குலதெய்வ அபிஷேகம் இனிதாய் முடிந்திருக்க.. பெரிய கம்பளத்தில் அமர்ந்து பிரசாதம் உண்டபடி அனைவரும் கதையடித்துக் கொண்டிருந்தனர்.
கீதாராணியின் கணவன் லோகேஷ் இவனுக்கு வந்த நேரத்தை பாரேன் என்பதுபோல் அமர்ந்திருக்க.. செல்வராணியின் கணவர்.. ‘வாழ்த்துக்கள் மாப்ள..” என்றான்.
‘தேங்க்ஸ் மாமா..” என்றான் மரியாதையோடு.
அடுத்து பெரிய மாப்பிள்ளை எதாவது வம்பிளுப்பாரோ என யோசித்த கலா.. பேச்சை மாற்ற முயன்று.. ‘சம்பளம் வாங்கினதும் வரன்னுட்டு இப்போ வந்திருக்க..” என கோபித்தார்.
‘ம்மா.. நாளை மறுநாள் டெல்லி புறப்படறேன்.. அங்க மெடிகல் செக்கப் முடிச்சிட்டு பத்து நாளைக்குஅங்கயே ப்ராக்டிஸ்ல இருக்கனும்.. அதுக்கப்புறம் ஜப்பான் கிளம்பிடுவோம்.. டோக்கியோல மேட்ச்.. இப்போ வந்தா உங்களோட சேர்த்து குலசாமிகிட்டயும் ஆசிர்வாங்கிட்டு போலாம்னுதான் அபிஷேகம் இன்னைக்கு வைங்கன்னு சொன்னேன்.. ” என பொறுமையாய் விளக்கினான் அன்னைக்கு.
‘என் தங்கம்..” என கன்னம் தடவி .. ‘என் தங்கத்துக்கு தான் தங்கம் கிடைக்கும்.. என் சிங்ககுட்டியை யாரால ஜெயிக்க முடியும்..” என ஆசிர்வதித்தார் பெருமையோடு.
‘சாரிடா கலை.. நீ கூப்பிட்டப்போ எனக்கு உடம்புக்கு முடியலடா.. அதான் வரமுடியல..” என கீதாராணி வருத்தம் தெரிவிக்க..
தான் பொய் சொல்வதை கண்டுகொண்டான் என புரிந்த கீதா குற்றவுணர்வோட தடுமாற.. கலையரசனின் தற்போதைய கோபம் தெரியாமல் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும் கீதாவின் மகள்.. ‘நீ ஏன்ம்மா பீல் பண்ற.? அதான் கலை இங்க வந்துட்டானில்ல..?” என்றாள் திமிறாக.
‘ஏய் மது.. என்னடி இது மரியாதில்லாத பேச்சு.? வாய மூடு..” என கீதாராணி மிரட்ட.. ‘அவளை ஏன்க்கா திட்டற.? இத்தனை நாள் எப்படி பழக்கமோ அப்படித்தான அவ இருக்கா.?” என்றான் இலகுவாக. கலையரசனின் பேச்சில்தான் இலகுத்தன்மை.. பார்வையில் பார்த்துக்கோ உன் வளர்ப்பை என்ற செய்தி இருந்தது.
எதோ வேலைகிடைச்சிட்டா இவனெல்லாம் எங்க வளர்ப்பை குறை சொல்வானா என கொதித்தாலும் தற்போதெல்லாம் கலையரசனிடம் வாய்விட லோகேசிற்கு சற்று பயம்தான். பின்னே.. வேலைகிடைக்காத போதே அன்று அப்படி பேசினான்.. இன்று அனைவர் முன்பும் எதாவது சொல்லிவிட்டான் என்றால் நமக்குத்தானே அசிங்கம் என நினைத்தாலும்.. தங்கள் வளர்ப்பை குறை சொன்ன கலையரசனை அப்படியே விட மனமில்லாமல்..
