படகில் ஏரிக்குள் செல்கையில் ஒரு ஏகாந்தம் மனதை வருடியது. ஏரியின் ஆழம் செல்ல, செல்ல படகின் ஓரம் நீரின் அலை அடித்தது. படகினை ஒரு பக்கம் நன்றாய்ப் பிடித்துக் கொண்டு, மறுகையால் உட்கார்ந்தவாக்கினில் தாண்டிச் செல்லும் நீரைத் தீண்டினாள் ஆர்கலி.
இப்படியான பயணங்கள் இதுவரையில் அவள் அனுபவத்ததில்லை. பெரும்பாலும் பயணம் என்பதே கிடையாது. ரஞ்சி, ஷாலினியெல்லாம் மாமா வீடு என்று ஒன்றிற்கு செல்வார்கள். இவளுக்குத் தான் அது அமையவில்லையே. கல்லூரிக்குச் சென்னை வந்த போது ஊருக்கும் சென்னைக்கும் அவள் செய்ததே அதிகபட்ச பயணம். கல்லூரியில் சென்ற இண்டஸ்ட்ரியல் விசிட்டும் இதனுள் அடக்கம்.
மற்றபடி சுற்றுலா எல்லாம் சென்றதே இல்லை. தாத்தா இருந்த போது அதிராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றிருக்கிறாள். மனோராவுக்கும் போயிருக்கிறாள். அதுவே கடலுக்கும் அவளுக்குமான பந்தம். சென்னை வந்த புதிதில் மெரீனாவிற்கு சில முறைகள் போயிருக்கிறாள். வேலைக்குப் போன இந்த நாலாண்டுகளில் இதுவே முதன்முறை கடலுக்கு வருவது.
ஒருவழியாக படகு பயணம் முடிவுற்று ஏரியின் அக்கரைக்கு சென்றனர். அங்கு பார்த்தால் சுற்றிலும் சவுக்கு மரங்கள் நெடுக வளர்ந்திருக்க, அந்த மணலும் அதன் ஈரமும் இன்னும் ஒரு புது உணர்வையும் புத்துணர்வையும் வழங்கிட, அந்த நிமிடங்களை அனைவரும் அனுபவித்தனர்.
படகில் இருந்து மாணிக்கத்தை நெப்போலியனும் ஷ்யாமும் பத்திரமாக இறக்க, சந்த்ரு அவன் படகில் வைத்திருந்த உணவு பண்டங்களை வெளியே எடுத்தான். எப்போது இங்கே வந்தாலும் சந்த்ருவிடம் சொல்லி சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துவிடுவான் நெப்போலியன். அதில் கண்டிப்பாக கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் காலியாகி இருக்கும்.
மாணிக்கம், வரதன் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, அவர்கள் அருகில் ஆண்டாள், காயத்ரி, ஷாலினி, ஆர்கலி, கற்பகம் எல்லாம் வட்டமாக அமர்ந்தார்கள். எல்லார் கையிலும் பாக்கு மரத்தினால் செய்யப்பட்ட தட்டை சந்த்ரு தர, பின் நெப்போலியன், சந்த்ரு, ஷ்யாம் மூவரும் உணவினை பறிமாறினார்கள்.
“அண்ணே…. எனக்கு பெரிய நண்டு வேணும்..” என்று ஆண்டாள் கேட்க, “போற வழியில பக்கத்துல உள்ள கடல்ல உன்னைத் தள்ளிடுறோம்… இருக்கறதுல பெரிய நண்டா பார்த்து புடிச்சு சாப்பிட்டுக்கோ..” என்று நெப்போலியன் சொல்ல,
நெப்போலியன் விளையாட்டாகப் பேசினாலும் பெரிய நண்டாகப் பார்த்து ஆண்டாளுக்குப் பரிமாறப் போக, “அடேய் நண்பா…. எல்லாத்தையும் அந்த குட்டி பிசாசுக்குப் போட்றாதடா…. மாசத்துக்கு ஒரு தடவ வர உன் நண்பனுக்கும் கொஞ்சம் வைடா…” என்று ஷ்யாம் அலற,
“நீ சும்மா கிடடா… வளரபிள்ளை… நீ சாப்பாடு தங்கச்சி…” என்று அவன் பாட்டிற்கு ஆண்டாளுக்கு வைத்தான்.
