தங்கம் கைப்பற்றிய கலையரசன் இந்திய மண்ணைத்தொட ஏழுநாட்கள் ஆனது.. இந்தியாவின் தங்கமகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.. இதையெல்லாம் வீட்டிலிருந்து பார்த்து இவன் தன்மகன் என்ற பூரிப்பில் மயில்சாமி கலா தம்பதியினர்.. இவன் என் தம்பி.. என் மச்சினன் என்ற பூரிப்பில் செல்வராணியும் அவளின் கணவனும் இருக்க.. கீதாராணி மட்டும் கணவனிடம் எதோ தீவிர ரகசியம் பேசிக்கொண்டிருந்தாள்.. அதற்கு அவள் கணவனும் பிரம்மிப்போடு ஆமோதிக்கவே..
‘எதோ ரகசியமா ப்ளான் போடுறமாதிரி இருக்கு..? கலை வீட்டுக்கு வந்ததும் சர்ப்ரைஸ் பார்ட்டி எதாவது அரேன்ஜ் செய்யப் போறியா.?” என்றாள் செல்வராணி.
இது கூட நல்லத்தான் இருக்கு.. என்பதுபோல் கீதாராணி கணவனைப் பார்க்க..’ஆமாம் பின்ன.? நம்ம கலை ஜெயிச்சிருக்கான்.. நமக்கெல்லாம் எத்தனை பெருமை.. எதாவது பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து கலைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இப்போதான் கீதாகிட்ட சொல்லிட்டிருந்தேன்.. அதுக்குள்ள நீ கண்டுபிடிச்சிட்ட..” என்றான் லோகேஷ்.
நம்ம சகலையா இது என்பதுபோல் ஆனந்தன் ஆச்சர்யமாய் பார்க்க.. ‘என்ன ஆனந்தன் அப்படி பார்க்கிறிங்க.? நம்ம மச்சினனாச்சே.. இப்படி இருக்கானேன்னு பாசத்துல சொன்னதெல்லாம் தப்பா எடுத்துக்கலாமா.? நான் சொன்னதையே வைராக்கியமா எடுத்துக்கிட்டு இதோ இப்போ நாடே புகழ்ற அளவுக்கு வந்துட்டானில்ல..?” என தனது பேச்சுதான் கலையரசனின் உயர்விற்கு காரணம் என்ற தோரணையில் சொன்னான் லோகேஷ்.
கீதா.. லோகேஷின் திட்டம் தெரியாத செல்வராணி.. நம்ம மாமாவா இது என்று சந்தோசத்தோடு பார்த்திருக்க.. ‘உங்கக்கா புருசன் எதோ பெருசா ப்ளான் போட்டுட்டார்ன்னு நினைக்கிறேன்.. இது எங்க போய் முடியுமோ..? புருசன் எது சொன்னாலும் தலையாட்டாம கொஞ்சம் உங்கக்காவை நிதானமா இருக்க சொல்லு.. முக்கியமா கலை விசயத்துல எதாவது செய்ய நினைச்சி சொதப்பிடப்போறாங்க.. இனியெல்லாம் முன்ன போல சும்மா இருக்கமாட்டான்.. அசிங்கப்படுத்திடுவான்..” என எச்சரித்தான் ஆனந்தன்.
ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகத்தோடு செல்வராணி லோகேஷின் முகம் பார்க்க.. கீதாவும் லோகேசும் முக்கிய உரையாடலில் இருக்க.. கணவனின் சந்தேகம் தன்னையும் தொற்றிக்கொள்ள.. ‘ஏடாகூடமா எதாவது செய்தா கலைகிட்ட நல்லா வாங்கிக்கட்டும்..” என நொடித்து.. ‘அவங்களை விடுங்க.. நாம எதாவது கலைக்கு செய்யனும்..” என்றாள் ஆர்வமாக.
ஆனந்தன்.. ‘கண்டிப்பா..” என்றான் சந்தோசமாக.
– – – – – – –
இந்தியா வந்த கலையரசனிற்கு பிரதமர் பாராட்டு.. பரிசுத்தொகை.. என டெல்லியில் ஒரு வாரம் கடந்திருக்க.. அனைத்து புகழையும் தாய் தந்தையிடம் ஒப்படைக்கவேண்டி சந்தோசத்தோடு தஞ்சை சென்றான்.