‘ஏன் கீதா..? குழந்தையை எப்படி வளர்த்தனும்னு உனக்கு தெரியாதா.? உங்கம்மா உன்னை வளர்த்தது போலதான நம்ம பொண்ணையும் வளர்த்துற..” என மனைவியிடம் முனுமுனுத்தான் கோபத்தோடு.
அச்சோ இப்போ கணவனுக்காக பேசுவதா.? இல்லை தம்பிக்காக பேசுவதா என கீதாராணி தடுமாற.. நம்ம குடும்பத்தைதான் எதாவது சொல்லியிருப்பான் என உணர்ந்தவன்.. ‘எதுக்குக்கா இப்படி தடுமாறுற.? உன் பொண்ணுதான சொன்னா.? சொன்னா சொல்லிட்டு போறா..” என இலகுவாய் சொல்ல.. கலையரசன் இறங்கி பேசியதில் லோகேஷ் முகம் தெளிவாகவே..
தன் மாமனை பார்த்தவாறு..‘உன் பொண்ணெல்லாம் எனக்கொரு ஆளா.? சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது போல..” என சிரிப்போடு சொன்னவன்.. அதற்கு லோகேஷ் முறைத்ததையும் கண்டுகொள்ளாமல்.. ‘ம்மா.. கிளம்பலாம்.. அப்புறம் வீட்டுக்கு போய் அங்க கொஞ்ச நேரம் இருக்கனும்ப..” என்றான் கொஞ்சலாக.
‘சரி.. கிளம்பலாம்..” என கிளம்ப.. ‘நான் இப்படியே கிளம்பறேன் கீதா.. எனக்கு வேலையிருக்கு.. “ என கிளம்பினான் லோகேஷ்.
லோகேஷ் கிளம்பியதும் மொத்த குடும்பமும் ஆசுவாசப்பட்டனர். லோகேசிற்கு படிப்பு ஏறாம எப்படி ஊரை சுத்திட்டிருந்தவன்.. இன்று கொஞ்சம் வளர்ந்துட்டதனால தன்னை எதிர்த்து பேசலாமா.? அன்றும் அப்படித்தான் வயதிற்கு கூட மதிப்பளிக்காமல் பேசுகிறான்.. மாமனார் மாமியாரும் ஒன்னும் சொல்லமாட்டுக்கிறாங்க.. இன்றும் நான் செல்கிறேன் என்றால் அப்படியே விட்டுவிடலாமா.? ஒரு வார்த்தை வீட்டுக்கு வந்துட்டு வாங்க என யாரும் சொல்லவில்லையே என்ற கடுப்பில் சென்றிருந்தான்.
வீட்டிற்கு வந்து உணவுண்டு கொண்டிருக்க.. செல்வராணியின் மகன் கீதா மகளிடம் அன்று பார்ட்டியில் நடந்ததை சொல்லி தன் மாமனை ஓயாது புகழ்ந்து கொண்டிருக்க.. அதனை மதுமிதா இவனா இப்படி என நம்பாத்தன்மையோடு கேட்டுக்கொண்டிருக்க.. ‘வினோ.. முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்..” என கலையரசன் அன்பு கட்டளையிட்ட பின்னேதான் சாப்பிட ஆரம்பித்தான் சிறுவன்.
மதுவையும் வினோத்தையும் வெளியே விளையாட சொல்லி பணித்து.. கீதாராணியிடம்.. ‘அக்கா மதுகிட்ட எனக்கு ஒரு கோபமும் இல்ல.. அவ சின்ன பொண்ணு.. ஆனா இனியும் இப்படி விட வேணாம்னு அக்காகிட்ட சொல்லு.. இந்த திமிர் நல்லதுக்கு இல்ல..” என சொல்லி மேலும் ஒரு மணிநேரம் போல் பேசியிருந்து பெற்றோரின் பாதம் பணிந்தான்.
‘நல்லபடியா போய் வெற்றியோட திரும்பி வாப்பா..” என அசிர்வதித்த மயில்சாமி ஒரு கட்டு பணத்தை எடுத்து நீட்ட.. ‘நீங்க கொடுத்த ஐம்பதாயிரத்துல நிறைய மீதி இருக்குப்பா.. பணம் வேண்டாம்.. உங்க ஆசிர்வாதம் போதும்..” என ஆசிபெற்று கிளம்பினான் கலையரசன்.
