ஆர்கலி உடனே மாடியில் இருந்து படிகளில் வேகமாக இறங்கி ஓட, ரஞ்சித்தும் அக்காவின் பின் ஓடினான். இருவரும் ஓடி வருவதைக் கண்டுவாசலில் உட்கார்ந்திருந்த மாணிக்கமும் வள்ளியும் பதறி,
“என்னாச்சு..?” என்று எழ ஆர்கலியோ ஷ்யாமின் வீட்டில் இருந்து இறங்கி வந்த நெப்போலியனை வழி மறித்தாள்.
“நான் பேசனும்… கொஞ்சம் நில்லு…” என்று சொல்ல அவன் பதிலே சொல்லாமல் நகரப்போக, அவனது கையை அழுத்தமாகப் பற்றியவள்,அருகே வந்த மாணிக்கத்திடம், குரல் அடைக்க
“அப்பா உங்க மாப்பிள்ளையை நிற்க சொல்லுங்க….நான் பேசனும்…” என்று சொல்ல,“என்னாச்சு ஆரு….?” என்று அவர் மகளிடம் கேட்க அவளோ நெப்போலியனைப் பார்த்து நிற்க,
“என்னன்னு நீயாவது சொல்லேன் வீரா… முதல்ல வீட்டுக்குள்ள வா..” என்று அழைக்க,
நெப்போலியனோ எதுவுமே பேசாது, ஆர்கலியின் கையை உதறியவன், “அப்புறம் பேசலாம் மாமா…” என்று சொல்லி முன்னே நடந்து போய்விட, ஆர்கலியோ அவள் கையை உதறிச் சென்றவனை பார்த்து நின்றவள் பின் வீட்டுக்குள் வந்து கோபத்தில் உட்கார்ந்து விட,யாருக்கும் எதுவும் புரியவில்லை. ரஞ்சித்திடம் கேட்க அவன் நடந்ததைசொல்ல,
மாணிக்கம், “ஏன்டா உனக்கு இந்த அதிகப் பிரசங்கித்தனம்…..?” என்று அவனைத் திட்ட,
காயத்ரி“உனக்கு அறிவே இல்லண்ணா… அக்காவுக்குப் பிடிக்காமலா இதெல்லாம் பண்ணுவாங்க….” என்று கடிந்து கொள்ள,
முகம் வாட ஆர்கலியின் அருகே உட்கார்ந்தவன், “சாரிக்கா… எனக்குநீ இவ்வளவு ஹர்ட் ஆவன்னு தெரியல… அவரை நான் தப்பா சொல்லலக்கா….” என்று கையைப் பிடித்து சமாதானம் சொல்ல,
“ரஞ்சி….. எனக்கு உன்னைத் தெரியும்டா ஆனா அவரை உனக்குத் தெரியாதுதானே… நீ ஏன் மேல உள்ள அக்கறையில தான் சொன்னேன்னு எனக்குப் புரியுது… விடு” என்று ஆர்கலி தம்பியைப் புரிந்து பேச,
“அக்கா நிஜமா சாரி…” என்று மீண்டும் அவன் அவளிடம் மன்னிப்புக் கேட்க“ரஞ்சித் விடுடா… சாரியெல்லாம் வேண்டாம்..” என்றவள் தன் அலைப்பேசியை எடுத்து நெப்போலியனுக்கு அழைக்க, அவன் எடுக்கவே இல்லை.
வீட்டிற்குச் சென்றவனுக்கு அவ்வளவு கோபம், குறையாத ஒரு தாழ்வு மனப்பான்மை.
‘நான் ஒன்றுமேயில்லையா..!’ என்ற எண்ணம் அவனைஒன்றுமில்லாமல் செய்ய,அப்படியே சோபாவில் உட்கார்ந்தவன் ஆர்கலி அழைக்கவும், கட் செய்து கொண்டே இருந்தான். அந்த சூழ்னிலை அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அவன் கட் செய்ய செய்ய அவள் விடாமல் முயற்சிக்க,
அவன் ஒரு கட்டத்தில் எடுத்து, “என்னடி வேணும்..?” என்று எரிச்சலோடு கேட்க“எங்க இருக்க…?” என்றவள்,
அவன் “வீட்ல…” என்று சொன்னதும், “அப்பா….நான் அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரேன்…” என்று கிளம்ப,
“நானும் வரேன்டா…” என்று மாணிக்கமும்“அக்கா…. நான் வந்து அண்ணா கிட்ட சாரி கேட்குறேன்…” என்று ரஞ்சித்தும் சொல்ல,
“அப்பா ப்ளீஸ் நான் பார்த்துக்கிறேனே…” என்று மறுத்து அவளே நடந்து போனாள்.
