“அம்மா பிளீஸ் மா…” பைரவி தன் பக்க நியாயத்தை கூற வர கன்னம் வீங்கும் அளவிற்கு பளார் என அறைந்திருந்தார் துளசி.
இதுவரையிலும் கை நீட்டி அடிக்காத அன்னை தன்னை அடித்த விழி விரித்து அதிர்ச்சியில் நின்றவளுக்கு தன்னிச்சையாக கை கன்னத்தை தாக்கியது.
அறைந்த நிலையில் நிலைகுத்திய பார்வையுடன் தாயை பார்த்தபடி நின்றிருந்தாள்.
“பேசாத பையூ… உன் பேச்சில் என்னை மயக்கிடலாம்னு நினைக்காத நீ சொல்ற எதையும் நான் கேக்குற நிலையில் இல்லை… என் பொண்ணு தான் எனக்கு முக்கியம் வேற யாரை பத்தியும் எனக்கு கவலை இல்லை… கவலைப்பட அவசியமும் இல்லை நாளைக்கு கிளம்புறோம் அவ்வளவு தான்… இதுக்கு மேலயும் என்னை கோவப்படுத்தாதே என்றார் முறைப்பாக
மேலும் மேலும் அவளை திட்ட அதைத் தாங்கிக் கொள்ள முடியாத விஜயேந்திரன் “துளசி… என பொறுமை இழந்து சத்தமிட்டபடி , சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு துளசி,… அவ என்ன தப்பு பண்ணா, ஏன் அடிக்கிற?” என்றவரை வேண்டும் மட்டும் முறைத்தவர் உங்களை எதுவும் பண்ண முடியலங்க அதுதான் அவளை அடிக்கிறேன்…. என்றதும் துளா என்றார் கண்டிப்புடன்,
“பச் என்னை பேச வைக்காதிங்க… என் மனசும் வயிறும் எரியுது… என்ன தப்பு பண்ணான்னு கேட்டிங்கல்ல தன்சுயத்தை மறந்து நிக்குறா இதுவே பெரிய தப்பு இல்லையா?… அவளை வாய்க்கு வந்த படி பேசி இருக்காங்க ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லனும்னு தோணலையா அவளுக்கும் உங்களுக்கும் இது தப்புன்னு தெரியலையா?… அவளுக்கு நீங்க மட்டும் இருந்தா போதுமா அப்போ நான் யாரு அவளுக்கு?… போதுங்க உங்ககிட்ட பேச நான் தயாரா இல்லை, அவ நம்மோட கிளம்புறா அவ்வளவு தான் இதுல எந்த மாற்றமும் இல்லை… அப்படி இல்ல நான் செய்யறதை தான் செய்வேன்னு அடம் பிடிச்சா அப்புறம் நான் வேறுமாதிரி முடிவை எடுக்க வேண்டி இருக்கும்” என்றார் விடாப்பிடியாக
“அவ வேணும்னு உன்கிட்ட மறைக்கல துளா… நீ புரியாம பேசாத… நீ கஷ்டப்பட போறன்னுதான் அவ உன்கிட்ட உண்மையை சொல்லல” என்றார் அவருக்கு புரிய வைக்கும் நோக்கில்
“எனக்கு எல்லாம் புரியுது… எனக்கு எதையும் விளக்க தேவையில்லை…. பைரவி இங்க இருக்குறது எனக்கு சரியாப்படல… அவ வாழ்க்கை எனக்கு முக்கியம்… நம்மக்கூட ஊருக்கு வரட்டும் என்னால் அவளை இங்க விட முடியாது… அவ வாழ வேண்டிய பொண்ணு நாளு பேரு அவளை தப்பா பேசுறது எனக்கு புடிக்கல இந்த ஊர் என் பொண்ணை தப்பா பாக்கறதும் புடிக்கல” என்றார் அழுத்தம் நிறைந்த குரலில்.
தாயின் மனநிலை புரிய, அளவுக்கு அதிகமான அழுத்தத்தில் இருந்தவள் “சரிம்மா…. நீ சொல்ற மாதிரியே உன்கூடவே வரேன்… ஆனா நாளைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் கோர்ட்டுக்கு போயிட்டு வந்துடுறேன் மா” என்றவளுக்கு குரல் இறங்கி ஒலித்தது.
“முடியாது பைரவி… நீ அங்க போறதில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை உன்னை தப்பா பேசினவங்கள நீ பார்க்கிறதோ இல்ல அவங்க கூட நீ பேசுறதோ எனக்கு பிடிக்கல” என்றார் கண்டிப்புடன்.
