ஆர்கலியைக் கண்டதும்,“டேய்…நம்ம மாணிக்கம் பொண்ணுடா…” என்று நெப்போலியன் கத்த,
“ஆமாண்ணே… அந்தக்கா தான்..” என்று மாஸ்கோவும் சொல்ல“முதல்ல போய் ஒரு ஆட்டோவை பிடி..” என்று நெப்போலியன் மாஸ்கோவிடம் சொல்லிவிட்டு,
அவளை நெருங்கி சென்று பார்க்க, தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாமல் இருந்தாள் ஆர்கலி. ஆட்டோவோடு மாஸ்கோ வரவும், அவளை அதில் ஏற்றியவன் தானும் ஏறிக்கொண்டு,
“டேய்…. நீ என் வண்டியை எடுத்துட்டு ஹாஸ்பிட்டல் வா..” என்று சொல்லி அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் போக, டாக்டர் ஆர்கலியை சோதித்து பார்த்துவிட்டு அவளுக்கு வைரல் ஃபீவர் என்று சொல்லி, சாப்பிடாமல் இருந்திருக்கலாம் அதனால் வந்த மயக்கம் என்றனர்.
ஜுரம் அதிகமாக இருக்க, அது குறைய ஊசி போடப்பட்டு, டீஹைட்ரேட் ஆகியிருந்ததால் டீரிப்ஸ் ஏற்றப்பட, அப்போது தான் ஆர்கலியால் தான் இருக்கும் இடத்தை உணர முடிந்தது.
“என்னக்கா… இப்ப பரவாயில்லையா..?” என்று அவள் அருகில் நின்றிருந்த மாஸ்கோ கேட்க, நெப்போலியன் கொஞ்சம் தள்ளி நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.
நர்ஸ் டிரிப்ஸை செக் செய்தவர்,“என்ன மேடம் எப்போ சாப்பிட்டீங்க கடைசியா..?” என்று கேட்க“மார்னிங்…” என்று ஆர்கலி சொல்ல
“என்ன நீங்க… இப்படிதான் சாப்பிடாம இருப்பீங்களா…? அதுவும் இவ்வளவு ஜுரத்தோட…” என்று திட்டியவர்,“டீரிப்ஸ் முடியட்டும்.. ரெஸ்ட் எடுங்க… பார்த்துக்கோங்க..” என்றுநெப்போலியனிடம் சொல்லி விட்டு சென்றார். அப்போதுதான் அவன் அங்கு இருப்பதையே பார்த்தாள்.
அதற்குள் “ஏன் க்கா…. காலையில இருந்தா சாப்பிடல நீங்க..?” என்று மாஸ்கோ கேட்க,“காலையில சாப்பிட்டேன்… மதியம் இன்னிக்கு ப்ராஜக்ட்ல கொஞ்சம் ப்ராப்ளம்… அதை சரி பண்றதுல சாப்பிடல… ரொம்ப தேங்க்ஸ்… என்னை பார்த்ததுக்கு..” என்றாள் சோர்வில் சொக்கிய புன்னகையோடு.
“உன் தேங்க்ஸைநீயே வைச்சிக்கோ… அறிவிருக்கா உனக்கெல்லாம் இப்படி சாப்பிடாம கொள்ளாம ஜுரத்தோட மயங்கி விழுறியே…. நாலு பேர் பார்க்கற இடம்ன்றதால ஓகே…. யாருமில்லாத இடத்தில, இல்ல தப்பானவங்க இருக்க இடத்தில இப்படி விழுந்திருந்தா என்னவாகியிருக்கும்..?” என்று அவள் அருகில் வந்து நின்று நெப்போலியன் கத்த, ஆர்கலிக்கும் அவன் உரைப்பதின் உண்மை புரிய,
“சரி… தப்புதான்…. கத்தாத… எனக்குத் தலைவலிக்குது. நான் என்ன வேணும்னேவா விழுந்தேன்…” என்றாள் தலையைப் பிடித்தபடி.
