வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் வரதராஜனும் நெப்போலியனும். மாணிக்கமும் கடையை விட்டு வெளியே போக, நெப்போலியன் அவரை நிறுத்தினான்.
“என்ன மாணிக்கம்? உங்க வீட்ல ஆளுங்க எல்லாம் வந்தாச்சா?” என்று கேட்டான்.
“இல்லப்பா” என்று அவர் சொல்லவும்
“அவங்க வர வரைக்கும் நம்ம வீட்டுக்கு வாங்க…எங்க கையால சாப்பிடுங்க” என்று அழைக்க, மாணிக்கத்திற்கும் தனிமை மிக கொடுமை என்பதினால் அவர்களோடு போனார்.
சாப்பிட்டு முடித்து முற்றத்தின் அருகே சுற்றி மூவரும் உட்கார்ந்திருக்க, அப்பா மகனின் பார்வை அடிக்கடி தொட்டு மீள, அதிலும் வரதராஜன் மிகவும் பாவமாக நெப்போலியனைப் பார்க்க, அவனோ மாணிக்கத்தை கண்காட்டினான். அதைக் கண்டு கொண்ட மாணிக்கம்,
“மணி தான் ஒன்பதாச்சே தம்பி. நான் கிளம்புறேன்” என்று சொல்ல
“அப்பாவுக்கும் தூக்கம் வந்துடுச்சு போல வீரா, நீங்க தூங்குங்க. நான் கிளம்புறேன்” என்று சொல்ல
நெப்போலியனுக்கு அழைத்து வந்துவிட்டு துரத்துவதைப் போல இருக்க,
“அவருக்குத் தூக்கம் வந்தா தூங்கட்டும். நம்ம வாங்க வாசல்ல உட்கார்ந்துப்போம்” என்று மாணிக்கத்தை அழைக்க
“டேய்!! என்னடா இப்படி கொடுமை பண்ற” என்று கத்தினார் வரதன்.
“என்னாச்சு?” என்பதாக மாணிக்கத்தின் பார்வை இருக்க
“அப்படியே தூங்காம ராக்கெட் விடப்போறாரு பாரு இவரு, ராவா சரக்கடிக்க இந்த சீன்” என்று நெப்போலியன் சொல்ல
“ஹாஹா! அதுக்கென்ன இரண்டு பேரும் குடிங்க. நான் கிளம்புறேன்.” என்று மாணிக்கம் சிரித்தபடி கிளம்ப
வரதராஜனோ,
“ஏன் மாணிக்கம் நீங்க குடிக்க மாட்டீங்களா?” என்று கேட்க
“ம்ம்! குடிப்பேன், முன்னாடி கால் இருக்கும் குடிச்சிட்டு தள்ளாடலாம். இப்ப தான் குடிக்காமலே தள்ளாடுறேனே. நான் ஏற்கனவே மத்தவங்களுக்குப் பாரம். இதுல இது வேற ஏன் சேரனும்னு குடிக்கறதில்லை.” என்று மனதில் உள்ளதை பட்டென்று சொல்லிவிட்டார்.
வரதராஜனுக்கும் நெப்போலியனுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“என்ன மாணிக்கம் நீங்க? தள்ளாடினா தாங்க நாங்க இருக்கோம். இன்னிக்கு நீங்க குடிக்கிறீங்க, வாங்க. டேய் போய் பாட்டிலை திறடா…நான் போய் ஆம்லெட் போடுறேன்” என்று வரதராஜன் சொல்லிவிட்டு செல்ல
“இல்ல! இல்ல.! வேண்டாம் பசங்களுக்குத் தெரிஞ்சா சங்கடமாகிடும்.” என்று மாணிக்கம் மறுக்க, அவர் மறுப்பை எல்லாம் காதில் வாங்கவே இல்லை இவர்கள்.
