நடராஜர் பத்திலிருந்து ஒரு முழு பத்தியையும் அச்சு பிசகாமல் பாடி தன் மழலை குரலால், அந்த நடராஜ பெருமானையே கண் முன்னே ஆட வைத்திருந்தாள் சர்வேஷ்வரன், பைரவியின் சீமந்த புத்திரி ஆதிரா.
உருவத்தில் தாயையும், தகப்பனையும் கலந்து இழைத்த 4 வயது தங்க சிலை ஒன்று, அல்லி மலர் விழிகளை மூடி, கை கூப்பி, மனம் உருகி பாடும் அழகில், அங்கிருந்த அத்தனை உள்ளங்களையும் கொள்ளை கொண்டாள் அந்த குட்டி ரோஜா மலர்செண்டு.
பாடல் முடியவும் அவளை மலர்குவியலை போல் அள்ளிக்கொண்டார் விஷ்வநாதன்.
இப்போழுது எல்லாம் அவருக்கு இருக்கும் முழு நேர வேலையே, தங்கள் பேரப்பிள்ளைகளுடன் பொழுதை கழிப்பது தான்.
“தாத்தா பாட்டு அழாக இருந்துச்சா..? அம்மா தான் சொல்லிக் கொடுத்தா… தன் அல்லி விழிகளை உருட்டி மழலையில் உரைக்க,
“அப்படியா…! குட்டிக்கு அம்மா சொல்லிக் கொடுத்தாங்களா…!! இருக்கும் அத்தனை வேலைகளின் மத்தியிலும், தானும் குழந்தையாக மாறி அவளிடம் பேச்சி கொடுத்து கொண்டிருந்தார் விஷ்வநாதன்.
“ஆமா தாத்தா…. சரி அப்பா அம்மா எப்போ வருவாங்க கோவிலுக்கு ஒன்னா வரலாம்னு சொன்னாங்க இன்னும் வரவே இல்ல…” தன் சிப்பி வாய் திறந்து மழலை மொழி மாறமல் வினா தொடுக்க,
“அப்பா, அம்மாவை கார்ல கூட்டிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்டா தாங்கம்… நீங்க தாத்தா கூட சமத்தா வருவீங்களாம்…” பேத்தியை சமாதானம் செய்தவர், அதன் பிறகு குழந்தையை சுமந்தபடியே கோவில் நிர்வாகியிடம் பேசி அங்கு நடக்கும் வேலைகளை மேற்பார்வை பார்த்தபடி இருந்தார்.
“எப்பா யாரு அங்க….அந்த ஜமாக்களத்தை எடுத்து அந்த பக்கம் விரிச்சி விடுங்க… ஜனங்க வந்துட்டு இருக்காங்க பாருங்க, எல்லாருக்கும் உட்கார ஏற்பாடு பண்ணுங்க…. நீ அந்த தோரணத்தை மேல ஏத்தி கட்டு… இன்னுமா வேலை முடியல… அந்த மாலையை எடுத்து அங்க கொடுங்க” அங்கிருந்தவர்களுக்கு வேலையை ஏவியபடி இருந்தார் விஷ்வநாதன்.
“அப்பா…” என அழைத்த விக்னேஷ்வரின் குரலில் திரும்பியவர்,
“ரெடியாகிட்டு இருக்காங்கப்பா… இன்னும் சர்வேஷ் பைரவி வர்ல போன் பண்ணாலும் எடுக்கல, உங்களுக்கு ஏதாவது போன் பண்ணாங்களான்னு அம்மா கேட்டுட்டு வரச்சொன்னாங்கப்பா…” அவர் பதிலுக்காக காத்திருந்தான் விக்னேஷ்வரன்.
“ஏன் இதை உங்க அம்மா வந்து கேட்க மாட்டாளாமா… ? உன்னை விட்டு அனுப்புறா…?” மனைவியின் செயலில் மகனை கடிய,
அவரின் உரிமையான கோவத்தில் வந்த சிரிப்பை இதழுக்குள் மறைத்தவனோ, “அம்மா பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிட்டு இருக்காங்கப்பா… அதான் என்னை அனுப்பினாங்க” என்றான். பதிலாய்.
முகத்தில் அசுடு வழிந்தாலும் அதை மறைத்தபடியே “சரி சரி… எனக்கும் பண்ணல… இந்நேரம் வந்துட்டு தான் இருப்பான்னு நினைக்கிறேன்… வண்டி ஓட்டிட்டு வர்லதுல கேட்டு இருக்காது நீ போய் மத்த வேலையை பாரு சரியான நேரத்துக்கு வந்துடுவாங்க” . அவனை அனுப்பி வைத்தார்.
