“என்ன மாப்ள காலையில இருந்து கடைப்பக்கம் கூட காணோம் ரொம்ப வேலையா..?” என்று மாணிக்கவாசகம் கேட்க“ஆமா மாமா.. போன இடத்துல லேட் ஆச்சு..” என்றவன் அறையைப் பார்க்க,
“இப்போதான் ஆரு உள்ள போனா.. போய் பாரு..” என்றதும் அவன் அறைக்குள் நுழைந்து, கதவை சாற்றிவிட்டு ஆர்கலியைப் பார்க்க அவன் வந்தவுடனே ஒரு முறை பார்வையால் நிறைத்துகொண்டவள்அமைதியாக கட்டிலில் உட்கார்ந்திருக்க,
“ஆரும்மா… கோபமா..?” என்றபடி அவளை நெருங்கி உட்கார,அவள் பேசவே இல்லை. மௌனத்தால் அவனை தாக்கிட,
“கொஞ்சம் வேலை இருந்துச்சு… அதான் வரல சரி தப்புதான்… இப்போ பேசுடி எப்படி இருந்துச்சு அமெரிக்கா…?” என்று அவள் கையைப் பற்றிட, அவளோ உடனே உதறியபடி,
“ஏன் வரனும்..? அதெல்லாம் நீ வரவேண்டாம். நான் ஒன்னும் அவ்வளவு முக்கியமில்லை….நீ என்ன செஞ்சாலும் நான் கேட்க கூடாது. கேட்டா உனக்குப் பிடிக்காது… உனக்குப் பிடிச்சா நான் பேசனும் இல்ல பேசக்கூடாது… அப்படித்தானே..?” என்று ஆவேசமாகக் கேட்க, அவள் தோள்ப் பற்றியவன்,
“அப்படியெல்லாம் இல்லடி…” என்றவனை மறுத்தாள்.
“அப்படி தான்… நீ இப்படி தான் இருப்ப, நான் மட்டும் உன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். உன் இஷ்டப்படி நீ நடப்ப எல்லாம் என் தப்பு தான்…”
“என்ன தப்பு…?” என்று அவன் அவள் முன் நின்று கேட்க,“நீ வருவ வருவன்னு லூசு மாதிரிநினைச்சது என் தப்பு…. என் வீட்டுக்காரனுக்கு என் மேல ரொம்ப பாசம்னு நினைச்சது தப்பு… எல்லாமே தப்பு…” என்றவளுக்குப் பேசும்போதே கண்ணில் இருந்து நீராகக் கொட்ட,அவள் முன் நின்றவன் அப்படியே அணைத்துக் கொண்டு,
“ரொம்ப மாசம் கழிச்சு பார்க்குறேன்… சண்டை போடாத….” என்றவனின் கைகளை அவளை அழுத்தமாக அழுத்திட, ஆர்கலி அவனை முறைத்தபடி விலகிட அவன் இழுக்க, அவள் தள்ளவென அப்படியே அவள் கட்டிலில் விழுந்துவிட, நெப்போலியன் அவள் மேல் விழுந்தான்.
அவன் பாரம் அவள் தாங்கமாட்டாள் என்று புரிந்தவன், அவளை விட்டு மெல்லமாக விலகி, ஆனால் பிடியை விடாமல் அணைத்து இருக்க, “நான் சண்டை போடுறேனா…? ஒரு போன் பண்ணி வேலை இருக்குன்னு கூட உன்னால சொல்ல முடியல…. நான் தான் பைத்தியக்காரி மாதிரி உனக்குப் போன் பண்ணி பேச்சு வாங்கிக் கட்டிக்கனும். முதல்ல என்னை விடுடா நீ வேணும்னா ஒட்டிப்ப வேண்டாம்னா பேசக்கூட மாட்ட…” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள,
அவன் அசையாமல் ரசனை விரவிய விழிப்பார்வையால் அவளைப் பார்த்திட, கரங்கள் அவளை வருடின. நான்கு மாதங்கள் கழித்து அவளைநேரில் பார்க்க, நேசமாகப் பார்த்திருந்தவன்,
“என்ன சொன்னேன் உங்கிட்ட ஒழுங்கா சாப்பிடனுமா இல்லையா…? இளைச்சுப் போயிருக்க…” என்று சொல்ல அவனது கரங்களின் செயலில் கூச்சம் வர, அதைவிட கோபம் பெருக,
அவள் பேச்சும் அதன் அழுத்தமும் அவன் கையை எடுக்க வைக்க, அவளை விட்டு தள்ளிப்படுத்தவன், “இப்போ நான் சொல்றதைக் கேட்க போறியா இல்லையா..?” என்று ஆர்கலியின்முகம் நோக்கிட
“நீ சொன்னா நான் கேட்கனுமா முடியாது..” என்று அவள் கோபத்தில் பேச,“சரிடி ராங்கி கேட்காத… ஆனா இங்க இருந்து சண்டை போடவேண்டாம்… நம்ம வீட்டுக்குப் போகலாம் வா..” என்று சொல்லி அவன் கட்டிலை விட்டு இறங்கிட,
“நான் வர மாட்டேன் எல்லாம் உன் இஷ்டமா..? எனக்கு எப்போ இஷ்டமோ அப்போ நான் வரேன்… நீ போ..” என்று சொல்லி மெத்தையில் முகம் புதைக்க,
“அப்போ சரி எனக்கொன்னுமில்லை… மாமனார் வீட்ல ஜாலியா டேரா போட்டுடுவேன்…. என்னை நல்லா கவனிப்பாங்க…” என்றவன் அங்கிருந்தநாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவளை கிண்டலாகப் பார்த்தான்.
