கலையரசன் நண்பன் வரவே.. இவங்க முன்ன எதுவும் பேசவேணாம் என நினைத்தவன்..’ஒரு நிமிசம்..” என எழுந்து வெளியே வந்தான்.
அசார்.. ‘கலை அவங்க சொந்த ஊருக்கு போயும் பார்த்துட்டோம்.. ஒரு க்ளுவும் கிடைக்கல.. “ என்றான் ஏமாற்றத்தோடு.
கலையரசன்.. ‘சரி லோக்கல் ஸ்டேசன்ல கம்ப்ளைன் கொடுத்துடலாம்.. அவங்கள்ட்ட எதுவும் காட்டிக்காத.. நான் பேசிக்கிறேன்..” என பேசிக்கொண்டிருக்கவே.. புது மொபைலோடு பிரபாகரன் வந்தான்.
‘வா பிரபா.. வாங்கிட்டியா.?” என கேட்க பிரபாகரன் மொபைலை நீட்ட.. இது சார்ஜ் ஏற லேட் ஆகுமே என யோசித்தவன்.. ‘டேய்.. இந்த மொபைல் சார்ஜ் ஏறுற வரைக்கும் உன் மொபைல்ல ஒரு சிம்மை எடுத்துட்டு இந்த சிம்மை போடுடா..” என நண்பனிடம் கேட்க, அசார் சம்மதிக்கவே, வாங்கியவன் அதனுள் சுவாதியின் சிம்மை போட்டு அவன் மொபைலுக்கு அழைப்பு விட இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என வந்ததும்.. ‘பிரபா.. உள்ள போய் பார்த்தியோட அம்மா நம்பர் என்னன்னு கேட்டுட்டு வா..” என அனுப்பினான்.
சற்று நேரத்தில் பிரபாகரன் சுவாதியின் நம்பரை சொல்ல.. தன் மொபைலிலிருந்தும் இணைப்புரத்து செய்யப்பட்டுள்ளது என வரவே.. ‘நினைச்சேன்.. ஆறேழு மாசமா சுட்ச் ஆஃப் செய்து வச்சிருக்கவும் இன்கம்மிங்கையும் கட் செய்துட்டானுங்க போல..” என முனகியவாறு தனது மொபைலிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு ரீச்சார்ஜ் செய்து உள்ளே சென்றான்.
சுவாதி.. ‘பார்த்தி எங்கயிருக்கான்னு தெரிஞ்சிடுச்சிங்களா.?” என்றாள் ஆவலாக.எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம் என சுவாதிக்கு தைரியமளித்துக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடம் கழித்து கலையரசனின் கையிலிருந்த அசாரின் மொபைல் அடிக்கவே.. ஏற்றவன் அமைதியாய் இருக்க.. எதிர்புறத்திலிருந்து.. ‘ஹலோ.. ஹலோ.. சுவாதிக்கா தான.? ஹலோ..” என்ற குரல் பதட்டத்தோடு ஒலிக்கவும்.. ‘ஹலோ மட்டும் சொல்லுங்க..” என கிசுகிசுத்தவாறு சுவாதியின் காதில் வைத்தான் மொபைலை.
சுவாதியின் முகம் பயத்தை பூச..‘பயப்படாமா பேசுங்க.. அப்போதான் பார்த்தியை கண்டுபிடிக்க முடியும்..” என ஊக்கி ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
மகனை நினைத்தவள்.. ‘ஹலோ…” என்றாள் பயத்தோடு.
‘அக்கா.. நான் அசோகன் பேசுறேன்க்கா.. அன்னைக்கு முதல் முறையா போன் செய்து உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதும் நான்தான்க்கா.. ஏன்க்கா போனை சுட்ச் ஆஃப் செய்து வச்சிங்க..? நம்ம பார்த்திய அந்த ரங்கன்தான்க்கா கடத்தி வச்சிருக்கான்.. நானும் அவனோடவே இருக்கிறதால உங்களை வந்து பார்க்க முடியல.. நாலு நாளா போன் செய்யிறேன் சுட்ச் ஆஃப்ன்னே வருது..
