காதலினும் காதல் கேள் 24
நெப்போலியன் பத்திரமாக வீடு வந்து சேரவும் தான் வரதராஜனுக்கு நிம்மதியாக இருந்தது. கண்கள் கூட கலங்கி இருக்க, அதையெல்லாம் நெப்போலியன் பார்க்கவே இல்லை. கவனம் கொள்ளவுமில்லை. அவன் நேராக வீட்டுக்குள் போக,
“நில்லுடா டேய்..” என்று கத்திக் கொண்டே அவன் பின் சென்றவர்,
“மணி இரண்டு ஆகுதுடா… இவ்வளவு நேரமா எங்க சுத்திட்டு வர….போனை ஏன் எடுக்கல…” என்று சத்தம் போட, “சும்மா தான் போனேன்… எனக்குத் தூக்கம் வருது. போ..” என்று சொல்லி அவன் அறைக்குள் சென்றவன் அப்படியே படுத்தும் விட,
சோர்வா வருத்தமோ அதன் அழுத்தமோ என்னவோ செய்ய உண்ணாமலே அன்று உறங்கிவிட்டான். உறங்கும் அவனை பார்த்துக் கொண்டே இருந்தவர் தானும் உண்ணாமல் உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலையில் அவர் சாமி கும்பிடும் போது எழுந்து வந்தவனை பிடித்துக்கொண்டவர்,
“நேத்து நீ எங்கடா போன ஏர்ப்போர்ட்ல இருந்து மாணிக்கத்தை விட்டுட்டு எங்க சுத்த போன நீ..?” என்று இரவில் காட்டாத கோபத்தையெல்லாம் இப்பொழுது காட்டி கேட்க
“அதான் சுத்த போனேன்னு சொன்னியே….சு த்த தான் போனேன்..” என்று சொன்னவன் சோஃபாவில் மீண்டும் படுத்து கொண்டு, “எனக்குப் பசிக்குது சாப்பிட எதாவது தா..” என்றான்.
“புள்ளையா நீ நான் கூட தான் சாப்பிடல.. அதைப் பத்தி ஒரு வார்த்தைக் கேட்டியா…?”
உடனே தாவி குதித்தவன், “என்ன சாப்பிடலையா….? அப்போ மாத்திரையும் போடலையா நீ…? யோவ் ஏன்யா இப்படி டார்ச்சர் கொடுக்கிற…” என்றான் ஆயசமாக.
“யாருடா நான் டார்ச்சர் கொடுக்கிறேனா இல்லை… நீயா…? என்ன அக்கறைக்கு நீ இப்போ என்னை கேள்வி கேட்கிற… உன்னை காணுமேன்னு என் உயிர் நடுங்கினது எனக்குத்தான் டா தெரியும்…. ஊர் சுத்திட்டு வந்திட்டு இப்ப வந்து அக்கறை இருக்க மாதிரி கேட்கிறியா..?” என்று கத்தியவர் தோளில் துண்டை உதறிப் போட்டு உடை மாற்ற செல்ல, அவர் பின்னே அறைக்குள் சென்றவன், அவரை நெருங்க முயற்சி செய்ய
“கிட்ட வந்த பிச்சிடுவேன் ராஸ்கல்..” என்று அவனை அவர் அருகில் விடாமல் செய்ய, நெப்போலியன் சிரித்துக் கொண்டே வரதராஜனை நெருங்கி, அவரை அணைத்துக் கொண்டவன்,
“தெரியாம பண்ணிட்டேன்…. வா சாப்பிடு..” என்று சொல்ல “எங்கடா போனா…?” என்றார் விடாது.
“சுத்த தான் போனேன்… அதை விடு ஏன் சாப்பிடல…. என்னை எழுப்பி இருக்கலாமில்ல…. இப்படி மாத்திரையெல்லாம் போடாம இருக்காத…” என்றான் பாசமுடன்.