அவன் பேச்சில் மெத்தையை விட்டு எழுந்தவள், “என்ன நீயும் இருக்கப் போறியா..? அதெல்லாம் முடியாது, என்னை தனியா விடேன்…” என்று பல்லைக் கடிக்க
“அப்படி தனியா எல்லாம் விட முடியாது…. இருந்தாநானும் உன் கூட இருப்பேன்.. இல்லன்னா நம்ம வீட்டுக்கு வா…” என்று பிடிவாதமாக உட்கார்ந்திருக்க, அவளும் மெத்தையில் அப்படியே கண் மூடி முகம் புதைத்திருக்க,
அவன் போய்விடுவான் என்று பார்க்க, அரை மணி நேரமாக அவன் அசையவில்லை. ஆர்கலிக்கு அவ்வளவு வேகமும் கோபமும் வந்தது. எப்போதும் அவள் அவனுடன் இங்கே இரவில் தங்க மாட்டாள்.
அது என்னமோ தங்கைகள், தம்பி இருக்கும்போதுஒரு தயக்கம் இருக்க, இரவில் வெகு நேரம் அனைவரும் உட்கார்ந்து பேசினாலும் தூங்கும்போது வீட்டிற்கு போய்விடுவார்கள். இன்று தான் இவ்வளவு நேரம் அறையை மூடிவிட்டு அவனுடன் அவள் இருக்க, அதையெல்லாம் தெரிந்து தான்நெப்போலியன் வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்க,எதுவும் பேசாமல், பரபரவென்று எழுந்து கொண்டவள், அறைக்கதவைத் திறந்து வெளியே போக, நெப்போலியனும் பின் தொடர,
“அப்பா…. நாளைக்கு வரேன்ப்பா இப்போ கிளம்புறோம்..” என்று சொல்லிவிட்டு வெளியே போக, அவனும் விடைப்பெற்று வந்தவன் அவனது பைக்கை எடுத்து, “நடக்க வேண்டாம் வண்டியில..வா..” என்று சொல்ல,
“இங்க இருக்க வீட்டுக்கு ஏன் வண்டியை எடுக்கிற… போ நான் வரமுடியாது..” என்றாள்.
“வரலன்னா மாமாவை கூப்பிடுவேன்..” என்று அவன் மிரட்ட“உயிர வாங்குறடா நீ..” என்று திட்டிக்கொண்டே ஏறினாள்.
வீட்டில் இறங்கியதும் விறுவிறுவென்று அறைக்குள் சென்று அப்படியே போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அவள் கண்மூட,
“நான் வந்திடலாம்னு தான் நினைச்சேன் டி… முடியலன்னதும் தான் உன் தம்பியை அனுப்பினேன்…”
“மார்கழி நாலு மாசம் ஆச்சு உன்னைப் பார்த்து…. முகம் கொடுத்து பேசவாச்சும் செய்டி…” என்று அவன் அவள் அருகே படுத்துக்கொண்டுகெஞ்சலாகக்கேட்க
“ஏன் பேசனும் நல்லாயிருக்கு நீ பேசுறது. அதே நாலு மாசம் ஆச்சு உன்னைப் பார்க்கலாம்னு ஆசையா வந்தேன்… அழைக்க தான் வரமுடியல… அதை முன்னாடியே சொல்லத் தெரியாதா உனக்கு…? அத்தனை தடவ போன் பண்ணினேன் எடுக்கவே இல்ல.. எடுத்தப்பவும் அப்படி கத்துற… இப்போ உன் வேலையெல்லாம் முடிஞ்சதும் நீ எங்கிட்ட வருவ. நானும் அப்படியே எதுவும் நடக்காத மாதிரி உங்கிட்ட சிரிச்சுப் பேசனும் அப்படி தானே…?”
