“அது தூங்கறதுக்காக எல்லாம் ஆஃப் பண்ணிட்டேன்….” என்றவள் விளக்குகளை ஒளிர விட, போர்வைக்குள் அவள் முகம் மட்டுமே வெளியே தெரிந்தது.
“அழகா இருக்க…” என்றான் முதல் முறையாக.
“என்ன….!” என்று ஆச்சரியமாகக் கேட்டவள், “எல்லா பசங்களும் சொல்றதுதான் இது..” என்று அலட்சியமாக சொல்ல
“எல்லாரும் சொல்வாங்க தான்… ஆனா அவங்க நிறைய பொண்ணுங்களைப் பார்த்திருப்பாங்க… ஆனா நான் பார்த்த ஒரே பொண்ணு நீதான் அதுவும் அழகான பொண்ணு நீதான்…” என்றான் அவள் முகத்தை விட்டு பார்வை அகலாதவனாக.
போனை அவன் முகத்திற்கு நேரே வைத்திருக்க, அருகே அருகே முகம் பார்ப்பது போல் ஒரு உணர்வு.
“ஒஹ் அப்போ கற்பகம் ஆன்ட்டி ஆண்டாள் அவங்களாம் யாரு…?”
“அடியே அல்லி ராணி அவங்களாம் எனக்கு ஷ்யாம் அம்மா, ஷ்யாம் தங்கச்சின்னு தெரிஞ்சவங்க… அவங்களை அம்மாவா தங்கச்சியா பார்க்கத்தோணும்… ஆனா எனக்கு ஒரு பொண்ணைப் பார்க்கற ஃபீலிங் கொடுத்தவ நீதான் டி…!” என்றான் காதலுடன்.
அவள் அமைதியாக அவன் பேச்சை ரசித்திருக்க, “ஏன் டி… நைட் ஷிஃப்ட் எல்லாம் பார்க்குற… சும்மாவே நீ மயங்கி விழுவ….” என்று கடிந்து கொள்ள,
“அது என்னோட வேலைப் பார்க்கறவங்க நேத்து வெளியே போகனும்னு கேட்டாங்க… அதனால அவங்க ஷிஃப்ட் நான் மாறிக்கிட்டேன்…”
“ஒஹ்… சேவையா…”
“ஹா ஹா அப்படி கூட வைச்சிக்கலாம்… ஆமா இப்ப அங்க டைம் ஆகியிருக்குமே தூங்கல…”
“தூங்கல உங்கிட்ட பேசனும்னு வெயிட் பண்ணினேன்…”
“அதான் பேசிட்டியே…. போய்த் தூங்கு….”
“எனக்கு இன்னும் பேசனும் நிறைய..”
“எங்க இருக்க நீ…? ஒரே இருட்டா இருக்கு…?”
“நம்ம வீட்டு மொட்டை மாடி எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்…”
“பனி கொட்டும்டா…. உள்ளே போய் படு… போ..” என்று அக்கறையில் அவள் அதட்ட, “ஆமா நான் என்ன காஷ்மீர்லயா இருக்கேன் காஞ்சிபுரத்துல இருக்கேன் டி… பனியெல்லாம் இல்ல…” என்றவன்,
“என் மேல கோவமே இல்லையா உனக்கு…. நீ போன் எடுக்க மாட்ட, திட்டுவன்னு நினைச்சேன்…” என்று உண்மையாக அவன் உள்ளக்கிடக்கையினை சொல்லிவிட
“ஒஹ்… அதான் போன் எடுக்க லேட் ஆனதும் கொஞ்ச நேரம் பேசாம இருந்தியா..?” என்றாள் கோபமான குரலில்.
“ப்ச் ஆமா.. ஆனா நிஜமா சாரி…. என் மேல தான் தப்பு…. எனக்குப் பேசவே தெரியல…” என்றான் அவன் தவறை உணர்ந்து.