“உனக்காகத் தான் தூங்காம இருந்தேன்… நீ வருவேன்னு சொல்லி இருந்தா சாப்பிட்டு இருப்பேன்… உன்னைக் காணோம்ன்ற பயத்துல சாப்பிடவே முடியல…” என்றவரை இறுக்கி அணைத்தவன்
“இனிமே இப்படி செய்ய மாட்டேன் வா… நான் உனக்குப் பிடிச்ச மாதிரி சட்னி வைச்சுத் தரேன்…” என்று சொல்லி அவரை விட்டு விலகினான்.
செல்லும் அவனிடம் எதுவோ ஒன்று குறைவது போல் தோன்ற, அப்போது அதைத் தோண்டித் துருவாமல் விட்டார். ஆனால் அடுத்த வந்த நாட்களிலும் அவன் இயல்பிற்கு மீறிய அமைதியுடன் இருக்க, அவருக்கு ஒரே யோசனை. அவனை நாலு வயதிலிருந்து பார்க்கிறார். இப்படி இருந்ததே இல்லை. எப்போதும் ஒரு துறுதுறுப்பு…குறும்புமென இருப்பவன். இந்த அமைதி அவனிடம் முற்றிலும் புதிதாக இருக்க, கேட்டே விட்டார்.
“டேய் மவனே எதாவது தப்பு பண்ணிட்டியா… வண்டியை எங்காச்சும் இடிச்சுட்டியா….?” என்றார்.
ஏனெனில் அவன் முன்பெல்லாம் காரை எங்காவது இடித்துவிட்டு அவனே கொண்டு போய் மெக்கானிக் ஷெட்டில் விட்டு விட்டு இவரிடம் சொல்லவும் மாட்டான். அதனால் அவர் அப்படி கேட்க அதையும்
“இல்லையே…!” என்று மறுத்தான்.
“அப்புறம் நீ இப்படி இருக்கவே மாட்டியே… ஏன் ரொம்ப அமைதியா இருக்க….?”
“வேண்டுதல்..” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்பவனை வித்தியாசமாகத் தான் பார்த்தார்.
அவனிடம் நேரடியாகக் கேட்டும் எந்த பிரயோஜனமும் இல்லாததால் அவனுக்கு அவரையன்றி வேறு யார் நெருக்கம் என யோசிக்க ஷ்யாம் தான் அவரின் நினைவுக்கு வந்தான்.
உடனே அவனுக்குப் போன் செய்ய, ஷ்யாமிற்கும் நண்பனின் நிலையினால் வருத்தமே அதிகமாக இருக்க, அவனது பிடிவாதம் உடைக்கும் ஒரே நபர் வரதராஜன் தான் என தெரிந்தவன் அவரிடம் அத்தனை விஷயத்தையும் சொல்லி விட்டான். அன்று இரவு இருவரும் சாப்பிட்டு முடித்து டீவி பார்த்துக் கொண்டிருக்க, வரதராஜன் அமைதியாக இருக்க,
“என்ன அமைதியா இருக்க…? காலையில இருந்து என்ட்ட சரியாவே பேசல…?” என்று நெப்போலியன் கேட்க, “ஏன் பேசனும் உங்கிட்ட நான்…. நீ எங்கிட்ட எல்லாத்தையும் பேசறியா..?” என்றார் கடினமான குரலில்.
“என்ன நான் உங்கிட்ட பேசல…?” என்றவன் கேட்கும்போதே அவன் வினாவின் விடை கிடைத்து விட
“ஷ்யாம் கிட்ட பேசினியா..?” என்றான் சரியாக. அவர் அமைதியாக அவனைப் பார்க்க.
உடனே சரண்டர் ஆனவன் அவர் காலின் அடியில் அமர்ந்து அவர் காலைப் பிடித்து அமுக்கி விட்டபடி,
“எனக்கு உங்கிட்ட சொல்ல ஒரு மாதிரி தயக்கமா இருந்துச்சு…” என
“அடிங்க…. நான் நீ எங்கிட்ட சொல்லாம இருந்தேன்னு கோச்சுக்கலடா…. அந்த பொண்ணாண்ட பேசாம அதைக் கஷ்டப்படுத்தி இருக்கல்ல அவ்வளவு கொழுப்பு வைச்சிருக்கு இல்ல உனக்கு..?” என்று கோபமாக சொல்லியவர் காலை உருவிக் கொள்ள, மல்லுக்கட்டி அவர் காலைப் பிடித்து வைத்தவன், இதமாகப் பிடித்தவாறே, குனிந்தபடி,
“அவளுக்கு ரொம்ப திமிர் உன் புள்ளையையே என்னையே அடிச்சிட்டா தெரியுமா…?” என்றான் இன்னமும் அதை ஏற்க முடியாதவனாக.
