‘உனக்கு நேரம் ரொம்ப நல்லாயிருக்கு போலடா..” என கலையரசனிடம் சிரிப்போடு கிசுகிசுத்தான் அசார். ‘ச்சு.. சும்மாயிருடா..” என கடிந்தாலும் கலையின் உதட்டில் சன்ன புன்னகை எட்டிப்பார்த்தது.
அச்சோ இந்த தம்பி போலீஸ்ன்னு சொல்லவும்தான் இப்போ அமைதியா இருக்கார்.. இவங்க கிளம்பிட்டா திரும்பவும் இந்த மனுசன் மலையேறிடுவாரே என பதைத்து.. ‘இப்போ போனா காலைல வந்துடலாம்.. அவளும் உடம்பு முடியாம தனியா குழந்தைகளை பார்த்துக்கிறது கஷ்டம்டா.. அவ சூழல் தெரியாத வரைக்கும் பிரச்சனையில்ல.. தெரிஞ்ச பின்ன படுத்தா தூக்கம் வருமா.?” என எப்படியாவது இவர்களோடே மகனை கிளப்பும் முயற்சியாக புலம்பினார்.
இனி சுவாதியை கூட்டிட்டு வரும்வரை அம்மா புலம்பிட்டுதான் இருப்பாங்க என்றுணர்ந்த கதிரவன் யோசனையிலிருக்க.. கலையரசனின் போன் அடிக்கவே.. ‘ம்.. பிரபா.. பார்த்திபன் என்னோடதான் இருக்கான்..” என காப்பாற்றிய விபரத்தையும் கதிரவனை சந்தித்தது தற்போது இவர்கள் வீட்டிலிருப்பது என அனைத்தும் சுருக்கமாய் சொல்லி.. ‘பார்த்திய காப்பாத்தியதும் போன் செய்யலாம்னு நினைச்சேன்.. மறந்துட்டன்டா.. இப்போ பார்த்தி அம்மா எப்படியிருக்காங்க..?” என்றான்.
‘நல்லாயிருக்காங்கண்ணா.. பார்த்திய கண்டுபிடிச்சிட்டாங்களா..? நல்லா இருக்கானான்னு நிமிசத்துக்கு ஒருமுறை கேட்டுட்டே இருக்காங்க.. அதான் கால் செய்தேன்.. சுவாதிக்கா பேசனுமாம்..” என்க.. ‘கொடு..” என்றான்.
‘ஒரு ஆபத்தும் இல்ல.. பார்த்தி நல்லாயிருக்கான்.. “ என்று டைம் பார்த்தவன்.. நாங்க வரபனெண்டு பக்கம் ஆகிடும்.. நீங்க பயப்படாம இருங்க..” என்று இணைப்பை துண்டித்தவன்.. ‘கதிர் டைம் ஆகுது..” என்றான்.
கதிரவன் தங்கை முகம் பார்க்க.. ‘நான் கிளம்பவாண்ணா..” என்றாள் ஆர்வமாக.
சுவாதியை பார்த்துக்கொள்ள அங்கு யாரையோ ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.. சுவாதிக்காக எத்தனை பிரச்சனைகளை கலையரசன் சமாளித்திருக்கிறான் எனப்புரிய.. இன்றே போய் அழைத்து வந்திடலாம் என முடிவெடுத்து.. ‘சரி கிளம்பு..” என்றான்.
குழந்தைகளோடு இருக்கப் போகிறோம் என சற்றும் எதிர்பாராத சந்தோசத்தில் ‘ம் போலாம்..” என்றாள் சந்தோசமாக.
‘லோயரை மாத்தி சுடிதார் போட்டுட்டு வா.” என பணிக்க.. ஐந்தே நிமிடத்தில் மாற்றி வந்தாள்.
இவள் சாப்பிட்டாளா இல்லையா.? சொன்னதும் கிளம்பிட்டா என நினைத்தாலும்.. ம்.. கதிரவனும் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.. போகும் போது எல்லாருமா சாப்பிட்டுக்கலாம்.. இவளோடிருக்கும் நேரம் சற்று அதிகரிக்கும் என சுகமாய் நினைத்திருந்தான் கலை.
