வரதராஜன் நெப்போலியன் அவர் பேச்சு கேட்பானா என்று பார்க்க, அவன் அசைவதாக காணோம். மாணிக்கவாசகத்தைப் பார்க்கவும் பாவமாக இருக்க,
“மாணிக்கம்! அந்த பணத்தை எங்கிட்ட கொடுங்க, நீங்க கிளம்புங்க” என்றார்.
மாணிக்கமோ இன்னமும் நெப்போலியனின் முகம் பார்க்க,
“நான் தான் சொல்றேன்ல, முதல்ல கிளம்புங்க” என்றார் அழுத்தமாக.
நெப்போலியன் முறைத்தபடியே இருவரையும் பார்த்தவன் பின் கோபமாக எழுந்து சென்றுவிட,
“தம்பி கோபமா போறாரே” என்று மாணிக்கம் இழுக்க
“அவனுக்கு கொழுப்பாகிடுச்சு, நீங்க போய் பொண்ணை சமாதானம் பண்ணுங்க, பத்திரமா போங்க” என்று மாணிக்கத்தை அனுப்பி வைத்தார். நெப்போலியனுக்குப் போன் போட அவன் எடுக்கவே இல்லை. அதன் பின் அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்து விட்டு ட்ரைவர்கள் எல்லாம் சாவியை ஒப்படைத்த பின் அவர் வீட்டிற்குப் போனார்.
இங்கு ஆர்கழியோ வீட்டிற்கு கோபமாக சென்றவள், டீவி பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியையும் ஷாலினியையும் பார்த்து ,
“டீவியை ஆஃப் பண்ணுங்க” என்று கத்த, அவள் முகம் பார்த்தவள் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்து டீவியை ஆஃப் செய்ய,
“அக்கா! என்னக்கா? என்னாச்சு? கோவமா இருக்க?” என்று விசாரித்தான்.
“அப்பா வேலைக்குப் போறது உனக்குத் தெரியுமா ரஞ்சி?” என்று கேட்க
“தெரியும்கா” என்று அவன் சொன்னது தான் போதும்
“அப்போ தெரிஞ்சே இத்தனை நாளா மறைச்சிருக்கீங்க, அப்படி தானே? எத்தனை நாளா அவர் போறார்?”
“ஒரு பதினைஞ்சு நாள் இருக்கும் கா”
“அவர் தான் சொல்லல, உங்க மூணு பேருக்குக் கூட சொல்லனும்னு தோணல இல்ல, எப்பவுமே என்னை ஒதுக்கியே பழகிட்டீங்க தானே?” விழியில் வலி தெரிந்தாலும் மொழியில் கம்பீரம் மட்டும் ஆர்கழிக்கு குறையவில்லை.
வலி மிகுந்த வார்த்தைகளை வலிக்காது பேசுவது என்பது வலியை விட மீகிய வலி தருவது! ஆர்கழி, அவள் வலிகளை வெளிக்காட்டமாட்டாள். வெளிக்காட்டா வலிகள் வெளிப்படுவதில்லை!! பிறருக்குப் புரிபடுவதுமில்லை.
“இல்லக்கா, பெரியப்பா தான் சொல்ல வேண்டாம் சொன்னாங்க” ரஞ்சித் தயங்கி தயங்கி சொல்ல
“பேசாத நீ!பெரியப்பா சொல்லிட்டார்ல, நான் அவர்கிட்டேயே பேசிக்கிறேன், நீங்க யாரும் பேச வேண்டாம்” என்றாள் ஆத்திரமாக.
அரை மணி நேரம் கழித்து மாணிக்கம் வீட்டிற்கு வர, வந்ததும் அவரைப் பிடித்து உலுக்கிவிட்டாள்.
“இவங்க கிட்ட கூட சொல்ல முடிஞ்ச உன்னால, எங்கிட்ட சொல்ல முடியல இல்லப்பா..” என்றாள் கோபமாக.
