அவனை பார்க்கவும் அம்பலவாணனின் முகம் சற்று பதற்றமாகவே காணப்பட்டது. அதையும் நீதிபதி குறித்துக்கொள்ள
“நீங்க தான் இறந்த செல்வபாண்டியன் கார் டிரைவர் வேலனா?” நீதிபதி விசாரித்தார்.
“ஆமாங்க அய்யா” என்றான் வேலன் பணிந்த குரலில்…
“முதல் முறை போலீஸ் விசாரணையின் போது நீங்க ஏன் சாட்சி சொல்ல வரல?”
“அய்யா எஸ் ஐ கனகராஜ் சார்தான் என்னை எதுவும் சொல்ல கூடாதுன்னு மிரட்டி இந்த கேஸ் முடியற வரை வெளியே ஊரில் வேலை பார்க்கனும்னு ஊரை விட்டே அனுப்பிட்டாருங்க… மீறி இருந்தா கொல்லக் கூட தயக்கம் காட்டமாட்டேன்னு சொல்லிட்டாருங்க அதான் உயிருக்கு பயந்து ஊரை விட்டு போயிட்டேனுங்க… இரண்டு நாளைக்கு முன்னாடி என் பொண்ணுக்கு அடிபடவும் யாருக்கும் தெரியாம பார்க்க வந்து சர்வேஷ்வரன் சார்கிட்ட மாட்டிக்கிட்டேன்… இனியும் என் அய்யாவை பத்திய விஷயங்களை மறைச்சா என் மனசாட்சியே என்னை கொன்னுடும் அய்யா அதான் எனக்கு தெரிஞ்ச உண்மையை சொல்லிட வந்தேன்” என்றான் விளக்கமாக
“சரி உங்கள் உயிருக்கு காவல் நிலையம் தகுந்த பாதுகாப்பு கொடுப்பாங்க… இனி யாருக்கும் பயப்படாம இப்போ உங்களுக்கு தெரிஞ்ச உண்மைகளை சொல்லுங்க” என்றார் நீதிபதி.
“ரொம்ப நன்றிங்க அய்யா…” நீதிபதிக்கு தன் நன்றியை தெரிவித்தவன், “அய்யா அன்னைக்கு கடையில் விக்னேஷ்வரன் சார் வந்து கத்திட்டு போனதும் செல்வபாண்டியன் அய்யா, இதோ நிக்குறாரு எம் எல் ஏ அம்பலவாணன் அய்யா வீட்டுக்கு போக சொல்லி காரை எடுக்க சொனாருங்க… நானும் கொண்டு போய் விட்டேனுங்க…
அங்க அவருக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது உள்ள ரொம்ப சத்தமாக இருந்தது, அதே சமயம் எனக்கு தண்ணி தாகமெடுக்க பின்பக்க வழியாய் தண்ணி கேட்க உள்ள போனேங்க, அப்போ தான் செல்வபாண்டியன் அய்யா ரொம்ப மனசு உடைஞ்சு என்னையே ஏமாத்திட்டங்களே உங்கள சும்மா விட மாட்டேன்னு கத்திக்கிட்டு அவர் சட்டையை பிடிக்க போகவும், அவரை பிடிச்சி கீழே தள்ளி விட்டு அவரை அடிக்க ஆரம்பிச்சாங்க அப்போ” என்று கூறியவன் அந்த நாளுக்கு சென்றான்.
