இந்தியா தங்கம் பெற்றது என நடுவர் அறிவிக்கும் முன்னே அங்கிருந்த மற்ற இந்தியர்கள் ஆரவாரம் எழுப்ப.. சொந்த மண்ணின் வீரன் தோற்றதில் அரங்கத்தின் அதிகப்பகுதி துக்கத்தில் அமைதியாக.. அதிகாரப்படி பதக்க பட்டியலை அறிவிக்கவேண்டி இரண்டாம் இடம் பிடித்த வீரனை எழுப்பிக்கொண்டிருந்தார் நடுவர்.
அவனால் எழமுடியாமல் போகவே.. அவனை நெருங்கிய கலையரசன்.. ‘ரூல்சை மீறி உன்ன மாதிரி என்னால விளையாட முடியல.. ஏன்னா நான் என் தாய்நாட்டுக்காக விளையாண்டேன்.. நீயும் உன் தாய்நாட்டிற்காக விளையாண்டிருந்தா இந்தளவுக்கு என்கிட்ட அடிபட்டுருக்கமாட்ட.. எதிராளின்னா அடிச்சி காலி பண்ணனும்ங்கிறது என்நோக்கமில்ல.. எங்கேயும் எப்போவும் என் விளையாட்டும் அப்படி இருக்காது.. எதிராளியோட திறமைக்கேத்த மாதிரிதான் நானும் விளையாடுவேன்..
அத்தனை அடிவாங்கியும் ஒன்பதாவது சுற்றுல கூட விதியை மீறி என்னை தாக்க முயற்சித்த பாரு..” என பல்லை கடித்தவன். ‘அதன் பலனாத்தான் பத்தாவது சுற்றுல நாக்கவுட் பன்ச் கொடுக்கவேண்டியதாய்டுச்சி..
அதுவும் கூட உன் நண்மைக்குன்னு நினைச்சிக்கோ.. பின் வருங்காலங்கள்ல நம்மளோட விளையாட்டு ஜூனியர்ஸ்க்கு பாடமா இருக்கனுமே தவிர.. இப்படி விதியை மீறி விளையாண்டு எதிர்கால வீரர்களுக்கு மோசமான முன்னுதாரணமா நீ இருக்க கூடாதுன்னும் இதைவிட ஒரு அசிங்கம் வீரனுக்கு வரக்கூடாதுன்னும்தான் ஒரே அடியில மேட்ச்சை முடிச்சேன்..” என்றதும்..
எதிராளி கலையரசனை பிரம்மிப்பாய் பார்க்க.. கோபம் விடுத்து இலகுத்தன்மைக்கு மாறியவன்.. ‘அங்க பாரு..”என அரங்கத்தை சுட்டிக்காட்டி.. ‘நீ தோத்துட்டன்னு உன் தேசமக்கள் எத்தனை சோகத்துல இருக்காங்கன்னு நல்லா பாரு.. இரண்டாமிடம் பிடிக்கிறது ஒன்னும் அவ்ளோ மோசமில்ல.. ஆனா இப்படி எழுந்துக்காம இருக்கிறது ஒரு வீரனுக்கு அழகில்ல.. எழுந்துக்கோ..” என தன் கையை நீட்ட.. கலையரசனின் உதவியின்றி வீரனிற்குரிய வேகத்தோடு எழுந்தவன் தன் காழ்ப்புணர்ச்சி துறந்து தங்கம் வாங்கிய இந்திய தங்கத்தை ஆரத்தழுவினான்.
பிறகு இருவீரர்களையும் நிற்கவைத்து கலையரசனின் கை நடுவரால் உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கு தங்கம் என அறிவிக்கப்பட்டது.. வெற்றிக் களிப்போடு கலையரசன் பயிற்சியாளரைப் பார்க்க.. ரமணன் பெருமிதத்தோடு கலையரசனைப் பார்த்தார். துள்ளலோடு கீழறங்கியவன் அருகே இருந்த மேடைக்கு அழைத்துசென்றனர். மூன்றாம் இரண்டாம் இடம் பிடித்தோருக்கு கை குலுக்கி தன் வாழ்த்தை தெரிவித்தான்.
இறுதியாக இந்திய தேசிய கீதம் ஒலிக்க சிரம் தாழ்ந்து மெடலை வாங்கியவன் பிறகு பெருமையோடு சிரம் நிமிர்த்தி கடந்த இரண்டு முறைபோலவே.. ‘அம்மா.. அப்பா..” என்றபடி வீரத்தோடு தன் கையை உயர்த்தினான் கேமராவை நோக்கி.
