வீட்டிற்கு வந்த வரதராஜன் வீடும் சமையலறையும் இருந்த கோலம் கண்டு பதறினார். எப்போதும் அவர்கள் இருவரும் தான் சமைத்து சாப்பிடுவது. எப்போதாவது வெளியே வாங்கிக் கொள்வார்கள்.
நெப்போலியனுக்கு வெங்காயம் என்றாலே ஆகாது. கொஞ்சம் உரிக்கத் தொடங்கினாலே முகமெல்லாம் சிவந்துவிடும். தானாக கண்ணில் இருந்து காவேரி கொட்டத் துவங்கிடும். வரதன் அவனை வெங்காயம் வெட்டவே விடமாட்டார். அவனும் வெட்ட மாட்டான்.
ஆனால் அன்று மாலை ஆர்கழியோடு நடந்த களேபரத்தில் நெப்போலியனுக்குள் ஒரு அழியா நெருப்பினை விதைத்து விட்டிருந்தாள் அவள்.
அவனைப் பயப்பார்வை பார்த்தவர்கள் உண்டு. மரியாதையாக பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அலட்சியமாக யாரும் பார்த்ததில்லை. அதுவும் ஆர்கழியின் அப்பார்வை?!
‘ரௌடி’ என்றவளின் வாய்மொழியை விட விழிமொழியே இவனை சுட்டது. அவளின் ஆழ விழிகள் அவனைக் கண்ட பார்வையில்…பார்வையால் ஒருவரை கீழாய் உணர வைக்க முடியுமா..?
‘நீயெல்லாம் ஒரு ஆளா..?’ என்பது மாதிரி ஆர்கழியின் கண்கள் இவனைக் கண்டதே இவனை தவிக்கவும் தகிக்கவும் செய்தது. அந்த கோபத்தில் அவன் பாட்டிற்கு சமையலில் இறங்கிட, அகமெல்லாம் ஆர்கழி மீதான வன்மமும் அவள் பார்வையுமே இருந்திட, வேர்க்க விறுவிறுக்க வெங்காயத்தை வெட்டத் தொடங்கினான்.
“டேய்! என்னாச்சு உனக்கு? இப்படியா வெங்காயம் விக்கிற விலையில… வெங்காயத்தை வெட்டித் தள்ளுவ…உனக்குத் தான் ஒத்துக்காதே டா. அப்புறம் ஏன் இதெல்லாம் பண்ற?” என்று வரதன் வந்து கத்தவும் தான் , என்ன செய்கிறோம் என்று புரிய வேகமாக எழுந்தவன் குளியலறைக்குள் போய் புகுந்து கொண்டான்.
குளித்து விட்டு வந்த போதும் அவனின் கன்னமும் கண்ணும் சிவந்திருக்க,
“என்னாச்சு டா உனக்கு? வெங்காயம் வெட்ட மாட்ட….தினமும் குடிக்க மாட்ட. இப்படி நான் வந்தது கூட தெரியாம இருக்க என்ன பிரச்சனை? சொல்லுடா, எவனா இருந்தாலும் பார்த்துக்கலாம்..” என்று வரதராஜன் வேட்டியை மடித்துக் கட்ட,
நெப்போலியனுக்கு நெடு நேரமாக காணாமல் போயிருந்த புன்னகை மீண்டது.
“அதெல்லாம் ஒன்னுமில்ல விடு….எங்க பாட்டில்..?” என்று கேட்க,
“முதல்ல சாப்பிடலாம்…நான் தோசை ஊத்துறேன்….” என்று சொல்லி விட்டு வரதராஜன் போக,
வரதன் சொன்னது போல், எவனாக இருந்தாலும் இவன் பார்த்திருப்பான்.
அது அவளாக போனது தான் பிரச்சனை. அடிதடி எல்லாம் ஆண்களிடம் அவனுக்கு சகஜம் தான். ஆனால் பெண்களிடம் மரியாதையாக நடப்பான். வரதன் அப்படி தான் நடந்து கொள்வார்.
அவரைப் பார்த்து வளர்ந்தவன், அவரைப் போலவே வாழ்பவன்.
