ஏற்கனவே அப்பாவின் மீது இருந்த கோபத்தின் காரணமாக, அவள் அதை உள்ளுக்குள் அடக்கி வைக்க, இவனிடம் மீண்டும் பேச்சு கொடுத்தால் கண்டிப்பாக வெடிப்போம் என்று அவளுக்குத் தெரியும். எரிமலையை எப்போதும் உள்ளடக்கி இருக்கும் ஆர்கலியானவள் இவள்.
அவள் பேசாமல் வீட்டிற்கு நடந்து போக, அவர்கள் தெருவின் ஆரம்பம் வரை அவள் பின்னாலேயே வந்தான் நெப்போலியன். அவள் தெருவுக்குள் நுழையவும் அவன் வீடு நோக்கி போக, இங்கு ரஞ்சித்தோ வாசலிலே நின்றிருந்தான்.
“என்னக்கா ஆச்சு? இவ்வளவு லேட்? டைம் என்ன தெரியுமா? பெரியப்பா என்ன பண்றார்.? ஏன் அங்க தூங்கினார்?” என்று அவன் கேள்விகளாக கேட்க “உள்ளே வாடா…” என்றவள் கதவையெல்லாம் அடைத்துவிட்டு,
“டயர்டா இருந்துச்சாம்.. சாப்பிட்டு அங்கேயே தூங்கிட்டார். விடு காலையில வந்துடுவார்” என்று ஆர்கலி இயல்பாக சொல்ல,
“அதுக்கு ஏன் இவ்வளவு நேரம்?” என்று ரஞ்சித் கோபமாக கேட்டான்.
தம்பிகள் எல்லாம் எப்போதும் தமையனாகவோ தந்தையாகவோ மாறுவார்கள் என்று தெரியாது. அப்படி தான் இருந்தது ரஞ்சித்தின் பேச்சும் தோரணையும். ஆர்கலிக்கு தம்பியின் அக்கறை இனித்தாலும். அப்பாவை விட்டுத்தர முடியவில்லை.
“அவங்க பேசிட்டு இருந்தாங்க. அப்பாவை எழுப்ப பார்த்தேன். அவர் ரொம்ப டயர்டா தூங்கிட்டார். ஸோ விட்டுட்டேன், இப்ப எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. வா தூங்கலாம்.” என்று சொல்லி அவள் தங்கைகள் உறங்கும் அறைக்குள் போக, அவன் ஹாலில் படுத்துக் கொண்டான்.
காலையில் நெப்போலியனின் வீட்டில் கண்விழித்த மாணிக்கவாசகத்திற்கு முதலில் எங்கியிருக்கிறோம் என்றே புரியவில்லை. புரிந்த போது வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அவர் அறையை விட்டு மெல்லமாக நடந்து வர, உள்முற்றத்தில் கால் நீட்டி காலை டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த நெப்போலியனோ,
“என்ன மாணிக்…. இப்போ எப்படி இருக்கு….. போதை இறங்கிடுச்சா… ஆனா சும்மா சொல்ல கூடாது வரதன்லாம் இரண்டு க்ளாஸ்கே கவுந்துடுவார்… நீங்க என்னடான்னா ஒரு பாட்டுல அடிச்சும் ஸ்டெடி….. ம்ம்..” என்று அவரை கிண்டல் செய்ய,
அவரோ சங்கடமாக பார்க்க, “அட… ப்ரியா விடுங்க…. இந்தாங்க டீ குடிங்க….” என்று வரதராஜன் அவரிடம் டீயை கொடுக்க,
அங்கிருந்த ஸோபாவில் உட்கார்ந்தவர் “நைட் யாராச்சும் என்னைத் தேடி வந்தாங்களா..?” என்று டீயைக் குடித்துக் கொண்டே கேட்க, “பின்ன.. வராமயா..? உங்க ஆசை மக மார்கழியே வந்துச்சு..” என்றதும் அவருக்குப் புரையேறி விட்டது.
“அட… அட… என்ன பயம்… நேத்து பாட்ஷாவா இருந்த மாணிக்கமா இது..?” என்று நெப்போலியன் வம்பு செய்ய, “டேய்… என்னடா சொல்ற… அந்த பொண்ணு வந்துச்சா…?” என்று வரதராஜனும் பதட்டமாக,
“பொண்ணு தானே வந்தா… எதுக்கு இப்படி பயப்படுறீங்க… அதெல்லாம் சமாளிச்சு அனுப்பிட்டேன்..” என்றான் சாவகாசமாக.
