மூன்று நாட்கள் கடந்திருந்தன. அதற்கு முந்தையை நாள் இரவு தான் மாணிக்கவாசகம் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்திருந்தார். இரவில் அவர்கள் வந்ததுமே ஒரு முறை சென்று பார்த்திருந்தாலும், விடியற்காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்துவிட, எழுந்த ஆர்கலி குளித்து விட்டு, வெளியே வர வரதராஜன் பூஜை செய்து கொண்டிருந்தார். அவருடன் நின்று சாமி கும்பிட்டவள், பின் அவருக்கு பால் கலக்கித் தந்துவிட்டு,
“மாமா தங்கச்சிங்களுக்கு காலேஜ் இன்னிக்கு… நான் போய் ஒரு தடவ பார்த்திட்டு வரேன்…” என்று சொல்ல,
அவரும்“சரிம்மா போய்ட்டு வா..” என்றுவிட்டார்.
மாணிக்கம் மனைவி தந்த காபியைக் குடித்து விட்டு வாசலில் காற்றோட்டமாக உட்கார்ந்திருக்க,காலையிலேயே வந்த மகளைக் கண்டு,
“என்னடா காலையில வந்துட்ட..? என்னாச்சு…?” என்று பதறிக் கேட்க
“ஒண்ணுமில்ல இன்னிக்கு இவளுங்களுக்குக் காலேஜ் போகனும்ல… அதான் ரெடியாகிட்டாங்களா நான் போய் சாப்பிட எதாவது செய்றேன்…” என்று வீட்டுக்குள் போக,
“ஆரு வள்ளி சமைக்கிறா.. இங்க வா அப்பா உங்கிட்ட பேசனும்..” என்றதும் அவள் அவரது நாற்காலிக்குப் பக்கத்தில் தரையில் முட்டியிட்டு உட்கார்ந்து கொண்டு,
“ஓ…!நான் புருஷன் வீட்டுக்குப் போனதும் உங்க பொண்டாட்டி கிட்ட கிச்சனைத் தள்ளி வீட்டீங்களா..?” என்று முகம் தூக்கி வைத்துக் கேட்க,
“அம்மாடி..! என்னடா நீ…? எப்பவும் நீயே என் கஷ்டப்படனும்… காயுவும் ஷாலுவும் பெரிய பசங்க.. அவங்களே அவங்களைப் பார்த்துப்பாங்க… அம்மா சும்மா தானே இருக்கா அவ செய்யட்டும்…” என்றவர்
“அப்புறம் என்னடா… எங்கேயும் போகலையா வெளியூர்..?” என்றார்.
ஆர்கலிக்கோ அவர்களின் சுற்றுதல் நினைவு வர, புன்சிரிப்போடு, “அதெல்லாம் போகலப்பா… இன்ட்ரெஸ்ட்இல்ல..” என்று சொல்ல,
“அப்பப்ப்பா…..! வெளியே சுத்துனா தான் சந்தோஷமா…? எனக்கு உங்க மாப்பிள்ளை கூட இருந்தாலே சந்தோஷம் தான்ப்பா..” என்றதும் அவள் முகத்தில் நிலவிய முறுவலையும் வெட்கத் தடத்தையும் கண்டவர் ஒன்றும் சொல்லாமல் சிரித்து வைக்க,
“ப்பா… ஏன் சிரிக்கிற..?” என்றாள்.
“சிரிப்பு வந்துச்சு… சிரிச்சேன்…” என்றவருக்கு மகளினது மகிழ்ச்சியில் இன்னமும் சிரிப்பு வர“ப்பா….!” என்று அவள் சிணுங்கி கத்த,
“எனக்கு மாப்பிள்ளையை சுத்தினா போதும்னு சொல்ற… அதானே….!” என்று அவர் சரியாகக் கேட்க,“போப்பா..!” என்றாள் வெட்கம் சூழ்ந்திட.
அதற்குள் ஷாலினி ரெடியாகி வந்தவள், “ஹை….! அக்கா எப்போ வந்த…?” என்று உற்சாகத்தில் துள்ளி அவளருகே வந்து உட்கார,
“என்னடி சீக்கிரம் ரெடியாகிட்ட…”
“ஒரு வாரம் லீவ் போட்டேன்ல… அதான் சீக்கிரம் போய் எல்லா வொர்க்கையும் முடிக்கனும்…” என்றாள்.
ஷாலினி இப்போது சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கின்றாள். தினமும் போய் வர சிரமம் என்பதால் கல்லூரி விடுதியிலே தங்கியிருக்கிறாள். வாரக்கடைசியில் வீட்டுக்கு வந்துவிடுவாள்.
“வெரி குட்… அந்த மேடம் எங்க..?”
