ரவி மேலே வரவும், ஷ்யாமிடம் நெப்போலியன், “என்னையே அந்த வாங்கு வாங்கினா… வரவன் காலிடா ஷ்யாம்..” என்று சொல்லி மொட்டை மாடியைப் பார்க்க, ஆர்கலியிடம் ரவி பேசுவது நன்கு கேட்டது.
“என்ன ஆரு இப்படி அடிப்பட்டிருக்கு ஆர் யூ ஓகே நவ்..?” என்றான் அக்கறையாக.
“எஸ்… ஐ அம் ஓகே…” என்று ஆர்கலி சொல்ல, அங்கிருக்கும் ஒரு சின்ன கட்டையின் மீது அமர்ந்தவன், “ஆரு உன்ட்ட பேசனும் பேசலாமா..?” என்று அனுமதி வேண்ட,
“சொல்லு ரவி..” என்றாள் ஆர்கலியும் பொறுமையாக.
அவளுக்கு அவள் தாத்தாவின் மீதும் தாயின் மீதும் தான் கோபம் எல்லாம். இப்போது அதையும் சகித்திருக்க, ரவியிடம் அவளுக்கு வேற்றுமையோ வெறுப்போ பாராட்ட விருப்பமில்லை. அவள் கடைசியாகப் பார்த்த ஏழு வயது ரவிவர்மனாக அவனை நினைத்து, அதை நினைவில் நிறுத்தி அவனைப் பார்க்கத் துவங்கினாள்.
“ஆரு அத்தை பாவம்… அவங்களை மன்னிக்க கூடாதா…?” என்று கேட்க, ஆர்கலியோ பட்டென்று, “அவ்வளவு பாவமா இருந்தா உன் கூடவே அழைச்சிட்டுப் போயிடு ரவி…. உன் அத்தை சந்தோஷமா இருப்பாங்க…. வீ டோண்ட் நீட் ஹெர்..” என்றாள்.
இது நெப்போலியன் காதில் நன்றாக விழுந்து விட, “அதானே பார்த்தேன்… இவளாவது அமைதியா அவன்ட்ட பேசுறதாவது…. ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு…” என்று அவன் சொல்ல, இங்கு ஆர்கலி பேசியதைக் கேட்டு ரவியோ,
“ஏன் ஆரு… இப்படி பேசுற…?” என்றான்.
“இப்படி தான் பேசுவேன் ரவி.. ஏன்னா எனக்கு இப்படி பேசனும் பேசக்கூடாது சொல்லி அம்மா வளர்க்கல… ஸோ என் பேச்சு இப்படி தான் பிடிக்கலன்னா போயிட்டே இரு…”
“அட அட… பாயிண்டா பேசுறாங்கடா..” என்று ஷ்யாம் சிலாகிக்க, “இனி அந்த ரவிவர்மனை யாரைலையும் காப்பாத்த முடியாது… நீ வா நம்ம கீழ போகலாம்..” என்று நெப்போலியன் ஷ்யாமை இழுத்து போக, ஆர்கலியின் பார்வை தாமாக அந்த பக்கம், அவன் பக்கம் பார்க்க, கீழே இறங்கும் முன் ஆர்கலியை நெப்போலியனும் பார்க்க,
“மெதுவா பேசு..” என்பதாக அவன் சைகை செய்து போக, அவள் கோபமாகப் பார்க்க, அவனும் பதிலுக்கு அழுத்தமாக நிற்க, ‘சரி’ என்பதாக விழி முடியவள் ரவிவர்மனைப் பார்க்க,
“இப்படி வார்த்தைக்கு வார்த்தைக் குத்திக் காட்டுவியா நீ…? நான் என்ன பண்ணினேன் ஆரு…”
“நீ ஒன்னுமே பண்ணல ரவி…. அதான்..”
“வாட்??”
“எஸ் அந்த வீட்டு மாடியைப் பாரு…” என்று ஆர்கலி கைகாட்ட, நெப்போலியன் போவது தெரிய “நெப்போலியன் போறார்..” என்று ரவி சொன்னான்.
“அவர் பெயர் வேண்டாம்… அவர் யார் சொல்லு..?”
“மாமா அவர்கிட்ட வேலை பார்க்கிறார்.. ஃபேமிலி ப்ரண்ட் நீ யார் ரவி…? என்னோட கசின்… என்னை விட நீ ஒன்னு இரண்டு வயசு பெரியவன் தானே? ஆர்கலி அத்தை இல்லாம தனியா இருப்பான்னு நீ கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணியிருந்தா உன் அத்தையை முன்னாடியே கொண்டு வந்து விட்டிருப்ப… அவரை அப்பாவுக்கு ஒரு வருஷமா தான் தெரியும்… ஆனா அப்பாவுக்காக இவ்வளவு பண்ணியிருக்கார்… ஆனா உனக்குத் தோணல…”
“எஸ் தோணல தப்புதான்… என்னைக்குமே நான் நல்லவன்னு சொன்னது இல்ல ஆரு… ஐ வோன்ட் டிஃபெண்ட் மைசெல்ஃப்…. என் மேல அப்பா மேல தப்புதான்… நாங்க ரொம்ப சுய நலமானவங்க தான் போதுமா ஆரு…. எனி மோர் அக்யூஸேசஷன்ஸ் டூ ஸே?” என்றான் பழியை ஏற்றவனாக.