“இல்லடா…. நான் வேற குடிச்சிருந்தேனே…. எதுவும் உளறினேனா..?” என்று வரதன் கேட்க, “நீ குடிச்சிட்டு உளறலன்னா தான்யா உலக அதிசயம்…. அந்த பொண்ணு வரதுக்குள்ள உன்னை நான் உள்ள தூக்கிட்டு போயிட்டேன்..” என்று சொல்ல,
மாணிக்கமோ, “என்ன வீரா… நான் எதாச்சும் உளறினேனா..? ரொம்ப வருஷம் வேற ஆச்சு…. ஆர்கலி எதாவது சொன்னாளா..?” என்று பதட்டமாக கேட்க, “நோ நஹி மாணிக்…. நான் நீங்க தூங்குறீங்கன்னு சொன்னதும்… ஓ ஓ சொல்லி உங்க பொண்ணு போயிடுச்சு… நீங்களா போய் எதுவும் உளறாம இருங்க… உங்க பொண்ணுக்கு எதுவும் தெரியாது…” என்றான் அத்தனையையும் மறைத்து.
“சரி… நான் வீட்டுக்குக் கிளம்புறேன்.. கடையில பார்ப்போம்..” என்று சொல்லிவிட்டு மாணிக்கம் கிளம்பினார்.
வீட்டிற்கு போகும்போது ஒருவித சங்கடம் தொடரவே சென்றார் மாணிக்கவாசகம். நெப்போலியன் என்னதான் சமாதானம் சொல்லி இருந்தாலும் ஒரு பயம் இருந்தது. அப்போதுதான் கல்லூரிக்குக் கிளம்பி கொண்டிருந்தான் ரஞ்சித். இவரைக் கண்டதும்,
“என்ன பெரியப்பா… ரொம்ப டயர்டா… அவ்வளவு சீக்கிரம் தூங்கிட்டீங்களா…?” என்று கேட்க, “ஆமா….கொஞ்சம் அசதியா இருந்துச்சு டா.. அக்கா எங்க..?” என்றபடி அவர் மெதுவாக ஸ்டிக்கை ஊன்றி உள்ளே போய் உட்கார,
அவர் ரஞ்சித்துடன் பேசுவது கேட்க, சமைத்துக் கொண்டிருந்த ஆர்கலி வெளியே வந்து, “என்னப்பா… குடிச்சீங்களா..?” என்று கேட்க அதிர்ச்சியோடு மகளைப் பார்த்தார்.
ஆர்கலிக்கு இன்னமும் அடக்கப்பட்ட கோபம் இருந்தது. ஆனாலும் அப்பாவிடம் காட்ட மனம் பிரியப்படவில்லை. அதுவும் அவரது பயந்த முகபாவம் அவளை மேற்கொண்டு எதுவும் பேசவிடவில்லை. இயல்பாகவே நடந்து கொண்டாள்.
“ஹா… ஹான்.. குடிச்சிட்டேன் ஆரு… நான் போய் குளிச்சிட்டு வரேன்..” என்றபடி அவர் எழுந்து உள்ளே போய்விட, ஆர்கலியும் அவள் வேலைகளைப் பார்த்தாள்.
ஒரு வாரம் கடந்திருக்கும். அன்று மாலை கூண்டில் பச்சைக்கிளிகள் விற்பவர் அவர்கள் ஏரியாவில் விற்றுக்கொண்டு போக, “டேய் மாஸ்… போய் அந்த பச்சைக்கிளியை நிறுத்துடா…” என்று சத்தம் போட,
“என்னண்ணே… பச்சைக்கிளி பிரியாணி சாப்பிட போறோமா..?” என்று ஆர்வமாக மாஸ்கோ கேட்க, “அடப்பாவிங்களா…” என்று மாணிக்கம் பார்க்க,
“மாணிக்…. என் ரேஞ்சுக்கு பச்சைக்கிளியெல்லாம் நான் சாப்பிடுவேனா… அதெல்லாம் என் வீரத்துக்கு அவமானம்…” என்று நெப்போலியன் சொன்னவன் மாஸ்கோவைப் பார்த்து, “எரும போய் அந்தாளை கூப்பிடு..” என்று கத்த,
“ஆமா… இவர் திப்பு சுல்தான் பரம்பரை வேட்டையாடி தான் சாப்பிடுவார் பாரு… எதுக்குடா இப்ப பச்சைக்கிளி….?” என்று வரதராஜன் பணத்தை எண்ணிக்கொண்டே நெப்போலியனை திட்ட,
“வளர்க்கறதுக்கா இருக்கும்… என்ன வீரா…?” என்று மாணிக்கம் கேட்க, “இவனை வளர்க்கிறதே தண்டம்… இதுல இவன் கிளி வளர்க்கப்போறானாமா..?” என்று வரதராஜன் திட்ட,
“யோவ்.. யோவ்…. நிறுத்துய்யா…. நீ என்னை வளர்த்த காலமெல்லாம் முடிஞ்சிப் போச்சு… இப்ப நான் தான்யா உன்னை வளர்க்கிறேன்…. போவியா…” என்றவன் அறையில் இருந்து எழுந்து கடையின் வாசலுக்கு வந்து நின்றான்.