நெப்போலியனோ சோபாவில் காலை நீட்டி கையைத் தலைக்குக்கொடுத்து படுத்திருக்க,கதவுத் திறந்திருக்கஆர்கலி உள்ளே நுழைந்தவள், அவன் முன் போய் நிற்க
“ஏய்… நீ எதுக்கு வந்த…?” என்றுஅவளை எதிர்ப்பார்க்காமல் அவன் அவசரமாக எழுந்து கொள்ள, ஆர்கலியோ அவனுக்கு பதில் எல்லாம் சொல்லாமல் பிடித்துக் கொண்டாள்.
“என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல அவன் என்ன வேணும்னாலும் சொல்லட்டும்…” என்றவளை நிறுத்தியவன்“ஓ..! எவன் என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கனுமா..?” என்று பதில் பேச,
“வாயை மூடல என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாதுடா… அவன் சொன்னா நீ என்ன சொல்லனும். நீ பார்க்கிற மாப்பிள்ளையை விட நான் அவளைநல்லா பார்த்துப்பேன்…. அப்படின்னு சொல்லனும்.. நான் உன்னை நில்லு நில்லு சொல்லியும் வாசல்ல வந்து உன் கைப்பிடிச்சு கத்தியும் அப்படியே உதறிட்டுப் போற…. அப்போ யாராவது இப்படி பேசினா நீ என்னை இப்படி தான் விட்டுட்டுப் போவியா …?”
“அவன் பேசினது மட்டும் சரியா..?”
“சரியாத்தான் பேசினான். எந்தவொரு நல்ல தம்பியும் அப்படி தான் பேசுவான்… ஏன் உனக்கே ஒரு அக்காவோ தங்கச்சியோ இருந்தா அப்படி தான் பேசுவ…. இல்ல நாளைக்கு நமக்குக் குழந்தைப் பொறந்தா ஒரு அப்பாவா நீ வேற மாதிரி தான் பேசுவ…. அதையெல்லாம் விடு…
நான் சொல்ல சொல்ல கேட்காம அப்பா தம்பின்னு எல்லார் முன்னாடியும் என் கையை உதறிட்டு நீ வருவியா…?” என்று அவள் இன்னும் அதே கோபத்தில் கொந்தளிக்க,
“அவ்வளவு திமிரா உனக்கு..? உன் பின்னாடியே வருவேன்னு நினைச்சியா…?” என்று ஆர்கலி கத்த,
“வருவேன்னு நினைக்கல… ஆனா வந்துட்ட தேங்க்ஸ்…” என்றவனுக்குக் கொஞ்சம் மனது சமனாக, சமநிலை ஒரு இத நிலைத் தர, அவள் கையைப் பிடித்து இழுக்க“இனிமே கையெல்லாம் உதற மாட்டேன்…” என்று அவள் கையை அழுத்திப் பிடிக்க,
“விடு..” என்று உதறியவளுக்கு விழிகளில் நீர் சேர்ந்து கொள்ள
“ஏய் ஆரு… அங்க நின்னேன்னு வை எதாவது பேசியிருப்பேன்… எனக்குக் கோவம் ரொம்ப வந்துச்சு… அதனால தான் வந்தேன்…” என்றவன் அவள் கண்களைத் துடைத்து விட போக, அவன் கையை தட்டிவிட்டவள் அப்படியே சோஃபாவில் உட்கார்ந்து கொள்ள,
“இங்க பாரு ஆரு அவன் பேசினது தப்போ சரியோ எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… அதனால தான் கோபத்தில இறங்கி வந்துட்டேன் அதுவும் அவன் உனக்குப் போய் என்னை எப்படி பிடிச்சதுன்னு கேட்டான் இல்லையா..? எனக்கு அது ரொம்ப கோபம் வந்துடுச்சு..” என்றுஅவளிடம் தன்நிலைசொன்னான்.
“அவன் சின்னப்பையன் தெரியாம பேசிட்டான்…” என்று ஆர்கலி அழுகையை அடக்கி சொல்ல,
‘அவனா டி சின்னப்பையன்… வேலைக்குப் போறான்..’ என்று மனதினுள் தோன்றினாலும் அவளிடம் பேசவில்லை.
