அன்று மாலை வீட்டிற்கு வந்த ஆர்கலி ஷெல்ஃபில் பணம் இருப்பது கண்டு, “காயு… என்ன இங்க பணம் இருக்கு..?” என்று கேட்க
“தெரியலக்கா…. பெரியப்பா இல்லன்னா அண்ணா வைச்சிருப்பான்..” என்று சொல்ல, பணத்தை எடுத்து எண்ணி பார்த்தவள், அது காலையில் நெப்போலியனிட்ம கொடுக்க சொல்லி மாணிக்கத்திடம் தந்தது என புரிய, வாசலில் உட்கார்ந்திருந்த அப்பாவைத் தேடி போனாள்.
“அப்பா… .பணத்தை நீங்க அவன்ட்ட கொடுக்கலயா?” என்று கேட்க “கொடுத்தேன் ஆரு…. அவன் வாங்கல… கடனை தான் திரும்பி வாங்குவேன்… உதவியை இல்லன்னு சொல்லிட்டான்… அவன் சொல்றதும் நியாயம் தான்… பணம்ன்றதால திருப்பிக் கொடுக்கிறோம்..ஆனா அவன் சரியான நேரத்தில் உன்னை அட்மிட் பண்ணினான் இல்லையா..? அதான் அவன் மறுக்கவும் வந்துட்டேன்..”
“ப்ச்… என்னப்பா நீ..? அவன் சொன்னா கேட்பியா..? என்ன இருந்தாலும் கடன் கடன் தான்ப்பா… சரி நீ தந்தா தான் அவன் கதை பேசி உங்கிட்ட வாங்க மாட்டான்.. நான் போய் கொடுத்துட்டு வரேன்…” என்று கிளம்பப் போக,
“என்ன ஆரு நீ… உதவியை மதிக்கலனாலும் பரவாயில்ல… இப்படி பணத்தை விட்டெறிஞ்சு அவங்களை அவமானப்படுத்தற மாதிரி செய்ய கூடாது..” என்று பொறுமையாக சொல்ல
“அப்பா நான் போய் அப்படி நினைப்பேனா…. அவன் பாயிண்ட் சரிதான்.. ஆனால் என்னால இப்படி கடனா வாங்கிட்டு நம்ம கிட்ட இருந்தும் அவங்களுக்குக் கொடுக்காம இருக்க முடியாதுப்பா…”
“இப்ப நீ என்ன தான் செய்யனும்ன்ற?”
“பணத்தை திருப்பிக் கொடுக்கனும்..”
“சரி… நானும் வரேன்… ஆனா அவன் மறுத்துட்டா எதிர்த்துப் பேசக் கூடாது.. அவன் ரொம்ப நல்ல பையன் டா… சட்சட்னு எதுவும் அவன் சங்கடபடுற மாதிரி பேசிடாத…. அப்புறம் அவனும் திருப்பிப் பேசுவான்..” என்றார் நெப்போலியனை நன்றாய் அறிந்தவராக.
அப்பா மகள் இருவரும் கடைக்குச் செல்ல, வரதராஜன் வெளியறையில் உட்கார்ந்து கணக்குப் பார்த்துக்கொண்டு இருக்க, மாஸ்கோ காருக்கு அடியில் படுத்து என்னமோ பழுதினை சரி பார்க்க, நெப்போலியன் உள்ளறையில் நாற்காலியில் உட்கார்ந்தவாக்கினிலேயே சுவரில் காலை நீட்டி வைத்து மேஜையில் செல்போனில் பாடலை ஒலிக்க விட்டு ஹியர் போன்ஸ் மாட்டிக் கொண்டு கண் மூடி இருக்க, கைகள் தாமாக மேஜையின் மீது தாளம் போட்டன.
வாயோ பாடலை முணுமுணுத்தது. ‘நம்ம சிங்காரி சரக்கு… ஹ்ம்ம்…. நல்ல சரக்கு… சும்மா கும்முனு ஏறுது…கிக்கு எனக்கு…’ என்று பாடல் ஓட….