ஷாலினிக்குக் கொஞ்சம் அதிகமாக பிரியாணி வைக்க, “அண்ணா…எனக்குப் போதும்..” என்று ஷாலினி சொல்ல “என்ன பாப்பா நீ…. நீ ரொம்ப ஒல்லியா இருக்க… .நல்லா சாப்பிடு…” என்று சொல்லி விட்டு மற்றவர்களுக்கும் பரிமாறி விட்டு சாப்பிட உட்கார்ந்தான்.
இறால் பிரியாணி, நண்டு வறுவல், தயிர் பச்சடி, நண்டு லாலிபாப் என்று உணவு அமர்க்களப்பட, வரதன் தன் தட்டில் இருந்த நண்டினை உடைத்து உட்சதையை நெப்போலியனின் தட்டில் வைக்க, அவன் அதை ருசிக்க, கற்பகமோ,
“இவன் என்ன பல்லு இல்லாத கிழவனா…. அவனையே கடிக்க சொல்லுங்கண்ணா…. இன்னமும் சின்னப்பிள்ளையாடா நீ..?” என்று கிண்டலாகக் கடிய,
“கற்ப்ஸ்…. இப்ப எனக்கு இவர் ஊட்டுறதைப் பார்த்து எங்க உன் மவன் உன்னை கடிச்சு தர சொல்லி கேட்டுருவானோன்னு தானே என்னைக் கலாய்க்கிற..” என்று பதிலுக்குக் கலாய்க்க,
“அதில்ல கற்பகம்… இவன் உடைச்சுக் கொடுத்தா தான் சின்னப்புள்ளையா இருக்கறதுல இருந்து சாப்பிடுவான்… அப்படியே பழகிட்டான்..” என்று சொல்லி விட்டு மீண்டும் நண்டுகளை உடைத்து அவனுக்கு வைக்க,
“யோவ் போதும்யா.. எல்லாத்தையும் எனக்கே வைச்சா… நீ என்ன சாப்பிடுவ…?” என்று நெப்போலியன் கடிந்து கொண்டான்.
இவர்கள் இப்படி அலப்பறை செய்ய, ஷாலினி, ஆர்கலி எல்லாம் அமைதியாக உண்பதைப் பார்த்த கற்பகம், “ஆரு… ஷாலு என்ன வேணுமோ கூச்சப்படாம வாங்கி சாப்பிடனும்… இவனுங்களைப் பாரு கடல் மொத்தமும் வத்தினா கூட கருவாடு கிடைக்குமான்னு தான் முதல்ல தேடுவானுங்க… கடலைக் காணோமேன்னு தேட மாட்டானுங்க…” என்றார்.
ஆண்டாளோ “ஆமா மா… அவனுங்களே அவங்கள டேமேஜ் பண்ணிப்பானுங்க…. செல்ஃப் செர்வீஸ்…” என்று எடுத்துக் கொடுக்க,
“ஏய்… சில்வண்டே உனக்கு சின்ன நண்டா போட்டுருக்கனும்…. தங்கச்சின்னு போட்டா… கட்சி மாறிப் பேசுற நீ… இரு இரு..” என்று நெப்போலியன் மிரட்ட,
ஆர்கலி பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சாப்பிடும்போது பேச மாட்டாள். சாப்பிடும்போது பேசினால் அவள் தாத்தா சிதம்பரத்திற்குப் பிடிக்காது. அதுவே பழக்கமாகி விட, இவர்களின் உரையாடல்களை எல்லாம் சுவாரசத்தியத்தோடு ரசித்தாள்.
ஆம்..! ரசிக்கவே செய்தாள். அவர்கள் வீடும் அன்பானது தான். ஆனால் இப்படியான கிண்டல் பேச்சுகள் எல்லாம் பெரியவர்களிடம் அறவே கிடையாது. இதெல்லாம் புதுமையானதாக இருக்க, அதில் தன்னை புகுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த புதுமையை பார்த்து ரசித்தாள். நெப்போலியனின் பேச்சு காயத்ரிக்கும் ஷாலினிக்கும் பிடிக்கவே செய்ய, அதிலும் காயத்ரிக்குத் தடை தயக்கமெல்லாம் எப்போதும் கிடையாது.
