அன்று ஆர்கலியின் ப்ராஜக்ட் மேனேஜரின் குழந்தையின் பிறந்த நாள் விழா. ஆர்கலிக்கு சின்னவயதில் அம்மா பற்றிய பேச்சு வரும் என்பதால்இது போன்ற நிகழ்வுகளுக்குப் போகவே பிடிக்காது. பெரியவள் ஆனதும் அப்பாவிற்குத் துணையாக சில இடம் போயிருக்கிறாள். அலுவலக விழாக்களில் கலந்து கொள்வாள்.
இப்போதோ நெப்போலியனுடன் போவதற்காகவே விழாக்களை விரும்பத் தொடங்கினாள். இன்றும் அப்படியே.. அவனுடன் ஜீப்பில் சென்று இறங்கும் வரை உள்ளமெல்லாம் நிறைந்த நிலையே. எவ்வளவு தான் சண்டை போட்டாலும், கத்தினாலும் காதல் என்ற ஒன்று அதனையெல்லாம் கடக்க சொல்லிக் கொடுத்திருக்க, வாழ்வே வண்ணம் தான்..!
ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில்நடக்க, பெரிதாக கூட்டமில்லை. குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள், அவளது டீம் மேட்ஸ் இன்னும் சில நண்பர்கள் தான். ஆர்கலி நெப்போலியனுடனே உட்கார்ந்திருக்க, அவளது டீம் மேட்ஸ் வந்து அவர்களுடன் பேச,
“மை ஹஸ்பண்ட்..” என்று எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். ஆண் பெண் என்று பத்துக்கும் மேல் ஆட்கள் இருக்க, பெண்கள் எல்லாரும் தனியாகப் பேச, ஆண்கள் நெப்போலியனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டனர்.
“என்ன ப்ரோ பண்றீங்க..?” என்று ஒருவன் கேட்க“ட்ராவல்ஸ் வைச்சிருக்கேன்..” என்றான்.
அடுத்து, “எவ்வளவு கார் வைச்சிருக்கீங்க…?”
“எந்த கார் நல்லா இருக்கும்..?” என்பது மாதிரியான கேள்விகள் வர அனைத்தையும் சமாளித்து பதில் சொன்னான்.
இப்படியாக ஒவ்வொருவரைப் பற்றியும் பேச, பெரிதும் அவர்கள் உரையாடல் ஆங்கிலம் தான். இடையே இடையே கொஞ்சமாக கொஞ்சியது தமிழ். அவனுக்கு தென்னிந்திய மொழிகள் அத்தனையும் சரளம். ஹிந்தி கூட நன்றாகப் பேசுவான். ஆனால் ஆங்கிலம் அவனுக்கு புரியவே புரியாது. எங்கிருந்து அதனைப் பேச?
எப்போதுமே நமக்கு ஆயிரம் வித்தை தெரிந்தாலும் தெரியாத ஒரு வித்தை தான் மனதினை உறுத்தும். நம்பிக்கையினை குலைக்கும். அப்படிதான் அவனுக்கும். இதுவரை இப்படியான உணர்வலையில் அவன் சிக்கியது இல்லை. ஏனெனில் அவன் இதற்கெல்லாம் போனதே இல்லையே. அவன் வரதனுடன் திருமணங்கள், காது குத்து, கிடாவெட்டு என்று போயிருக்க, அதன் சூழல் பழக்கம் எல்லாம் வேறல்லவா..?
இங்கு எல்லாம் ஹைஃபையாக இருக்க, ஒட்டவே முடியவில்லை. அவர்களுடன் சகஜமாகப் பேசவும் முடியவில்லை. அவனாகவே செல்பேசியில் ஷ்யாமிற்கு மிஸ்ட் கால் கொடுத்து கட் செய்து விட, பின் ஷ்யாம் அழைக்க,
“கால் பேசிட்டு வரேன்..” என்று சொல்லி அவர்களை விட்டு தள்ளி சென்று ஷ்யாமிடம் சிறிது நேரம் பேசியவன் அந்த ஹாலுக்குள் செல்லாது அதன் வெளியே போனைநோண்டிக் கொண்டுஇருந்தான்.
