சனிக்கிழமை காலை தனது பயிற்சியை முடித்த கலையரசன் ஒன்பது மணிபோல் தன் தந்தைக்கு அழைத்தான். ‘கலை.. நல்லாயிருக்கியாடா.?” என்றார் மயில்சாமி.
‘ம்.. நல்லாயிருக்கேன்ப்பா..” என்றவன் சற்றே தயங்க.. ‘என்னப்பா.? ஏன் ஒரு மாதிரி பேசுற..?” என்றார் பதட்டத்தோடு.
‘ஒன்னுமில்லப்பா..கொஞ்சம் பணம் வேணும்..” என்றார் தயக்கத்தோடு.
‘ச்சு.. அவ்ளோதானா.? நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்..” என ஆசவாசப்பட்டவர்.. ‘எவ்வளோப்பா வேணும்..?” என்றார்.
என்னதான் இருவர் சம்பாதித்தபோதும் இரு பெண்களை பெற்றவர்களாயிற்றே.. கீதாராணிக்கும் செல்வராணிக்கும் திருமணம் முடித்து குழந்தை பிறப்பு சம்பந்தி வீட்டில் நல்லது கெட்டதிற்கு சீர் செய்வது என தனது பெற்றோர்களின் வருமானத்தைவிட செலவுகள் அதிகமே அன்றி மீதம் இருப்பது கடினம் என அறிந்தவனாதலால்.. இது போன்று தேவையின்றி இதுவரை பெற்றோரிடம் பணம் வாங்கியதில்லை. இது முதல்முறை என்பதால் சிறு குற்றவுணர்வு மேலோங்க எவ்வளவு கேட்கலாம் என யோசித்து அமைதி காக்க..
மகனை புரிந்தவராய்.. ‘என்னப்பா..? வேலை கிடைச்சிருக்குன்னு எல்லாரும் ட்ரீட் கேக்குறாங்களா.? பின்ன அது செய்யனும்தான.? நண்பர்கள்னா கேக்கத்தான் செய்வாங்க.. அதுக்கு எதுக்கு தயங்குற.?” என்றார் வாஞ்சையாக.
இத்தனை புரிதலா தந்தைக்கு என்ற வியப்பில் கலையரசன் மீண்டும் அமைதியாகவே இருக்க.. ‘இந்த ஐஞ்சு வருசத்தில தேவைக்கதிகமா நூறு ரூபாய் கூட வாங்கிக்கமாட்ட.. உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா கலை..
அதோட இன்னைக்கு காலைல உன் மகனுக்கு பெரிய வேலை கிடைச்சிருக்கு.. எங்களுக்கு எப்போ விருந்துன்னு இங்க அக்கம் பக்கம் சொந்த பந்தம்லாம் கேட்டாங்க.. அதுக்கப்புறம்தான் உன் நண்பர்களும் இப்படி கேட்பாங்களே.. பணத்துக்கு என்ன செய்வன்னு யோசிச்சி நானே உனக்கு போன் செய்யலாம்னு இருந்தேன்..” என்றார்.
தகப்பனின் அன்பில் கரைந்தவன்.. ‘இன்னைக்குதான் தேதி பத்து.. அடுத்து பென்ஷன் வரைக்கும் எவ்ளோ செலவாகுமோ அதை வச்சிகிட்டு.. மீதி இருக்கிறதை அனுப்புங்கப்பா.. அதுக்கு தகுந்தாற்போல நான் இங்க அரேன்ஜ்பண்ணிக்கிறேன்..” என்றான்.
‘அடேய்.. உங்கம்மா பென்சனை மட்டும்தான உன் செலவுக்கு அனுப்புறோம்.. எங்க இரண்டு பேருக்கு என் பென்சன் பணம் எல்லாமும்லாம் செலவாகிறதில்ல.. அதோட இங்க மூனு மாடு பால் கொடுக்குது.. அதுலயும் கொஞ்சம் பணம் கிடைக்கும்..
உங்கம்மா வேலையை ரொம்ப இழுத்துக்கிறா.. இதுல இன்னொரு மாடு கண்ணு போட்டா இன்னும் வேலை அதிகம்னு அந்த சினைமாட்டை வித்துட்டுதான் ஊருக்கு வந்தோம்.. பழைய கையிருப்பு ஒரு லட்சம் பக்கம் இருக்கும்.. சினைமாடு எழுபதாயிரத்துக்கு விலைபோச்சு..
அதனால அப்பாகிட்ட பணம் இருக்குமான்னு யோசிக்காத.. உனக்கு எவ்ளோ வேணும் சொல்லு.. நானா அனுப்பி பத்தாம ஆகிடப்போகுது.. இது உன் கௌரவ பிரச்சனை..” என்றார் பெருமையாகவே.
