வேகமெடுத்து செல்லும் காரில், விழிகளை மூடி, சாய்ந்து அமர்ந்திருந்த பைரவியின் முகத்தில், வலியின் சாயல், அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. விக்னேஷ்வரனின் வழக்கில் தீர்ப்பு அளித்த மறு நிமிடமே தன் உறவுகளுடன் யாரும் அறியாது வீட்டிற்கு கிளம்பி இருந்தவளுக்கு இதயம் வேதனையில் துடித்து கொண்டிருந்தது.
பைரவியின் முகத்தில் தெரிந்த வலி அருகில் அவளுடன் பயணித்த விஜயேந்திரனையும், நடராஜனையும் தாக்கிட,. தன் அருகில் அமர்ந்திருந்த பேத்தியின் தலையை மென்மையாக வருடினார் நடராஜன் தாத்தா.
கண்களை திறந்து அவரை பார்த்தவளுக்கு என்ன முயன்றும் விழிகளில் உற்பத்தியான கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை… அவளையும் மீறி கன்னத்தில் உருண்டிருந்தது.
பேத்தியின் கண்ணீரை கண்டதும் மனம் கனக்க “பையூமா” என்றார் ஆதுரமான குரலில்.
நடராஜனின் தோளில் சாய்ந்து கண்ணீரை உகுத்தவள் “நான் இதுக்கு தானே தாத்தா பயந்தேன்… நான் பயந்த மாதிரியே ஆகிடுச்சி” மனம் உடைந்து அழும் பேத்தியை எதை கூறி சமாதானம் செய்வது என அறியாது அவரும் கலங்கி போய் இருந்தார்.
விஜயேந்திரனுக்கும் மகளின் அழுகையில் மனம் வாடியது. என்ன சமாதானம் செய்தும் மருமகளின் மனதை மாற்ற முடியவில்லையே என்று வருத்தம் கொண்ட நடராஜன் தாத்தா துளசிக்கிட்ட பேசுறோமேடா என்றார் .
தழைத்திருந்த விழிகளை உயர்த்தி அவரை கண்டவள் “வேணாம் தாத்தா, அம்மா ஒத்துக்க மாட்டாங்க… எனக்காக நீங்க யாரும் திட்டு வாங்காதீங்க… அவங்க கோவம் நியாயமான கோவம், அதை தப்பு சொல்ல முடியாது” என்றவளுக்கு இத்தனை வருடங்களாக தன்னை மனதார நேசித்ததை தவிர ஒரு தவறும் செய்யாத சர்வேஷை மறுபடி வேதனையில் ஆழ்த்த போகிறோமே என்று நினைக்கையில் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
பேத்தியின் மனநிலையை புரிந்து கொண்ட நடராஜன் தாத்தா “பையூ மா” நான் என மறுத்து பேச வர “இல்ல தாத்தா இனி என்னால வீட்டுல ஒரு பிரச்சனையும் வரவும் வேண்டாம் என்னால எல்லோர் நிம்மதி கெடவும் வேண்டாம் தாத்தா… ப்ளீஸ்…” அவரை சமாதனம் செய்தவள் அவர் தோள்களில் சாய்ந்து விழிகளை மூடிக்கொள்ள பெருமூச்சை வெளியேற்றிய நடராஜன் தாத்தா சரி கொஞ்சம் விட்டு பிடிப்போம் என நினைத்தார்.
விஜயேந்திரனுக்கு மகள் படும் வேதனையை கண் கொண்டு காண முடியவில்லை… எதற்கும் சட்டென்று கலங்காதவள் இப்படி மனம் உடைந்து பேசும் அளவிற்கு வந்து விட்டதே என வருந்தினார். சரி எதற்கும் மறுபடி ஒரு முறை மனைவியிடம் பேசிப் பார்ப்போம் என்று நினைத்தவருக்கு நேற்று நடந்த அனைத்தும் மனத்திரையில் வந்து சென்றது.
நேற்று…
கோவிலுக்கு சென்று வரலாம் என பைரவியின் பெற்றவர்களான விஜயேந்திரனும் துளசியும் வெளியே சென்றவர்கள் ஒரு ஏழு மணியை போல் சசீதரனை அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு வந்தனர்.