மாணிக்கத்தைப் பார்த்த வரதராஜன், “என்ன மாணிக்கம் இப்ப தானே வீட்டுக்குப் போனீங்க… அதுக்குள்ள பொண்ணை அழைச்சிட்டு வந்துருக்கீங்க..?” என்று கேட்க
“அது….உங்க பையனைப் பார்க்கனும் அங்கிள்..” என்று ஆர்கலி சொல்ல, “உள்ள தான் இருக்கான்மா..” என்று அவர் சொல்லவும் ஆர்கலி உள்ளறைக்குள் போக, அவளைப் பார்த்தவன் கண்களாலேயே என்னவென்று கேட்க,
அவள் விழி மொழி பேசுமே, ஆர்கலியோ கண்களாலேயே அவன் செல்பேசியைக் காட்ட, ஹெட்செட்டைக் கழட்டியவன், “என்ன மார்கழி..?” என்று கேட்க
ஆர்கலி முறைக்க, “அதான் வரலையே.. ஏன் முறைக்கிற… மார்கழி கூட நல்லா இருக்கு தானே… அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.” என்றான் கிண்டலாக.
“ஹாஸ்பிட்டல்ல பணம் கட்டினதுக்கு..” என்று சொல்ல “முதல்ல உட்காரு….” என்று கைக்காட்டியவன்,
“கொடுத்ததைத் திருப்பிக் கொடுத்தா அது கடன். கடனை நான் ரொம்ப கறாரா வசூல் பண்ணுவேன் தான். ஆனா உதவின்றது பதிலுக்குப் பதில் செய்யனும்னு அவசியம் இல்லை… எனக்கு உன் உதவி தேவைப்படுறப்போ செய்…. எனக்கு பணம் பெருசில்ல…. வேற யார் உன் நிலைமையில இருந்தாலும் நான் கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன்…”
“அதுவும் உனக்காகன்னு எதுவும் நான் செய்யல… மாணிக்கத்துக்காக தான் செஞ்சேன்.. அவரை எனக்குப் பிடிக்கும்… அதனால மட்டும் தான். இப்ப உங்கிட்ட இவ்வளவு பொறுமையா பேச காரணமும் அவர் தான்… அதனால் ஒழுங்கா பணத்தை எடுத்துட்டு போ… சும்மா சீன் காட்டாத…” என்றான் கோபத்தோடு.
“இங்க பாரு.. நீ சொல்றதை நான் இவ்வளவு தூரம் பொறுமையாய்க் கேட்டேன் தானே…? நீயும் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு.. உன்னோட கொள்கையை நான் மறுக்கல… மதிக்கிறேன். ஆனா ஏத்துக்க முடியாது. அண்ட் தேங்க்ஸ் உன்னோட உதவிக்கு.. என்னால நோயாளியா கூட இருந்திட முடியும்… கண்டிப்பா கடனாளியா இருக்க முடியாது….
உன்னோட உதவிக்கான நன்றி என் மனசுல எப்பவும் இருக்கும். நமக்குள்ள பணம்ற விஷயமே வேண்டாம். அதனால வாங்கிக்கோ. உன்னோட கொள்கைக்காக என்னோடதை என்னால விட முடியாது..” என்றாள் திர்க்கமாக.
‘நோயாளியா கூட இருந்திட முடியும்… கண்டிப்பா கடனாளியா இருக்க முடியாது…’ இந்த வார்த்தைகள் நெப்போலியனின் நெஞ்சத்தை சரியாக சென்று தாக்கிட, சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் ட்ராயரைத் திறந்து ஒரு பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டினான்.
மருத்துவமனையில் கொடுத்த பில் அது. ஆர்கலிக்கு புன்னகை அரும்பிட அவனிடம் அதற்குரிய பணத்தைக் கொடுக்க,
“டேபிள் மேல வைச்சிட்டு உன் அப்பாவைக் கூப்பிடு..” என்றான்.
ஆர்கலியும் அவன் பணத்தை வாங்கினால் போதும் என்று பணத்தை டேபிள் மீது வைத்தவள், மாணிக்கத்தை அழைக்க “மிஸ்டர்.மாணிக்…. இந்தாங்க இந்த பணத்தை எடுத்துக்கோங்க…” என்று டேபிளின் மீது இருந்த பணத்தோடு அவன் சட்டைப்பையில் இருந்த பணத்தையும் சேர்த்து தர, மாணிக்கம் புரியாது நிற்க, மகளோ “ஏன் இப்படி பண்ற..?” என்றாள் கோபத்தோடு.