“எதுக்கு அடிச்சா…?” என்றதும் அவன் நடந்ததை அப்படியே சொல்ல
“உனக்குப் பேசத் தான் தெரியுதே தவிர…எ ப்படி பேசனும் என்ன பேசனும்னு தெரியலடா தடிப்பயலே..” என்று அவர் திட்ட,
“என்ன தெரியல… நான் படிக்கல அதனால யோசிச்சேன்றா… அப்படி குறைஞ்சுப் போனவன்ட்ட எதுக்கு காதல சொல்லனும் அவ…” என்றான் கோபம் குறையாமல்.
“உன்னை ரொம்ப தெளிவானவன்னு நினைச்சேன்டா… நீ பேசுறது உனக்கே முட்டாள்தனமா தெரியல….”
“அந்த பொண்ணுக்கு அவங்கப்பா பார்த்த மாப்பிள்ளை எல்லாம் எப்படி தெரியுமாடா..? அதை விடு அவங்க மாமா மகன் அவங்களுக்கு திருச்சில ஒன்னு இங்க இரண்டுன்னு மூணு கம்பெனி இருக்கு…. ஆனா அந்த பொண்ணு அதையெல்லாம் வேண்டாம்னு சொல்லிடுச்சு… அப்போ எனக்குக் காரணம் தெரியல…. ஆனா உனக்காக அதையெல்லாம் வேண்டாம்னு விட்ட பொண்ணுடா அது…. அதுக்கிட்ட இறங்கிப் போனா என்ன உன் தவுலத்துக் குறைஞ்சிடும்ங்க்றேன்…?”
“அதுவா உன்னை கீழா நினைக்கும்? முட்டாள்..!” என்று கத்தியவர், “தடிமாடா நிற்காதடா…. எதாவது பேசு மத்த நேரம் வாய் கிழியும்….” என்றார்.
“என்ன பேச சொல்ற…. எனக்குத் தான் பேசத் தெரியலன்னு சொல்லிட்டியே….” என்றான் அமைதியாக.
“இந்த கோவ வெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…. அப்புறம் எதுக்கு அந்த புள்ள அமெரிக்கா போனதும் இப்படி உலகமே நின்ன மாதிரி சுத்தினு இருக்கிற நீ….? போனா போடின்னு விட வேண்டியதுதானே..?”
“ப்ச்… அதான் என்னால முடியல…” என்று அவர் முட்டி மீது சாய்ந்தவன், “அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன்…. அவளே சொல்லி இருக்கா… எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கிற ஒருத்தர தான் கட்டிப்பேன்னு… அப்படி இருக்கும்போது எங்கிட்ட சொல்லாம அவ்வளவு தூரம் போய்ட்டா…” என்றான் சோகமாக.
“அந்த பொண்ணும் அப்படி நினைச்சு இருக்கலாமில்ல… எல்லா விஷயத்துல நீதான் முந்திரி கொட்ட மாதிரி நடந்துப்ப…. ஆனா அதுவா உங்கிட்ட பிடிச்சிருக்குன்னு வந்து சொல்லிச்சு… திரும்ப நீதான் சண்டை போட்டிருக்க… அப்போ நீ வந்து சமாதானப் பண்ணுவேன்னு நினைச்சிருக்கும்….”