“பின்ன…. சாப்பிடாம ஜூரத்தோட இருந்தா விழ தான் செய்வ… எப்படி நெருப்பா கொதிச்சது தெரியுமா…?” என்றவன் மாஸ்கோவிடம்,“சரிடா… மாணிக்கத்துக்குக் கூப்பிடு… என் போனை கடையில விட்டுட்டு வந்துட்டேன்…” என்று நெப்போலியன் சொல்லவும்,
“வேண்டாம்… வேண்டாம்…” என்றவள் அவசரமாக எழ முயல,“ஐயோ அக்கா..” என்று மாஸ்கோ பதற,“ஏய்… லூசு “ என்று அதட்டினான் நெப்போலியன்,
“அப்பாவுக்கு சொல்ல வேண்டாம்..”
“அப்போ உன் தம்பிக்கு சொல்லவா..? அவன் நம்பர் என்ன..?” என்று கேட்க,
“ஏய்…. என்ன பேசுறநீ…? இவ்வளவு காய்ச்சல் உனக்கு… மயங்கி விழுந்திட்ட…. எப்படி வீட்ல சொல்லாம இருக்கறது..?” என்றான் எரிச்சலாக.
“இல்ல…. அப்பா ரொம்ப கவலைப்படுவார்.. வீணா இங்க வரேன்னு சொல்வார்… என் தம்பிக்கு எக்ஸாம் இருக்கு.. இப்ப சொன்னா ஒழுங்கா படிக்காம இங்க வந்துடுவான்… ப்ளீஸ்…” என்று மிகுந்த சோர்வோடு அவள் சொல்ல, இத்தனை நாள் மாணிக்கத்தின் மகளாக பார்த்தவளை மார்கழியாக பார்த்தான்.
இழையாய் சினம் ஒன்று அவள் செயலில் சீறினாலும், இடையே ஒரு ஆச்சரியம் அலர்ந்தது அவனுள்ளே.
‘இவளுக்கே முடியல… ஆனாலும் அவ குடும்பத்தை தான் யோசிக்கிறா..’ என்று நினைத்தான். அவளைத் தூக்கி ஆட்டோவில் உட்கார வைக்கையிலேயே உணர்ந்தானே அவளது உடல் சூட்டினை.
தயலோ அனலாய் அல்லவா தகித்தாள்.
“சரி… என்னவோ போ…” என்றவன் மீண்டும்நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான்.
“ஆனா ஒன்னு…. இவ்வளவு வாய் பேசிறியே… கொஞ்சம் அந்த வாய்க்கும் சோறு போட்டிருக்கலாம்…” என்று சொல்ல,“எனக்கு சாப்பிட டைம் இல்ல… ப்ராஜக்ட்ல பெரிய ப்ராப்ளம்.. உனக்கு சொன்னா புரியாது..”என்றாள் ஆர்கலி
“அதெல்லாம் எனக்குப் புரியவும் வேண்டாம்… ஆனா சாப்பிட கூட டைம் இல்லாத வேலையை என்னத்துக்குப் பார்க்கனும்..” என்று முனக,“இங்க பாரேன் நீ எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்க…. அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி… ஆனா பேசிட்டே இருக்காத…. என்னால உனக்குப் பதில் பேச முடியல…” என்றாள் எரிச்சலாக.
சிறிது நேரம் அமைதியாகப் படுத்திருந்தவள், மாஸ்கோவைப் பார்த்து,“என் பேக்.. எங்க..?” என்றதும்,
“இங்க இருக்குக்கா..” என்று அவன் எடுத்துக் காட்ட,“போனை கொஞ்சம் எடுத்துத் தரியா..?” என்று கேட்க
அவன் தரவும், ஒரு கையில் டிரிப்ஸ் ஏற, வலது கையால் தம்பிக்கு கால் செய்தாள்.