“உங்கிட்ட சொல்லனும்னு தான் டா இருந்தேன்” அவர் அமைதியாக சொல்ல
“அது இல்லடா, சொன்னா நீ கோச்சுப்ப. அதான் கொஞ்ச நாள் போகட்டும்னு”
“இப்ப மட்டும் எனக்கு குளுகுளுன்னு இருக்காப்பா? நான் தான் ஒன்னுக்கு இரண்டு வேலைக்குப் போறேன்ல, முடியாத நீங்க ஏன்ப்பா போகனும்? இவ அம்மா தான் பார்க்கல, இவளும் அப்பாவை பார்க்கலன்னு சொல்லனும்னு எதிர்ப்பார்க்குறீங்களா?”
“இல்ல ஆரு, நீ வேலைக்குப் போய் கஷ்டப்படுறது அப்பாவுக்குக் கஷ்டமா இருக்குடா. அதுவும் வாரத்துல ஏழு நாளும் நீ கஷ்டப்படுறதைப் பார்க்க முடியல டா” என்று வருந்தி சொல்ல,
“நான் வேலைக்குப் போறது கஷ்டமா இருக்குன்னு உன் கிட்ட சொன்னேனாப்பா? நான் டயர்டா ஆகுறேன் தான், ஆனால் அது மனசுக்குப் பிடிச்சு செய்றேன். என் மனசுக்குப் பிடிச்சவங்களுக்காக செய்றேன்”
“அதையே தான் டா நானும் சொல்றேன், எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல, சொல்லப்போனா இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா”
“மடையடிச்சுப் பேசாதப்பா, உனக்கு என்னைப் புரியவே இல்லை. புரியவும் வேண்டாம்” என்றவள் கோபத்தோடு எழுந்து போனாள்.
“அக்கா! எங்கக்கா போற?” பின்னாலயே ரஞ்சி வர,
“பின்னால வந்த உன்னைத் தொலைச்சிடுவேன், போ உள்ளே” என்றாள் கோபமாக.
வாசல் வரை சென்றவள் அப்படியே நின்றாள். கோபம் என்று இவள் இதை செய்தால் இதையே எடுத்துக்காட்டாய் எடுத்துக்கொள்வார்கள் அவள் தங்கைகளும் தம்பியும்.
கோபம் வருவது இயல்பு. ஆனால் இயல்பான உணர்ச்சியைக் கூட சுற்றி இருப்பவர்களுக்காக வெளிப்படுத்தா நிலையில் இருந்தாள். அந்த இயலாமை அவளை இன்னமும் இறுகிப் போக வைக்க, அதே கோபத்தோடு உள் நுழைந்தவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
அப்பா வேலைக்குப் போனது அவளால் தாளவே முடியவில்லை.அப்பாவை எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என்று அவள் கனவு கண்டிருக்கிறாள். ஆனால் இன்றோ அவரை அதுவும் ஏதோ ஒரு ரௌடியின் கடையில் பார்த்ததும், பார்த்ததை நினைக்கவும் நெஞ்சமெல்லாம் வலிக்க, வேதனையும் வலியும் மீகியதே தவிர குறையவில்லை. அப்பாவைப் பார்த்தது முதல் அடக்கி வைத்திருந்த வேதனையெல்லாம் இப்போது கண்ணீராக மாறியது.
மௌனராகத்தில் கண்ணீர் இசைத்தாள் ஆர்கழி. சத்தமெல்லாம் இல்லை. கன்னம் இரண்டும் கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் அப்படியே கண்ணீரும் அதன் ஈரமும் காயும் வரை உட்கார்ந்திருந்தவளை ஷாலினியின் குரல் கலைத்தது.
“அக்கா!” என்று ஷாலினி வந்து கூப்பிட,
“வரேன்” என்று முகம் கழுவி எழுந்தவள் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.யாரையும் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை.
ஏற்கனவே பசியில் வந்தாள். இதில் இன்று பார்த்து இப்படியாக , அழுததால் தலைவலி வேறு, தைலம் தேய்த்துக் கொண்டவள் ,
“காயு…இந்தா தேங்காய் துருவி தா..” என்று சொல்ல, காயத்ரி முழித்தாள்.
“என்ன பார்க்குற? செய்!” என்று சொல்லி போக, அவள் இருக்கும் கோபத்திற்கு வாயைக் கொடுக்க வேண்டாம் என்று அமைதியாக, அதே நேரம் பொறுமையாகத் துருவினாள்.
