ஆனா எங்க தாத்தா அப்படி இல்ல.. மண்ணுல நல்லா விளையாட விடுவார். பம்பரம் விடுறது, பாண்டி ஆடுறது, வாய்க்கால்ல நீச்சல் அடிக்கிறதுன்னு… அது மட்டுமில்லாம எங்களது கிராமம். அவங்க வீடு திருச்சில சிட்டில. இதுல எங்க தாத்தா அப்பாவை எல்லாம் இடையில திட்டிட்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. என்ன பேசுறாங்கன்னு புரியற வயசில்லன்னாலும் நம்ம தாத்தா அப்பாவை பேசுறார்னு தெரியாதா என்ன..?”
“அன்னிக்கும் அப்படிதான் வந்து சத்தம் போட்டார்… அம்மாவை கூப்பிட்டார், அவங்க என்னை கூப்பிட்டாங்க… என் தாத்தா என் பேத்தியை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க… எப்பவும் போல அடுத்த நாள் வந்துடுவாங்கன்னு நினைச்சோம்… நான் இல்லாம போன ஒரு நாளுக்கு மேல தங்க மாட்டாங்க, வந்துடுவாங்க. ஆனா வரவே இல்ல..” என்றாள் பெருமூச்சோடு.
“அன்னிக்கு நான் வரல. அடுத்த நாள் வரனும் தானே அவங்க. ஐஞ்சு வருஷம் கழிச்சுப் பார்த்தேன் என்னோட ஸ்கூல்ல… அப்பவும் அவங்க அப்பா என்னை மட்டும் அவங்க கூட வர சொன்னாங்க… நான் முடியாதுன்னு கத்தி அனுப்பிட்டேன்… அவ்வளவுதான்..”
“வயசான பாவமெல்லாம் போயிடுமா…? இந்த ஓவர் நல்லவனா எல்லாம் பேசாத கடுப்பாகுது எனக்கு..” என்று அவனை மடியில் இருந்து தள்ள, அவளைத் தள்ள விடாமல், இடையை சுற்றி கைப்போட்டுக்கொண்டவன்,
“இதான் டி உங்கிட்ட பிரச்சனையே… வேற விஷயம் பேசுறோம் அதுக்காக என் மேல கோவப்பட்டு என்னைத் தள்ளி விடுவியா…?” என்றான் கோபமாக.
“பின்ன… ஓவரா பண்ற ரஞ்சி ஒரு வார்த்தை சொல்லிட்டான்னு அவங்கிட்ட நீ எவ்வளவு சீன் காட்டுற… அவங்கிட்ட நீ நல்லா பேசினா என்ன..? எனக்கு மட்டும் அப்படியே மகான் மாதிரி அட்வைஸ் போடா..” என்று அவள் சொல்ல,
“ஹாஹா ஏன் டி என்னால என் மாமனார் கிட்ட சீன் போட முடியுமா..? இல்லஉங்கிட்ட போட முடியுமா… நீ விடுவியா…. நீங்க எல்லாம் எப்பவும் போல நடத்துறீங்க.. அவன் தான்டி என்னை உங்க வீட்டு மாப்பிள்ளையா கெத்தா ஃபீல் பண்ண வைக்கிறான். சும்மா மச்சானை சீண்டினா. அதையும் இதையும் ஒன்னா பேசுவியா நீ..?” என்றிட அவனை முறைத்தவள்,
“அவங்க அம்மாவா என்ன செஞ்சாங்க எனக்கு..? ஏதோ அப்பாவுக்காகத் தான் அவங்க இருக்கட்டும்னு விட்டு வைச்சிருக்கேன்… என்னோட கோபமெல்லாம் அவ்வளவு லேசுல போகாது.”