“என்ன தீடீர்னு மாறிட்ட…”
“முதல்ல கோபம் பெருசா தெரிஞ்சது… உன்னைப் பார்க்காம பேசாம இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு இப்ப இந்த ஒரு மாசத்துல புரிஞ்சிடுச்சு அதான்…”
“ம்ம் எனக்குக் கூட ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… நீ அப்படி அன்னிக்குப் பேசுவேன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை… என்னால தாங்க முடியல… அதான் அவ்வளவு கோபம். அடிச்சிட்டேன்…”
“நான் அது சாதாரணமாத்தான் பேசினேன்.. உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு இல்ல… அதுவா வந்துடுச்சு….”
“அதுவா எப்படி வரும்…? உனக்குத் தெரியுமா…? நான் யாரையுமே எப்பவும் தரக்குறைவா நினைக்க மாட்டேன்…. உன்னை முன்னாடி அப்படி நினைச்சிருக்கேன் தான்… ஆனா குடிக்கிற, சண்டை போடுற அப்படின்னு தான்… அதைத் தாண்டி வேற எதுவுமில்ல…”
“நான் கல்யாணப் பண்ணிக்க போறவங்க எப்படி இருந்தாலும் என்னால அவங்களை விட முடியாது… அப்படி இருக்கப்ப உன்னை எப்படி படிக்கல்லன்னு நான் குறைவா நினைப்பேன்… நான் சொன்ன அர்த்தமே வேற….எ னக்குக் கீழ இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க, அவங்களும் நாளைக்கு யாராவது தப்பானவனை காதலிச்சுட்டா… அக்கா செஞ்சான்னு என்னை அவங்க எக்ஸாம்பிளா எடுத்துட்டா…” என்றவளை தடுத்தவன்
“புரியுதுடி இப்படியெல்லாம் எனக்கு யோசிக்கத் தோணவே இல்லை… ப்ளீஸ் அதை விட்டுடு… நீ நிறைய கஷ்டப்பட்டிருக்க…. எப்பவும் நீ சந்தோஷமா இருக்கனும்னு நான் நினைப்பேன்… நானே உன்னைக் கஷ்டப்படுத்துவேன்னு நினைச்சதே இல்ல… மார்கழி சாரிடி…” என்றவன் சொல்ல
“ம்ம்” என்றாள் அவனைப் பார்த்தவாறே.
“அதே மாதிரி… படிப்புன்ற விஷயத்தை நீ நமக்குள்ள இழுக்காத…. சின்ன வயசுல இருந்தே என்னோட மிகப்பெரிய டைவெர்ஷன் படிப்புதான்…. என்னோட அம்மா போன பின்னாடி நான் இதுக்குள்ள மூழ்கிட்டேன்… ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் நான்… இன்னிக்கு நான் அமெரிக்காவுல இருக்கேன்னா அது சாதாரணமே கிடையாது… அவ்வளவு பாலிடிக்ஸ் இருக்கும் இங்க எல்லாம்.. அதையெல்லாம் தாண்டி என்னோட திறமை, முயற்சினால நான் வந்திருக்கேன்.. ஆனா அதையெல்லாம் ஈசியா நீ படிச்ச திமிர்னு சொல்லிட்ட…” என்றவளின் குரலில் வலி நிறைந்திருக்க
“நான் படிக்கல இல்லையா அதனால எனக்குப் படிச்சவங்க கஷ்டம் புரியல போல… இதுக்காக ஷ்யாம் கூட என்ட்ட சண்டை போட்டான்… அதே மாதிரி நீங்களாம் படிச்சிருக்கீங்க இல்லை அதனால படிக்காத என்னோட கஷ்டம் உங்களுக்குப் புரியல…” என்றான் அவனுணர்வை அப்பட்டமாக வெளிக்காட்டியபடி.
“நீ திரும்பவும் பழைய மாதிரி பேசுற..” என்றவளைப் பார்த்து ரசனையாகப் புன்னகைத்தவன், “அதையெல்லாம் விட்டுடு. மனசுல வைச்சிக்காத.. இனிமே நான் உன்னைப் படிக்கிறேன்… நீ என்னைப் படி…” என்றான் காதல் மீகிய பார்வையோடு.