அதனால் “அண்ணா நீங்க ரொம்ப ஜாலியா பேசுறீங்க..” என்று பாராட்டாக சொல்ல, “தேங்க்ஸ் பாப்பா…. இந்தா பிரியாணி இன்னும் போடவா..?” என்று அவன் கேட்க,
“அண்ணா நீங்க ரொம்ப ரொம்ப ஜாலியா பேசுறீங்க..” என்று காயத்ரி கிண்டலாகப் பேச, “அப்போ இன்னும் நிறைய பிரியாணி வைச்சிக்கோ பாப்பா..” என்று அவன் பேச, அங்கே கடலலையோடு கலந்தது அவர்கள் சிரிப்பலை.
ஒருவழியாக உண்டு முடிக்க சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தனர். அந்த சவுக்கு மரத்தோப்பின் ஆரம்பத்தில் தான் அவர்கள் உட்கார்ந்து இருக்க, எதிர்ப்பக்கம் ஏரி இருந்தது. அதன் இன்னொரு மருங்கில் கடலும் ஏரியும் சங்கமிக்கும் இடம். வரதராஜன் உட்கார்ந்திருக்க, அவர் மடியில் தலைசாய்த்திருந்தான் நெப்போலியன். வரதனின் கைகள் அவன் தலைக்கோதி வருடி விட, இவன் அவரது ஒற்றைக் கையைப் பற்றி மூக்கில் வைத்துக் கொண்டு,
முகர்ந்தவன் சந்த்ருவிடம், “எப்படிடா சந்த்ரு…. இன்னமும் வாசம் அப்படியே இருக்கு… இந்த இறால் பிரியாணி மாதிரி எங்க தேடினாலும் கிடைக்காதுடா…” என்றான் சிலாகித்து.
“தேடி இருக்கியா…என்ன..?” ஷ்யாம் கேட்க,
“பின்ன தேடாமயா..?”
“இவனை லோட் பார்க்க அனுப்பினா அந்த ஊர்ல என்ன சாப்பாடு இருக்கோ அதை முதல்ல சாப்பிட்டு வந்துடுவானே ஷ்யாம். மறந்துட்டியா..?” வரதன் கேட்க,
“அண்ணா போற இடத்துல மட்டும் டேஸ்ட் பண்ண மாட்டார் காயு…. சாப்பிடுறதுக்காகவே சில இடத்துக்குப் போவார்..” என்றாள் ஆண்டாள்.
“அப்படியாண்ணா….?” அவள் ஆச்சரியம் குறையாது கேட்க “ஆமாம்டா காயு…. போன மாசம் கூட எங்கேயோ போனியே வீரா… ஆனந்தபுரியா..?” என்று மாணிக்கம் கேட்க,
“அனந்த்பூர் மாணிக்.. பாப்பா அந்த அனந்த்பூர் சிக்கன் இருக்கே…. என்ன காரம் என்ன ருசின்ற… கண்ல தண்ணி வரும். ஆனா, சாப்பிட்ட மெர்சலாயிடுவ… அப்படி இருக்கும்..” என்றான் சிலாகித்து.
“அண்ணா நீங்க சமைப்பீங்களாமே… பெரியப்பா சொல்வாங்க…” ஷாலினியும் தன் தயக்கம் உடைத்துப் பேச, “ஆமா பாப்பா மாணிக்… உங்களை நினைச்சா பெருமையா இருக்கு. என்னோட புகழை நல்லா பரப்பி இருக்கீங்களே…” என்று பேசிக் கொண்டே வரதனின் கையில் நெட்டி முறிக்க,
ஆர்கலிக்கு அவர்கள் பேச்சில் எல்லாம் கவனம் இல்லை.எப்படி அனைவரும் அவனிடம் நன்றாகப் பேசுகிறார்கள் என்று பார்த்தாள். அவனை தான் ரவுடி என்று நினைத்தது தவறோ என்று எண்ணி கொண்டே அப்பா மகனது பாசப்பிணைப்பைப் பார்த்திருந்தாள். அதுவும் காயத்ரி எல்லாம் எளிதில் எல்லோரிடமும் பழகி விடுவாள். ஏன் ஆர்கலி கூட நன்றாகப் பேசுவாள் பழகுவாள்.