“இங்க பார்… யார் என்ன சொன்னாலும் உனக்கு என்னைத் தெரியும் தானே? என்னை நீ மதிக்காம எப்படி அப்படி வரலாம்…? உங்கிட்டயே சொல்லி இருக்கேன் தானே எப்படி இருந்தாலும் என்னால உன்னை விட முடியாது. ஒருவேளை அதனால தான் நீ என்னை இப்படியெல்லாம் பண்றியோ..?” என்று அழுகுரலில் அவனைப் பார்த்துக் கேட்க,
“அதெல்லாம் அந்த நேரம் எனக்குத் தோணல. கோவம் தான் வந்துச்சுடி விடுடி தெரியாம கையை உதறிட்டேன். அதுக்குப் போய் அழுவியா…? அவன் கிட்ட போய் சொல்லு அவன் அக்காவைநான் எப்படி பார்த்துக்கிறேன்னு பார்த்துட்டு அப்புறம் பேச சொல்லு… போதுமா…”என்று அவன் அவள் முகம் பார்த்து பேச
“நீ சரியாகிட்டியா ஃபீல் பண்றியா..?” என்று அவள் மனம் தாங்காது அவனை கேட்க,
“அழாம கிளம்பு டி சமாதானமெல்லாம் வேண்டாம்… கொஞ்ச நேரத்தில நான் சரியாகிடுவேன்…” என்றான்.
“என்ன சமாதானம் பண்ண வந்தேனா… நான் சண்டை போட வந்தேன்..” என்று அவள் முகம் திருப்பிக் கொள்ள, “அதான் போட்டாச்சே இன்னுமா முடியல…?” என்றவன்“நீ இப்படியே செஞ்சா என்னைக்குமே சண்டையெல்லாம் முடியாது..” என்றாள் அழுகையும் அடங்காத கோபமும் கலந்த கலவையாக.
“அழாத முகத்தைத் துடை..”
“அழ வைக்கிறதே நீதான்…”
“அடியே எல்லாம் உன் தம்பி பண்ணினது டி…”
“யார் என்ன பண்ணினாலும் எனக்குப் பிரச்சனையில்ல… ஆனா நீ என்னை அப்படி பண்ணினது தான் எனக்குக் கஷ்டமா போச்சு..” என்றவளிடம்
“இனிமே அப்படி செய்ய மாட்டேன்…” என்று வெகுவாக சமாதானம் செய்து அனுப்பினான்.
அன்று காதலனாக கை உதறியவன்இரண்டு மாதத்திலேயே அவளைக் கைப்பிடித்தான். ஆர்கலியின் கணவனாக..!
ஆர்கலியின் ஊரான பட்டுக்கோட்டையில் அவர்கள் திருமணம் நல்லபடியாக நடந்துவிட, இரண்டு நாட்கள் அங்கே தங்கியவர்கள் அன்று காலை காஞ்சிபுரம் வந்து இறங்கினர். மாணிக்கம், வள்ளி, காயத்ரி, ஷாலினி எல்லாம் இன்னும் ஊரிலேயே இருக்க, ரஞ்சித் மட்டும் அவனுக்கு விடுமுறை இல்லையென்பதால் இவர்களுடனே வந்துவிட்டான்.
வரதராஜன் கடைக்குச் சென்றிருக்க, ஆர்கலியும் நெப்போலியனும் மட்டுமே வீட்டில். நெப்போலியன் நன்றாக உறங்கி விட, அவனருகே வந்து படுக்கையில் சத்தம் செய்யாமல் உட்கார்ந்தாள் ஆர்கலி. அவன் முகம் பார்ப்பது போல் படுத்துக் கொண்டவளுக்கு திருமண இரவென்று நடந்தவை நெஞ்சினில் ஓடியது.
கல்யாணம் முடிந்த அந்த இரவினில் ஆர்கலி களைப்பில் உடனே உறங்கிவிட்டாள். விடியற்காலை மூகூர்த்தம் என்பதால் தூங்கவே இல்லை. ரொம்பவும் நிம்மதியான உறக்கமாக அது இருக்க, உடன் கணவனாக நெப்போலியன் இருக்கிறான் என்ற எண்ணமே ஒரு அமைதியை நல்கியிருக்க, அதனால் ஒரு நல்ல உறக்கம். ஆனால் நெப்போலியனுக்குத் தான் உறக்கமே இல்லாது போயிற்று. இத்தனைக்கும் எங்கே படுத்தாலும் உறங்கிடுவான். சொகுசெல்லாம் அவனுக்குக் கேட்காது.