“என்னடா…துள்ளுற நான் யாருன்னு தெரிஞ்சும் என்மேலேயே கை வைக்கிறியா உனக்கு எவ்வளவு திமிரு இருக்கனும்… இப்போ சொல்றேன் டா, உனக்கு இதுல சல்லி பைசாவை கூட கொடுக்க முடியாது… அப்படியும் நீ மோதி பாக்கனும்னு நினைச்சா அதுக்கு முன்னாடி எப்படி உன்னை மாட்டி விடனுமோ அப்படி மாட்டி விட்டு என்னால தப்பிக்க முடியும்… வேணும்னா ஒரு சாம்பில் தரேன் பாக்குறியா?… நீ ஆர்டர் பண்ண மெட்டிரியல்ல இருக்கற எல்லாத்துக்கும் நீ மட்டும் தான் பொறுப்பு… பல லட்சம் மதிப்பு உள்ள தங்கத்தை கடத்திட்டு வந்த உன்னை மாலை போட்டு மரியாதை பண்ண மாட்டாங்க பத்திரிக்கையில் திருடன்னு போட்டோ போடுவாங்க… உனக்கு அதுதான் வேனும்னா சொல்லு இப்போவே ஏற்பாடு பண்றேன்… எனக்கு ஒரு கண்ணு போகனும்னா எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகனும்னு நினைக்கிறவன் நான்… என்கிட்டியே உன் வேலையை காட்டுறியா?” மிரட்டலுடன் அம்பலவாணன் கேட்க அதிர்ச்சியில் நெஞ்சை அடைத்துக் கொண்ட செல்வபாண்டியனுக்கு பூமியே காலடியில் இருந்து நழுவியது போல இருந்தது…
காசு பணம் போனால் கூட சம்பாதித்து கொள்ளலாம் பேராசையால் இவனுடன் கூட்டு சேர்ந்து இப்போது மானமும் மரியாதையும் அல்லாவா போகப் போகிறது மனம் நொந்தவர்,
“டேய் நம்பிக்கை துரோகி” ஆத்திரத்துடன் அவனது சட்டையை பற்றிட அம்பலவாணனின் அடியாட்கள் செல்வபாண்டியனை பிடித்து தள்ளி விட்டு தாக்க முற்பட்டனர்.
“டேய்… டேய்.. இருங்கடா… என்ன இருந்தாலும் கோடி கோடியா நான் பணம் சம்பாதிக்க காரணமா இருந்தவன் டா அடிக்காதிங்கடா” எள்ளலாக கூறிய அம்பலவாணன் “என்ன பாண்டியா பாக்குற என்னடா இவன் இப்படி எல்லாம் பேசுறானேன்னு ஆச்சர்யமா இருக்கா? நான் நல்லவன் தான் ஆனா எனக்கு மட்டும் நல்லவன்” என்றான் விகாரமாக சிரித்தபடி.
“ம் விடுங்கடா என்ன பண்றான்னு பார்ப்போம்… இப்போ நீ பல்லு பிடிங்கின பாம்பு உன்னோட மொத்த கௌரவமும் இந்த ஒரு விஷயத்தை வைச்சே என்னால் வாங்க முடியும்… இப்போ நீ அமைதியா போகல நாளைக்கு பேப்பர்ல தலைப்பு செய்தியே இதுவா தான் இருக்கும் என்ன போட்டுடலாமா? என்றான் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு.
அதற்கு மேல் செல்வபாண்டியனால் ஒன்றும் செய்ய முடியாது என மனமும் உடலும் தளர்ந்து விட தலையில் விழுந்த இடியுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
“அய்யா தளர்ந்து வெளியே போகவும் நானும் வந்த வழியே வெளியே போயிட்டேன் அய்யா… அதுக்கு அப்புறம் தான் செல்வபாண்டியன் அய்யா இறந்துட்டதா தகவல் வந்துச்சி என்னை விசாரிக்க வந்த எஸ் ஐ கனகராஜ் சார்கிட்ட அங்க நடந்தது, நான் பார்த்தது எல்லாம் சொன்னேன் ஆனா அவரு என்னை மிரட்டி இந்த ஊரை விட்டே போக வைச்சிட்டாருங்க” என்றான் வேலன்.
அதையெல்லாம் கேட்ட அம்பலவாணன் “இல்ல இல்ல அவன் பொய் சொல்றான் அய்யா… எனக்கும் இறந்த செல்வபாண்டியனுக்கும் எந்த விதமான பழக்கமும் இல்லைங்க” உறுதியாக கூறினார்.
“சைலென்ஸ்… சைலென்ஸ்…” என்ற நிதிபதியின் “மிஸ்டர் அம்பலவாணன் உங்களை கேட்கும் போது நீங்க பேசலாம் இப்போ அமைதியா இருங்க” என்றார் கண்டிப்புடன்.
