அன்று ஆர்கலி வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டிருந்தாள். தலையில் காயம் ஏற்பட்டபோது ஒரு நாள் அப்படி செய்திருக்கிறாள். இப்போது மீண்டும் அப்படி செய்துவிட்டு வீட்டிலேயே தன் கண்முன் இருந்த லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் உடல் நலம் தான்.. ஆனால் உள நலம்..??
உடலின் பார்வை என்னவோ திரையில் இருந்தாலும் உளப்பார்வை அவளுக்கு இங்கில்லை. அகம் அலைப்பாய்ந்து கொண்டிருந்தது. வாழ்நாளில் எதை செய்யக்கூடாதென நினைத்திருந்தாளோ அதைத்தான் இந்த ஆறு மாதமாக செய்து கொண்டிருக்கிறாள் ஆர்கலி. அப்பாவிற்கு தன்னால் சிறு வருத்தமும் தரக்கூடாது என்று நினைத்தவள் இப்போது தெரிந்தே அதை தந்து கொண்டிருந்தாள்.
தெரிந்து செய்தாலும் தெளிவின்றி செய்தாள்..!
அவள் அகம் அவள் பேச்சுக் கேட்பதில்லை. அகம் சொல்லும் பேச்சை அவள் கேட்க விரும்பவில்லை. அப்பா சொல்லும் வரன்கள் நல்ல வேலையில், பார்ப்பதற்கும் அழகாய், நல்ல குடும்பமாய் இருந்தாலும் கூட அவள் மனம் அவர்கள் மேல் ஈடுபாடு கொள்ளவில்லை. முன்பு கூட மாப்பிள்ளையைப் பற்றி எதாவது கேட்டு தெரிந்து அதன் பின் மறுப்பாள்.
இப்போது யாரையுமே பிடிக்கவில்லை என்பதை விட யாரை அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதுதான் அவள் பிரதான பிரச்சனையே…! ஏதோ ஒன்று நெப்போலியனை நோக்கி அவளை ஈர்க்கிறது என்பது ஆர்கலிக்குத் தெரிந்தது. அவனுடனான தருணங்களில் தயலுக்குள் தண்மழை என்பது நிச்சயமே..!
ஆனால் அது அடுத்த கட்டம் போகுமா என்பதே ஐயம். போக வேண்டுமா என்பதும் ஐயமே..! இத்தனைக்கும் பெரிதான பழக்கமெல்லாம் இல்லை தான். ஆனால் பேசும் நொடிகளில் அவன் செயல்களில் ஆர்கலி அவளைத் தொலைத்தாள் என்பது அவள் மனம் அறிந்த ரகசியம்.
அதனாலயே அவன் இருந்தால் அந்த இடத்தில் இருப்பதையே தவிர்க்கத் தொடங்கினாள். இத்தனைக்கும் அவனை சந்திப்பதெல்லாம் அரிதானது தான். ஆனால் அதனையும் தவிர்த்தாள். எப்போதாவது ஷ்யாம் வீட்டில் அவன் பேச்சுக் குரல் கேட்டாலே அறைக்குள் தன்னை அடைக்கப் பழகினாள். அறையை அடைக்க முடிந்தவளால் அகத்தை அடைக்க முடியவில்லை.
அவள் என்னதான் விலகினாலும் அவன் செயல்களில் மாற்றமில்லை. எப்போது அவள் எதிர்ப்பட்டாலும் அவன் இயல்பாகவே பேசினான். இதுவேறு இன்னும் குழப்பியது அவளை. அவன் இயல்பினை இவள் தவறாக நினைக்கிறாளோ என. தனக்கு மட்டுமே இந்த ஈர்ப்பும் தவிப்புமோ என்ற எண்ணம் வேறு. அது அவள் வேர் வரை சென்று தாக்க இன்னமும் உடைந்து போனாள்.
