“பாசக்கார அப்பா புள்ள..” என்று அவள் முகம் புன்னகையில் கனிய சொல்ல,“ஆனா அவர் என்னைப் பெத்தவர் இல்ல..” என்றான்.
தவறி கூட அப்பா இல்லை என்ற வார்த்தை வரவில்லை. பெற்றவர் மட்டுமே இல்லை என்றான். மரபணுவால் உறவில்லை தான். ஆனால் மனதளவில் அவர் தான் உறவு.
“என்ன…?” என்று ஆர்கலி அதிர்ச்சியில் எழப்போக, அவள் கையைப் பற்றி எழ விடாமல் செய்தவன்,
“அது எனக்கு மூணு நாலு வயசு இருக்கும்… கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த லாரியில நான் வந்தேன்… எந்த ஸ்டேட்ல இருந்து வந்த லாரின்னு எல்லாம் தெரியாது எனக்கு இவங்க பேசுன பாஷையும் புரியல…” என்று சொல்ல,
நாலு வயதில்தனியாக நின்றானா..? என்று யோசிக்கவே ஆர்கலிக்குப் பதற, அவனோ சஞ்சலமற்ற, சலனமற்ற ஒரு சாதாரண கதை சொல்லியாகத்தன் கதையை சொன்னான்.
அவனது மொழிக்கு இப்போது ஆர்கலியால் என்ன மறுமொழி சொல்வதென தெரியாமல் இருக்க, அவனுடன் இன்னும் நெருங்கிக் கொண்டாள். அவன் கரம் பற்றியபடி. அவனும் அவளது கரத்தைப் பற்றி அதனை மென்மையாக வருடியபடி சொன்னான்.
“அப்புறம் ரொம்ப பசி. வரதன் முன்னாடி போய் நின்னேன் அவரும் புரிஞ்சிட்டு எனக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்…. அப்புறம் அங்கேயே சுத்தினேன்… என்னை அழைச்சிட்டு அவருக்குத் தெரிஞ்ச போலிஸ்ட்ட போய் யாராவது பையன் காணும்னு வந்தா சொல்ல சொன்னார்.. ஆனா என்னைத் தேடி யாரும் வரல… நான் அவர் பின்னாடியே சுத்திட்டு இருப்பேன்… அங்க மார்க்கெட்ல யாராவது எதாவது வேலை சொன்னா செஞ்சுக் கொடுப்பேன்…
அப்படியே கொஞ்ச நாள்ல எனக்கும் தமிழ் புரிஞ்சது. மார்க்கெட்ல லோட் இறக்க லாரி வரும், அப்படியே அவங்க பேசுற பாஷையெல்லாம் கத்துக்கிட்டேன்… இப்படியே ஒரு பத்து வருஷம் போச்சு. மார்க்கெட்ல வட்டிக்கு விட்டுட்டு வரதன் அப்ப அங்க ஒரு ரூம்ல தங்கிப்பார் அவர் கூடவே தங்கிப்பேன்… ஆனா யாருக்கு வேலைப் பார்த்தாலும் அவர் தான் எனக்கு மூணு வேளையும் சோறு போட்டார்..
சோறு போட்டது மட்டுமில்ல, பெயர் வைச்சதும் அவர்தான்…. அப்புறம் அங்க கொஞ்சம்சண்டை ஆகிப்போச்சு. வட்டிப்பிரச்சனையில என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டார். யார் கேட்டாலும் என் பையன்னு சொல்வார்… அவருக்கு நான் பையனோ இல்லையோ தெரியல அப்படி இருக்கேன்னானும் தெரியல…. ஆனா அவர் தான் எனக்கு அப்பா அம்மா எல்லாமே…” என்றான்.
வரதன் பற்றி பேசுகையில் அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சித் தெரிய, கேட்டிருந்தவளுக்குத் தான் பேசா நிலை. இவர்கள் உறவில் உதிரம் ஒன்றல்ல..! சொந்தமில்லை..! பந்தம் இல்லை…! ஆனாலும் பாசம் குறையவில்லை..!