வரதன் தோசை ஊற்றித் தர, அதுவரை சமையல் மேடையில் உட்கார்ந்து சாப்பிட்டவன், சாப்பிட்டுக் கொண்டே வரதனுக்கும் ஊட்டி விட்டான்.
“நீ முதல்ல சாப்பிடுடா….” என்றார் வாஞ்சாயாக.
“உனக்கும் பசிக்கும் தானே….சாப்பிடு…” உரிமையாக இவன் ஊட்டிவிட,
“ஏன் நீ வெங்காயம் வெட்டின…?” அவனின் ஒவ்வொரு அணுவும் அறிந்தவர் ஆயிற்றே. ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் மனதுக்குப் புரிந்து போனது.
“வெட்டனும்னு தோணிச்சு வெட்டினேன், அதை விடு…சாப்பிடு” என்று அவர் தோசை ஊற்ற, இவன் ஊட்ட ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்டு முடித்து, அவன் ஐஸ் கட்டிகளைப் போட்டு வைனை ஒரே மடக்கில் குடித்தவன்,
“வரதா! இந்த வட்டி பிஸீனஸை விட்டுடலாமா…?” என்றான்.
“என்னது?! குடிச்சிட்டு உளறாத…நெப்போலி…” என்று வரதன் சொன்னவரும் ஒரு க்ளாஸில் வைனை ஊற்றி குடிக்க,
“இல்ல! விட்டுடலாம். நிஜமா சொல்றேன்….எதுக்கு கண்ட நாய் கிட்ட எல்லாம் நம்ம காசையும் கொடுத்துட்டு பேச்சு வாங்கனும்? அதான் ட்ராவல்ஸ் இருக்குல்ல. ரோட்டேஷன்ல விட்ட காசு வந்தா செகண்ட் ஹாண்ட் கார் இன்னொன்னு கூட வாங்கிடலாம்….” என்றான் தெளிவாக.
ஆனால் வரதனுக்கு தான் உள்ளே போன சரக்கில், அதன் வீரியத்தில் நெப்போலியன் உளறுகிறானோ என்று தோன்றியது.
வரதனோடு சுற்றுவதால் நெப்போலியனுக்கு எப்போதுமே மரியாதைக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் இப்படி கடனைக் கேட்டு வசூல் செய்து நாயாய்ப் பேயாய் அலைந்து, கண்டவளின் கண்டன பார்வையெல்லாம் பெறுவதில்லை அவனுக்கு விருப்பமில்லை.
விழியோ? மொழியோ? எய்தது போலவே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சொல்பவரின் நிலையிலே கேட்கப்படுவதுமில்லை.
பார்வைகள் பாஷைகள் மாறும்! அதன் பொருள் வேறாகும், சில நேரம் வேரிலிருந்தே மாறாகும்…!
“சரி, நாளைக்குப் பார்ப்போம். இப்போ தூங்கு” என்றவர் டீவியை ஆன் செய்து முரசு சேனலில் வைத்து விட்டு உறங்கிப் போக, அவர்கள் வீடு அந்த காலத்து வீடு.வீட்டினுள் உள்முற்றம் இருக்கும். மழை பெய்தால் அப்படியே தூறலாகவோ…சாரலாகவோ விழுந்து தேங்கி நிற்கும்.
அதன் அருகில் தான் வரதனும் நெப்போலியனும் உட்கார்ந்து குடிப்பார்கள். இன்றைக்கும் அப்படியே குடித்துவிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் படுத்திருக்க, பின்னிரவு தாண்டிய நேரம்.
மழைத்தூறல் அவனைத் தீண்டிட, கண்களை கசக்கி விழித்தவன் முற்றத்தின் வெளியே பார்க்க வானம் இருளாகத் தெரிய, அதில் நிறைந்திருந்தது கார்மேகம். பெருமழைக்கான அறிகுறித் தோன்ற, டிவியை ஆஃப் செய்தவன், வரதராஜன் மேல் தூறல் விழாமல் இருக்க, அவரை அப்படியே அலேக்காகத் தூக்கினான். படுக்கையில் சென்று அவரை விட்டவன் அருகிலேயே படுத்துக் கொண்டான்.