– – – – – – – – – – – – – – – – –
இங்கு பிரபாகரனிடம் தான் கிளம்புவதாக சொல்லி.. அவனின் அம்மாவிடம் ‘நம்மளை நம்பி வந்துட்டாங்க.. உங்க பொண்ணு மாதிரி நினைச்சி ஆதரவு கொடுங்க.. ஒரு மாசத்துல வந்துடுவேன்.. நான் வந்ததும் முதல் வேலை இவங்களுக்கு ஒரு வழி பண்றதுதான்..” என சொல்லி சுவாதியிடமும் பத்திரம் சொல்லி கிளம்பியிருந்தான்.
டெல்லி சென்றவன் நான்கு நாட்களுக்கு பிறகும் பிரபாகரனிற்கு போன் செய்து அன்றுபோல் ரௌடி பசங்க யாராவது வந்தாங்களா.? ஏதும் பிரச்சனையா என கேட்டுக்கொண்டான்.. எதுவும் பிரச்சனை எனில் இந்த நம்பருக்கு கால் செய்.. என் பிரண்டுதான்.. அங்க பிரச்சனையை சொல்லிதான் வச்சிருக்கேன்.. அவசரம்ன்னா உடனே வந்துடுவான்..” என தைரியமளித்து இணைப்பை துண்டித்திருந்தான்.
அதன்பிறகு பத்தாம்நாள் டோக்கியோ கிளம்ப.. அன்றிலிருந்து கலையரசனின் கவனமெல்லாம் பயிற்சியிலும் தனது எதிராளிகளின் முந்தைய ஆட்டங்களைப் பார்ப்பதிலும்தான் இருந்தது.
தினமும் இரவானால் இன்று ஏதும் பிரச்சனையில்லை.. உங்கள் கவனத்தை விளையாட்டில் செலுத்துங்கள் என ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்புவான் பிரபாகரன்.
மகள் மருமகன்கள் பேரன் பேத்திகள் என மயில்சாமியின் மொத்த குடும்பமும் டி.வி முன் அமர்ந்திருந்தனர். போட்டிகள்தொடங்கி பதினேழு நாள் முடிந்திருக்க இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தான் கலையரசன்.
மயில்சாமியும் கலாவும் இதற்கு முன் தன் மகன் விளையாடிதை பார்த்திருக்கிறார்கள்தான்.. ஆனால் இந்தளவிற்கு ஆர்வமாக பார்த்தில்லை.. அவனின் வாழ்க்கை என்னாகுமோ என்ற வருத்தத்தோடுதான் பார்ப்பார்கள்..
தன் மகனிற்கு எதாவது ஒரு நிரந்தர வேலை கிடைக்குமா என்ற நிலை போய்.. அசிஸ்டண்ட் கமிஷனர் என்ற உயர்ந்த இடத்தை எட்டிவிட்டானே.. அதுவும் கலையரசனை பொருத்தவரை ஒரு பெற்றோராக பணஉதவி செய்தோமே அன்றி கலையரசனின் விளையாட்டை ஒரு நாளும் ஊக்குவித்ததில்லை.. அப்படியிருந்தும் அவனின் விடாத முயற்சியும் அயராது தன்னம்பிக்கையும்தானே இத்தகையை உயர்ந்த இடத்தை அடையச்செய்தது..
அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும்வரை தன் மகனாக இருந்தவன்.. இன்று இறுதிப்போட்டிக்கு கலையரசன் முன்னேறியிருக்க.. தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கியிருப்பதால்.. நிச்சயம் இந்த முறையும் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை தட்டித்தருவான் என கலையரசனை நம்பி மொத்த இந்தியாவும் காத்திருக்க.. மயில்சாமியும் கலாவும் கூட தம் மகனை பெருமையோடும் சந்தோசத்தோடும் இந்தியாவின் மகனாகவே பார்த்தனர்.
