தீடீரென தன் பின்னால் மிரட்டலாக நெப்போலியனின் குரல் கேட்கவும், நடக்க முடியாமல் தடுமாறினார் மாணிக்கம்.
“உட்காருங்க முதல்ல” என்று நெப்போலியன் அவர் நிலை கண்டு சொல்ல
“இல்ல! தம்பி பரவாயில்ல, நான் போறேன்” என்று மாணிக்கவாசகம் சொல்லவும்,
“உங்களை உட்கார சொன்னேன்” என்றான் அதட்டலாக.
உபசரிக்கிறானா உத்தரவிடுகிறானா என்று தெரியாமல் மாணிக்கம் விழிக்க,
மாஸ்கோவைப் பார்த்தவன்,
“ஹே! போய் டீ வாங்கிட்டு வா” என்றான்.
“இன்னும் உட்காரலையா நீங்க?” என்று கேட்டதும் அங்கிருந்த நாற்காலியில் தடுமாறி அவர் உட்கார்ந்து கொள்ள,
அவர் எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டவன்,
“என்ன விசயமா என்னை பார்க்க வந்தீங்க?” என்று கேட்க
“அது..வே..வேலை விசயமா தம்பி” என்று சொல்ல, அவரின் உடல் நிலை புரிந்தாலும் இந்த வயதில் வேலைத் தேடி வந்திருக்கிறாரே என்ற ஈரம் இதயத்தின் ஓரம் சுரக்க,
“அப்புறம் ஏன் போனீங்க?” என்று கேட்டான்.
“அது அன்னிக்கு” என்று அவர் தடுமாறினார்.
நெப்போலியனுக்கு அதுவரையில் ஓரமாய் இருந்த ஈரம் வேறொரு ஓரம் சென்று விட,
“பதில் சொல்லுங்க” என்றான் அதட்டலாக.
‘ஐயோ தெரியாம வந்துட்டேன் போலயே…இவன் பெரிய ரவுடிப்பயலா இருப்பான் போலயே’ என்று மனம் நினைக்க,
‘புது ஊரில் பிரச்சனையை இழுத்து விட்டோமோ ‘ என்று பயம் வேறு முளைக்க, அதை அவரின் பார்வை அப்படியே பிரதிபலித்தது.
‘அப்பனுக்கும் பொண்ணுக்கும் என்னை இப்படி பார்க்குறதே வேலை. அவ பார்வைக்கு இந்தாள் பார்வை பரவாயில்ல’ என்ற எண்ணம் ஓட, இதுவரையில் எங்கோ சென்றிருந்த ஆர்கழியின் விழிமொழி மீண்டும் அகத்தில் அமர்ந்து அவனை இம்சிக்க, உச்சி முதல் பாதம் வரை உறுகோபம் கொண்டான்.
அதற்குள் டீ வந்துவிட, மாஸ்கோ டீயைக் கொடுக்க,
“என்ன பார்க்குறீங்க…குடிங்க…” என்றான்.
நெப்போலியனின் பேச்சிலே அவன் கோபமாக இருக்கிறான் என்பது மாஸ்கோவிற்குப் புரிய,
“குடிங்க சார்” என்று சொல்ல, அவரும் கஷ்டப்பட்டு அதைக் குடித்து முடிக்க,
“ நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே”என்று அவரை ஆழமாய் ஊடுருவி சொல்ல,
“இல்லங்க தம்பி, அன்னிக்கு என் பொண்ணு உங்களை பேசிடுச்சு. அதான் நீங்க எனக்கு வேலை தர மாட்டீங்களோன்னு நினைச்சு தான் திரும்ப போனேன்.” என்று ஒருவழியாக அவர் நிலை சொன்னார்.
“உங்களுக்கு நான் மட்டும் தான் வேலை தருவேன், என்னை மீறி வேற எவனும் தர மாட்டான்” என்றான் திமிராக.
‘அண்ணன் இப்போ வேலை தருவேன் சொல்றாரா? இல்லை வேற யாரும் தர விட மாட்டேன் சொல்றாரா.?’ என்று மாஸ்கோ பார்க்க, மாணிக்கவாசகமும் அதையே தான் நினைத்தார். அவர் முகத்தில் கவலை தெரிய, அதைக் கண்டு கனிந்தான்.
“அப்புறம் இதுக்கு முன்னாடி என்ன வேலைப் பார்த்தீங்க?”