காலையில் வழக்கம்போல் வரதராஜன் முதலில் எழுந்து கொள்ள, அவனுக்குப் பிடித்த மாதிரி இஞ்சித் தட்டி, ஏலக்காய் சேர்த்து டீ செய்தார்.
எழுந்து வந்தவன் அதை குடித்துவிட்டு, குளிக்க சென்றவன் வெள்ளை சட்டையும் ஜீன்ஸூம் அணிந்து வந்தான். உடை விஷயத்தில் நெப்போலியன் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வான். வரதனும் எப்பொழுதும் வேஷ்டி சட்டையில் தான் சுத்துவார். ஆள் பாதி ஆடை மீதி என்பதை அறிந்தவர்கள்.
“சிங்கக்குட்டி மாதிரி இருக்கடா..” என்றார் சிரிப்போடு.
“ஓ! நான் சிங்கக்குட்டின்னா நீ சிங்கமா? இதுக்கு எதுக்குய்யா…வெள்ளையும் ஜொல்லையுமா திரியற? உன்னை சிங்கம்னு நீயே சொல்லிக்கிற…” என்று வம்பு செய்ய
“டேய்! என்னடா காலையில? நான் சிங்கமோ இல்லை…நீ சிங்கம் போதுமாடா?” என்று சொல்லிவிட்டு அவனை பார்க்க..அந்த மர நாற்காலியில் உட்கார்ந்தவன், கால் மேல் கால் போட்டுக்கொண்டு போனில் எதுவோ பார்த்தபடி,
“நேத்து நைட் நான் சொன்னதைப் பத்தி என்ன முடிவு பண்ணின..?” நெப்போலியன் வரதனிடம் கேட்கவும், அவரோ திகைப்புடன்,
“அப்போ நீ குடிச்சிட்டு உளறலையா..?” என்று கேட்டு விட, பொறுமை துறந்தவன்
“யோவ்! உன்னையெல்லாம் எத்தனை நாள் குடிச்சிட்டு உளறி இருக்கேன் நான்? குடிச்சிட்டு உளறினா….உங்கிட்ட காலையில இப்படி தெளிவா கேட்பேனா…?” என்றான் கடுப்பாக.
“அது சர! அதெல்லாம் நடக்கிற கதையில்ல… நீ சொல்றதெல்லாம் முடியாது” என்றார் மறுப்பாக.
“ஏன் முடியாது? எல்லாம் உன் காசுன்றதாலயா?” என்று இவன் கிண்டலாக கேட்க
“தொலைச்சுக் கட்டிடுவேன் உன்னை! என்ன உன் காசு…என் காசுன்னு பேசுற? படுவா… நானும் நேத்திலேர்ந்து பார்க்கிறேன். நீ ஆளே சரியில்ல. எதுக்கு தீடீர்னு விடனும்? காரணம் சரியா சொல்லு, நான் கேட்டுக்கிறேன். அதை விட்டு பிரிச்சுப் பேசின….அவ்வளவு தான்!” என்றார் அவ்வளவு கோபமாக.
“எனக்குப் பிடிக்கல!” என்றான் பிடிவாதமாக.
அவன் பிடிவாதம் பிடிக்க, அது அவருக்குப் பிடித்தவனின் வாதமாக இருக்க கண்டிப்பாக எதாவது காரணமாக சொல்வான் என்று புரிந்து,
“இதுவரைக்கும் கொடுத்தது மட்டும் இருக்கட்டும். இனிமே புதுசா கொடுக்கல, கொஞ்சம் பணம் கைக்கு வந்துட்டா….கார் வாங்கிடலாம். நான் ட்ராவல்ஸ் போறேன்…..நீ சீக்கிரம் வந்துடு..” என்று வாசல் வரை போனவர்
“உன்னை மிஞ்சி எனக்கு எதுவுமே பெருசில்லடா..” என்றார். நெப்போலியனுக்கு உருகிப் போயிற்று,
“யோவ்! வரதா ஐ லவ் யூஉ…!” என்றான்.