“அம்மா ப்ளீஸ் மா நீ சொல்றா மாதிரியே நடந்துக்குறேன் மா நான் இப்போ போறது கூட ரேகாவுக்காக மட்டும் தான்… அவங்களுக்கு நான் வரேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன் மா… சத்தியமா அங்க வேற யார் கிட்டேயும் பேச மாட்டேன் மா” அவள் கெஞ்சலுடன் கேட்க
பார்த்துக்கொண்டு இருந்த அரவிந்தனுக்கு என்னவோ போல் ஆனது.
வருவது வரட்டும் என நினைத்தவன் “துளாம்மா நான் இருக்கேன் துளாம்மா இத்தனை நாள் பையூ இதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கண்டு புடிச்சி இருக்கா… அவ படிச்ச படிப்புக்கான வேலையை தான் செய்து இருக்காளே தவிர தப்பா ஒன்னும் செய்யல நான் அவ கூடவே இருந்து விஜி அப்பா கூட அனுப்பி வைக்கிறேன் துளாம்மா… என்னை நம்பி அனுப்பி வைய்யுங்க” என்றிட ,
“எல்லாரும் இருந்தும் அவளை அவ விருப்பத்துக்கு விட்டுட்டிங்க இப்போ எந்த நம்பிக்கையில் அவளை அனுப்புறது அர்வி என்றார் துளசி பிடிகொடுக்காமல்
“துளாம்மா ப்ளீஸ்” அர்வியின் கெஞ்சலுக்கு செவிசாய்த்த துளசி “எனக்கு அனுப்ப விருப்பம் இல்ல அர்வி… நீ இவ்வளவு தூரம் கேட்டதுக்கும், ரேகாவுக்காவும் தான் அனுப்புறேன்…அதுவும் அவ இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காளேன்னு தான்… அந்த கேஸ் முடிஞ்ச அடுத்த நிமிஷம் அங்கிருந்து இவ கிளம்பி இருக்கனும்… நாளைக்கு சாயங்காலமே ஊருக்கு கிளம்பறோம்…” எனக் கூறியவர் பைரவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.
புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது வீடு. ஆளுக்கு ஒருபக்கம் அமர்ந்து இருந்தனர். கமலாவிற்கு கூட என்ன கூறி துளசியை சமாளிப்பது என புரியவில்லை… சுப்ரஜா பாட்டி, நடராஜன் தாத்தா ஸ்தம்பித்து போய் இருந்தனர்… விஜயேந்திரன் மகளின் தலையை கோதி விழி நீரை துடைத்தவர் தோளில் சாய்த்துக் கொண்டார். தாரணிக்கும் அவளை பார்க்கவே கஷ்டமாக இருந்தது அரவிந்த் பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றுவிட்டான். இதையெல்லாம் நினைத்தவருக்கு எப்படி மனைவியிடம் பேசுவது என யோசித்தபடி காரை செலுத்தினார்
…..
மூன்றரை மாத சிறைவாசத்திற்கு பின் சுதந்திரமான காற்றை சுவாசித்தனர் விஸ்வநாதனும் விக்னேஷ்வரனும். நீதிமன்ற நடைமுறைகளை முடித்துக்கொண்டு நீதமன்றத்தை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.
சர்வேஷுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த ரேகா”என்னங்க” என விக்னேஷை நோக்கி வேகமாக செல்ல , இரண்டே எட்டில் அவளை அடைந்த விக்னேஷ் “ரேகாமா பார்த்துமா.. வயித்துல பிள்ளையை வைச்சிக்கிட்டு இவ்வளவு வேகமா வர்ற” அக்கறையாக கடிந்து அவளை தன் அருகே நிற்க வைத்துக் கொண்டவனுக்கு கண்கள் தாயை தேடியது.
வெளியே விரைப்பாகவும் உள்ளே மிகவும் ஒடுங்கிப்போய் இருந்தார் விஸ்வநாதன். கண்களில் பழைய திமிர் இல்லை… எள்ளலாக பார்க்கும் பார்வை மாறிப் போய் ஏதோ ஒன்றை அந்த கண்கள் தேடிக்கொண்டு இருந்தது. அவரின் மனமும் மனைவியை தேடியதோ கல்லுக்குள்ளும் ஈரம் வந்ததோ…
கணவனிடம் நலம் விசாரித்த ரேகா “எப்படி இருக்கிங்க மாமா” என்றாள் விஸ்வநாதனிடம் ம் என தலையை அசைத்து தன் நலத்தை உரைத்தவர் மனம் வெறுமையுடன் இருந்தது. பெற்ற மகன்கள் இருந்தாலும் தொட்டு தாலி கட்டிய மனைவியை தேடியது அவரது மனம்
ஒற்றை கையில் வேட்டியின் நுனியை தூக்கி பிடித்து வேகமாக அவர்களை நோக்கி வந்த சர்வேஷின் முகத்தில் அத்தனை நிம்மதி.