“ஓஹ்…. நானா உன்னை குறை சொல்றதுக்கு முன்னாடி நீயா சொல்லிக்கிறியா…?”
“ஏன் அப்படி நினைக்கிற ஆரு… எங்களோட தப்பை ஒத்துக்கிறோம்… உணர்றோம்னு நினைக்கலாமில்லையா…?”
“அப்படி நினைக்கவே முடியல ரவி…” அவள் ஆயசமாக சொல்ல, “வீ ஆர் ரியலி ஸாரி ஃபார் யூ ஆரு…. பட் நீ எங்களை என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியும். பட் அத்தை ஷி இஸ் அனதர் மதர் டூ மீ…” என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.
“பட் ஷி வாஸிண்ட் எ மதர் டூ மீ…”
“ஆரு உனக்கு மாமா பட்ட கஷ்டம்… நீ பட்ட கஷ்டமெல்லாம் தெரியும். ஆனா அத்தை அவங்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும் ஆரு…”
“எல்லாருக்கும் ஒரு நியாயம் இருக்கும்னு எனக்குத் தெரியும் ரவி. ஒருத்தரோட நியாயம் இன்னொருத்தருக்கு அநியாயம் பண்ணிடும். உன் அத்தையோட நியாயம்… எனக்கு அநியாயம்..”
“ஓகே ஆரு…. நீ ஒரு முடிவோட இருக்க. நீ மனசு மாறுவியோ என்னவோ… பட் என்னால சொல்லாம இருக்க முடியல..” என்றவன் சொல்லத் துவங்கினான்.
“ஆரு தாத்தா பத்தி உனக்கு எவ்வளவு தெரியும் எனக்குத் தெரியல… தாத்தாவுக்கு அத்தை மேல கண்மூடித்தனமான ஒரு பாசம்…. ஒரு அளவுகடந்த பொசஸிவ்நெஸ்… அவரால அத்தையை தன்னோட ஸ்டேட்டஸுக்குக் கீழ மாமாவுக்குக் கல்யாணம் செய்து கொடுத்ததைத் தாங்கவே முடியல… அதுவும் தாத்தா மாமாவை வீட்டோட மாப்பிள்ளையா கூப்பிட, சிதம்பரம் தாத்தா ஒத்துக்கல… அந்த கோவம் அவர் மனசுல இருந்துட்டே இருந்திருக்கு…”
“மாமாவுக்கு அடிப்பட்டு அவர் படுத்த படுக்கையான பின்னாடி அத்தை அவருக்குத் துணையா இருக்கறது பிடிக்கல… தன்னோட பொண்ணு கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சார்…. அவருக்கு எப்பவுமே ஒரு தாட் இருக்கும் ஆரு, தான் எது செஞ்சாலும் சரி, தன்னால மட்டும் தான் எல்லாம் எல்லாரையும் சரியா வைக்க முடியும்னு ஒரு எண்ணம்… அதுதான் அத்தை விஷயத்தில் ரொம்ப அதிகம். இடையில அவங்க உன்னை வந்து பார்த்தப்ப எல்லாம் நீ அவங்களை அவாய்ட் பண்ணிட்ட… தென் தாத்தாவே உன்னை வந்து கூப்பிட்டும் நீ வரல….”
அவன் சொல்வதை எல்லாம் அமைதியாகக் கேட்டிருந்தவள் அப்போது குறுக்கே பேசினாள். தாயின் மடமையினால் அவர் தவற விட்ட கடமையினால் காயப்பட்டவள் ஆயிற்றே..!
“இவ்வளவு பேசுற ரவி ஆடு கூட தன்னோட குட்டியைக் காணோம்னா கத்தி தேடும்… ஆனா உன் அத்தை…?” என்றவள் நிறுத்தி கோபமாக ரவிவர்மனைப் பார்க்கவும், அவனும் அவளை நிதானமாகப் பார்த்தான்.
“அத்தை எப்பவுமே தனியா முடிவெடுக்கவே மாட்டாங்க… தாத்தா கூப்பிடவும் போய்ட்டாங்க… அது வரைக்கும் தானே உனக்குத் தெரியும். தாத்தாவோடதை அன்புன்னு சொல்றதை விட நினைச்சதை சாதிக்கனும்ன்ற வெறி… எல்லாரும் அவர் கீழ சொல்பேச்சு கேட்டு நடக்கனும் நினைக்கிற சர்வாதிகாரம்..”
“அத்தைக்கு மாமாவுக்கு இப்படி ஆச்சேன்ற கவலை…. கொஞ்சம் ஆறுதலா இரண்டு நாள் அப்பா கூப்பிட்டார்னு கூட வந்து இருந்த அத்தை… அடுத்து எப்போ உங்க வீட்டுக்குப் போகனும்னு கேட்க, தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? அவன் இருப்பான்னே இல்லையான்னே தெரியாம படுக்கையில இருக்கான்… நீ ஏன்மா கஷ்டப்படனும், அப்பா சொல்றதைக் கேட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொன்னார்..”