“ச்சீ! சீக்கிரம் வந்து சேருடா. மாஸ்கோவை போய் காரை சர்விஸ்ல இருந்து எடுத்துட்டு வர சொல்லு” என்றவர் அவனிடம் புன்னகையோடு விடைப்பெற்றார்.
ஆனால் மனதளவில் அவருக்குக் கவலையாக இருந்தது. தனக்குப் பின் என்னாவகுமோ இவன் நிலையென்று. இதுவரை கடன், வட்டி என்று வாழ்ந்த மனிதருக்குப் புதிதாக கவலை, வாழ்க்கைப் பற்றின பயம் எல்லாம் வரத் தொடங்கியது. எதுவும் அவரை நினைத்து அல்ல! நெப்போலியனை நினைத்தே!
அவருக்கு அவன் இருக்கிறான். அவனுக்கு??
********************
ஒரு மாதம் கடந்த பின்
ஓரளவு ஆர்கழியின் குடும்பத்தினர் காஞ்சிபுரம் வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டனர். பக்கத்து வீட்டோடு மட்டும் கொஞ்சம் பேச்சு வார்த்தை, அது தவிர யாரிடமும் அதிகம் வைத்துக் கொள்ளவில்லை.
ரஞ்சித் முதுநிலைப் படிப்பிற்கு சேர விண்ணப்பித்திருந்தான். அதற்கான கலந்தாய்வுக்காக காத்திருக்க, காயத்ரிக்கு தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அட்மிஷன் கிடைக்க, ஷாலினி அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் பள்ளியில் பதினொறாம் வகுப்பு சேர்ந்தாள்.
ஆர்கழி அப்போதுதான் வீடு வந்து சேர்ந்தாள். வந்ததுமே ஒரு குளியல் போட்டவள் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். ஷாலினி பாடம் படிக்க, காயத்ரி டிவி பார்த்துக் கொண்டே ரெகார்ட் எழுதினாள். ரஞ்சித் ஏதோ படித்துக் கொண்டிருக்க, மாணிக்கமும் டீவி முன் அமர்ந்திருந்தார்.
சமைத்து முடித்து விட்டு ஹாலில் அப்படியே கால் நீட்டி சாய்ந்து உட்கார்ந்தவள் தந்தையைப் பார்த்து புன்னகைக்க, காயத்ரி
“அக்கா! எனக்கு செல்போன் வேணும்” என்றாள்.
ரஞ்சித் உடனே,
“இப்ப எதுக்கு போன் உனக்கு?” என்று கேட்க
“நான் அவகிட்ட தானே கேட்கிறேன், உனக்கென்ன? நோட்ஸ்லாம் வாட்ஸப் குருப்ல அனுப்புவாங்க” என்றாள்.
“ரஞ்சி! நீ பேசாத! காயு இப்ப எதுக்கு மொபைல்? நானும் காலேஜ்ல படிச்சிட்டு தான் வந்தேன். நான் தான் ஏழு மணிக்கு வந்துடுறேன் இல்ல, அதுக்கு அப்புறமா என் போனை வைச்சிக்கோ. ஒரு ஒன் இயர் ஆகட்டும், நான் வாங்கித் தரேன்” என்று அமைதியாக சொல்ல, அதெல்லாம் காயத்ரிக்கு உரைக்கவில்லை.
“உன் போனையெல்லாம் என்னால யூஸ் பண்ண முடியாது. எனக்குன்னு ஒரு ப்ரைவசி வேண்டாமா? அவனுக்கு மட்டும் வாங்கிக் கொடுத்தாங்க தானே? என் ப்ரண்ட்ஸ்லாம் டென்த்ல இருந்து போன் வைச்சிருக்கங்களாம்” என்று காயத்ரி சொல்ல
மணி எட்டரை ஆகிவிட ஷாலினி ,
“அக்கா பசிக்குது” என்றாள். உடனே ஆர்கழி எழுந்து போய் அனைத்தையும் எடுத்து வைக்க, உதவிக்கு கூட காயத்ரியோ ஷாலினியோ செல்லவில்லை. செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
“காயு! சாப்பிட வா” என்று அழைக்க அவள் அமைதியாக அடமாக உட்கார்ந்து கொள்ள,
ஆர்கழிக்குப் பசி, மதியம் சாப்பிட்டது. மாலையில் ஒரு ஜீஸ் குடித்தாள், ஆனாலும் பசி இருக்க, சாப்பிடத் தொடங்கினாள்.