மருத்துவமனையின் உள்ளே நுழைகையில் பால்ய வயது நண்பனை பார்த்துவிட்ட தீரன் சட்டென விட்டு வரமுடியாமல், “துளா, நீ அண்ணன் ரூமுக்கு போ இதோ வந்துடுறேன்” துளசியிடம் கூறி போக சொல்லியவர், நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான் இன்று பைரவியின் அழுகைக்கு காரணமாக அமைந்தது.
பைரவியின் பெற்றவர்கள் வருவதற்கு முன்னர் தான் தாரணியின் பெற்றவர்கள் வந்திருக்க அவர்களுடன் பேசியபடி இருந்தார் சசீ கூடவே பைரவியும் இருந்தாள்.
சசீதரனை நலம் விசாரித்துக் கொண்டு சாதரணமாக பேசிக் கொண்டு இருந்தவர்கள் பேச்சு வாக்கில் “சம்மந்தி, சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம்… நம்ம பாப்பாவை ஊர் முன்னாடி அத்தனை தூரம் எங்க அண்ணன் பேசிடுசிட்டாரு… அது நாளு பேர் கண்ணுக்கும் வாயிக்கும் விருந்தா இப்போ வரையும் இருக்கு… அது மறையும் முன்னாடி இப்போ பாப்பா சர்வேஷ் கூட அங்க இங்கன்னு போறதை பார்த்தேன்… அதுங்க மனசுல ஒன்னும் இல்லனாலும், இது எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா மறுபடியும் ஒரு பிரச்சனை வந்திட போகுதுன்னுதான் பயமா இருக்கு… ஒரு அக்கறையில் தான் சொல்றேன்… உங்க குடும்பத்து மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாவே இருக்கு… அவரு ஆளுங்களை வைச்சி பாக்க மாட்டார், நம்ம பைரவி பாப்பா மறுபடி தாங்காது” என்றார் தயங்கியபடி
அவர் சசீதரனிடம் போட்டு கொடுக்க வேண்டும் என சொல்லவில்லை பைரவியின் மீதும் அந்த குடும்பத்தின் மீதும் இருந்த அக்கறையில் கூறிவிட்டார்.
“நீங்க எதுக்கு சொல்றிங்கன்னு புரியுது மச்சான்… நான் பாத்துக்குறேன் சர்வேஷோட அப்பா கேஸிற்காக தான் சுத்திட்டு இருக்கா, மறுபடி அந்த மாதிரி ஒரு விஷயம் என் பொண்ணுக்கு நடக்காது” என்றார் சசீதரன் சற்று அழுத்தமாகவே.
பைரவியின் நெஞ்சம் நெகிழ சட்டென தன் பெரிய தந்தையின் கைகளை பற்றியவள் “தேங்க்ஸ் சசீப்பா” என்றாள் மனதார தற்செயலாக இதையெல்லாம் கேட்டபடி இருந்த துளசிக்கு ஒன்று மட்டும் புரிந்தது ஆக மொத்தம் பைரவி வீட்டில் இல்லாமல் வெளியே அதுவும் சர்வேஷோடு ஊர் சுற்றி வருகிறாள்… அதுமட்டுமின்றி சர்வேஷின் அப்பா இவளை ஊர்மக்கள் முன் ஏதோ பேசி இருக்கிறார் என விளங்கிவிட சட்டென அறையினுள் நுழைந்தவர்
“என்ன மாமா? என்ன நடந்தது? தாரணியின் அப்பா ஏதேதோ சொல்றார்…” என்றார் படபடவென்று
தாயை பார்த்த அதிர்வில் பைரவிக்கு பகீர் என்று இருந்தது. எச்சிலை கூட்டி விழுங்கியவளுக்கு பயத்தில் கைகள் சில்லிட்டது.
சசீதரனும் துளசியை இந்த நேரத்தில் எதிர்ப்பார்க்கவில்லை அவருக்கும் திக்கென்று தான் இருந்தது.
