்சியை நிறுத்தியவன் குரல் வந்த இடத்தை நோக்க.. ம்.. ரமணன்தான் நின்றிருந்தார்.. என்ன ஒரு ஆச்சர்யம் என்ற பார்வையோடு.. ‘மார்னிங் சார்..” என்றான் தனது கையுறைகளை கழற்றியபடி.
‘ஹாப்பி மார்னிங் மை பாய்..” என உற்சாகத்தோடு சொல்லி.. ‘உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. வா..” என்றார்.
முக்கியமான விசயம் இருந்தால் மட்டுமே ரமணன் இவனை காண வருவார்.. மற்றபடி இவனைவிட ஜூனியர்களிடம்தான் அதிகம் இருப்பார். இதற்கும் நூறடி மீட்டர் தள்ளிதான் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்.. இனி கலையரசனுக்கு தனது பயிற்சி தேவையில்லை எனும் அளவிற்கு தேர்ந்த வீரன் என்பதால் தன் கவனத்தை சிறுவர்களிடம் செலுத்தினார். பயிற்சி முடியும் நேரம்தான் ரமணன் இவனிடம் வருவார்.
காரணமில்லாமல் தனது பயிற்சி நேரத்தை வீணடிக்கமாட்டார் என உணர்ந்தவனாக தன் வியர்வையை துடைத்தவன் தனது இருபத்தி இரண்டு வயது இளமைக்கே உரித்தான துள்ளலோடு மேலிருந்து குதித்து.. ‘சொல்லுங்க சார்..” என்றான்.
‘ஒரு குட் நியூஸ்.. ஒரு அட்வைஸ்.. ஃபர்ஸ்ட் எது வேணும்..?” என்றார் சின்ன சிரிப்போடு.
என்னடா இது.? என்னைக்குமில்லாம இப்படி கேட்குறார் என நினைத்தவன்.. ‘ஆக.. உங்க பார்வையில எதோ ஒரு விசயத்துல நான் தப்பா தெரியறேன்.. முதல்ல அதை கிளியர் செய்திடறேன்.. அதனால அட்வைஸ் ஃபர்ஸ்ட் சார்..” என்றான் இலகுவாக.
அப்போவும் தான் எதோ தப்பு செய்திருக்கிறோம் என நினைக்காமல்.. தன் பார்வையில் தப்பா தெரிகிறேன் என சொல்லும் கலையரசனின் உறுதியை நினைத்து பெருமையடைந்த ரமணன்..‘அந்த சுவாதி உனக்கு என்ன வேணும்.?” என நேரடியாக விசயத்திற்கு வந்தார்.
சிறிதாய் அதிர்ந்தவன் பின்னே இயல்பாகி.. ‘சொந்தம்லாம் இல்லைங்க சார்.. ஏழுமாசம் முன்ன எங்க தெருவுக்கு குடி வந்தாங்க.. நாலு மாசம் முன்னவரைக்கும் அவங்கள்ட்ட நான் பேசினது கூட இல்ல.. இப்போ கொஞ்ச நாளாத்தான் பழக்கம்..” என்றான் இயல்பாக.
‘எதுக்குப்பா தேவையில்லாத பிரச்சனை.?” எனும்போதே தனது இலகுவான பார்வையை மாற்றி ஊன்றிப்பார்த்தான் ரமணனை.
கலையரசன் முறைத்தாலும் அவனின் நலன் கருதியாக.. ‘அந்த பொண்ணைத்தேடி ரௌடிப் பசங்க வந்தாங்களாமே.? நீதான் சண்டை போட்டு துரத்தினுயாம்..” என்றார் விடாமல்.
‘ஆமாம் சார்.. தனியா இருக்க பொண்ணுகிட்ட வம்பு செய்தானுங்க.. பார்த்துட்டு சும்மா இருக்க என்னால முடியல.. பொறுமையா எடுத்து சொல்லத்தான் போனேன்.. என்கிட்டயே நீ என்ன இவளை வச்சிட்டிருக்கியான்னு கேட்டானுங்க.. அதோட அந்த பொண்ணையும் ரொம்ப தரக்குறைவா பேசுனாங்க.. எனக்கு ஆத்திரம் தாங்க முடியல.. அதான் அடிச்சி நொறுக்கிட்டேன்..” என்றான் கோபத்தோடு.