சொந்த மண்ணின் இளைஞர்கள் பல்லக்குபோல் தூக்கிக்கொண்டனர் கலையரசனை. தெருவெங்கும் பட்டாசு வெடிக்க நிறைந்த புன்னகையோடும் வெற்றிக் களிப்போடும் வீடு வந்த மகனை கண்ணீர் மல்க கட்டியணைத்தனர் பெற்றோர்.
மொத்த குடும்பமும் சந்தோசத்தில் திளைத்திருக்க.. அரை மணிநேரம் வரை அனைவரின் பாராட்டுதலையும் பொறுமையோடும் சந்தோசத்தோடும் கேட்டுக்கொண்டிருந்தான் கலையரசன்.
‘மாமா.. பைனல்ல நீங்க ஆறுமுறை அடிவாங்கிட்டிங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.. அவங்க அடிக்கும்போது எதுக்கு நீங்க தடுக்கல..?” என வினோத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த.. கலையரசன் தான் பேசுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதாய் தோன்றவே.. ‘மாமா.. நான் சொல்றதை கேளுங்க..” மாமனின் வயிற்றில் குத்து விட்டான் வினோத்.
‘ஹேய்.. கேட்டுட்டுத்தாண்டா இருக்கேன்..” என அக்காள் மகனை தட்டிக்கொடுத்தவன்.. ‘எனக்கு எதிரா விளையாண்டவன் ரொம்ப திறமைசாலி.. ஆறேழு அடி கூட வாங்காம ஜெயிக்க முடியுமா.? எப்பவும் எதிராளியை ரொம்ப சுலபமா நினைச்சிடக் கூடாது..” என அக்காள் மகனிற்கு எடுத்துரைக்க..
‘அதெல்லாம் கிடையாது.. என் மாமாதான் எப்போவும் பெஸ்ட்..” என கையை உயர்த்தி காட்டினான் பிடிவாதத்தோடு.
‘ஆமாம்.. ஆமாம்.. உன் மாமாதான் பெஸ்ட்..” என செல்வராணியும் ஆமோதிக்க.. ‘ஆமாம் ஆமாம்.. என் தம்பிதான் பெஸ்ட்.. யாராலும் அவனை ஜெயிக்க முடியாது..” என கீதாராணியும் புகழாரம் பாட.. என்னடா இது.? இன்னைக்கு புருசன் முன்னாடியே நம்மள புகழுறாங்க என கலையரசன் தன் பெரிய அக்காவை ஆச்சர்யமாய் பார்த்தான்.
‘என்ன கலை அப்படி பார்க்குற.? உங்கக்கா உண்மையைத்தான சொல்றா.. உன் ஹார்ட்வொர்க் முன்ன யாராவது நிக்க முடியுமா..?” என லோகேஷ் கேட்டதில் மயக்கம் வராத குறைதான் கலையரசனுக்கு.
ம்.. எல்லாம் தங்கமெடல் செய்யிற மாயம் எனப்புரிய.. நடிப்பிற்காக கூட கலையரசனுக்கு லோகேசோடு இயல்பாக பேசமுடியாமல் போகவே கசப்பு புன்னகையை பதிலாய் கொடுத்து.. ‘அம்மா நாளைக்கு காலைல கலக்ட்ரேட்ல ஒரு பங்சன்.. அது முடிச்சிட்டு சாய்ங்காலம்லாம் நான் திருச்சி கிளம்பியாகனும்..” என்றான்.
கலா.. ‘என்ன கலை.? ஒரு வாரமாவது இங்க இருக்கக்கூடாதா.? அதான் நிறைய சம்பாதிச்சிருக்கல்ல.? இங்க இருக்கும்போது ப்ராக்டிஸ் செய்யிறதுக்கு மேல்மாடியில தோது செய்துக்கோயேன்..” என யோசனை கூறினார்.
‘ம்மா அதுக்கில்லம்மா.. அங்க ஜூனியர்ஸ்க்கெல்லாம் ட்ரீட் கொடுக்கனும்.. காலேஜ்லயும் பாராட்டுவிழா நடத்துறதா சொல்லியிருக்காங்க..” என எடுத்துரைத்தவன்.. ‘அப்புறம் வர வியாழக்கிழமை முக்கியமான அப்பாய்ண்மென்ட் இருக்கு.. அது என்னன்னா தமிழ்நாடு முதலமைச்சரை உங்க மகன் சந்திக்கப்போறான்..” என பெருமையோடு சொல்லி.. ‘எல்லாம் முடிச்சிட்டு அப்புறம் வந்து ஒரு வாரம் இருக்கிறேன்மா..” என்றான் செல்ல கெஞ்சலாய்.