“அத்தை ஒத்துக்கவே இல்லை… எனக்கு குழந்தை இருக்கு, என் குழந்தை வேணும் கேட்டாங்க… வீட்டை விட்டு போக அத்தை முயற்சி செய்ய பாசத்தால ப்ளாக்மெயில் பண்ணார். அவருக்கு பொண்ணு மேல பாசம் மாதிரி தானே… அத்தைக்கும் இருக்கும்? பாசத்தால முடியலனதும் அத்தையை அவர் அடைச்சு வைச்சு அவங்க வீட்டை விட்டு போனா மாமாவைக் கொன்னுடுவேன்னு மிரட்டினார். பாட்டியும் இல்ல…. தாத்தாவை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியல… அப்பா சொல்லிப் பார்த்தாலும் அவர் கேட்கல…
அடுத்து அத்தையை வேற கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியலனதும், அப்படியே விட்டார்… மாமாவும் கொஞ்சம் எழுந்து நடமாட ஆரம்பிக்கவும் ஏதோ மனசு மாறி அத்தை அனுப்ப நினைச்சார்… அப்பவும் தானா மகளை அனுப்ப அவரோட ஈகோ தடுத்திடுச்சு…. சிதம்பரம் தாத்தா பேசினது வேற தெரியும்… மறுபடியும் முருங்கை மரமேறிட்டார்…”
“அத்தைக்கு அந்த அஞ்சு வருஷம் உங்களை விட்டு இருந்த குற்றவுணர்ச்சி… அவங்களே போனா கூட நீங்க யாரும் அவங்க வேணும்னு கூப்பிடல… .நம்ம யாருக்கும் தேவை இல்லன்ற எண்ணம்… நம்மளை மன்னிக்க மாட்டாங்கன்னு பயம்… அதனால அவங்க தன்னைத் தானே தண்டிச்சிக்கிறதா நினைச்சு தனியா இருந்துட்டாங்க…
வீட்டை விட்டு போனா உன் புருஷனைக் கொன்னுடுவேன்னு அப்பா மிரட்டுறப்ப அவங்களால என்ன செய்ய முடியும்…? அவங்க உன்னை மாதிரி தைரியமும் கிடையாது…. தன் கண் முன்னாடியே வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நின்னாங்க…”
“நீ கேட்ட மாதிரி நாங்க ரொம்ப சுய நலம் தான்… உன் கிட்ட இருந்து உன் அம்மாவை பிரிச்ச பாவமோ என்னவோ எங்களுக்கும் அம்மா இல்லாம போய்ட்டாங்க..” என்றதும் அதுவரையில் அமைதியாக இருந்தவள்,
“ரவி…. அ… அத்.. அத்தை இல்லையா…?” என்று அதிர்ச்சியாகி கேட்டாள்.
அவளுக்கு இதுவரைக்கும் இது தெரியவில்லை. ரவி கூட மாணிக்கத்திடம் சொல்லி இருந்தான். ஆனால் அவர்களைப் பற்றிய பேச்சினை மகள் விரும்ப மாட்டாள் என்று அவர் சொல்லாமல் விட்டிருக்க,
“எஸ்… அம்மா இல்ல..” என்றான்.
“சாரி ரவி… எனக்கு நிஜமா தெரியாதுடா… யாரும் சொல்லவே இல்ல… எப்போ எப்படி..?” என்று அவள் வருத்தமாகக் கேட்டாள்.
அவளது மாமன் மனைவி கனிமொழி அவளிடம் மிகுந்த அன்போடு நடப்பவர். ஆகையால் அந்த துக்கம் அவளைத் துவளச் செய்தது.
“திருச்சில நடந்தது… நமக்குள்ள பேச்சு வார்த்தையுமில்லை இல்லையா..?” என்றான் ஒரு வித துக்கத்தோடு. பின் தன்னையே தேற்றிக்கொண்டவனாக,
“அதை விடு…. இதோ இது பாரு…” என்று தன் போனில் புகைப்படங்களை அவன் காட்ட, “என்ன இது..?” என்றபடி ஆர்கலி அதில் பார்வையை ஓட்ட,
முழுவதுமாக அவளது புகைப்படங்கள் தான்… எல்லாம் தெளிவாக இல்லாமல் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க, அதில் இருந்தது அவளது கல்லூரி கால புகைப்படம்.
“உன் கூட இருந்து உன்னைப் பார்த்துக்க முடியல… அதனால இதோட தான் அத்தையோட இத்தனை வருஷ வாழ்க்கை… ஸ்கூல் படிச்சப்ப ரொம்ப எடுக்க முடியல…. ஒன்னு இரண்டு தடவ எடுத்தது.. நாங்களும் திருச்சில இருந்தோமில்ல அப்புறம் நீ சென்னையில வந்து காலேஜ் ஜாயின் பண்ணினதும் நான் அப்போ சென்னையில தான் படிச்சேன்… ஸோ நீ வெளியே போறப்ப எல்லாம் எடுத்த போட்டோஸ்…” என்றவன் சொல்ல எந்தவித மாற்றமின்றி அதனையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இடையே வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் வர, யாரென அவள் நிறுத்தி பார்க்க, “அது ரத்னா…” என்றதும் அவளுக்குள் சின்னதாக ஒரு உற்சாகம்… பூரிப்பு.