‘ப்பா..” என கதிரவன் அதட்டல் விட.. போலீஸ் விசாரனை என்ற பயம் ஒருபுறம் இருக்க.. பெத்தவங்க மனச புரிஞ்சிக்காம அவமானப்படுத்தின நாயை கூட்டிட்டு வரதுக்கு.. இந்த நேரத்துல என் தங்கத்தை கூட்டிட்டு போறானே என்ற கோபமும் சேர நாகராஜன் முகம் கடினமாகவே இருந்தது.
தகப்பனை அறிந்தவனாய்.. ‘அம்மாவோட சண்டை போட்டுட்டு இருக்காதிங்க..” என கண்டித்து.. ‘அப்பா எதாவது சொன்னாலும் நீங்க கொஞ்சம் பொறுமையாவே இருங்கம்மா.. நான் வந்து சரிசெய்துக்கிறேன்..“ என்று அன்னைக்கும் சொல்லி கிளம்பினான் தங்கையோடு.
ஆஹா.. நாம நினைச்சமாதிரியே இவளும் சாப்பிடலயா.. அதுவும் பசி தாங்கமாட்டாளா.? மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி என நினைத்தவன் முகத்தில் புன்னகை அரும்ப.. கலையரசனின் முகம் பார்த்த அசாரும் சிரிக்க.. ‘சாப்பிடலாம் கதிர்.. இங்க எங்க நல்லாயிருக்கும் சொல்லுங்க..” என்றான் கலையரசன்.
கால் மணிநேர பயணத்திற்கு பிறகு கதிரவன் சொன்ன ஹோட்டல் முன் அசார் காரை நிறுத்த.. ‘அண்ணா நீங்க போய் சாப்பிட்டு எனக்கு வாங்கிட்டு வந்துடுங்க.. கவி தூங்குறா..” என்றாள் நிலவழகி.
சிறு வயதிலிருந்தே விளையாட்டில் கடின உழைப்பை போட்டு அதில் வெற்றியும் கண்ட கலையரசன்.. வாழ்வின் முதல் முறையாக அதிஷ்டத்தை நம்பினான்.. ம்.. காதல் உணர்ந்த தினமே இப்படி தன்னவளோடு பயணம்.. தற்போது அவளின் மடியில் சிறுமி தூங்கிக்கொண்டிருக்க.. தன் மடியில் பார்த்திபனும் தூங்கவே, கிடைக்கப் போகும் தனிமையை நினைத்தவன், இவளின் விசயத்தில் எல்லாம் நமக்கு சாதகமாகவே அமைகிறது.. நான் அதிஷ்டம் பெற்றவன் என்ற சந்தோசத்தோடு கலையரசன் அசார் முகம் பார்க்க.. நண்பனின் மனமறிந்த அசார்..
குழந்தைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்.. இவர்களின் தூக்கம் கெடுக்க வேணாம் என நினைத்து காரிலிருந்து இறங்கிய கதிரவன்.. ‘உனக்கு பிடிச்ச மசால் தோசை.. வெஜ்நூடுல்செல்லாம் இந்த கடையில இருக்காது.. இங்க எல்லாமும் நான்வெஜ்தான்.. சிக்கன் நூடுல்ஸ் வாங்கி வரவா.?” என்றான்.
அச்சோ.. இவங்க ரெண்டு பேரும் போய்ட்டா இவனோட தனியா இருக்கனுமே என்ற பயத்திலிருந்தவளுக்கு கதிரவன் சொன்னது மனதில் பதியாதபோதும் சரியென தலையசைத்தாள்.
இருவரும் கிளம்பிய அடுத்தநொடி ‘ஓய்..” என பின்னே திரும்பிய கலையரசன்.. ‘அன்னைக்கு அடிச்சு அவ்ளோ ரத்தம் வந்துச்சே.. வீடு தேடி வந்திருக்கானே.. காயம் நல்லாகிடுச்சான்னு ஒரு வார்த்தை கேட்க தோணுச்சா உனக்கு..?” என்றான் முறைப்பாக.
