சிறிது நேரம் கழித்து கையில் ஜூஸோடு வந்தவன், அவள் உறங்குவதைப் பார்த்து அவளது பாதங்களை பிடித்துவிட,அவனது தொடுகையில் கண்விழித்தாள் ஆர்கலி. அவன் செயலில் காதலினும் காதலாக ஒரு நிலையைக் கண்டவளுக்கு கண்ணோரம் கசிய, காதல் கொண்ட அகமோ கனிய,
“அங்க என்ன பண்ற..” என்று குரல் கொடுக்க,அருகே வந்து அமர்ந்தவன் “ஏன் டி இதெல்லாம் எங்கிட்ட சொல்லல… நீயே சொல்லி இருக்கலாமே..” என்றான் கடுப்பாக.
“நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்..” என்றவனின் கையைப் பற்றிக் கொண்டவள், “என்ன உன் ப்ரண்ட் நல்லா விளக்கிட்டானா..?” என்று மென்சோம்பலோடு கேட்க,
“ம்ம்… நல்லா திட்டிவிட்டேன் அந்த நாய…. இதெல்லாம் சொன்னா தானே பொண்ணுங்க கஷ்டம் என்னன்னு தெரியும். பொண்ணு நீயே சொல்லாம இருந்தா எப்படி பொண்ணுங்க கஷ்டம் என்னை மாதிரி ஆளுக்குப் புரியும்… யார் இருக்கா சொல்றதுக்கு…?” என்று அவன் கோபத்தில் பேச,
“உனக்கு உன் பொண்டாட்டி பத்தி தெரிஞ்சா போதாதா…? அது என்ன பொண்ணுங்களைத் தெரியனும்..?” என்று கேள்வியாகப் பார்க்க,
“என்னடி லூசாட்டம் பேசுற… நாளைக்குநமக்குப் பொண்ணு பொறக்கும் அப்போ என் பொண்ணுக்கு நான் தானே எல்லாம் செய்யனும்… அப்படி இல்லன்னா மருமக வந்தா அந்த பொண்ணையும்நான் பார்க்கனும்ல..” என்று அவன் வாழ்வில் வரப்போகும் பெண்பிள்ளைகளை நினைத்துப் பேச
என்னதான் உடலில் அவ்வளவு வலி இருந்தாலும் உள்ளம் உவகையில் துள்ளியது.
“பக்கத்துல வா..” என்றவள் அவன் கரத்தில் முகம் புதைக்க, அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்,
“ராட்சஸி மாதிரி கத்தினடி நீ… நான் பயந்துட்டேன் தெரியுமா…? அதுவும் உன் முகமே அவ்வளவு வலியோட இருந்துச்சா… ஏதோ பெரிய விஷயம்னு நினைச்சிட்டேன்.. இப்பதான் இது இயற்கைன்னு தெரியவும் எனக்கு நிம்மதியா இருக்கு..” என்றவனிடம்,
“ஏன் நான் மயங்கினேன்னு கேட்ப இல்ல… இதான் பொசுக்குப் பொசுக்குன்னு கோபம் வந்தாலும், ஓவரா இந்த வாய் பேசினாலும், இன்னும் வரவே வராதநம்ம பொண்ணு, மருமக எல்லாருக்கும் சேர்த்து யோசிக்கிற உன் மனசு இருக்கே அதான் என்னை மயக்கிடுச்சு…” என்று அவன் முகம் பார்த்து காதலாக அவள் சொல்ல,
“அந்த மயக்கமெல்லாம் இருக்கட்டும்… இப்ப இந்த ஜூஸைக் குடி இல்லன்னா உண்மையில மயங்கிடுவ..” என்று ஜீஸை அவளிடம் தர, வாங்கிக் குடித்தாள். அவளிடம் க்ளாஸை வாங்கி வைத்துவிட்டு, படுக்க வைத்து, அவள் பக்கம் சாய்ந்து படுத்தபடி,
“முன்னாடியே நீ இப்படியெல்லாம் இருக்குன்னு என்ட்ட சொல்லி இருந்தா நான் ஏன் இவ்வளவு கோபப்படப்போறேன்…” என்று கேட்க,“இதையெல்லாம் சொல்ற அளவுக்குப் பெரிய விஷயம்னு நினைக்கல…”என்றாள் உண்மையாக.