“ஓ… உங்களுக்கு இவரை யாருன்னு தெரியல… சரி அப்ப இவரையாவது யாருன்னு தெரியுதா பாருங்க…” என்ற வக்கீல் “எஸ் ஐ கனகராஜை விசாரிக்க அனுமதி கோருகிறேன்” நீதிபதியிடம் உரைத்தார்.
அவர் அனுமதி அளித்ததும் எஸ் ஐ கனகராஜ் முகத்திலும் கையிலும் சிறு காயங்களுடன் நீதிபதியின் முன் வந்து நின்று சல்யூட் வைக்க அம்பலவாணனின் முகம் பதற்றம் சூழ்ந்து கொண்டது. அதையும் வெளியே காட்டாது நின்றிருந்தது அந்த அரசியல் புலி. அதையும் நிதிபதி குறித்துக்கொண்டார்.
“நீங்க தான் எஸ் ஐ கனகராஜா…” அவர் கேள்வியை ஆரம்பிக்க “ஆம்” என்று தலையாட்டி தன்னை ஒத்துக் கொண்டான் கனகராஜ்.
“இதோ எதிரில் இருக்காரே அவரை உங்களுக்கு தெரியுமா?” அம்பலவாணனை பார்த்து கேட்க
“ம் தெரியும் சார்…”
“எப்படி பர்சனாலாவா, இல்ல அஃபிஷியலாவா” வக்கீல் வினவிட சற்று அவமானத்துடன் தலையை குனிந்து கொண்டவன் “அஃபிஷியலாவும் தெரியும் பர்சனாலாவும் தெரியும் சார்” சிறு குரலில் கூறியவன்,
“எனக்கு பிரமோஷன் வாங்கி தருவதாக சொல்லி இந்த கேஸில் விஷ்வநாதனையும், விக்னேஷ்வரனையும் வெளியே வர முடியாதபடி செய்ய சொன்னது எம் எல் ஏ அம்பலவாணன் தான்” கனகராஜ் உண்மையை சொல்ல
“அதுக்கு என்னென்ன பண்ணிங்க?” என்றார் வக்கீல்
“அது வந்து…” அவன் தயங்கிட
“சொல்லுங்க மிஸ்டர் கனகராஜ்” அவனை ஊக்கினார் வக்கீல்.
“டிரைவர் வேலனை ஊரைவிட்டு போக வைச்சேன்.. அதுமட்டும் இல்லாம விக்னேஷ்வரனை இந்த கேஸில் மாட்டி விட அவருக்கு எதிராக எல்லா ஆதராத்தையும் தயாரித்து வைச்சேன்… அம்பலவாணனுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை மறைச்சேன்” கனகராஜ் நீதிபதியை பார்த்தான்.
“அதுமட்டுமில்லை யுவர் ஆனர் செல்வபாண்டியன் வீட்டில் இருந்து ஒரு டாக்யூமென்ட் எடுத்து இருக்காங்க, அது இப்போ உங்க முன்னாடி சப்மிட் பண்ணி இருக்கேன்.” என்றதும் அதை பார்த்த நீதிபதி “இது துணிகளை இறக்குமதி செய்வதற்கான டாக்யூமென்ட் இதுக்கும் இந்த கேஸிற்கும் இருக்கும் சம்மந்தம்”. என்றார் சந்தேகமாக…
“சம்மந்தம் இருக்கு யுவர் ஹானர்” என்ற வக்கீல் விவரமாக கூற ஆரம்பித்தார்.
“இது செல்வபாண்டியன் வெளிநாட்டில் இருந்து துணிகளை இறக்குமதி செய்வதற்கான அத்தாட்சி காகிதம் … ஆனால் இதை அம்பலவாணன் அவ்வளவு முக்கியமா தேட வேண்டிய அவசியம் என்ன வந்தது… அதுவும் பல லட்சங்களையும், ப்ரோமோஷனையும் லஞ்சமாக கொடுத்து, என சந்தேகிக்க போய் தான் அவருடைய இத்தனை நாள் மறைமுக நடவடிக்கைகள் இன்று அம்பலத்திற்கு வந்திருக்கு… யுவர் ஹானர்”.