—————————
மயில்சாமியின் மொத்த குடும்பமும் பெருமையில் மூழ்கியிருக்க.. அச்சோ நாம இவனை எப்படில்லாம் கலாய்ச்சிருக்கோம்.. நம்ம மேல ஏது கையை வச்சிருந்தானா என்ன ஆகுறது.? இவனோட ஒரு அடிக்கு கூட தாங்கியிருக்க மாட்டோமே என்ற நினைவில் லோகேஷ் முகம் மட்டும்சிறு பயத்தில் இருக்க.. ‘என்னங்க.? சந்தோசமான நேரத்தில ஏன் முகத்தை இப்படி வச்சிட்டிருக்கிங்க.?” என கடுகடுத்தாள் கீதாராணி.
அச்சோ நாம பயப்பட்டது இவளுக்கு தெரிஞ்சிடுச்சோ என பதறியவன்.. ‘ஹான் நான் எப்படி வச்சிருக்கேன்.. எப்பவும் போல நல்லாத்தான இருக்கு..” என்றான் மிடுக்காக.
தரணிதரன்.. ‘அம்மா.. அப்பாக்கு மாமாவ பார்த்து பயம் வந்திடுச்சி போல.. மாமா அந்த அண்ணாவ அடிக்கும் போதெல்லாம் அப்பாக்கு வேர்த்துடுச்சி..” என்றான் கீதாராணியின் செல்லமகன்.
‘ஆமாம் ஆமாம்..” என செல்வராணியின் மகனும் தரணிதரனிற்கு ஒத்து ஊத.. ‘வினோத் அப்படில்லாம் பேசக்கூடாது.. மாமாவைப் பார்த்து அப்பா எதுக்கு பயப்படப்போறாங்க..” என பேரனை அதட்டிய கலா.. ‘ஸ்வீட் எடுத்துக்கோங்க மாப்பிள்ளை..” என நீட்ட.. லோகேஷ் வாங்கிக்கொள்ள..
மனைவியிடம்.. ‘என் சகலையை காப்பாத்துறதே என் மாமியாருக்கு பெரிய வேலையாயிருக்கு பாவம்..” என சிரித்தபடி ஆனந்தன் இனிப்பு எடுத்துக்கொள்ள..
செல்வராணி.. ‘அச்சோ.. சும்மாயிருங்க.. மாமா காதுல விழுந்து வைக்கப்போகுது.. அப்புறம் கோவிச்சிட்டு போய்டுவார்.. பெரிய மாப்பிள்ளை சாப்பிடாம போய்ட்டாருன்னு எங்கம்மா புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க..” என அதட்டினாள்.
ஆனந்தனிற்கு போன் வரவே.. ‘ஆமாங்க.. கலையோட கடின உழைப்புக்கு கிடைச்ச வெற்றி..” என தனது நண்பர்களிடம் மச்சானின் பெருமை பேச ஆரம்பித்தான்.
கீதாராணி லோகேஷ் திருமணத்தின் போது கலையரசனிற்கு ஏழுவயது.. தனது மச்சான் என்ற பார்வையெல்லாம் அப்பொழுதிலிருந்தே லோகேசிடம் இருக்காது.. வருடங்கள் கடந்தபோதும் படிப்பில் நாட்டமில்லாத கலையரசன் மீது அலட்சியம் வந்திருக்க.. அதை சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தவும் செய்ய.. கலையரசனிற்கும் லோகேசிற்கு ஒட்டுதல் என்பதே இல்லாமல் போனது.
ஆனால் செல்வராணியின் கணவன் அப்படியில்லை.. இவர்கள் திருமணத்தின் போது கலையரசனிற்கு பதினான்கு வயது.. அப்போதுதான் காராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியிருந்த கலையரசனை அத்தனை பெருமையோடு பாராட்டினான் ஆனந்தன்.
அதோடு தனது மாமனாரிடமும் என் மச்சானை அவன் போக்கிற்கு விடுங்கள் என சப்போர்ட் செய்வான்.. ஒவ்வொரு முறை மெடல் வாங்கும் போதும் முடிந்தால் நேரிலோ அல்லது கைப்பேசியிலாவது தனது வாழ்த்தை தெரிவிக்கும் தனது சின்ன மாமனை கலையரசனிற்கும் பிடித்து போக ஆனந்தனோடு பாசமாகவும் மரியாதையுடனும் இருப்பான்.