குழந்தைக்குப் பரிசு கொடுக்கவென ஆர்கலி அழைக்க, அவளுடன் இணைந்து பரிசுகொடுத்து புகைப்படம் எடுத்த பின் இருவரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க, அவளை தோழிகள் சாப்பிட அழைக்க,பெண்கள் சூழ்ந்திருக்க, இவனால் அங்கே எப்படி போக முடியும்.
ஆர்கலி “இல்ல நீங்க போங்க… நான் அப்புறம் வரேன்..” என்று சொல்ல,“எப்பவாது தான் இப்படி டைம் கிடைக்குது கம ஆரு..” என்று அவளைஒரு பெண் வற்புறுத்தி அழைக்க,
நெப்போலியன் ‘போ’ என்பதாக விழியசைக்க, அதன் மொழியுணர்ந்தாலும்
“உன்னை விட்டு எப்படி போக..?” என்று அவள் மெல்லமாகப் பேச
“நீ போ ஆரு… அவங்கக் கூட சாப்பிடு…” என்றவன் பஃபெயில் தனியாக சாப்பிட, அந்த சூழலில் தான் பொருந்திப் போகாதது அவனுக்கு புரிய, ரஞ்சித்தின் வார்த்தைகள் வேறு அவன் வேர் வரை சென்று தாக்க,
என்னவோ மனதை பிசைய, முதல் முறையாக சாப்பிடவே முடியவில்லை. ஆர்கலியைப் பார்க்க அவள் உற்சாகமாக அவள் தோழமைகளோடு பேசிக் கொண்டிருக்க, இவனை அவள் பார்க்கவில்லை.
வீட்டில் இருக்கும் வரை தெரியாத இந்த வேற்றுமையெல்லாம் வெளியில் வருகையில் விஸ்வரூபம் எடுத்துவிட, ஒரு சப்பாத்திக்கு மேல் இறங்கவே இல்லை. அங்கிருந்தவர்களைப் பார்த்தான். அவர்களது தோரணை பேச்சு வழக்கு ஏன் சாப்பிடும் முறை என எல்லாம்வேறாக இருக்க, இவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்னை ஏன் பிடித்திருக்கிறதென சொன்னாள்..? என்று தோன்றியது.
வெளியிடம் என்றில்லை திருமணத்தின் போதே அவன் படிக்கவில்லை என்பதால் அவர்களின் உறவுகளுக்குள் சில சலசலப்புகள் எழுந்த போதிலும் அதை ஆர்கலியோ மாணிக்கமோ காட்டவில்லை. இன்று இப்போது இது எல்லாம் நினைவில் வர, நிம்மதிதான் போனது.
ஆர்கலிபொருத்தமே இல்லாத தன்னுடன் எப்படி பொருந்தி போகிறாள் என்றெல்லாம் எண்ணம் எங்கெங்கோ போக, தலைவலியே கண்டுவிட்டது அவனுக்கு. வந்தபோது இருந்த இனிமையெல்லாம் இல்லவே இல்லை. மனமெல்லாம் ஒரே யோசனை. உண்ணாமல் இருப்பது வேறு தலைவலி தெறித்தது.
சிறிது நேரத்தில் ஆர்கலி, “கிளம்பலாமா..?” என்று வந்து நிற்க,அ மைதியாக அவளுடன் கிளம்பினான்.
காரில் வரும்போது அவன் அப்படியே வர, “என்னாச்சு அமைதியா இருக்க..?” என்று கேட்க
“நான் என்ன ரேடியோவா…. எப்பவும் எதாவது பேசிட்டே இருக்க… தலைவலிக்குதுடி பேசாம வா..” என்றவன் சாலையில் கவனமாகிட,
“ஏசி ஒத்துக்கலையா..? கிளம்பும்போது நல்லா தானே இருந்த…? இப்ப என்ன தீடீர்னு..?”
ஆர்கலிஅவன் மேல் உள்ள அக்கறையில் கேட்டிட, அவன் கரையில் அக்கறையெல்லாம் சர்க்கரையாக இனிக்கவில்லை. அவள் பேச்சோடு அவனை இணைக்கவுமில்லை. அவனது தாழ்வெண்ணம் தறிகெட்டு ஓடி அவனை சக்கையாகப் பிழிந்தெடுக்க
“இந்த கேள்வி கேட்கிற பழக்கத்தை விட மாட்டியா நீ… வாயை மூடிட்டு வா..” என்று சீறினான்.
