“ஏன்ப்பா உங்க வயசென்ன? அவன் வயசென்ன? பெயர் வைச்சவன் மாதிரி உங்க பெயர சொல்றான். நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க” என்று திட்ட
மாணிக்கமோ சிரித்துக் கொண்டே,
“என்ன ஆரு நீ? அந்த தம்பி எங்கிட்ட எவ்வளவு அன்பா நடக்கும் தெரியுமா? அவங்க அப்பாவையே அப்படிதான் கூப்பிடும். இதெல்லாம் பெருசா எடுக்காத” என்றார்.
“அவங்க அப்பாவை கூப்பிடட்டும். உங்களை கூப்பிட அவன் யாரு?”
“அவன் என்னை கூப்பிடுறது எனக்கே பிரச்சனையில்ல. உனக்கு என்ன?” என்று மாணிக்கமும் அவள் பேசுவது தாங்காது கேட்டுவிட, தணலால் தகித்த நிலை தத்தைக்கு.
“எப்படியோ போங்க” என்று தலையில் அடித்துக் கொண்டு போனாள் ஆர்கழி.
மாணிக்கத்தின் வீட்டிலிருந்து நெப்போலியன் ஷ்யாமின் வீட்டிற்கு செல்ல, ஷ்யாம் நன்றாகப் பிடித்துக் கொண்டான்.
“என்னைப் பார்க்காத, பேசாத சொல்லிட்டு நீ என்னடான்னா அந்த பொண்ணுட்ட வாசல்ல நின்னு இவ்வளவு நேரம் என்ன பேசின?” என்று கோபமாக கேட்க
ஏற்கனவே ஆர்கழி மீது கடுப்பில் இருந்தான் நெப்போலியன். அது போலவே இதுவரையில் தனது அகத்தையெல்லாம் அப்பட்டமாக அரங்கேற்றி அடுத்தவரிடம் காட்டியவனுமில்லை. வரதன் மட்டுமே விலக்கு. அதனால் தன்னையே முறைத்த ஷ்யாமைப் பார்த்தவன்,
“அந்த வீட்டுப்பக்கம் கண்ணு போக கூடாதுனு சொல்லியும் பார்க்கிறியா டா?” என்று முதுகில் ஒன்று போட
“சும்மா உன்னைக் காணோம்னு பார்த்தேன். என்ன அந்த பொண்ணு ஏதோ கோபமா பேசிச்சு போல?” என்று சரியாக கேட்கவும்
“அவ பேச்சே அப்படி தான்..விடு..” என்றான் அழுத்தமாக. அதன் பின் அவனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கடைக்குச் சென்றான்.
அன்றைய இரவில் வரதராஜன் நெப்போலியனிடம்,
“பேசாம நானும் ஒரு கல்யாணம் பண்ணியிருக்கனும்” என்று சொல்ல
“அட போடா! எனக்குக் கல்யாணமாகி எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா, அதை உனக்கே கட்டி வைச்சிருப்பேன்” என்றார் வரதராஜன்.
“உன் பொண்ணு எனக்கு தங்கச்சி! அதை எப்படி நான் கட்டிப்பேன்?” என்றான் உடனே.
“என்னடா சொல்ற?”
“நீ எனக்கு அப்பான்னா உன் பொண்ணு தங்கச்சி தானேய்யா? அதை நான் எப்படி வேற மாதிரி நினைப்பேன். இப்ப எதுக்கு காலம் போன கடைசில உன் கற்பனை கலர் கலரா போவுது.? வர வழியில எதாவது ஆயாவைப் பார்த்தியா.?” என்றான் நக்கலாக.
“இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ நீ. கடனை கூட வசூல் பண்ணிடலாம் போல இருக்கு, கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறது கஷ்டமா இருக்குடா”
“அப்புறம் என்னத்துக்கு தேடுற? நான் கேட்டேனா கல்யாணம் வேணும்னு.?”
“நீ கேட்க மாட்டடா. அதுக்காக நான் செய்யாம இருக்க முடியுமா?”