காயத்ரியைத் தவிர எல்லாரும் சாப்பிட்டு முடிக்க,
மாணிக்கம்,
“காயத்ரி! சாப்பிடுடா, சாப்பாடு மேல கோவம் காட்ட கூடாது. அக்கா கிட்ட நான் சொல்றேன். உனக்கு சீக்கிரமே போன் வாங்கித் தருவா” என்று சமாதானம் செய்ய,
“நான் எப்போ வாங்கித் தரேன் சொன்னேன்? சொன்னா சொன்னது தான்ப்பா! ஏன் நான் படிக்கிறப்ப போன் வைச்சிருந்தேனா? என்ன?ஹாஸ்டல் போன்ல தானே பேசுவேன். நான் சம்பாரிச்சு தான் போன் வாங்கினேன். சாப்பிட்ட சாப்பிடுறா இல்லன்னா கிடக்கட்டும்ப்பா…விடுங்க நீங்க..” என்று ஆர்கழி அழுத்தமாக சொல்ல
ரஞ்சித் உட்கார்ந்து தங்கையை சமாதானம் செய்தான். ஷாலினியோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படிக்க சென்றுவிட்டாள்.
“இங்க பாரு காயு! எனக்கு அப்பா போன் வாங்கித் தந்தாங்க, இப்ப அப்பா அம்மா இல்ல, அக்கா பாவம் தானே? இப்ப தான் உனக்கும் ஷாலுவுக்கும் ஃபீஸ் கட்டினா. கொஞ்சம் பொறுப்பா யோசி, முதல்ல வந்து சாப்பிடு டா” என்று பொறுமையாகப் பேச
“நான் சாப்பிட மாட்டேன், எனக்கு போன் வேணும்…” என்று அடமாக சொல்ல
“ஹே…! என்ன இந்த அடமெல்லாம் எங்கிட்ட வேண்டாம்..” என்று ஆர்கழி மிரட்டினாள்.
“போ! இதே அம்மா அப்பா இருந்திருந்தா இப்படி உங்கிட்ட எல்லாம் கேட்கிற நிலைமை வந்துருக்குமா எனக்கு?” என்று தேம்பியபடி காயத்ரி பேச
அவ்வளவுதான்! அதுவரையில் இருந்த அமைதி…பொறுமையெல்லாம் ஆர்கழிக்குப் பறந்துவிட,
“என்ன சொன்ன நீ? எவ்வளவு திமிர் உனக்கு? இந்த சின்ன வயசுல…இஷ்டம்னா இரு! இப்படி உங்கம்மா மாதிரி பேசுறதுன்னா உன் மாமா வீட்டோட போயிடு. இந்த மாதிரி பேச்செல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றாள் தயவு தாட்சயணமின்றி.
“அம்மாடி! என்னடா இது.?அவ வாய் மாறாது தெரியும் தானே?சின்னப்பொண்ணுட்ட இப்படி பேசுவியா நீ?சித்தி சித்தப்பா தானே இத்தனை வருஷம் நம்ம பார்த்தாங்க. பழசெல்லாம் மறக்கறது தப்புடா!” என்று மாணிக்கம் மகளைக் கண்டிக்க
“அவங்க அம்மா கையால சாப்பிட்டிருக்கேன். என் தங்கை…தம்பின்னு பாசம் இருக்கு. அதனால தான் நான் பார்க்கிறேன் அவங்களை. அவ அப்படி நினைக்கலயேப்பா?! அவ வாயும் மாறாது! என் வலியும் மாறாதுப்பா…” என்றவள் கோபமாக பின்வாசலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
காயத்ரிக்கு இன்னும் அழுகைப் பெருகியது. அப்பா அம்மாவை நினைத்து.