“இதைத்தான் முக்கியமா சொல்லனும்டி…. அப்போதான் என்னால உன்னை நல்லா பார்த்துக்க முடியும்… ஷ்யாம் சொன்னான் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிறு வலி, முதுகு வலி, இடுப்பு வலி எல்லாம் வரும். ரொம்ப எரிஞ்சு விழுவாங்க அப்படின்னு… இப்போ நீயும் அப்படிதானே செஞ்ச… இது மாதிரி எதாவது இருந்தா எனக்கு சொல்லு.. சொல்லாம எப்படி தெரியும்..”
“இனிமே சொல்றேன் இப்ப தூங்க விடு…” என்று அவள் சொல்ல, “நீதான் என்னை விடனும் கையைப் பிடிச்சு வைச்சுருக்க…” என்று அவன் சிரிக்க, அவன் கையை விட்டவள்,
“இங்க பார்… எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… தூங்க விடு. இடையில சாப்பிட எழுப்பின.. கொன்னுடுவேன் உன்னை….” என்று மிரட்டிவிட்டு அவள் உறங்க,
இருந்த அயர்ச்சிக்கு நன்றாக உறங்கினாள். ஆனால் அவள் சொன்னது போல் உறங்க விடாமல் உணவை அறைக்கே எடுத்துச் சென்று, தூக்கத்தில் இருந்தவளை எழுப்பி அதட்டி ஊட்டி விட்டு சாப்பிட வைத்தான். அதற்காக அடுத்த நாள் திட்டும் வாங்கினான்.
இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட, முந்நூறு சண்டைகள் போட்டிருப்பர். அவனும் பேச, அவளும் ஏச என்று வாய்த் தகராறு அதிகம் தான். ஆனாலும் எப்படியோ சமாதானம் ஆகிவிடுவர். அன்றும் அப்படிதான், இரவு பதினொறு மணியாகியும் நெப்போலியன் வீட்டிற்கு வரவில்லை. சாப்பிடவும் வரமாட்டேன் என்று வரதனிடம் போன் செய்து சொல்லி இருந்தான்.
ஆனாலும் காரணம் எல்லாம் சொல்லவில்லை. வரதனும் கேட்கவில்லை. எப்போதுமேஅவனாகவே சொல்வான் என்று விட்டுவிடுவார். அவனது அலைப்பேசிக்கு அழைக்க, அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க, அக்கறை எல்லாம் ஆர்கலிக்கு ஆத்திரமாக உருமாறிக் கொண்டிருந்தது.
“நீ போய்த் தூங்கும்மா… ஆபிஸ் போகனுமில்ல… நான் கதவைத் திறந்துவிடுறேன்…” என்று வரதராஜன் சொல்லவும்,
“மாமா கதவைத் திறக்கிறது பிரச்சனையில்லை… ஆனா வீட்ல இருக்கவங்க கிட்ட எங்க போறேன் வரேன்னு சொல்லிட்டுப் போகனுமா இல்லையா..? இப்ப யாராவது வந்து கேட்டா கூட எனக்கு இவர் எங்கன்னு சொல்லத் தெரியாது… இது நல்லாவா இருக்கு..”
“முதல்ல நீங்க போய் தூங்குங்க… மாத்திரைப் போட்டு எவ்வளவுநேரமாச்சு…” என்று சொல்லும்போதே நெப்போலியன் கதவைத் தட்ட, வரதன் போய் திறந்துவிட,
“இன்னும் தூங்கலையா நீ..? சாப்பிட்டியா..? மாத்திரைப் போட்டியா..?” என்று கேட்டபடியே வந்தவனிடம், “சாப்பிட்டேன்டா.. நீ சாப்பிட்டியா..?” என்று வரதராஜன் கேட்க
“சாப்பிட்டேன்..” என்று சொன்னதும், “எங்க போய்ட்டு வர..?” என்று ஆர்கலி விசாரித்தாள்.