எல்லாரிடமும் மேலோட்டமாகப் பேசுபவளால் மனவோட்டத்தை யாரிடமும் பகிர முடியவில்லை. அகவயமான உணர்வுகள் எல்லாம் அவளுள் தான்..! ஒரு நாள் ஆர்கலி கற்பகத்திடம் அவர் வைத்த குருமா பற்றி கேட்க அவரோ,
“உன் அம்மா சொல்லி தான் ஆரு நானே அதை செஞ்சேன்…. வள்ளியை செய்ய சொல்லேன்..” என்று சொல்லிவிட அவள் தலையசைத்து விட்டு அமைதியாகப் போய்விட, அப்போது கற்பகத்தின் கணவர் தியாகுவிடம் வரதராஜன் கணக்குகளைக் காண்பித்து வர சொல்லியிருக்க, அவரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தவன் இதை கவனித்துவிட்டு,
“ஏன் கற்பஸ் அவங்க அம்மா கிட்ட கேட்க தெரியாமலா உன்ட்ட கேட்குறா…” என்று கடிந்து கொள்ள “டேய்…அவ அம்மா சொல்லி தான்டா நான் அதை செஞ்சேனே…”
“அவங்க அம்மா சொல்லி செஞ்சாலும் நீயா சொல்ற மாதிரி சொல்லனும்… உனக்கு மேல்மாடி கம்மி கற்ப்ஸ்… பாவம் ஆடிட்டர்…”
“போடா படவா… இப்ப என்ன அவளுக்கு நானே குருமா வைக்க சொல்லனும்… அதானே சொல்றேன்… போதுமா..?” என்று சொல்லவும் தான் விட்டான்.
பின்பு கற்பகமே ஆர்கலியைத் தேடி வந்து குருமாவின் செய்முறை சொல்லி, நெப்போலியன் சொன்னதை வந்து சொல்லவும் ஆர்கலியின் சிந்தைக்குள் சில்காற்று தான். இதுதான் ஆர்கலியின் ஆதிப்பிரச்சனையே.அவனது அருகாமை தரும் அமைதி. அவன் பேச்சில் அவள் அடையும் ஆசுவாசம் எல்லாம் மனம் எதிர்ப்பார்த்தது.
ஆனால் அவள் அறிவோ விலகினால் விருப்பம் போகும் என நினைக்க, விலக விலக விழைதல் விஸ்வரூபம் எடுக்க மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள். இப்படி அவள் விசைப்பலகையில் இருகையும் வைத்து எதையோ தட்டினாலும். யோசனையில் உழன்றவளை, வாசலில் இருந்து வந்த நெப்போலியனின் குரல் கலைத்தது.
“வள்ளிம்மா…!” என்று அவன் விளித்திட, ஆர்கலியும் தன் யோசனையில் இருந்து விழித்தாள்.
வீட்டில் யாருமில்லை. அப்பா கடைக்குப் போய்விட்டார். தம்பி தங்கைகள் கல்லூரிக்கு. இப்போது ஆர்கலியும் அவள் அம்மாவும் தான். அம்மா பெண் இருவருக்குமிடையே அமைதி சுவர் மட்டுமே..! வள்ளி மாடியில் துணி காயப்போட சென்றிருக்க, ஆர்கலி ஹாலில் உட்கார்ந்து வேலைப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
நெப்போலியனின் சத்தம் கேட்டு, “உள்ள வா…” என்று குரல் கொடுத்தாள்.
“என்ன வேலைக்குப் போகல நீ..?”
“வொர்க் ஃப்ரம் ஹோம்… வீட்ல இருந்தே வேலைப் பார்க்கிறேன்…”
“ஓஹ் வள்ளிம்மா… எங்க…?” முறைத்தாலும் அவனிடம் பதில் சொன்னாள்.
“மாடியில…”
“இல்ல… மாணிக் இந்த மாத்திரையை வள்ளிம்மாவுக்குக் கொடுக்க சொன்னார்… அதான்…” என்றவனை ஆச்சரியமாகத் தான் பார்த்தாள்.
வள்ளியிடம் அவள் விலகி இருக்க, மாணிக்கமும் தங்கைகளும் தான் அவருடன் ஒட்டுதல். ரஞ்சித் கூட அக்காவிற்காக அளவாகத்தான் பேசுவான். பெரியவனாக அக்காவின் சின்ன வயது கஷ்டங்கள் நினைவில் வர, அதன் காரணி அவர் என்பதால் அவரிடம் அவனுக்கு ஒரு சகஜ நிலை வரவில்லை.