“பச்சைக்கிளியெல்லாம் என்ன விலை..?” என்று விற்பவரிடம் கேட்க, அவர் விலையை சொல்ல, கூண்டோடு அவர் வைத்திருந்த பத்து கிளிகளை வாங்கியவன், பணத்தைக் கொடுத்துவிட்டு, கூண்டைத் திறந்து கிளிகளை அப்படியே பறக்க விட்டான்.
கிளிகள் விற்பவரோ அதிர்ச்சியாகி, “என்ன தம்பி…. வாங்குவன்னு பார்த்தா… இப்படி பறக்க விட்டுட்டியே.” என்று சத்தம் போட, “உன்ட காசு கொடுத்து வாங்கிட்டேன் தானே… அவ்வளவு தான்.. அது என் கிளி… நான் வாங்கினேன்…என் கிளியை நான் பறக்க விடுவேன்… உனக்கென்னயா…?” என்றான் நக்கலாக.
“என்ன தம்பி இப்படி பேசுற..?”
இவர்கள் சத்தம் கேட்டு வரதராஜன் வெளியே வர, மாஸ்கோ நடந்ததை சொல்ல, “அதான்.. காசு கொடுத்துட்டான் தானே… போப்பா நீ..” என்று வரதராஜன் அவரை அனுப்ப,
“என்னய்யா… வளர்க்க தான் எல்லாம் காசு கொடுப்பானுங்க.. இவன் காசுக்கு வாங்கி பறக்க விடுறான்..என்னவோ போ..” என்று அவர் தலையில் அடித்துக் கொண்டு போக, வரதராஜன் நெப்போலியனை முறைத்துப் பார்த்து விட்டு கடைக்குள் போனவர், கதவை அடைத்துவிட்டு கத்த தொடங்கினார்.
“கொஞ்சமாச்சும் காசு அருமை தெரியுதாடா உனக்கு… பரதேசி நூறு ரூபா காசுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்…உனக்கு ஆசையா இருந்தா நாலு கிளி வாங்கி வளர்க்கனும்… அது என்ன வாங்கி பறக்கவிடுற… ரொம்ப விளையாட்டுத்தனம் ஆகிப்போச்சு…” என்று கத்த,
“உனக்கு வயசானதும் எல்லாம் மறந்து போச்சுய்யா….”
“என்னடா மறந்தேன் நான்..?” வரதராஜன் சீற
“சின்ன வயசுல நான் நாய் வாங்கனும்னு கேட்டப்ப நீ என்ன சொன்ன..? உனக்கு மூணு வேளை சோறு போட்டு அடைச்சு வைச்சா உனக்குப் பிடிக்குமா…? அடுத்த உயிரோட சுதந்திரத்தைப் பறிக்க கூடாது… சோறு போட்டு அதோட சுதந்திரத்தைக் கெடுக்க கூடாதுன்னு சொல்வ தானே… அந்த கிளியைப் பார்க்க ஆசையாய் இருந்துச்சு…. அதான் வாங்கினேன். கிளியெல்லாம் பறந்தா தான்யா அழகு… அதான் பறக்க விட்டேன்…. நமக்குப் பிடிச்சவங்களுக்கு நம்ம முதல்ல கொடுக்க வேண்டியது சுதந்திரம் தான்யா…. கைக்குள்ள வைச்சு பார்க்கற அழகை விட…. அதை அது இஷ்டப்படி பறக்கிறப்ப அது தனி அழகுய்யா…” என்றான் கதவை திறந்து திசைக்கு ஒன்றாய் பறந்து சென்ற கிளிகளைப் பார்த்தபடி.