ஓராண்டுக்கு முன் ஒரு விபத்தில் ஷாலினியின் பெற்றோரும் காயத்ரியின் பெற்றோரும் மறைந்துவிட, அதன் பின் அவர்கள் படிப்பை முன்னிட்டு ஊரிலே இருந்தார்கள். சமையலுக்கு ஒரு ஆள் வைத்துக் கொண்டு. அடுத்து கல்லூரி என்று வருகையில் அவர்களுக்கு சென்னையில் படிக்க விருப்பம் என்பதை அறிந்தவள் தனிதனியாக ஹாஸ்டலில் விட்டால் பணம் செலவாகும், அதை விட அப்பாவும் ஷாலினியும் தனியாக இருப்பார்கள் என்பதையெல்லாம் யோசித்து அவள் அவர்களுக்காக ஒவ்வொன்றாகப் பார்த்து செய்ய காயத்ரியின் பேச்சு அவளைக் காயப்படுத்தியது.
காயம்பட்டவர்கள் கண்ணீர் மட்டும் வடிக்க மாட்டார்கள். சில நேரம் கல்லாகவும் மாறிவிடுவார்கள். ஆர்கழி அப்படியான ஒருத்தி தான். அதனால் தான் காயத்ரி பேச உடனே திருப்பிக் கொடுத்துவிட்டாள். ஆனாலும் கோபம் குறையவில்லை.
யாரும் யாரையும் சமாதானம் செய்யவுமில்லை…சண்டையிடவுமில்லை. அப்படியே கழிந்து போனது அவ்விரவு.
அடுத்த நாள் காலையில் மக்கள் எல்லாம் வேலை…கல்லூரி என்று சென்றிருக்க, ரஞ்சித் புத்தகம் வாங்க கடைக்கு சென்றிருக்க, மாணிக்கவாசகம் ஒரு முடிவோடு தன் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து மெயின் ரோடு சென்றார்.
ஒவ்வொரு கடையாக அவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போக, மாஸ்கோ அவரைப் பார்த்தவன் ,
பாவம் வயசானவர் நடக்க முடியல என்று நினைத்தவன்,
“என்னாச்சு சார்? என்ன வேணும்?” என்று அனுதாபத்தில் கேட்க
“அ…அது….தம்பி! எனக்கு எதாவது வேலை வேணும். அதான் பார்க்கிறேன்” என்றார்.
“எங்க அண்ணன் இருக்காரு சார். அவருக்கு இங்க எல்லாம் தெரியும், நம்ம கடைக்கு வாங்க…” என்றவன் அவரை ட்ராவல்ஸிற்கு அழைத்து செல்ல,
ட்ராவல்ஸின் உள் அறையில் உட்கார்ந்திருந்தான் நெப்போலியன்.
“இருங்க சார், எங்க அண்ணன்ட்ட பேசிட்டு வரேன்…” என்றவன் உள்ளே போக,
கண்ணாடி கதவின் வழியே நெப்போலியனைப் பார்த்தவர், அவனின் அன்றைய அடாவடி நினைவில் வர, அப்படியே திரும்பி நடக்க ஆரம்பிக்க,
அதற்குள் மாஸ்கோ நெப்போலியனிடம்,
“அண்ணே! அன்னிக்கு முத்துட்ட சண்டை போட்டப்ப ஒரு பெரியவரைப் பார்த்தோமே? நடக்க முடியாதவர்…பாவம்ணே, வேலை வேணும்னு கேட்கிறார்” என்று சொல்லியிருக்க…உடனே அது ஆர்கழியின் அப்பா என்பது நினைவில் வர, அவன் வெளியே பார்க்க அவர் போவது தெரிய,
‘அப்பனுக்கும் மவளுக்கும் ஒரே மாதிரி புத்தி போல..’ என்ற எண்ணமும் அதனோடு கோபம் வர, அறையை விட்டு வெளியே வந்தவன்,