நெப்போலியன் அதன் பின் ஆர்கலியிடம் அவள் அம்மா பற்றி பேசவில்லை. ஆனால் எப்போது ஷ்யாம் வீட்டிற்கு வந்தாலும் இங்கு வந்து வள்ளியைப் பார்த்து பேசிவிட்டே செல்வான். அவனுக்கும் அவர் மேல் வருத்தம் உண்டு தான். இருந்தும் அன்போடு தான் நடந்தான். ஆனால் அனுபவித்தவருக்குத் தான் வலி தெரியும். அருகாமையில் இருப்பவரின் விழிக்கு அதெல்லாம் விளங்கினாலும் வலிக்காதே..!
இப்படி உள்ள ஒருத்தரையே ‘வள்ளிம்மா.. வள்ளிம்மா’ என்று பாசமாகப் பேசுகிறானே, அப்போது அவன் அம்மாவை எப்படி பார்த்திருப்பான்…? ஆனால் அவள் பார்த்ததே இல்லை படங்களில் கூட. அவனைப் பற்றி எவ்வளவோ சொல்லும் மாணிக்கம் கூட அவன் தாய் பற்றி சொன்னதில்லையே.. அவனிடம் பேசக்கூடாது என்று தத்தை தனக்குள் தடை போட்டாலும், அவன் வந்து பேசுகையில் நிச்சயமாக பேசாமல் இருக்க முடியவில்லை.
ஆர்கலிக்கு அவன் அம்மா பற்றி அறியும் ஆவல் தோன்ற, “அது சரி… ஊர்ல இருக்க அம்மாவெல்லாம் பார்க்கிற… உன் அம்மா காட்ட மாட்ற…” என்றவளின் கேள்விக்குப் பதில் சொல்ல நினைத்தவன், பின் அமைதியாகி செல்பேசியை எடுத்து அதில் புகைப்படத்தைக் காட்ட
அதில் வரதன் சிறுவயது நெப்போலியனுக்கு முத்தமிடும் படம் இருக்க, அவளையும் அறியாமல் கண்கள் கலங்கி விட, மீண்டும் மனம் அவனிடம் சாய, அன்பு வெள்ளமாய் அவனை நோக்கிய பாய்ந்திடும் நிலையில் பாவை இருக்க,
“இவங்க தான் என் அம்மா அப்பா எல்லாமே..” என்றவனிடம் மீண்டும் உன் தாயைப் பற்றி சொல் என்று கேட்க விருப்பமில்லை அவளுக்கு.
அதற்குள் வள்ளி மாடியில் இருந்து இவன் வண்டியைப் பார்த்து விட்டு குரல் கொடுக்க, இவன் நேரே அவரிடம் சென்றான். போகும்போது, “போய்ட்டு வரேன் மார்கழி…” என்று அவளிடம் சொல்ல, மங்கைக்குள் மார்கழி காற்று தான்.
அவனுடன் பேசிய பின் அவள் உணரும் இந்த பெயரிடப்படா நிலை என்ன…? என்ற ஆராய்ச்சி அவளுக்கு அயர்ச்சினை வழங்க, ஆராயாமல் அனுபவிக்கத் தொடங்கினாள். அன்றிரவு ஆர்கலி சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் நின்று வேர்க்க வேர்க்க செய்து கொண்டிருக்க,
ரஞ்சித் “ஏன் நீயே செய்ற அக்கா? நல்லா சாப்பிட தெரியுதல்ல அந்த காயுவை செய்ய சொல்லேன்… நீயே தேய்ச்சு சுட்டு பாரு.. முகமே எப்படி இருக்கு…” என்று கடிய, “அவ சுட்டா நாலு நாள் ஆகிடுமேடா… தீய வைச்சிடுவாடா…”
“அவ எப்போதான் அப்ப நல்லா செய்ய கத்துப்பா… ரொம்ப செல்லம் தர நீ… தள்ளு நீ தேய்ச்சு தா… நான் செய்றேன்…”
“ப்ச் விடுடா…. நான் வேகமா செஞ்சிடுவேன்.. நீங்க செய்றதுன்னா அந்திக்கு அஞ்சு மணிக்கு ஆரம்பிங்க… அப்ப கத்துக்கோங்க…. விட்டுட்டுப் போய் செம்க்கு படி… செஃப் ஆக வேண்டாம்..” என்று அவனை விரட்டி விட்டு அவள் சப்பாத்திகளை சுட்டு ஹாட்பாக்கில் வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.
அவள் வியர்வையில் வெகு நேரம் நின்றதால், அந்த அனலில் ஒரு மாதிரி இருக்க குளியல் போட்டு விட்டு சாப்பிட உட்காரப் பார்க்க, காயத்ரியைக் காணவில்லை.