வரதராஜனோ அவனை அதிசயமாகப் பார்த்தவர், மாணிக்கத்திடம், “இந்த பசங்களுக்கு நம்ம ஒரு விசயத்தை சொல்லிக் கொடுத்துட்டு மறந்திடுறோம்.. ஆனா அவங்க மறக்காம இருக்காங்க… பாருங்க…” என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.
“அது என்னவோ சரிதான்..” என்றார் மாணிக்கமும்.
“ப்ச்.. போங்கண்ணே…. சுதந்திரம்.. விடுதலைன்னு ஆக்ஷன் கிங் அர்ஜூனாட்டம் பேசி பச்சைக்கிளி பிரியாணியை க்ளோஸ் பண்ணிட்டீங்களே…” என்று மாஸ்கோ வருத்தமாகப் பேச
“அட பன்னி பயலே….. பச்சைக்கிளி பிரியாணியா கேட்குது.. உனக்கு பன்னி பிரியாணி தான்டா உனக்கு.,” என்றவன் மாஸ்கோவின் முதுகில் அடி ஒன்று போட்டான்.
அன்று இரவு உணவுக்கு பூண்டு உரித்துக் கொண்டிருந்தாள் ஆர்கலி. வீட்டிற்கு வந்து அவள் உடை, அப்பாவுடையது, ஷாலினியுடையது எல்லாவற்றையும் துவைத்தவள், வீட்டினையும் மோப் போட்டு துடைத்தாள். ஷாலினிக்கு யுனிபார்ம் எல்லாம் இருப்பதால் அவளுடையது மட்டும் ஆர்கலி துவைப்பாள். மற்றபடி விடுமுறை நாட்களில் ஷாலினியே அவளுடையதைத் துவைத்துக் கொள்வாள், ரஞ்சித்தும், காயத்ரியும் அவர்களுடையதைத் துவைத்துக் கொள்வார்கள். மாலை முதல் தண்ணீரில் நிற்பது ஆர்கலி என்னவோ சளி பிடிப்பது மாதிரி இருக்க, உடலெல்லாம் வலி வேறு.
வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வின்றி உழைக்கிறாள் அல்லவா. அலுவலகத்தில் என்னவோ அறிவுக்குத்தான் வேலை. ஆனால் அங்கிருந்து பஸ் பிடித்து வீட்டிற்கு வருவது, வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்வது என்று மிகவும் களைப்பாக உணர்ந்தாள். இரவில் மாத்திரைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவள், இட்லிக்கு மாவு ஊற்றிவிட்டு பூண்டுச் சட்னி வைக்க முடிவு செய்தாள்.
அவள் பூண்டினை உரிக்க, சாமான் வேறு நிறைய இருந்தது. துணிகளை வேறு காயப்போட வேண்டும். ஷாலினியோ மிட் டெர்ம் எக்ஸாம் என்று படித்துக் கொண்டிருக்க, ரஞ்சித்திற்கும் இன்டர்னல்ஸ். மாணிக்கம் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, காயத்ரி டீவி பார்த்துக் கொண்டே என்னவோ எழுதிக்கொண்டிருந்தாள்.
“காயு…. அந்த சிங்க்ல இருக்க சாமானைக் கொஞ்சம் கழுவி வைச்சிடேன்…” என்று ஆர்கலி சொல்ல
“ப்ச்… போ எனக்கு ரெகார்ட் எழுதுறது இருக்குக்கா…” என்று காயத்ரி மறுக்க, “நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன் நீயும் டீவி பார்க்கிற… போனை பார்க்கிற…. புக்கைப் பார்க்கிற… எழுதி முடிச்சிட்டு டீவி பார்த்தா என்னடி..” என்றாள் ஆர்கலி.
“டீவி பார்த்தாலும் எழுதிட்டே தானே இருக்கேன்… காது கேட்கும்… கை எழுதும்… போ..” என்று காயத்ரி சொல்ல,
“சரி.. நீ பொறுமையா எழுது… கொஞ்சம் சாமானை விளக்கி வை…. நான் துணி காயப்போடனும்…. சட்னி வைக்கனும்…”
“அதெல்லாம் எனக்கு ஒழுங்கா செய்ய வராது… நான் நாளைக்கு ரெகார்டை சப்மிட் பண்ணனும்…. அந்த டென்ஷன் இருக்க கூடாதுன்னு தான் டீவி பார்த்துட்டே எழுதுறேன்… ஷாலுவை செய்ய சொல்லுக்கா..”