‘அதுக்கு அன்னைக்கே சாரி சொல்லிட்டேன்.. இனி அதுபத்தி பேசாதிங்க..” என்றாள் தலைகுனிந்த நிலையிலேயே.
‘அன்னைக்கு மட்டும் பத்து மில்லி ரத்தம் போயிருக்கும்.. என் உழைப்புல சாப்பிட்டிருந்தா கூட உனக்காக விட்டிருப்பேன்.. எங்கம்மா அனுப்பின பணத்துல சாப்பிட்டு சேர்த்த ரத்தம்.. அது உன்னால வீணாகியிருக்கு.. சாரி சொன்னா, போன ரத்தம் திரும்ப வந்துடுமா.?” என்றான்.
‘அது வராதுதான்..” என உடனே ஒப்புக்கொண்டவள்.. ‘உங்களை தெரிஞ்சமாதிரி காட்டிக்கிட்டா நீங்கதான் என்கிட்ட முத்தம் கேட்டவங்கன்னு எங்கப்பாக்கு தெரிஞ்சிடும்..” என அன்று நடந்ததை விளக்கி.. ‘இனி என்னோட பேசாதிங்க.. உங்களோட பேசின அன்னைக்குத்தான் எங்கப்பா என்னை முதல் முறையா அடிச்சார்.. அதுவும் பெல்ட்ல.. நான் உங்களை அடிச்சதுக்கும் இதுக்கும் சரியாகிடுச்சி..” என்றாள்.
‘என்ன.? பெல்ட்ல அடிச்சாரா.?” என பேரதிர்ச்சியோடு கேட்டவன்.. ‘உங்கப்பா என்ன காட்டு மிராண்டியா.?” என்றான் கோபத்தோடு.
தலைநிமிர்ந்தவள்.. ‘நான் தப்பு செய்தேன்.. எங்கப்பா என்னை அடிச்சார்.. அதை எதுக்கு நீங்க கேக்குறிங்க.? எங்கப்பாவை காட்டு மிராண்டின்னெல்லாம் சொன்னிங்க.. அவ்ளோதான்..” என எச்சரித்தாள் கோபமாக.
‘பெத்த புள்ளைய பெல்ட்ல அடிச்சிருக்கார்.. அவரெல்லாம் மனுசனா.? காட்டு மிராண்டியேத்தான்..” என்றான் மீண்டும் கோபத்தோடே.
இவனிற்கு முத்தம் கொடுத்ததால்தான் அப்பா தனக்கு ஃபங்சன் வேண்டாம் என சொல்லிவிட்டார் என்ற கோபமும் ஏமாற்றமும் இன்னும் நிலாவிற்கு குறையாமல் இருக்க.. ‘சின்ன பொண்ணுகிட்ட முத்தம் கேட்ட நீங்கதான் காட்டு மிராண்டி.. கண்டவங்களுக்கும் முத்தம் கொடுத்தா அடிக்காம கொஞ்சுவாங்களா.?” என்றாள் தானும் கோபமாக.
நிலாவின் கோபத்தில்இவனுக்கு சிரிப்பு வர.. ‘நீ சின்ன பொண்ணாயிருக்கவும்தான் முத்தம் கேட்டேன்.. பெரியவளா இருந்திருந்தா…” என கலை முடிப்பதற்குள்..
‘பெரியவளா இருந்திருந்திருந்தா.. என்ன செய்திருப்ப.? உங்களுக்கு குத்த தெரியும்ன்னா.. எனக்கு சுத்த தெரியும்.. சிலம்பு கிளாஸ் போய்ட்டிருக்கேன்.. ஜாக்கிரதை..” என பயத்தோடே மிரட்டினாள்.
மரியாதை ஒருநேரம் தேயுது ஒரு நேரம் வளருது.. ம்.. நிலாவாச்சே எனமகிழ்வோடு நினைத்தவன்.. ‘பார்டா.. வெரிகுட்.. வெரிகுட்.. இப்படித்தான் இருக்கனும்.. யாரும் முத்தம் கேட்டா இனி கொடுத்திடாத.. கம்பெடுத்து சும்மா சுழட்டியடிக்கனும்..“ என மெச்சியவன்.. ‘ஆனாலும் என்னால பெல்ட்ல அடிவாங்கியிருக்க.. சாரி..” என்றான் வருத்தத்தோடு.