‘காலேஜ் பிரண்ட்ஸ்லாம் கொஞ்சம் பேர்தான்ப்பா.. அவங்கள்லாம் பெருசா எதுவும் எதிர்பார்க்க மாட்டாங்க.. நானா பார்த்து எதாவது செய்தாலும் பணத்துக்கு என்னடா செய்தன்னு திட்டதான் செய்வானுங்க.. ஆனா இங்க என் ஜூனியர் ப்ளேயர்ஸ்தான் எப்போண்ணா பார்ட்டி கொடுக்கிறிங்கன்னு என்னை போட்டெடுக்கிறாங்க.. எல்லாம் யு.ஜி பர்ஸ்ட் இயர்.. ஸ்கூல் படிக்கிற பசங்க.. அவங்களை தவிர்க்க முடியல..” என்றான் சங்கடத்தோடு.
‘ஓ.. அப்போ ஒரு ஐம்பதாயிரம் அனுப்பவா.?” என்றார் மயில்சாமி.
கலையரசன் அமைதிகாக்க.. ‘இன்னும் கொஞ்சம்..” எனும்போதே.. ‘இல்லப்பா.. இதுவே ஜாஸ்திதான்.. போதும் போதும்..” என்றான் நிறைவாக.
‘சரிப்பா.. நான் டிரான்ஸ்ஃபர் செய்துடறேன்.. சந்தோசமா இருக்கனும்.. அடுத்த மேட்சுக்கு நல்லா பயிற்சி செய்.. அதே நேரம் கவனத்தோட இரு..” என எடுத்துரைக்க..
‘சரிப்பா.. அம்மா எங்க.?” என்றான்.
‘இங்கதான் பக்கத்துலதான்..” என மனைவியிடம் கொடுக்க.. ‘நல்லாயிருக்கிங்களாம்மா..?” என்றான்.
‘ம் நல்லாயிருக்கேன்.. கலை முதல் மாசம் சம்பளம் வாங்கியதும் ஊருக்கு வா.. நம்ம குலசாமிக்கு ஒரு அபிசேகம் செய்திடலாம்..” என்றார் கலா.
‘நான் வேண்ணா முதல் மாசம் சம்பளம் வாங்கினதும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்ம்மா.. நீ அபிசேகம் செய்.. அதோட அன்னதானம் கூட செய்.. ஆனா என்னால வரமுடியாது.. சாம்பியன்சிப் மேட்ச்சுக்கு ரெகுலர் ப்ராக்டிஸ் வேணும்.. அங்க வந்தா ஒரு வாரத்துக்கு என்னை டேரா போட வச்சிடுவ..” என்றான்.
‘அப்படில்லாம் சொல்லமாட்டேன்.. விடிய காலம் வந்தின்னா இங்க அபிசேகம் முடிஞ்சதும் கிளம்பிடு கண்ணா.. ஒரே ஒரு நாள் மட்டும்தான் ப்ராக்டிஸ் கட்டாகும்.. என் தங்கமில்ல வாடா..” என்றார் கெஞ்சலாக.
தனக்கு வேலை கிடைத்ததை ஊராரிடமும் சொந்தங்களிடமும் சொல்லி பெருமை பாராட்ட வேண்டும்.. என்ற தன் அன்னையின் எண்ணம் உணர்ந்து.. ம் இதில் தப்பேதும் இல்லையே.. தான் ஒரு நல்ல வேலையில் அமரவேண்டும் என்பது அப்பாம்மாவின் வாழ்நாள் கனவல்லவா? அவர்களை பொருத்தவரை இது பெருமைக்குரிய விசயம்தானே என நினைத்தவன்.. ம்.. தானும் ஊருக்கு போய் எட்டு மாதத்திற்கு மேல் இருக்கும்.. வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறையோ அப்பா வரவில்லையென்றால் நம்பாடு திண்டாட்டம்தான் என சற்று மனமிறங்கியவன்..
‘உண்மையாவாம்மா.? அப்புறம் உன் பெரிய பொண்ணு கோவிக்கும்.. மாப்பிள்ளை தப்பா நினைப்பார்.. ஒரே ஒரு நாள் அக்கா வீட்டுக்கு போய் வான்னு என்னை டார்ச்சர் செய்ய கூடாது..” என கண்டிஷன் வைக்க..
‘பெரியவ வந்திருந்தா.. சுவாதியோட நகை டிசைன்லாம் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்ததாம்.. அடகு வைக்கிறதுக்கு பதிலா எனக்கு விலைக்கு கொடுக்கிறிங்காளன்னு கேட்டா.. சுவாதிக்கும் அடகு வச்சி வட்டி கட்டுறதுக்கு பதிலா வித்துடறது பரவால்லன்னு சம்மதிச்சிடுச்சிட்டா.. பாதி பணம் கொடுத்துட்டா.. இரண்டு நாள்ல மீதி பணத்தை கொடுத்துட்டு நகையை வாங்கிக்கிறாளாம்..” என்றார் பிரபாகரனின் அன்னை.
நகை பணம் நிறைய இருக்குன்னதும் கொஞ்சம் சமாதனம் ஆகிட்டாங்களா.? இல்லை பிரபாகரன் பேசி சமாதனம் செய்தானா.? என யோசித்தவன்.. சுவாதியின் நிலையை எண்ணி.. ஹம்.. எப்படியோ இவங்களுக்கு பிரச்சனை இல்லன்னா சரிதான் என நினைத்தான்.