“ஹலோ…. ரஞ்சி…”
“அது….எனக்கு ப்ராஜ்கட்ல கொஞ்சம் இஷ்யுஸ் ஆகிடுச்சு.. வர லேட் ஆகிடும் டா… நீ சாப்பிட என்ன இருக்கு பாரு… இல்ல ஹோட்டல்ல வாங்கி கொடுத்திடு டா. நான் பத்திரமா வந்திடுறேன்..”
…
“இல்ல… நானே வந்துடுறேன்டா… சரி சரி… கால் பண்றேன்..” என்று ரஞ்சியிடம் பேசி விட்டு வைக்க,
நெப்போலியனோ “புளுகுமூட்டை…” என்று முணுமுணுத்தான்.
டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க,உடல் சோர்வில் அப்படியே கண்மூடியவள் உறங்கிப் போனாள்.
“அண்ணே அக்கா தூங்கிட்டாங்க…” என்று மாஸ்கோ சொல்ல“இவ… சரியான அவள் ஒரு தொடர்கதை சுஜாதாவா இருப்பா போலடா….” என்று நெப்போலியன் ஆர்கலியின் மீது பார்வை வைத்தபடி சொல்ல,
“என்ன அண்ணே சொல்றீங்க…?”
“பின்ன.. இவ அதானே செய்றா…. காலையில பையை மாட்டிட்டுப் போயிடுறா…. அன்னிக்கு மாணிக் சொன்ன மாதிரி ஏழு நாளும் வேலைக்குப் போறா.. அதான் இப்படி ஜுரம் வந்து சொங்கி போன மங்கியா கிடக்குறா…”
“நீங்க சொன்னது மட்டும் இந்த அக்கா கேட்டுச்சு… அவ்வளவு தான்.. ஆனா பாவம்ணே எவ்வளவு வேலை இல்ல…”
“பாவம் தான்… சரி… அவ தூங்கட்டும்… நான் கடைக்குப் போய்ட்டு வரேன்… நீ பார்த்துக்கோ… கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்…” என்று சொல்லி விட்டு நெப்போலியன் விட,
டிரிப்ஸ் ஏறி முடித்தபின் தான் அவள் கண்விழித்தாள். அதற்குள் நெப்போலியனும் வந்துவிட, அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு மாஸ்கோவை உடன் அனுப்பியவன் ஹாஸ்பிட்டலில் பணம் கட்டிவிட்டு மாணிக்கத்தின் வீட்டிற்குச் சென்றான். மணி பத்து ஆகியிருக்க, அதுவும் ஆர்கலி அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்து இறங்க, அவள்மயங்கிவிழுந்ததில் லேசாய் கையில் வேறு உராய்ந்திருக்க, அதற்கும் ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டிருக்க, வாசலில் மகளுக்காக காத்திருந்த மாணிக்கம் பயந்துவிட்டார்.
“அம்மாடி… என்னாச்சுடா என்ன மாஸ்கோ நீ கூட வர..?” என்று அவர் பதற,“ஒன்னுமில்லப்பா….” என்று ஆர்கலி சொல்ல, பெரியப்பாவுடன் உட்கார்ந்திருந்த ரஞ்சித்தும் அக்காவை கைத்தாங்கலாகப் பிடித்தவன்,
“என்னாச்சுக்கா… டிரிப்ஸ்லாம் போட்டிருக்கு… இது என்ன கையில காயம்..” என்று அவள் கையைக் கண்டு கேட்க,
“என்ன டிரிப்ஸா….என்னாச்சு ஆரு..” என்று மாணிக்கம் பதட்டமாக,
“அது சார்… அக்கா பஸ் ஸ்டாண்டில மயங்கி விழுந்துட்டாங்க… ரொம்ப ஜுரம்… அதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து டிரிப்ஸ் போட்டு வரோம்..” என்று மாஸ்கோ சொல்ல,
“என்ன மயங்கிட்டியா..?” என்று ரஞ்சித் அதிர்ச்சியாக,
“ஏன்க்கா.. நீ சொல்லல… அறிவே இல்லக்கா உனக்கு இவங்க மட்டும் பார்க்கலன்னா என்னாவாகியிருக்கும்..?”