ஷாலினியை அழைத்து,
“வீடெல்லாம் பெருக்கு ஷாலு….” என்று அவளுக்கும் வேலைக் கொடுத்தாள். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்தவள், சமைத்து விட்டு ,
“காயு! எல்லாத்தையும் இங்க எடுத்துட்டு வா” என்று சொல்லி உட்கார்ந்து கொண்டாள். அனைவரும் உண்டு முடிக்க, மாணிக்கவாசகம் வெளியே இருக்கும் காலி வராண்டாவில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். மகள் முகம் பார்த்தே அவள் மிகவும் வருந்தி இருக்கிறாள் என்று புரிய,
“ஆரும்மா! அப்பா சொல்றதைக் கொஞ்சம் கேளேன்” என்றார்.
“என்னப்பா?” என்று அவர் அருகில் போய் உட்கார்ந்து கொள்ள
“நீங்க நாலு பேரும் வெளியே போயிடுறீங்க, காலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் நான் தனியா டீவியைப் பார்த்துட்டு எப்படி டா உட்காரது? அதான் வேலைக்குப் போனேன், அதுக்கு ஏன் டா அழற? ஊர்லயும் நான் வயலையெல்லாம் பார்த்தேன் தானே?”
“ஊர்ல நீ வயலைப் பார்த்தப்போ நான் சின்னப்பொண்ணு, இப்ப நான் மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறேன். அப்படியும் என் அப்பா வேலைக்குப் போறதுன்றது, உனக்குப் புரியவே மாட்டேங்குதுப்பா. உன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கனும்னு நான் ஆசைப்படுறேன் தெரியுமா?” அப்பாவிடம் பேசும்போது இப்போது கோபம் குறைந்திருந்தாலும் வருத்தம் அதிகமாக இருந்தது.
“ஆசைப்பட்டா மட்டும் போதுமா? தினமும் ஏழு மணிக்கு வர, சமைக்கிற வீட்டு வேலையெல்லாம் பார்க்குற. அப்புறம் காலையில வேலைக்குப் போயிடுற, சனி ஞாயிறு வீட்ல இருப்ப பார்த்தா, அன்னிக்கு ஒன்பது கூட ஆயிடுது. இப்படியே ஓடிட்டே இருந்தா…எப்படிடா? வயசும் இருபத்தைஞ்சு ஆச்சு, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும். இதையெல்லாம் உங்கிட்ட பேச கூட நேரமில்லம்மா”
அவர் சொல்வதும் உண்மை தானே? வாழ்க்கையென்னும் ஓடம் ஓட்டமாகிறது! எங்கு இளைப்பாறுதல் கிடைக்குமென தெரியாமலே ஓடுகிறாள். இளைப்பாறுதல் இல்லை என்பதை விட அதை தேட அவளுக்கு ஆவல் இல்லை. சும்மா இருந்தால் அவளுக்குத் தாயின் நினைவு வரும். அவரால் அனுபவித்த வேதனைகள் நினைவிற்கு வரும்., அது வலி தரும் என்பதாலேயே தன்னை எப்போதும் எதனுள்ளாவது புகுத்திக் கொண்டு அதனுள் புதைந்தாள்.
“சொல்லு! எப்போ கல்யாணம் செய்றது உனக்கு..?”
“ரஞ்சி ஒரு வேலைக்குப் போகட்டும்ப்பா, அப்புறம் பண்ணிக்கிறேன்”
“அதுக்கு இன்னும் இரண்டு வருஷம் ஆகும்., அதுக்குள்ள உனக்கு இருபத்தேழு வயசாகிடும். நீ கல்யாணம் பண்ணிட்டும் குடும்பத்தைப் பார்க்கலாம், அவங்களும் எனக்கு முக்கியம் தான். அவங்களைப் பார்க்கிறேன்னு உன்னை இழந்துடாத” என்றார் வருத்தமாக.
“என்னப்பா பேசுற நீ? சித்தப்பா சித்தியெல்லாம் இருந்திருந்தா இதெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. அட்லிஸ்ட் ஒரு வருஷம் ஆகட்டும்பா. நீ இதை நினைச்சு எல்லாம் கவலைப்படாத” என்று ஆறுதலாக அவர் கரம் பற்றினாள்.