“மாமா… நீங்க என்ன இங்க நிக்குறிங்க சசீப்பா கூட நில்லுங்க வந்தவங்க உங்களையும் கேக்குறாங்க…” அரவிந்த் விஷ்வநாதனை முகப்பிற்கு அழைத்திட,.
“அப்படியா மாப்ள… சரி நீ இங்க பாத்துக்க நான் பெரிய மச்சன் கூட இருக்கேன்…” அரவிந்தனிடம் பொருப்பை ஒப்படைத்தவர் பேத்தியுடன் வாசலுக்கு விரைந்தார்..
கடந்த கால கசடுகளை அரவிந்தும் மறந்துவிட, விஷ்வநாதனிடமும் அவர் குடும்பத்தாருடனும் இயல்பாய் பேச ஆரம்பித்து விட்டான்.
ஊரில் இருக்கும் பாதி கூட்டம் கோவிலில் தான் இருந்தது. வேண்டியவர் வேண்டாதவர், ,தெரிந்தவர், தெரியாதவர், அங்காளி பங்காளி நண்பர்கள் என ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் அழைத்திருந்தார் விஷ்வநாதன்.
ஐம்பது வருங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் நடந்த நடராஜன் தாத்தா சுப்ரஜா பாட்டி திருமணத்தை, நடராஜன் தாத்தாவின் எண்பதாவது வயதில், ஊரையே கூட்டி சஷ்டியப்த பூர்த்தி விழாவாக கொண்டாட முடிவு செய்திருந்தார் விஷ்வநாதன். இதோ இப்போது அதற்கான ஏற்பாடுகள் தான் நடந்துக்கொண்டு இருக்கிறது.
…
“தாரணி அந்த பூவை கொண்டா” சாரதா தாரணியை வேலை ஏவ,
“அட அட இன்னும் பாட்டிக்கு பத்து வயசு குறைஞ்சா போலல்ல இருக்கு” சுப்ரஜா பாட்டி முகவடிவை அளந்து திருஷ்டி எடுத்தவள் “இந்த மல்லிகை போதுமா பெரியம்மா..? இல்ல அந்த முல்லையையும் எடுக்கவா…?” என்றாள் தாரணி.
“போதும் தாரணிமா… நீ என்னை ரொம்ப கிண்டல் பண்ற… ” நரை தரித்து, கன்னத்தில் சுருக்கம் விழுந்தாலும் தாரணியின் பேச்சில் முகம் செம்மை பூத்திட சுப்ரஜா பாட்டி வெட்கத்தில் முகத்தை முடிக்கொண்டார்.
“இங்க பாருங்களேன் ரேகா, பாட்டிக்கு வெட்கத்தை… இதுக்கே இப்படின்னா இன்னும் தாத்தாவ பார்த்தா எப்படி வெட்கப்படுவாங்களோ…” தாரணி கன்னத்தில் கை வைத்து வியக்க… ரேகாவும் தாரணியின் பேச்சில் சேர்ந்து சிரித்தாள்.
அவள் தலையில் தட்டிய சாரதா “என்னடி எங்க அம்மாவையே கிண்டல் பண்றியா..? மாப்ள உன்னை உருட்டி மிரட்டி வைச்சிக் கூட இப்படியே ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க… போடி போயி வந்தவங்களுக்கு காபி தண்ணி ஒழுங்கா கொடுத்துட்டு இருக்காங்களான்னு பாரு…” அவளை அங்கிருந்து விரட்டினார்.,
“ஆமா பெரிய டெரர் போலீசு…ஆனாலப்பட்ட உங்க விச்சுவே திருந்திட்டாரு… இவரு கிடக்காரு சுண்டைக்காய் போலீசு…” வாயிக்குள் முனுமுனுத்தபடியே வந்தவளின் முன் நின்றிருந்த உருவம் அவளையே உறுத்து பார்க்க,
“அய்யோ டெரர் பீஸ் இங்க இருக்கறது பார்க்காம வாயை விட்டுட்டேனே” அசடு வழிந்தபடி வேறு பக்கம் நுழைந்து செல்ல முயன்றாள் தாரணி.