“அவ இப்போதான் குளிக்கப் போயிருக்காக்கா. அண்ணா வரலையாக்கா..?” என்று அவள் நெப்போலியனைக் கேட்க
“அண்ணா சொல்லாதன்னு எவ்வளவு தடவ ஷாலு சொல்றது.. மாமா சொல்லுடி…”
“அது இரண்டு வருஷமா பழகிடுச்சு…க்கா..” என்று ஷாலினி சொல்ல,கணவனின் ‘பழகிடுச்சு’ நினைவில் வர அதில் அவள் முகத்தில் புன்னகை உதயமாகிட,
“ஓகே… அதான் எல்லாம் உங்க வள்ளியே பண்றாங்களே… எனக்கு என்ன வேலை… நான் கிளம்புறேன்…. பை ஷாலு… பார்த்து போய்ட்டு வா…. காசு வைச்சிருக்க தானே..? அப்பா அவ கேட்க மாட்டா…. நீங்க கொடுத்து அனுப்புங்க…. நான் அப்புறம் வரேன்… ஷாலு போய்ட்டு எனக்குக் கால் பண்ணு…” என்று விடைப்பெற்று போக,
போகும் மகளையே மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தார் மாணிக்கம். அவருக்கு அவ்வளவு மன நிறைவு. சின்னவயது ஆர்கலியைப் பார்த்த உணர்வு. இதே போல் காயத்ரிக்கும் ஷாலினிக்கும் அவர்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
வள்ளிக்கோ மகளிடம் பேசி மகிழ முடியாவிட்டாலும் மகளும் கணவனும் பேசியதைக் கேட்டு மகிழ்ச்சியில் அவர் விழிகளில் நீர்த் துளிர்த்தது. இவள் வீட்டிற்கு வரும்போது அப்போதுதான் நெப்போலியன் குளிக்கப் போயிருந்தான். மணி ஆறரை ஆகியிருக்க, சமைக்கப் போனாள். அவள் இட்லி ஊற்றி விட்டு, சாம்பார் வைப்பதற்கு காய் நறுக்கிக் கொண்டிருக்க,
வரதராஜன் எட்டிப் பார்த்தவர், “என்னம்மா செய்ற..?” என்றார்.
“சாம்பாரா…?” என்றவர் பூண்டு, வெங்காயத்தை எடுத்து அதனை உரிக்கப்போக, “மாமா என்ன பண்ணப்போறீங்க..?” என்றாள்.
“நீ காய் நறுக்கும்மா.. அதுக்குள்ள நான் பூண்டு வெங்காயம் உரிச்சுத் தரேன்..”
“என்ன மாமா நீங்க…. எப்பவும் நீங்க தானே செய்றீங்க கொடுங்க… நான் செஞ்சிடுறேன்..” என்று கேட்க
“அதனால என்னம்மா… நீ ஒருத்தியா கஷ்டப்படுவ எங்களுக்கு செஞ்சு பழக்கம் தான்…. நீயும் உங்க வீட்ல இதை தானே செஞ்ச..” என்று சொல்லி அவர் பாட்டிற்கு பூண்டு உரிக்க
“என்னடி செய்ற டாடி என்ன பண்ற..?” என்றபடி நெப்போலியனும் சாமி கும்பிட்டு விட்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.
“சமைக்கிறேன்..” என்று ஆர்கலி சொல்ல“ஓ..! நான் கூட டான்ஸ் ஆடுறியோ நினைச்சேன்..” என்று நக்கலடித்தவன்,ஆர்கலியையும் வரதராஜனையும் பார்த்தபடி,
“இட்லி வேகுது… உன் தொழில் காய் நறுக்குவது…. உன் தொழில் பூண்டு உறிப்பது… என் தொழில் என்ன…?” என்று அவன் கிண்டலாக கேட்க,
“சாப்பிடுறது.. முதல்ல வெளியே போ… மாமாவையும் அழைச்சிட்டுப் போ… நானே உங்களுக்கு எல்லாம் செய்றேன்…” என்று ஆர்கலி சொல்ல
“அதெல்லாம் கிடையாது… என்ன எங்களுக்கு சாப்பிடுறது மட்டும் தெரியும்னு நினைச்சியா… சமைக்கவும் தெரியும்… இது எங்க ராஜ்ஜியம் நீ அப்பாலே போ.. வீட்டுக்கு வந்த மருமகளை வேலை வாங்கினான்னு எங்க நைனாவை இந்த காஞ்சிபுரம் தப்பா பேசாது.. என்ன டாடீ..” என்று அவர் கையில் இருந்த பூண்டை வாங்கி இவன் உறித்தபடி கேட்க,
இரண்டு கையையும் எடுத்து தன் வாய் மேல் வைத்தவள், “உங்கக்கிட்ட எல்லாம் பேசவே முடியாது..” என்றபடி வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
இப்படி சிரிப்போடு அவர்கள் காலை உணவு முடிந்தது. அன்றுடன் அவளுக்கு விடுமுறை முடிந்தது என்பதால் அடுத்தநாள் வேலைக்குக் கிளம்பினாள். காலையில் அவள் கேப் வரும் இடத்தில் அவளை இறக்கி விடுவது, அவளுக்கு சமையலுக்கு உதவுவது, மாலையில் முடிந்தால் அவளை அழைத்து வருவது என்று நெப்போலியன் அவள் பின்னேயே சுற்றினான்.