“இதுல நீங்களும் நானும் நினைப்பது போல் துணிகள் மட்டும் வரவில்லை… கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வரப்பட்டு இருக்கிறது…” வக்கீல் கூறியதும்,
“இல்ல இல்ல பொய் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” அம்பலவாணன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
“சைலென்ஸ்…” உரக்க கூறி அம்பலவாணனை அமைதிபடுத்திய நீதிபதி “உங்களுக்கு கொடுக்கும் நேரத்தில் உங்களை குற்றவாளி இல்லை என நீங்கள் நிரூபிக்கலாம் மிஸ்டர் அம்பலவாணன்…. இப்போ எதிர்தரப்பு சொல்வதை பொறுமையாக கேளுங்கள்” என்றவர் “கொஞ்சம் விவரமாக சொல்லுங்க” என்றார் விக்னேஷ்வரனுக்காக வாதாடும் வக்கீலிடம்.
“சொல்றேன் யுவர் ஹானர்…. அதுக்கு முன்னாடி அம்பலவாணனை பத்தி சொல்லிடுறேன். அவர் செல்வபாண்டியனை தெரியாது பழக்கமில்லைன்னு சொன்னது எல்லாம் சுத்த பொய்… அதற்கான ஆதாரம் இதோ என்கிட்ட இருக்கு” செல்வபாண்டியன் தற்கொலை செய்து கொண்ட அன்று அம்பலவாணன் வீட்டிற்கு சென்ற போது அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய பென்டிரைவை கொடுத்திட அதை பார்த்தார் நீதிபதி.
“எல்லாவற்றிற்கும் மேல் அவங்க ரெண்டு பேரும் சில பார்ட்டிகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்” என சிலதை கொடுத்த வக்கீல். “இது எல்லாம் அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தை நிருபிக்கும் யுவர் ஹானர்” என்றதும், ம் என்று தலை அசைத்து அதை பார்த்தார் நீதிபதி.
“செல்வபாண்டியனுக்கு சொந்தமா இரண்டு ஜவுளிக்கடைகள் இருக்கு இதுல வெளிநாட்டுல இருந்தும் சில ஆடைகளை இறக்குமதி செய்யும் டீலர் ஷிப் எடுத்த அவருக்கு, தங்கம் கடத்தும் ஆசையை காட்டி கோடிகணக்கில் லாபம் சம்பாதிக்க எண்ணமிட்டிருந்தார் திரு அம்பலவாணன். அதன்படியே தங்கத்தை கடத்திட்டு வந்துள்ளனர்.. கடைசி நேரத்தில் எண்ண நினைத்தாரோ செல்வபாண்டியனை ஏமாற்றி மொத்தத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தவர் சரக்கை ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் விழுந்து விட்டதாக பொய்யாக நாடகமாடவும் அதை நம்பாமல் நின்ற செல்வபாண்டியனை மிரட்டி அவர்தான் இது அனைத்திற்கும் காரணம் என்று வெட்ட வெளிச்சமாக்கிவிடுவேன் என்று மிரட்டிட, அதில் பயந்து போனவர் அன்று இரவே தன் உயிரை மாய்த்துக் கொண்டார். நம் அரசாங்கத்தை ஏமாற்றி தங்கத்தை கள்ளகடத்தல் செய்தது மட்டும் அல்லாமல், ஒரு உயிர் பலியாக காரணமாக இருந்த அம்பலவாணனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கையை வைக்கிறேன் யுவர் ஹானர்”. வக்கீல் தன் வாதத்தை முடித்தார்.
“இதற்க்கு தகுந்த ஆதாரம். இருக்கா?” நீதிபதி வக்கீலிடம் வினவிட
“இருக்கு மை லார்ட் பறிமுதல் பண்ண தங்கம் அனைத்தும் அம்பலவாணனனிற்கு சொந்தமான இடத்தில் இருந்து தான் எடுத்து இருக்காங்க, அதுவும் இல்லாம அவருடைய ஆட்களே அப்ரூவராக மாறி வாக்கு மூலம் கொடுத்து இருக்காங்க அவங்களையும் விசாரிக்க அனுமதி கோருகிறேன்” அந்த மனுவை நீதிபதியை நோக்கி நீட்டினார்.