ம்.. கலையரசன் மெடல் வாங்கிய தினமே பத்து லட்சம் தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது அனைத்து பத்திரிக்கையிலும் வந்திருந்தது மயில்சாமி கலா தம்பதிக்கு தெரியும்தான்.. ஆனால் போட்டிக்கு முன்னரும் பயிற்சி பயிற்சி என தஞ்சை வருவதே இல்லை கலையரசன்.. எதேனும் முக்கிய நிகழ்வாக வந்தாலும் ஒரு நாள் தங்குவதே பெரிய விசயமாய் இருக்க.. பெற்றோராக மகனுக்கு பிடித்ததை சமைத்து போட்டு ஒருவாரமேனும் தங்களோடு வைத்துக்கொள்ளும் ஆசை எழுந்தது.
‘நீ போனதும் உங்கக்காக்களும் போய்டுவாளுங்க.. மத்த நேரங்கள்லதான் தனியாவே இருக்கோம்.. இப்படி சந்தோசமான நேரத்துலகூட எங்களோட இரண்டொரு நாள்கூட இல்லன்னா எப்படிடா.?” என கெஞ்சவே ஆரம்பத்தார் கலா.
‘நீல்லாம் டீச்சர்ன்னு வெளில சொல்லிக்காதம்மா.. எங்க பங்சன்க்கு கூப்பிட்டாலும் வரதில்ல.. என் சுட்டிவேசனையும் புரிஞ்சிக்கவே மாட்ற..” என கலையின் முகம் வாட.. மகனின் வாட்டம் தாளமுடியாமல்.. ‘ஒரு மணிநேரம் டிராவல் செய்தாலும் கால் ரொம்ப வீங்கிடுது கலை.. உங்கப்பாவை போக சொன்னா நான் இல்லாம வேணாம்னு மறுத்திடறார்..” என எடுத்துரைத்து..
‘நாளைக்கு கலெக்டர் ஆபீஸ்க்கு உன்னோட நானும்அப்பாவும் வறோம்.. உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு ஒருவாரம் வந்து இங்க இருக்கியா.?” என பேரம் பேசினார் ஆவலோடு.
‘ம்.. கண்டிப்பா வரேன்.. என் அம்மா சமையல் சாப்டுட்டு அம்மா மடியில தூங்க எனக்கு கசக்குமா..?” என சம்மதித்தவன்.. பிறகு குளித்து உணவுண்டு ஆனந்துடன் போட்டிகளின் சுவாரஸ்யம் குறித்தும் அந்த நாட்டு உணவு பழக்கங்களைப் பற்றியும் பேசிமுடித்து.. ‘குளிச்சிட்டு வந்துடறேன் மாமா..” என குளியலறை புகுந்தான்.
ம்.. கலெக்டர் முதலமைச்சர் பிரதமர் என அனைவரின் பாராட்டையும் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்த மகனை ஆசையோடு நினைத்திருந்தார் மயில்சாமி.
குளித்து வந்தவன் சாப்பிட அமர.. ‘மாமா அடுத்து எப்போ மேட்ச்.?” என்றான் விவேக்.
‘அதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்குடா..” என தனது மச்சினனின் அடுத்தடுத்த கேள்விக்கு சளைக்காமல் பதிலளித்தபடி சாப்பிட்டவன்.. என்ன.? நம்மளை கண்டாலே என்னவோ அற்பத்தை பார்க்கிறதுபோல பார்த்து வைப்பா.. இன்னைக்கு அம்மணி அமைதியா இருக்கா.. என கீதாவின் பெரிய மகளையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். ம்.. எப்படியோ திருந்தி நல்லமுறையில வளர்ந்தா நம்ம அக்காக்கும் நல்லது.. அவளுக்கும் நல்லது என நினைத்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கணவனிடம்.. ‘சாப்பிடற பையனை எதுக்கு இப்படி கண்கொட்டாம பார்க்கிறிங்க.?” என பெருமையோடு நொடித்தார் கலா.
‘என் பையன் நான் பார்ப்பேன்..” என்று மயில்சாமி சொல்ல.. ‘ஏங்க.. நம்ம பெரிய மாப்பிள்ளையை கவனிச்சிங்களா.? முன்னமாதிரி இல்லாம நம்ம கலையை எப்படி பாராட்டுறார்ன்னு..” என்றார் சந்தோசமாக.
