“என்னாச்சுன்னு சொல்லு வீரா…. தீடீர்னு வந்து கத்துற..?” என்று மாணிக்கம் அவன் சொல்லும் செயலும் புரியாது கேட்க
“கத்தாம என்ன பண்றது… உங்க பொண்ணு வெளி நாட்டுக்கெல்லாம் போறா… அதான் நானெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியமாட்டேன்…” என்றான் கோபமாக.
இவ்வளவுதான் விஷயம் மாஸ்கோவும் நெப்போலியனும் பொதுவாகப் பேசியபடி செல்லும்போது ஆர்கலி அமெரிக்கா போவதை சொல்லிவிட, கொதித்துப் போனான் நெப்போலியன். அவனிடம் அவளும் சொல்லவில்லை. அவள் அப்பாவும் சொல்லவில்லை என்பதை ஏற்கவே முடியவில்லை.
அவ்வளவுதானா நான் அவளுக்கு? என்ற எண்ணம் அகமெல்லாம் நிறைந்திட, கோபம் மட்டுமே பிரதானமாக இருக்க, யோசிக்கவே இல்லை நேராக மாணிக்கத்திடம் வந்து அவனை நிற்க வைத்தது.
“என்னடாநீ….? நான் சொல்லாம இருப்பேனா. நான் அப்பா கிட்ட சொன்னேன்ப்பா… அப்போ நீ கடையில இல்ல…. அப்பா உங்கிட்ட சொல்லிருப்பார்னு நினைச்சேன்பா… உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நான் நினைப்பேனா…?” என்று மாணிக்கம் விளக்கம் சொல்ல, ஆர்கலி அதனை அறைக்குள் நின்றுவேடிக்கைப் பார்த்திருந்தாள்.
‘இவனை எல்லாரும் இப்படி தாங்கிப் பேசுறதுதால தான் இப்படி இருக்கான்’ என்று நினைத்தாள்.
“மாஸ்கோ சொல்லித்தான் எனக்குத் தெரியும்… இல்லன்னா தெரியாது… உங்களுக்கு நான் முக்கியமில்லாம போய்ட்டேன்ல…” என்றான்அறைக்குள் இருந்த ஆர்கலிக்குக் கேட்கும் வண்ணம்.
“அப்படியெல்லாம் இல்ல வீரா….” என்று வெகு நேரம் மாணிக்கம் சமாதானம் செய்த பின்னே அடங்கினான்.
ஆனால் அவன் அகம் அடங்கவில்லை. அதிலுள்ள காதல் மெல்ல மெல்ல குதித்து மேலெழும்ப ஆர்கலி மீது கரை காணா கோபம் பெருக்கெடுத்தது.அடுத்த நாள் வரதராஜனிடம் மரியாதை நிமித்தமாக சொல்லிக் கொள்ள காலையில் அவர்கள் வீட்டிற்குச் சென்றாள் ஆர்கலி. உள்ளே நுழையும்போதே ஒரு முறை அவன் காலையில் ஆடி நின்றது நினைவில் வர, அதில் இதழ்களில் ஒரு இதமான புன்னகையினைத் தர, மலர்ச்சியுடன் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்.
வரதராஜனிடம், “அங்கிள் ஆன்சைட் போக சான்ஸ் வந்திருக்கு…. ஒரு ப்ராஜ்க்ட்காக என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்று சொல்லி காலில் விழ,
“நல்லா இரும்மா பத்திரமா போய்ட்டு வா…” என்றவர் அறைக்குள் சென்றுவரதராஜன் பணம் எடுக்க,அதைக் கண்டு நெப்போலியன்,
“என்ன பணம் எடுக்கிற யாரு வந்திருக்கா…?” என்று கேட்க
“மாணிக்கம் பொண்ணு வந்திருக்கு… அமெரிக்கா போகுதாம்… அதான் ஆசிர்வாதம் வாங்கிச்சு… எப்படி வெறுங்கையோட அனுப்ப…” என்று அவர் இரண்டாயிரம் ரூபாய்த் தாளை எடுத்து வெளியே போக,
நெப்போலியனின்நெஞ்சுக்குள் சில்காற்று.த ன்னைத்தேடி அவள் வந்திருக்கிறாள் என்ற எண்ணம் ஒரு இனிதான சுகம் தர, அவளைக் காணப்போகும் ஆர்வம் அதிகரிக்க,டீ ஷர்ட்ஷார்ட்ஸில் இருந்தவன் வேகமாக ஒரு ஜீன்ஸை அணிந்து கண்ணாடி முன் நின்று தலையை சரிபார்த்தபடி வெளியே வர,
“அப்படி சொல்லாத மா… எனக்கு ஒரு பொண்ணு இருந்தா செய்ய மாட்டேனா வேற நாட்டுக்குப் போற வாங்கிக்கோ..” என்று மல்லுக்கட்டி தர, அவளும் வாங்கிக்கொள்ள, அடுத்த தன்னைப் பார்ப்பாள் என்ற ஆசையும் அதை விடஅதிக ஆர்வத்துடனும் ஆர்கலியை விழிகளில் ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் நெப்போலியன்.