நிலவழகி அமைதியாய் இருக்க.. ‘அழகி.. என்ன குரூப் படிக்கிற.?” என்றான்.
என்ன..? அழகியா.? என விழிவிரித்தவள்..‘நான் என்ன படிச்சா உங்களுக்கென்ன.? அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது.. அழகி அப்படில்லாம் பேசி என்னோட பிரண்டாகலாம்னு நினைச்சிடாதிங்க..” என்றாள் எச்சரிக்கும் பாவனையோடு.
‘உன்னை பிரண்டாக்கும் எண்ணமெல்லாம் எனக்கில்ல..” என பொய்யாய் முகம் சுழித்தவன்.. ‘என் பிரண்டுகிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன் தெரியுமா.?” என்றான் பீடிகையோடு.
நீ என்னவோ செய்துக்கோ என்ற பாவனையோடு இருந்தவளிடம்.. ‘உங்கண்ணனும் நானும் பிரண்டாகிட்டோம்..என்மேல நிறைய மதிப்பு வச்சிருக்கார்.. அதனால உன்கிட்ட அன்னைக்கு முத்தம் கேட்டது நான்தான்னு கதிர்கிட்ட உண்மையை சொல்லப்போறேன்..” என்றான் ஆழ்ந்த பார்வையோடு.
பேரதிர்ச்சியடைந்த நிலாவின் கண்கள் கலங்க ஆரம்பிக்க, செய்வதறியாது தலைகுனிந்தாள்.
பரிதவிப்போடு தலைகுனிந்திருப்பவளின் மீது இரக்கம் தோன்றிட.. ‘கவலைப்படாத இப்போ சொல்ல மாட்டேன்..” என கனிவாய் சொல்லி.. ‘ஆனா கொஞ்சம் பெரிய பொண்ணானதுக்கப்புறம்.. ஐ மீன்.. நீ காலேஜ் முடிச்சதுக்கப்புறம் கண்டிப்பா கதிர்கிட்ட சொல்வேன்..” என்று முன்னே திரும்பியவனுக்கு அந்த நிமிடமே தாம் பேசியது தவறென தோன்ற மீண்டும் நிலவழகியைப் பார்த்து..
‘இந்த விசயத்தை மனசுல வச்சிட்டே படிக்காம விட்டுடாத.. என்னால யாரும் பாதிப்படைய கூடாது, பார்த்தியோட அப்பா விசயமா உங்கக்காக்கும் கதிருக்கும் போன் செய்வேன்.. அப்போ உன் படிப்பு பத்தியும் தெரிஞ்சிப்பேன்.. நீயேது ஒழுங்கா படிக்கலன்னு தெரிஞ்சது.. கதிர்கிட்ட இதுனாலதான் உன் படிப்பு வீணாகுதுன்னு நீ காலேஜ் முடிக்கும் முன்ன கூட சொன்னாலும் சொல்லிடுவேன்..” என்று எச்சரித்து முன்னே திரும்பினான்.
‘நான் நல்லா படிச்சா நீங்க அந்த விசயத்தை மறந்திடுவிங்களா.? ‘‘ என்றாள் ஆர்வமாக. நானாவது மறக்கிறதாவது என மனதில் நினைத்து, இவளிடம் ஆம் என்பதுபோல் தலையசைக்க, சற்று ஆசுவாசமானாள் நிலவழகி.
ம்.. பள்ளிப்பருவப் பெண்ணிடம் காதல் சொல்லவும் மனமில்லை.. நான் சொல்லிடுவேனோ என இதையே நினைத்து பயப்படாமல் தன் கவனத்தை படிப்பில் செலுத்த வேண்டும்.. தன் மனதை கட்டுப்படுத்த சில வருடங்கள் இவளை சந்திப்பதையும் தவிர்த்தாக வேண்டும்.. அதேநேரம் தன்னை மறந்திடவும் கூடாதென்பதற்காக வேறு வழியின்றி இப்படி மிரட்டலை விடுத்தான்கலையரசன்.