“பொறுமை வேணும் உங்க பொண்ணுக்கு…” என்று மாணிக்கத்திடம் சொன்னவன்
“இந்த மாசம் சம்பளம் ப்ள்ஸ்…. உங்களோட சேவைக்காக ஊக்கத்தொகை..” என்று சொல்ல, மாணிக்கத்திற்கு சிரிப்பு வந்துவிட, ஆர்கலியோ அவனை வினோதமாகப் பார்த்தாள்.
“என்ன மாணிக்… பார்க்குறீங்க வாங்குங்க… உங்க சேவை தொடர்ந்து எங்களுக்குத் தேவை…” என்று சொல்லி அவர் கையில் பணத்தை திணிக்க, மாணிக்கத்திற்கு வேறு வழியின்றி வாங்கிக் கொள்ள, இப்போது நெப்போலியனின் பார்வை ஆர்கலியைக் கிண்டலாகப் பார்க்க, ஆர்கலி எதுவுமே பேசவில்லை.ஆனால் முறைக்க மட்டும் செய்ய, அவன் கண்டுகொள்ளவில்லை.
அப்பா மகள் இருவரும் கடையை விட்டு வெளியே வர, “எங்கப்பா புடிச்சாங்க இவனை….” என்றாள் சிரிப்போடு.
அவளுக்கு அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இவள் செயலையும் தடுக்கவில்லை.அவன் செயலையும் நிறுத்தவில்லை. மாணிக்கத்திற்கும் புன்னகை தான்.
“ரொம்ப நல்ல பையன்… நிறைய பேசுவான்… ஆனா அன்பா இருப்பான்.” என்று சொல்ல, “அப்போ பேசாதவங்களாம் அன்பா இருக்க மாட்டாங்களா..?” என்றாள் சிறு கோபத்தோடு.
அவள் அப்படி தானே..
“அப்படி இல்ல ஆரு… அவன் யோசிக்காம டக்குன்னுப் பேசிடுவான்… அவங்க அப்பாவை, என்னை பெயர் சொல்லி தான் கூப்பிடுவான்.. வெளியே இருந்து பார்க்க அவன் மரியாதை இல்லாத பையனா தெரிவான். ஆனா உண்மையில அவங்க அப்பாவை அவனைத் தவிர யாரும் ஒரு வார்த்தைப் பேசிட முடியாது. கை நீட்டிடுவான்…” என்று சொல்ல,
“அப்பா… போதும்பா…. அவன் ரொம்ப நல்லவன் வல்லவன் சரியா….” என்றாள் செல்ல பொறாமையோடு.
அன்று வெள்ளிக்கிழமை ஆர்கலி சீக்கிரமே வீடு திரும்பி இருந்தாள். போன வாரத்தில் இருந்து அவளை சனி ஞாயிறுகளில் வேலைக்குப் போக ரஞ்சித்தும் மாணிக்கமும் அனுமதிக்கவில்லை. இருந்தும் அவர்களோடு மல்லுக்கட்டி சனிக்கிழமை மட்டும் வேலைக்கு செல்ல அனுமதி பெற்றாள். ஆனாலும் ஒருவாரம் போக கூடாதென ரஞ்சித் பிடிவாதமாக சொல்லி இருந்ததால் நாளை விடுமுறை தான்.
இவள் வரும்போது வீட்டில் காயத்ரியோடு ஆண்டாளும் உட்கார்ந்து டீவி பார்க்க, ஷாலினி அறைக்குள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஆர்கலி ஆண்டாளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, உடை மாற்றி கிச்சனுக்குள் சென்று பாத்திரங்களைக் கழுவ, ஆண்டாள் எட்டி எட்டி பார்க்க
“என்ன ஆண்டாள்… எட்டிப் பார்க்கிற எதாச்சும் சொல்லனுமா..?” என்று கேட்டுவிட, “அது அக்கா… .நாங்க எப்பவாச்சும் லீவ்வுக்கு பழவேற்காடு போவோம்… ரொம்ப ஜாலியா இருக்கும்கா… நாளைக்குப் போகலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம்… நீங்களும் எங்க கூட வரீங்களாக்கா..?” என்று ஆசையாக கேட்க
“நீங்க போயிட்டு வாங்க ஆண்டாள். ஃபேமிலி டிரிப்பா போறீங்க… நாங்க எதுக்கு..?” என்று ஆர்கலி மறுத்துப் பேசினாள்.