“எங்கடா காயு…” என்று ஆர்கலி கேட்க
ஷாலினி “அவ ஆண்டாள் அக்கா கூட கதைப் பேசிட்டு இருக்கா.. வரேன் வரேன்னு சொல்லி இன்னமும் வரல. எனக்குப் பசிச்சதுக்கா நான் வந்துட்டேன்…” என்று சொல்லவும் ஆர்கலி எழுந்து வாசலைப் பார்க்க, பக்கத்து விட்டு வராண்டாவில் ஷ்யாம், ஆண்டாள், காயத்ரி மூவரும் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருக்க,
“காயத்ரி இங்க வா…” என்று அதட்ட, உடனே காயத்ரி வந்துவிட அமைதியான குரலில், “என்ன பேச்சு உனக்கு இந்த நேரத்தில… அவங்க அண்ணன் தங்கச்சி பேசட்டும்னு வர வேண்டியத்தானே….?” என்று திட்ட, காயத்ரியோ தவறாய்ப் நினைத்துக் கொண்டாள், தன்னையும் ஷ்யாமையும் அக்கா தவறாக நினைக்கிறாளோ என்று புரிந்து உடனே கோபம் வர,
“நான் சும்மா தான் பேசினேன்…. ஏன் நீ கூட தான் அவங்க கூட நெப்போலியன் அண்ணா கூட எல்லாம் பேசுவ….” என்று பதில் பேசியவள் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து விட, ஆர்கலிக்கு மனம் மீண்டும் அதிர, அலைப்பாயத் தொடங்கியது.
இதுதான் அவளது தலையாயப் பிரச்சனை. தலைமகளாக இருப்பதே பிரச்சனை. இதே அவள் ஷாலினி போல் கடைக்குட்டி என்றால் ஒன்றுமில்லை. என்ன செய்தாலும் அறியாப் பிள்ளை. சின்னப்பெண் என்று விடுவார்கள். ஆனால் அவள் செயல் எல்லாம் அப்படி ஏற்றுக்கொள்ளப்படாது. பெரியவளுக்குப் பொறுப்பில்லை என்று பெயராகிவிடும். தலைமகளாக அவள் தவறாக ஏதாவது செய்துவிட்டாள் அது தலைமுறைத் தாண்டியும் தாக்கம் உண்டாக்கும்.
ஆர்கலியால் அவளை மட்டும் யோசிக்கமுடியவில்லை. மூத்தவளாக மட்டுமல்லாமல் முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டியவள். இன்று அவளுக்கு நெப்போலியன் மேல் வந்திருக்கும் உணர்வு உண்மையானதுதான்.
ஆனால் அதற்கு உயிர் தருவது என்பது எளிதல்ல…! பார்த்தவுடன் பட்டாம்பூச்சி.. அதன் பின் காதல் ஆட்சி… எல்லாம் படங்களில் தான். நிதர்சனம் என்பது கற்பனையை விட பயங்கரமானது.
நெப்போலியனுக்கு படிப்பில்லை. தன்னிஷ்டம் போல் வாழ்பவன் என்றாலும் தறிக்கெட்டவன் அல்ல. குடிப்பழக்கம் இருந்தாலும் வரதன் என்ற ஒருவருக்காக எதையும் மாற்றிக்கொள்பவன். குறைகள் இருந்தாலும் அவனை அவனாகவே ஏற்க ஆர்கலியால் முடிந்தது.
ஆனால் நாளை இதே போல் தன் தங்கைகளும் எவனையாவது விரும்பினால்…? எல்லாரும் நெப்போலியனைப் போல் நல்லவர்களாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்..? மீண்டும் உள்ளுக்குள் உளைச்சல் உருவாகியது ஆர்கலிக்கு. அடுத்த நாள் மாலையில், ஆர்கலி பின்வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்க, ஹாலில் வள்ளியும் மாணிக்கமும் இருந்தனர்.