கணவனும் மனைவியும் கோவிலுக்கு வந்தவர்கள் அப்படியே பிரசாதத்தை கொடுத்துவிட்டு போகலாம் என அறிவிக்காமல் வர இப்போது அனைத்து குட்டும் வெளியே வந்துவிட, துளசியிடம் விவரத்தை எப்படி கூறுவது என தயங்கிய சசீ “அது ஒன்னுமில்ல மா, நம்ம மச்சான் வீட்டு பிரச்சனையை சொல்லிட்டு இருந்தாரு” என மழுப்பலாக பதிலை அளித்தார்,
அவரை தீர்க்கமாக பார்த்த துளசி “மாமா எதோ மறைக்கிறிங்க அவர் தெளிவா பைரவியின்னு தான் சொன்னாரு, உண்மையை சொல்லுங்க மாமா… பைரவியை யார் என்ன சொன்னது? அழுத்தம் நிறைந்த குரலில் கேட்க அதே சமயம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் விஜயேந்திரன்.
“யாரும் எதுவும் சொல்லல மா… அது வேறு எதையோ பேசிட்டு இருந்தாங்க அதை நீ தப்பா புரிந்துக்கொண்டு இருக்கமா” சசீ சமாளிக்க
“இல்ல மாமா நீங்க பொய் சொல்றிங்க நான் தெளிவா தான் கேட்டேன் அவளை பத்தி என்ன மறைக்கிறிங்க அப்படி என்கிட்ட மறைக்கிற அளவுக்கு என்ன நடந்தது?… ஏய் பையூ நீ சொல்லு என்ன நடந்துச்சு?…” என்றார் படபடவென மகளின் பதட்டத்தையும் அண்ணனையும் கவனித்த தீரன் மனைவியை சமாளிக்கும் பொருட்டு
“துளா அதான் ஒன்னுமில்லைன்னு அண்ணா சொல்றாரே நீ ஏன் அதை கேட்டு கேட்டு பெருசாக்குற?… விடு பிரசாதத்தை பைரவிக்கிட்ட கொடு… அண்ணா நீங்களும் எடுத்துக்கோங்க” தீரன் பேச்சை மாற்றிட தாரணியின் பெற்றவர்கள் முன்னால் மீண்டும் மீண்டும் கேட்க முடியாமல் அமைதியான துளசி மகளை முறைத்தபடியே கணவனுடன் வீட்டிற்கு கிளம்பினார்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே மாமானாரின் முன் நின்ற துளசி “மாமா நான் உங்களை முழுசா நம்புறேன்… என் பெத்த அப்பாவை போல தான் உங்களை பாக்குறேன்… என் மேல உண்மையான பாசமும் அக்கறையும் இருந்தா, நான் கேட்குற கேள்விக்கு உண்மையான பதிலை மட்டும் சொல்லுங்க மாமா…” பாசத்தை காட்டி கேட்கவும்
“என்னம்மா துளசி இப்படி எல்லாம் பேசுற என்ன தெரியனும் உனக்கு கேளுமா ?” என்றார் நடராஜன் அவர் வாய் நிறைய சொல்லி விட்டாலும் சிறு பதட்டம் இருக்கத்தான் செய்தது.
“பைரவிக்கு என்ன நடந்தது. இன்னைக்கு தாரணியின் அப்பா அம்மா மாமா கிட்ட பேசிட்டு இருந்ததை தற்செயலா கேட்டேன்… ஆனா உண்மையை என்னன்னு எனக்கு தெளிவா சொல்ல மாட்டுறாங்க நீங்களாவது சொல்லுங்க மாமா என் பெத்த வயிறு பதறி துடிக்குது ஏன் என்கிட்ட மறைக்கிறிங்க என் பொண்ணுக்கு என்னதான் நடந்தது” என்றார் துளசி அழுதுக்கொண்டே.
துளசியின் கேள்வியில் வீட்டில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியில் முகம் கலவரமாக, நடராஜன் தாத்தா விஜயேந்திரனை பார்த்தார். அவரும் நடந்ததை எதையும் விளக்கி கூற முடியாமல் சங்கடமாகவே நின்றனர்.