“இப்ப நான் இதெல்லாம் சொல்றேனா நீ என் மனைவி ஆகிட்ட… அது மட்டுமில்லாம நீ அவரை நல்லா பார்த்துக்கனும்… உன் அப்பாவை எப்படி பார்ப்பியோ அப்படி… அதுக்காகத் தான் சொல்றேன்… ஆனா இது நமக்குள்ளயே இருக்கட்டும்… அவர் கிட்ட கூட இது தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத…” என்றான் அழுத்தமாக.
அவன் மீது சாய்ந்து கொண்டவள், “கண்டிப்பா பேச மாட்டேன் ரொம்ப கஷ்டப்பட்டியா?” என்று கேட்க,
“என்ன கஷ்டம்… நான் ரொம்ப ஜம்முன்னு ஜாலியா வாழ்ந்தேன்டி… ஆனா எப்பவும் ஒரு குறை உண்டு என்னால தான் வரதன் கல்யாணம் பண்ணிக்கலன்னு…. அப்ப அவருக்கு சின்ன வயசு தானே. என்னை கூட வைச்சிக்கனும்னு அவர் ஒரு துணையைத் தேடலன்னு தோணும்…. அதைத் தவிர வேற எந்த கஷ்டமும் இல்லை எனக்கு…” என்று அவள் நெற்றியில் செல்லமாய் முட்ட, அமைதியாக இருந்தாள்.
அவளுக்கு அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அவளது ஆறு வயதில் வள்ளி அவளை விட்டுப் போனார். அப்போது அவளுக்கென அப்பா, தாத்தா, ஆத்தா, சித்தப்பா, சித்தி, தம்பி என்று பல உறவு இருந்தும் கூட அவளது ஏக்கமும் வேதனையும் அவளடைந்த தனிமையும் அவளுக்கு இன்றளவும் மறக்க முடியவில்லை.
அவனோ நாலு வயதில் நிராதராவாய், மொழி தெரியா ஊரில் எப்படி தவித்திருப்பான் என்ற எண்ணம் நெஞ்சில் நின்றுவிட, அவனது புரிந்து கொள்ளா பாவமும் பக்குவமடையாத முன் கோபமும் அதனால் என்று தெரிய, அவனை அனுசரித்துப் போக வேண்டும் என்று முடிவு செய்தவள் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து இருக்க,அவனுக்கு அவளிடம்எல்லாம் சொன்ன பின் ஒரு இலகு நிலை இருக்க, அவள் அப்படி நெருக்கமாக இருப்பதால் தூக்கம் தடைபட,அருகில் இருந்த ஆர்கலியின் முகம் அவனை அவளைக் கொஞ்ச வைக்கத் தோன்ற,கன்னத்தில் முத்தமிட்டான்..!
முதலில் அவன் கொடுத்த பெண் முத்தம்..! அது மென் முத்தமாக இருக்க ஆச்சரியத்தில் விழி விரித்தவள் அவனை போலவே அவன் கன்னத்தில் முத்தமிட,
“என் வாழ்க்கையிலஒரு பொண்ணு கொடுக்கற முதல் முத்தம்..” என்று அவன் சொல்ல, என்னவோ அவளுக்கும் அவனைக் கொஞ்ச தோன்ற,மீண்டும் முத்தமிட“இரண்டாவது முத்தம்..!” என்று சொல்லி அவன் சிரித்தபடி அவளை இறுக்கி அணைத்துக்கொள்ள,
அடுத்து அவனும் அவளும் தந்த முத்தங்கள் எல்லாம் எண்ணிலடங்காதவை…!ஆனால் எண்ணத்திலடங்கியவை…!காதலினால் ஆகி… காதலில் அடங்குபவை…!
அதுவரை அகம் பேசியவர்கள் அதன் பின் அகப்பொருள் பேசினார்கள். இப்படி அதையெல்லாம் நினைத்து, அவன் முகம் பார்த்துக் கொண்டே ஆர்கலி உறங்கி இருக்க, அவளது அலைப்பேசி அழைக்கவும் தான் எழுந்தாள்.