“அவளைக் கைக்குழந்தையா பார்த்ததுடா…. நல்லா அழகா இருக்கா… செம க்யூட்… என்ன பண்றா…?”
“காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் போறா..”
“எங்களையெல்லாம் அவளுக்குத் தெரியாதுல…”
“ஏன் தெரியாது? உன்னைப் பத்தி நிறையா தெரியும் அவளுக்கு. அவக்கிட்ட பேசுறியா..?” என்றவன் விடியோ கால் செய்ய, திரையில் தோன்றினாள் ரத்னா.
ஆர்கலிக்கு சட்டென்று என்ன பேசுவது என தெரியவில்லை. “ஹாய் ரத்னா… நான் ஆர்கலி…” என்று தன்னை அறிமுகம் செய்ய, அந்த ரத்னா பதிலுக்குக் கைகளை அசைத்து தெரியும் என்றாள் மகிழ்ச்சிப் பொங்க.
மீண்டும் சைகையில் “எப்படி இருக்கீங்க..?” என்று அவள் கேட்க, ஆர்கலிக்கு அதிர்ச்சியில் வாய் பேசவரவில்லை. ஏன் அவளால் பேச முடியவில்லை என்று ஆர்கலி உறைந்து நிற்க,
ரவி அருகில் வந்து, “அவ நல்லா இருக்கா அம்மு… உன்னைப் பார்க்கனும் சொல்றா…” என்று தங்கையிடம் பேசி விட்டு வைக்க ஆர்கலி எதுவும் கேட்காமலேயே ரவியாகவே சொன்னான்.
“அந்த ஆக்ஸிடெண்ட்ல அம்மா கூட ரத்னாவும் இருந்தா… ஷி லாஸ்ட் ஹெர் வாய்ஸ்…” என்றான் வேதனையோடு.
ஆர்கலிக்கு கண்களில் நீர் நிறைந்து விட, “ஏய் ஆரு… ரிலாக்ஸ்…. அந்த ஆக்ஸிடெண்ட் அப்போ அவளுக்கு நாலு வயசு தான்… அம்மாவும் இல்லை… பேச்சும் போச்சு…. ரொம்ப கஷ்டப்பட்டு தான் அவளைக் காப்பாத்தினோம்… அப்புறம் அவளை அந்த அதிர்ச்சியில இருந்து மீட்கவே பல வருஷம் ஆச்சு. அத்தையில்லன்னா இதெல்லாம் நடந்திருக்காது. உன் அம்மாவை நீ பிரிய நாங்களும் ஒரு காரணம். ஸாரி…” என்றான் உணர்ந்து.
அதற்குள் ரவிவர்மனுக்கு அலுவலகத்தில் இருந்து போன் வர, அதை கட் செய்துவிட்டு ஆர்கலியைப் பார்த்து, “ஆரு….நான் இவ்வளவு பேசினேன்…. நீ எதுவும் பேசலையே…?” என்று கேட்க
“ஸாரி ரவி…. நீ இவ்வளவு சொல்ற காரணம் ஆயிரம் இருக்கலாம். ஆனா காயம் என்னவோ எனக்குத்தான்… நான் இப்படித்தான்… விட்டுடு..” என்று அவள் சொல்லவும் அதற்கு மேல் என்ன செய்ய முடியும், காலம் மாற்றும் என்று விட்டுவிட்டான்.
அதன் பின் வந்த நாட்களிலும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ரவியிடம் நன்றாகப் பேசுவாள். ரத்னாவை மிகவும் பிடித்தது. வீட்டிற்கு வந்த மாமனிடம் மரியாதையாக இரண்டு வார்த்தைப் பேசினாள். அவ்வளவுதான். அதற்கு மேல் அந்த வீட்டில் வள்ளி என்ற மனுஷி இருப்பதாகவே ஆர்கலி காட்டிக்கொள்ளவில்லை.
அந்தி மாலை பொழுது, கருமை வானில் கவிழத் துவங்கிய நேரம். ஆர்கலி மட்டுமே வீட்டில் இருந்தாள். அன்று அலுவலகத்தில் இருந்து அவள் வரும்போது வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் சினிமாவுக்குப் போயிருந்தனர். இவளுக்கு போக விருப்பமில்லை.
காலையில் இருக்கும் ஒரே ஒரு பாத்ரூமில் அத்தனை பேர் குளிக்க வேண்டும். அதனால் அவசரக் குளியல் போடும் ஆர்கலி இன்று நிதானமாக தலைக்குக் குளித்தாள். ஊரில் இருந்து வந்த உறவினர் ஒருவர் மூலம் அவள் அத்தை ஊர்வசி வேர்க்கடலை கொடுத்து விட்டிருக்க, அதை அவித்தாள்.
