மெல்ல இருள் பிரிய தொடங்கிய அதிகாலைவேளை, வானம் சற்றே வெளுக்க துவங்கியிருந்த நேரம் அது, செந்தூர நிறத்தில் தோன்றிய ஆதவனின் வருகையால், அந்த காலைப்பொழுதே அழகாக்கிக் கொண்டு இருந்தது.
இரை தேட பறந்து செல்லும் பறவைகளின் சத்தம், இன்று நான் மலர்ந்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லும் பூக்களின் நறுமணம், தூரத்தில் கேட்கும் பெருமாள் கோவில் சுப்ரபாதம் என அன்றைய பொழுது ஏக போகமாகவே ஆரம்பம் ஆகியிருந்தது.
நேற்றைய இரவு பைரவியின் நினைவில் வெகு நேரம் விழித்ததின் பலனாய் சர்வேஷ்வரன் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தான். விக்னேஷ்வரனின் வற்புறுத்தளால், வீட்டிற்கு வந்து நான்கு நாட்களாகிறது… ஒழுங்காக சாப்பிடாமல் ஏனோ தானோவென்று இருந்தவன் நேற்று அர்ஜூனிடம் பேசியதில் சற்று நிம்மதியுடன் உறக்கம் கொண்டான். சர்வேஷின் அறைக்கு காபியுடன் வந்த சாரதா வெகு நாட்களுக்கு பிறகு அசதியில் தூங்கும் மகனை எழுப்ப மனமில்லாது அங்கிருந்து தோட்டத்து பக்கம் நகர்ந்து விட்டார்.
அப்போதுதான் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த விஷ்வநாதன் தோட்டத்து பக்கம் இருந்த திண்டில் அமர்ந்திட, “மாமா காபி” என கொண்டு வந்து நீட்டினாள் ரேகா.
இன்றாவது தன் மனைவி காபியை கொண்டு வந்து தருவாள் என விஷ்வநாதன் எதிர்ப்பார்த்து இருந்தார். அவர் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி ரேகா காபியை நீட்டவும், கண்களிலும், மனதிலும் தோன்றிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, மருமகளிடமிருந்து காபியை வாங்கிக்கொண்டவர் “விக்னேஷ் எங்கமா” என்றார்.
“அவரு இப்போ தான் மாமா எழுந்தாரு… குளிக்க போய் இருக்காரு… உங்களை வந்து பாக்க சொல்லவா?” கேட்ட ரேகா பதிலுக்காக விஷ்வநாதனின் முகம் பார்த்து நின்றாள்.
“அது… வந்து… கணக்கு வழக்கு எல்லாம் பாக்கனும்…. ம்…” என யோசித்தவர், சரி நேரம் இருந்தா “வரச்சொல்லு” அவளிடம் கூறிவிட்டு தினசரியில் முழ்கிவிட்டவருக்கு ஏதோ தோன்ற சட்டென தலை நிமிர்ந்து பார்த்தார்.
மனைவி தோட்டத்து பக்கம் சென்றுக் கொண்டிருக்க அவரது அனுமதி இல்லாமலேயே விஷ்வநாதனின் கண்களும், மனைவியை பின் தொடர்ந்து சென்றது.
எப்போதும் புது பொலிவுடன் வளைய வரும் சாரதவின் முகத்தில் அந்த பொலிவு இருந்ததிற்கான தடம் கூட இல்லை…. மிதமாகவே என்றாலும் சிறிதளவேனும் கழுத்தை அலங்கரித்து கொண்டிருந்த பொன் ஆபரணங்கள் இல்லை அதற்கு மாறாக மஞ்சள் தாலி கயிறு மட்டுமே இருந்தது, வீட்டிலினில் இருந்தாலும் அவர் கட்டும் புடவைகள் நேர்த்தியும் விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் இப்போது வெகு சாதரணமான நூல் புடவையில் இருந்தார்.
பெரிய இடத்து பெண், இன்னாரின் மனைவி, என்ற அடையாளம் சிறுது கூட இல்லாமல் ஆளே மாறி போய் இருந்தார். சாரதாவின் மாற்றங்கள் கணவரது கண்களுக்கு தவறாமல் சிக்கிட, மனைவியின் இந்த கோலம் அவரை வெகுவாக பாதித்தது… எப்போழுதும் மகாலட்சுமியை போன்று நிறைந்து இருப்பவர், இப்படி ஒரு தோற்றத்தில் அதிலும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இறுக்கமாகவே இருக்கும் சாரதா அவருக்கு புதிதாக தெரிந்தார். ஏதோ ஒரு வாரம் பத்து நாட்களில் பிரச்சனைகள் சரியாகி முன்பு போல மாறிவிடுவார் என எண்ணி இருந்தவருக்கு அவரது வைராக்கியம் பிடிவாதம் எல்லாமே புதுமையாக இருந்தது.