“இன்னிக்கு ஆரு கிட்ட ரவி பத்தி பேசலாம்னு இருக்கேன் வள்ளி…” என்று மாணிக்கம் சொல்ல
“பேசுங்க…. ரவியைப் பிடிச்சாலும் சரி…. இல்ல வேற நல்ல பையனாலும் பரவாயில்ல. அவளுக்கு சீக்கிரம் நல்லபடியா ஒரு கல்யாணம் செய்யனும்..” என்று வள்ளி பேசிக் கொண்டிருக்கையில் ஆர்கலி சரியாக பின் பக்க கதவைத் திறந்து வந்துவிட்டாள். அவரை முறைத்தவள் படபடவென பொறிந்தாள்.
இதுவரைக்கும் அவர் முகம் பார்த்து பேசாதவள், இன்று முகத்திற்கு நேரே அவ்வளவு ஆவேசத்தோடு கத்தினாள். ஏற்கனவே இருந்த உளைச்சல் எல்லாம் உருமாறி உறுகோபமாகிட, கட்டுப்படுத்தவே முடியவில்லை அவளால்.
“என்ன சீன் போடுறியா…? இத்தனை நாள் என்ன பண்ணின நீ எனக்கு… இப்ப வந்து எனக்கு அவனை கல்யாணம் பண்ணனும்… இவனைக் கல்யாணம் செய்யனும் சொல்ற…?”
“ஆரு அவளை விடு…. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு…. உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆகுது… நீ ஒருத்தரைக் கூட பிடிக்கும்னு சொல்ல மாட்ற… அதுக்குப் பதில் சொல்லு…” என்று மாணிக்கம் அழுத்தமாகக் கேட்க
ஆர்கலியோ தனக்கிருந்த மன உளைச்சலில் “பிடிக்கலன்னா பிடிக்கலதான்ப்பா சொல்ல முடியும்… ஏன் இப்படி என்னை உயிர வாங்குறீங்க…?” என்று கத்த, அறைக்குள் படித்துக் கொண்டிருந்த ஷாலினி, காயத்ரி, ரஞ்சித் மூவரும் அக்காவின் சத்தம் கேட்டு வெளியே வந்துவிட,
“என்ன பழக்கம் இது ஆரு இப்படி கத்துற… பிடிக்கலன்னா ஏன் பிடிக்கல சொல்ல மாட்டியா…? எனக்கு என்னமோ நீ வேணும்னு கல்யாணத்தைத் தள்ளி போடுற மாதிரி தெரியுது…. வயசாகிட்டே போகுதுடா உனக்கு…” என்று மாணிக்கம் மன வேதனையில் பேச,
அவளோ அவர் நிலை உணராமல், “கல்யாணம்…. கல்யாணம்… இதே பேச்சு தானா உங்களுக்கு… கல்யாணமாகி நீங்க வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்த பின்னாடியும் எனக்குக் கல்யாணம் செய்யத் தோணுமா….” என்றுவிட்டாள்
“ஆர்கலி….போதும்..!” என்று மகளை மாணிக்கம் அதட்ட,
“ச்சே…. இனிமே கல்யாணம்னு பேச்சு எடுத்தீங்க…. அவ்வளவுதான்…” என்றவள் தன்னிலை இழக்கிறோம், பேச்சில் தன்மை இழக்கிறோம் என புரிந்து தன்னை அடக்கவியலாமல் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
எப்போதும் தம்பி தங்கைக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவள் இன்று முன்கோபத்தால் வீட்டை விட்டு போக, மகளது பேச்சில் மாணிக்கம் நிலைக்குலைந்து போய் உட்கார்ந்துவிட ரஞ்சித் அவரை சமாதானம் செய்துவிட்டு வெளியே வந்து ஆர்கலியைப் பார்க்க அவள் எங்கு போனால் என்றே தெரியவில்லை.
ரஞ்சித் தெருமுனைக்கு வந்து எந்தப்பக்கம் சென்றிருப்பாள் என்று பார்க்க, எங்கோ வெளியே சென்று வந்த நெப்போலியன் கடைக்கு முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு ரஞ்சித்தின் பதட்டமான முகத்தைக் கண்டான். அவனது உடல்மொழியே ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த,
“ஏய் ரஞ்சித்… என்ன நடு ரோட்டுல நின்னு முழிக்கிற…?” என்று கேட்க,
அவனோ பதட்டமாக, “அண்ணா அக்காவை கல்யாணம் செய்ய சொல்லி பெரியப்பா சொன்னாங்க… அதுல அக்கா சத்தம் போட்டு வீட்டை விட்டு கோபமா வெளியே வந்தா…. எங்க போனா தெரியலண்ணா….” என்றான்.
