காலை ஏழரை மணிக்கெல்லாம் ஆர்கலியிடம் இருந்து போன் வர, மாணிக்கம் “என்னடா ஆரு… இந்த நேரத்துல….?” என்று கேட்க
“எங்க. உங்க வள்ளி போனை அவங்கக்கிட்ட கொடுங்க…” என்று கத்த
“என்னாச்சுடா….?”
“அப்பா போனை கொடுப்பா..” என்று அவள் கோபத்தில் கத்த,
“வள்ளி இங்க வா ஆரு உங்கிட்ட பேசனுமாம்..” என்று சொல்லி மனைவியிடம் போனை நீட்ட, அவளோ எடுத்தவுடனே காச் மூச் என்று கத்த, வள்ளியோ அழுதுவிட்டார்.
“என்னம்மா நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க…? நீங்க செஞ்சு வைக்கிற வேலையால இவன் என்னை இம்சை பண்றான்…” என்று ஆர்கலி கத்த,
வள்ளிக்கு அவளது ‘அம்மா’ என்ற அழைப்பு மட்டுமே கேட்க, கண்ணீர் வந்துவிட, பேசவே முடியவில்லை அவரால். இத்தனை வருடங்களான போதும் அவள் வள்ளியிடம் இப்படி நேராகப் பேசியதே இல்லை.
“தோசை கேட்டானேன்னு சுட்டு கொடுத்தா எனக்கு ஆப்பிள் தோசை வேணும்… ஸ்மைலி தோசை வேணும்னு என்னை டார்ச்சர் பண்றான்மா… இவன் இதுல வேற சிரிக்கிற ஸ்மைலி கேட்டா நீ முறைக்கிற ஸ்மைலி தோசை சுடுறேன்னு என்னைப் பார்த்து சொல்றான்…” என்று படபடவென பேசியவள்
“எனக்கே தலைசுத்தலா இருக்கு மல்லுக்கட்டி எழுந்து இவனை ஸ்கூலுக்குக் கிளப்ப பார்த்தா இவன் தொல்லை என்னால முடியல…” என்று பாவமாக சொல்ல
“என்ன ஆரு தலை சுத்தலா இருக்கா…?” என்று வள்ளி பதட்டமாக, “ப்ச்… முதல்ல வந்து இவனுக்கு என்ன வேணுமோ சுட்டுத் தாங்க…” என்னால முடியல…” என்று அலுத்தபடி ஆர்கலி போனை வைக்க
அவள் முன்னால் நின்ற அவள் மகன் நரசிம்மனும் நரை கூடிய வரதராஜனும் சிரித்தபடி ஹைஃபை போட்டுக்கொள்ள,
“எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான் மாமா…” என்று வரதனிடம் கோபிக்க
“தாத்தாவை திட்டினா அப்பாக்கிட்ட சொல்வேன் மா…” என்று அவளது மகன் ஒற்றை விரல் நீட்டி மிரட்டினான்.
அவனது நீட்டிய விரலை பிடித்தவள், “கை நீட்டிப் பேசின பிச்சுடுவேன் உன்னை. ஸ்கூல் போய்ட்டு வாடா உன் தாத்தாவுக்குத் திட்டுதான். உனக்கு தோசை கரண்டி ரெடியா இருக்கும்…” என்று அவன் படுத்திய பாட்டில் வியர்த்தபடி அவள் பேச
“என்ன என் சிங்கக்குட்டியை அடிப்பியா? என்னம்மா..நீ…?” என்று வரதராஜன் மருமகளிடம் குறைபட
“தாத்தா அம்மா அடிப்பாங்களா…?” என்று சிங்கக்குட்டி சிம்மன் பாவமாகப் பார்க்க
“அடிக்க மாட்டாங்கடா. அடிச்சா அப்பாக்கிட்ட சொல்லிடுவோம். இப்ப வள்ளி அம்மச்சி வருவாங்க நீ தோசை சாப்பிட்டு ரெடியாகிடு… தாத்தா உன்னை ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போறேன்..” என்றபடி அவனுக்கு பெல்ட், ஐடி கார்ட் எல்லாம் அவர் மாட்டி விட, அதையெல்லாம் ரசித்தாலும் வெளிக்காட்டாமல் அவள் அறைக்குள் போய் ஆசுவாசப்பட்டாள்.