ஆழ உறவு இல்லையென்றாலும் கூட அளவான உறவினை வளர்ப்பவள். ஆனால் ஷாலினி ரொம்பவே அழுத்தம். அவ்வளவு எளிதாக வெளி மனிதர்களிடம் பேசி விட மாட்டாள். அதை தான் ஆர்கலி ஆச்சரியமாகக் கண்ணுற்றாள்.
ஆண்டாள், “ம்மா… .தண்ணியில விளையாடனும் அப்புறம் லேட் ஆகிடும்..” என்று சொல்லி எழ, காயத்ரி, ஷாலினியும் எழுந்து கொண்டனர். ஆழம் குறைவான பகுதியில் அவர்களை விட்டு, கற்பகம் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மாணிக்கமும் வரதராஜனும் சேர்ந்து ஏதோ உலக செய்தி பேச, நெப்போலியன் வரதனின் மடியில் இருந்து எழுந்து, ஒரு துண்டை கீழே விரித்து ஷ்யாமின் அருகே படுத்துக் கொண்டு சந்த்ரு, ஷ்யாமுடன் பேசிக் கொண்டிருந்தான்.
“டேய்…. உன் மேல செம கோவத்துல இருக்கேன் நான்..” என்று ஷ்யாம் சொல்ல “என்னடா….உனக்கு நண்டு வைக்கலன்னா..?” என்று நெப்போலியன் கேட்க,
“அட ச்சீ… அதில்ல அம்மா, ஆண்டாள் எல்லாம் விட்டுட்டு வந்திருக்கனும். இப்ப பாரு அதுங்க ஜாலியா விளையாடுதுங்க… நம்ம இப்படி காவல் காத்துட்டு காலாட்டிட்டு படுத்திருக்கோம். இவங்களாம் இல்லன்னா நம்ம பார்ட்டி பண்ணியிருக்கலாம்..” என்று குறைப்பட்டான் ஷ்யாம்.
“அதுக்கென்ன டாக்டர்… இன்னிக்கு நைட் இங்க தங்குங்க… நம்ம பசங்க எல்லாம் வர சொல்லி பெருசா பார்ட்டி பண்ணிடலாம்..” என்று சந்த்ரு ஐடியா சொல்ல “இவங்களை எல்லாம் வீட்ல விடனுமே பாஸ்… .இன்னொரு நாள் பார்க்கலாம் விடுங்க…” என்று ஷ்யாம் சமாதானமாக. இவர்கள் பேச்சு சுவாரசியத்தில் ஆர்கலியை கவனிக்கவே இல்லை.
ஆர்கலியோ சிறிது நேரம் தங்கைகள் விளையாடுவதைப் பார்த்தவள், பின் தனியாக நடக்கத் துவங்கினாள். தான் போகும் பாதை அறியாதவளாக. சுற்றி மனிதர்கள் இருந்தாலும் ஆர்கலி எப்போதும் ஒரு தனிமையை உணர்ந்திருக்கிறாள். பால்யத்தில் பல வடுக்கள் பார்த்தவளும் கூட. இப்போதும் அப்படியே தான் உணர்கிறாள். ஆனால் அந்த தனிமையில் தனித்து விடப்படுதலில் உணரா ஒரு ஏகாந்த நிலை. இத நிலையை இதில் அடைந்தாள். இயற்கை அவள் கொஞ்சம் இளைபாற உதவியது. இத்தனை நாள் ஏக்கத்தையெல்லாம் ஈடுகட்டியது. இந்த தனிமை தன்மையாகவும் தண்மையாகவும் இருக்க, அதை ஆழ்ந்து அனுபவித்தாள்.
ஏகாந்தம் தரும் எல்லையற்ற தனிமை பொழுதுகளை தன்னை மறந்த நிலையில் ரசித்தாள் ஆர்கலி. ஒரு பக்கம் ஏரியில் பிள்ளைகள் விளையாட, தோப்பின் முகப்பில் ஆண்கள் கதைப் பேச, ஆர்கலியோ கால் போன போக்கில் தோப்பின் உள்ளே நடக்கத் துவங்கினாள். செல்பேசி மட்டும் கையில் எடுத்துக் கொண்டாள். இரு மருங்கிலும் மரம், அருகில் கடல் வாசம். காற்றின் வாசம், எல்லாம் அவள் அகக்கரையினை திகட்ட திகட்ட தீண்டிச் சென்றிட, அமைதியாக நடந்து கொண்டே போனாள்.