பின்வாசலை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு அவள் முன்னால் வந்து கதவைத் திறக்க, ஷ்யாம் வீட்டின் சுவரின் மீது வழக்கம்போல் நெப்போலியன் உட்கார்ந்து யாரிடமோ போன் பேசிக்கொண்டிருந்தான். இவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன் போனை வைத்துவிட்டு,
“என்ன மார்கழி…. காயம் சரியாச்சா…?” என்று அவள் நெற்றியில் இருந்து தழும்பின் மீது பார்வை வைத்துக் கேட்க,
“அது நடந்து ஒரு மாசம் மேல ஆச்சு…. எப்ப பார்த்தாலும் இதே கேள்விதானா..?” என்று அவள் சலித்துக்கொள்ள, “ஆமா எங்க கற்ப்ஸ்ம்மாவைக் காணோம்… வீடு பூட்டி இருக்கு….?” என்று கேட்க
“ஆன்ட்டியும் அங்கிளும் சொந்தக்காரங்க யாரையோ பார்க்க போனாங்க. ஆண்டாள் எங்க வீட்டுல இருக்கவங்க கூட சினிமாவுக்குப் போய்ட்டா….”
“நீ போகலையா..?”
“போகலன்றதால தானே உன்ட்ட நின்னு பேசுறேன்…”
“மார்கழி மட்டமா ஜோக் அடிக்காத… போ வேலையைப் பார்..” என்றவன் போனில் கவனம் வைக்க, வீட்டுக்குள் சென்றவள் அவித்த வேர்க்கடலையை இரண்டு தட்டில் கொட்டி, கொஞ்சம் வெல்லம் வைத்து அவனிடம் ஒரு தட்டை நீட்டி, “எடுத்துக்கோ ஊர்ல விளைஞ்ச கல்ல..” என்று சொல்ல
“அடடே சூப்பர்….” என்று சொல்லி சுவரில் தட்டை வைத்து கல்லையை உடைத்து சாப்பிட்ட, ஆர்கலி வெளியே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அப்போது பார்த்து மின்சாரம் துண்டிக்கப்பட, “அச்சோ கரண்ட் போச்சே…” என்று ஆர்கலி சொல்ல, “வந்துடும்… வந்துடும்… அது சரிநீ ஏன் தனியா இருக்க… படத்துக்கு நீயும் போக வேண்டியது தானே..?” என்று அவன் கேட்க,
“எனக்கு தியேட்டர்ல படம் பார்க்கவே பிடிக்காது…ஒரே விசில்…சத்தமா இருக்கும்… அவங்க என்ன பேசுறாங்கனு கூட கேட்காது…. அது மாதிரி அவ்வளவு அவசரமா போய் தியேட்டர்ல பார்க்கிற அளவுக்கு எனக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது. டீவில போடுறப்ப பார்த்துப்பேன்..” என்றாள் ஆர்கலி.
“அடப்பாவி நானெல்லாம் ப்ர்ஸ்ட் டே ப்ர்ஸ்ட் ஷோ… அதுவும் தலைவர் படம்னா இரண்டு ஷோ கூட போவேன்… இந்த ஷ்யாம் அவன் வண்டியில ஏதோ ரீப்பேர் சொன்னான்… அதான் ஷெட்ல விடலாம் வந்தேன்… ஆனா இந்த கற்ப்ஸ் எஸ்கேப் ஆயிடுச்சு…” என்று அவன் புலம்ப, வீட்டுக்குள் சென்றவள் பணத்தை எடுத்துவந்து, அவனிடம் நீட்டி,
“இது ஹாஸ்பிட்டல்ல நீ கட்டினது…. கொடுக்க மறந்துட்டேன்…” என்று சொல்ல, “மாறிடவே மாறாத மார்கழி…” என்று கடுப்பில் சொன்னவன்,
“இந்த மாசம் மாணிக்கத்தின் போனஸ் ஆயிரம் ரூபா…” என்றான் கிண்டலாக.
“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ… செஞ்சிக்கோ… என் கடமை கொடுத்துட்டேன்…” என்றவள் அமைதியாக உட்கார்ந்து வேர்க்கடலையை சாப்பிட, நெப்போலியன் செல்பேசியில் பாடலை ஒலிக்கவிட்டான்.
‘இத்னா கரோ னா முஜே ப்யார்….
இத்னா கரோ னா முஜே ப்யார்…
ஸாத்தியா….’ என்று எஸ்.பி.பி உருகிப்பாட அதுவரை அமைதியாக இருந்த ஆர்கலி,
“முஜே பதா ஹை தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம் ஹவுர் ஹிந்தி…” என்று ஹிந்தியில் சொல்ல “ஹே..! இவ்வளவு பேச தெரியுமா…?” என்றாள்.
“நேனு பாக மாட்லாட்தானு..” என்று அவன் பேச ஆர்கலியின் முகத்தில் ஆச்சரியம் வந்து தெளிக்க, “சூப்பர்ப்பா…. இவ்வளவு லேங்க்வேஜஸ் தெரியுது… அப்புறம் ஏன் படிக்கல…?” என்று அவள் சந்தேகம் கேட்க,
“ஏன் படிக்கனும்னு தெரியல அதான்..” என்றான்.
“என்ன சொல்ற நீ..?”