எப்போதுமே தனது வலிகளை வெளிக்காட்டியவர் இல்லை மாணிக்கம். இப்போது என்னவோ ஒரு வெறுமை. மனதினை உறுத்திவிட, தனிமை துரத்திட தனது குறைபாட்டை சொல்லி குமைந்து விட நெப்போலியனுக்குத் தனக்குப் பிடித்தவர்கள் வருந்தினால் பிடிக்காது. பாட்டிலை திறந்தவன் மாணிக்கத்திற்கு ஒரு க்ளாஸை நகர்த்தி விட்டு,
“மாணிக்கம் ஃபீலாயிட்டாப்புல. ஒரு குவார்ட்டர் அடிச்சா கூல் ஆயிடுவார். சீயர்ஸ் மாணிக்கம்” என்று சொல்ல, அப்பொழுதும் அவர் சங்கடமாகப் பார்க்க
“மாணிக்கம்! அரசியல் வாதியும் சரி குடிகாரனும் சரி வெட்கம் மானமெல்லாம் பார்க்க கூடாது! சிந்தாம சிதறாம குடிங்க! நாட்டுல தண்ணி பஞ்சம் வேற.” என்று நெப்போலியன் சீரியசாக சொல்ல, அவரும் மெதுவாகக் குடிக்கத் தொடங்கினார். நெப்போலியனும் கொஞ்சமாக தனக்கு ஊற்றிக்கொண்டவன்,
“இப்போதான் நீங்க உண்மையான குடிமகன்” என்றான் மாணிக்கத்தைப் பார்த்து. வரதராஜனுக்கும் ஊற்றிக் கொடுக்க இரண்டு க்ளாஸ் உள்ளே தள்ளியவர்.
“நான் சோகமா இருக்கேன். என் மவனுக்கு கல்யாணம் பண்ணல, இன்னொரு ரவுண்டு வேணும்.” என்றார் பிடிவாதமாக.
அவர் அலம்பல் தாங்காதவன் அவர் இதற்கு மேல் குடித்தால் தாங்கமாட்டார் என்பது தெரிந்தவனாய் கொஞ்சமாக வைனை கலந்தவன், அதிக அளவில் தண்ணீர் கலந்து தர, அதைக் குடித்தவர் அப்படியே அங்கேயே சாய்ந்துவிட
அவரை தூக்கிக் கொண்டு போய் உள்ளறையில் படுக்க வைத்தவன் மீண்டும் முற்றம் வந்து பார்க்க, மாணிக்கம் அரை பாட்டிலை தனியொருவனாக காலி செய்திருந்தார்.
“அடப்பாவி மனுஷா! குடிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சு இப்படி அரை பாட்டில காலி பண்ணிட்ட! மாணிக் போதும்! இதுக்கு மேல தாங்க மாட்டீங்க.” என்று அவரிடம் இருந்து க்ளாஸை வாங்க,
“நான் எவ்வளவுனாலும் தாங்குவேன், அப்படியே குடிச்சி சாகுறேன்.” என்று கத்த, அரை பெக் அடித்தவன் அப்போதே நிறுத்தி விட்டான். பின்னே இவர் இப்படி குடித்துக் கொண்டிருக்க, அவரைத் தடுக்கவாவது அவன் தெளிவாக இருக்க வேண்டுமே.
“சொன்னா கேளுங்க!” என்று தடுக்க பார்க்க
“கல்யாணம் பண்ணலன்னு வரதன் வருத்தப்படுறாருல, அதெல்லாம் வேண்டாம், வீரா நீ நல்லவன்! நீ நல்லா இருக்கனும்! கல்யாணம்லாம் பண்ணாத! இப்படி கால் போனா விட்டுட்டுப் போயிடுவாளுங்க, அவங்க அப்பன் மட்டும் என் கையில மாட்டட்டும், கொல்றேன்…அவனை.!” என்று சீற்றமாகப் பேச
“மாணிக்கம் மாணிக் பாட்ஷாவா மாறிட்டார்” என்று தலையில் கை வைத்துக் கொண்டான். மாணிக்கம் அவர் நிலையிழந்தாலும் தன் நிலையை உளறினார்.