“அதான் ஒன்னுமில்லையே விடுடா… நான் இப்போ நல்லா இருக்கேன்…”
“என்ன நல்லா இருக்க… நடக்கக் கூட முடியல… முதல்ல வா.. வந்து படு…” என்று ஆர்கலியை அதட்டி அறைக்குள் அழைத்து சென்றான் ரஞ்சித்.
அதற்குள் காயத்ரியும், ஷாலினியும் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்க, அவர்களைக் கண்டதும் ரஞ்சித்திற்கு கோபம் வர,“அக்கா…” என்று இருவரும் அருகே வர
“ஏய்… முதல்ல பெட்டை ரெடி பண்ணுங்க…. அக்கா படுக்கனும்..” என்று அதட்ட, காயத்ரி உள்ளே சென்று தலையணை எல்லாம் எடுத்து வைக்க, ஆர்கலியை உள்ளே சென்று படுக்க வைத்தான் ரஞ்சித்.
“என்னக்கா…. ஏன் எங்கக்கிட்ட சொல்லல..?” என்று காயத்ரி கவலையாக கேட்க,“இல்லடி…. எதுக்கு உங்களைப் பயமுறுத்தனும்னு தான்… இப்ப ஃபீவர் குறைஞ்சிடுச்சு…” என்றபடியே சோர்வில் ஆர்கலி கண்மூட,
“சொன்னா மட்டும் கிழிச்சிருப்பியா.. நீ..?” என்று தங்கையிடம் சீறினான் ரஞ்சித்.
காயத்ரி பயந்து அவனைப் பார்க்க “முதல்ல..போய் காஃபி போடு வந்தவங்களுக்கு..” என்று அதட்ட அவள் கிச்சனுக்குள் புகுந்து கொள்ள, ஷாலினி ஆர்கலி அருகே உட்கார்ந்து கொண்டு, அவள் கையைத் தடவியவள்,
“இப்ப பரவாயில்லையா கா..? டாக்டர் என்ன சொன்னாங்க..?” என்று கேட்க,
“அக்காவுக்கே முடியல… அவளை எங்கொயரி பண்ணாம போ ஷாலு..” என்று திட்டியவன் ஆர்கலிக்கு பெட்ஷிட்டை போர்த்திவிட்டு கிச்சனுக்குள் சென்றான்.
மாணிக்கம் அறைக்குள் போக, ஆர்கலி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, உள்ளம் மறுகிட, விழியில் உவர் நீர் பெருகிட, அதை அவள் உறக்கம் தடையிட, அமைதியாக மகளை கண்ணுக்குள் நிறைத்தவர்நீரோடு அறையை விட்டு வெளியே வந்தார்.
ரஞ்சித் அரிசி கழுவி ஆர்கலிக்குக் கஞ்சி தயார் செய்ய, ஹாலில் மாணிக்கத்தோடு மாஸ்கோவும் நெப்போலியனும் உட்கார்ந்திருக்க,“ரொம்ப நன்றி வீரா… எனக்கு என்ன சொல்றதனே தெரியல…” என்று மாணிக்கம் நெகிழ்ந்து பேச,
“என்ன மாணிக் உங்களுக்காக இது கூட செய்ய மாட்டோமா..?என்றான்.