இதோ கலையரசனோடு மோதும் வீரன் அரங்கத்திற்கு வர.. அது அவ்வீரனின் சொந்த மண்ணாக இருக்கவே.. விசிலெலியோடும் கைத்தட்டல்களோடும் அவ்வீரனிற்கு அதீத வரவேற்ப்பும் உற்சாகமும் கொடுத்தார்கள் அம்மண்ணின் மக்கள். தேச மக்களின் உற்சாகத்தில் அவ்வீரனின் முகம் பொலிவைக் காட்ட.. தன் கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தான்.
அடுத்த ஐந்து நிமிடம் கழித்து எந்த அலட்டலும் இல்லாமல் தனது பயிற்சியாளரோடு கலையரசன் வர.. அங்கே மற்ற இந்திய விளையாட்டு வீரர்களும் அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களும் உற்சாகம் கொடுக்க.. அவர்களின் உற்சாகத்திற்கு இலகுவான புன்னகையை பரிசாக கொடுத்தபடி மேடையை நெருங்கினான் கலையரசன்.
ம்.. கலையரசனிற்கு எதிராக விளையாடுபவன் அவன் முதல் முறை பதக்கம் வென்றபோது இவனிடம் அரையிறுதியில் தோற்றவனாவான். போன முறை லீக் சுற்றிலேயே வெளியேறியிருந்தவன்.. இந்த வருடம் இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றதும் அவனின் முந்தைய போட்டிகளை பார்த்து.. எவ்விதம் தன்னை மெருகேற்றியிருக்கிறான்.. எப்படி யுக்திகளை கையாள்கிறான் என நன்கு கணித்து வந்திருந்தான் கலையரசன்.
தனது டிராக்சூட்டை கழற்றி கையுறைகளை அணிய.. கலையரசனிற்கான அறிமுகம் மைக்கில் ஒலிக்க வீரனிற்கே உரித்தான துள்ளளோடு மேடையேறினான் கலையரசன்.
முதல் இரண்டு சுற்றுகளில் கலையரசனிற்கு புள்ளிகள் அமைய.. மூன்றாம் சுற்றில் எதிராளி விதிமுறையை மீறி கலையரசனை தாக்க.. எதோ தெரியாமல் நடந்துவிட்டது என நினைத்த கலையரசன் அதனை பெரிது படுத்தாமல் முன்னேற.. நான்காவது சுற்றிலும் எதிராளி விதிமுறையை மீறுவதுபோல் தோன்ற.. கலையரசன் அவனை ஊன்றிப்பார்க்க..
ஒரு வீரனிற்குள் நடக்கும் ஆரோக்கியமான போட்டிபோல் எதிராளியின்முகம் இல்லை என்பதையும்.. வெற்றி பெறுவதைக் காட்டிலும் எப்படியேனும் தன்னை சாய்ப்பதுதான் குறி என்பதுபோலவும் அவனின் செயல்கள் இருப்பதை பின்புதான் உணர்ந்த கலையரசனின் முகமும் கோபத்தில் சிவக்கவே..
கலையை கவனித்திருந்த ரமணன் ஆத்திரத்தில் அறிவை இழந்திடுவானோ என பயந்தவராய்.. ‘கலை.. கான்பிடண்ட் மை பாய்.. விவேகம்.. விவேகம்..” என கத்தினார். ரமணனின் கத்தல் காதில்விழுந்தாலும் தீப்பார்வையோடு திமிறி நின்றான் ஆக்ரோசமாக.
முன்னே நடந்து முடிந்த சுற்றில் அடித்த அடியை விட அடுத்தடுத்து வந்த சுற்றில் கலையரனின் அடிகள் இடியாய் இறங்க.. கடைசி சுற்றில் எதிராளியின் பகட்டில் விட்ட பன்ச்சில் கடலினுள் இருந்து வெளியேறிய டால்பின் சுவாசத்திற்கு ஏங்கி மீண்டும் கடலினுள் துவண்டு விழுவதுபோல் உயரப் பறந்து விழுந்தான் எதிராளி..