சிறிது நேரம் கழித்து, “ஆரு எங்க காயு…?” என்று மகளை காணாமல் மாணிக்கம் கேட்க
“இங்க தானே பெரியப்பா இருந்தா..” என்று காயத்ரி சொல்ல “ஆமா…. அக்கா இங்க தான் இருந்தாங்க….”
“இங்க இருந்தான்னு சொல்றீங்க…. இப்ப எங்கேன்னு தானே அவர் கேட்கிறார்..” என்று ஷ்யாம் கோபமாக சொல்ல,
பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் மகளை எங்கே என தேடுவார்… ஏதோ ஒரு பயம் மாணிக்கத்தைப் பிடித்துக் கொண்டது.
“எங்க போச்சு இந்த பொண்ணு…” என்ற பதட்டம் வரதராஜனையும் தொற்றிக் கொண்டது.
அங்கோ அதுவரையில் சுற்றிலும் சூழ்ந்திருந்த அமைதி தடைபட, பின்னால் ஏதோ அரவம் கேட்கத் திரும்பி பார்த்தாள் ஆர்கலி. நெப்போலியன் நின்று கொண்டிருந்தவன், ஆர்கலி திரும்பியதைப் பார்க்கவும்,
“இங்க தனியா என்ன பண்ற..?” என்றான் கேள்வியாக.
“தனியா இருக்கனும்னு தான் வந்தேன்.”
இடரற்ற இளைப்பாறுதலில் இடையூறாக வந்தவன் மீது ஒரு எரிச்சல் தோன்றிட, பேச்சின் தொனியிலும் அது வெளிப்பட “தனியா இருக்கனும்னு வந்தா தப்பில்ல.. ஆனா யார் கிட்டாவாச்சும் சொல்லிட்டு வந்திருக்கனும்..” என்று கோபமாகச் சொல்கையிலேயே அவன் அலைப்பேசி அழைக்க
வரதராஜன் தான். “டேய் எங்கடா போன மாணிக்கம் பொண்ணைக் காணோம்..” குரலே பதட்டமாக ஒலிக்க “ம்ம்..நான் தான் கடத்திட்டு வந்துட்டேன்..” என்று அவன் நக்கலாகப் பேச, ஆர்கலி முறைத்தாள்.
“பரதேசி… சொல்லுடா..” அவர் கோபத்தில் கத்த “இங்க தான் கடல் பக்கமா நிக்கிறோம்…. என் பக்கத்தில் தான் இருக்கா..” என்று சொல்ல, “ஏன் டா பத்திரமா இருக்காளா..?” என்று அவர் கேட்டுவிட
“யோவ்…என் பக்கத்துல இருக்கான்னு சொல்றேன்.. பத்திரமா தானே இருப்பா… என்ன இதுக்கு கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ற நீ..?” என்றான் எரிச்சலாக.