ஆண்டாள் வந்து கேட்கவும் ஆர்கலிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளுக்குப் பொதுவாகவே நண்பர்கள் எல்லாம் கிடையாது. எல்லாரிடமும் பேசுவாள். ஆழ்ந்த நட்பு என்பது சுத்தமாக கிடையாது.அதனால் வெளியே நண்பர்களோடு ஊர் சுற்றியதும் இல்லை. நண்பர்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து வந்ததுமில்லை.
உற்ற வீட்டினில் உடையாள் போல் அல்லாமல் அயலாளாகவே சில நேரங்களில் அந்நியப்பட்டு நிற்பாள் ஆர்கலி. அதுவும் அவள் தாத்தாவின் மறைவுக்குப் பின் இன்னுமே அதெல்லாம் அதிகம். தோழமை என்றால் உண்மையாக இருக்க வேண்டும். ஒளிவு மறைவின்றி. அவளுக்கு அம்மாவைப் பற்றி பேசுவதே பிடிக்காது. அதனால் ஒதுங்கியே பழகி விட்டாள். ஆனால் அவள் அப்படி என்று யாருக்குமே தெரியாது.
விலக்கம் என்பது விளங்கிடா வகையில் விலகி நிற்பாள். காயத்ரியும் ஆண்டாளும் இந்த சில மாதங்களாக மிகவும் நெருக்கம் என்று ஆர்கலிக்குத் தெரியும். இவளுமே கற்பகத்திடம் நன்றாகவே பேசுவாள். ஆனால் மனதளவில் எப்போதுமே ஒரு விலக்கம் அவளுக்கு இயல்பிலேயே உண்டு. ஆண்டாள் உரிமையாக வந்து ஆர்கலியின் கையைப் பிடித்து,
“அக்கா… ப்ளீஸ்க்கா… ரொம்ப ஜாலியா இருக்கும். கடலுக்குள்ள போட்ல போகலாம்கா… காயுவும் ஷாலுவும் வர ரொம்ப ஆசைப்படுறாங்க்கா… நீங்களும் ஃப்ரீ தானே.. எங்களோட வாங்க..” என்று ஆண்டாள் கெஞ்சிக் கொண்டு இருக்க, அவள் பார்வை தங்கைகளைத் தழுவ,அவர்கள் மிகுந்த ஆவலுடன் ஆர்கலியைப் பார்க்க,
“அது ரொம்ப தூரம் போலயே ஆண்டாள்….” என்று சொல்ல, “அதெல்லாம் இல்லைக்கா… நாங்க நிறைய டைம் போயிருக்கோம்… அண்ணா கார்ல நம்மளை சீக்கிரம் அழைச்சிட்டுப் போயிட்டு வந்துடுவான்…”
“உங்க அண்ணாவும் வராங்களா..?” என்றாள் யோசனையாக.
அவள் எதற்கு யோசிக்கிறாள் என புரிந்தவளாக, “அக்கா….அண்ணா மட்டுமில்ல… அம்மாவும் வருவாங்க… அம்மாவே உங்களை கூப்பிடனும் சொன்னாங்க்கா… அம்மாக்கிட்ட நீங்க வந்துட்டீங்கன்னு போய் சொல்லவா..” என்றாள்.
அவள் சரியாகப் புரிந்து கொண்டதை எண்ணி ஒரு மெச்சும் பார்வையை தந்தவள் மென்புன்னகையை மலர விட்டு, “எனக்கு ஓகே தான்… இருந்தாலும் அப்பா வரட்டும்.. அவரை கேட்டு நான் சொல்றேன் டா” என்று சொல்ல,
“அங்கிள் வரதன்ப்பா கடையில தான் இருப்பாங்க.. அவங்களும் தாங்க்கா வருவாங்க…. எப்படியும் அங்கிளையும் நெப்போலியன் அண்ணா கூப்பிடுவாரு…. ஸோ ஜாலி…” என்று சொல்லி மகிழ, “என்னது… நெப்போலியன் அண்ணனும் வருவாங்களா..?” என்று ஆர்கலி அதிர்ச்சியாகி கேட்க,
“ஆமாக்கா… அவரோட ப்ரண்ட்ஸ் வீடு அங்க இருக்கு. அவங்க போட்ல தான் நம்ம போக போறோம். எல்லாமே அண்ணனே பார்த்துக்கும்.. இந்த டாக்டர் நமக்கு வெறும் ட்ரைவர் மட்டும் தான்..” என்று கிண்டலாக சொல்ல,
“சரி டா…. அப்பா வரட்டும் நான் நைட் சொல்றேன்…” என்று சொல்லி விட்டு அவள் வேலையைப் பார்க்க, ஆண்டாளோ மாணிக்கம் வரும்வரை உட்கார்ந்திருந்தாள்.