அப்பாவையும் அண்ணனையும் பார்த்தவன் கண்கள் சற்று கலங்கி சிவந்தது போல தான் இருந்தது. அண்ணனை தோளோடு அணைத்து விடுவித்தவன் “எப்படி டா இருக்க?” என்றான் கரகரத்த குரலில் அவன் மனதோடு பட்ட வலிகள் அத்தனை…. பெண்கள் கண்ணீரில் தங்களது துன்பத்தை கரைத்துவிட, வளர்ந்த ஆண் மகன் மனதினால் அழுதான்.
“எனக்கென்னடா நான் நல்லா இருக்கேன்… நீ ஏன்டா இப்படி இருக்க? கண்ணெல்லாம் கலங்கி போய் நீ எப்பவுமே கெத்து டா அப்படியே இரு, அது தான் உனக்கு அழகு…” தம்பியை அணைத்து விடுவித்த விக்னேஷ் “சரி அம்மா அம்மா எங்கடா?” என்றான் தாயை கண்களால் தேடியவாறு.
“கோவில்ல இருக்காங்கடா… பூஜை அது இதுன்னு காலையில் இருந்து அங்க தான் இருக்காங்க” என்றவன் தந்தையை பார்த்தான். அவரின் தேடலுக்கு விடை கிடைத்தது போலும், முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு எங்கோ பார்வையை பதித்து விரைப்பாய் நிற்பது போல் காட்டிக் கொண்டார்.
அவர்களுக்காக வாதாடிய வக்கீல் அவர்களை நோக்கி வர, “ரொம்ப தேங்க்ஸ் சார் உங்களால் தான் இப்போ நாங்க வெளியே இருக்கோம் அந்த அய்யோக்கிய ரஸ்க்கல் பண்ண அத்தனை தில்லுமுல்லையும் கண்டுபிடிச்சி எங்களை வெளியே கொண்டு வந்துட்டிங்க ரொம்ப நன்றிங்க சார்…” விக்னேஷ்வரன் வக்கீலுக்கு தன் நன்றியை தெரிவித்தான்.
“என்னது எங்களுக்கு ஹெல்ப் பண்ணது பைரவியா?” ஆச்சர்யத்துடன் வினவினான் விக்னேஷ். விஷ்வநாதனுக்கு இந்த செய்தி அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்திட, இளைய மகனின் முகத்தை கூர்ந்து நோக்கினார். பைரவியின் பெயரை கேட்ட மாத்திரத்தில் சர்வேஷின் முகம் மலர்ந்து பிரகாசித்தது. நொடிப்பொழுதில் அவனிடம் நிகழ்ந்த மாற்றத்தை மனதில் குறித்துக் கொண்டார்.
“ஆமா விக்னேஷ் சார், அந்த பொண்ணு நிஜமாவே ரொம்ப புத்திசாலியான பொண்ணு, கேஸில் ஒரு லுப் கூட கிடைக்காம ரொம்ப தவிச்சப்போ உங்களுக்கு எதிரா இருந்தா அத்தனை ஆதரங்களையும் பொய்யின்னு கண்டுபிடிச்சி உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க உதவினாங்க . ஷீ இஸ் ரியலி கிரேட், அன்ட் பிரேவ் கேர்ள்… எதிர்காலத்தில் நல்லா ஆஃபிசரா வருவாங்க சார்…” வக்கீல் அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.
விஷ்வநாதனின் மனநிலையை இன்னதென்று வரையறுக்க முடியாத நிலையில் இருந்தது. விக்னேஷிற்கோ குற்றவுணர்வாய் இருந்தது. “நான் ரொம்ப பெரிய தப்பை பண்ணிட்டேன் சர்வேஷ்…. என் கண்ணு முன்னாடி இருந்தவர்களை சொந்தம் பந்தம்னு நம்பினேன்… இவர்களை சாதாரண மனுஷங்களா கூட மதிக்காம உதறி தள்ளி விட்டிருக்கேன்… அறுவறுப்பா பேசி இருக்கேன்… இரக்கமே இல்லாம திட்டி இருக்கேன்… சே… என்ன மனுஷனோ நான்… ஆனா அதையெல்லாம் மனசுல வைச்சிக்காம அவங்க பண்ண உதவி என்னை செருப்பால் அடிச்சா மாதிரி இருக்குடா” கண்கள் கலங்கும் அண்ணனை நினைத்து பெருமை கொண்டவன் தந்தையை பார்த்தான்.