“ஹலோ மாணிக்… உங்க மகாராணி இங்க அப்படியே ஊர்வலம் வந்திருக்கா… அவ்வளவு தான் நான் பக்கத்துல தான் இருக்கேன்… நீங்க பயப்பட வேண்டாம்..” என்று ஆறுதலாக சொன்னவன்,
“அவ கிட்ட கொடுக்கிறேன்.. பேசுங்க..” என்று சொல்லி அலைப்பேசியை நீட்ட, ஆர்கலி வாங்கிக் கொண்டவள், “என்னப்பா…நான் பத்திரமா தானே இருக்கேன்..” என்று சொல்ல
“என்ன ஆரு நீ.. சொல்லிட்டு போ வேண்டாமா…? தீடீர்னு பார்த்தா கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் உன்னைக் காணோம்… தெரியாத இடம்…. காடு… கடல்…. அப்பா பயந்துட்டேன் டா…” என்றவரின் குரலில் நடுக்கம் ஓட, அப்போதுதான் தனது தவறு புரிய,
“சாரிப்பா… அங்க போர் அடிச்சது. நடக்கனும்னு தோணிச்சு…. அப்படியே இடம் அழகா இருக்கவும் வந்துட்டேன்…. இப்போ வரேன் இருங்க..” என்று சொல்ல,
அவரோ “வேண்டாம் வேண்டாம்….டா…நீ கொஞ்ச நேரம் இருந்திட்டு வா… அதான் வீரா இருக்கான்ல… நீ ஆசை தீர பார்த்துட்டு வாடா..” என்று சொல்ல அவள் போனை அவனிடம் நீட்ட, ஆர்கலி இது போல் எல்லாம் எங்கும் போனதில்லை. மகளது ஆசையைக் கெடுக்க வேண்டாமென நினைத்தவர் நெப்போலியனிடம்,
“வீரா… நான் பயந்துட்டேன்னு அவ உடனே வர நிப்பா… நீ கொஞ்ச நேரம் அவ கூட இருந்து பத்திரமா அழைச்சிட்டு வா….” என்று கேட்டு கொள்ள, “சரி… சரி.. நீங்க பயப்படாம இருங்க… வரோம்..” என்று வைத்துவிட்டு பார்க்க,
ஆர்கலி அதுவரையில் அவளும் அவள் தனிமையுமாக இருந்தவள் தந்தையின் நினைவு வர, அவர் பதட்டம் தணிக்க, வேக வேகமாக வந்த வழியில் நடக்கத் துவங்க, “ஓய்.. மார்கழி… நில்லு..” என்று அதட்டினான்.
“ப்ச்.. என்ன..?” என்று அவள் இருந்த இடத்திலேயே நின்று பார்க்க “இப்போ உடனே போனா மாணிக் வருத்தப்படுவாரு… நீ இஷ்டப்பட்ட மாதிரி கொஞ்சம் நேரம் நடந்துட்டு வா… நான் கூட இருக்கேன்..” என்று சொல்ல,
ஆசையாக இருந்த போதும் “இல்ல… வேண்டாம்…அப்பா கவலையா இருப்பார்… நான் போறேன்..” என்று அவள் மறுக்க “எம்மா தாயே…. இப்போ உடனே நீ போனா தான் நம்ம பொண்ணு சந்தோஷமா வாக்கிங் போச்சு நம்ம கெடுத்துட்டோம்னு ஃபீல் பண்ணுவார் வா இங்க..” என்று வற்புறுத்த, அப்படியும் இருக்கலாம் என்று புரிந்து அவன் நின்ற இடம் நோக்கி நடக்கத் துவங்கினாள்.
“கடல்னா ரொம்ப பிடிக்குமா… உனக்கு…?” என்று நெப்போலியன் கேட்க “என் பெயர்லேயே கடல் இருக்கு… எப்படி பிடிக்காம போகும்..?” என்று சொல்ல,
“மார்கழில்ல….. ஓ ஆர்கலில்ல…. ஆமா.. அன்னிக்கு சொன்னார் மாணிக்கம்…”
“அப்பா என்ன சொன்னார்….?”
“என் பொண்ணு பெயர் ஆர்கலி அப்படின்னா கடல்னு சொன்னார்…”
“பிடிக்கும்னு சொல்ற… அடிக்கடி போயிருப்பேன்னு நினைச்சேன்..”
அவன் ஒரு சவுக்கு மரத்தில் சாய்ந்து கொண்டு ஆர்கலியைப் பார்த்து பேச, ஆர்கலியோ அவனுக்கு எதிரில் ஒரு மரத்தில் சாய்ந்தவண்ணம், ஆழியைப் பார்த்து பேசினாள். இவனது கேள்வியில் விழியின் வீச்சு இவன் பக்கம் விழ,
“பிடிச்சா அடிக்கடி பார்ப்பாங்களா என்ன..? டெய்லி ஆபிஸ் போறேனே அதுக்குன்னு அது பிடிச்ச இடமா என்ன..?”
“என்ன சொல்ற நீ…?”
“இல்ல பிடிச்சா தினமும் பார்க்கனும்னு அவசியம் இல்ல… பிடிச்சதுன்றது பார்க்கறதுல இல்ல.. நினைக்கறதுல தான் இருக்கு…”
“ஓ சரிவிடு… எந்த பீச் போயிருக்க….?” என்று பேச்சுக் கொடுத்தான்.