இரவிலும் வரதராஜன் வீட்டிற்கு சீக்கிரம் வந்து சமையலுக்கு மருமகளுக்கு உதவி செய்வார். நெப்போலியனும் அவருக்கு வயதாகி விட்டதால் வெகு நேரம் கடையில் உட்கார வைப்பதில்லை. ஆர்கலியும் மாலை அவனுடன் வருவாள் இல்லாவிட்டால் நடந்தே வீட்டிற்கு வந்துவிட்டு சிறிது நேரம் மாணிக்கத்துடனும் காயத்ரியுடனும் பேசிவிட்டு வருவாள்.
இப்படியாக நாட்கள் கழிய,அன்றுநெப்போலியன் ஒரு பெரிய தொகையை வசூல் செய்ய வேண்டி இருந்ததால் ஆர்கலியை அழைக்கப் போகவில்லை. அவன் வர முடியாது என்று சொல்லிவிட, அவளும் சரியென்று விட்டாள்.
ஆர்கலிக்கு வயிறு வலிப்பது போல் தெரிய, கால் வேறு வலியெடுக்க மெதுவாக நடந்து வந்தவளுக்கு இடுப்பும் வலிக்க, அதையெல்லாம் தாங்கியபடி வந்தவள்நாள் கணக்கு நினைவில் வரவும், மெடிகல் ஷாப்பில் சென்று சானிட்டரி நாப்கின் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து போக,நெப்போலியன் அப்போதுதான் வசூல் செய்த தொகையை வங்கியில் செலுத்திவிட்டு, மாணிக்கத்திடம் அதைப் பற்றிப் பேசிவிட்டு கடையின் வாசலுக்கு வர, ஆர்கலி மெடிக்கல் ஷாப்பில் இருந்து போவது தெரிய,
‘இவளுக்கு உடம்புக்கு என்னாச்சு..?’ என்று நினைத்தவன் உடனே நடந்து அவளருகே சென்றவன், “என்னடி கையில என்ன..? என்னாச்சு உடம்புக்கு….?” என்று கேட்க
அவன் குரலில் நிமிர்ந்தவள், “ஒண்ணுமில்ல லேசா வயிறு வலி…” என்று சொல்லி வலியைப் பொறுத்தபடி நடக்க,
அவள் முகம் பார்த்தவனுக்கு விழிகள் அவள் வலியை சொல்லிவிட அவளது வாடிய முகமும், வலி பொறுக்கும் பாவமும் புரிய, என்னவோ இவளுக்குப் பெரிதாக இருக்குமோ என்று அவனை பயம் கொள்ள செய்ய, அவள் வேறு அடிக்கடி மயங்கி விழுந்திருக்கிறாளே அதனால் பதட்டம்நிறைந்த குரலில்
“என்னாச்சுன்னு சொல்லு டி… ரொம்ப வயிறு வலிக்குதா ஏன் சொல்லாம இருந்த… சாப்பிட்டியா..?” என்று சாலையில் நின்று அவள் கையைப் பற்றியபடி சத்தமாகப் பேச,
“அதான் ஒண்ணுமில்ல சொல்றேனே…” என்றபடி அவள் முன்னால் பலம் கூட்டி நடக்க,அவள் கையை அழுத்திப் பிடித்தவன்,
“கேட்கிறேன்ல சொல்லுடி… சாப்பிடலையா நீ..? என்ன வாங்கின…? மாத்திரையா..? டாக்டரைப் பார்க்கலாம்..” என்று அவன் வினாக்களால் துளைக்க, விடை சொல்லும் நிலையில் எல்லாம் அவள் இல்லை.
மாதவிடாய் ஹார்மோன்ஸ் ஏற்ற இறக்கங்கள் அவளை ஏகத்திற்கும் கோபம் கொள்ள வைக்க, வலி வேறு வார்த்தையே வரவில்லை. வீட்டிற்கு எப்படியாவது சீக்கிரம் போய்விட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தவளுக்கு எரிச்சல் மிகுந்திட,
“என்னமோ வாங்கினேன்…. உயிர வாங்காதடா..” என்று பல்லைக் கடித்துப் பேசி விட்டு அவன் கையை உதறிவிட்டு அவள் வேகமாக வீட்டிற்கு நடந்து போக,கோபத்தில் அவன் அவள் பின் செல்ல, ஆர்கலியோ கதவைத் திறந்த அறைக்குள் சென்றவள், நாப்கினை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போக, நெப்போலியனுக்கு எதுவுமே தெரியவில்லை. புரியவில்லை.