“ஷாலுக்கு மிட் டெர்ம் டி… அவ படிக்கனும்ல..”
“அப்போ நான் படிக்க வேண்டாமா…. என் எழுதுற வேலையை விட்டுட்டு வீட்டு வேலை செய்யனுமா…? உனக்கு என்ன படிக்கிற வேலையா இருக்கு… சட்னி வைச்சிட்டு விளக்கலாம் தானே..?”
“ஏன் நானும் தான் படிச்சாலும் வீட்டு வேலை செஞ்சேன்… படிச்சா சின்ன வேலை கூட செய்யக் கூடாதா என்ன..?”
“ஓ… அப்ப எங்கம்மா அப்போ உன்னை ஸ்கூல் படிக்கிறப்போ வேலை வாங்கினாங்கன்னு என்னை நீ இப்போ பழி வாங்குறியா…?”
“லூசாடி நீ…. நம்ம வீட்டு வேலையை செய்ய சொல்றது பழி வாங்குறதா…? (https://nuttyscientists.com/) எங்க கத்துட்ட இதெல்லாம்….?” என்று கத்தினாள்.
இவர்கள் சத்தம் கேட்டு, “அக்கா…. நான் வந்து செஞ்சு தரேன்…” என்று ரஞ்சித் எழுந்து கொள்ள, “யாரும் எதுவும் செய்ய வேண்டாம். உனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்குல்ல… படி…. நான் செஞ்சுக்கிறேன்..” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க போனாள்.
ஆர்கலி எப்போதும் வேலை செய்ய தயங்காதவள். அவள் குணத்திலும், திறத்திலும் அவள் தாத்தா சிதம்பரம் போல. அவரும் உழைப்புக்கு அஞ்சாத மனிதர். ஆனால் இன்று என்னவோ உடலின் ஒவ்வொரு அணுவிலும் வலி. தலை வேறு கனத்தது. மூக்கெல்லாம் நம நமவென்ற உணர்வு. செய்ய முடியவில்லை என்றாலும் முயன்று செய்தாள். எப்போதும் காயத்ரியையும் ஷாலினியையும் அவ்வளவாக எந்த வேலையும் செய்ய சொல்ல மாட்டாள். அவர்கள் வேலையை மட்டும் செய்ய சொல்வாள்.
இன்று ஏதோ காயத்ரி டீவி பார்க்கிறாளே என்று சொல்ல போக,அவளோ அதை தவறாகப் புரிந்து கொள்ள, தயலோ தர்க்கம் செய்ய முயலவில்லை, முடியவும் இல்லை. மல்லுக்கட்டி அத்தனை வேலைகளையும் செய்து முடித்தவள் இரவு உணவு சாப்பிட்டு விட்டு ஒரு மாத்திரையையும் போட்டவள் வராண்டாவில் உட்கார்ந்திருந்த தந்தைக்கு அவரது பிபி மாத்திரையை நீட்டினாள்.
அவர் வாங்கிப் போடவும், அவர் பக்கத்தில் கீழே உட்கார்ந்தவள், “ஏன்ப்பா… போன வாரம் குடிச்சீங்க..?” என்றாள்.
“ஆ… ஆரு… அத்… அதுவந்து..” என்று மாணிக்கம் தயங்கினார்.
ஒரு வாரமாக ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை ஆர்கலி. ஆனால் அன்று நெப்போலியன் ‘அவருக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு…. குடிச்சார்..’ என்று சொல்ல, அந்த வார்த்தைகள் அகத்தினை விட்டு அகலவே இல்லை.
இன்னும் ஆழம் சென்றன. “அப்பா…. நான் ஏன் குடிச்சீங்கன்னு மட்டும் தான் கேட்டேன்… சொல்லுங்க…”
தான் இருக்க அவருக்கு என்ன மனவருத்தம் என்று தெரிந்து கொள்ள உறுதியாக இருந்தாள். அப்பாவின் கவலையைத் தெரிவது மட்டுமல்ல, களைவதிலும் உறுதியாக இருந்தாள்.