அந்த சத்தம் கேட்டு நெப்போலியனும் எழுந்துவிட, “எப்போ வந்த நீ…?” என்று அவளிடம் கேட்க“நீ தூங்கின பின்னாடி வந்தேன்…” என்றாள்.
“வரதன் எங்க..?”
“மாமா கடைக்குப் போய்ட்டார்…” என்றவள் பின் கண்டிப்பான குரலில், “இங்க பாரு… நாளைக்கு நமக்குப் பசங்க எல்லாம் வந்துடுவாங்க… நீ இப்படி மாமாவை மரியாதையில்லாம பேசாத ஒழுங்கா அப்பான்னு கூப்பிடு…..” என்று சொல்ல,
“என்னதுநாளைக்கே குழந்தை வந்துடுமா வயிறு அப்படியே இருக்கே..” என்று அவளை இழுக்க, “போடா..!” என்றவள் அலைப்பேசியை எடுத்துப் பேச, ரஞ்சித்தான் அழைத்திருந்தான்.
“வீட்ல தான்டா இருக்கோம்..வா..” என்று சொல்ல“யாரு..?” என்றான் நெப்போலியன்.
“ரஞ்சித்…” என்றதும் “ஓ…” என்றவன் குளிக்க செல்ல துண்டை எடுக்க,இன்னமும் அவனுக்கு ரஞ்சித்தின் பேச்சு மனதில் நெருடலாக நெருஞ்சியாக நீங்காது இருக்க, அவனால் அவனிடம் சகஜமாக முடியவில்லை.
முகம் காட்டிக் கொண்டே இருந்தான். காயத்ரி ஷாலினியிடம் அவ்வளவு நன்றாகப் பேசியவன் ரஞ்சித்தை ஒதுக்கி இருந்ததை ஆர்கலியும் கண்டுகொண்டாலும் கல்யாண நேரத்தில் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தாள். இப்போதும் இவன் இப்படியே இருக்க,
“என்ன ஓ…? உனக்கு இருக்க ஒரே மச்சான் அவன். சும்மா குழந்தை மாதிரி பண்ணாத…. அவன் கிட்ட நல்லா பேசு.. அவன் உன் முகத்தை முகத்தைப் பார்க்கிறான் தானே..?” என்று தம்பிக்காகப் பேச,
“அதெல்லாம் பேச முடியாது போ..” என்று துண்டைத் தோளில் போட்டவன் அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டி விட்டு குளிக்கப் போய்விட்டான்.
சிறிது நேரத்தில் ரஞ்சித் வீட்டிற்கு வர, வரதராஜனும் வீட்டில் தான் இருந்தார். அவனிடம் பேசிக்கொண்டிருக்க, ஆர்கலி அனைவருக்கும் டீ எடுத்து வர நெப்போலியன் வந்தவனும் சோஃபாவில் உட்கார்ந்து கொள்ள, ஆர்கலி முறைக்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல்,
“டீ சூப்பர்…!” என்று புன்னகை செய்ய,ரஞ்சித்தே பேசினான்.
“மாமா நாளைக்கு வேலைக்குப் போகனும்… ஊருக்குப் போய்ட்டு வரேன்…” என்று சொல்ல,“போய்ட்டு வா..” என்றான்.
ஆர்கலி அவனிடம் போய், “உள்ள வா ஒரு நிமிஷம்..” என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்குள் போக, அவனும் அவள் பின்னே போக
“இந்த பணத்தை அவன் கிட்ட கொடு..” என்று இரண்டு ஐநூறு தாள்களை நீட்ட, “ஏய் அவன் தான் சம்பளம் வாங்குவானே.. எதுக்கு அவனுக்கு..” என்று அறியாமல் நெப்போலியன் பேச,
“நான் கூடத்தான் சம்பளம் வாங்கினேன். அமெரிக்கா போனப்போ மாமா இரண்டாயிரம் கொடுத்தார் தானே… அது மாதிரி தான் வெளியூர் போனா பெரியவங்க கொடுக்கனும்… இப்ப வீட்ல அப்பா இல்லைதானே.. அதனால் நம்ம கொடுக்கிறோம்..” என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்தாள்.