வந்ததும் அவரிடம் கேட்க, “ஆமா ஆண்டாள்… வரதன் சொன்னாரு…. என்ன ஆரு போகலாமாடா..?” என்று மாணிக்கம் மகளிடம் கேட்க, “என்ன அங்கிள் நீங்க…. அக்காவுக்கு ஓகே… உங்கக் கிட்ட கேட்கனும்னு தான் அக்கா சொன்னாங்க..” என்று ஆண்டாள் சொல்ல,
ஆர்கலியோ “அப்பா இவ இருக்காளே நீங்க சொல்லுங்கப்பா… நான் பெர்மிஷன்லாம் ஒன்னும் கொடுக்கல…” என்று அவரிடம் கேட்க, அவருக்கு என்ன வேண்டும் பிள்ளைகளின் மகிழ்ச்சி தானே.
“போவோம்டா….” என்று சொன்னது தான் போதும் ஆண்டாள் எழுந்து கத்த “ஹே..! ஹே..! அமைதியா இரு…” என்று ஆர்கலி சத்தம் போட்ட பின்னே நிறுத்தினாள்.
“ஓகே… நாளைக்குப் பார்க்கலாம்… நான் அம்மாக்கிட்ட போய் சொல்றேன்…” என்று மகிழ்ச்சியாக அவள் வீட்டுக்கு ஓடி போனாள்.
அடுத்த நாள் காலையிலேயே இரண்டு கார்கள் ஷ்யாமினதும், நெப்போலியனதும் அவர்கள் வீட்டு வாசலில் நிற்க, ஷ்யாமின் காரில் அவன் அம்மா கற்பகம், ஆண்டாள், காயத்ரி, ஷாலினி ஆகியோர் ஏறிக்கொள்ள, அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்தால் ஆர்கலியும் அவர்களோடு உட்கார்ந்து இருக்கலாம்.
ஆனால் வரதனோ, “அங்க இடமில்லன்னா நீ இங்க வந்து உட்காரும்மா..” என்று அவர்கள் காரை காட்ட,அதில் அப்பாவோடு உட்கார்ந்து கொண்டாள் ஆர்கலி.
அவர்களுடையது பெரிய கார். இன்னும் நாலைந்து பேர் உட்கார்ந்து கொள்ளலாம். ஆர்கலியும் மாணிக்கமும் பின்னியிருக்கையில் உட்கார, முன்னால் நெப்போலியன் ட்ரைவர் சீட்டில். அவரருகில் வரதராஜன். ரஞ்சித்திற்கு அன்று பரீட்சை என்பதால் அவன் வரவில்லை.
காயத்ரி, ஷாலினி இருவரும் அப்பா அம்மா மறைவுக்குப் பின் இதுதான் முதல் முறை வெளியே மகிழ்ச்சியாக நீண்ட தூரம் செல்வது. ஆதலால் அவர்கள் மகிழ்ச்சியாக ஆண்டாளுடன் கதைப் பேசிக் கொண்டு வர, இங்கு நெப்போலியனோ பாடலை ஒலிக்க விட்டு அமைதியாக வண்டி ஓட்டினான். ஆர்கலி அப்படியே கண்மூடி சாய்ந்து உறங்கிவிட, பழவேற்காடு சென்று சேரவும் தான் விழித்தாள்.
கிட்ட தட்ட மூன்று மணி நேர பயணம். பழவேற்காடு ஏரி உப்புத்தன்மைக் கொண்டதல்லவா..? கடற்கரை ஓரம் வேறு. மிகவும் இனிமையானதொரு சூழ்னிலை. காரை நிறுத்தி விட்டு நெப்போலியன் இறங்கி நிற்க, மாணிக்கம் மட்டும் வண்டியில் உட்கார்ந்து கொள்ள, வரதனும் ஆர்கலியும் இறங்கினர்.