முகத்தைக் கழுவியவள் ஆபிஸுக்கு ஏற்றவாறு ஒரு சுடிதார் அணிந்து, வெளியே வர, அதற்குள் வள்ளி பேரனுக்குத் தோசை சுட்டுக்கொண்டிருந்தார். வரதராஜன் அவன் காலைப் பிடித்து சாக்ஸ் போட்டு விட,கிச்சன் மேடையில் ஜம்மென்று அமர்ந்து,
“அம்மச்சி ஸ்டார் தோசை… நெக்ஸ்ட்மூன் தோசை.. அப்புறம் போதும்…” என்று சொல்லி தோசையை அவன் அம்மா வைத்த சாம்பாரில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவன் சாப்பிட்டு முடிக்கவும், ஆர்கலி கிச்சனுக்குள் போனவள்,மகனது தலையை சரிசெய்து விட்டு,
“அப்பா மாதிரி தலையைக் கலைச்சு விடாத… எத்தன வாட்டி சொல்றது உனக்கு சிம்பா. பென்சில் எல்லாம் தொலைச்சுட்டு வந்த உன்னைத் தொலைச்சுடுவேன்நான். குட் பாயா இருக்கனும்….” என்று சொல்லி மகனுக்கு முத்தமிட்டவள் மாமனாரிடம்,
“மாமா சாவி எடுத்துட்டு போங்க. நான் சாப்பிட்டு கிளம்பப் போறேன்…” என்றதும் “சரிம்மா…” என்று அவர் பெயரனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
“ஆரு… உனக்கும் தோசை ஊத்தவா…” என்று வள்ளி கேட்க“டைம் ஆச்சும்மா… சீக்கிரம் தா…” என்று உரிமையோடு கேட்க
“சாரிடா…” என்றபடி அவளுக்குஒரு தோசையை தட்டில் வைக்க,“இந்த சாரி…எதுக்கு…?” என்றாள் அவரை பார்த்தபடி.
“அம்மாவை மன்னிச்சிட்டியா…?” அவர் ஏக்கமாக கேட்க, உண்மையில் அதற்கான பதில் அவளிடம் இல்லை. மன்னித்தாளா தெரியவில்லை. ஆனால் மறந்தாள் .காலம் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் மாற்றம் கொண்டு வந்திருக்க,
இப்போது மகனை கவனிக்கவே நேரம் சரியாக இருக்க, நெப்போலியனிடம் சண்டை போடக் கூட நேரமில்லை. சிறிது நேரம் அமைதியில் ஓட,
“அம்மா…. இன்னொரு தோசை தா.. டைம் ஆச்சு..….” என்று அவள் பேச்சை மாற்ற, அவரும் அதை கிளறவில்லை.
மாலையில் வீடு வந்தவள் மெத்தையில் படுத்துக் கொண்டு நெப்போலியனுக்கு போன் செய்ய, “மார்கழி..!” என்று அவன் உற்சாகமாக அழைக்க
“என்ன பண்ற நீ…. எப்போ வருவ உன் அப்பாவும் மகனும் என்னை கொடுமை பண்றாங்க…” என்று புகார் வாசித்தாள்.
ஆர்கலியின் சொல்லுக்கு தம்பி, தங்கைகள் என்று எல்லாரும் கட்டுப்பட்டாலும் அவளது மகன் இருக்கிறானே அவன் அப்படியொரு சேட்டை. அதிலும் ‘அப்படியே என் மகன் மாதிரியே பண்றான்…’ என்று வரதன் பேரனைப் பார்த்து பார்த்து புளங்காகிதம் அடைவார்.
நரசிம்ம வர்மனைக் கண்டிக்கும் ஒரே ஆள் ஆர்கலி தான்.அத்தனை பேரும் செல்லம் கொடுக்க, அவளுக்கும் மகன் என்றால் உயிர் தான். ஆனாலும் எப்போதும் கண்டிப்போடே இருப்பாள்.