‘அந்த பொண்ணோட புருசன் என்ன செய்து வச்சிருக்கானோ.? பொண்டாட்டி புள்ளைங்களை எதுக்கு இப்படி தவிக்க விடனும்.? எனக்கென்னவோ எதோ தப்பு செய்துட்டு தலைமறைவா இருப்பானோன்னு தோணுது.. கொலை தீவிரவாதம்ன்னு விசயம் பெருசா இருக்கப்போய் நீ மாட்டிக்காத.. இப்பல்லாம் யாரையும் நம்ப முடியாது.. அந்த பொண்ணையும் சேர்த்துதான் சொல்றேன்..” என்றார் அக்கறையோடு.
‘தீவிரவாதம் அப்படில்லாம் இருந்தா இந்நேரம் குடும்பத்தோட எல்லாரையும் போட்டு தள்ளிருப்பாங்க சார்..” என பயிற்சியாளருக்கே பயிற்சித்து.. ‘ஆனா நீங்க சொல்றமாதிரி அவங்க புருசன் சரியில்லாத ஆளாவே இருக்கட்டும், அதுக்காக நம்ம வீட்டுக்கு பக்கத்துல அநியாயம் நடக்குறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுங்களா.? இரண்டு குழந்தைங்க வேற இருக்காங்க.. அந்த லேடியும் ரொம்ப பயந்துபோய் இருக்கு.. இதுவே நம்ம அக்கா தங்ககையா இருந்தா பார்த்துட்டிருப்போமா.?” என்றான் சிறு கோபத்தோடு.
இன்னும் மூன்று மாதத்தில் சாம்பியன்சிப் மேட்ச் வருகிறது.. இந்த வருடமும் முதலிடம் பெற்றானென்றால் தொடர்ந்து மூனாவது வருட சாம்பியன் என்ற பெருமை கைக்கெட்டும்.. இவனின் கடின உழைப்பு அடுத்தவர்களால் வீணாகிவிடக்கூடாது என்ற எண்ணம் பயிற்சியாளருக்கு.
கிக்பாக்சிங் கலையரசனின் உயிர்மூச்சு.. இதை தவிர சிறு வயதிலேயே கரேத்தாவில் பிளாக் பெல்ட் வாங்கியவன்.. அதோடு சிலம்பம் கத்திசண்டை போன்று தற்காப்பு கலைகளை முறைப்படி கற்றவன்.. கலையரசனோடு நேருக்கு நேராய் மோதி ஜெயிப்பது நடவாத காரியம்.. ஒரே நேரத்தில் நான்கு பேரை மொத்தமாய் சாய்த்திடும் வல்லமை படைத்தவன். ஆனாலும் இப்படி அடுத்தவர் பிரச்சனைக்காக கலையரசன் அசந்த நேரம் வெட்டு குத்து என ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் ரமணனிற்கு.
‘ஆக.. அவங்களுக்கு ஃபுல் புரொட்டக்ஷன் கொடுக்கனும்னு முடிவு செய்திட்ட..?” என்றார் ஆராய்ச்சி பார்வையோடு.
‘ஆமாம் சார்..” என்றான் திடமாக.
‘எவ்ளோ நாளைக்கு.?” என்றார் ரமணன்.
‘சார்.. இந்த கேள்விக்கு கொஞ்சம் லென்த்தியா பதில் சொன்னாதான் சரியா இருக்கும்.. “ என்ற பயிற்சியாளரை பார்க்க.. சொல் என்பதுபோல் ரமணன் ஆமோதிக்க.. ‘அந்த லேடிகிட்ட, உங்களுக்கு என்ன பிரச்சனை.? யார் இவங்க.? எதுக்காக உங்களை தொல்லை பண்றாங்கன்னு கேட்டேன்..
இவங்க யார்ன்னு எனக்கு தெரியாது.. ஆனா என் புருசன் ஃபைனான்ஸ் வச்சி நடத்துறது.. அவரோட ஆஃபீஸ் எங்கயியிருந்தது.. எங்களுக்கு எப்படி கல்யாணம் நடந்தது.. இரண்டு குழந்தைகளும் எந்த ஹாஸ்பிடல்ல பொறந்தாங்கன்ற வரைக்கும் எங்க விசயமெல்லாம் ரொம்ப சரியா சொல்றாங்கன்னு பயந்துட்டே சொன்னாங்க..
ஏன் சொந்த வீட்டை விட்டுட்டு இங்க வந்திங்கன்னு கேட்டேன்.. ஏழு மாசம் முன்ன வசூல் விசயமா வெளில போய் வரன்னு கிளம்பியவன் நாலு நாளாகியும் வீட்டுக்கு வரலையாம்.. போன் செய்தாலும் சுட்ச் ஆப்னு வந்ததாம்.. ஐஞ்சாவது நாள் ஒருத்தன் இவங்களை தேடி வந்து.. உன் புருசன் ஆபத்துல மாட்டியிருக்கார்.. அவர் வர ரொம்ப நாளாகும்.