“இந்த வரதனை சொல்லனும், நல்ல இருந்த இந்த ஆளைக் கெடுத்துட்டு இப்படி குடிகாரனா புலம்ப வைச்சிட்டு அந்தாள் நிம்மதியா தூங்குறார்.” என்று மனதிற்கு புலம்பியவன்
“மாணிக்கம்! உங்களை வேண்டாம்னு போனவங்களை ஏன் நினைக்கிறீங்க? உங்களுக்கு நாங்க இருக்கோம்.” என்று அவரை சமாதானம் செய்ய
“எனக்கு என் வள்ளி வேணுமே. என் வள்ளி ரொம்ப நல்லவ…அப்பாவி.!” என்று சொல்ல
“அப்பாவின்னா ஏன் உங்களை விட்டுப் போகனும்?”
“அவ எங்க போனா? அவங்கப்பன் அந்த திமிர் பிடிச்சவன் தான் இழுத்துட்டுப் போய்ட்டான்! அவ அண்ணன் அந்த தடிமாடு அவனும் தான்!” என்றார் கடுப்பாக.
“என்னதான் ஆச்சுன்னு தெளிவா சொல்லுங்க மாணிக்கம்” என்று நெப்போலியன் தாங்காது கேட்டுவிட , மாணிக்கமும் மனதினை சூழ்ந்திருந்த மருளை எல்லாம் மடை திறந்து வைத்தார்.
வள்ளியின் தந்தை கற்பூர பாண்டியன் பெரும் செல்வந்தர். ஆனால் செல்வத்தோடு செருக்கும் வாய்ந்தவர். வேறு வழியின்றி மகளுக்கு இருபது வயதில் திருமணம் ஆகாவிட்டால் பெரும் சிக்கல் என்று ஒரு ஜோசியக்காரர் சொல்லிவிட, ஜாதகத்தில் தீவிர நம்பிக்கைக் கொண்ட கற்பூர பாண்டியன் சல்லடையால் சலித்தாற் போல் அவ்வளவு ஆராய்ச்சிக்குப் பின் தேர்ந்தெடுத்தவர் தான் மாணிக்கவாசகம்.
அவர்கள் ஆட்களிலேயே படித்த, அதே சமயம் நல்ல வேலையில் குணமானவனாக இருந்த காரணத்தில் மட்டுமே அரங்கேறியது அவர்கள் திருமணம்.
வள்ளி ராஜாவீட்டு கன்னுக்குட்டி. வள்ளி ஆர்கழி பிறந்தும் கூட கன்னுக்குட்டியாகவே தான் இருந்தார். அது என்னவோ வள்ளி மீது கற்பூரபாண்டியனுக்குக் கண்டபடி கண்மூடித்தனமான பாசம். அது சில நேரம் மூர்க்கத்தனமாக கூட மாறிவிடும்.
‘நீ என் மகள்! என் சொல்படி தான் நடக்க வேண்டும்’ என்றபடி தான் அவர் இருப்பார்.
வள்ளிக்கு பிறந்த வீட்டின் அளவு இல்லையென்றாலும் புகுந்த வீட்டிலும் ராஜ மரியாதை தான். மாமியார் சமைக்க, சாப்பிடுவது தான் இவர் வேலை. என்றாவது அவர் வேலை செய்வது கற்பூர பாண்டியனுக்குத் தெரிந்து விட்டால் போதும் வந்து சத்தம் போட்டு செல்வார். (Alprazolam) அதற்கு பயந்தே அவரை எந்தவேலையும் செய்ய விடமாட்டார்கள்.
மாணிக்கத்தின் தந்தை சிதம்பரத்திற்கு இதெல்லாம் பிடிக்காவிடினும் கூட, வள்ளி மிகவும் அமைதி. யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தைப் பேச மாட்டார். அதனால் மருமகளுக்காக சம்மந்தியைப் பொருத்துப் போய்விடுவார். மாணிக்கம் மனைவியிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். பெரிதாக சொல்லாவிடினும் மனைவியை அவரும் குழந்தை போல் அப்படி தாங்குவார்.