“வண்டியில ஏறுடா…” என்று சத்தம் போட்டவன் “நான் இந்தப்பக்கம் இப்ப தான் வந்தேன்…. கண்டிப்ப அப்போ எதிர்ப்பக்கம் தான் போயிருப்பா…”
“ஒரு வேளை அக்கா கோவிலுக்குப் போயிருப்பாளோ…?”
“ம்ம் கரெக்ட்… கழுத கெட்டா குட்டிசுவரு… கவலை வந்தா கோவில் சுவருதான்… அங்க தான் இருப்பா உன்னொக்கா…” என்று கடுப்பில் சொன்னவன் கோவிலுக்கு வண்டியை விட, ஆர்கலி அந்த மாலை பொழுதில் குளக்கரையில் சுவரில் சாய்ந்தபடி நீரை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அக்காவைக் கண்டதும் ரஞ்சித் அவளருகே ஓடி, “அக்கா…” என்று அழைக்க இன்னும் கோபம் தீராமல் இருந்தவள் அழுகையை வேறு அடக்க முயல, “போ ரஞ்சி…” என்றாள்.
“அக்கா…. வீட்டுக்கு வா…. என்ன ஆச்சு உனக்கு…?” என்று அவனும் கோபத்தில் பேச, “நிம்மதியா விட மாட்டியா என்ன…?” என்று அவள் கத்த,
“ஹே..! என்ன பழக்கமிது… வீட்டுல சண்டைப் போட்டு வரது…. சின்னப்பையன் கிட்ட கத்துற….” என்று நெப்போலியன் அதட்டலாகப் பேச, ‘எல்லாம் இவனால் தான்’ என்ற கோபம் வர
“என்ன பேச வைக்காத… போடா…” என்றாள்.
அவள் கோபம் பார்த்தவன், ரஞ்சித்தின் தோளில் கைப்போட்டு அவனை நகர்த்தி சென்றவன், “டேய் தம்பி… உங்க அக்கா இப்ப சொர்ணாக்காவ மாறிட்டா… அவ எங்கேயும் போக மாட்டா…. கோபம் குறைஞ்சதும் வீட்டுக்கு வருவா… நீ போய் உன் பெரியப்பாவை பார். இப்ப இங்கேயே நீ போய் பேசினா… இன்னும் கோபமாகிடுவா..” என்றான்.
சிறிது நேரம் அங்கேயே நின்ற ரஞ்சித் பின் வீட்டிற்குப் போய்விட, இரவோடு இருள் சேர்ந்த அந்த வேளையில் ஆர்கலிக்கு அருகில் போய் நின்றான் நெப்போலியன். தன் முன் அவன் நிற்பதைக் கண்டவள்,
“என்னைக் கொஞ்சம் தனியா இருக்க விடு…” என்றாள் எரிச்சலாக.
“தனியா விடக் கூடாதுன்னு தான் நிக்கிறேன்…” என்றவன் அவளுக்கு கீழ் இருந்த படியில் உட்கார, ஆர்கலிக்கு அழுகை முட்டியது அவன் பேச்சில்.
வாழ்க்கையில் அதிகம் ஆசைப்படாதவள். பிடித்திருந்தாலும் எட்ட இருந்தே ரசித்தவள் தான். ஆனால் எப்போதும் அதுபோலவே இருந்திட முடியவில்லை. ஆசைப்படுவதையெல்லாம் அனுபவிக்க அவா கொள்ளாதவள் முதன் முறையாக அவனோடு வாழ ஆசைப்பட்டாள். அவன் அன்பு முழுவதும் தனக்கு வேண்டும் என்று பேரவா பேரலையாக எழ, தவித்தாள்.
தன் விருப்பத்திற்கும் பொறுப்பிற்குமிடையே மனம் போர் செய்தது. முதன் முறையாக உள்ளம் விரும்பும் ஒன்றினை உரிமையாக்க அவா கொண்டாள். இதனால் பிடித்தது என்றில்லாமல் இவனால் பிடிக்கிறது என்ற நிலை தான் காதல்..!!
அப்படி தான் ஆர்கலியும் இருந்தாள். அவன் வந்து அமரவும் ஒரு லாளிதத்தில் லயித்தாள். அவன் அருகாமையும், அதில் விளையும் ஆழ் அமைதியும் பாதுகாப்பும் அவன் புறம் இவளை இழுக்க, உறவுக்கும் உள்ளத்து உணர்வுக்கும் இடையே தடுமாறினாள். நிலவிய அமைதியை அவள் அழுகை தடை செய்ய,
“ஏய்… என்னாச்சு…?”
