அந்த நீதிமன்ற வளாகமே அதிக பரபரப்புடன் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்த அன்று பரபரப்பு ஆனதை விட, அரசியல் பிரமுகர் அதுவும் ஆளும் கட்சி எம் எல் ஏ இந்த கேசில் கைதாகி இருப்பதால் இன்று இரண்டு பங்கு அதிக பரபரப்புடன் காணப்பட்டது.
ஆங்காங்கே கட்சி ஆட்களின் கோஷமும், இறந்த செல்வபாண்டியனின் உறவினர்கள், கூட்டமும், பத்திரிக்கைத் துறை, தொலைக்காட்சி ஊடக துறை நபர்களும் குவிந்து, அந்த இடமே ஜெ ஜெ என்று ஜனத் திரளில் மூழ்கியது போல் இருந்தது.
அதனையெல்லாம் பார்த்த ரேகா எல்லா தெய்வங்களையும் மனதில் வேண்டியபடி பைரவியின் கரங்களை பற்றிக்கொண்டு இருந்தாள்.
ரேகாவின் பயம் கலந்த முகத்தை பார்த்த பைரவி, அவளின் கைகளில் அழுத்தம் தந்து “பயப்படாதிங்க ரேகா தைரியமா இருங்க… கேஸ் நம்ம பக்கம் தான் நிக்கும்” அவளுக்கு ஆறுதலை கூறி தேற்றினாள்…
சாரதாவோ கோவிலே கதியென கிடந்தார். பச்சை தண்ணீர் கூட பல்லில் படாது எல்லாம் நல்லபடியாய் நடக்க வேண்டுமே என பிராத்தனை செய்தபடி இருந்தார்.
சர்வேஷ்வரன் முத்துவுடன் நடராஜன் தாத்தா பக்கத்தில் அமர்ந்திருக்க கூடவே விஜயேந்திரனும் அமர்ந்து இருந்தார்.
சிறைச்சாலையில் இருந்த விக்னேஷ்வரனையும் விஷ்வநாதனையும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காவலர்கள் அவர்களை நீதிபதியின் முன் ஆஜர் செய்தனர்..
அதற்குள் எம் எல் ஏ அம்பலவாணனை அரவிந்த் அழைத்து வர அங்கே சிறு சலசலப்புடன் கட்சிக்காரர்களின் கோஷமும் எழுந்தது. இன்னும் மனோஜை அழைத்து வரவில்லை… மகனை தேடி அலைந்த கண்கள் அதை அருகில் இருந்த அரவிந்திடம் “ஹேய் எங்கடா எங்க எம் பையனை காணும்” அவனிடம் கோபத்துடன் வினவிட
“அதெல்லாம் வரவேண்டிய நேரத்துல உன் பையனை கொண்டு வந்து நிறுத்துவோம்… அதுவரை நீ பொத்திக்கிட்டு நட” எவரும் அறியாது அமபலவாணனின் காதுகளில் சத்தமின்றி உரைத்தவன் முகம் வெளியே சாதரணமாக வைத்துக் கொண்டிருந்தான்.
இதைக் கேட்ட அவருக்கு தான் வேப்ப எண்ணெய்யை குடித்தது போல் முகம் மாறியது அந்த சமயம் பத்திரிக்கையாளர்கள் கூட்டமும் தொலைக்காட்சி ஊடகங்களும் அவர்களை சுற்றிக் கொண்டு தொடர் கேள்விகளை எழுப்பியதும் வேறு வழியின்றி அதை சமாளிக்க ஆரம்பித்தார் அம்பலவாணன்.
“சார்…சார்… உங்களுக்கும் இந்த தற்கொலை கேஸிற்கும் என்ன சம்மந்தம்… நீங்க தான் இதில் முக்கிய குற்றவாளின்னு சொல்லிக்கிறாங்க உண்மையா சார்?” பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்க
“என் வளர்ச்சியை பிடிக்காமல் சில துஷ்ட சக்திகள் என் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கில் என்னை சிக்க வைச்சி இருக்காங்க… இதுக்கு எல்லாம் பயந்து ஒதுங்குற அளவு நான் கோழை இல்லை இதில் ஜெயித்து நிரபராதியா விடுதலை ஆகி வருவேன்” வீராவேசமாக பேசினார் அம்பலவாணன்.