காலம் மாணிக்கத்தின் காலை எடுக்கும் வரை அனைத்தும் சுபமே. என்று மாணிக்கவாசகத்திற்கு அடிப்பட்டு அவர் படுத்த படுக்கையாகி விட, வள்ளி தான் மிகவும் சிரமப்பட்டுப் போனார். வீட்டு வேலைகளை எல்லாம் மற்றவர்கள் செய்தாலும் வீட்டுக்காரனை கவனிப்பது அவர் வேலை தானே..? அதுவே அவருக்கு சிரமமாக இருந்தது.படுத்த படுக்கையாகி இருந்தவரை கவனிப்பது எவ்வளவு கஷ்டம்.?
ஏதோ அந்த வீட்டில் இருக்கிறோம். உண்கிறோம், வாழ்கிறோம் என்பது போலவே இருந்தார். அப்பொழுது ஆர்கழிக்கு ஐந்து வயதுதான் இருக்கும், கணவருக்கு இப்படி ஆனதில் இருந்து மகளைக் கவனிப்பதைக் கூட விட்டுவிட்டார் வள்ளி.
இதையெல்லாம் கண்ணுற்ற கற்பூர பாண்டியனுக்கு ரத்தம் கொதித்தது. பெண் நன்றாக வாழ்வாள் என்று கட்டிக் கொடுத்தால் அவள் இப்படி சேவகம் செய்வதை அவரால் தாங்க முடியவில்லை. வசதி இருந்தும் என் பெண் இப்படி வேலைக்காரியாக கஷ்டப்பட வேண்டுமா என்ற எண்ணம்.
கற்பூர பாண்டியனுக்கு இருபத்தைந்து வயதில் இப்படி படுத்த படுக்கையாகி விட்ட கணவனோடு தன் மகள் கஷ்டப்பட வேண்டுமா என்ற எண்ணம்..பேசாமல் வேறு திருமணம் செய்துவிட்டால் என்ன என்ற நினைப்பு.
வள்ளியோ உடல் மெலிந்து காணப்பட்டார். அதிலும் கணவருக்கு பெட் பேன் வைப்பது முதற்கொண்டு எல்லாம் அவரே செய்வதால் அந்த ஒவ்வாமையினால் அவரால் சாப்பிடவே முடியவில்லை. இதை பார்த்துவிட்டு ஒரு நாள் கற்பூர பாண்டியன் மகளை பிடிவாதமாக தன்னோடு இழுத்து சென்றுவிட்டார்.
இதையெல்லாம் மாணிக்கம் குடிபோதையில் நெப்போலியனிடம் சொல்லிவிட, அவனுக்கு மாணிக்கத்தை நினைத்து வருத்தமாகப் போனது.
“உங்க வள்ளி போனதும் அப்படியே விட்டுடீங்களா.?”
மாணிக்கமோ இன்னமும் விடாது புலம்பினார்.
“என்ன செய்ய சொல்ற? அவ போக மாட்டா ரொம்ப நம்பினேன். அவங்க அப்பா பாசம்ன்ற பேர்ல அவளை தன் கைக்குள்ளையே வைச்சிக்க நினைச்சார். அவ போய்ட்டா, கல்யாணமாகி ஆறு வருசமாகியும் என்னை அவ புரிஞ்சக்கவே இல்ல. எப்பவும் அவ அவங்கப்பாவோட பொண்ணா தான் இருந்திருக்கா” என்றார் வலியோடு.