“வெளியே போய்ட்டு வரேன்… அதான் அப்பாக்கிட்ட சொல்லிட்டு போனேனே..?” என்று சொல்ல
“வெளியே போறேன்னு சொன்ன… எங்க போறேன்னு சொன்னியா நீ..? எட்டு மணிக்குப் போன் பண்ணின. இப்போ மணி பதினொன்றரை… எங்க போறேன்னு வீட்ல உள்ளவங்கக்கிட்ட சொல்லாம போறது என்ன பழக்கம்..? நான் உனக்கு எத்தனை தடவ சொல்றது….?” என்று சத்தம் போட,
“நான் என்ன குழந்தையாடி… போனா வரத் தெரியாதா எனக்கு..? சும்மா கேள்வி கேட்குற..?” என்று எரிச்சல் பட
“விடும்மா… அவன் இப்போதானே வரான்..” என்று மகனுக்காக வரதராஜன் பேச,
“உங்க மேல தப்பு மாமா… எங்க போறார் வரார்னு பார்க்காம இருக்கீங்க…” என்று வரதராஜனையும் பேச, அவரைப் பேசியதும் நெப்போலியனுக்கு சுர்ரென்று ஏறிவிட
“ஏய் என்ன அவரைப் பேசுற…. சும்மா எல்லாரையும் கேள்வி கேட்குற….” என்று அவளிடம் பாய்ந்தான்.
“டேய் சும்மா இருடா… ஆர்கலி கேட்கறதும் சரிதானே?” என்று அவரும் அவளுக்குப் பரிந்து பேச, “என்ன சரி… சும்மா நொய் நொய்னு நச்சரிக்கிறா இவ…..” என்றவன்ஆர்கலியைப் பார்த்து,
“டேய் என்ன பேச்சு பேசுற…?” என்று வரதராஜன் கோபத்தில் பேச,
“பின்ன என்ன..? எப்ப பார்த்தாலும் எங்க போற வரன்னு கேள்வி கேட்கிறா..? வீட்டுக்குள்ள வந்ததும் விசாரணை.. ச்ச…” என்று அவன் அறைக்குள் போய்விட, ஆர்கலி அமைதியாக போறவனைப் பார்த்து நிற்க, வரதராஜன் அவளிடம்,
“எப்பவும் யாரும் அவனைக் கேள்வி கேட்டதில்லம்மா. அவனே கொஞ்ச நேரம் கழிச்சு எங்க போனான்னு சொல்லிடுவான். அவன் ஏதோ கோபத்துல பேசுறான். அதுக்கெல்லாம் கோச்சுக்காதம்மா நாளைக்கு நான் அவன் கிட்ட பேசுறேன்..” என்று சொல்ல,
“வேண்டாம் மாமா இங்க கத்துற உங்க புள்ள ரூம்ல வந்து மன்னிப்புக் கேட்பார். நான் அதெல்லாம் ஒன்னும் நினைக்கல நீங்க கவலைப்படாம தூங்குங்க…” என்று சொல்லி அனுப்பியவள் அறைக்குள் சென்றாள்.
அவன் அதற்குள் குளித்துவிட்டு டிஷர்ட்டை மாட்டிக் கொண்டிருக்க,மெத்தையின் மீது ஓரமாக உட்கார்ந்தவள்,
“எங்க போன..?” என்று மீண்டும் கேட்க“ஏன் டி கேள்வி கேட்கறதெல்லாம் விட மாட்டியா நீ..?” என்று கடுப்பில் கேட்க
“பதில் வர வரைக்கும் கேள்வியைநான் நிறுத்த மாட்டேன்….” என்று பேச,
“என் ப்ரண்ட் ஒருத்தன் வீடு விற்கனும் அது சம்மந்தமா போனேன்.. பூந்தமல்லி வரைக்கும் போய்ட்டு வர லேட் ஆச்சு.. போதுமா..?” என்று சொல்லிவிட்டு அவன் படுத்துக் கொள்ள,
“இதை முன்னாடியே சொன்னா நான் ஏன் கேள்வி கேட்கிறேன்… போகும்போதே இங்க போறேன் அப்படின்னா சரி வேலையா இருக்காங்க வர நேரமாகும்னு நான் புரிஞ்சிப்பேன்…” என்றாள் அமைதியாக.
அவள் படுக்காமல் இருக்க, “நாளைக்கு ஆபிஸ் போகனும் தானே? தூங்காம இருக்க வந்து படு..” என்று சொல்ல
“அது எல்லாம் எனக்குத் தெரியும்.. நீ தூங்கு..” என்றவள் அப்படியே உட்கார்ந்திருக்க, நெப்போலியனுக்கு தூக்கமேவரவில்லை.