“அப்போ தேடிட்டே இரு போ!” என்றவன் உள்ளே படுக்க போய் விட, வரதராஜனுக்கு ஒரே யோசனை.
வாழ்க்கையில் எது ஒரு மனிதனுக்குக் கிட்டாது எட்ட இருக்கிறதோ அதுவே அவனுக்குப் பிரதானமாகிவிடும். சிலருக்குப் பாசம் பிரதானம். சிலருக்குப் பணம் ப்ரதானம். வரதராஜனுக்கு அவரது இளமைக்காலத்தில் பணம் மட்டுமே ப்ரதானமாக இருக்க, அதை பெருக்க வழி செய்தார். இப்போதோ உள்ளம் உறவுகளுக்காக ஏங்கத் தொடங்கியது.
அவர் வயது ஆட்கள் எல்லாம் பேரன் பெயர்த்தி என்று கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்க, தினமும் கடைக்குப் போவது, கடன் வசூல் செய்வது, உண்பது, உறங்குவது என்ற தினப்படி செய்கை கூட அவருக்கு எரிச்சலைத் தந்திருக்க, நெப்போலியனுக்கு சீக்கிரமே திருமணம் செய்ய முனைப்போடு இருந்தார்.
அவரைப் பொருத்தவரையில் நெப்போலியனின் தோற்றம் நிச்சயம் கம்பீரம் தான். அதை தாண்டி அவருக்கு நல்ல பணபலமும் உண்டு. அதனால் எளிதில் எல்லாம் அமைந்து விடும் என்று அவர் எண்ணியிருக்க, எண்ணத்திற்கு மாறாய், எதிர்ப்பாரா வகையில் எதிர்ப்பார்த்த நிலை மாறி எந்த வரனும் அமையவில்லை என்பது தான் நிஜம், நிதர்சனம்..!
முதலில் அவனுக்குப் படிப்பில்லை. அடுத்து வெறும் இரண்டு ஆண்கள் இருக்கும் வீட்டிற்கு பெண் தர யோசித்தார்கள். தந்தை மகன் என்று அறியபட்டாலும் தாய் எங்கே யார்? என்ற கேள்வி வேறு. அதையெல்லாம் அவர் சமாளித்தாலும் நாலு வயதில் அவரிடம் வந்தவனுக்கு எங்கிருந்து அவர் ஜாதகம் தேடுவார்.
அதையும் சமாளித்தாலும் அவனின் படிப்பு..?
காஞ்சிபுரம் சந்தையில் பெரிய ஆளாக இருந்தாலும் கல்யாண சந்தையில் அவனின் தரம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒருமையில் பார்க்க உயர்ந்தவனாகத் தெரிந்தாலும் ஒப்பிட்டுப் பார்க்கையில் தாழ்ந்து போனான். பெண் வீட்டார் பெண்ணிற்கு கிடைப்பவன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பு தானே..?!
இதையெல்லாம் தாண்டி இவனுக்கு முதலில் திருமணத்தில் ஒரு ஆர்வமோ ஆவலோ வராமல் இருப்பது வேறு வரதனை வருத்தியது. அது எல்லாம் சேர்ந்து அவருக்கு அழுத்தம் தர, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த சயனத்தில் இருந்தான் நெப்போலியன்.
இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும். அன்று காலை டிராவல்ஸில் வரதன் யாரிடமோ டெலிபோனில் பேசியவாரே தன் செல்போனில் எதையோ பார்த்திருக்க, அதைக் கண்ட நெப்போலியன்,
“என்ன யார்கிட்ட பேசுற?” என்றபடி அவர் அருகில் உட்கார்ந்தான்.
“புரோக்கர்ட்ட..” என்றவர் அவர் செல்பேசியில் கவனமாகிட
அவரின் அலைப்பேசியைப் பார்க்க, அழகான பெண்கள் படங்கள். அதைக் கண்டவன் உடனே
“அடப்பாவி மனுஷா! வயசான காலத்துல உனக்கு ஏன்யா புத்தி இப்படி போகுது?” என்று அதிர்ந்தான்.