“வரதராஜன் ரொம்ப நல்ல மாதிரி, அந்த தம்பியும் ரொம்ப நல்ல தம்பி! காசுக்காக மட்டும் போகல நான். அப்பாவுக்குத் தனியா இருக்க கஷ்டமா இருக்கும்டா, அங்கனா கடையில எனக்குப் பேச்சுத் துணையா இருக்கும், அப்பா போகட்டுமா ஆரு?”
அவரை விழி உயர்த்தி நக்கலாகப் பார்த்தவள்,
“இதை நீ போறதுக்கு முன்னாடியே கேட்டிருக்கனும், இப்ப வந்து கேட்கிற?” என்றாள்.
“அதை விடும்மா, இப்ப சொல்லு”
“உனக்குப் போகனும்னு தோணிச்சு நீ போய்ட்ட, இனி எங்கிட்ட கேட்காத, அவ்வளவுதான்!” என்றாள் விட்டேற்றியாக.
“என்ன ஆரு கோபமா? நான் இவ்வளவு சொல்றேன். நீ புரிஞ்சிக்காம…”
“உன்னிஷ்டம்! உன் விருப்பம்னு நீ போய்ட்டப்பா, அதனால் இனி அதைப் பத்தி பேசாத! ஒன்னு போகாத, போனா…ஏன் கோபப்படுறன்னு என்ட்ட கேட்காத! கண்டிப்பா நான் கோவப்படுவேன். போறது உன்னிஷ்டம்னா, கோவப்படுறது என் இஷ்டம்” என்றாள் அழுத்தமாக.
அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது. அமைதியாகி விட்டார் மாணிக்கவாசகம்.
வரதராஜன் வீட்டிற்குச் சென்றவர் நெப்போலியனுக்குப் பிடிக்கும் என்று மீன் வாங்கி மண்சட்டியில் அவர் அம்மா செய்வது போல் தாளிக்காமல் மீன் குழம்பு வைத்தார். அது நெப்போலியனுக்கு மிகவும் பிடித்தம்.
அவரும் வீட்டு வேலைகள் அத்தனையும் செய்துவிட்டு அவன் வருவான் வருவான் என்று எதிர்ப்பார்த்தார். பசிக்க வேறு செய்தது. காலையும் மதியும் இருவரும் இணைந்து சாப்பிடுவது கஷ்டம்.அவன் எழுவதற்குள் இவர் உண்டு கடையைப் பார்க்க சென்றுவிடுவார். இரவில் தான் இணைந்து உண்பர். அதற்காகவே அவர் காத்திருக்க. அவன் பத்து மணி போல் தான் வீடு வந்தான்.
இவர் நடுக்கூடத்தில் இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து டீவி பார்க்க அவரைக் கண்டுகொள்ளாமல் முறைத்தபடியே அறைக்குள் புகுந்து உடை மாற்றினான்.
வரதராஜனுக்கு அவனது முறைப்பில் சிரிப்பு வந்தாலும் இன்றைய அவன் செயல் சரியல்ல என்பதை அவனுக்கு உணர்த்திடும் உறுதியில் இருந்தவர், சாப்பாட்டை எடுத்து வந்து நடுவீட்டில் வைக்க,மீன்வாசம் வீசியது. அதன் நறுமணம் நாசியினைத் தீண்டிட, அதுவரை வரதன் வந்து அழைத்தால் தான் அறையை விட்டு வெளி வர வேண்டும் என்று பிடிவாதம் கொண்டு இருந்தவனை பிடித்து வெளியே இழுத்தது மீன் குழம்பின் வாசம்.
நெப்போலியன் சாப்பாட்டுக்கு அருகில் போய் உட்காரவும், வரதராஜன் அவனைக் கேலியாகப் பார்க்க,
“ உனக்காகவெல்லாம் நான் ஒன்னும் வரல., இந்த மீன் குழம்பு வேஸ்டா போயிட கூடாதேன்னு தான் வந்தேன்” என்றான் முறைப்பாக.