எந்த உணர்வையும் பிரதிபலிக்காது எங்கோ வெளிவந்திருந்தது அவரது பார்வை… நினைவுகள் பினோக்கி பயணித்து கொண்டிருந்தது அவருக்கு, அவனின் தோளில் கையிட்டு ” இப்பயாவது மனிதர்களை மனிதர்களா பாருங்க கௌரவம் கௌரவம்னு கௌரவத்தை தூக்கி தோளில் போட்டு அலையாதிங்க,… சொந்த பந்தம் எல்லாம் நீங்க ரெண்டு பேரும் உள்ள இருக்கிங்கன்னு சொன்ன உடனே தூர போயிட்டாங்க… யாரும் ஒரு உதவிக்கு கூட வரல யாரை வேணாம்னு ஓதுக்கினிங்களோ யாரை சொந்தமில்லன்னு அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தினிங்களோ அவங்கதான் என் கூட இருந்தாங்க… நீ திருந்திட்டா… ஆனா இன்னும் மாற வேண்டியவங்க நிறைய பேரு இருக்காங்க டா விக்கி” என்றான் தந்தைக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் ரேகாவும் அவளுக்கு பைரவி உறுதுணையாய் இருந்ததை கூறினாள்.
“ஆமா எங்க அவங்க நானும் கோர்ட் முடிஞ்சதுலிருந்து அவங்களை பாக்கனும்னு நினைச்சேன் ஆளை காணுமே!” வக்கீல் சுற்றும் முற்றும் தேட அப்போதுதான் சர்வேஷூம் அவள் இல்லை என்பதை உணர்ந்தான்.
தூரத்தில் மனோஜையும் அம்பலவாணனையும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்த அரவிந்த் கண்களில் பட்டான்.
பல்லை பிடிங்கிய பாம்பை போல் உர்ரென்று முறைத்துக் கொண்டு அவர்களை கடந்து சென்றனர், அப்பனும் மகனும், “என்னடா அங்க பார்வை கிளம்புங்க இன்னும் எவன் குடியை கெடுக்கலாம்னு கண்ணு அலையுதோ?” திட்டிய வண்ணம் வண்டியில் ஏற்றிய அரவிந்தை நிறுத்திய சர்வேஷ்,
“அரவிந்த் பைரவி எங்க?’ என்றதும், முடிந்த மட்டும் அவனை முறைத்தவன் “தலப்பாடா அடிச்சிக்கிட்டேன் உன் குடும்ப சங்காத்தமே வேண்டாம்னு… கேட்டாளா…. கேக்காம வந்து இப்போ துளா அம்மாகிட்ட மாட்டிக்கிட்டா… தயவு செய்து அவளை தொந்தரவு பண்ணாத அவளை நிம்மதியா விடு” என்றான் உக்கிரமாக அவன் கண்கள் கோவத்தில் சிவந்தது.
“அரவிந்த் என்ன சொல்ற…? துளசி அத்தைக்கு என்ன தெரிஞ்சது? பைரவி… பைரவி நல்லா தானே இருக்கா? அவளுக்கு ஒன்னுமில்லையே?” என்றான் பதைபதைப்புடன்
அவன் பதற்றம் கண்டு சற்று நிதானித்த அரவிந்த் “அவளுக்கு ஒன்றும் இல்லை சர்வேஷ்” என வீட்டில் நடந்ததை சுருக்கமாக கூறியவன் நடந்ததை நினைச்சி துளாம்மா பயங்கர கேவத்துல இருக்காங்க இன்னைக்கு நைட்டு ஊருக்கு கிளம்புறாங்க அவங்களை யாராலையும் சாமாளிக்க முடியல” என்றான் கூடுதல் தகவலாக
கேட்ட சர்வேஷிற்குத்தான் மனதில் பாரம் கூடி அவனை கொல்லாமல் கொன்றது. விக்னேஷ் தம்பியின் தோளில் ஆதரவாக கையை வைக்க சட்டென அவனை அணைத்துக் கொண்டவனுக்கு முதுகு அழுகையில் குலுங்கியது. தன் வலியை மறைத்துக்கொண்டு யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
இதுவரையிலும் எதற்குமே தன் மகன் அழுது காணாத விஷ்வநாதன், தன் அண்ணனை கட்டிக்கொண்டு அழுவதை ஆச்
சர்யத்துடன் பார்த்தவர், தங்களை கடந்து போகும் மகனின் முதுகையே வெறித்தார்.