தனக்கு வேலைகிடைத்ததும் தான் வீட்டில் இல்லையென்றாலும் தனது பெற்றோரிடம் தனது வாழ்த்தை நேரில் கூறி.. தனக்கும் போன்செய்து மனமாற வாழ்த்தினான் ஆனந்தன். அன்றிலிருந்து இன்றுவரையிலும் எப்பொழுதும் தன்னை ஊக்குவிக்கும் சின்னமாமாவிற்கு கலையரசன் மனதில் தனிமாரியாதைதான்.
ஆனந்தன் ‘அத்த.. தங்கமெடல் வாங்கினதோட இல்லாம எதிராளியோட இழிவான செயலை அவனுக்கு புரியவச்சான் பாருங்க.. அங்க நிக்கிறான் என் மச்சான்.. அதனால இன்னைக்கு என்னோட ட்ரீட்.. நீங்க எதுவும் சமைக்காதிங்க வெளில ஆர்டர் செய்துக்கலாம்.. இந்த சந்தோசமான தருணத்தை நாம எல்லாருமா சேர்ந்து என்ஜாய் பண்ணலாம் ..” என்று சொல்ல.. சந்தோசத்தோடு கலா அதனை ஏற்றுக்கொண்டார்.
அதற்குள் அக்கம் பக்கம் இருப்பவர்களும் தங்களது வாழ்த்தை தெரிவிக்க வருகை புரியவே எல்லையில்லா மகிழ்ச்சியோடு அவர்களுக்கும் இனிப்பு வழங்கி மகனின் பெருமை பேசலானார் மயில்சாமி கலா தம்பதியினர்.
– – – – – –
ம்.. இங்கே நிலவழகியின் வீட்டில் மேட்ச் ஆரம்பித்ததிலிருந்து மெடல் வாங்கி முடிக்கும் வரை கதிரவன் நிலவையும் அருகமர்த்திக்கொள்ள.. அச்சோ.. இவங்களையா அடிச்சோம்.. அந்தாளை என்னமா அடிக்குறாங்க.?அத்தனை ரத்தம் வந்ததே.. இப்படி ஒரு குத்து தன் முகத்தில் விட்டிருந்தாள் நம்ம நிலைமை என்னவாகியிருக்கும்..? நல்லகாலம் முத்தத்தோட விட்டாங்க.. என தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டாலும்.. தந்தையிடம் தன்னை பெல்ட்டில் அடிவாங்கி வைத்தவனை அத்தனை சுலபத்தில் மறக்கமுடியாமல் தவிப்பவள் அல்லவா.? அதனால் திரும்ப திரும்ப கலையரசனின் முகத்தை பார்ப்பது நிலாவிற்கு கோபமாகவும் இருந்தது.. பயமாகவும் இருந்தது. இதில் டி.வியில் பார்த்தில்லாமல் மொபைலிலும் அதையே பார்த்திருக்கும் அண்ணன் மீது கோபம் வந்திருக்க.. ‘அண்ணா இதையே எத்தனை முறை பார்ப்ப.?” என எரிச்சலோடு கேட்டாள்.
தன் தங்கையிடம் முத்தம் கேட்டவன் கலையரசன்தான் என்றெல்லாம் கதிரவனுக்கு தெரியாது.. அன்று கலையரசன் முகத்தை ஊன்றிப்பார்க்கும் நிலையிலும் கதிரவனும் நாகராஜூம் இல்லை.. சரியாக கலையரசனின் கையில் நிலவழகியின் உதடு பதிந்திருக்க..அந்த நேரம் அங்கே வந்த தகப்பனிற்கும் அண்ணனிற்கும் ஏற்பட்ட அதிர்ச்சியில் கவனமெல்லாம் நிலாவின் மேல்தான்.. நிலாவிடம் முத்தம் வாங்கியவன் வந்தவேலையை பார்க்கும் பொருட்டு சுவாதியின் வீட்டினுள் சென்றிருக்க.. நிலா செய்த செயலால் தன் மகளை நாகராஜ் கோபத்தோடு இழுத்து சென்றது கூட கலையரசனிற்கு தெரியாது.
அச்சோ என்மேல கைய வச்சவன் ஆம்பிளையா மட்டும் இருந்திருந்தா அடிச்சி முகரையெல்லாம் பேத்திருப்பேன்.. நீ பொண்ணா போய்ட்ட.. அதுலயும் ரொம்ப சின்ன பொண்ணுன்னு சொன்னாங்களே.. இவங்கதான் என்கிட்ட முத்தம் கேட்டாங்கன்னு நம்ம அப்பாக்கு தெரிஞ்சா அப்பாவும் அண்ணனும் அவங்ககிட்ட சண்டைக்கு போவாங்க.. அப்போ நம்ம அப்பாவையும் கண்டிப்பா இப்படித்தான் குத்துவாங்களோ என பயந்த நிலவழகி கலையரசனைப் பற்றி தற்போதும் யாரிடமும் மூச்சுவிடவில்லை.