அதற்குள் ஷாலினி,“அண்ணா…டாக்டர் என்ன சொன்னாங்க… எப்போ ஃபீவர் சரியாகும்..?” என்று நெப்போலியனைப் பார்த்து கவலையாகக் கேட்க,“உங்க அக்கா சரியா சாப்பிட்டாலே சரியாகிடும் பாப்பா.. மதியம் உங்க அக்கா சாப்பிடமா வேலைப் பார்த்திருக்கா….ரொம்ப வீக்கா இருக்கான்னு டாக்டர் சொன்னார்… அவளை நல்லா சாப்பிட வைங்க..” என்றவன், மாணிக்கத்தைப் பார்த்து
“இதுல மாத்திரை மருந்தெல்லாம் இருக்கு கொடுத்திடுங்க… டாக்டர் நாலு நாளைக்கு ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னார் மாணிக்… பார்த்துக்கோங்க. மணி பத்தாகுது. நாங்க கிளம்புறோம்..” என்று சொல்லி கிளம்ப,
அதற்குள் காயத்ரி,“அண்ணா காபி எடுத்துக்கோங்க…” என்று நெப்போலியனிடம் நீட்ட, அப்போது அவன் குடிக்க மாட்டான் என்றாலும் கூட, அவர்கள் போட்டு விட்டார்களே என்று வாங்கி குடித்தான்.
அவர்கள் வெளியே சென்றதும், ரஞ்சித் வேகமாக பின்னாலயே ஓடி வந்தவன்,“அண்ணா… ரொம்ப தேங்க்ஸ்ண்ணா…” என்று சொல்ல
“டேய் தம்பி… பரவாயில்லடா…” என்று தோளில் தட்டி சொல்லி விட்டு போனான்.
போகும்போதுமாஸ்கோ நெப்போலியனிடம்,“அண்ணே பரவாயில்ல… இந்த அக்காவை அந்த சின்னபசங்க நல்லா பார்த்துக்கிறாங்க இல்ல. ஒன்னு என்னடான்னா டீ போடுது. ஒன்னு டாக்டர் என்ன சொன்னார்னு கேட்குது. அந்த பையன் அவனுக்கு அக்கா மேலரொம்ப பாசம் போல… ஆட்டோவை விட்டு இறங்கினதும் தான் போதும்… கையைப் பிடிச்சு உள்ளே அழைச்சிட்டுப் போயிட்டான்…” என்று சிலாகித்துப் பேச
“அது வீடு இல்லடா.. விக்ரமன் சார் படம்..” என்றான் சிரிப்போடு.
“சரிடா… நீ வீட்டுக்குக் கிளம்பு… வரதன் எனக்கு வெயிட் பண்ணுவார்…” என்றபடி நெப்போலியன் வீடு நோக்கி சென்றான்.
இங்கு ஆர்கலியின் வீட்டிலோ ரஞ்சித் தூங்கிக் கொண்டிருந்த ஆர்கலியை எழுப்பி, அவளுக்குக் கஞ்சி கொடுத்து மருந்துகளைக் கொடுக்க, அவள் இருந்த அயர்ச்சிக்கு உறங்கிவிட, ஷாலினியும் கீழே படுத்துக் கொண்டாள். ரஞ்சித் பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க, காயத்ரி அதை எல்லாம் கழுவ போக, எதுவும் பேசாமல் அவன் அவளை கவனித்துக் கொண்டு இருந்தான். மாணிக்கத்திற்கு மாத்திரைக் கொடுத்து படுக்க வைத்தவன், வீட்டைப் பூட்டி விட்டு வர, காயத்ரி அறைக்குள் போக, அவளை பின்வாசல் பக்கம் அழைத்தவன்,
“இன்னிக்கு எதுக்கு காயு சாமான் விளக்கின…?” என்று கேட்க,“அக்காவுக்கு உடம்பு சரியில்ல… அதான்..” என்று சொல்ல,
“அப்போ அக்காவுக்கு உடம்பு சரியில்லாம போனாதான் ஹெல்ப் பண்ணுவ.. இல்ல நல்லா இருக்கும்போது ஹெல்ப் பண்ணினா தெய்வ குத்தமாகிடுமா டி..?” என்று அதட்ட,
“இல்ல அண்ணா…” என்று காயத்ரி மறுத்துப் பேச,
“என்னடி இல்ல.. நேத்து அக்கா சொன்னப்ப செஞ்சியா நீ…? பழி வாங்குறா அப்படி இப்படி என்ன பேசின நீ..?” என்றான் கோபத்துடன்
“இல்ல… எனக்கு ரெகார்ட் இருந்துச்சு… அதான்..” என்று தயங்கி சொல்ல,“ரெகார்ட் இருக்கவ.. ஏன் டி டீவி பார்த்துட்டு எழுதுற…?” என்று கத்த,“எழுதிட்டே தான பார்த்தேன்… மத்த நாள் அவ கேட்டா நான் செஞ்சுக் கொடுத்திருக்கேன் தானே..” என்றாள் மெல்லமாக.