“ஃப்ர்ஸ்ட் டைம் அதிராம்பட்டினம் கடல் தான் போனோம்.. நாங்க எல்லாரும்… அப்புறம் தாத்தா கூட ஒரு இரண்டு தடவ போயிருக்கேன்.. மனோராவுக்கும் போயிருக்கேன் சென்னை வந்த பின்னாடி மெரீனாவுக்குப் ப்ரண்ட்ஸ் கூட போனேன்..” என்றாள் ஆர்கலி.
“மனோரமா தெரியும்… அது என்ன மனோரா….?” புருவம் உயர்த்தி புரியாது அவன் கேட்க,
“அது… உன்னைத் தோற்க அடிச்சதுக்குக்காக இங்கிலிஷ்காரங்களை பாராட்டி மராத்தி ராஜா கட்டின ஒரு இடம்… சரபேந்திர ராஜன்பட்டினம்ல இருக்கு… பட்டுக்கோட்டைக்குப் பக்கம் தான்.. ஒரு இருபது கிலோமீட்டர்ல இருக்கும்..” என்று புன்னகையோடு சொல்ல, “என்னை தோற்கடிச்சதா…?” அவன் யோசனையாக கேட்க,
நெப்போலியனின் மனமோ, ‘அடக்கடவுளே…. என்னோட பெயர் வரலாறுல இருக்குன்னு நினைச்சுட்டு பேசுறாளா இவ… ஆஞ்சநேயா…. அவளுக்கு மட்டும் என் பெயருக்குப் பின்னாடி இருக்க பிராண்டி வரலாறு தெரிஞ்சா…’ என்ற எண்ணம் ஓட யோசனையில் அவன் நிற்க, “என்ன நெப்போலியன் போனபார்ட்.. தெரியும் தானே..?” என்று ஆர்கலி கேட்க,
“எப்படி தெரியாம இருக்கும். அவரைப் பிடிச்சுப் போய் தான் எனக்கு அந்த பெயரை வைச்சார்…” என்று பொய்யை அள்ளி விட்டவன், தீடீரென “ஒரு நிமிஷம்.. இரு..” என்று காட்டின் ஒரு பக்கத்தில் ஓட,
ஆர்கலிக்கும் பதட்டம் சூழ அவன் பின் போனாள். பார்த்தால் ஒருவனை மரத்தில் சாய்த்து சட்டையைப் பிடித்து நெப்போலியன் ஏதோ சண்டையிடுவது போல் பேச, ஆர்கலிக்கு அதுவரை இருந்த இத நிலை இல்லாமல் ஆகிட, “இங்க வந்தும் இந்த சண்டை போடுறதை விட மாட்டியா…?” என்று வார்த்தை விட,
“வாயை மூடு…” என்று கத்தியவன்,
“காசி…. ஒழுங்கா இன்னும் பதினைஞ்சு நாள்ல…சந்த்ருட்ட காசு கொடுத்து விடுற.. இல்ல கையைக் கட்டி கடல்ல போட்டுடுவேன்….” என்று மிரட்ட, “காசு இல்ல நெப்போலி… இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ..” என்று சொல்ல,
“ஏன்டா.. காசு இல்லாத வென்றே அப்புறம் எப்படிடா…இது வந்துச்சு..” என்று அந்த காசி என்பவன் இடுப்பில் சொருகியிருந்த பாட்டிலை எடுக்க, “ஹி ஹி… அது ரொம்ப வலி..” என்று அவன் பல்லைக் காட்ட,
“அதுசரி…. நான் ஒரு நாலு அடி அடிக்கிறேன்… அப்புறம் குடி…வலி போயிடும்…” என்று கையை ஓங்கப் போக, “விட்டுடுப்பா…. நான் சந்த்ராண்ட பணத்தை இந்த தடவ ஒழுங்கா கொடுத்துடுறேன்..” என்று சொன்னதும் தான் விட்டான்.
அந்த காசி ஓட்டமாக ஓடி விட, ஆர்கலி அவனை நக்கலாகப் பார்க்க, பேச்செல்லாம் இல்லை. இவனும் அவளிடம் என்னவென்று கேட்காமல் முறைத்து வைக்க, விழிகள் அங்கே மொழிகள் பேசின.