“எல்லாத்தையும் விட என் ஆரு பாவம்! அவ மட்டும் தனியாயிட்டா…வள்ளியோட அப்பா, ஆருவை கூப்பிட அவளுக்கு எங்கப்பான்னா தான் இஷ்டம்! அந்தாளை பிடிக்காது..அவர் கூப்பிட்டா இவ போகல…சரின்னு அப்படியே விட்டுட்டுப் போய்ட்டார். குழந்தைக்காகவாச்சும் அவ இங்க இருக்கனும்னு எங்கப்பா பிடிவாதமா ஆர்கழியை தரல, எல்லாம் போச்சு!” என்றவர் மீண்டும் இன்னொரு க்ளாஸை ஊற்றப் போக,
“போதும் மாணிக்கம்! வாங்க தூங்கலாம்.” என்று கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்று அவர்கள் அறையில் இருக்கும் இன்னொரு சிறிய கட்டிலில் படுக்க வைத்தான் நெப்போலியன்.
அப்போதே மணி பத்துக்கும் மேல். நெப்போலியன் குளித்து விட்டு வந்து கதவடைத்து விட்டு ஹாலில் டீவியைப் போட்டுக் கொண்டு உட்கார, வாயிலில் மணியோசை.
கண்டிப்பாக மாணிக்கத்தைத் தேடி யாராவது வருவார்கள் என்று தெரியும். இரவு என்பதால் ரஞ்சித் வருவான் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்க, கதவைத் திறக்காது ஜன்னல் வழி பார்க்க, ஆர்கழியை நிச்சயமாக அவன் எதிர்ப்பார்க்கவே இல்லை. மலைத்து நின்றான்.
ஆனாலும் மனமோ, ‘இந்த மார்கழியை கூட நீ சமாளிக்கலன்னா என்னடா நீ மாவீரன்னு ‘ என்று கூற கதவைத் திறந்தான்.
அவனைக் கண்டதுமே,
“அப்பா கடையில இல்ல” என்று ஆர்கழி ஆரம்பிக்க
“அவர் இங்க தான் தூங்குறாரு. நீங்க வர லேட்டாகுற மாதிரி இருந்துச்சு சாப்பிட்டதும் அப்பா கூட பேசிட்டே தூங்கிட்டார்.” என்றான் தெளிவாக.
உள்ளுக்குள் உறுத்தல் இருந்தது.
ஆர்கழிக்கு நம்பவே முடியவில்லை. ஊரில் அப்பா சீக்கிரம் உறங்கிடுவார் என்று தெரியும். ஆனால் இன்றைக்கு இவர்களை எல்லாம் பார்க்காமல் அப்பா அப்படி பொறுப்பில்லாமல் இருக்க மாட்டார் என்பதை அகம் அறிவுறுத்த,
விழியோ நெப்போலியனை ஆராய, அவன் விழிகளில் இருந்தும் ஒன்றும் தெரியவில்லை. நெப்போலியன் எப்போதும் அவன் உணர்வுகளை அடுத்தவருக்குத் தெரியுமாறு காட்ட மாட்டான். அவனால் மற்றவரின் உடல்மொழியை படிக்க இயலும். அவனது வாய்மொழி தவிர மற்றவருக்கு எதுவும் தெரியாது.
ஆர்கழியோ விடாது,
“அப்படின்னா அவர் போன் பண்ணியிருப்பாரே.?” என்று கேட்க
“அவர் போன்ல சார்ஜ் இல்லன்னு சொன்னார்”
அப்பாவை பார்க்க வேண்டும் என்று உள்ளமேல்லாம் உந்த, அதை உதறிட முடியவில்லை.
“நான் தான் டயர்ட்ல தூங்கிட்டார்னு சொல்றேன்ல..” இவன் எரிச்சலாக சொல்ல
“தூங்கினா பரவாயில்ல நான் பார்க்கனும், அவர் அப்படி எல்லாம் எங்களைப் பார்க்காம தூங்க மாட்டார்.” என்று ஆர்கழி பிடிவாதமாக சொல்லியவள்,
“உன் கிட்ட என்ன பேச்சு? நானே அப்பாவைப் பார்த்துக்கிறேன். அப்பா! அப்பா.!” என்று சத்தம் போட
கடுப்பானவன்,
“சொன்னா கேட்க மாட்ட, காலையில வந்துடுவார் உன் அப்பா. போடி!” என்று கத்தினான்.