“என்னடா ஷ்யாமை இன்னும் காணும்…?” என்று வரதன் கேட்க “அவன் உருட்டிட்டு வருவான்யா… வெயிட் பண்ணுவோம்… நான் சந்துருவை போய் பார்க்கிறேன்..” என்றபடி அவன் செல்ல,
ஆர்கலி அமைதியாகவே நின்றாள். தூரத்தில் ஏரி.. அதன் ஒரு மருங்கில் சவுக்கு மரங்கள். பாவை பார்வை அங்கே மட்டுமே. ஒரு அரைமணி நேரத்தில் ஷ்யாமும் வந்துவிட, குஷியாக வண்டியில் இருந்து பேசி சிரித்துக் கொண்டே இறங்கினர் காயத்ரியும் ஷாலினியும். இவளைக் கண்டதும் ஓடி வந்து அருகில் நின்று கொண்டு,
“அக்கா… வர வழியில செமல…. சூப்பர் காத்துக்கா…. நீ பார்த்தியா…. ஃப்ளமிங்கோஸ்லாம் பறந்து போச்சு..” என்று காயத்ரி சிலாகித்துச் சொல்ல,
ஆர்கலி, “நான் பார்க்கல காயு… தூங்கிட்டேன்..” என்று சொல்ல
“என்னக்கா நீ.. தூங்கவா வந்தோம்..?” என்று பட்டென கேட்டுவிட
அதற்குள் நெப்போலியன் தன் நண்பன் சந்துருவுடன் வந்து, “வாடா டாக்டரே… கற்பூ பார்த்தியா எங்கூட வந்திருந்தா சீக்கிரம் வந்திருக்கலாம்.. இவன் பாரு உருட்டிட்டு வந்திருக்கான்..” என்று வம்பிழுக்க,
“மிஸ்டர்.ப்ராண்டி இது மாதிரி டிரிப்ல ஸ்லோவா போனா தான் ரொம்ப நேரமாகும் .ஜாலியா இருக்கும்… உங்களுக்கு அதெல்லாம் தெரியல..” என்று ஆண்டாள் சொல்ல, அவள் நெப்போலியனை ப்ராண்டி என்று பழக்கதோஷத்தில் சொன்னதைக் கேட்டு ஆர்கலி சிரித்து விட, ஆண்டாளை முறைத்தான் நெப்போலியன்.
ஆண்டாள் ‘சாரிண்ணா..’ என முணுமுணுத்து விட்டு காதைப் பிடித்து கொள்ள, நெப்போலியனும் “வா வாலு..” என்று சிரித்தபடி சொல்லி அவளை முன்னால் அழைத்துப் போனான்.
“என்ன சந்த்ரு… எப்படி இருக்கீங்க..?” என்று ஷ்யாம் சந்த்ருவிடம் விசாரித்தான்.
ஷ்யாமிற்கும் இருபத்தைந்து தான். நெப்போலியனை விட இரண்டு வயது சிறியவன். ஆனால் சந்த்ருவிற்கு நெப்போலியனை விட வயது அதிகம். அதனால் தான் அந்த மரியாதை. இதைக் கேட்ட நெப்போலியனோ “டேய் மச்சான்…. நல்லா இருக்கேன்னு சொல்லிடு.. இல்ல ஊசியைப் போட்டுடுவான்..” என்று கேலி பேச,
“ஊருக்கு வாடா…. போன் பண்ணி மச்சான் ஜுரம் காய்ச்சல்னு புலம்புடா… அப்போ வைச்சிக்கிறேன் டி.. உன்னை…” என்று ஷ்யாமும் பேச அப்படியே அனைவரும் நடந்து ஏரி வரை போனார்கள்.
பரந்து விரிந்திருந்திருந்தது பழவேற்காடு ஏரி. உப்பு வாசம், காற்றில் கலந்திருக்க, சந்த்ரு இரண்டு மோட்டார் படகுகளை வர வைத்திருந்தான். ஒன்றில் காயத்ரி, ஷாலினி, ஆண்டாள், ஆர்கலி, கற்பகம் ஏறிக்கொள்ள சந்த்ரு இயக்க, மற்றொன்றில் ஆண்கள் அனைவரும் ஏறினர். படகில் போகும்போது நின்று கொண்டே காயத்ரியும் ஆண்டாளும் செல்ஃபி எடுக்க முயல, கோபத்துடன் அவர்களிடம் இருந்து செல்போனை பறித்தவள் எதுவும் பேசாமல் முறைக்க, புரிந்து கொண்டவர்கள் அவர்களாய் பேசி சிரித்து கொண்டு வர, ஆர்கலியின் பார்வையோ அருகில் வந்து கொண்டிருந்த நெப்போலியனின் படகின் மீதே இருந்தது.