“டேய்! என்னடா என்னைப் பார்த்து என்ன கேட்கிற நீ?” வரதராஜன் கோபமாகப் பேச
“உன்னைப் பார்த்து கேட்கல, நீ பார்க்கறது பார்த்து கேட்கிறேன்..” என்றான் கிண்டலாக.
“நான் கூட உனக்கு செட்டப் எதுவும் ரெடி பண்றியோன்னு நினைச்சிட்டேன்” என்று அவரை சீண்ட
“உன்னையெல்லாம் என்னைப் பார்த்து எப்படி டா அப்படி கேட்கிற நீ? அவர் கல்யாண தரகர்டா, உனக்காக பொண்ணுங்க போட்டோ அனுப்பினார். உன் புத்தி ஏன் டா இப்படி போகுது?” என்று திட்ட ஆரம்பித்து பத்து நிமிடம் திட்டிக்கொண்டே இருந்தார்.
அவனைத் திட்டியவர் அவன் முகம் பார்க்க அவனோ சிரித்தபடி இவரைப் பார்த்துக் கொண்டிருக்க தலையில் அடித்துக் கொண்டவர்,
“மாணிக்கம்! இந்த சரவணன் வந்தா அவனை வண்டிக்கு டீஸல் போட சொல்லுங்க. ஈவினிங் அந்த காரை ஆளுங்க கேட்டிருக்காங்க, நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன். இந்த பயலுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லி வைங்க” என்றபடி வெளியேறினார்.
வரதன் சென்றதும் மாணிக்கம்,
“ஏன்ப்பா அவரைக் கோவப்படுத்துற? உங்கப்பா உனக்காக தானே பொண்ணு தேடி அலையுறார்? நானும் பார்த்துட்டு தானே இருக்கேன். கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னா அவர் கொஞ்சம் சந்தோஷப்படுவார் தானே?” என்று நெப்போலியனிடம் பொறுமையாக சொல்ல,
“அந்தாளுக்கு தான் அறிவில்ல, உங்களை நான் அறிவாளின்னு நினைச்சேன். அவரை மாதிரி பேசுறீங்க” என்றான் எரிச்சலாக.
“ஏன் வீரா? வரதன் சொல்றது நியாயம் தானே?”
“உங்களுக்குப் புரியுதா இல்லையா மாணிக்கம்? நான், அவர்னு இத்தனை வருஷம் வாழ்ந்துட்டோம். இப்ப புதுசா ஒருத்தி வந்து அதெல்லாம் சரி படாது. இந்தாள் இப்படி அலைய வேண்டாம்னு தயவு செஞ்சு சொல்லுங்க. நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறார்”
“மாவீரன் பெயரை வைச்சிட்டு ஒரு பொண்ணு புதுசா வந்தா சமாளிக்க பயப்படுறியேப்பா?” என்று மாணிக்கம் கிண்டலாக சொல்ல
“வீரா! அதுவும் ஒரு வகையில பாசம் தான், என் பொண்ணை நான் கஷ்டப்படுத்திடக் கூடாதேன்ற பயம். ஏன் உனக்கே அதான் பயம்! அது உன் அப்பா மேல உனக்கிருக்க அதிக பாசம்! அந்த பாசம் தான் வரவ எங்க உன் அப்பாவை கஷ்டப்படுத்திடுவாளோன்னு பயமா உனக்குள்ள ஓடுது”
“உன் அப்பாவுக்கு உனக்குன்னு ஒரு துணை தேடி வைக்கனும், உன்னை அவருக்கு அப்புறம் தனியா விடக்கூடாதுன்ற பயம்! அது எல்லாத்துக்கும் காரணம் பாசம் தான். பாசம் இருக்க இடத்துல பயம் இருக்கும் வீரா!” என்று அவர் உணர்ந்து பேச
நெப்போலியனின் நெஞ்சுக்குள் நெருக்கியடித்தன உணர்வலைகள். வரதனுக்குப் பிறகு என்ற வாக்கியம் அவனுக்குள் அத்தனை அதிர்வை ஏற்படுத்தின. மற்றவரைப் பொருத்தவரையில் நெப்போலியனின் உலகில் வரதன் ஒரு ஆள் அவ்வளவே..! அவனுக்குத் தான் தெரியும்!! அவன் உலகமே அவர் தான் என்பதை.