“அடடா… நீயாடா இப்படி பேசுற…!” என்று வெட்கம் கொண்டு ஒற்றைக் கையால் அவள் முகம் மூடி அவன் முகம் பார்க்க, “எப்போ நீ வருவ..?” என்று அவன் ஆவலாக கேட்க
“இன்னும் இரண்டு மாசம் ஆகும்…” என்றதும் அவன் முகம் சுருங்கி விட்டாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்.
“ஆமா… அப்படி எங்கிட்ட என்ன இருக்கனு உனக்கு என்னை பிடிச்சிருக்கு?”
“அதுதான் தெரியல எனக்கும்… அப்படி என்னதான்டா இருக்கு உங்கிட்ட… என்னை மயக்கி வைச்சிருக்க…?” என்று அவள் சோம்பல் புன்னகையோடு கேட்ட கேள்வியில் நெப்போலியன் தான் உண்மையில் மயங்கிப் போனான்.
“ஆமா என்ன மயக்கினேன் நான்…? அப்படி மயங்கி இருந்தா எங்கிட்ட சொல்லாம அமெரிக்கா போவியா நீ..?” என்றான் அவன் வாயை அடக்க முடியாமல்.
“அப்படி சொல்லாம வரலன்னா இப்படி நட்ட நடு ராத்திரில மொட்டை மாடியில மல்லாக்க படுத்துட்டு இவ்வளவு எமோஷனோட மிஸ்டர்.நெப்போலியன் பேசி இருப்பாரா என்ன..?” என்று புருவம் உயர்த்திக் கேட்க,
“அதுவும் சரிதான்…” என்றவனுக்கு அவள் பேச்சில் சிரிப்பு வந்துவிட, அடக்க மாட்டாமல் அந்த அர்த்த ராத்திரியில் சிரித்தான்.
“ஹேய்…! கத்தாத…. யாராவது வந்திட போறாங்க..” என்று ஆர்கலி அமெரிக்காவில் இருந்து அலற, “ஹாஹா…!” என்று இன்னும் பலமாக சிரித்தவன்
“இதுதான் நிஜமான கடலைப் போடறது போல…. நான் கூட நினைச்சு இருக்கேன் என்னதான்டா பேசுவாங்க…. இப்படி நேரம் போறதே தெரியாமன்னு…. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமா உங்கிட்ட பேசுறேன்…” என்றவன் “சரி… நீ பாவம் நைட்டெல்லாம் கண்முழிச்சு வேலைப் பார்த்திருப்ப… போய்த் தூங்கு…” என்றான்.
உடனே அவள் ஏக்கமாகப் பார்த்தவள் “திரும்ப எப்ப கூப்பிடுவ…?” என்றாள்.
“அதெல்லாம் கூப்பிட மாட்டேன்…. ஏன் நீயா கூப்பிட மாட்டியா…?” என்றான் விளையாட்டாக.
“உன்னை..” என்று பல்லைக் கடித்தவள், “நீ எப்ப ஃப்ரீனு எனக்கு எப்படி தெரியும்.. நீ வண்டி ஓட்டுவ… .தூங்குவ…. எனக்குன்னா நீ கூப்பிட்டா நான் எப்பனாலும் பேசுவேன்… வேலையா இருந்தா கொஞ்சம் நேரம் கழிச்சுப் பேசுறேன்னு சொல்லப் போறேன்… உங்க அப்பா கூட இருப்பார்… நீங்க தூங்கும்போது நான் டிஸ்டர்ப் பண்ணிட்டா… போடா…” என்று அவள் கோபம் கொள்ள,
“ஹே..! இவ்வளவு விளக்காதடி.… அது உங்கிட்ட பேசினா எனக்குப் பேசனும் போல தோணிட்டே இருக்கு… வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி எனக்கும் உடனே உன்னைப் பார்க்க அமெரிக்கா வரனும்னு ஆசை தான். ஆனா அந்த படத்துல வர மாதிரி இதோ அமெரிக்கா அதோ இந்தியான்னு எல்லாம் எங்கப்பா சொல்ல மாட்டார்… அந்த பொண்ணு இங்க இருக்கும்போது சண்டை போட்டுட்டு இப்ப அமெரிக்கா போகனுமான்னு கழுவி ஊத்துவார்… அதோட எங்கிட்ட பாஸ்போர்ட்டும் கிடையாது… நீ சீக்கிரம் வா…! கல்யாணம் பண்ணிட்டு பேசலாம்…” என்று காதலாக கண்சிமிட்டினான்.