அவளை வாயை கடிப்பது போல் பாவைனை செய்த அரவிந்த், ஓடுடி என வாயசைக்க தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து மணவரையை நோக்கி ஓடினாள். அவளின் துடுக்கு தனமான செய்கையில் சிரித்தபடியே துளசியிடம் வந்தவன்,
“துளா மா… இந்த இந்த மெட்டி தாலி எல்லாம் அம்மன் கிட்ட வைச்சி கொண்டு வர சொன்னாரு அய்யர்” அரவிந்த் துளசியிடம் அவற்றை கொடுக்க,
“கொடு அர்வி, அம்மன் பாதத்துல வைச்சி வாங்கிட்டு வரேன்… நீ பசங்கள ஒரு பார்வை பாத்துக்க நான் இப்போ வந்துடுறேன்…” சாமி சந்நிதியை நோக்கி சென்றார் துளசி…
அரவிந்திற்கும் தாரணிக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் அவர்களை போலவே விக்னேஷிற்கும் ரேகாவிற்கும் இரண்டு ஆண்பிள்ளை… பிறந்த நான்குமே ஆண்பிள்ளைகளாக போக அந்த வீட்டின் எல்லோருடைய குட்டி இளவரசி ஆதிராவாகி போனாள். குடும்ப உருப்பினர்கள் ஆளுக்கு ஒரு வேலை பார்த்தபடி இருந்தனர்.
நடராஜன் தாத்தாவிற்கோ தன் குடும்பத்தார் சுற்றம் நண்பர்கள் புடைசூழ அதுவும் தன் அக்கா மகன் விஷ்வநாதன் முன்னிலையில் இந்த திருமணம் நடப்பதை நினைத்து உள்ளத்தில் அத்தனை நிம்மதி.
….
“இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்குறது…. இன்னைக்கு வேண்டாம்னு சொன்னா, உங்க பொண்ணு கேக்குறாளா..? அவ இருக்கற நிலமைக்கு இந்த பிரயாணம் அவசியம்தானா..?” கணவரிடம் ஆதாங்கத்துடன் கூறிக்கொண்டிருந்தார் துளசி…
“துளா, அவ இருக்க பொஷிஷன் தெரிஞ்சும், நீ இப்படி பேசுற…? இப்போ என்ன…? இன்னும் இருபது நிமிஷம் இருக்கு கண்டிப்பா வந்துடுவா… மாப்பிள்ளை அவளை சேஃபா கூட்டிட்டு வருவாரு..” துளசியை தீரன் சமாதானம் செய்தார்.
“துளா எல்லாத்துக்கும் அவளை திட்டாதம்மா…” சாரதா… மருமகளுக்கு வக்காளத்து வாங்க
“நீங்க சரியில்லை அண்ணி அவளை அவபோக்குலையே விட்டுறிங்க எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம்… அதான் இந்த நல்ல நாளில் கூட சொல் பேச்சை கேட்காம வெளியே போயிருக்கா…” இந்த நல்ல நேரத்தில் மகள் அருகில் இல்லையே என துளசி பைரவியை கடிந்துக் கொள்ள,
“அம்மா தங்கச்சி, என் மருமக ஒரு முடிவு எடுத்தா அது கரெட்டா இருக்கும்… அது முக்கியமான வேலையா இருந்து இருக்கும் அதான் போயி இருக்கு… சொல்லிட்டு தானே போனாங்க விடுமா ” விஷ்வநாதன் பைரவிக்கு பரிந்துக் கொண்டு வர அதன் பிறகு சொல்லவும் வேண்டுமோ,
சென்னையில் நடந்த கலெக்டர் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில், அதை ஒதுக்க முடியாமல் பைரவி கிளம்ப, அவளுக்கு துணையாக சர்வேஷூம் உடன் சென்றிருந்தான். அதை தான் துளசி ஆதங்கமாக உரைத்திட அனைவரும் அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க
“மாப்பிள்ளை பொண்ணை கூட்டிட்டு வாங்க…” மேடைக்கு அய்யர் அழைக்க விஷ்வநாதன், சசீதரன், விஜயேந்திரன், நடராஜன் தாத்தவை அழைத்து வர, சாரதா, கமலம் ,துளசி, சுப்ரஜா பாட்டியை அழைத்து வந்தனர்.