‘ம்.” என ஆமோத்தித்தாலும்.. தன் பேத்தியை கலைக்கு பார்க்கவிருக்கும் தன் பெரிய மாப்பிள்ளையின் திடீர் எண்ணம் மயில்சாமிக்கு புரியாமலில்லை.. அதில் தனக்கும் விருப்பமில்லை, அதோடு தன் மகனின் குணத்திற்க்கும் பேத்தியின் குணத்திற்கும் ஒத்துவராது என்பதும் தெரிபும்..இருப்பினும் தாமாக ஏதும் காட்டிக்கொள்ள வேண்டாம், எதுவாகினும் அவர்களாக கேட்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என அமைதிகாத்தார்.
அன்றைய பொழுது இன்பமாய் கழிய மாலைபோல் செல்வராணி ஆனந்தன் குடும்பத்தினர் கிளம்பியிருந்தனர்.. அடுத்தநாள் காலை கலையரசனோடு தானும் கலெக்டர் அலுவலகம் செல்ல கீதாராணி விருப்பம் தெரிவிக்க.. அக்காவின் ஆசையை நிராகரிக்கிறோம் என்ற வருத்தம் இருந்தபோதும்.. லோகேசின் திடீர் அன்பில் ஏதோ விசயம் இருப்பதுபோல் தோன்ற.. மாமா இல்லாமல் அக்கா வரமாட்டார்கள் என உணர்ந்து.. ‘அம்மாப்பாக்கு மட்டும்தான்க்கா அனுமதி கொடுத்திருக்காங்க.. அதோட இந்த பங்சனுக்குத்தான் அம்மா வர சம்மதிச்சிருக்காங்க..” என தன் மறுப்பை தெரிவித்தான்.
பிறகு பதினொரு மணிபோல் மாவட்ட கலெக்டரின் வாழ்த்தை பெற்று வீடு வந்தவனுக்கு பிடித்த உணவு வகைகள் செய்து கொடுத்தார் கலா. அன்னையின் கைப்பக்குவத்தை ரசித்து சாப்பிட்டவன்.. ‘ம்மா.. கொஞ்ச நேரம் படுக்கிறேன்.. சாய்ங்காலம் போல கிளம்பனும்..” என படுத்தான்.
படுத்த ஒரு மணிநேரத்தில் கலையின் மொபைல் அடிக்க.. அச்சோ மகன் தூக்கம் கெட்டு விடுமே என அவசரமாய் கலா எடுக்க.. அதற்குள் முயன்று கண்விழித்தவன்.. ‘யார்ம்மா.? இங்க கொடுங்க..” என வாங்கினான்.
‘அண்ணா.. நான் பிரபா பேசுறேன்.. குட்டிப்பையனை தூக்கிட்டாங்கண்ணா..” என்றான் வருத்தத்தோடு.
‘நாலுநாள் முன்னண்ணா.. வெளில விளையாடிட்டிருந்திருந்தவனை..” எனும்போதே.. ‘முட்டாள்.. ரெண்டுநாள் முன்ன கூட போன் செய்தேனே.. ஏண்டா என்கிட்ட சொல்லல..?” என கோபமாய் கேட்டபடி எழுந்தவன் சர்ட்டை போட்டான்.
‘பையனை காணம்னதும் நீங்க சொன்னமாதிரி உங்க ப்ரண்ட்சுக்கு கால் செய்தேண்ணா.. அவங்கதான் விசயம் தெரிஞ்சாலும் உடனே உங்களால வரமுடியாதுன்னும் உங்க நல்ல மூடை ஸ்பாயில் செய்ய வேண்டாம்னும்.. நாங்க பார்த்துக்கிறோம்னும் சொன்னாங்க..
நாலுநாளா பையனை காணம்னதும் சுவாதிக்காவும் நேத்து நைட் மயக்கமாகிட்டாங்க.. அந்த பாப்பாவேற அழுத்திட்டே இருக்கு.. ரொம்ப பயப்படுது.. இதுக்கு மேல சொல்லலைன்னா எதாவது அசம்பாவிதம் ஆகிடும்னு அம்மா ரொம்ப பயப்படுறாங்க.. எனக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.. அதான் உங்களுக்கு சொல்லலாம்னு..” என்றான்.
‘சரி.. வை.. நான் வரேன்..” என்றவன் ‘ம்மா.. நான் உடனே கிளம்பனும்..” என்றபடி டேக்சிக்கு அழைத்தான்.