என்னவோ பெரிதாக இருக்குமோ என்ற பயம். அதை மறைக்கிறாளோ என்ற கோபமும், பதட்டமும் பெருக,அவன் பாத்ரூமின் கதவருகே நின்று,
“என்னடி செய்யுது சொல்லு..” என்று கதவைத் தட்டிக் கொண்டே இருக்க, கடுப்பானவள்“டார்ச்சர் பண்ணாத…” என்று உள்ளிருந்து கத்தினாள்.
அவனுக்கு பெண்மையும் பெண்ணுடலும் புதியது. புதிரானதும் கூட…!அதில் நிகழும் மாற்றங்கள் உடல் உபாதைகள் எதுவும் தெரியாதவன் அம்மா, அக்கா, தங்கை என்று உறவுகளுக்குள் வாழும் ஆண்மக்களே இதைப் பற்றிய அறிவின்றி தெளிவின்றி இருக்க, பெண்வாசமில்லாதவனுக்கு எப்படி தெரியும்?
அதுவும் திருமணத்திற்குப் பின் மனைவிக்கு வரும் முதல் மாதவிலக்கு என்பதால் இதைப்பற்றி அவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. ஆர்கலி மட்டுமே அவன் வாழ்வில் முழமையாக அறிந்த பெண். அவளுக்கும் அவனுக்குத் தெரியாமல் கேட்கிறான் என்றெல்லாம் அப்போது தோன்றவில்லை. அவளுக்கு இருந்த வலிக்கும் எரிச்சலுக்கும் அவனுக்குப் புரியவைக்கும் பொறுமையெல்லாம் இல்லை.
அதில் இப்படி மாறி மாறி இருவரும் கத்த,அவள் கதவைத் திறந்து வெளியே வந்து மெத்தையில் சோர்வில் படுத்துவிட,
“என்ன அன்னிக்கு சொன்ன…. நான் கேட்டா பதில் சொல்ல மாட்டியா..? என்ன செய்யுது சொல்லாம வர… என் கையை ரோட்ல உதறிட்டுப் போற…. என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க… டாக்டர் கிட்டவர சொன்னா வர மாட்ற… என்னதான் டி உன் பிரச்சனை..” என்று உச்சஸ்தாதியில் கத்த,
“கத்தாத…” என்று பல்லைக் கடித்தவள்,
“எப்பவும் வரதுதான்… ஒன்னும் பயப்பட இல்ல..” என்று பொறுமையாகச் சொல்ல,
“என்ன எப்பவும் வருமா..? ஏன் டி எங்கிட்ட சொல்லல… அடிக்கடி இப்படி வலிச்சா வேற என்னவா வேணும்னாலும் இருக்கலாம்..” என்றான் படபடப்பாக.
அப்போதுதான் ஆர்கலி மண்டையில் அவன் நிலை உறைத்தது. இது பற்றியெல்லாம் அவள் பேசியதே இல்லை அல்லவா..? அவன் வீட்டிலும் வாழ்விலும் இது வரை பெண்களே இருந்ததில்லையே..?அதெல்லாம் அப்போதுதான்அவள் உணர்விற்கு வர,
“நீ ஷ்யாமுக்குப் போன் பண்ணி எனக்கு மாசம் மாசம் வர வயிறு வலின்னு சொல்லு. அவன் சொல்லுவான். என்ன பிரச்சனைன்னு…” என்றதும்“ஆரு ப்ளீஸ்.. எதுன்னாலும் நீயே சொல்லு. அவன் கிட்ட ஏன் கேட்கனும்…?” என்றான்.
அவனிடம் மறைக்க எதுவுமே இல்லைதான். ஆனாலும் இதையெல்லாம் சகஜமாகப் பேச அவளுக்கு ஒரு தயக்கம். அவள் வளர்ந்த சூழல். அது மட்டுமன்றி ஒரு மருத்துவனாக ஷ்யாம் இன்னும் தெளிவாக சொல்வான் என்ற எண்ணம். அதை விட உடல் சோர்வு என்பதால் ஆர்கலி,
“அவன் தானே டாக்டர். அவன் எக்ஸ்ப்ளைன் பண்ணுவான்…. என்னால முடியலடா விடு..” என்று சொல்லி அவள் கண்களை மூடி கொள்ள,ஷ்யாமிடம் பேசி விட்டு வந்தவனுக்கு அப்போதுதான் எல்லாம் விளங்கி இருக்க, இத்தனை நாள் இதையெல்லாம் சொல்லாமல் இருந்ததிற்காக ஷ்யாமை நன்றாகத் திட்டினான்.