“பரவாயில்ல ராசா! அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். நான் மாஸ்கோக்கு கொடுத்துடுறேன்”
“யோவ்! முதல்ல கொடுய்யா” என்றபடி உட்கார, அவரோ கண்டுகொள்ளாமல் அவருக்கு மட்டுமாக ஒரே தட்டில் சாதம் போட்டு குழம்பை ஊற்ற, நெப்போலியன் கடுகடுவென பார்க்க,
“இந்தா வாயைத் தொற” என்று அவன் வாயில் திணித்தார். அதில் நெப்போலியனுக்குக் கோபமெல்லாம் போய்விட,
“மீன் வாசமா இல்ல உன் குழம்பு வாசமா? தெரியல! ஆளத்தூக்குது!!” என்றான் ருசித்து ரசித்து. அவர் கன்னத்தில் அப்படியே முத்தமிடவும் செய்தான்.
“அடேய் நாறப்பயலே! ஏன் டா இப்படி பண்ற?” என்றார் கடுப்பாக.
“அவ என்னை மரியாதையில்லாம திட்டுவா, அப்போ எதுவும் கேட்காத…இப்ப வந்து என்னையைக் கேளுய்யா..” என்றான் கோபமாக.
“இப்போ ரோட்ல யாராச்சும் சண்டைப் போட்டாங்கன்னா, பொதுவா பார்க்கிறவங்க அப்படி தான் எதோ ஒன்னு இரண்டு வார்த்தைப் பேசிடுவாங்க. அதையெல்லாம் மனசுல வைச்சுக்க கூடாது” என்றார் அனுபவம் தந்த அமைதியில்.
“அவ யாரு என்னைப் பேச? என் மேல தப்பா என்ன?அதுவும் அவ என்னை எப்படி பார்த்தா தெரியுமா வரதா?” என்றான் அவ்வளவு கோபத்தோடு.
“இங்க பாரு நெப்போலியா, அந்த பிள்ளைக்கு நம்ம என்ன செய்றோம்னு தெரியாது. தெரியாதவங்க நம்மளைப் பத்தி என்ன நினைச்சா நமக்கென்ன?”
அவன் அமைதியாக அவரைப் பார்க்க
“உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டேன் டா…” என்றார் கோபமாக.
“யோவ்! போய்யா ரொம்ப தான் கொடுத்திட்ட. இன்னிக்கு நான் மாணிக்கத்தைப் போக கூடாது சொல்லியும் நீ போக சொல்ற, அப்ப எனக்கு என்ன மரியாதை இருக்கு?” என்றவன் எழுந்து விட,
“அடச்சே! உட்காருடா, உட்கார் சொல்றேன்ல” என்று அதட்டியவர்,
“நீ சொல்றதை நான் கேட்கலன்னு துரைக்குக் கோவம் வருதே, மாணிக்கத்து முன்னாடி பெரிய மனுஷன் என் பேச்சை நீ கேட்கலன்னா, அவர் என்ன நினைப்பார்.? மாஸ்கோ என்ன நினைப்பான்? அவங்க எல்லாம் என்னை மதிப்பாங்களா…?சொல்லுடா! உன் வயசுக்கு நீ மரியாதை எதிர்ப்பார்க்குற மாதிரி என் வயசுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு தானே..? நீயே என்னை மதிக்கலன்னா அடுத்தவன் எப்படி மதிப்பான் சொல்லு..” என்று சொல்ல, அதில் உள்ள உண்மை உள்ளத்தில் புரிய, அவன் தவறு தெரிய அமைதியாக அவரைப் பார்த்தான்.
“இனிமே அந்த பொண்ணுட்ட போய் வம்பிழுக்க கூடாது. சரியாடா?”
“இழுத்துப் பாரேன் டா, உன் கன்னத்துல இழுக்கும் அந்த பொண்ணு..” என்றார் நக்கலாக.
“ம்ம்! இழுப்பா, இழுப்பா!” என்றான் அவனும் அவரை விடவும் நக்கலாக. அப்பா பிள்ளை இருவருக்கும் தெரியவில்லை கூடிய விரைவில் அவர்கள் கூறியது உண்மையில் நிகழப்போகிறதென.