“மில்லு சூப்பர்வைசரா இருந்தேன். ஒரு ஆக்ஸிடெண்ட்ல கால் போனதும் ஊர்ல எதுவும் வேலை அமையல”
“ஓ! இங்க நம்ம கிட்ட கார் இருக்கு. அது இல்லாம வட்டிக்கு விடுறோம், அதை வசூல் பண்ணி கணக்கு வைக்கனும், கார் எங்க போகுது, டீசல், செர்வீஸ் இதையெல்லாம் சரியா பார்க்கனும். டிரைவர் கரெக்டா அனுப்பனும், உங்களுக்கு ஏத்த மாதிரின்னா கணக்கு எழுதுற வேலை இருக்கு. செய்றீங்களா.?” என்று கேட்க
“செய்றேன் தம்பி” என்றவரின் பார்வையில் ஒரு நன்றியுணர்வும் நிறைமகிழ்வும் தெரிய, மகளின் பார்வையில் தாழ்ந்து அதில் தகித்தவன் தந்தையின் இந்த பார்வையில் தணிந்து மகிழ்ந்தான்.
“நாளையில இருந்து வாங்க. சம்பளம்லாம் நான் கேட்டுட்டு சொல்றேன்”
“தம்பி! அப்புறம் ஒரு விஷயம், என்னால ஆறு மணி வரைக்கும் தான் வேலை பார்க்க முடியும்” என்று சொல்ல வயதானவர் என்பதால் சரி என்று விட்டான்.
“ரொம்ப நன்றிங்க தம்பி, தெரியாத ஊர்ல என்ன செய்றது நினைச்சேன்.” என்று அவர் எழுந்து சொல்ல,
“அதை விடுங்க, உங்க பொண்ணு பேசினதுக்கு நான் வேலை தர மாட்டேனு நீங்களா எப்படி நினைக்கலாம்?” விடவே முடியவில்லை அந்த பிடிவாதக்காரனால்.
“இல்ல தம்பி! என் பொண்ணு பேசினது தப்பு. நீங்க அடிச்சவன் மேல கூட தப்பா இருக்கலாம், அது தெரியாம அடிக்கிறவங்கள எல்லாம் ரௌடினு சொன்னா தப்பு தானே? அதான் அந்த வருத்தம் உங்களுக்கு இருக்கும். அதனால வேலை தர மாட்டீங்கன்னு நினைச்சேன்” என்று மாணிக்கம் சொல்ல ஆர்கழியால் அனல் கொண்ட அகம் மாணிக்கத்தால் மலர் கொண்டது போல் மாறிப்போனது.
‘இந்த மனுஷன் எப்படி அமைதியா யோசிச்சுப் பேசுறார் பாரேன். அந்த ராங்கி மாதிரி இவர் இல்ல..’ என்று நினைத்தவன் முகத்தில் புன்னகை புலர, அவர் தோளில் தட்டிக் கொடுத்தான்.
“தனியா போயிடுவீங்களா?” என்று கேட்க
“அதெல்லாம் போய்டுவேன் தம்பி” என்றவரின் உள்ளம் நிறைந்து போனது.
மதிய உணவிற்கு வரதராஜன் வர, அவரிடம் நெப்போலியன் மாணிக்கத்தை வேலைக்குச் சேர்த்தது பற்றி சொல்ல,
“ஏன் டா இந்த மாஸ்கோவே தண்டத்துக்கு வைச்சிருக்கோம். இதுல புதுசா சம்பளம் கொடுத்து ஆள் வைக்கனுமா?” என்று வரதராஜன் உண்மையை சொல்ல
“விடு வரதா! உன் வயசு தான் இருக்கும். நீ பாரு ஜாலியா நோகாம காசு கொடுத்துட்டு வட்டி வாங்கிட்டு இருக்க, அவர் பாவம் நடக்க முடியலன்னாலும் ஒரு வேலை செய்யனும்னு ஆசைப்படுறார். அதான் கொடுத்தேன்” என்றான்.
“நீ எப்படா இவ்வளவு நல்லவன் ஆன?” வரதன் ஆச்சரியமாக கேட்க
“யோவ்! நான் எப்பயா கெட்டவனா இருந்தேன்?” என்று அவன் கடுப்பாக கேட்க
“ஹாஹா…” என்று சிரித்தவர்
“நல்லவன் தான் டா நீ. ஆனா உனக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதுன்னு நினைக்கறப்ப தான் கஷ்டமா இருக்கு” என்றவரின் குரலில் சிரிப்பெல்லாம் காணாமல் போயிருக்க
“எனக்கு என்ன குறை? நான் நீ., தண்ணி, ப்ரியாணி, வட்டி வசதின்னு நல்லா தானே இருக்கோம்..” என்றான்.
“அட பரதேசி! சோறும் தண்ணியும் தானா வாழ்க்கை?”