ஆனால் அவள் பார்வையோ அவனை என்ன அவன் பக்கம் கூட பார்க்கவில்லை.
“வரேன் அங்கிள்.” என்று அவள் திரும்பிப் போக,நெப்போலியனுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
ஏற்கனவே தன்னிடம் சொல்லவில்லை என்று குமைந்தவனை இன்னும் கோபம் செய்யும் விதமாக வீட்டிற்கு வந்தும் கூட சொல்லாமல் செல்கிறாளே என்ற எண்ணம் எரிச்சலை தந்தது. ஆர்கலியோ வேறு மாதிரி நினைத்தாள். அவன் வீட்டிற்கும் போயும் கூட தன்னை வாவென்று அவன் அழைக்கவில்லை. அன்றையை அவன் பேச்சிற்கு சிறிதும் வருந்தவில்லை. தன்னையோ தன் மன நிலையோ அவன் பெரிதாக மதிக்கவில்லை என்பது வருத்தத்தைத் தர, கனத்த மனதுடன் தான் வெளியே வந்தாள்.
நெப்போலியனுக்கு அவள் மீது கோபம் வந்ததே ஒழிய, தான் போய் அவளை அழைப்போம், வாழ்த்துவோம் என்ற யோசனை வரவே இல்லை. அவள் சென்றதும் வேகமாக கதவை அடைத்தவன் உடனே ஷ்யாமிற்குப் போன் செய்தான்.
“டேய் அவளுக்கு எவ்வளவு திமிர் தெரியுமாடா..? என்ட்ட அவ அமெரிக்கா போறதை சொல்லவே இல்ல…” என்று நெப்போலியன் உணர்ச்சிவசத்தில் உரக்கக் கத்த,
“கத்தாதடா என்னாச்சுன்னுசொல்லு..” என்று ஷ்யாம் அமைதியாகக் கேட்க“அவ அப்பாக்கிட்ட கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு வெளி நாடு போகப்போறா… நாளைக்குப் போறாடா… ஆனா என்கிட்ட இன்னும் ஒரு வார்த்தை சொல்லல..” என்று கோபத்தில் பேச,
“நீயே போய் பேச வேண்டியது தானே?” என்றான் ஷ்யாம்.
“நான் ஏன் பேசனும்… அவளுக்கு படிச்சிருக்கோம் வேலைக்குப் போறோம்னு திமிர்..” என்றதும் ஷ்யாமிற்கு கோபம் வந்துவிட“வாயை மூடுடா… நான் கூட தான் படிச்சிருக்கேன். இப்படி பேசினா அவ்வளவுதான்…” என்று கத்தினான்.
“என்னடா… உன்னை நான் அப்படி நினைப்பேனா..?” என்று நெப்போலியன் மறுக்க
“என்னை நினைக்க மாட்ட இல்ல… அப்படி அவங்களையும் நினைக்காத…. என்ன பேச்சுடா இது..? எனக்கு சுத்தமா பிடிக்கல…” என்று கடிய,
“அவ வீடு வரைக்கும் வந்தாடா, அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கினா… நான் நடுவீட்டுல தான்டாநிற்கிறேன். ஆனால் அவ என்னை கண்டுக்காமலே போய்ட்டா…” என்றான் அவள் செயலைத் தாங்காதவனாக.
“ஏன் துரைக்கு அவங்களை வான்னு சொல்ல முடியாதா..?”
“டேய் எப்பவும் நான் அப்படியெல்லாம் சொன்னதில்லடா…. உனக்குத் தெரியும் நேத்து நானா தான் இதை தெரிஞ்சிக்கிட்டேன். காதலிக்கிறேன், கல்யாணம் பண்றேன்னு அவ தானடா வந்து சொன்னா… ஆனா வெளிநாடு போற விஷயத்தை எங்கிட்ட சொல்லவே இல்லடா…” என்றான் அவள் மீது வருத்தமாக.
“அவங்க சொன்னா… நீயா எதுவும் செய்ய மாட்டியா…?
“என்ன என்ன செய்ய சொல்ற..?”
“நான் ஒன்னு சொல்றேன் செய்றியா…?”
“என்ன செய்யனும்..?”
“நேரா ப்ளைட் பிடி காசிக்குப் போயிடு…”
“எதுக்குடா…?”