“நீ என்ன அவளுக்கே வக்காலத்து வாங்குற..?” என்றவன் கோபத்தில் எழுந்து கொள்ள, அவனை இழுத்து தன்னருகில் அமர்த்தியவர்,
“என்னடா இப்படி பண்ற நீ…? அது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்குன்னு மாணிக்கம் சொல்லி நீ கேட்டிருக்க தானே…? அப்போ அந்த பொண்ணுக்காக நீ இறங்கிப் போனா என்ன தப்பு… அதுக்காக வேண்டாம் விடு உனக்காக உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு தானே…?” என்றவரின் கேள்விக்கு அவன் அமைதியாகவே இருக்க,
“இப்ப நான் உங்கிட்ட பேசாம இருந்தவுடனே நீயே வந்து பேசின தானே…. அதே மாதிரி அந்த பொண்ணு கிட்ட பேச என்ன டா…? துரைக்கு ஆம்பிளத் திமிரோ…?” என்றவரை முறைத்துப் பார்க்க,
“அப்புறம் என்னடா சொல்ல சொல்ற..? சரி அதுதான் திமிர் பிடிச்ச பொண்ணாச்சே… அது வேண்டாம் திருவண்ணாமலை போனேன்ல அங்க பரஞ்சோதி இருக்கான்ல, அவன் பொண்ணு ப்ளஸ் டூ படிச்சிருக்கு…. அவன் உனக்குன்னா உடனே கொடுப்பான்… நான் தான் இத்தனை நாள் கொஞ்சம் படிச்ச பொண்ணா இருந்தா உன்னை பொறுப்பா பார்த்துக்குமேன்னு நினைச்சுக் கேட்காம விட்டேன்..” என்று பேசிக் கொண்டே போக,
“யோவ் என்ன சொல்ற நீ… நீ சொன்னா நான் எல்லாம் கேட்டுப்பேன்னு நினைப்பா…?” என்று பதறி அவன் எழ,
“நினைப்பெல்லாம் இல்லடா மவனே… அதான் நிஜம் நான் சொன்னா நீ கேட்ப….. அந்த திமிர் பிடிச்ச ஆர்கலி வேண்டாம்… பரஞ்சோதி பொண்ணு பார்கவியைப் பார்ப்போம் உனக்கு…” என்றவர் உறங்கச் சென்றுவிட, இவனது உறக்கம் தொலைந்து போனது.
வரதராஜன் சொல்வது உண்மைதானே..? அவர் சொல்லை என்றுமே அவனால் மீற முடியாது.
“டாடீடீடீ…” என்று அவர் பின்னாடியே போனவன், “நீ பரஞ்சோதி கிட்ட எல்லாம் பேச வேண்டாம்… மாணிக்கத்துக்கிட்ட பேசு…” என்றதும்
“அதுக்கு முதல்ல அந்த பொண்ணுக்கிட்ட பேசி நீ சமாதானம் பண்ணு… அப்புறமா எங்கிட்ட வந்து பேசு..” என்று சொல்லி அவர் படுத்துக்கொண்டார்
நெப்போலியனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியே ஆர்கலி அமெரிக்கா சென்று முழுதாக ஒரு மாதம் ஓடி விட, அந்த நெடுநல்வாடைப் பொழுதுகள் பெரிதான மாற்றத்தை அவனிடம் கொண்டு வந்தன. அதுவும் வரதராஜன் பேசிய பின் அவனிடம் ஒரு புதுத் தெளிவு புலர்ந்துவிட, ஒரு பேராவல் உள்ளுக்குள் எழ, ஆர்கலியைக் காண வேண்டும், அவளிடம் பேச வேண்டும் என்று உள்ளம் உந்திட, காதல் மிகுந்திட நினைத்தான்.
முதல் முறையாகப் பேசத் தயக்கம் கொண்டான். எத்தனையோ முறை அவளிடம் பேசி இருக்கிறான். சண்டை இட்டு இருக்கிறான். ஆனால் மீண்டும் பேசும்போது பெரிதான தயக்கங்கள் வந்ததில்லை. இன்று என்னவோ அப்படி ஒரு நிலை. காலையில் இருந்து எப்போதடா இரவு வரும் என்று எதிர்ப்பார்த்தான். அப்போதுதானே அங்கே புலரும். இரவில் மொட்டை மாடிக்குச் சென்றவன் ஆர்கலிக்கு வாட்ஸப்பில் கால் செய்ய, அவள் எடுக்கவே இல்லை.