“நீ அப்படி தான்யா வாழ்ந்த? வாழ்ற. உன்னைப் பார்த்து தானே நான் வாழ்றேன்…அப்போ வாழ்க்கைனா என்ன சொல்லு….”என்றவன்
“சொல்லுங்க சுவாமி வரதானந்தா….” என்று கிண்டல் செய்ய
“அறிவு கெட்டவனே! என்னைப் பார்க்க நீ இருக்க, உனக்குன்னு ஒரு குடும்பம் குழந்தை எல்லாம் வேண்டாமா?”
“யோவ்! வரதா நீதான்யா என் குடும்பம். என்ன பேசுற நீ?” அதுவரை ரோலிங் சேரில் நன்றாக சாய்ந்து படுத்தவாக்கில் அமர்ந்தவன் நிமிர்ந்தான்.
“அது தெரியும் டா! எனக்கு நீ இருக்க. எனக்கு அப்புறம், உனக்கு?” என்று சொல்ல அதுவரை ஒரு இலகு நிலையில் இருந்தவன் இறுகிப் போனான்.
கோபமாக இருக்கையை விட்டு எழுந்தவன்,
“என்ன? என்ன உனக்கு அப்புறம்? உன்னை தவிர எனக்கு எதுவுமே கிடையாது! நீ இல்லன்னா நான் எப்படி இருப்பேன்? போய்யா!” என்று அவன் ஆத்திரமாக திட்டிவிட்டு வெளியே வேடிக்கைப் பார்க்க
“இப்ப என்ன? நாளைக்குக் காலையில..கோயம்பேடு மார்க்கெட் போறோம். என்னை மாதிரியே எவனாவது அழுக்கு டவுசரோட அழுதுட்டு இருப்பான். தூக்கிட்டு வந்து வளர்ப்போம். சரியா…?” என்று கேட்க
“அட வெளாங்கதவனே! உன்னையெல்லாம்! ஏன் டா உனக்கு இந்த பொம்பளை புள்ளைங்க எல்லாம் அழகா தெரிய மாட்டாங்களா?” என்று வரதன் எரிச்சலாக கேட்க
“என் கண்ணுக்கு அனுஷ்கா தான் அழகா தெரியுறா…கட்டி வைக்கிறியா..?” என்றான் நக்கலாக.
“அடேய்! வேண்டாம்டா” என்று அவர் கடுப்பாக பார்க்க,
அவர் அருகே வந்து தோளில் கைப்போட்டவன் ,
“என்ன வரதா ஆச்சு உனக்கு?” என்றான்.
“நானும் உன் வயசுல இப்படி தான் சுத்துனேன். இப்போ இந்த வயசுல கவலையெல்லாம் வருதுடா. எனக்கு கவலைப்படக் கூட பிடிக்காதுடா. அதுக்காகவாச்சும் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. உன் புள்ளையை நான் தூக்கி சுமக்கனும்டா” என்று உணர்வுபூர்வமாகப் பேச
“எப்பா சாமி! நீ இப்படி எமோஷனலா எல்லாம் பேசறது செமயா காண்டு ஆவுது எனக்கு. செட் ஆகலய்யா, சத்தியமா சொல்றேன்! வட்டி வரதா! உனக்கு இந்த சீன் செட்டே ஆகல” என்றான் கடுப்பாக.
வரதனோ அதை விட கடுப்பாக,
“போடா! உன்னை சாயங்காலம் வந்து கவனிச்சுக்கிறேன்…” என்று போனார்.
***********************
அன்று மாலை அலுவலகம் விட்டு வந்த ஆர்கழி ,
“ரஞ்சி இங்க வா” என்றவள் அவன் கையில் சில பாஸ்புக்குகள், ஃபைல் எல்லாம் திணிக்க,
“என்னக்கா?” என்றான்.
“இது சித்தப்பா உன் பெயர்ல காயு பேர்ல பணம் போட்ட பாஸ்புக். இது அவரோட பெர்சனல் அக்கவுண்ட், இது சித்தி போஸ்ட் ஆபிஸ் பணம் கட்டினது. இப்ப அதை நான் கட்டிட்டு இருக்கேன். இது சித்தப்பா பிஎஃப் பணம், லாக்கர்ல சித்தியோட நகையெல்லாம் இருக்கு. அதோட டீடெய்ல்ஸ் இது”
“ஏன் கா இப்ப இதெல்லாம் பேசுற?”
“அவசியம் வந்துடுச்சு பேசுறேன், இவ என்னமோ நான் உங்க காசெல்லாம் எடுத்து வைச்சுட்டு செலவு பண்றேன் நினைக்கிறா” என்றதும் கோபமாக தங்கைப் பக்கம் பார்த்தவன்,
“ஹே காயு!அக்காவை எதாவது சொன்னியா?” என்று அதட்டலாக கேட்டான்.