அண்ணன் கொடுக்க வேண்டிய பணத்துக்காகத்தான் குழந்தையை கடத்தி வச்சிருக்கான்.. மத்தபடி அடிக்கவெல்லாம் செய்யில.. நானும் ரங்கன் இல்லாத நேரமா பார்த்து பார்த்திக்கு தைரியம் சொல்லிட்டிருக்கேன்.. ஆனாலும் ரொம்ப அழறான்க்கா.. எது கொடுத்தாலும் சாப்பிடவே மாட்டுக்கிறான்..
பொழுதுக்கும் எங்க கலை அண்ணா வந்தா உங்களை டிஸ்யூம் செய்திடுவாங்கன்னு சொல்றான்.. யாருக்கா அந்த கலைன்றவன்.? அன்னைக்கு எங்களை அடிச்சானே அவனா.?” என்றான்.
என்ன சொல்வதென புரியாமல் சுவாதி கலையை பார்க்க.. ‘ஆமாம்னு சொல்லுங்க.. பார்த்திய எங்க வச்சிருக்காங்கன்னு கேளுங்க..” என கிசுகிசுத்தான்.
‘பார்த்திய எங்க வச்சிருக்கீங்க..? அவனுக்கு ஒன்னும் ஆகலயே..” என்றாள் நடுங்கும் குரலில்.
‘பயப்படாதிங்கக்கா.. இங்க நம்மூர்லதான்.. ரங்கனோட பண்ணை வீட்லதான் வச்சிருக்கான். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு அதிக நேரம் அவன் இங்க இருக்கிறதில்ல.. வீட்டு வேலை செய்யிறவங்களையும் லீவ் கொடுத்து அனுப்பிட்டான்.. நாங்க நாலுபேருமட்டும்தான் இருக்கோம்.
அன்னைக்கு எங்களை அடிச்சவன் பெரிய பாக்சர்ன்னு நியூஸ்ல பார்த்துதான் எங்களுக்கும் ரங்கனுக்கும் தெரிஞ்சது.. அவன் வெளிநாட்லயிருந்து இந்தியா வரதுக்குள்ள பையனை கடத்தனும்னு ரங்கன் சொன்னதால கடத்திட்டோம்.. அந்த தம்பி நல்லமாதிரி தெரியுது.. தாய்நாடு வந்தடைந்தார்ன்னு பேப்பர்ல பார்த்தேன்.. அவன்கிட்ட சொல்லி பையனை வந்து கூட்டிட்டு போய்ட சொல்லுங்க..
போலீஸ் அது இதுன்னு போய் எங்க நிலைமையை மோசமாக்கிடாதக்கா.. அப்புறம் இவங்களோட சேர்ந்து நானும் கம்பி எண்ணனும்.. எனக்கு இப்பத்தான் கல்யாணம் ஆகிருக்கு..” என்றான் கவலையாக.
‘சரிங்க.. போலீஸ்க்கெல்லாம் போகல.. கொஞ்சம் பையனை பத்திரமா பார்த்துக்கங்க..” என்றாள் சுவாதி.
‘பையனை நான் பார்த்துக்கிறேன்க்கா.. நான் உங்களுக்கு ஃபோன் செய்தது ரங்கனுக்கு மட்டும் தெரிஞ்சது என்னை வெட்டி பொலி போட்ருவான்.. பார்த்துகக்கா.. என்னை சிக்க வச்சிடாதிங்க.. உங்க ஃபோன்ல நான் போன் செய்ததை டெலிட் செய்துடுங்க.. என்னால அடிக்கடி பேசமுடியாது..” என்றான்.
‘சரி..” என சுவாதி சொல்ல.. ‘அந்த ரங்கனோட பண்ணை வீட்டு அட்ரஸ் கேளுங்க..” என கிசுகிசுத்தான் கலையரசன்.
சுவாதியும் கேட்க.. விலாசம் சொன்ன அசோகன்.. ‘அக்கா ரங்கன் வண்டி சத்தம் கேக்குது.. நான் வைக்கிறேன்.. திரும்ப ஏது இந்த நம்பருக்கு கால் செய்து என்னை மாட்டிவிட்றாதிங்க..” என பதட்டத்தோடு சொல்லி இணைப்பை துண்டித்தான்.
‘கவலைப்படாதிங்க.. பார்த்தி இருக்கிற இடம்தான் தெரிஞ்சிடுச்சில்ல.. நான் இப்பவே கிளம்புறேன்..” என சுவாதிக்கு தைரியமளித்தான்.