“அதெல்லாம் எங்கிட்ட நடக்காது… என்ன பண்ணினாலும் இவ நம்ப பின்னாடி வரான்ற ஏத்தம் தானே உனக்கு…?” என்றாள் அழுகையோடு.
ஆர்கலிக்கு அந்தநிமிடம் அவ்வளவு கோபமாக இருந்தது. அவளுக்கு நன்றாகவே புரிந்தது ஏதோ முக்கியமான வேலை அதனால் வரவில்லை என்று. ஆனால் மனம், அது வலிக்கவே செய்தது. பிரிவினில் பெருகியிருந்த பாசம் காதல் அளவுக்கு அதிகமாக முதல் முறையாக அவ்வளவு எதிர்ப்பார்ப்போடு வந்துவிட்டு சந்தித்த ஏமாற்றம். அது தந்த தடுமாற்றம். எல்லாம் அவளை ஒன்றாய்த் தாக்கிட, தாங்கிட முடியவில்லை ஆர்கலியால்.
அழுதவள் பின் கண்களைத் துடைத்துக் கொண்டு ,அமைதியாகி விட, நெப்போலியனுக்கு எப்படி சமாளிக்கவென்றே தெரியவில்லை. அவனது கனவுகள் பெரிதாக இருக்க, அதற்கான முயற்சிகளும் பெரிதென இருக்க, பணத்தேவைகள் வேறு. இதுவரையில் அவனுக்கு இப்படியான தேவைகள் வந்ததில்லை.
பல லட்சங்கள் பணத்தின் தேவை இருக்க, ஒரே பாடலில் ஒரேகாட்சியில் எல்லாம் ஓஹோ என்றெல்லாம் வர முடியாதே. அவனுக்கு முதலீடு செய்து தொடங்கவே முழுதாக ஆறு மாதங்கள் ஆக, அன்று தான் லோனுக்காக அலைந்து கடைசியில் கிடைத்தது.
அதனையும் விட ஒரு நம்பகமான பெரிய டீலர்ஷீப் தியாகராஜன் மூலம் கிடைத்திருக்க, அது சம்பந்தமாகப் பேச போயிருந்தான். அப்போதுதான் ஆர்கலி போன் செய்ய, அவள் கத்தவும் அவனுக்கு இருந்த டென்ஷனில் கத்திவிட, அது எல்லாம் அந்த நொடி நேர எரிச்சலே. இரவு மணி பத்தாகிவிட, வெளியே வந்து வரதனைப் பார்த்தவன் அவர் சாப்பிட்ட பின், மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்து உறங்க வந்தான்.
காலையில் பாக்கு மரங்கள் நிறைய தேவையாக இருக்க,அதனை வாங்க சீக்கிரமே எழுந்து சென்றிருக்க, அதன்பின் பேங்கிற்குச் சென்றது. அது முடித்து ஆர்டர் விஷயமாகப் போனது. அதைத் தொடர்ந்து அவனது ஷோரூம் வேலைகளைக் கவனிக்க போவதென அவ்வளவு அலைச்சல் அவனுக்கு.
இடையில் சாப்பிட கூட நேரமில்லாமல் சுற்ற, ஆர்கலியைப் பேசிவிட்டோமே என்று அந்த வருத்தம் வேறு. அவளுக்கு இருக்கும் கோபத்திற்கு சமாதானம் ஆகமாட்டாள் என்று புரிந்து அமைதியாக அவன் படுக்க வர,அடுத்த நாள் காலையிலும் வேலை இருக்க, அலாரம் வைக்கவென போனை மெத்தையில் தேட, அவள் கை மீது இவன் கை பட்டுவிட
“நீஎன்ன சமாதானம் செஞ்சாலும் இந்த தடவ நான் உங்கிட்ட பேசமாட்டேன்…” என்று கத்த அலைச்சல் அதனால் வந்த உறக்கம் எல்லாம் அவனையும் கோபம் கொள்ள செய்ய,
“அடி போடி… உன்னை யார் சமாதானம் செஞ்சா நீஇப்படியே சண்டை போட்டுட்டே இரு..” என்று கடுப்பில் பேசியவன் கண்மூடி உறங்கிவிட,
ஆர்கலிக்கு “ஓ சமாதானம் செய்ய கூட மாட்டானா…?” என்று இன்னும் கோபம் வர அவனை பார்க்க, இருந்த களைப்பிற்கு அவன் படுத்தவுடனே உறங்கிவிட்டான்.