“போகாதுதான் ஆனா அவங்க அம்மாவா உனக்கு ஒன்னும் செய்யல… நீயும்ஒரு மகளா அவங்களுக்கு எதுவும் செய்யலதானே? அப்ப அவங்களுக்கும்உனக்கும் என்ன வித்யாசம்…? செஞ்சாதான் திருப்பி செய்வேனா அது கடன். அன்பு இல்ல…” என்று அவன் அழுத்தமாக சொல்ல அவன் பேச்சு அவளை அவ்வளவு கோபம் கொள்ள வைக்க, மடியில் இருந்தவனை பலம் கொண்டு தள்ளிவிட்டு,
“புருஷனா நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் நினைச்சியா..? அவங்களால நான் எவ்வளவு கஷ்டம் ஃபேஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா..? போடா உன்னை மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது. வந்துட்டான் அட்வைஸ் பண்ண..” என்று பொரிந்துத் தள்ளியவள் எழுந்துவிட
அவள் தள்ளிவிட்டதில் தரையில் விழுந்தவன் அப்படியே கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு, தரையில் படுத்தபடி, “உன்னை எல்லாம் மாத்தவே முடியாதுடி..” என்று கத்தினான்.
“அதே தான்டா நானும் சொல்றேன்..” என்று அவளும் பதிலுக்குக் கத்தினாள்.
எப்படியோநாட்கள் ஓடி விட, அதன் பிறகு அம்மா பற்றிய பேச்சை அவன் எடுக்கவே இல்லை. தொடங்கியதை அவன்தொடரவுமில்லை. அதை முடிக்கவுமில்லை. வழக்கம்போல் மாலையில்நெப்போலியன் ஆர்கலியை அழைத்து வந்து வீட்டு வாசலில் இறக்கி விட,
“உள்ள வா பேசனும்…” என்று ஆர்கலி சொல்ல“என்ன ஆரு…. எனக்கு வேலை இருக்கு… நைட் சொல்றியா..?” என்றிட
“நைட் சொல்ல இப்ப ஏன் கூப்பிடனும்..?” என்றவளின் குரல் உள்ளே சென்றிருக்க,வண்டியை ஸ்டாண்ட் போட்டு விட்டு அவளுடன் வீட்டிற்குள்நுழைந்தவன், அவள் அறைக்குள் சென்று அப்படியே மெத்தையில் அமர,
“என்னடி சொல்லனும்..” என்று அருகே உட்கார்ந்து கேட்டான்.
“நான் யூ.எஸ் போறேன்..” என்று சொல்லி அவன் முகம் பார்க்க,
“என்ன… தீடீர்னு..?”
“என்னோட ப்ராஜக்ட் இது… கண்டிப்பா போயாகனும்…”
முன்பு தான் சண்டை போகும்போது கூட சொல்லாமல் சென்றாள். ஆனால் இப்போது போகவா என்று கணவனாக என்னிடம் கேட்டிருக்க வேண்டாமா..? என்ற எண்ணம் எழ,
“போறேன்னு வந்து சொல்ற…. போகட்டுமான்னு கேட்க மாட்டியா.?” என்றான் உடனே.
“ஆபிஸ் விஷயத்துக்கு உன்ட்ட ஏன் கேட்கனும்..” என்றாள் இயல்பாக.
ஆர்கலி எப்போதுமே அவள் முடிவுகளை அவளே எடுத்துதான் பழக்கம். ஆனால் அது அவள் கணவனுக்குப் புரியவில்லை. உள்ளம் உதைத்தது. வரதராஜன் எது செய்வதானாலும் அவனிடம் சொல்லிவிட்டே செய்வார். அப்படி இருக்கும்போது அவள் செயல் சுருக்கென இருந்தாலும்காட்டிக் கொள்ளவில்லை.
என்னதான் வேற்றுமைகள் இருந்தாலும், உள்ளுக்குள் கிளர்ந்தாலும் ஒற்றுமையான பொழுதுகளில் அதனை ஒதுக்கி வைக்க கற்றுக்கொண்டான். அவள் படித்த பெண். அவள் முடிவுகளை அவளே எடுக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டான்.
அடுத்த நான்கு நாட்களில் அவள் யூ.எஸ் கிளம்பிட, அவனும் அவளும் மட்டுமே ஜீப்பில் ஏர்ப்போர்ட் சென்றனர். ஏர்ப்போர்ட்டில் அவனது கையை விடாமல் பற்றியிருந்தாள் ஆர்கலி.