“ஏன் படிக்கனும்னு தெரியல…. அப்போ வழி இல்ல…இ ப்போ வயசு இல்ல… அப்போ நாங்க கோயம்பேடுல இருந்தோம்… தினமும் என்ன வருதோ அதுல வாழ்வோம்… ரொம்ப செலவு பண்ண மாட்டோம்… பணம் தான் முக்கியம்னு அதை சேமிச்சோம்… வரதனுக்கு மட்டும் படிப்பு ரொம்ப முக்கியம்னு அப்போ தெரிஞ்சிருந்தா கண்டிப்பா என்னைப் படிக்க வைச்சிருப்பார்…”
“படிக்கிறதுக்கு வயசே கிடையாது… இப்ப நினைச்சா கூட படிக்கலாம்..”
“ஆனா நினைக்க முடியலையே… ப்ச் இப்ப எதுக்கு சும்மா படிப்பு படிப்புன்னு அதைப் பத்தியே பேசுற..” என்றான் எரிச்சலாக. அது இல்லாமை விளைத்த இயலாமை தந்த எரிச்சல்.
“ஓகே விடு… .எப்படி இவ்வளவு மொழி கத்துக்கிட்ட…. எனக்கு இங்கிலிஷ் தமிழ் தவிர ஒன்னும் தெரியாது…”
“கத்துக்கிறதுல என்ன இருக்கு சப்ப மேட்டர்…. எல்லாம் அவங்க பேசுறதைக் கவனிச்சா தானா வரும்..” என்றான்.
இப்பொழுது முழுவதுமாக இருளடர்ந்து இருக்க, இருவரின் முகமுமே அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. சில்லென்ற காற்று வேறு. இவள் தலைக்குக் குளித்திருக்க, இன்னும் குளுமையாக உணர்ந்தாள். அவன் ஷஃபிலில் பாடல்களை ஒலிக்க விட்டிருக்க, இப்போது,
‘மௌனமான நேரம்…
இளம் மனதில் என்ன பாரம்…’ என்று பாடல் ஓட, உண்மையில் அது மௌனமான நேரம் அல்ல இருவருக்குமிடையே ஒரு இயல்பான உரையாடல்.
“இப்ப நம்ம என்ன செய்றோம் சொல்லு…?” என்று நெப்போலியனின் கேள்விக்கு, “சும்மா தான் பேசிட்டு இருக்கோம்…” என்றாள் ஆர்கலி.
அவனோ குறுஞ்சிரிப்பும் குறும்பும் கூடிய வண்ணம், “இல்ல நம்ம கடலை போடுறோம்..” என்று சொல்லி வேர்க்கடலையின் கூட்டை உடைத்து கடலையை வாயில் போட்டுக்கொள்ள,
“அடப்பாவி…” என்றவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வர வெகு நாள் கழித்து வாய் விட்டு சிரித்தாள்.
ஆர்கலி அப்படி சிரித்து பார்த்திராதவன். அவளது சிரிப்பையே ரசித்து பார்த்து, “எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இரு..” என்று சொல்லிவிட, “அதுக்கு யாராவது இப்படி சிரிக்க வைக்கனும்..” என்றாள் புன்னகையோடு.
அடுத்த பாடலாக, ‘தண்ணீர்த் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்… அட தண்ணீர்த் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.. சூரியன் வழுக்கி சேத்துல விழுந்தது..’ என்று ஒலிக்க
ஆர்கலியின் முகம் பார்த்த நெப்போலியன் கடலையை அப்படியே போட்டுவிட்டு போனை எடுத்து ஆஃப் செய்து விட ஆர்கலிக்கு அவன் செயலில், “எதுக்கு ஆஃப் செஞ்ச…?” என்றாள் சிரிப்போடு.
“சும்மா…தான்…”
“எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்… வை…” என்றதும் அவன் மீண்டும் பாடலை ஒலிக்க விட, ஆர்கலி இதழுக்குள் சிரிப்பை அடக்குவது அவனுக்குப் புரிய, தெளிவற்ற வெளிச்சத்தில் தெரிய,
“என்ன சிரிப்பு…?” என்றான் கடுப்போடு.
“அ… அது.. ஹாஹா…” என்றவள் முன்னால் வந்து விழுந்த ஈர முடியை பின்னால் ஒதுக்கியவாறே, அவனை பார்த்து குறும்பாக, “இந்த கன்னுக்குட்டி இப்ப தண்ணீர்த் தொட்டியைத் தேடல போல…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க,
“அதெல்லாம் விட்டாச்சு…” என்றான் வானம் பார்த்தபடி.
“பார்டா…. அதையெல்லாம் விட்டா சாரோட பெயர் என்னாவகுறது…? குடிப்பது என் குடியுரிமைன்னு அவ்வளவு சீன் போட்ட…”
“ஹேய்…! என்ன கொழுப்பா… என்ன ஏன் பெயருக்கு குடியை விடலனாலும் பேசுற… விட்டாலும் பேசுற..” என்றவனுக்குக் கொஞ்சமாகக் கோபம் துளிர் விட, அதையெல்லாம் ஆர்கலி கண்டுகொள்ளவே இல்லை.