“கேட்டா மட்டும் தான் செஞ்சுக் கொடுப்பியா நீ..? அவ நம்ம கேட்டா தான் எல்லாம் செய்றாளா..?” என்றுஒரு மாதிரி நக்கலாக கேட்க,“அக்காவுக்கு ஜீரம் வந்ததுக்கு நான் என்ன செய்வேன்..?” என்றாள் பாவமாக.
“பேசாதடி பேசாத… அப்பா அம்மா இருக்கும்போதே மாமா வீட்லநம்மல எப்படி கவனிப்பாங்கன்னு தெரியும் தானே உனக்கு. உன்னால ஒரு நாலு நாள் கூட அங்க இருக்க முடியல….” ரஞ்சித் அதட்ட காயத்ரிக்கு கண்ணீர் வந்துவிட, கன்னம் நனைக்க நனைக்க அழுதாள்.
ஆனாலும் துளியும் அவள் உவர்த்துளிக்காக அவன் உள்ளம் இளகவில்லை. இன்னுமே இறுகித்தான் போனது.
“அழாத முதல்ல…. உனக்கே நல்லா தெரியும்…. அக்கா ட்வுல்த் படிக்கிற வரைக்கும் டெய்லி அவ தான் வீடு பெருக்குவா… அவ டிரஸ் அவளே துவைப்பா… நம்மள கவனிக்கிறதுக்கும் அவளை கவனிக்கறதுக்கும் ஆயிரம் வித்தியாசம் காட்டுவாங்க அம்மா… ஆனா நீ அம்மா இருக்கவரை ஒரு நாள் எந்த வேலையும் செஞ்சி இருப்பியா… சொல்லு.. ஊர்லஇருந்த ஒரு வருஷமா சமையல்காரங்க அவங்க என்ன சமைக்கிறாங்களோ அதை தானே நாம சாப்பிட்டோம்…. ஆனா அக்கா உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும், ஷாலுவுக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்துசமைக்கிறா… அவளுக்கு என்ன பிடிக்கும்னு நமக்குத் தெரியுமா…?”
“அக்கா முடிஞ்சாலும் முடிலனாலும் அவளே தான் எல்லா வேலையும் செய்றா…. உங்கிட்ட கேட்டா ஒரு நேரம் நீ செய்வ… ஒரு நேரம் சண்டை போடுவ… நீ அந்திக்கு நாலு மணிக்கே வந்துடுற தானே..? ஆனா அவ உனக்கு முன்னாடி காலையில எழுந்து சமைச்சு ஆபிஸ் போயிட்டு ஏழு மணிக்கு வந்து நமக்கு சமைக்கிறா….”