“அப்பாவை ரொம்ப பேசிட்டேன்…” என்றாள் அழுகையோடு.
“ப்ச் இதானா… நான்கூட எங்கப்பனை வாடா போடா கூட சொல்லியிருக்கேன்…. நம்ம அப்பா தானே விடு… பார்த்துக்கலாம்..” என்று அவன் சகஜமாக்க முயல, “இல்ல…. ரொம்ப ரொம்ப்ப்ப்ப்ப பேசிட்டேன்… எல்லாம் என் தப்பு. என்னோட கோவம்…..” என்று இன்னும் அழ,
“அட மார்கழி அழாம சொல்லு… மாணிக் எதுவும் நினைக்க மாட்டார்… ஒரு நாளைக்கு ஆரு ஆருன்னு நூறு தடவ சொல்ற மனுஷன் அவர். ஏன் இவ்வளவு கோபம்… அழுகை… நீ ரொம்ப தில்லான பொண்ணாச்சே…. ஊருக்குள்ள வந்த முதல் நாளே என்னை கேள்வி கேட்ட பொண்ணு எங்கே…?” என்று அவன் சொல்ல,
அவளும் யோசித்தாள், அந்த ஆர்கலி எங்கே என? இப்போதும் எந்த மாற்றமும் இல்லை தான். அவள் அவளாகவே தான் இருக்கிறாள். என்ன அவனோடு இருக்க வேண்டும் என்ற அவாவோடு இருக்கிறாள். அதுதானே அனைத்திற்கும் காரணம். இந்த அழுகை, கோபம், ஆற்றாமை எல்லாம் அதனால் தானே..?!
“எனக்கு எதுவுமே பிடிக்கல..” என்றாள் அழுகையுடனே. அத்தனை நாள் அழுத்தம் தீர அழுதாள்.
“கல்யாணம் பிடிக்கலையா..? உனக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை வேணும்னு சொல்லு… எப்படி இருந்தா உனக்குப் பிடிக்கும்.. நான் பார்க்கிறேன்…” என்றவனிடம் “உன்னைத் தான்டா பிடிக்கும்….” என்று கத்த வேண்டும் போல் தோன்றியது. ஆனால் முடியவில்லை.
“எனக்கு கொஞ்சம் குழப்பம்…” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.
“சொல்லு…”
“சொல்ல மாட்டேன்… இது என் மனசுல உள்ள குழப்பம்…”
“சரி சொல்லாத…. ஆனா உன் மனசு என்ன சொல்லுதோ செய்… வசதியா இருக்க வேணும்னா அறிவு சொல்றதைக் கேட்கலாம்… அப்பவும் மனசாட்சி படி நடக்கனும். ஆனா வாழ்றதுக்கு மனசு சொல்றதைத் தான் கேட்கனும்…. அது நல்லதா கெட்டதா ஆராய மட்டும் தான் அறிவை கேட்கனும்… வேணுமா வேண்டாமா முடிவு செய்ய மனசு சொல்றதை தான் கேட்கனும்…” என்றான்.
“யார் சொன்னா இதை..? கண்டிப்பா இது நீயா சொல்லல…” என்றாள் தெளிவாக.
“பாரு இவ்வளவு அறிவா சொல்ற… இது ஸ்வாமி வரதனாந்தா சொன்னது…” என்றான் சிரிப்போடு.
“தேங்க்ஸ்….” என்றாள் முகத்தை தன் துப்பட்டாவினால் அழுந்த துடைத்துக் கொண்டு.
அவன் பேச்சு அவளை தெளிய வைத்திருக்க, ஒரு புரிதல் வந்திருக்க அது ஒரு புது புலரியைக் கொண்டு வந்தது அவளுள். மனம் சொல்வதைக் கேட்டாள். வேண்டும் என்று நினைத்தாள்..! ஆனால் மனம் ஒரு மந்தி என்பதை மங்கை மறந்தாள். இன்று வேண்டும் என்று வேண்டுவதை நாளை வேண்டாம் என்று சொல்லப்போகிறாள் என அப்போது அறியவில்லை ஆர்கலி.