“ப்ச்! போதும் மாணிக் விடுங்க, இப்பதான் அந்தாள் சிவாஜி கணேசன் கணக்கா பெர்மான்ஸ் பண்ணினார். இப்போ நீங்க நிண்டாலும் பயம், கண்டாலும் பயம்னு கமலஹாசன் மாதிரி பேசாதீங்க” என்றான் கடுப்பாக.
“சரி சரி நீ கோவப்படாத” என்று மாணிக்கம் இறங்கி வந்து பேச
அது ஒரு மாதிரி இருக்க,
“இல்ல மாணிக்! அவர் பொண்ணு தேடி அலையுறதெல்லாம் எனக்குப் பிடிக்கல. ரொம்ப எதிர்ப்பார்க்கிறார்! அப்படி கல்யாணம் ஆகனும்னு இருந்தா ஆஞ்சநேயர் எனக்கான பொண்ணை என்னைத் தேடி அனுப்புவார்.” என்று சொல்ல
“என்ன மாணிக் இப்படி சொல்லிட்டீங்க? ராமனையும் சீதையையும் சேர்த்து வைச்சதே எங்க ஆள் தான் தெரியுமா…?” என்று காலரைத் தூக்கி விட்டவன் தன் கழுத்தில் இருக்கும் ஆஞ்ச நேயர் டாலரை வெளியே எடுத்து முத்தமிட்டுக் கொள்ள
“அட ராமாயணம்லாம் தெரியுமா?” என்று மாணிக்கம் ஆச்சரியமாகப் பார்க்க,
“மகாபாரதம் கூட தெரியும்” என்றான் இன்னும் பெருமையாக.
“உபயம் சன் டீவி, விஜய் டீவி..” என்று மாஸ்கோ பட்டென்று சொல்லிவிட்டு சிரிக்க
“உன்னையெல்லாம் அப்ரண்டிசா வைச்சிருக்கேன்ல என்ன சொல்லனும்டா! போய் போ பானிபூரி வாங்கிட்டு வா ஓடு…” என்று விரட்டினான்.
*******************************************
ஆர்கழி, காயத்ரி, ஷாலினி, ரஞ்சித் நால்வரும் தி நகருக்கு வந்திருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆர்கழி க்ளாஸ் எடுக்க போகுமிடத்தில் பெர்மிஷன் கேட்டு இவர்களை எல்லாம் தி.நகருக்கு அழைத்துக் கொண்டு போனாள்.
வீட்டில் தனியாக இருக்க வேண்டுமே என்று மாணிக்கம் தான் கடையில் இருந்து கொள்வதாக கூற, பத்து மணிக்கும் மேலாகியும் அவர் வரவில்லை என்றதும், ரஞ்சித்திடம்
“ரஞ்சி! அப்பா இன்னும் வரல, கடையும் பூட்டி இருந்துச்சு, போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது., நான் வரதராஜன் அங்கிள்ட்ட கேட்கிறேன். ஒரு வேளை அவங்க வீட்டுக்குப் போயிருப்பார்…” என்று ஆர்கழி கிளம்பப் போக,
“இந்த நேரம் நீ போ வேண்டாம், நான் பார்க்கிறேன் கா” என்று மறுத்தான் ரஞ்சித்.
“நான் பதினொரு மணிக்கெல்லாம் வொர்க் முடிஞ்சு போயிருக்கேன். எதுனாலும் கால் பண்றேன், நீ முதல்ல இவளுங்களுக்குத் துணையா இரு..” என்று சொல்லி விட்டு வரதராஜனின் வீட்டிற்குப் போனாள் ஆர்கழி.
ஒரு வேளை ரஞ்சித் போயிருந்தால், நெப்போலியன் கைப்பிடித்தலும், இவள் கை ஓங்குதலும் நிகழ்ந்திருக்காதோ என்னவோ..?