“நான் ஊருக்குப் போறேனே… உனக்குக் கொஞ்சம் கூட ஃபீலிங்க்ஸே இல்லையாடா..? அப்படியே சிரிச்சிட்டு இருக்க..” என்று அவள் கடுப்பாக கேட்க,
“அட நானே எப்போ நீ போவ… என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா ஸ்டேட்டஸ் போடலாம்னு அந்த டெம்ப்லேட் எடுத்து வைச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்..” என்று அவளை வம்பிழுக்க,
ஆர்கலிக்கு அழவும் முடியவில்லை. இது அவளது உழைப்பிற்கான வெற்றி. இப்போது டீம் லீடாக இருக்கும் அவளுக்கு அடுத்து இன்னும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்க, இதை விட முடியாது.
ஆனாலும் அவ்வளவு தூரம் நிலம் தாண்டி, கடல் தாண்டி கணவனைப் பிரிந்து போவது என்பதுஅவளை இயல்பாக இருக்கவிடவில்லை. நெப்போலியனுக்கும் மனதில் சோகம் இருந்தும் அதனை அவளிடம் காட்டவில்லை. அவளது படிப்பு, அதன் உழைப்பு. அதற்காக அவள் மகிழ்ச்சியாகப் போய் வர வேண்டும் என நினைத்தவன் அவளை சீண்டி வம்பிழுத்துக் கொண்டே இருந்தான்.
“போ…” என்று அவள் முகம் திருப்பிக் கொள்ள, அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பியவன், “அழகா இருக்கடி…” என்று ரசித்து ரசிகனாக ரசனையாக சொல்ல,
“அழுதுட்டு இருக்கேன்… அழகா இருக்கேன்னு சொல்ற நீ..” என்று அவள் முறைத்திட
“அழறியா ஏன்.?” என்று தோளோடு அவளை அணைத்துக் கொள்ள,அமைதியாக அவன் அணைப்பில் இருந்தாள். சிறிது நேரத்தில் அவள் கிளம்ப வேண்டி இருக்க, எழுந்து கொண்டாள்.
“ஒழுங்கா சீக்கிரம் வீட்டுக்கு வா. மாமாவை பார்த்துக்கோ அப்பாவை பாரு காயு, ஷாலு எதாவது கேட்டா செஞ்சு கொடு….” என்று அவள் பேசிக் கொண்டே போக,
“போதும் போதும். ஆனா ஒன்னுடி இரண்டு மாசம் உன் கேள்வி எல்லாம் இல்லாம நான் ஜாலியா இருப்பேன்..” என்று கண்ணடிக்க,
“உன்னை கொஞ்சமாச்சும் ஃபீல் பண்றியா நீ… எரும எரும..” என்று கோபத்தில் திட்டினாள்.
“மனுஷனுக்கு மரியாதை தரியா நீ..” என்றபடி அவளை அணைத்துக் கொண்டவன், “நான் எல்லாரையும் பார்த்திருக்கேன், நீ கொஞ்சம் கூட வெயிட் குறையாம வர…. வேலை செஞ்சு உடம்பைக் கெடுத்துக்கிட்ட வேலைக்கே அனுப்ப மாட்டேன்.. ஆரு நான் விளையாடல..” என்றான் மிகவும் சீரியசாக.
“சரி சரி… நல்லா குண்டா ஆகி வரேன். அப்புறம் உனக்கு தான் என்னை சுத்த கஷ்டம்…” என்று ஆர்கலி அவன் நெஞ்சோடு சாய்ந்தபடி சொல்ல, “நீ எப்படி இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கும்… உன்னை சுத்துறது எப்பவும் எனக்குக் கஷ்டமில்லை..” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,
“பார்த்து பத்திரமா போய்ட்டு வா..” என்று சொல்லி அனுப்பினான் போகும் அவளை விழியில் நிறைத்தபடி.
ஆர்கலி சென்றபின் அவள் கண்விட்டு மறையும் வரை அங்கிருந்தவன் அதன்பின்னே தான் வீட்டிற்குச் சென்றான். போகும்போதும் அவளை வழியனுப்பியவன் வரும்போது வலி தருவான், அழ விடுவான் என அவளும் நினைக்கவில்லை. அவனும் நினைக்கவில்லை.