“உனக்கு எப்படி தெரியும்..?” சங்கடமாக அவர் குரல் வர
உடல் சோர்விலும் உள்ள சோர்விலும் அவள் குரல் மிகவும் அமைதியாக வர, கண்டிப்பாக அம்மாவை பற்றி பேசினால் அவளுக்குப் பிடிக்காது என்று தெரியும். ஆகையால்,
“அது…. உனக்குக் கல்யாணம் பண்ணனும்.. அதான் என் கவலைடா…. நம்ம பங்காளிங்க வீட்ல உன் வயசு பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தையே இருக்கு..” என்றார்.
அவருக்கு கவலைகளுக்கா பஞ்சம்..? மனைவி பற்றியது சொல்ல முடியாது அதனால் மகளைப் பற்றியதை சொல்ல, ஆர்கலிக்கு அப்பாவின் கவலையைப் போக்க வேண்டும் என்பதே அவாவாக இருந்திட,
“என்னப்பா… இப்ப எனக்கு கல்யாணம் செஞ்சிட்டா…. நீ சந்தோசமா இருப்பியா..?” என்றாள்.
“கண்டிப்பாடா… அப்போ அப்பா மாப்பிள்ளை பார்க்கவா..?” என்று கேட்க, “பாரு… உனக்குப் பிடிச்ச மாதிரி பாரு… ஆனா எனக்கும் பிடிக்கனும்..”
“கண்டிப்பாடா… உனக்குப் பிடிச்ச மாதிரி தான்டா பார்ப்பேன்..” என்றார் மகிழ்ச்சியாக.
“வேறு எந்த கவலையும் உனக்கு இல்ல தானேப்பா…?” என்று ஆர்கலி கவலையாகக் கேட்க “அதெல்லாம் இல்லடா…” என்றார் மாணிக்கம் மகளின் தலைவருடி.
ஆனால் விழிகளின் மொழியோ அவர் வலியை சொன்னது. பிறகு சிறிது நேரம் மௌனம் நீடிக்க, “ஆமா…அன்னிக்கு பாட்டிலை பார்த்தியே அந்த தம்பிக்கிட்ட சண்டை எதுவும் போட்டியா..?” என்று கேட்க,
“அவனை நல்லா திட்டிட்டு தான் வந்தேன்…” என்று ஆர்கலி அன்றையை அவன் கலாட்டாவில் கடுப்பில் சொல்ல, “என்னம்மா… வீரா ரொம்ப நல்ல பையன்மா..” என்றார் அவனைத் தெரிந்தவராக.
“ம்ஹூம்…. இல்லடா…. நான் கூட முதல்ல அவன் சண்டை போட்டப்ப ரவுடின்னு தான் நினைச்சேன்… ஆனால் பழகினதும் தான் தெரிஞ்சது அவன் ரொம்ப நல்ல பையன்…”
“ப்ச்.. போங்கப்பா..” என்று ஆர்கலி சலிப்பது போல் பேச “அவனை ரவுடின்னு நினைக்கிறியே… ஆனா அவன் இன்னிக்கு என்ன பண்ணினான் தெரியுமா….” என்றவர் கிளி விஷயத்தை சொல்ல,
“பார்டா… கிளிக்கெல்லாம் சுதந்திரம் கொடுத்தானா உங்க மாவீரன்…?” என்று கிண்டல் பேச,
“ஆரு..”
“சும்மா சொன்னேன்ப்பா…. நிஜமா நல்ல விசயம் தான்.. பரவாயில்ல உங்க மாவீரன் ஒரு மாமனிதன் தான் போல..” என்றாள் சிரித்தபடி.
அடுத்த நாள் மாலை ஏழு மணி போல் காஞ்சிபுரம் பஸ் ஸ்டான்ட் அருகே நெப்போலியனும் மாஸ்கோவும் வட்டி வசூல் செய்யப் போக, ஒரு இடத்தில் மக்கள் கூட்டம்.
“என்னாச்சு..?” என்று அருகே இருந்தவரிடம் மாஸ்கோ கேட்க “ஒரு பொண்ணு நடந்து வெளியே போனது… அப்படியே மயங்கி விழுந்திடுச்சு…. தம்பி..” என்று சொல்ல, மாஸ்கோவும் நெப்போலியனும் அருகே போய் பார்க்க,மயங்கிய மங்கை ஆர்கலி.