அவ்வளவுதான்..!
ஆர்கலி அமைதியாகி விட்டாள். அவளுக்கு அவனது கோபமெல்லாம் ‘பழகிடுச்சு’ நிலைதான். அவள் போனில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க, வீடு வந்து சேர ஒரு மணி நேரமாகியது. அதுவரை வரதனுடன் இருந்த மாஸ்கோ,
“அண்ணே அண்ணி வரேன்..” என்று சொல்லி சென்றிருக்க, வீட்டுக்குள் வந்ததும் வரதராஜனிடம் பேசியவன் அறைக்குள் புகுந்து உடை கூட மாற்றாது அப்படியே மெத்தையில் தலை சாய்த்தான்.
விழிகள் மூடி இருந்தாலும் வினாக்கள் எல்லாம் மறையா நிலை. எல்லாம் ஒரு அழுத்தம் தர, தலையில் கை வைத்து கண் மூடி இருந்தான். ஃபேன் கூட போடாது அவன் படுத்திருக்க, அவள் ஃபேனை ஆன் செய்துவிட்டு பாத்ரூமிற்குள் உடை மாற்ற புகுந்து கொள்ள,
அதுவரை இவனுக்கு வியர்த்திருக்க, சட்டையின் பட்டனை மட்டும் கழட்டியவன் அப்படியே படுத்திருக்க, சிறிது நேரத்தில் சூடான உணவின் வாசம் நாசியில் புகுந்து கொள்ள,அவனருகே வந்து உட்கார்ந்த ஆர்கலி,
“நான் பார்த்தேன்… நீ ஒரு சப்பாத்தி தான் சாப்பிட்ட. உனக்கு அங்க சாப்பிட பிடிக்கல போல… இப்போ சாப்பிட்டுத் தூங்கு. தலைவலி போய்டும்..” என்றதும் அதுவரை இருந்த அழுத்தம், கவலை அத்தனையும் அப்படியே பறந்தும் மறந்தும் விட,அளப்பரிய காதல் அவள் மேல் பாய்ந்தது.
“நான் சாப்பிடலன்னு உனக்கு எப்படி தெரியும்..? நீ என்னை அப்போ பார்க்கவே இல்லையே. சாப்பிட்டுட்டு பேசிட்டு தான இருந்த..” என்றவன் இன்னும் எழாமல் அப்படியே படுத்தவாக்கில் அவளைப் பார்த்தவாறே கேட்க,
“சாப்பிட்டா பேசினா உன்னைக் கவனிக்க மாட்டேனா… நான்..? அதெல்லாம் ஆட்டோமெட்டிக்கா என் கண்ணு உன்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கும். இப்போ முதல்ல எழுந்து சாப்பிடு..” என்று அவன் தோளைத் தொட்டு தூக்க,அவளை அப்படியே தன்னோடு சாய்த்து இறுக்கியபடி,
“நான் மட்டும் உன்னைக் கல்யாணம் பண்ணலன்னா என்ன ஆகியிருக்கும்?”என்றான் விழிகளில் அவ்வளவு காதலை நிறைத்தபடி.
“என்னை சுத்துறதுக்குப் பதிலா ஊரை சுத்திருப்ப..” என்றவள் அவனிடம் இருந்து விலகப்பார்க்க முடியவில்லை. இறுக்கி அணைத்திருந்தான்.
“என்னடா ஓவரா பண்ற… இதே வாய் தானே ஏன் டி உன்னைக் கல்யாணம் பண்ணினேன்னு பேசிச்சு…” என்று அவள் விலக முயற்சி செய்து கடுப்பாக சொல்ல“அது போன மாசம்டி.. இது இந்த மாசம்..” என்று அவன் டயலாக் பேச,
“எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம்.. நீ வேணும்..” என்று அவளது விழிகளில் பார்வை வைத்து அழுத்தமும் ஆசையுமாகச்சொல்ல,அவன் எப்போதும் இப்படியெல்லாம் கேட்கவே மாட்டான். என்னவோ எல்லாம் புதுவித புதுமையாகத் தெரிய,