“நிச்சயமா… நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யாதவன்… என் கை கரைபடியாத கை… என் உண்மை என்னை நிச்சயமாக வெளியே கொண்டு வரும்” உணர்ச்சி பொங்க கூக்குரலிட்டார் அவர்.
“அப்போ உங்களுக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருக்கறதா சொல்றாங்களே அது எல்லாம் பொய்யா?” என்றார் ஒரு நிருபர் வேண்டுமென்றே அம்பலவாணனின் வாயை பிடுங்க
“அது எல்லாம் பொய்யா ஜோடனை செய்து என்னை சாய்க்க போட்ட திட்டம்… நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்… உடல் மண்ணிற்கு உயிர் மக்களுக்கு” மார்தட்டி பேசிட “போதும் போதும் இப்போ இவரை கோர்ட்டில் ஆஜர் செய்யனும் மத்தத்தை அப்புறம் கேளுங்க” அவர்களையெல்லாம் பார்த்து கூறியவன் “நடங்க மிஸ்டர் அம்பலவாணன். ரொம்ப மார் தட்டிக்காதிங்க… மேல் போய் சேர்ந்துட போறிங்க…” அரவிந்த் நக்கலாக கூறிட அவனை தீயாக முறைத்த அம்பலவாணன் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.
முக்கிய குற்றவாளிகள், விசாரணை கைதிகள், சாட்சியாளர்கள் என அனைவரும் நீதிபதி முன் ஆஜராகி விட தலைமை நிதிபதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்து இருந்தார்.
வழக்கை ஆரம்பியுங்கள் என்றதும், விக்னேஸ்வரனின் தரப்பு வழக்கில் “கனம் நீதிபதி அவர்களே இந்த வழக்கில் என் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்பதை நிறுபிக்க முக்கிய குற்றவாளியாக கைதாகி இருக்கும் எம் எல் ஏ அம்பலவாணனை விசாரிக்க அனுமதி கோறுகிறேன்” என்றதும்,
“பர்மிஷன் கிராண்டட்” நீதிபதி அனுமதி அளித்ததும்,
“அம்பலவாணன் அம்பலவாணன் அம்பலவாணன்” தவாளி மூன்று முறை அழைத்திட, நேராக நீதிபதியின் முன் வந்து நின்ற அம்பலவாணன், “ஐய்யா வணக்கம்” அரசியல்வாதிக்கே உரிய பாணியில் வணக்கம் வைக்க அதை தலை அசைத்து ஏற்றார்.
“மிஸ்டர் அம்பலவாணன் உங்கள் எதிரில் குற்றவாளி கூண்டில் நிற்கும் விஸ்வநாதனையும், விக்னேஷையும் உங்களுக்கு யாருன்னு தெரியுமா?” என்றார் வக்கீல்.
எந்த வித பயமோ பதட்டமோ இன்றி “ஏன் தெரியாம நல்லாவே தெரியுமே, நம்ம ஆளுங்க தான் ஊரில் பெரிய புள்ளி வேற” என்றார் அம்பலவாணன் பெரியதாக சிரித்தபடி
“அப்போ இறந்து போன செல்வபாண்டியனை கூட உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?”. விஸ்வநாதனின் வக்கில் கேள்வியை தொடுக்கவும்.
“நான் தெரியாதுன்னு சொல்லலையே வக்கில் சார்… அவரும் ஒரு பிரபலமான ஜவுளிக்கடை வியாபாரி… ஊருல முக்கியமான ஆளு, பெரிசா பழக்கம் இல்லை… இப்போ சமீபத்தில் தான் அவரு தற்கொலை செய்துக்கொண்டதா பேப்பரை பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்… ஆனா அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்னை ஏன் கைது செய்து இருக்கிங்கன்னு தான் எனக்கு புரியலை…” ஒன்றும் தெரியாத மனிதரைப்போலவே பேசினார் அம்பலவாணன்.