ஓ.கே.. அப்போ ஃபைனான்ஸ் ப்ராப்ளம் சால்வ்ட்.. பிரபா வீட்ல இருக்கிறதால எதாவதுன்னு உடனே நமக்கு கால் செய்திடுவான் என நிம்மதியானவன்.. ‘மளிகை சாமான் ஒரு மாசத்துக்காவது வாங்கி வச்சிக்கோங்க.. இங்க தெரு முனையில இருக்க கடையிலயே வாங்கிக்கோங்க.. மத்த கடையை விட இங்க கொஞ்சம் காஸ்ட்லிதான் ஆனாலும் பரவால்ல.. இப்பேதைக்கு பாதுகாப்புதான் முக்கியம்.. முடிஞ்சவரை வெளில அதிகம் போகாதிங்க.. காய்கறி பத்தி பிரச்சனை இல்ல.. ஒரு அம்மா தினமும் வருவாங்க.. அந்தம்மாகிட்ட எல்லாம் ஃப்ரஸ்சா கிடைக்கும்..” என்க.. சம்மதமாய் தலையசைத்தாள் சுவாதி.
‘எல்லத்தையும் விட முக்கியம்.. குழந்தைகளை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க.. எதாவது அவசரம்ன்னா கால் பண்ணுங்க..” என்றவன்.. ‘உங்ககிட்ட ஃபோன் இருக்கா.?” என்றான்.
‘இருக்கு.. ஆனா சுட்ச் ஆஃப் செய்து வச்சிருக்கேன்.. அன்னைக்கு சண்டைக்கு வந்தவன்ல அவர் பிரண்டும் ஒருத்தன்.. அவர் மொபைல்ல அந்தாளு முகத்தை பார்த்திருக்கேன்.. அதனால யாரை நம்பறதுன்னு தெரியல.. ரொம்ப பயமாயிருக்கு..” என்றாள் பாவமாக.
கலையரசன்.. ‘அட என்னங்க நீங்க..? நாங்க இத்தனை பேரிருக்கோம்.. ஆனாலும் உங்க தங்கைக்கு இருக்கிற தைரியம் கூட உங்களுக்கு இல்ல..” என சலிப்பாய் சொல்ல..
‘தெரியு.. மா.. வா..? ஹம்.. இங்க பாருங்க..” என தன் கை காயத்தை காண்பித்து.. ‘எல்லாம் உங்க தங்கை கொடுத்த அன்பளிப்புதான்..” என அன்று நடந்ததை விளக்கியவன்.. அப்பொழுதுதான் வீட்டினுள் இருந்தபடி எட்டிப்பார்த்த குட்டி நிலாவைக் கண்டான்.
‘உங்க பொண்ணு வெளில வராதுங்களா.? இத்தனை மாசத்துல இன்னைக்குத்தான் பாப்பா முகம் பார்கிறேன்.. பாதுகாப்பு முக்கியம்தான்.. அதுக்காக இப்படி வீட்டுக்குள்ள வச்சி வளர்த்தாதிங்க.. இருக்கிற தைரியமும் காணாம போய்டும்.. பசங்களை விட பொண்ணுங்கதான் தைரியமா இருக்கனும்..” என்றான்.
மகளைப் பார்த்தவள்.. ‘அவங்கப்பாவை விட்டு நகர மாட்டா.. இப்போ அவரும் இல்லாம ஸ்கூலும் போக முடியாம ரொம்ப கஷ்டப்படுறா.. அதோட அன்னைக்கு ரௌடிங்க வந்து மிரட்டினது.. புது இடம் மாறினது.. இங்கயும் அந்த ரௌடிங்க வந்தது.. நீங்க சண்டை போட்டதை பார்த்ததுன்னு நிறை ஷாக் ஆகியிருக்கா.. இங்க வந்ததுலயிருந்து என்னை விட்டு நகர மாட்றா.. என் பின்னாடியேதான் சுத்துறா.. ” என் வேதனையோடு சொன்னவள்..
‘என் தங்கை எப்படியிருக்கா.? என்கிட்ட பேசலன்னாலும் ஸ்கூல் விட்டு வரும்போது தினமும் குழந்தைகளை பார்க்காம போகமாட்டா..” என கண்கலங்கினாள் நிலவழகியின் நினைவில்.
கலையரசன்.. ‘ம்.. குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் புதுசை ஏத்துக்க மாட்டாங்க..” என தானும் வருந்தியவன்.. சூழலை இலகுவாக்க.. ‘ஏங்க.. இங்க ஒருத்தன் கையை ஒரு தம்மாத்துண்டு புள்ள கிழிச்சிட்டா.. அதை பத்தி கேக்காம உங்க தங்கையை விசாரிக்கிறிங்க..?” என்றான் பொய்க் கோபமாக.
பிறகுதான் காயத்தை நன்றாக பார்த்தவள்.. ‘சாரிங்க.. என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம்..” என வருந்தியவள்.. ‘நிலா வேணும்னு செய்திருக்க மாட்டா.. என்மேல உள்ள பாசத்துல இப்படி நடந்திருக்கா.. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” என்றாள் கெஞ்சலாக.