“அஞ்சு வயசுப்பையன் டி அவன்… சும்மா இம்சை பண்ணாத…” என்று நெப்போலியன் சொன்னாலும்
“அஞ்சு வயசுல சொல்றது தான் ஆயுசுக்கும் இருக்கும்…” என்றிடுவாள்.
அவனும் அவள் கண்டிக்கையில் குறுக்கே வரமாட்டான்.
“இன்னிக்கு என்ன டி பண்ணினான்…?” என்று நெப்போலியன் சிரித்தபடி கேட்க“உன் மாமியார் அவனுக்கு டிசைன் டிசைனா தோசை சுட்டுக் கொடுத்திருக்காங்க…. உன் மகனும் என்னை இன்னிக்குக் காலையில அப்படி தான் தோசை வேணும்னு இம்சை பண்றான். மாமா ட்ரை பண்ணினா வரல… நான் ஊத்தினா அப்படி செய் இப்படி செய்னு என்னை நாட்டாமை பண்றான். அதான் அவங்களையே ஊத்தி தர சொல்லிட்டேன்..” என்றதும்
“இன்னும் என்ன என் மாமியார்… உன் அம்மான்னு சொல்லு டி..”
“ஹாஹா ஆமா…” என்றவனிடம்“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு முதல்ல எங்க இருக்க நீ.. எப்ப வர? எனக்கு முடியல நிஜமா ரொம்ப டயர்டா இருக்கு…” என்றாள்.
இப்போதும் ஆர்கலிக்கு ஐந்தாம் மாதம். அதுவும் இரட்டைக்குழந்தைகள். நெப்போலியன் அவனது ஸ்பேர் பார்ட்ஸ் ப்ரோடக்ஷன் விஷயமாக கரூர் வரை சென்றிருக்க,நாலு நாள் ஆகியிருந்தது.
“இப்போ நான் நம்பர்.8, விவேகானந்தர் தெரு, கரூர் மெயின் ரோடு, கரூர்ல இருக்கேன்… நாளைக்கு நைட் வீட்ல இருப்பேன். போதுமா…” என்றிட, “என்ன டா… கிண்டலா…?” என்று ஆர்கலி சிரிக்க
“ஹாஹா.. நிஜமா…” என்று அவனும் சிரித்தவன்“முடியலன்னா… லீவ் போடு டி….” என்றான்.
“அய்யோ இப்பவாச்சும் ஆபிஸ்க்கு போய் எஸ்கேப் ஆகிடுறேன்… உன் பையனும் அப்பாவும் அடிக்கிற லூட்டிக்கு நான் வீட்ல இருந்தேன். கத்தி கத்தி என் வாய்ஸே போயிடும்…” என்றவள்
“சரி ஒழுங்கா சாப்பிடு…. ரெஸ்ட் எடுத்துட்டு வா… வேலை முடிஞ்சதா..?” என்று கேட்க
“ம்ம் அவங்க பஸ் தயாரிக்கிற கம்பெனி.. நம்ம ஃபாக்டரிக்கு வந்து பார்த்துட்டு மேல பேசலாம்… சொல்லி இருக்காங்க…” என்றான் மகிழ்ச்சியோடு.
இப்போதெல்லாம் எங்கே போகிறேன். எதற்காகப் போகிறேன் என்று சொல்ல பழகியிருந்தான். பழக்கி இருந்தாள் ஆர்கலி. அடுத்த நாள் இரவில் அவன் சொன்னது போல் ஆர்கலியின் அருகில் இருக்க,
“என்ன டி இன்னிக்கு புடவை கட்டியிருக்க…?” என்று கேட்டான்.
ஆர்கலி வெளியே சென்றால் மட்டுமே புடவை உடுத்துவாள். வீட்டில் எப்போதும் சுடிதார். நைட்டி தான். அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைக்க,
“நீ பொண்ணு பொண்ணுன்னு ரொம்ப ஆசைப்படுவ இல்ல. இரண்டும் கேர்ள் பேபிஸ்…” என்று அவள் பூரிப்போடு சொன்னாள்.
“ஷாலு பாப்பா சொல்லுச்சா…?”
“ஆமா சந்தோஷம் தானே..?”