“இல்ல உன் பெயரே நெப்போலியன் ஆச்சே. அந்த பெயர்ல ப்ராண்டியோ விஸ்கியோ இருக்குதானே… உன் வரலாறு என்ன ஆகும்..?” என்று கிண்டலாகக் கேட்க,
“ஹே..! என்ன சொல்ற…?”
“உண்மையை சொல்றேன்…. உன் ஹிஸ்டரியெல்லாம் எங்களுக்குத் தெரியும்…” என்று நமட்டுச் சிரிப்போடு சொல்ல “என்னது..?” என்று அவன் அதிர்ச்சியாகி சுவரில் இருந்து குதித்தான்.
“அப்பா சொன்னார்… மாஸ்கோ சொன்னானாம்… ஒரு நாள் இதை சொல்லி அப்பா செம சிரிப்பு….” என்றவளுக்கு இப்போதும் அதை நினைத்து சிரிக்க, இப்போது சுவரில் சாய்ந்தபடி அவளையும் அவள் சிரிப்பையும் பார்த்தவன்,
“ஏதோ என்னால அப்பாவும் மகளும் சிரிக்கிறீங்களே சும்மா இருக்கேன்… அந்த கருப்பு ஆடுக்கு இருக்கு… மாட்டினா அவனை…” என்று கொஞ்சம் வெட்கமும் மெல்லியதாக கோபமும் வந்தாலும் அதையெல்லாம் மறையச் செய்தது ஆர்கலியின் புன்னகை.
மேகம் இன்னும் கருத்திருக்க, இருவருக்குமிடையே இருள் மட்டுமே. வரதராஜன் நெப்போலியனைக் காணாது அவனுக்கு போனில் அழைக்க, “வரேன்.. பக்கத்துல தான் இருக்கேன்..” என்று சொல்லி வைத்தவன் மீண்டும் சுவரில் ஏறி உட்கார்ந்துகொள்ள,
“இங்க தான் இன்னொரு சேர் இருக்கே… எதுக்கு சுவத்துல ஏறுற…?” என்று கடிந்தவள்,
“உங்க அப்பா கூப்பிடுறார் போல… அதான் ஆன்ட்டி இல்லையே.. வந்தா சொல்றேன்… இல்ல நாளைக்கு வந்து வண்டியை எடு…” என்றவளிடம், “பெரிசா வேலையெல்லாம் ஒன்னுமில்ல சும்மாதான் கூப்பிடுறார்…. உன்னைத் தனியா விட்டு எப்படி போறது…?” என்றான்.
அவனது அக்கேள்வியில் அவளது தனிமை முழுமை அடைந்த ஒரு உணர்வு.
“எனக்கென்ன பயம்…. நீ இப்போ வரலன்னா தனியா தானே இருந்திருப்பேன்…” என்றவளிடம், “ப்ச் அது வேற… நான் இருக்கும்போது எப்படி உன்னை தனியா விட்டுப்போறது….?” என்றவன் பிடிவாதமாக உட்கார்ந்திருந்தான்.
“ஆமா…. இந்த வெல்லம் எதுக்கு…?” என்று கையில் வெல்லத்தை வைத்தபடி நெப்போலியன் ஆர்கலியிடம் கேட்க
“அது சில பேருக்கு கல்லை ஒத்துக்காது… செரிமானத்துக்கு வெல்லம் சாப்பிடுவோம்… இல்லன்னா தலைவலி வாந்தின்னு வரும்…” என்றதும், “ஓஹ்… எனக்குக் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா…” என்று அவன் கேட்க, “டீ… காஃபி எதாவது குடிப்பியா…?” என்றாள்.
“நான் குடிப்பேன் தான்… நீ குடிக்க மாட்ட இல்ல… எனக்கு மட்டும் போடுறதுன்னா வேண்டாம்…. தண்ணிமட்டும் தா…” என, சரி என்று உள்ளே போனவள் சிறிது நேரத்தில் தண்ணீரோடு வந்தாள்.
இருவரும் பொதுவாகப் பேசிக்கொண்டு இருக்க, ஆர்கலி மீண்டும் வீட்டினுள் சென்று இரண்டு பேருக்கும் இஞ்சி, கொத்தமல்லி போட்டு பாலில்லாமல் ப்ளாக் டீ தயார் செய்திருந்தாள். அவனிடம் சூடாக அதை நீட்ட, அவன் அவளையே பார்க்க, “நான் ப்ளாக் டீ குடிப்பேன்..” என்றதும் அவன் எடுத்துக்கொள்ள,
“ஹே..! சூப்பரா இருக்கு… ப்பா என்ன வாசனை…..” என்றான் டம்ப்ளரை நுகர்ந்தபடி.
“இத்தனை நாள் வெறும் டீத்தண்ணியைக் கொடுத்து வரட்டின்னு ஏமாத்திருக்கான் அந்த பாய்… இருக்கு அவனுக்கு நீ மட்டும் ஒரு டீ ஸ்டால் போட்டன்னு வை பெரிய ஆள் ஆகிடுவ…” என்றான் பாராட்டாய்.