உங்களையும் இந்த ஊரை விட்டு வேற ஊருக்கு போக சொன்னாரு.. இல்ல குழந்தைங்க உயிருக்கும் உங்க உயிருக்கும் ஆபத்து வரும்னு அவர் சொன்னதா இவன் சொல்லிட்டு போனானாம்.
இவன் சொல்லிட்டு போன அடுத்த நாளே காலைல வாசல் பெருக்கிட்டிருக்கும்போது இந்த லேடி வீட்டை ஒருத்தன் நோட்டம் விட்டானாம்.. இந்த லேடிக்கு பயமாகிருச்சாம்.. அன்னைக்கு காலைல குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பக்கத்து வீட்டு லேடியோட போய் வந்திருக்காங்க..
அன்னைக்கு நைட்டே நோட்டம் விட்ட பையனோட நாலஞ்சு பேர் சேர்ந்து வந்து கதவை தட்டினாங்களாம்.. இந்த லேடி பக்கத்து வீட்டுகாரங்களுக்கு ஃபோன் செய்து விசயத்தை சொல்லியிருக்காங்க.. அவங்கள்லாம் வெளில வரவும் இவனுங்க போயிருக்கானுங்க.. அப்போவும் இன்னைக்கு தப்பிச்சாலும் என்னைக்குன்னாலும் என்கிட்ட சிக்கித்தான் ஆகனும்.. அன்னைக்கு உன் புருசன் செய்ததுக்கும் சேர்த்து உன்னை கவனிக்காம விடறதில்லன்னு சொல்லிட்டு போனானானுங்களாம்..
இவங்க விடியறவரைக்கும் பயத்துல தூங்கவே இல்லையாம்.. விடியகாலம் நாலு மணிக்கு இந்த வீட்டுல இருக்க நகை பணம் துணிமணிலாம் கொஞ்சம் எடுத்துட்டு எந்த பஸ் கிடைக்குதோ அதுல ஏறிடலாம்னு நம்மூர் பஸ்ல ஏறியிருக்காங்க..
சரி கவலைப்படாதிங்க.. எங்க வீடு ஒன்னு காலியா இருக்கு.. அங்க தங்கிக்கங்க.. ஆனா உங்க உண்மை விசயம் சொன்னா ரௌடி போலீஸ் கேஸ்ன்னு எங்கம்மா பயந்துப்பாங்க.. இப்போதைக்கு புருசன் கொடுமை தாங்க முடியாம வந்துட்டிங்கன்னு எங்கம்மாகிட்ட சொல்லிக்கலாம்.. அப்புறம் உங்க புருசனை தேடிக்கலாம்னு அவங்களுக்கு தைரியம் சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டான்.
நீங்க சொல்றமாதிரி வெட்டு குத்துன்னு பிரபாகரன் பயந்திருந்தான்னா மூனு பேருக்கு அடைக்கலம் கொடுத்திருக்க முடியுங்களா.? என்னை விட ரெண்டு வயசு சின்ன பையன் பிரபாகரன்.. முன்ன பின்ன தெரியாதவங்களா இருந்தாலும் ஆபத்துல இருக்காங்களேன்னு அவனே இந்தளவுக்கு செய்திருக்கான்..
ஆயிரம் பேர் முன்ன ஸ்டேஜ்ல சண்டை போட்டு ஜெயிச்சி மெடல் வாங்கிட்டா போதுங்களா.? என் கண்முன்னால ஒரு பொம்பளைகிட்ட நாலு பேர் தரக்குறைவா நடந்துக்கிறாங்க.. பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றிங்களா.? கத்துக்கிட்ட வித்தையை சரியான நேரத்துக்கு யூஸ் பண்றவன்தான் ஆம்பிளை.. நான் ஆம்பிளை சார்..” என்றான் தன் முடிவில் உறுதியாக.
‘ஆக.. யார் சொன்னாலும் அந்த லேடிக்கு ஹெல்ப் பண்றதை நிறுத்தப்போறதில்ல..?” என உறுத்துப் பார்த்தார்.
‘கண்டிப்பா சார்..” என தீர்க்கமாக சொல்ல.. ரமணன் கோபமாய் முறைக்க..
‘சார் ஏழுமாசமா இங்க இருக்காங்க.. எந்த பிரச்சனையும் வரல.. இரண்டு வாரம் முன்ன பசங்கள்லாம் தெருவுல விளையாடிட்டிருந்தாங்க.. அந்த லேடியோட பையன் மட்டும் அழுதிட்டிருந்தான்..