“சந்தோஷமா எனக்கு என்ன சொல்லனே தெரியல. தேங்க்ஸ்டி….” என்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்,
வெளியே முற்றத்தில்நீர் நிரப்பி அதில் ஆர்கலி மலர்கள் போட்டு வைத்திருக்க, அதில் அவர்களது சிம்பா குட்டி தாத்தா செய்து கொடுக்கும் காகித கப்பல்களை விட்டுக் கொண்டிருக்க,சந்தோஷ மிகுதியில் வந்தவனுக்கு சத்தமும் மிகுதியாக,வரதனைக் கட்டிக் கொண்டவன்,
“வரதா நம்ம வீட்டுக்கு இரண்டு முயல்குட்டீஸ் வர போறாங்க….” என்றதும் அவர் புரியாது பார்க்க,
“வரதா ஆர்கலி ஸ்கேன் பண்ணியிருக்கா… இரண்டும் பெண் குழந்தைங்க….” என்றதும் அவருக்கும் ஒரே மகிழ்ச்சி.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, உள்ளே ஓடிய ஆர்கலியின் மகன், “அம்மா…! அப்பா தாத்தாவை பெயர் சொல்லிட்டார். அப்படி சொல்லக்கூடாது நீங்க சொன்னீங்க தானே?” என்று சமத்தாக அப்பாவைப் போட்டுக் கொடுக்க
“அப்பாவுக்கு அம்மா பனிஷ்மெண்ட் கொடுக்கிறேன்… நீ வா விளையாடினது போதும். சாப்பிட்டு தூங்கலாம். காலையில ஸ்கூல் இருக்கு…” என்று சொல்ல
“அம்மா.. நம்ம வீட்டுக்கு முயல்குட்டி வாங்கப் போறோமா..?” என்று கேட்க,
“ஹா ஹா… உன்னை சிங்கக்குட்டி சொல்றாங்க இல்லடா அது மாதிரி உனக்கு இரண்டு லிட்டில் சிஸ்டர்ஸ் வரப்போறாங்க… அதை தான் அப்பா முயல் குட்டி சொல்றாங்க..” என்றாள்.
“அய்யா ஜாலி இரண்டு பேபியா… ம்மா இன்னொரு பேபி வராதா..?” என்று மகன் அவள் மீது சாய்ந்தபடி கேட்க“ஏன்டா சிம்மும்மா…?” என்று அவள் அவனை அணைத்தபடி கேட்க,
“அப்போதானே டூ பேபி ஒன் டீம்.. நானும் இன்னொரு பேபியும் ஒரு டீம் வைச்சு விளையாடலாம்…” என்று யோசனையாக சொல்ல
“ஹாஹா விளையாட தானே… அதுக்கு தான் உனக்கு காயு சித்தி பாப்பா சமன்யு இருக்கானே… அவனும் உனக்கு தம்பி தான். அப்புறம் ஷாலு சித்திக்கு பாப்பா வரும்… ரஞ்சித் மாமாவுக்கு பாப்பா வரும்…” என்று சொல்லும்போதே,
“என்ன சொல்றான் டி என் சிங்கக்குட்டி…?” என்றபடி மகனை தன் மேல் போட்டுக் கொண்டு நெப்போலியன் கேட்டான்.
“ம்ம் அவனுக்கு விளையாட டீம்ல ஆள் கம்மியா இருக்காம். டிவின்ஸ் கூட எக்ஸ்ட்ரா பேபி கேட்கிறான்.முயல் குட்டினா என்னனு கேட்கிறான்…?” என்றதும்,
“இரண்டு குட்டி பாப்பா… என் சிம்முக்குட்டிக்கு வர போவுது நீதான் நல்லா பார்த்துக்கனும்…” என்று மகனிடம் சொல்ல அந்த குட்டியோ “ம்மா அப்பாவுக்கு பனிஷ்மெண்ட்..” என்று ஞாபகப்படுத்த
“என்னடி சொல்றான்..” என்று அவன் திரும்பும்போதே வேகமாக மெத்தையில் இருந்து குதித்தவன்,“நான் தாத்தாட்ட போறேன்…” என்று ஓடி விட்டான்.