“ஏய்! நான் போக மாட்டேன்! உங்கப்பாவை கூப்பிடு. அவர்ட்ட பேசிக்கிறேன்” என்று ஆர்கழியும் பதிலுக்குப் பேச
எங்கே இவள் சத்தம் கேட்டு இருவரும் எழுந்து குடிபோதையில் எதாவது உளறிடுவார்களோ என்று நினைத்தவன்,
“மணி பதினொன்னு ஆகப்போவுது, இப்ப வந்து கலாட்டா பண்றியா நீ? உங்க அப்பா தூங்குறார். இப்போ போ காலையில வருவார்..” என்று முடிந்தவரை சமாளிக்க, இவன் எதுவோ மறைக்கிறான் என்ற பதட்டம் மேலோங்க, வேகமாக முற்றம் தாண்டி அறைக்குள் போக பார்த்தாள்.
அதற்குள்,
“நில்லுன்னு சொல்றேன்ல” என்றபடி அவள் கையைப் பிடித்திருந்தான் நெப்போலியன்.
“கையை விடுடா!” என்று அவள் கத்த,
அவன் கை விட்ட நேரத்தில் அவள் கால் தடுமாற, அருகில் இருக்கும் தூணைப் பிடித்து நிற்க, அவள் கால் பட்டு அங்கிருந்த காலி வைன் பாட்டில்கள் உருண்டோட, அப்போதுதான் அதை இருவருமே கவனித்தனர்.
ஆர்கழியோ அதை அதிர்ச்சியாகப் பார்க்க, நெப்போலியனோ அலட்சியமாகப் பார்த்தான்.
“பொறுக்கி! என் அப்பாவை…அப்…அப்பாவை குடிக்க வைச்சியா..?” என்று சண்டையிட
“ஏய்!! யாரை பொறுக்கின்ற? வாயை உடைச்சிடுவேன்!!”என்றவன் கை நீட்டி மிரட்ட,
“என் வாயை உடைப்பியா நீ?” என்று ஆர்கழி கை ஓங்கிவிட, நெப்போலியன் அதுவரையில் மாணிக்கம் சொன்னதையெல்லாம் வைத்து அவள் மேல் ஒரு பரிதாபத்தில் இருந்தவன் இப்போது கோபமாகி, அவள் கையை இறுக்கப் பிடித்தவன்,
“குடிக்க தான் வைச்சேன், என்ன இப்போ?” என்றான் திமிராய்.
“ச்சே! நீயெல்லாம் மனுஷனா? எங்கப்பாவுக்கு பிபி இருக்கு, அவர் தானே எங்களுக்கு இருக்கார், அவரை எப்படி நீ குடிக்க வைக்கலாம்? அவரா வேணும்னு சொன்னாலும் நீ தடுத்து தானே இருக்கனும்?” என்றாள் விழிகள் கலங்கி
அதில் இவன் கைகளை விலக்கி,
“ஜெய் ஆஞ்சநேயா!!” என்று மெல்லமாய் முணுமுணுத்தவன்
“அதெல்லாம் எனக்குத் தெரியாது, குடிச்சாச்சு. அவர் நல்லா தான் இருக்கார். இப்போ விடு.” என்று சொல்கையிலேயே ரஞ்சித் ஆர்கழியைக் காணவில்லை என்றழைத்தான்.
நெப்போலியனை முறைத்துக் கொண்டே அதை எடுத்தவள்,
“இங்க தான் ரஞ்சி அப்பா இருக்கார். டயர்ட்ல தூங்கிட்டார். நான் வரேன் இரு.” என்று சொல்லி வைத்துவிட
“இத தான் நானும் செஞ்சேன்.” என்றான் நெப்போலியன் அவளைப் பார்த்து.