மூத்த மகன், அப்பா என்று பேசினாலும் அதில் ஒரு விலகல் தன்மையே இருந்தது. தாயைப் போலவே இளைய மகனும் இருந்தான். அவனின் கோவமும் வெறுப்பும் அப்படியே இருக்க, ரேகா தான் மாமனாருக்கு ஒரு மகள் போல பார்த்து பார்தது செய்கிறாள்.
விஷ்வநாதன் விக்னேஷ்வரனின் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வந்ததிலிருந்து வெட்டிக்கொண்டு போன சொந்தமெல்லாம் மறுபடி வந்து ஒட்டிக்கொண்டது. அதிலும் இப்போது மாமான், மச்சான், பங்காளி, அண்ணன், தம்பி, சித்தப்பன், பெரியப்பன் என உறவுமுறையுடன் நலம் விசாரித்து செல்ல, அவர்களிடம் எல்லாம் ஒரிரு வார்த்தைகளுடன் பேச்சை முடித்துக்கொண்டவர் வேலை இருப்பது போல காட்டிக்கொண்டு வெளியவோ அல்லது நிதி நிறுவனத்திற்கோ சென்றுவிடுவார்.
மகன்கள் சொந்தங்களை பற்றி கூறியதில் இருந்து ஏனோ ஒரு வெறுப்பு ஆனால் முற்றிலும் தவிர்க்க முடியாமல் தன்னால் முடிந்தளவு ஒதுங்க ஆரம்பித்து இருந்தார். மனைவியின் சிந்தனையில் இருந்தவரை களைத்தது “அப்பா” என்னும் விக்னேஷின் அழைப்பு
தன் எண்ணத்திற்குள் சுழன்றுக் கொண்டு இருந்த விஷ்வநாதன் திடீரென குரல் கேட்கவும் சிந்தனை வலை அறுந்து வெளியே வந்தவருக்கு, தொலைந்த கம்பீரம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. மகனை அழைத்தற்கான நினைவு வர, பேப்பரை பார்த்தபடியே
“விக்னேஷ் உன்னை தான் எதிர்ப்பாத்துட்டு இருந்தேன்…நாம இல்லாத இந்த மூனு மாசத்து கணக்கு வழக்கு கொஞ்சம் பாக்க வேண்டி இருக்கு… மருமக விசேஷத்தை வைச்சிக்கிட்டு உன்னால முடியாது நிலுவலையில் உள்ள தொகை எல்லாம் பெருசா வேற இருக்கு… அதனால ஆடிட்டரையும் வக்கீலையும் கொஞ்சம் ஆபீஸ் வரச்சொல்லு பேசனும்” என்றார். தினசரியில் இருந்து கண்களை அவன் பக்கம் திருப்பாமலேயே
அவனுக்கு நேற்றிலிருந்து மண்டைக்குள் இதுதான் ஓடிக்கொண்டிருந்தது… ரேகாவின் பூ முடிப்பு வேறு உள்ள நிலையில் இதை தந்தையிடம் எப்படி கூறுவது என நினைத்திருக்க, அவரும் அதையே சொல்ல பிரகாசமான முகத்துடன் “சரிங்கப்பா ஒரு இரண்டு நாள் கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணிக்கோங்க ஃபங்ஷன் முடிஞ்சதும் மத்ததை பாத்துக்கலாம்” என்றான் நிம்மதியுடன்.
“ம்… என தன்னுடைய சம்மதத்தை வெளிப்படுத்தியவர் “நான் கம்பெனிக்கு போறேன் செலவுக்கு வேணும்னா சொல்லு விசேஷத்தை பெருசாவே பண்ணு” அவனிடம் கூறிவிட்டு, எதிலும் கலந்துக் கொள்ளாமல் அவர்களிடமே பொறுப்பை விட்டுவிட்டார்.
“வேணும்னா கேக்குறேன் இப்போதைக்கு இருக்குப்பா” என்றான் நிறைந்த மனதுடனே அதற்கு சரி என தலை அசைத்து, தன் கம்பீரம் சிறிதும் குறையாமல் உரையாடியவர் அலுவலகம் செல்ல தயாராக அறைக்கு சென்றார் .