“அப்பா காசெல்லாம் நீதான வைச்சிருக்க. அதுல எனக்கு மொபைல் வேணும்னு கேட்டேன்” என்றாள் காயத்ரி.
“இன்னைக்கு இதைக் கேட்டவ நாளைக்கு இன்னும் கேட்பா. நான் தப்பு சொல்லல. நான் கணக்கு சொல்றது என் கடமையும் கூட! இப்ப சொன்ன எதுல இருந்தும் நான் காசு எடுக்கல, இத்தனை வருஷ சேவிங்க்ஸ், என் சேலரி அதை மட்டும் தான் செலவு பண்றேன் நான்.. இன்னும் இரண்டு வருஷத்துல நீ வேலைக்குப் போயிடுவ, அப்புறம் இவ கல்யாணத்துக்கு உன்னால சப்போர்ட் செய்ய முடியும். பேங்க்ல இருக்க எல்லா பணமும் அவ கல்யாணத்துக்கு இருக்கட்டும்னு நான் அதை தொடல. ஆனா ஷாலினிக்கு நான் தானே இருக்கேன்” என்றதும் இடை மறித்து
“அவளும் எனக்கு தங்கச்சி தாங்க்கா” என்றான் ரஞ்சித் கோபமாக.
“ப்ச்! அது தெரியும். ஆனா நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகும். அப்போ நீ எனக்கோ அவளுக்கோ எதுவும் செய்ய முடியாது, நான் தான் அவளுக்குப் பார்க்கனும். அவளுக்காக சேவ் பண்ணனும்”
“ஒரு செல்போன் எட்டாயிரம் வருமா? அது நாற்பதாயிரம் சம்பளம் வாங்குற எனக்குப் பெருசு இல்ல, ஆனா பாரு வாடகை கொடுக்கனும். ஃபீஸ் கட்டனும், வீட்டுக்கு செலவு பண்ணனும். அதையெல்லாம் நான் யோசிக்கனும் தானே? இவளுக்கு சொல்லி புரியவை. இல்லனா ஒன்னும் பண்ண முடியாது. கண்டிப்பா அவ அடம்பிடிக்கிறான்னு நான் செல்போன் எல்லாம் வாங்கித் தர மாட்டேன். இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டா கஷ்டத்துல காசு இருக்காது ரஞ்சி” என்றாள் நீண்ட விளக்கமாய்.
“எனக்குப் புரியுதுக்கா” என்றான் ரஞ்சித்.
அதன் பின் வந்த நாட்கள் இயல்பாக செல்ல, மாணிக்கம் வேலைக்குச் செல்வது ஆர்கழிக்கு மட்டும் தெரியாது. பிள்ளைகள் மூவரும் வேண்டாம் என்று சொல்லியும்,
‘வீட்டுல என்னால தனியா சும்மாவே இருக்க முடியாது, உட்கார்ந்து பார்க்கிற வேலை தான். அக்கா கிட்ட கொஞ்ச நாள் போனதும் சொல்லுவோம், இப்ப சொல்லக் கூடாது” என்றார் கட்டளையாக.
மாணிக்கத்துக்குப் பெரிதாக கஷ்டமான வேலை எல்லாம் இல்லை. அது போல ஆர்கழி வரும் முன் ஆறு மணிக்கெல்லாம் வீட்டிற்குச் சென்று விடுவார். இப்படியாக அவர் வேலைக்குப் போய் பதினைந்து நாட்கள் இருக்கும்பொழுது, அன்று ஒரு சனிக்கிழமை. ஆர்கழி க்ளாஸ் எடுக்க போய் விட, வருவதற்கு எப்படியும் ஏழெட்டு மணியாகும். அன்று பார்த்து, அவளுக்கு மாலை க்ளாஸ் இல்லாமல் இருக்க, நாலு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள். பஸ் ஸ்டாண்டில் இருந்து இறங்கி, அவர்கள் வீடு வரும் வழியில் உள்ள மெயின் ரோடில் தான் வரதனின் ட்ராவல்ஸ் இருக்கும்.
எப்போதுமே அந்தப்பக்கம் எல்லாம் பார்க்காமல் அவள் பாட்டிற்கு நடப்பவளை அன்று ட்ராவல்ஸீன் வெளியறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த குரல் கலைத்தது. எதார்த்தமாக அந்த பக்கம் பார்க்க, பார்த்தவள் பதறிப் போனாள்.யோசிக்காமல் உடனே உள்ளே சென்றவள்,
“அப்பா! இங்க என்ன பண்றீங்க நீங்க?” என்றாள்.