அழகிய பச்சை வண்ண காஞ்சி பட்டில் மெல்லிய சரிகையிட்ட பட்டு புடவையை அணிந்து மிதமாய் அலங்காரம் செய்த அம்மனை போல அழகாக இருந்தார் சுப்ரஜா பாட்டி. அவருக்கு இணையாக பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளையாக தோரணையுடன் மணவரையில் அமரந்தார் நடராஜன் தாத்தா.. அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் நிறைவுடன் இந்த காட்சியை கண்டதென்றால் விஷ்வநாதன் கண்களோ சந்தோஷத்தில் பனித்தது.
விக்னேஷ், சர்வேஷின் அலைபேசிக்கு இரண்டு முறை அழைத்து விட்டான். அது தொடர்பு எல்லைக்கு அப்பால் என செய்தி தாங்கி வர, வாசலையே பார்த்தபடி அரவிந்தும் விக்னேஷூடன் அங்கு நின்றிருந்தான்.
முகப்பில் விளையாடிக் கொண்டிருந்த தாரணியின் மகன் ஆதி, “அதோ அத்தை வந்துட்டாங்க ம்மா… மாமாவும் வந்துட்டார்” என கூவிக்கொண்டே கோவிலுக்குள் ஓடி வர, அவனை தொடர்ந்து தன் மேடிட்ட 7 மாத கருவை ஒற்றை கையில் தாங்கியபடி வேக நடையிட்டு முன்னால் வந்தாள் பைரவி.
“ஏய் ஜில்லு, பாத்து மெதுவா டி…” என்றபடி சர்வேஷ் அவள் பின்னே ஓடி வந்தான்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும் தான் அனைவருக்கும் நிம்மதியே வந்தது. விஷ்வநாதனின் கையில் இருந்த அவர்கள் அருமை புதல்வியோ “அம்மா அப்பா வந்துட்டாங்க” என்றாள் தன் தாத்தாவிடம்.
“வாடி வந்து நில்லு…” துளசி கோப பார்வை பார்க்க, “வாடாமா இங்க…” கமலம் அவளை அழைத்து பக்கத்தில் இருத்திக் கொண்டார். மகளை கண்டவள் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க
“நீ ரொம்ப லேட் மா” என்ற ஆதிரா துளசியை போலவே முகம் தூக்க, “என் மாமியார் கூட என்னை திட்டல, நீங்க ரெண்டு பேரும் திட்டுறிங்க…” மகளையும், தாயையும் பாவமாய் பார்த்தாள் பைரவி.
“துளசிம்மா போதும்மா குழந்தை பாவம்…” சசீதரன் துளசியிடம் இருந்து இளைய மகளை காத்திட, விஷ்வநாதன் பேத்தியை விளையாட்டு காட்டி மருமகளை காத்தார்.
சாரதவோ மருமகளின் களைப்பை கண்டு கொள்ள, அவருக்கு முன்னே கையில் சாத்துக்குடி சாறுடன் வந்தான் சர்வேஷ்.
“இந்தா ஜில்லு, இதை குடி “
“மாமா…” என அவனை கண்டனப்பார்வை பார்க்க
“குடி டி… யாருக்கும் கேட்கா வண்ணம் அதட்டி அவள் கையில் திணித்திட,
மாமா எல்லாரும் நம்மையே பாக்குறாங்க அவள் அவஸ்தையாய் உரைத்தாள்.
“யார் பார்த்தா என்ன ஜில்லு, நீ குடி” விடாப்பிடியாக அவள் வாய் அருகே பழச்சாறை கொண்டு செல்ல, அதை தடுத்தாள் பைரவி…
“இதுக்கே இப்படின்னா உன் கால் வீக்கத்துக்கு தைலம் போடப்போறேனே இப்போ அதுக்கு என்ன சொல்ல போற…” லேசாய் தலை சாய்த்து தன் வெண்முத்து பற்கள் தெரிய சிரித்தான் சர்வேஷ்.
அவனை பாவமாய் பார்த்தவள் அவனுக்கும் மட்டும் கேட்கும் குரலில் அய்யோ மாமா, போதும்… முடியல என்னால… கொண்டா அந்த ஜூஸை குடிக்கிறேன்… இனி வீட்டுக்கு வந்து தான் இந்த காலை பிடிக்கிறது கையை பிடிக்கிறது எல்லாம்… இங்க மானத்தை வாங்கிடாத” கெஞ்சலும் கொஞ்சலுமாய் கூறியவளோ உதட்டுக்குள் அவனை திட்டியபடி ஜூஸை குடித்து முடித்தாள்.