முன்பு ஆர்கலி யாரோவாக இருக்கையில் சண்டை போட்டால் போடி என்று இருக்க முடிந்த மனதால் இப்போது மனைவி என்று மாறிவிட்ட பின் அப்படி இருக்க முடியவில்லை.
“என்னடி கோவமா.?” என்று எழுந்து அவளருகே உட்கார்ந்து கேட்க, அவன் பேசிய வார்த்தைகள் அந்த நேரக் கோபம் அதன் விளைவு என்றளவு புரிதல் இருக்க, பெரிதாக காயப்படவில்லை என்றபோதிலும் கேட்க கஷ்டமாக இருந்தது ஆர்கலிக்கு.
“ஆமா… கோபம் தான்..” என்று அவள் ஒத்துக்கொள்ள,
“ப்ச் ஏதோ அலைச்சல்… டென்ஷன் அதுல கத்திட்டேன்… நீ வரதனை வேற பேசினியா..? என்னை எப்பவும் இப்படி யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க… அதான் விடுடி.. படு..வா..” என்று கையை இழுக்க,
“யாரும் கேட்க மாட்டாங்க.. ஆனா நான் உன் மனைவி… நான் கேட்பேன்..” என்றாள் அழுத்தமாக.
“சரிடி நல்லா கேள்வி கேளு… இப்போ தூங்கு… தெரியாம பேசிட்டேன்..” என்று சமாதானம் செய்ய,
“அங்க அப்படி சவுண்ட் விட்ட இப்ப இப்படி அமைதியா கேட்குற.. கத்தி சொல்லு….” என்று அவள் காலை ஆட்டிக் கொண்டு தோரணையாகக் கேட்க,“தெரியாமப் பேசிட்டேன்..!” என்று சத்தம் போட்டு சொன்னவன்,
“வா மார்கழி..” என்று அவளை தூங்க சொல்ல,
“இன்னும் கோபம் போகல… ரொம்ப பேசின இல்ல இன்னிக்கு. அப்படியே எல்லாம் விட முடியாது…. கால்ல விழுந்து மன்னிப்புக் கேளு…” என்று சொல்லி விஷமமாய் அவனை முறைத்துப் பார்க்க,
“என்ன கால்ல விழனுமா..?” என்று அதிர்ச்சியானவன், ‘ஆமாம்’ என்று அவள் விழி மொழி சொல்ல,பின் எழுந்து அவள் முன் நின்று,
“கால்ல மட்டும் ஏன் விழனும்…?” என்றபடி அவள் காலைப் பிடித்து அப்படியே மெத்தையில் தள்ளியவன், “மொத்தமா உன் மேல விழுறேன்…” என்று அப்படியே அவளை அணைத்து அவள் மேல் சாய்ந்து கொள்ள, சமரசம் சரசமாகியது.
இப்படியேநாட்கள் ஓட,அன்று மாலை வீட்டிற்கு வந்த ஆர்கலி புடவையில் தயாராகி நின்று கொண்டு நெப்போலியனுக்கு அழைக்க,
“இதோ வந்துட்டே இருக்கேன்…” என்று சொல்லிபோனை வைத்தவன், வேகமாக வந்து குளித்துஒரு புது டீஷர் ஜீன்ஸில் அவள் முன்நின்று, “நான் ரெடி…போலாமா..?” என்று கேட்க,
“என்ன இது… ஃபார்மல்ஸ் போடலாமில்ல…” என்றவள் அவனுக்காக அவள் எடுத்து வைத்த புது சட்டையைப் போட சொல்ல,
“இம்சை..! இதுக்கு பட்டனெல்லாம் போடனும். டீஷர்ட்னா தலைவலியா மாட்டினா போதும்..” என்று சொல்லி அவள் தலையில் தட்ட, “வாழைப்பழ சோம்பேறி பட்டன் போட முடியாதா..?” என்று திட்ட,
“யாருடி சோம்பேறி நான் நேரத்தை மிச்சம் பண்றேன்..” என்று வாய்ப்பேசினாலும் அவளுக்குப் பிடித்த மாதிரி கிளம்பினான்.
ஆனால் பயணங்களின் ஆதியும் அந்தமும் ஒன்றுபோல இருப்பதில்லை. அவர்களுக்கும் அப்படியே. போகும்போது இருந்த மகிழ்ச்சிக்கும் மன நிலைக்கும் அப்படியே நேர்மாறாக..! தலைகீழாக ஒரு நிலை..!!