ஆம்!! அவனுக்குக் குடும்ப பழக்க வழக்கங்கள் எதுவும் தெரியாததால் எல்லாம் பொறுமையாக சொல்லிக் கொடுத்தாள். ஆனால் அவனது கோபங்களை ஏற்கவில்லை. அதனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நினைத்தாள்.
“சரி சரி…. ஆனா இங்க பெரியவர் வரதன் தானே. அவர் கிட்ட கொடுத்து கொடுக்க சொல்லுவோம்…” என்றதும் அதுவும் சரிதான் என்றாலும் அவனை முறைத்தாள்.
“என்னடி..?” என்று அவனும் முறைத்துப் பார்க்க“என்ன சொன்ன இப்போ…? மாமா பெயரை சொல்லாத சொன்னேன் தானே… அப்பா சொல்லு…” என்று கை நீட்டி மிரட்ட,
“அது பழகிடுச்சு…” என்றான்.
“என்ன பழகிடுச்சு…. முதல்நாள் என்கூட படுத்தா தூக்கம் வரலன்னு அப்படி பேசின… இப்போ அப்படி இல்லைதானே… அது மாதிரி இதுவும் பழகிடும்..” என்று சொல்ல, அவளை இழுத்து அணைத்தவன் முத்தமிட்டு,
“அறிவு என் மார்கழி..” என்று சொல்லி முத்தமிட்டுக் கொண்டே இருக்க,வெளியே இருந்து ரஞ்சித்,
“அக்கா..!” என்று குரல் கொடுக்க
“வில்லன்..!” என்று முனங்கியவன் அவளோடு வெளியே வந்து வரதராஜனிடம் பணம் கொடுத்து கொடுக்க சொல்ல, அவரும் ஒரு ஐநூறு சேர்த்து கொடுக்க, ரஞ்சித் மறுக்க
உடனே அவனும் வாங்கிக் கொண்டான். அதன் பின் ரஞ்சித் கிளம்பி செல்ல, ஆர்கலியை உட்கார வைத்துவிட்டு அன்றிரவு அப்பாவும் மகனுமே அவளுக்கு சமைத்து தந்தனர். இரவில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தவன்,
“உனக்கு எதாவது ஊருக்குப் போகனும்னு ஆசை இருக்கா..? ஊட்டி காஷ்மீர்… ஷிம்லா… அப்படி..” என்று அவன் கேட்க
“ஹனிமூன் போகனும்னா…?” என்றாள்.
“ஆமா எந்த ஊர் சுத்திப் பார்க்க உனக்கு ஆசை…?” என்று அவன் கேட்க,“எனக்கு உன்னை சுத்தினா போதும் இப்போ… ஊரெல்லாம் வேண்டாம்..” என்று அவள்காதலுடன்சொல்ல,
“அப்போ சுத்து.” என்றான் இன்னும் காதலாக.
அவளும் அவனை சுற்றி அணைத்துக் கொண்டு, “உனக்கு எங்க போகனும்..?” என்று ஆர்கலி அவனை கேள்வி கேட்க
“எனக்கு எங்கேயும் இப்போ போக வேண்டாம். வரதனை விட்டு தனியா படுக்கறதே எனக்குக் கஷ்டமா இருக்கு… ஆனா அவர் நம்ம கல்யாணம் நடந்த பின்னாடி தான் ரொம்ப சந்தோஷமா இருக்கார்… ஆனாலும் தனியா விட்டுட்டு வேற வெளியூர்லாம் போக எனக்கு இஷ்டமில்லை..” என்று பேச
அவன் மனம் மனைவியாகப் புரிந்து கொண்டாள். இரவில் ஒரு முறை எழுந்து வரதன் உறங்கி விட்டாரா என்று பார்த்த பின்னே அவன் தனியறைக்கு வருவான். அவன் சொல்வது சரியெனப்பட
“அது ரைட் தான்…. நான் உன்னை சுத்துறேன்… நீ என்னை சுத்து…” என்று அவள் சொல்லவும் அவன் அவளை உடனே சுற்றிக்கொள்ள,அடுத்தெல்லாம் அகத்திணை தான்..!!