ரஞ்சித் பேச பேச காயத்ரி தேம்பி தேம்பி அழுதவள்,“நான் இனிமே அக்காவுக்கு ஹெல்ப் பண்றேன்..” என்று அழுகையோடு சொல்ல, அவளை அணைத்துக் கொண்டவன்,
“காயு…. சின்ன சின்ன வேலைக்கு ஹெல்ப் பண்ணினா என்ன தப்பு…. எனக்குப் புரியுது… உனக்கு எஞ்சாய் பண்ணனும்… ஆனா அக்காவை யோசி, நம்ம பானு அத்தாச்சி வயசுதானே அவளுக்கு அவங்களுக்குக் கல்யாணமாகி தருண் ஸ்கூல் போறான்… ஆனந்தி சித்தி அக்காவை எதுவும் பேச மாட்டாங்க… ஆனா நம்ம அம்மா அவளை எப்படி பேசுவாங்க நடத்துவாங்கன்னு நமக்குத் தெரியும்…. ஊர்ல அக்கா ஸ்கூல் வரைக்கும் படிச்சப்ப கூட நம்ம அவளை டீவியெல்லாம் பார்க்க விட மாட்டோம். நமக்குப் பிடிச்சது தான் நம்ம பார்ப்போம்… ஆனா அவ நம்மளை எப்படி பார்த்துக்கிறா… அவ பெரியவன்னு நம்ம அவளை பார்க்க கூடாதுன்னு இல்லடா….”
அடுத்த நாள் ஷாலினி பள்ளிக்கு விடுமுறைப் போட்டுவிட்டு ஆர்கலியோடு இருக்க, அவளது அருகாமையில் தெரியா அவளது அருமை. அவளது இயலாமையில் தான்… அவளது இல்லாமையில் தான் தெரிந்தது. ஆர்கலிக்கு அப்படியொரு சோர்வு. கை கால் எல்லாம் வலி. பல நாள் காணாமல் போயிருந்த உறக்கம், மருந்தின் வீரியம் என தூங்கி கொண்டே இருக்க காயத்ரி ஷாலினி ரஞ்சி மூவரும் சேர்ந்து வீட்டு வேலைகளை செய்தால் கூடமிகவும் சிரமப்பட்டனர்.
இதையெல்லாம் ஆர்கலி ஒருத்தியாக அல்லவா செய்தாள். அதை உணர்ந்தும் இருக்க, தங்கள் தவறு புரிந்தது காயத்ரிக்கு. ஆர்கலி வீட்டில் இருந்த நாட்களில் காயத்ரியும் ஷாலினியும் மாறி மாறி விடுப்பு எடுத்து அவளை கவனித்துகொள்ள, மாணிக்கமும் மகளுடனே இருந்தார்.
ஏனோ எப்போது வள்ளியை நினைத்தாலும் ஒரு வாஞ்சையும் வகை பிரியா காதலும் அவர்மீது தோன்றும். இன்று மகளை இப்படி படுக்கையில் பார்க்கையில் கோபம் மட்டுமே மனைவி மேல் இருந்தது. ஆர்கலிநான்கு நாள் கழித்து அலுவலகத்திற்கு போய்விட, மாணிக்கம் அன்றுதான் கடைப்பக்கம் போனார். இடையே ஒரு நாள் வரதன் மட்டும் வந்து ஆர்கலியைப் பார்த்துவிட்டு சென்றார்.
மாணிக்கத்தைக் கண்டதும்“வாங்க மை டியர் மாணிக்… மொக்கைப் போட ஆளில்லாம நாலு நாளா ஐ மிஸ் யூ..” என்று சொல்லி அவரை அருகில் உட்கார வைக்க,
வரதனோ,“வெட்டிப்பயலே சும்மா இருடா…. அப்புறம் மாணிக்கம் பொண்ணு எப்படி இருக்கு…” என்று விசாரிக்க,“இப்ப ஜுரம் இல்ல…. ஆபிஸ் போயிட்டா..” என்றார் சோர்வாக.
அவரின் சோர்வுநெப்போலியனைத் தாக்க,“உங்க பொண்ணு ஆபிஸ் போகலன்னா தான் ஆச்சரியம்…. அது சரியாகிட்டாளே… ஏலே டோண்ட் வரி…. பீ ஹாப்பி..” என்று அவன் ராகமாகப் பாட, எப்போதும் அவன் ரகளைகளை ரசனையோடு பார்ப்பவருக்கு மனதுக்குள் பெரும் சோர்வு. வாழ்வின் கசப்பெல்லாம் சேர,
“நான் மட்டும் நல்லா இருந்திருந்தா என் பொண்ணை வேலைக்கே அனுப்ப மாட்டேன்…. நான் ஒன்னுமில்லாம போயிட்டேன்…” என்றார் கலங்கிய கண்களோடு.