மாட்டிக்கொண்ட மாணிக்கம்,
“அது! அம்மாடி நீ..என்ன சீக்கிரம் வந்துட்ட டா?” என்று கேட்க,
“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கப்பா” என்று ஆர்கழி கேட்க
“எங்கிட்ட தான் வேலைப் பார்க்கிறேன்னு சொல்லுங்க மாணிக்கம்…” என்று நெப்போலியன் ஆர்கழியை நக்கலாய்ப் பார்த்துக் கொண்டே சொன்னான். அதாவது அவள் ரௌடி என்றவனிடம் அவள் தந்தை வேலைப்பார்க்கிறார் என்பதை சொல்ல, ஆர்கழி அதிர்ந்து போய் அப்பாவைப் பார்க்க,
“என்னப்பா இதெல்லாம்.?” என்றாள் கோபமாக.
“என்ன மாணிக்கம்? வேலை நேரத்துல வெட்டிக் கதைப் பேசுறீங்க” என்று நெப்போலியன் மேலும் சீண்ட, அவனைக் கோபமாகப் பார்த்தவள் இன்னும் அதிர்ச்சி விலகாமல்,
“அப்பா! முதல்ல வாங்க போகலாம்” என்று சொல்ல
“நீ வீட்டுக்குப் போடா, அப்பா வரேன்.” என்று மாணிக்கம் சொல்ல, ஆர்கழி அசையாமல் அவரை முறைத்து நிற்க
“என்ன இது வேலை செய்ற இடத்துல கலாட்டா?” என்று நெப்போலியன் கேட்டான்.
“ஏய்…” என்று ஆர்கழி திட்ட வர, அதற்குள் மாணிக்கம்
“ஆர்கழி! வீட்டுக்குப் போ, அப்பா வரேன்.” என்று கண்டிப்போடு சொல்ல
“இப்ப என் பின்னாடியே நீங்க வரீங்க” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு போனவள் வீட்டில் இருந்த தம்பி தங்கைகளை வெளுத்து வாங்கினாள். இங்கு மாணிக்கமோ
“தம்பி! என் பொண்ணுக்கு நான் வேலைக்கு வரது தெரியாது, அதான் கோபமா பேசிட்டா. இன்னிக்கு மட்டும் இப்ப வீட்டுக்குப் போகவா? போகலன்னா கோச்சுப்பா..” என்று மாணிக்கம் கேட்க, அவர் பேச்சில் இளகினாலும்
‘அவ கோச்சுப்பாளா? கோச்சுக்கட்டும். என்னை அப்படி பார்த்தா இல்ல….இன்னிக்கு நல்லா டென்ஷன் ஆகட்டும்.’ என்ற எண்ணம்.
“இதான் உங்க ஆறு மணி விஷயமா? அதெல்லாம் முடியாது! மணி ஆறான பின்னாடி தான் விடுவேன்” என்றான் முடிவாக.
அதற்குள் வரதராஜன் வந்துவிட, அவரிடம் விசயத்தை சொல்ல,
“போய்ட்டு வாங்க மாணிக்கம்” என்று வரதராஜன் சொல்ல
“அதெல்லாம் போக கூடாது!நான் தானே அவரை வேலைக்கு வைச்சேன், நீ என்ன அவரை போக சொல்ற..” என்று வரதனிடமும் எகிறினான்.
“டேய் அவரை விடுடா! பொண்ணை போய் சமாதானம் செய்யட்டும்…” என்று வரதன் சொல்ல
“ஆறு மணிக்கு அப்புறம் எங்க வேணும்னாலும் போகட்டும். அப்புறம் போய் சமாதானம் செய்யட்டும். இப்ப இந்தாங்க…இதுல எவ்வளவு பணம் இருக்குப் பாருங்க…” என்று ஒரு கட்டு பணத்தை அவரிடம் கொடுத்தான்.
“இப்போ அவரை விடுவியா மாட்டியா…என்ன இது சின்னப்புள்ள மாதிரி…?” வரதன் கோபமாக கேட்க
“முடியாது” என்று தலையசைத்தவன் அழுத்தமாக உட்கார்ந்திருந்தான்.
“நீங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்..” என்று வரதன் மாணிக்கத்திடம் சொல்ல, அவரோ அவனைப் பாவமாக பார்க்க,
‘போய்த்தான் பாரேன்’ என்றபடி அவரைப் பார்த்தான். அங்கு வீட்டிலோ ஆர்கழி அப்பாவிற்காக கோபத்தோடு காத்திருந்தாள்.