“நீயா சாப்பாடு வேண்டாம்னு சொல்ற..? நான் எங்க போக போறேன்… முதல்ல சாப்பிடு..” என்று ஆச்சரியத்துடன் ஆர்கலி சொல்ல, எழுந்தவன் தன் சட்டையை கழட்டி கட்டிலில் போட்டுவிட்டு, ஆர்கலியின் முகம் நெருங்கி கன்னத்தில் அழுத்தமாக அழுந்தி ஆசையாக முத்தமிட்டு, “என்னால விடவே முடியலடி..!” என்று அவள் முகம் பார்க்க,
“யாரு உன்னை விட சொன்னா…” என்றவள் அவனை நெருங்கி தோளில் சாய்ந்து கொண்டு,
“நான் இப்படியே இருக்கேன் நீ சாப்பிடு..” என்றதும் வேகமாக அவன் சாதத்தைக் கையில் எடுக்க, “என்னடி சூடா இருக்கு..?” என்று அவளைப் பார்த்தான்.
“ஆமா… நீ சாப்பிடாம இருந்த… வரும்போதே மாஸ்கோவுக்கு மெசெஜ் பண்ணி சாதம் வைக்க சொன்னேன்.. உனக்கு சூடா சாப்பிடத்தானே பிடிக்கும்..” என்று சொல்ல அவளது பேரன்பில் இவனுக்குள் பெரும் மழை பொழிவு.
உண்டுவிட்டு அவளைப் பார்க்க, ஆர்கலியோ உறங்கி இருக்க, “இவளை…” என்று பார்த்தவனுக்கு சிரிப்பு வர, இடது தோளில் அவள் சாய்ந்திருக்க, மெல்லமாக தட்டை வைத்தவன், அவளை மெதுமெதுவாய் கையை இறக்கி படுக்கையில் விட்டு, பின் எழுந்தான்.
ஜீன்ஸை மாற்றிக் கொண்டு ஷார்ட்ஸூம் பனியனுமாக அவளருகே வந்து படுத்தவனுக்கு, ‘என்ன பொருத்தம்… புடலங்கா பொருத்தம்..’ என்று தான்நினைக்கத் தோன்றியது. விலகினால் மட்டுமே விஸ்வரூபம் எடுக்கும் வேற்றுமை அவள் அருகாமையில்நீங்கிட, காதல் மட்டுமே பெருக அதை பொழியும் நிலைதான்.
‘என் மேல எவ்வளவு லவ்வுடி… உனக்கு..?’ என்று நினைக்க, அவளை அணைத்துக் கொண்டான்.
அவனது அன்பின் வெளிப்பாடு அவனது மன நிலையைப் போல் அவ்வளவு அழுத்தமாக இருக்க, ஆர்கலி கண்கள் சொருக தூக்க கலக்கத்தோடு,
“வலிக்குது…” என்று அவனது அணைப்பின் அழுத்தம் தாங்காது சொல்ல,காதல் மீகி கலாபம் ஆகி அவளை மிக மிக மென்மையாக, தன்மையாக அணைத்துக் கொள்ள, இருவருமே உறங்கிப் போனார்கள்.
சனிக்கிழமை மாலை பொழுதில் ஆர்கலி உறங்கி இருக்க, நெப்போலியனைக் காணவில்லை.
‘என்னை தூங்க வைச்சிட்டு இவன் எங்கப் போனான்..?’ என்று யோசித்தபடி அவள் வீட்டு வேலைகளைப் பார்த்தாள்.
வீடு பெருக்கி, மதியம் போட்டிருந்த சாமான்களை விளக்கி, மெஷினில் துணிகளைப் போட்டவள், டீவியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். வேறு வேலையும் இல்லை செய்வதற்கு.நெப்போலியன் முன்பே சொல்லிவிட்டான்.
“இங்க பார்… உன் சம்பளம் என்ன வேணும்னாலு செய்… நம்ம வீட்டை நானும் அப்பாவும் பார்த்துப்போம்.. ஆனா கஷ்டப்பட்டு எக்ஸ்ட்ரா வேலையெல்லாம் பார்க்கக் கூடாது… தங்கச்சிங்கன்னு அவங்களுக்காகப் பார்த்து நீ அந்த வேலையெல்லாம் பார்க்காத… அவங்களுக்கு என்ன செய்யனுமோ அதை சொல்லு நம்ம பண்ணிடலாம்..” என்று உத்தரவாக சொல்லி இருக்க, ஆர்கலி அப்படியே ஒத்துக்கொண்டாள்.