மகள் எப்படி அங்கே வாழப்போகிறாளோ என்ற எண்ணத்தில் சஞ்சலத்துடன் இருந்த துளசிக்கு, ஒவ்வொரு முறையும் அந்த குடும்பம் பைரவியிடம் காட்டும் அன்பில் நெகிழ்ந்து போயிருந்தார். அதே திருப்தியுடன், மேடையில் இருக்கும் தன் குடும்பத்தின் மூத்த தம்பதிகளை கண்டவருக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது…
விஷவநாதனிடமிருந்து ஆதிராவை வாங்கிக் கொண்ட சர்வேஷ்வரன், போங்கப்பா அம்மா கூட மேடை பக்கம் போய் நில்லுங்க… என அவரை அனுப்பியவன் புகைப்பட கலைஞரை அதை அழகாக பதிவு செய்ய சொன்னான்.
“எல்லோரும் வந்தாச்சா..? அய்யரின் குரலில் அனைவரது கவனமும் மணவரையை நோக்கி சென்றது. “கெட்டி மேளம் கெட்டி மேளம்” அய்யர் நடராஜன் தாத்தா, கையில் கொடுத்த, மங்கள நாணை அனைவரின் முன்னும் சுப்ரஜா பாட்டியின் கழுத்தில் கட்டி தம்பதி சமேதராய் காட்சி தந்தனர் அந்த மூத்த தம்பதியினர்.
எத்தனை ஏச்சு பேச்சுக்களை கடந்து வந்திருப்பார் இந்த 50 வருடத்தில்… கண்கள் கலங்க உள்ளம் அமைதியில் நிறைய அத்தனை துன்பங்களிலும் தோள்கொடுத்து என்றும் மாறாத காதலுடன், இதுநாள் வரையிலும் அரவணைத்து கரம் கோர்த்து தன் நெஞ்சில் சுமந்த கணவனை விழி உயர்த்தி காதலாய் பார்த்தார் சுப்ரஜா பாட்டி.
என்றோ எப்போதோ யாருக்கும் சொல்லாமல் மன சஞ்சலத்துடன் நடந்தேறிய திருமணம் இன்று ஆயிரம் பேர் மத்தியில் உறவுகள் புடை சூழ நடந்ததில் நடராஜன் தாத்தா தன் இல்லாளின் கண்களில் தெரிந்த காதலில் மனம் நிறைந்து தோளோடு அணைத்து விடுவித்தார்.
இந்த காட்சியை கண்ட இளசுகள் அனைவரும் ஓ… ஓ… என் கத்தி தங்களின் மகிழ்வை வெளிப்படுத்த மேலும் வெட்கத்தில் கண்வனின் மார்பில் தஞ்சம் கொண்டு கண்களை மூடிக்கொண்டார் சுப்ரஜா பாட்டி. பின் மனைவியை ஒருவாரு சமாதானம் செய்த நடராஜன் தாத்தா தம்பதி சமேதராய் இருக்க, அனைவரும் அவர்களது காலில் விழுந்து ஆசி வாங்கினர். கடைசியாக பைரவியும் சர்வேஷ்வரனும் விழ வந்தனர்.
காலில் விழுந்த பைரவியை தாங்கி எழுப்பிய சுப்ரஜா பாட்டி “என் தங்கம்… உன்னால தான்டா எங்களுக்கு விடிவு காலமே வந்திருக்கு… மனசு நிறைஞ்சி சொல்றேன்டா தங்கம், உன் நல்ல மனசுக்கு உனக்கு ஒரு குறையும் வராது டா இருவரின் உச்சி முகர்ந்து வாழ்த்த சுப்ராஜாவை கட்டிக்கொண்டாள் பைரவி.
ஹேய் வாட்ட ஸ்னேப் என்ற கூவலுடன், அந்த காட்சியை அழகாக பதிவு செய்தது அர்ஜூனின் அலைபேசி ….
“டேய் நீ எப்போ வந்த..? வர ஒரு வாரம் ஆகும் லீவு கொடுக்கலன்னு சொன்ன..?” சர்வேஷின் கேள்விக்கு
“ஸ்வீட் சர்ப்ரைஸ் மாமா… எப்படி..? வந்துட்டேன்ல… பாட்டி தாத்தா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றபடி அவர்
கள் காலில் விழுந்து வணங்கினான் அர்ஜூன் ஐ பி எஸ்.
காதலின் இனிய ஸ்வரங்கள் சங்கீதங்களாக உருமாறி பூமியின் பூபாளத்தை இசைத்து கொண்டிருக்கிறது….. இது போல் என்றும் இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்