மருமகளின் குணம் அறிந்த சுப்ரஜா பாட்டி “துளசிமா என்னடா யார் என்ன சொன்னா?” அவரை சமாதனப்படுத்த முயல,
“சுப்பு, நீ இரு… மருமக என்னை தானே கேட்டா நானே பதிலை சொல்றேன் பெத்தவளுக்கு பிள்ளையை பத்தி தெரிஞ்சிக்கிற எல்லா உரிமையும் இருக்கு… இனி எதையும் மறைக்க வேண்டாம்…” என்றவர் அன்று நடந்ததை சுருக்கமாக கூறி இப்போது அவர்களுக்கு பைரவி உதவுவதின் பொருட்டு சர்வேஷூடன் செல்வதை பற்றியும் கூறினார்.
கேட்டவருக்கு உள்ளம் கொதித்தது… “ஏன் மாமா நீங்க சொன்னீங்கன்ற ஒரே காரணத்துக்காக தானே அவள இங்க விட்டுட்டு போனேன்… என் பொண்ணை ஊர் முன்னாடி இவ்வளவு அசிங்கமாக பேசி இருக்காங்க… அவங்கள காப்பாத்த என் பொண்ணை மறுபடியும் அங்க அனுப்பி இருக்கிங்க இது எந்த விதத்துல மாமா நியாயம்… பேத்தியை விட உங்களுக்கு உங்க அக்கா பையன் முக்கியமா போயிட்டாரு இல்ல மாமா… என்ற துளசிக்கு அன்று மகள் என்ன வேதனை பட்டாளோ நினைக்கையில் கண்களில் நீர் சுரந்தது.
“அவ நெருப்பு மாமா… அவரு என் பொண்ணு கேரக்டரையே தப்பா பேசி இருக்காரு… அவர் எப்படி பேசலாம்? அவளை பத்தி பேச அவர் யாரு?… என் பொண்ணு மனசு எப்படி உடைஞ்சி போயிருக்கும்” என அழுதவர் கணவன் அமைதியாக நிற்கவும் சந்தேகம் கொண்டு அவரை பார்த்தார்.
நீங்க ஏன் எதுவுமே பேச மாட்டுறிங்க நீங்க ஏன் எதுவும் கேக்கல அப்போ அப்போ உங்களுக்கு எல்லாம் தெரியுமா? என்றிட தலையை ஆம் என அசைத்தார் விஜயேந்திரன்.
கணவரை வெறித்து பார்த்தவர் தெரிஞ்சி தான் பொண்ணை இங்க அனுப்பி இருக்கிங்களா?… உங்களால் எப்படி அவளை மறுபடி இங்க அனுப்ப முடிஞ்சிது?… அவ எவ்வளவு அவமானப்பட்டாலும் பரவாயில்லைன்னு நீங்களும் நினைச்சிட்டிங்களா?” காட்டமாக கேட்டவர், முகத்தில் அறைந்து அழுதிட
“துளா” என தீரன் மனைவியின் கரங்களை பிடித்து தடுத்தார்.
“விடுங்க… விடுங்கன்னு சொன்னேன்… என்னை தொடாதீங்க… என்கிட்ட எல்லாம் மறைச்சிட்டிங்கல்ல… எதுவும் பேச வேண்டாம்… இனி உங்களுக்கும் எனக்கும் பேச்சி இல்லை வரட்டும் அவ இனி அவ இங்க இருக்க கூடாது நாளைக்கே ஊருக்கு கிளம்பனும்” என்றார் துளசி உறுதியுடன்
“அம்மா துளசி” என்று நடராஜன் அவரிடம் பேச வர “வேண்டாம் மாமா… வேண்டாம்… என்னை யாரும் சமாதானம் செய்ய வேண்டாம்… நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்… உங்களுக்கு உங்க அக்கா பையன் முக்கியமா இருக்கலாம் மாமா… இவருக்கு இவர் மச்சான் முக்கியமா இருக்கலாம்… ஆனா எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்” தீர்க்கமாக உறைத்தவர் அறைக்குள் சென்று விட்டார்..
அரவிந்த் தாரணியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான். பார்த்தாயா இதற்காக தான் சொன்னேன் என்பது போல இருந்தது,. அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து தலையை தழைந்துக் கொண்ட தாரணியின் மனதும் துளசியின் கண்ணீரை கண்டு குற்றவுணர்வில் தவித்தது.