இப்போதுவீட்டில் யாருமே இல்லை. வரதராஜன் கடையில் இருக்க, இருவரும் மதிய உணவிற்கு வீட்டிற்கு தான் வந்தனர். மீண்டும்வரதராஜன் கடைக்குச் சென்றுவிட நெப்போலியன் தூங்கும் வரை அவளுடன் தான் இருந்தான். கதவை வேறு பூட்டிச் சென்றிருந்தான். வெளியே வர வேண்டுமானால் வீட்டின் உள் இருக்கும் படி வழியே மாடியின் அறைக்குச் சென்று, அதனை திறந்து பின் கீழிறிங்கும் படிகளில் இறங்க வேண்டும். அப்படியே வாசலில் போய் வீட்டு கதவை திறந்துவிடலாம். ஆனால் இதனை செய்ய, மாடியறை சாவி, வீட்டு சாவி எல்லாம் வேண்டும்.
ஆர்கலியிடம் ஒரு செட் சாவி இருக்க, துணிகளை எடுத்து கொண்டவள், மாடியறைக்குச் சென்று அங்கே துணிகளை காயப்போட்டு விட்டு இறங்க, நெப்போலியன் கதவைத் திறந்து கொண்டிருந்தான்.
“துணி காய வைச்சியா..?” என்று கேட்டுக்கொண்டே அவள் கையில் இருந்த பக்கெட்டை வாங்கியபடி உள்ளே போனவன், சமையலறைக்குள் சென்று,
“டீயா காபியா உனக்கு என்ன வேணும்..?” என்று அவளிடம் கேட்டிட,
“காபி போட்ட உன்னை பிச்சிடுவேன்…. முதன்முதல்ல நீ காபி வாங்கிக் கொடுத்துட்டு அன்னிக்கே நான் வாந்தி எடுத்துட்டேன்.. ஒன்லி டீ தான்… அதுவும் மாமா போடுற இஞ்சி ஏலக்காய் ப்ளாக் டீ வேணும்..” என்று கேட்டவள், “எங்க போன…?” என்றாள்.
“அது மாமா வள்ளிம்மாவுக்கு மாத்திரை வாங்கித் தர சொன்னார்… மறந்துட்டேன்… தூங்கின அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு… நீயும் தூங்கிட்ட அதனால கதவைப் பூட்டிட்டுப் போனேன்…” பதில் சொன்னாலும் டீக்குத் தேவையானதைப் போட்டு கொதிக்க வைத்திட
அந்த வாசம் அவளை உள்ளிழுக்க, அவளும் அவனுடன் வந்து நின்று கொண்டாள். அருகில் வந்த ஆர்கலியைப் பார்த்தவன், அவள் வயிற்றை மென்மையாக வருடியபடி,
“எப்போ டி மார்கழி பாப்பா வரும்..?” என்றான்.
இந்த ஆறு மாதங்களில் அவள் அவனிடம் எத்தனையோ கேள்வி கேட்டாலும் அவளிடம் அவன் கேட்கும் ஒரே கேள்வி இதுவே.
“என்னடா வந்தா சொல்ல மாட்டேனா.. கையை எடு எனக்குக் கூச்சமா இருக்கு…” என்று சொல்ல“இன்னமுமா கூச்சம் போகல..?” என்று வியந்தவன்,
“வந்தா சொல்லுவ… ஆனா எப்போ வரும்? எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு…” என்றவன் குரலில் முழுவதும் ஆசை நிரம்பி நிறைந்திருக்க,
அவளுக்கும் ஆசைதான். ஆனால் அவனளவு இல்லை. இப்போதுதானே திருமணம் ஆகியிருக்கிறது என்றெண்ணியிருக்க, ஆறு மாதம் ஓடி விட்டிருந்தது.