அந்த இரவுக்கும் இனிய பொன்மாலைக்கும் இடையேயான இருள் பொழுதில், காற்றோடு கலந்துவிட்ட தேனீரின் நறுமணமும் அதன் சுவையும் இனிமை சேர்க்க இன்னும் இதம் சேர்க்க இடியோடு மழை பொழியத் துவங்கியது.
“அச்சோ… மழை…” என்றபடி அவள் எழுந்துகொள்ள, “டீ சூப்பர் மார்கழி… மழை வந்துடுச்சு நான் கிளம்புறேன்..” என்றபடி வேகமாக டீயை வாயில் ஊற்றிக் கொண்டவன் சுவரில் இருந்து குதிக்க,
அவனோ, “இல்ல நான் வீட்டுக்குக் கிளம்புறேன்…” என்றான் மழையில் நனைந்து கொண்டு.
“குடையாச்சும் வாங்கிட்டுப் போ…”
“அதெல்லாம் வேண்டாம்… நீ கதவை சாத்திட்டு பத்திரமா இரு…” என்று அவன் கிளம்பப் போக, “முதல்ல தனியா எப்படி இருப்பன்னு யாரோ பேசினாங்க.. இப்ப தனியா விட்டுப் போற….” என்று ஆர்கலி அவனுக்குத் தடை சொல்ல,
நெப்போலியனுக்கு வெளியே நின்று பேசுவது என்பதெல்லாம் பெரிதல்ல. ஆனால் ஒரு பெண்ணோடு, இருளும் இடிமழையும் இருக்கும் நேரத்தில் தனியாக வீட்டுக்குள் இருப்பது கண்டிப்பாக மற்றவர் பார்வையில் தவறாகப்படும் எனப் புரிந்தவன்,
“இப்ப தனியா விடலன்னா தான் தப்பு.. மங்குனி மார்கழி…” என்று அவன் வேகமாக மழையில் நனைந்தவாறே சென்றுவிட “ச்சே.. மழையில ஓடுறான்… கொஞ்சம் மழை விட்டதும் போனா… என்ன..?” என்ற எண்ணம் மனதினுள் தோன்ற
ஆர்கலிக்கோ இசைக்கோர்வை ஒன்று இடர் வந்து இடையில் நின்றுவிட்ட உணர்வு. அவனுடன் அவன் தந்த இதமும் இசையும் நிறைந்த தருணங்கள் போய்விட, அவள் அப்படியே கதவில் சாய்ந்தவாறே வெளியே வெளுத்துவாங்கிய மழையை பார்த்தபடி மழைத்துளிகள் முகத்தில் தெறிக்க உட்கார்ந்துவிட்டாள்.
அப்போது பார்த்து அவளுக்கு குறுஞ்செய்தி வர, செல்பேசியில் மணி பார்க்க, கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அவனோடு உட்கார்ந்து பேசியிருப்பது அவளுக்குப் புரிய, இதுவரையில் காரியமின்றி காரணமின்றி இப்படி ஒரு இத நிலையில் இயல்பான உரையாடல் எல்லாம் அவளுக்கு சாத்தியமானதாக இருந்ததில்லை.
அவன் கொடுத்து சென்ற முழுவலான முழுமையான தருணங்கள் தத்தைக்குள் தண்மழை பொழிய செய்திருக்க, அவன் விட்டு செல்ல, அந்த விலகலில் ஏனோ ஒரு வேறுபாடு உணர்ந்தாள். அதுவரை எத்தனையோ தனிமைத் தருணங்களைக் கடந்தவளால் அதைக் கடக்க முடியவில்லை. தவிப்பு ஒன்று தவிர்க்க முடியாமல் உருவாகிட மங்கைக்குள் மையல் மாற்றம் கண்டதோ என்னவோ..?
அவன் தூரம் சென்றதால் நேரம் கூட மறந்து அவள் அங்கேயே உட்கார்ந்திருக்க, வீட்டினர் வரவும் தான் நிதானத்திற்கு வந்தாள்.
நாட்கள் வேகம் கண்டிருக்க, ரஞ்சித் இப்போது கடைசி செமஸ்டரில் இருந்தான். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகி இருந்தான். ஆர்கலிக்கு ஏற்ற வகையில் மாணிக்கவாசகம் வரன்கள் பார்க்க அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. அப்போதுதான் தரகரிடம் பேசிவிட்டு உட்கார்ந்திருந்த மாணிக்கம் மனைவியிடம்,
“யாரையும் அவளுக்குப் பிடிக்கலங்க்றா… என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல..”
“பேசாம ரவியை அவளுக்குப் பார்க்கலாமாங்க…? என் மேல கோவம் இருந்தாலும் ரவி ரத்னா கிட்ட நல்லா தானே நடக்குறா…”
அவர் அமைதியாக இருக்க “என்ன யோசிக்கிறீங்க… ரவி ரொம்ப நல்ல பையன்….. அவன் ஆருவை நல்லா வைச்சிப்பான்..” என்று வள்ளி சொல்ல, “ம்ம்.. அவன் நல்ல பையன் தான்.. ஆனா ஆரு என்ன சொல்வா தெரியலையே…. எதுக்கும் நாளைக்கு அவ கிட்ட இதைப் பத்திப் பேசுறேன்…” என்றார் மாணிக்கவாசகம்.