“அங்க தான்டாநீ இருக்கனும்… இப்படியே போனா அதான் நடக்கும்… இவ்வளவு கொழுப்போட இருந்த நண்பா மவனே காவி தான்டா கட்டனும்…”
“ஷ்யாம் வேண்டாம்டா…” என்று நெப்போலியன் பல்லைக் கடிக்க“ஓஹ் சாமியார் வேண்டாமா… அப்போ அகோரியா மாறிடுறியா….” என்றான் மிகவும் நக்கலாக.
“ஏய் என்ன கிண்டலா… மவனே நேர்ல இருந்த உன் கன்னம் சிவந்திருக்கும்..”
“சிவக்கும் சிவக்கும்டா… ஏன்டா பரதேசி ஒரு பொண்ணுக கிட்ட லவ் யூ சொல்ல முடியல..அதுவா வந்து சொன்னாலும் அதிகப் பிரசங்கித்தனமா பேசி அதை கடுப்பேத்தி கன்னத்துல அடி வாங்குற அளவுக்கு வந்துட்ட. திரும்பவும் அதே கொழுப்போட தான் இருப்பேன்னா என்ன அர்த்தம்…?” என்று ஷ்யாம் சற்று சீரியசாகப் பேச
“என்னை அடிச்சது அவ தானேடா…. ஒரு ஆம்பிளைன்னு கூட பார்க்காம என்னை அடிச்சா…”
“டேய் நீ மட்டும் என் பக்கத்துல இருந்த வாயில எதாவது ஊசியைப் போட்டு இருப்பேன்டா…. அடிக்கிறதுல என்ன ஆம்பிள பொம்பள கோவம் வந்தா எல்லாரும் அப்படி தான் பண்ணுவாங்க…. இப்படியே நீ பேசு… உன் எதிர்காலம் வெளங்கிரும்…” என்ற ஷ்யாமின் பேச்சில் கடுப்பானவன் போனை கட் செய்து சைலெண்டில் போட்டான்.
ஷ்யாம் மீண்டும் முயற்சிக்க அழைப்புகள் எடுக்கப்படவே இல்லை. ஆர்கலி அமெரிக்கா செல்லும் அந்த நாளும் வந்தது. வரதராஜன் அவர்கள் ட்ராவல்ஸிலேயே கார் எடுத்துக்கொள்ள சொல்ல, நெப்போலியனுக்கு பேரலையாக ஆவல் கிளர்ந்து எழ, போகும் வழியிலாவது இல்லை போகும் முன்னாவது அவள் ஏதேனும் பேசிட மாட்டாளா என்ற ஏக்கத்தில் அதன் தாக்கத்தில் அவனே அன்று காரை எடுத்தான்.
ட்ரைவர்கள் இல்லா நேரம் நெப்போலியனும் ட்ராவல்ஸீற்காக கார் எடுப்பது இயல்பு என்பதால் அது வரதராஜனுக்கு ஒன்றும் வித்தியாசமாகப் படவில்லை. ஆர்கலிக்கு நெப்போலியனை காரில் கண்டதும் அவ்வளவு உற்சாகம் தொற்றிக் கொண்டது. எப்போதும் காரில் உட்கார்ந்தாலே உறங்குபவள் அன்று உறங்கவே இல்லை.
காஞ்சிபுரத்தில் இருந்து மீனம்பாக்கம் வரும்வழி வரை விழியெல்லாம் நெப்போலியனின் மீதுதான். அவள் காரின் பின்சீட்டில் ஒரத்தில் உட்கார்ந்திருக்க, நெப்போலியனால் அவளை அடிக்கடி காண முடியவில்லை. அருகில் வேறு மாணிக்கம். எப்படி பார்க்க முடியும்…? சாலையிலேயே அவன் கவனம் இருக்க, ஆர்கலியின் கவனம் அவன் மீதே..
மூன்று மாதங்கள் அவனைப் பார்க்க முடியாது. இப்போதும் எப்போதும் பார்க்கவெல்லாம் இல்லை தான். ஆனால் அருகாமையில் இருக்கிறான் என்ற உணர்விலே அகம் நிறைந்து போய்விடும். நினைத்தால் பார்த்துவிடலாம் என்ற எண்ணம். இனி அது இயலாதே..!
இயலாமை ஒரு வெறுமையைத் தந்தாலும் அது அவள் விரும்பி ஏற்ற ஒன்று. அவள் குடும்பத்திலேயே முதன்முதலில் அமெரிக்கா செல்வது, ஏன் வெளி நாடு செல்வது அவள் தான். அதில் மாணிக்கத்திற்கு அவ்வளவு பெருமை. அவள் அத்தை ஊர்வசி கூட போன் செய்து வாழ்த்தி மகிழ்ந்தார்.