‘கலை என்னடா இது.? சாய்ங்காலம்தான கிளம்பறன்ன.?” என கலா ஆரம்பிக்க.. கலையரசன் பேச்சினை வைத்து நிலைமை புரிந்த மயில்சாமி.. ‘இதுக்குத்தான் தேவையில்லாத விசயத்துல தலையிடக் கூடாதுங்கிறது.. என்ன.? மறுபடியும் அந்த பொண்ணைத்தேடி ரௌடிங்க வந்தானுங்களாமா.?” என்றார் கடுப்பாக.
தற்போதுள்ள நிலையில் பையன் கடத்தலை சொன்னால் பெற்றோர் இன்னும் பயப்படுவார்கள் என நினைத்தவன்.. ‘ஆமாம்ப்பா.. பிரபா இருக்கவும் சமாளிச்சிட்டான்.. திரும்பவும் பிரச்சனை வரும்முன்ன லோக்கல் ஸ்டேசன்ல கம்ப்ளைன் பண்ணிடலாம்னு இருக்கேன்.. எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க பயப்படாதிங்க..” என்றான்.
‘முன்ன எங்களுக்கு மட்டும் மகன்.. இப்போ இந்தியாவோட தங்கமகன்.. சின்னதா எதாவது தப்பு செய்தாலும் பத்திரிக்கைகாரனுங்க கிசுகிசுன்ற பேர்ல கண்டபடி எழுதி வைப்பானுங்க.. நல்லபேர் எடுக்கிறதுதான் ரொம்ப கஷ்டம்.. கெட்டபேரு ஒரு நொடியில கிடைச்சிடும்.“ என புலம்பினார் கலா.
‘நம்ம செய்யிறது தப்பான காரியம் இல்லன்னு நம்ம மனசாட்சிக்கு தெரியும்போது பத்திரிக்கைகாரங்கங்கன்னு இல்ல.. யாருக்கும் பயப்படக்கூடாது.. அப்படி பயப்பட்டா எந்த நல்ல விசயத்தையும் செய்ய முடியாது.. நாம நாமளாவும் இருக்க முடியாதும்மா..” என்றவாறு தன் உடைமைகளை பேக் செய்தவன்..
‘அம்மா இந்த வாட்டர் பாட்டில்ல தண்ணி ஊத்தி கொடுங்க..” என தனது பாட்டிலை நீட்டினான்.
இனி யார் சொன்னாலும் இவன் நிற்கப்போவதில்லை என புரிந்தவராய்.. ‘நீ என் பையனாக்கும்.. எல்லாமும் உன் இஷ்டத்துக்கே செய்ய முடியாது.. உங்கப்பா செல்றமாதிரி எந்த கெட்டபேரும் வராம பார்த்துக்கனும் சொல்லிட்டேன்.. அந்த பொண்ணு விசயத்தை போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டு.. நீ உன் வேலையை மட்டும் பார்க்கணும்..” என்ற கண்டிசனோட தண்ணீர் பாட்டிலை நீட்டினார் கலா.
‘ஹா..ஹா.. ஓ.கே.. ஓ.கே..” என அன்னையின் கண்டிசனுக்கு சம்மதமளித்து தன் பெரிய அக்காவிடமும் மாமாவிடமும் இன்முகத்தோடே விடைபெற்று கிளம்பினான் திருச்சிக்கு.
– – – – – – – – – – – – – – – – – – –
ஒன்றரை மணிநேரத்தில் வீட்டிற்கு வந்தவன் முதல் வேலையாக சுவாதியின் சிம்மை எடுத்து தன் பாக்கட்டினுள் பத்திரப்படுத்தி பிரபாவிற்கு அழைத்தான்.
பிரபாகரன் அழைப்பை ஏற்க.. ‘ம்.. பிரபா நான் வீட்டுக்கு வந்துட்டேன்.. கொஞ்சம் வரியா.?” என்றான்.
‘இதோண்ணா..” என்றபடி இரண்டே நிமிடத்தில் வீடு வந்தான் பிரபாகரன்.
‘நல்லாயிருக்கிங்களா.? கங்கராட்ஸ்ண்ணா..?” என்றான்.
‘அதெல்லாம் இருக்கட்டும்.. பார்த்தி அம்மா எப்படியிருக்காங்க.? அந்த பாப்பா எப்படியிருக்கு..?” என்றவாறு தன் நண்பர்களுக்கு அழைத்தான் கலையரசன்.