சுவாதி நன்றியோடு தலையசைக்க.. சொந்த ஊர்லதான் வச்சிருக்கேன்னு சொன்னானே.. பார்த்தியோட தாத்தாபாட்டி வீட்டுல இவர்களின் நிலையை சொல்லி பேசிப் பார்ப்போமா.? இந்த நிலையில் கூடவா மனமிறங்க மாட்டார்கள்..? ஒருவேளை இவர்களை சேர்த்துக்கொண்டால்.. இவங்க புருசனை கண்டு பிடிக்கிற வரைக்கும் நாமும் கொஞ்சம் டென்சன் இல்லாம இருக்கலாம் என திடீர் எண்ணம் தோன்ற..
அதற்கு குட்டிபாப்பாவையும் கூட்டிட்டு போனாத்தான் சரிவரும்.. பார்த்தியை கண்டுபிடிச்சதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு போனா குழந்தைகளை பார்த்ததும் கோபம் குறைவாங்க.. நமக்கும் நிலாவைப் பார்க்க வசதியா இருக்கும் என நினைத்தவன்..
‘தம்பி எங்கயிருக்கான்னு கண்டுபிடிச்சிட்டேன்.. அவனை கூட்டிட்டு வரப்போறேன்.. என்னை பார்த்ததும் அவன் உன்னை கேட்டான்னா என்ன செய்ய.?” என யோசிக்கும் பாவனையோடு கவிப்பிரியாவிடம் கேட்டவன்.. ‘அம்மாக்கு உடம்பு சரியில்லாததால அவங்களை அங்க கூட்டிட்டு போக முடியாது.. நீ வரியா என்கூட..? தம்பியை கூட்டிட்டு உடனே அம்மாகிட்ட வந்துடலாம்..” என்றான்.
அம்மாவும் வேணும்.. தம்பியும் வேணும் என்ற பாவனையில் பதில் சொல்ல தெரியாமல் தடுமாறிய சிறுமி சுவாதியைப் பார்க்க.. ‘வேணாம்ங்க.. போற இடத்துல என்ன பிரச்சனை வருதோ..” என சுவாதி பயப்படவும்..
‘ஒரு பிரச்சனையும் வராது.. நான் கிளம்பின நேரம் அந்த ரங்கன் இங்க ஆள் அனுப்பிட்டான்னா பிரபாவால உங்க இரண்டு பேரையும் சமாளிக்க முடியாது.. பாப்பாவை நான் பார்த்துக்கிறேன்.. என் கூட அசார் வரான்.. பிரபாகரன் உங்களோட இருக்கட்டும்.. நாளைக்கெல்லாம் நாங்க பார்த்திபனோட வந்திடுவோம்.. அதுக்கப்புறம் உங்க புருசனைப் பத்தி விசாரிப்போம்..” என்றான்.
சுவாதி சம்மதமாய் தலையசைக்க.. ‘போலாமா பாப்பா..?” என்றான். சிறுமி சரியென தலையசைக்க.. சிறுமியை பேச வைக்கும் பொருட்டு.. ‘உன் பேர் என்னன்னு எனக்கு தெரியனுமே.. அப்பதான உன்கிட்ட பேசமுடியும்..” என்றான் சிறுவன் போல்.
‘கவிப்பிரியா..” என்றாள் சன்னக்குரலில்.
‘ம்.. உண்மையாவே கவிதை மாதிரிதான் இருக்க.. வா வீட்டுக்கு போய் குளிச்சிட்டு சாப்டுட்டு பார்த்தியை கூட்டிட்டு வர கிளம்புவோம்..” என்றான்.
சுவாதியை பார்த்த சிறுமி அன்னையின் தலையசைப்பு கிடைத்ததும் கலையரசனின் கையைப் பிடித்தாள். ‘ம்.. குட்..” என கவிப்பிரியாவின் பிஞ்சு கையோடு தன் முரட்டு கையை கோர்த்தவன்.. சுவாதியிடம் பத்திரம் சொல்லி விடைபெற்றான்.
பெரிய சிரமம் என நினைத்த விசயம்.. ஒரு போன் அழைப்பில் குழந்தை எங்கிருக்கிறான் என சுலபமாக அறிந்த நிம்மதியோடும்.. நிலவழகியை பார்க்க போகிறோம் என்ற ஆவலோடும் கவிப்பிரியாவோடு டேக்சியில் பயணித்தான்.