“சீக்கிரமே வரும்டா. இப்படியே பேசிட்டு இருக்காத ஷ்யாம் சொன்னது மறந்து போச்சா… அதுவா வரும் அதுக்காக கவலையெல்லாம் படக்கூடாது… அதுவும் டென்ஷன் ஆகும்…” என்று சொல்ல,
அதற்குள் டீ கொதித்து இருக்க, இறக்கி அவளிடம் ஒரு கப்பை நீட்டியவன், அவளுடன் அவர்கள் வீட்டின் உள்முத்தம் அருகே உள்ள தூணில் சாய்ந்து காலை நீட்டியபடி அமர்ந்து,
“அன்னிக்கு ஒரு நாள் நீ எனக்குடீ போட்டு கொடுத்தியே ஞாபகம் இருக்கா…?” என்று அவளிடம் கேட்டான்.
“என்னிக்கு..? நிறைய நாள் போட்டு கொடுத்திருக்கேனே..?” என்று அவள் யோசிக்க அவள் தலையில் தட்டியவன்,
“சண்டை போட்டா மட்டும் கரெக்டா ஞாபகம் வைச்சு சொல்லத் தெரியும்… ஒரு நாள் மழை டீ கடலை…” என்று சொல்லவும்,“ஞாபகம் வந்துடுச்சு…” என்று அவள் சிரிக்க,
அவளையே பார்த்தவன்“எனக்கு ஒரு டவுட் கேட்கட்டுமா..? கேட்டா அதனால சண்டை போடக்கூடாது..” என்று அவன் முன்னெச்சரிக்கையாகச் சொல்ல
“கேள்வி கேட்டா சண்டை போடுறது இந்த வீட்ல நீயா நானா..?” என்று நீயா நானாவை தொடங்கிட, “ஏய் கேள்வியே கேட்கல அதுக்குள்ள சண்டை ஆரம்பிக்கிற…. சொல்றதைக் கேளு…” என்றான்.
“சொன்னாதான் கேட்கமுடியும்.. சொல்லு..”
“இல்ல…. எல்லா குழந்தைகளும் எப்பவும் அம்மா கூட தான் இருக்கும்… வள்ளிம்மாவை உன் தாத்தா அழைச்சிட்டுப் போகும்போது நீ ஏன் அவங்கக்கூட போகல…?” என்று கேட்டான்.
கேட்க கூடாதென்றில்லை. கேட்கும் சூழல் இல்லை. அவனும் அம்மாவும் பொண்ணும் ராசியாவார்களா என்று பார்த்திருந்தான். அதுநடக்கவே இல்லை. ரவிவர்மன் இப்போது அத்தை பற்றி ஆர்கலியிடம் பேசுவதில்லை. பேசி வாங்கிக் கொண்டதே போதும் என்று நினைத்தான். மாணிக்கத்திடம் பேசினால் அவரோ,
“ஆரு இஷ்டம் மாப்ள… அவளா பேசினா பேசட்டும். இவ பாட்டுக்குப் போய்டுவா. திரும்பி வந்ததும் பேசனும்னா எப்படி பேசுவா விட்டுடு..” என்றிட, இவனுக்கு தான் மனம் தாளவில்லை.
“எனக்கு இஷ்டமில்லை… போகல…” என்று அவள் இயல்பாய் சொல்ல“என்னடி நீ.. அப்போ உனக்கு ஆறு வயசு தானே. ஏன் போகல. அம்மாவை விட்டு எப்படி இருந்த..?”
“நான் எப்பவும் எங்க தாத்தா கூட தான் சுத்துவேன்… தூங்க தான் அம்மா வேணும் எனக்கு… ஆனா அப்பா இல்லாம என்னை அம்மா கூட தாத்தா அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டார். அவங்களோட பணக்கார புத்தி எனக்கு வந்துட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பார். அப்பாவையும் அவங்களோட வைச்சிக்குவாங்களோன்னு மாமியார் வீட்டுக்குக் காலையில போனா நைட்க்குள்ள வீட்டுக்கு வந்துடனும்..”
அவள் சொல்வதைக் கேட்டபடியே, நெப்போலியன் அவளது மடியில் படுத்துக் கொண்டான்.
“ரவிக்கு லீவுன்னா மட்டும் தான் அம்மா என்னை அழைச்சிட்டுப் போவாங்க. அவன் விளையாடுவான் என்னோட. இல்லன்னா நான் போகவே மாட்டேன் பிடிக்காது. அந்த தாத்தா சும்மா இதை தொடாத, அதை தொடாத, அதுல குதிக்காதன்னு ஆர்டர் போடுவார்…