நெப்போலியனோ உடனே “என்ன மாணிக்… நீங்க சாதாரண காய்ச்சல் தானே… இதுக்குப் போய் கண்கலங்கிட்டு…” என்று அவர் தோளில் கைப்போட்டு ஆறுதலாகப் பேச
“இல்ல…. கொஞ்சம் கூட என் பொண்ணுக்கு ரெஸ்டே இல்ல… எனக்குப் பொண்ணா பொறந்த காரணத்தால அவ இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறா….” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட, நெப்போலியனின் நெஞ்சத்தை புறத்தே மட்டுமல்லாமல் அகத்தேவும் நனைத்தது அவரது கண்ணீர்.
எதையும் வெளிக்காட்டா மனிதர் தான். ஆனால் மகளின்நிலை நிலைக்குலைய வைத்திருந்தது.
“அப்படி எல்லாம் இல்லை… உங்களை மாதிரி அப்பா கிடைக்க அவ கொடுத்து வைச்சிருக்கனும்… பாருங்க சாதாரண காய்ச்சலுக்கே நீங்க எப்படி துடிக்கிறீங்க… இந்த ஆளு எனக்கு ஜன்னி வந்தா கூட ஜாலியா இருப்பார்..” என்று வரதனைப் பார்த்து கண்ணடிக்க,
அவன் மாணிக்கத்திற்காக கிண்டல் செய்கிறான் என்று புரிந்தவரும், அமைதியாக இருக்க மாணிக்கமோ இப்போது கொஞ்சம் தெளிந்துஇருக்க,
“மாஸு… நம்ம பாட்ஷா பாய்க்கு ஒரு டீ சொல்லு டா.. அப்படியே வட்டி வரதனுக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி…” என்றவன் மாணிக்கத்தைப் பார்க்க,
அவரோ “இந்தா வீரா…. ஆரு உன் கிட்ட ஹாஸ்பிட்டல் பில் எவ்வளவுன்னு கேட்டு கொடுக்க சொன்னா..” என்று பணத்தை நீட்ட,
நெப்போலியனோ கோபமாகப் பார்க்க, வரதனோ “என்ன மாணிக்கம் நீங்க..?” என்று பேச வர,“இல்ல… ஆபத்துக்கு தம்பி உதவுச்சு… இப்ப கொடுத்திடுறது தானே முறை…” என்று மாணிக்கம் சொல்ல,
“அது தெரியும் இருந்தாலும்… ஆரு கோச்சுக்குவா…. ப்ளீஸ்.. வாங்கிக்கோ வீரா…” என்று அவர்நீட்ட“ஆறு கோச்சுக்கும் குளம் கோச்சுக்கும்னு எல்லாம் என்னை நான் மாத்திக்க மாட்டேன்…. அவ கேட்டா நான் அவளுக்காக செய்யல… உங்களுக்காக செஞ்சேன்னு சொல்லுங்க..” என்றான் முறைப்பாக.
“வீரா… அவ நேத்தே கொடுக்க சொன்னா…. உதவி செஞ்ச… என்னால முடியுது திருப்பிக் கொடுக்கிறேன்.. வாங்கிக்கோ…” என்று மாணிக்கம் அவனிடம் பணத்தை நீட்ட,“கடனைத் தான் திருப்பி வாங்குற பழக்கம் எனக்கு…. உதவியை இல்ல… உங்க பொண்ணு எதாவது பேசினா… என்ட்ட சொல்லுங்க..நான் பார்த்துக்கிறேன்..” என்றான் அழுத்தம் கூடிய கட்டளையாக.
இவன் சொல் இன்சொல்லாக இருக்கலாம். ஆனால் எதிரில் இருப்பவர் அல்லவா அதை ஏற்கவோ எதிர்சொல்லவோவேண்டும்.