தயலின் கயல் விழிகளில் அயில்(கோபம்) ஏறிய வண்ணம் பார்க்க, அவள் விழிக்கெல்லாம் வீரனாய் இவன் அசரவில்லை.
“இப்ப உன் தம்பிக்கிட்ட நீ என்ன சொன்னியோ, அதை தானே நானும் சொன்னேன். உங்கப்பாவுக்கு மனசு சரியில்ல, குடிச்சிட்டார். உங்களுக்குத் தெரிஞ்சா சங்கடம்னு நான் சொல்லல. அதுக்கு என்னை கண்டபடி பேசுவியா நீ?” என்றான் முறைப்பாக.
“நான் சொன்னதும் நீ சொன்னதும் ஒன்னா? நான் எங்கப்பாவுக்கு கெடுதல் தர ஒரு விசயத்தை செய்ய மாட்டேன். ப்ச்…உங்கிட்டா போய் அந்த அக்கறையெல்லாம் எப்படி நான் எதிர்ப்பார்க்க? உன்னைப் பொருத்தவரை அவர் வேலை செய்றவர் தானே..?மனசு கஷ்டமா இருந்தா குடிச்சா சரியாயிடுமா.?” என்றாள் கடுமையான கோபத்துடன்.
“மனுஷனாடா நீ?உங்கிட்ட பேசுறதெல்லாம் வேஸ்ட்” என்று எரிச்சலாக சொன்னவள் கண்மூடி தன்னை சமன் செய்து கொண்டு,
“அப்பாவை ஒருதடவ பார்த்துட்டு போறேன்..” என்று அமைதியாக சொல்ல, அவன் அறைப்பக்கம் போக, ஆர்கழியும் பின் தொடர்ந்தாள்.
அவர் அமைதியாக கண்கள் சொருக கிடக்க, அப்பாவின் மீது அளவற்ற ஆத்திரம் பெருக, அடக்கிக் கொண்டிருந்தாள்.
பின் அவள் கடகடவென வெளியே வந்துவிட, நெப்போலியனும் கதவை வேகமாக சாற்றிவிட்டு அவள் பின்னால் வந்தவன்,
“ஏய் மார்கழி!! இங்க பாரு…” என்று அழைக்க
“என் பெயர் மார்கழி இல்ல..” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு,
“என்னமோ அது வாயில வரல, மாணிக்கத்துக்கு அவர் குடிச்சது உனக்குத் தெரிஞ்சா ஃபீல் பண்ணுவார். அதனால அவர்கிட்ட நீ தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.” என்றான் மாணிக்கத்தின் மீது கொண்ட அக்கறையினால்.
அக்கறை அவன் கரையில் இருக்கும் வரை ஒன்றும் இல்லை., அது அக்கரைக்கு அவள் கரையில் செல்ல…அவள் கரை கடந்தாள்.
“வேண்டாம்டா, எதாச்சும் சொல்லிடுவேன். பெருசா அவர் மேல அக்கறை இருக்கவன் மாதிரி சீன் போடாத!” என்றாள் கோபத்துடன்.
“ஹே!போதும்டி நானும் பார்க்கிறேன் ஒவரா பேசுற, உன்னை விட எனக்கு அவர் மேல அக்கறை ஜாஸ்தி தான்” என்றான் நெப்போலியனும் அவளுக்குக் குறையாத ஆத்திரத்துடன்.
“கிழிச்ச” என்றாள் ஆர்கழி.
அவனிடம் பேசுவது அவளை உலைக்களமாக மாற்ற, அவனைக் கண்டுகொள்ளாமல் வேகமாக அவள் தெருவில் நடக்க துவங்க,
நெப்போலியன் இந்த நேரத்தில் தனியாக போகிறாளே என்று பின்னால் போக
“எதுக்கு நீ என் பின்னாடி வர?”என்று ஆர்கழி திரும்பி நின்று பல்லைக் கடிக்க