சோர்வாக இருந்த போதிலும் அவளுடன் ஒரே மெத்தையில் படுத்து உறங்க ஒரு தயக்கம், கூச்சம், என்னவோ அது போல் ஒரு நிலை. வரதராஜன் தவிர அவன் யாருடனும் ஒரே அறையில் உறங்கியது இல்லை. அப்படியே இருந்தாலும் ஆண்களாக மட்டும் தான் இருப்பார்கள். இப்போது ஆர்கலியோடு என்பதனை விடவும் ஒரு பெண்ணுடன் உறங்க வேண்டும் என்பது உறக்கத்தை விரட்டி இருக்க,
தூங்கும் அவளைப் பார்த்தபடி கால் நீட்டி, தலையணையை சாய்த்து அதன் மேல் தலைவைத்து உட்கார்ந்திருந்தான். தூங்கிக் கொண்டிருந்த ஆர்கலி தீடீரென அருகில் சத்தம் கேட்க விழிகள் விழித்து விரித்துப் பார்த்தால், நெப்போலியன் தான் ஹியர்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்க, அவன் ஹியர்போன் சொருகும் முன் செல்பேசி சத்தம் இட்டு விட, அதில் தான் உறக்கம் கலைந்தாள் ஆர்கலி.
“என்ன நீ தூங்கல..?” என்று அவள் எழுந்து அவனருகே சாய்ந்து உட்கார,“அது தூக்கம் வரல…” என்றான்.
“என்ன…?” என்று கேட்க“அது எனக்குபொண்ணோடஒன்னா ஒரே பெட்லபடுத்து பழக்கமில்ல இல்லையா…? என்றான்.
“ஹலோ! நீ என்ன பாப்பாவா…? கல்யாணம் ஆனா ஒன்னா தான் இருக்கனும்னு தெரியாதா..?” என்று அவள் கடுப்பாகப் பேச“அதெல்லாம் தெரியும்டி ஓவரா பேசாத…. ஆனாலும் எனக்கு…” என்று நிறுத்தினான்.
அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. அவளுடன் பேசி இருக்கிறான். அருகே தோளில் கைப்போட்டு இருக்கின்றான். ஆனால் இப்படி ஒரே அறையில் அடைபடவில்லையே..! அது ஒரு புதுவிதமாக இருக்க, இதமா இடரா..? என பகுத்தறியா நிலையில் இருந்தான்.
அவன் இவ்வளவு தயங்கவுமே அவன் நிலை புரிய, “நான் தள்ளி தானே படுத்திருக்கேன் நீ தூங்காம போன் நோண்டினா எப்படி தூக்கம் வரும்… அமைதியா படுத்துக்கோ தூக்கம் வரும்..” என்று சொல்லி அவனிடம் இருந்து போனை எடுத்து வைத்தாள்.
அவள் தள்ளிப் படுத்திருந்தாலும் அவள் புறம் இன்னும் தள்ளிப் படுத்தவன், “உங்கிட்டஒரு விஷயம் சொல்லனும் “ என்றான்.
“என்னமோ கூச்சமா இருக்குன்னு சொன்ன… இப்ப இப்படி பக்கத்துல படுத்திருக்க…?” என்றவளுக்கு அவன் இடம் பெயர்தலில் அவனோடு சேர்ந்து அவன் கூச்சமும் இடம்பெயர கேட்டாள்.
அருகருகே இருந்திருந்தாலும் இப்படி ஒன்றாக ஒட்டிக்கொண்டு படுப்பது அவளுக்கும் புதுவிதம் தானே..?
“தள்ளி படுத்தா எப்படி டி கூச்சம் போகும்..? இப்படி தள்ளிட்டு படுத்த தானே போகும்..” என்றவன் இப்போது மொத்தமாக அவளை நெருங்கிப் படுத்திருந்தான் உரசிய வண்ணம்..!
அதில் அவளோ வெட்கத்தின் வண்ணத்தில் மாறியிருக்க, அவன் நெருக்கம் ஒரு இதமான புதுமையான நெருக்கடியை அவளின் நெஞ்சுக்குள் தர, அமைதியாக இருந்தாள்.
“இதை யார் கிட்டயும் சொல்லனும்னு நினைச்சதில்ல… இனிமேலும் சொல்ல மாட்டேன்…. என்னவோ உங்கிட்ட சொல்லனும்னு தோணிச்சு…” என்று அவன் தொடங்க,அவன் முகம் பார்த்து படுத்தவள்,
“என்ன சொல்லு..” என்றதும்“என்னையும் வரதனையும் நீ என்னநினைக்கிற…?” என்று கேட்டான்.