அதன் பின் இருவரும் பேசவில்லை என்றாலும் காதல் கொஞ்சமும் குறையவில்லை. மௌனங்களில் மெட்டிசைத்தது அவர்கள் காதல். இப்படியே ஆர்கலி இந்தியா வரும் நாளும் வந்தது. ரஞ்சித் இப்போது பெங்களூரில் வேலைப் பார்க்க, அவன் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. அதனால் அவனுக்கு விடுப்பு கிடைக்காமல் போக
மாணிக்கம், “ஆரு….! ரஞ்சியால வர முடியல… நீ நம்ம வரதன் ட்ராவல்ஸ்ல வந்துருடா…. இந்த கேப் எல்லாம் வேண்டாம்… அவங்களை எல்லாம் நமக்குத் தெரியாது…” என்று மகளிடம் அவள் கிளம்பும் முன் சொல்ல,
“அப்போ யார் வருவா… என்னை அழைக்க.ப்பா.?” என்று ஆவலுடன் கேட்க,
“தெரியலடா… எப்பவும் ஏர்ப்போர்ட்டுக்கு சுதாகர் தான் போவார்…. அவர் நம்பர் உனக்கு அனுப்பி வைக்கிறேன்… லேண்ட் ஆகிட்டு அவருக்குக் கூப்பிடுடா… இல்லன்னா சுதாகர் கூட அப்பாவும் வரவா..?” என்று மகள் தனியாக வருவாளே என்று அவர் கேட்க
“அதெல்லாம் வேண்டாம்பா… நானே வந்துப்பேன்..” என்றாள்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியவள் ட்ராலியைத் தள்ளியபடி வெளியே வர, “மார்கழி..!” என்ற உற்சாக குரல் கேட்டுத் திரும்பியவள்,
அந்த அழைப்பிலேயே அகம் குளிர்ந்துவிட, பின்னால் திரும்பியவள் அவனை முறைத்தாள்.
“அட நான் எதிர்ப்பார்த்த மாதிரியே வந்திருக்க…” என்றான் அவளது ஜீன்ஸ், டாப்ஸ் ஹூடியைக் கண்டு.
“அன்னிக்கு உன்னைப் பார்த்தப்போ….” என்றவன் அவளை மெதுவாக நெருங்கி, அவள் பதில் பேசும் முன்னே இறுக அணைத்துக் கொண்டான். அன்று அவனால் முடியாததை முயலாததை இன்று முழுதாக நிறைந்த மனதுடன் நிறைவேற்றிக் கொண்டான்.
அவன் அணைப்பை எதிர்ப்பாராதவள் தான். ஆனால் எதிர்க்கத் தோன்றாமல் அப்படியே நிற்க, இறுக்கி அணைத்தவன் உடனே விடுவித்தும் விட்டான்.
அவளோ, “ஏன்டா நீ வரன்னு சொல்லவே இல்ல…. ராஸ்கல்…” என்று கோபத்தில் திட்ட, “சர்ப்பரைஸ் மார்கழி!” என்று சிரிக்க
“மண்ணாங்கட்டி…” என்று அவனை விட்டு விலகியவள் லக்கேஜைத் தள்ளிக் கொண்டு நடக்க,
“ஏய் கொடுடி… நான் தூக்கிட்டு வரேன்..” என்றதும் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக் முதற்கொண்டு அவனிடம் தள்ளி விட்டு, “என்னை டென்ஷன் பண்ணின இல்ல.. ஊருக்குப் போகும்போதும் பண்ணின… இன்னிக்கும் பண்ற….. எல்லாத்தையும் தூக்கிட்டு வா..” என்றவள் முன்னே நடந்து சென்றாள். அவன் சிரிப்புடனே அவளைப் பின் தொடர்ந்தான்.
‘என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா?’