“இந்த இரண்டே நாள்ல எப்படிய்யா இந்த வக்கீலு இப்படி பாய்ண்ட் பாய்ண்ட் டா அடிச்சி விடுறாரு… அதுவும் இப்படி சாட்சி ஆதாரம்னு எல்லாம் புட்டு புட்டு வைக்கிறாரு” சர்வேஷின் அருகில் இருந்த முத்து வக்கீலின் வாத திறமையை சிலாகித்து பாராட்டிட,
“இதோ உட்காந்து இருக்காங்களே மேடம், அவங்களோட பாய்ண்டை தான் அங்க நம்ம வக்கீலு அடிச்சி விட்டுக்கிட்டு இருக்காரு… இதுக்கே வாயை பிளந்தா எப்படி… இன்னும் மெயின் பிச்சரையே நீ பாக்கலையே, வெய்ட் பண்ணு ராசா இப்ப வரும்” சர்வேஷின் குரல் அத்தனை குதூகலமாய் இருந்தது.
“மனோஜ்… மனோஜ்… மனோஜ்… ” தவாளி மூன்று முறை தன்னுடைய மகன் பெயரை அழைக்கவும் அதிர்ந்து அவன் வரும் திசையை பார்த்தார் அம்பலவாணன்.
முகத்தில் பயத்தின் சாயலுடன் சற்று நடை பிந்தி பிந்தி நடந்து வந்தவனை பார்க்க பார்க்க அவருக்கு அரவிந்தனின் மேல் ஆத்திரமாய் வந்தது. மற்றபடி அவன் அடி வாங்கி இருக்கிறான் என அடித்து சத்தியம் செய்து கூறினால் கூட யாராலும் நம்பவே முடியாது அப்படி இருந்தான் மனோஜ்.
“நீங்க கொடுத்த வாக்குமூலம் எல்லாம் உண்மையா?” என்றதும் நேராக அப்பாவை பார்த்தவன் அப்படியே சர்வேஷ்வரனையும் தனக்கு பக்கவாட்டில் அமர்ந்து இருந்த அரவிந்தனையும் கண்டவன் அவர்கள் கண்கள் காட்டிய கனலில் தனக்கு தெரிந்த அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை ஒன்று விடாமல் ஒப்புவித்திட அனைத்தையும் குறித்துக் கொண்டார் நீதிபதி.
“அய்யா அவனை அரட்டி மிரட்டி என்னை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்ல வைச்சி இருக்காங்க அய்யா…. என் மகனும் அவங்க மிரட்டலுக்கும் அடிக்கும் பயந்து அவங்க சொல்லி கொடுத்தை சொல்றான் அய்யா… இதை நம்பாதீங்க அய்யா.. என் மகனே என்னடா ஆச்சி உனக்கு இந்த அப்பன் இருக்கேன் டா உன்னை நான் பாத்துக்குறேன்” அவர் கத்திக் கொண்டு மார்பில் அடித்து அழுதிட
மனோஜிற்கு ஒரு நொடி அனைத்தும் பொய்யென கூறிவிடாலாமா என்று வாய் பரபரத்தது… மெல்ல விழிகளை உருட்டி அரவிந்தனை பார்க்க அவன் ஷூ அணிந்து காலை தரையில் வைத்து அழுத்தி செய்கை செய்ய பயத்தில் அப்படியே வாயை பொத்திக் கொண்டு இருந்து விட்டான்.
“கொஞ்சம் அமைதியா இருங்க அம்பலவாணன் உங்க தரப்பில் இப்போ பேசலாம்” என்றதும் அம்பலவாணனின் வக்கீல் எழுந்து பேச ஆரம்பித்தார்.
“மை லார்ட் இவங்க முழுக்க முழுக்க என் கட்சிக்காரரை குற்றவாளியாக காட்ட முயற்சி பண்ணதான் இது எல்லாம் பண்றாங்க… நல்ல வேடிக்கையா இருக்கு யுவர் ஹானர் முதல்ல செல்வபாண்டியன் தற்கொலைன்னு கேஸ் ஆரம்பித்து இப்போ கள்ள கடத்தல்ல வந்து நிக்குது… அப்படியே அந்த தங்கம் கடத்தியது செல்வபாண்டியன் என்பது உண்மை என்றாலும் அதில் அம்பலவாணனை சிக்க வைக்க இவங்க போட்ட நாடகம் தான் இது எல்லாம்… அதுவும் சொந்த மகனையே அவருக்கு எதிராக திருப்பி விட்டு இருக்காங்க… மை லார்ட்” என்றார் வாய் ஜாலமாக…
நீதிபதி மனோஜிடம் “உங்களை யாரவது மிரட்டி இல்லை அடித்து பொய் சொல்ல சொன்னாங்களா?”