முதல்முறையே மனம் சுணங்கிட, அதை விட ஆவல் அதிகமாகிட, காதல் மீகிட மீண்டும் மீண்டும் அழைப்பெடுக்க, அவள் எடுக்கவே இல்லை. வேண்டுமென்றே எடுக்காமல் இருக்கிறாளோ என்று தோன்ற, அவ்வளவு கோபம் பெருகியது. போனை கடுப்பில் அணைத்து வைக்கப் போகும் சமயம்,
அவன் கடைசியாக விடுத்த அழைப்பு எடுக்கப்பட்டு “ஹலோ…!” என்று ஆர்கலியின் குரல் சோர்வாக அக்கரையில் ஒலிக்க, அவள் மீது இவனுக்கு அக்கறைப் பிறந்தாலும் அவளாகப் பேச வேண்டும் என்று அமைதியாக இருக்க
“எனக்குத் தூக்கம் வருதுப்பா…” என்று அவள் குரல் ஒலிக்க,
“ஏய்…. இந்த நேரத்தில என்ன தூக்கம்…? உடம்புக்கு முடியலையா..?” என்று நெப்போலியனின் குரல் காதலிலும் கனிவினிலும் கலந்து ஒலிக்க
அப்பா என்று நினைத்து அதுவரை யாரென பார்க்காமலே பேசியவள் அவன் குரலில் பதறி எழுந்தாள் ஆர்கலி. உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்து அப்படியே போர்வையை சுருட்டிக் கொண்டு மெத்தையில் உட்கார்ந்து,
“இல்ல நேத்து நைட் ஷிஃப்ட் எனக்கு அதான்…” என்றவளின் குரல் கலங்கி இருந்தது.
விழிகளிலும் கண்ணீர் சேர்ந்து கொள்ள, அவ்வளவு மகிழ்ச்சி என்பதை விட ஒரு வித நிறைந்த நிம்மதி. வார்த்தையே இல்லா வாஞ்சை நிலை..! இருவருக்குமிடையே மௌனம்.
அவளுக்கு அவனாகவே அழைத்து விட்டான் என்பது அகத்தினில் அருவியைப் பொழியைச் செய்திருக்க, அவனுக்கோ அவள் குரல் கேட்ட பரவசம்.
“சொல்லு… எப்படி இருக்க..?” என்றவளின் குரல் உடைந்து விட “அழறியா..?” என்றான்.
“நீ அழவைக்கிற..” என்றாள் பதிலுக்கு.
பேசக் கூட முடியாமல் ஒரு அழுகை வர அது ஆனந்தமா இல்லை ஆதங்கமா என இனம் காணா முடியவில்லை. ரொம்பவும் அவளை வருத்திவிட்டோமோ என்ற எண்ணம் அப்போது பிறக்க,
“எனக்கு உன்னைப் பார்க்கனும் டி..” என்றான்.
“என்ன… எப்போ..?”
“இப்போ…” என்றவன் உடனே விடியோ கால் செய்ய, உடனே ஆன் செய்தாள்.
முதலில் அவள் கண்களைத் தான் பார்த்தான். நீர்த் தழும்பி நிற்கும் தடாகமாகத் தயலின் கயல் விழிகள்.
“அழாதடி….” என்றான் பொறுக்கமாட்டாமல்.
“அழல ஆனா இப்போதான் உனக்கு என் ஞாபகம் வந்துச்சா…?” என்று கேட்கும்போதே அழுகை வந்துவிட
இந்த முறை நெப்போலியனுக்குப் பதிலுக்குப் பதில் பேசி சண்டையிட மனமே இல்லை. முன்பாவது சண்டையிட்டு அவள் முகம் பார்க்கலாம். இப்போது அது முடியாதென்பதால் அடக்கியே வாசித்தான்.
“உன் ஞாபகம் எப்பவுமே எனக்கு இருக்கும்… ஆமா ஏன் இவ்வளவு வெளிச்சம் கம்மியா இருக்கு.. பெரிய லைட்டா போடு…. எனக்கு உன்னைப் பார்க்கனும்..”