நீ ஏண்டா விளையாடுலன்னு கேட்டேன்.. எனக்கு பேட் வாங்கி தர சொன்னா எங்கம்மா வாங்கி தர மாட்றாங்க.. அவங்கள்ட்ட இருக்க பணமெல்லாம் காலி ஆகிடுச்சின்னு அவங்களும் அழறாங்கன்னு அழுதுட்டே சொன்னான்.. சரி போய் என்ன ஏதுன்னு கேட்கலாம்னு அப்போதான் பர்ஸ்ட் டைமா அந்த லேடி வீட்டுக்கு போனேன்..
பையன் அழுததை சொல்லி கேட்டேன்.. கையில இருக்க பணமெல்லாம் காலி ஆகிடுச்சி.. நகையை அடகு வைக்கலாம்னு போனா ஐ.டி ப்ரூஃப் கேக்குறாங்க.. அதெல்லாம் அங்க ஊர்ல இருக்கு.. அங்க போனா திரும்ப உயிரோட வருவேனான்னு பயமா இருக்கு.. இந்த புள்ளைங்களை எப்படி கரை சேர்த்துவன்னு தெரியலன்னு அழுதாங்க..
அப்போதான் அவசரமா வந்துட்டிங்க.. இங்க வந்ததுக்கப்புறம் உங்கப்பாம்மாக்கோ இல்ல சொந்த பந்தம் யார்கிட்டயாவது உங்க பிரச்சனையை சொல்லலாமில்லன்னு கேட்டேன்.. நான் லவ் மேரேஜ்ங்கிறதால எல்லாரும் என்மேல கோபமா இருக்காங்க.. நான் போனாலும் என்னை சேர்த்துக்க மாட்டாங்கன்னு ரொம்ப வேதனையோட சொன்னாங்க..
இரண்டு குழந்தைகளை வச்சிகிட்டு பணம் இல்லாம என்ன செய்வாங்கன்னு கஷ்டமா போய்டுச்சி.. அட்ரஸ் சொல்லுங்க நான் போய் எடுத்துட்டு வரேன்னு சொல்லி, அட்ரஸ் வீட்டு சாவி பீரோ சாவில்லாம் வாங்கிட்டு அந்த லேடியோட வீட்டுக்கு போய் வந்தேன்.. நான் போய் வந்த அடுத்த நாளே இந்த லேடியை தேடி அந்த காலிபசங்க வந்துட்டானுங்க..
அப்போ, நான் அந்த லேடி வீட்டுக்கு போனதுலயிருந்து என்னை வாட்ச் செய்து கண்டுபிடிச்சிருக்கானுங்க.. அப்புறம்தான் விசயம் கொஞ்சம்சீரியஸ்தான்னு புரிஞ்சது..
அவங்களுக்காகத்தான் நான் போனேன்னாலும் நான் போனதுனாலதான என்னை ஃபாலோ செய்து இவங்களை கண்டுபிடிச்சிருக்காங்க.. அப்போ நான் பார்க்காம யார் பார்ப்பா..?” என்றான் நீண்ட விளக்கமாக.
ம்.. முன் வைத்த காலை பின்வைக்கமாட்டான் என கலையரசனைப் பற்றி தெரிந்தவர்தான் ரமணன்.. கலையரசனைப் பொருத்தமட்டில் ஒரு மாணவன் என்பதை தாண்டி மகனிற்கு நிகரானவன் என்பதாலேயே இத்தனை அக்கறை அவன்மீது.. கலையரசனின் விளக்கத்தில் பெருமையாக பார்த்திருக்க..
‘என்னங்க சார்..?” என்றான் சற்று குரலிறங்கி.
‘இல்ல.. அப்போ அதுக்கு நீ கண்டிப்பா சரிபட்டு வருவ..” என்றார் சிரிப்போடும் பெருமையோடும்.
தனது பயிற்சியாளர் தன்னை புரிந்துகொண்டார் என்ற சந்தோசத்தில்.. ‘ஹா..ஹா.. இதென்னங்க சார் வடிவேல் காமெடியை அப்படியே உல்ட்டாவா சொல்றிங்க..?” என்றான் தானும் இலகுவாக.
‘ம்.. இப்படி தன்னலம் யோசிக்காம பிறர் நலம் யோசிக்கிறவங்க கண்டிப்பா அதுக்கு சரிபட்டு வருவாங்க..” என்றார் மீண்டும்.