“இல்லை அய்யா”
“அப்புறம் உங்க அப்பாவுக்கு எதிரா இப்படி ஒரு வாக்குமூலம் கொடுக்க எப்படி முன் வந்திங்க?”
“அய்யா அது வந்து… நான்.. நான்” என திணறியவன், சர்வேஷ்வரனின் முறைப்பில் “நானும் அந்த கடத்தல்ல சம்பந்தப்பட்டு இருக்கேன் அய்யா.. என் மூலமாக தான் கொடுக்கல் வாங்கல் எல்லாம் இருக்கும்… ஒத்துக்கிட்டா குறைந்த தண்டனை என்று சொல்லவும் நாங்க செய்த தப்பை சொல்லிட்டேங்க” என்றான் விளக்கமாக.
“அடப்பாவிகளா ஒன்னும் தெரியாத முட்டாள் மாதிரி இருந்தவன் இப்படி ஒரு அய்யோகியனா… !!!” முத்து முனுமுனுக்க அதே சமயம் பைரவியினை பார்த்தான் சர்வேஷ்வரன்.
கண்களால் அவளுக்கு நன்றியை தெரிவிக்க கண்களை மூடி திறந்து அவனை அமைதிபடுத்தியவள் ரேகாவின் கரங்களை தட்டி கொடுக்க ரேகா உணர்ச்சிவத்தோடு அவள் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .
விக்னேஷ்வரனுக்கும், விஷ்வநாதனுக்கும் இவை அனைத்தும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தர மேலும் நடப்பவற்றை பார்க்கலானர்.
“மை லார்ட் செல்வபாண்டியன் தற்கொலை வழக்கில் விகேஷ்வரனுக்கு சம்பந்தமில்லை என்பதற்கு இதுவரை என்னிடம் இருந்த எல்லா ஆதாரத்தையும் சமர்ப்பித்து விட்டேன்… எந்த தவறுமே செய்யாமல் 3 மாதம் சிறை வாசமும் மன உளைச்சலையும் அனுபவித்து உள்ளனர். இதற்கு மேலும் காலம் தமாதிக்காமல் என் கட்சிக்காரர்களை நிரபாரதி என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்றார் விக்னேஷ்வரனின் வக்கீல்.
“இது வெறும் தற்கொலை வழக்கு என்று தான் விசாரணை ஆரம்பித்தது, ஆனால் இது திசைமாறி வேறு விதமாக பயணித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது… ஜவுளி கடை உரிமையாளர் செல்வாபாண்டின் தற்கொலைக்கு அம்பலவாணன் தான் காரணம் என்று தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் இந்த வழக்கில் இருந்து விக்னேஷ்வரனையும் விஸ்வநாதனையும் விடுதலை செய்கிறேன். மேலும் அம்பவாணன் சட்டவிரோதமாக தங்கம் கடத்தியதற்கும் மற்றும் செல்வபாண்டியனை தற்கொலைக்கு தூண்டியதற்கும் அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றத்திற்கும் அவருடைய சட்டமன்ற பதவியை பறிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்கிறேன் மேலும் ஆறு வருட கடுங்காவல் தண்டனை விதித்து, அம்பலவாணன் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணைத்திற்கு பரிந்துரைக்கிறேன்… இந்த குற்றங்களுக்கு எல்லாம் துணை புரிந்த மனோஜ் தற்போது அப்ரூவராக மாறி எல்லா உண்மைகளை தெரிவித்தமையால் 4 வருடகால சிறை தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கிறேன்…. இந்த வாழ்க்கை திறம்பட நடத்திய எதிர் தரப்பு வக்கீலையும், தகுந்த ஆதாரங்களை தக்க சமயத்தில் வெளிக்கொணர்ந்த காவல்துறைக்கும் எனது பாராட்டுக்களையும் வழங்குகிறேன். என தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.