‘எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது நிலா.. நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவன் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிகொடுத்திருக்கான்.. இதைவிட சந்தோசம் வேற இருக்குமா.?” என தன் தங்கையையும் தன்னோடு அமரவைத்துக்கொண்டான் கதிரவன்.
ம்.. முத்தம்தானே என அப்போது கொடுத்திருந்தாலும் .. அது தவறென தற்போது புரிந்திருக்க.. எத்தனை திமிறு இருந்தா என்கிட்ட முத்தம் வாங்கியிருப்பாங்க என அவ்வப்போது நிலா நினைக்கும் தாக்கமாக.. ‘ம்க்கூம்.. நல்லா குத்துவிட்டா போதுமா.? அவங்களோட தோத்தவங்களுக்கு அட்வைஸ் செய்யும் போது இங்கிலீஸ்ல பேசினாங்களே.. அதை கவனிச்சியா.? அதுல ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக்.. இவங்க பேசுற இங்கிலீசை கேக்குறதுக்கு பதிலா சமாதனம் ஆகுறதே உத்தமம்னு நினைச்சித்தான் அவங்க சமாதனம் ஆகியிருப்பாங்க..” என முகம் சுருக்கினாள் நிலவழகி.
‘ஏய்.. மண்டு.. ஜெய்ச்சதுக்கப்புறமும் எதிராளியோட நண்மைக்காகவும்.. அவங்க தேசமக்கள் சோகத்துல இருக்காங்கன்றதுக்காகவும் எத்தனை தன்மையா புத்தி சொல்லியிருக்கார்.. உனக்கு அது கண்ணுக்கு தெரியல.. இப்போ கிராமர் மிஸ்டேக் ரொம்ப முக்கியமா..?” என கதிரவன் நிலாவை சாட..
அவன்தான் முத்தம் கொடுக்க சொன்னான்னு தெரிஞ்சா அவனே பெரிய மிஸ்டேக்குன்னு அப்போ தெரியும் உங்களுக்கு.. என மனதில் நினைக்க..
‘என்ன நான் சொல்றது புரியுதா.? இந்த சின்ன வயசுல எத்தனை பண்போட பேசியிருக்கார்.. அதை நினைச்சி பெருமைப்படுறதை விட்டுட்டு லூசுத்தனமா பேசிட்டிருக்காத.. எனக்கே அவரை குற்றம் சொன்னா கோபம் வருது.. நீயா இருக்கவும் எதோ தெரியாம பேசுறன்னு அமைதியா இருக்கேன்..” என்றான் கதிரவன்.
‘உனக்கு அவரை ரொம்ப பிடிக்குமா..?” என்றாள்.
‘ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. இதோட மூனாவது முறையா தொடர்ந்து சாம்பியன்சிப் வாங்கியிருக்கார்.. அதோட அவர் சொந்த ஊர்ல கலையரசனைப் பத்தி பத்திரிக்கைகாரனுங்க பேட்டி எடுத்ததில.. எல்லாரும் நல்லவிதமாத்தான் சொல்றாங்க.. யாருக்கு ஆபத்துன்னாலும் தயங்காம உதவி செய்வாராம்..” என்றான் பெருமையோடு.
என்னயிருந்தாலும் முத்தம் கொடுக்க சொன்னதையும் அதனால் தந்தையிடம் வாங்கிய பெல்ட் அடியையும் மறக்கமுடியாமல் போகவே.. இன்னொரு முறை முத்தம் அது இதுன்னு கேக்கட்டும் என மருகியவள்.. ‘அண்ணா நான் சிலம்பு கத்துக்க போறேன்.. என்னை அதுல சேத்து விடுங்க..” என்றாள்.
‘ஹேய்.. என்ன திடீர்ன்னு..?”என கதிரவன் சிரிக்க..
‘அன்னைக்கு ஒருத்தன் முத்தம் கேட்டான்ல.. இனி யாராவது அப்படி கேட்டா தைரியமா அடிச்சி நொருக்கத்தான்.. என்னை சேர்த்து விடுங்க..” என்றாள் தீவிரமாக.