அதில் இருந்த தந்தையின் மீதே அவள் முழு கவனமும். படகில் ஏறும்போதே அவருடன் இவள் ஏறப்போக, “நான் பார்த்துக்கிறேன்.. நீ அந்த போட்ல வா…” என்று சொல்லி நெப்போலியன் தான் மாணிக்கத்தை கவனத்தோடும் கனிவோடும் படகின் மீது ஏற்றி உட்கார வைத்தான்.
இப்போதும் அந்த படகில் பார்க்க, நெப்போலியன் ஏதோ சொல்ல, அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க, ஆர்கலியின் பார்வை மொத்தமாக அப்பாவின் மீதுதான். அவர் இப்படி சிரித்த பல வருடங்களாயிற்று. அதைப் பார்க்க பார்க்க ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் இதெல்லாம் தொலைய காரணமாக இருந்த தாத்தாவின் மீதும் அம்மாவின் மீதும் கோபம் பெருகியது. அவள் இப்படி யோசனையில் உழன்று இருக்க,பார்வையோ அங்கேயே நிலைத்திருக்க, பாவை பார்வை கண்ட ஷ்யாமோ,
“டேய் லியா… அந்த மார்கழி நம்மளையே பார்க்குதுடா..” என்று கிசுகிசுக்க, “அடேய் டாக்டர்… அவ அவங்கப்பா பார்ப்பா நம்மளை ஏன் பார்க்க போறா…” என்று நெப்போலியன் சொல்லி விட்டு படகின் ஓரத்தில் போய் நின்று கொள்ள, அவன் பின்னேயே சென்ற ஷ்யாம்,
“ஏன் பார்க்க போறாளா… இப்படி ஒரு ஹாண்ட்சம் டாக்டரா இருந்தா எல்லாரும் பார்க்கத் தான் செய்வாங்க டா… என் ஹாஸ்பிட்டல்ல வர பேஷண்ட்ஸ் கூட நீங்க ரொம்ப ஹாண்ட்சம்னு சொல்வாங்க தெரியுமா..” என்று ஷ்யாம் பெருமையாய் அள்ளி விட
“அப்படி சொன்னா நீ ஃபீஸ்ல டிஸ்க்வௌண்ட் பண்ணுவன்னு சும்மா சொல்லி இருப்பாங்கடா… டுபுக்கு..” என்று அவன் தோளில் தட்டியவன், அவன் தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டு,
“நம்ம இப்ப இப்படி ஓரமா வந்துட்டோம்ல… அந்த மார்கழியோட பார்வை இப்ப எங்கன்னு பாருடா…” என்று நெப்போலியன் சொல்லவும் ஷ்யாம் பார்க்க, ஆர்கலியின் பார்வை மாணிக்கத்தையே வட்டமிட,
“லியா ஆமாடா… கரெக்டா சொல்லி இருக்க… அந்த பொண்ணு அவங்கப்பாவைத் தான் பார்க்குறாடா..” என்று ஷ்யாம் ஆச்சரியமாக சொன்னான்.
“அதனால டாக்டர் தம்பி… அந்த பக்கம் பார்க்காம ஒழுங்கா இங்க பாருங்க.. அப்புறம் அவ அடிச்சிட்டான்னு வந்து நிக்காத… ஏன்னா அவ அப்படியான ஆளு தான்..” என்றான் நெப்போலியன்.
ஆர்கலியோ சிறிது நேரம் கழித்து அந்த நீரின் வாசமும், படகின் விசையினால் அவள் மேல் வீசிய நீர்த்துளிகளினாலும் அதில் கவனம் வைத்தாள். அதுவும் நடு ஏரியில் படகு வேகமாக இயங்க, தண்ணீர் வெகு அருகில் வந்து போக, ஆசையாக அதில் கை வைத்தாள். ஒருவழியாக ஏரியைக் கடந்து அங்கிருக்கும் சவுக்கு மரத்தோப்புக்குள் புகுந்தனர். எல்லாம் இனிமையாகத்தான் போனது. அந்த ஆழியும் ஏரியும் சூழ்ந்த நிலப்பரப்பில் ஆர்கலி மாயமாகும் வரை.