“டேய் யப்பா என நடிப்பு டா சாமி… அந்த ஆள் உடம்புல பத்து சிவாஜி பத்து பத்து கமல்ஹாசன் வாழ்ந்துட்டு இருக்காங்க டா” முத்து கிண்டலாக சர்வேஷிடம் கூறிட,
“மச்சா டென்ஷன் ஆகாத” நண்பனை அமைதி படுத்தியவன் வழக்கை கவனிக்க ஆரம்பித்தான்.
“அப்போ உங்களை போலீஸ் தப்பா அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்களா?” நீதிபதி கேள்வி கேட்க
நேராக நீதிபதியின் பக்கம் திரும்பிய அம்பலவாணன் ” அய்யா என் மேல் வேணும்னே பழியை சுமத்தி இதுல இழுத்து விட்டு இருக்காங்க… நான் ஒரு பாவமும் அறியாதவன்… காசு கொடுத்தது அவரு… வாங்கியது செல்வபாண்டியன் … இடையில் நான் எங்கிருந்து வந்தேன்.. இது வீண் காழ்ப்புணர்ச்சியால் என்மேல சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு” நல்லவன் போல் நயமாக பேசிட
அரவிந்த் அம்பலவாணனை முறைக்க சர்வேஷ்வரனுக்கோ கோபம் உச்சம் தொட்டது.
“அட என்னமா நல்லவன் வேஷம் போடுறான்” முத்து வாய்விட்டு கூறிவிட “இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் களைந்துவிடும் டா” சர்வேஷ் உறுதியான குரலில் கூறனான்.
ரேகாவின் கண்களோ கண்ணீரை சுரக்க “காம் டவுன் ரேகா பயப்படாதிங்க இன்னும் விசாரணை முடியல” தைரியம் சொல்ல நடராஜன் தாத்தாவும் விஜயேந்திரனும் வழக்கை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் அவன் நடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
“இதில் நீங்க எப்படி சம்பந்தப்பட்டு இருக்கிங்கன்னு சொல்லத்தானே நாங்க வந்து இருக்கோம்.” அவரிடம் பேசிய வக்கில் திரும்பி நீதிபதியிடம் “அய்யா இறந்த செல்வபாண்டியனின் கார் டிரைவர் வேலன் தான் முக்கிய சாட்சி ஆனால் இதுவரை அவரை விசாரிக்கவில்லை இப்போ விசாரிக்க அனுமதி கோருகிறேன்” என்றார்.
“அப்ஜக்ஷன் மைலாட்… இதுவரை விசாரிக்காமல் இப்போ ஏன் புதுசா விசாரிக்கனும்னு சொல்றாங்க…? ஏன் இப்போதான் எப்படி பொய் சொல்லனுமுன்னு சொல்லி கொடுத்து கூட்டிட்டு வந்து இருக்காங்களா?” அம்பலவாணனின் வக்கில் கிண்டலாக கேட்க,
“விசாரிக்க வேண்டிய நேரத்தில் அவரை மிரட்டி ஊரை விட்டு ஓட வைச்சிட்ட பிறகு எப்படி விசாரிக்க முடியும்… இப்போதான் அவரை தேடி கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்து இருக்காங்க… இனிதான் இந்த கேஸில் சூடு பிடிக்க போகிறது” கூறிய விஷ்வநாதனின் வக்கில் நீதிபதியை பார்க்க
“டிரைவர் வேலனை விசாரிக்க இந்த கோர்ட் அனுமதி அளிக்கிறது” என்றதும் தவாளி மூன்று முறை அழைக்க நீதிபதியை வணங்கியபடி மிகவும் பவ்யமாக வந்து நின்றான் வேலன்.