காலை நல்ல உறக்கத்தில் இருந்தவனை எழுப்பியது முத்துவின் அலைபேசி அழைப்பு கண்களை பாதி திறந்தும் திறவாமலும் போனை எடுத்து பேசிய சர்வேஷின் முகம் அதிர்ச்சியில் உறைய “சரி அவசரப்படாத, நான் வரேன்… இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுறேன்” நண்பனுக்கு வாக்கை கொடுத்தவன் வேகமாக குளியலறை நோக்கி சென்றான்.
……
“என்ன சர்வேஷ் இதெல்லாம்? நல்ல காரியம் பண்ணப் போற இந்த நேரத்துல இவனைக் கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ற” பொங்கிக் கொண்டு வந்தார் கீர்த்தியின் தாய் மாமன் அந்த கிடா மீசைக்காரன்.
பொங்கிய கோபத்தை மறைத்தபடி “நான் பிரச்சனை பண்ண வரலை சித்தப்பூ…. புது பிரச்சனையை உருவாக்காதிங்கன்னு சொல்லத்தான் வந்தேன்” சர்வேஷூம், அதே தோரணையில் கூறிட,
அதில் சற்று தடுமாறிய கீர்த்தியின் கிடா மீசை மாமங்காரன் “என்ன பா??? என்ன பிரச்சனை??? அதெல்லாம் அவ மறந்துட்டு தானே இந்த நிச்சயத்துக்கு ஒத்துக்கிட்டு நிக்குறா” என்றார் எதிரில் உயிர்ப்பே இல்லாது நின்றிருந்த கீர்த்தியை கை காட்டி
“இது என்ன நீங்க சின்ன குழந்தை கிட்ட சாக்லெட் வேண்டாம் சொல்லிட்டு நீங்க கொடுக்குற ஏதோ ஒன்னை சாப்பிட சொல்றா மாதிரின்னு நினைச்சிங்களா? நீங்க மறந்துடுன்னு சொன்னவுடனே சட்டுன்னு மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க? வாழ்க்கை சித்தப்பூ … வாழ்க்கை.… ரெண்டு வருஷமா காதலிக்கிறவங்கள பிரிச்சி எப்படி இன்னெருத்தனோட வாழ வைப்பிங்க சித்தப்பூ” என்றான் ஆதங்கமான குரலில்.
“கல்யாணம் பண்ணி வைக்கிற எங்களுக்கு எப்படி வாழ வைக்கனும்னு தெரியும்…
அது எங்க கஷ்டம்..
அதை நாங்க பாத்துக்குறோம்” சவடலாக பதிலை கூறியவர்,
“முதல்ல நீங்க இடத்தை காலிப்பண்ணுங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரம் ஆச்சி… இந்த பொண்ணு பண்ணி வைச்ச காரியத்தை கூட பெரிசா எடுத்துக்காம நல்ல மனசோட ஏத்துக்க சம்மதம் சொல்லிட்டாங்க” என்றார் பெருமையாக
அந்த கிடா மீசையை வெளுக்க கைகள் பரபரத்தது முத்துவிற்கு, இருந்தும் எதிரே கண்களில் கண்ணீருடன் நிற்கும் கீர்த்தியை கண்டு சற்று பொறுமை காத்தவன் “இப்போ என்ன விட எந்த விதத்துல நீங்க பாத்த மாப்பிள்ளை உசத்தியா உங்களுக்கு தெரியுறான்?”. என்றான் கடுமையான குரலில்.
“வீடு தோட்டம் தொரவு சொத்து பத்து இதையெல்லாம் விட முக்கியமா எங்க ஆளுங்க.. அது போதாதா உன்னை விட உசத்தின்னு நாங்க நினைக்க?” கிடா மீசையின் குரலில் எள்ளல் சற்று தூக்களாகவே இருக்க,
“இந்த தகுதி ஒன்னு போதுமா சித்தப்பூ… உன் பொண்ணை கட்டிக்க? அந்த பொண்ணு மனசுக்கு புடிச்சவன் எவன்னு பாக்க மாட்டிங்க… உங்க சாதிக்கு ஏத்தவன் எவன்னு பாக்குறிங்க?… சே…. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த பிரச்சனையை சுமந்துகிட்டு இருப்பிங்க கொஞ்சமாச்சும் மாற முயற்சி பண்ணு சித்தப்பூ”… என்றான் சர்வேஷ் காட்டமாக
“அதெல்லாம் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பொறந்தா தன்னால எல்லாம் மாறிடும்… இப்போ எங்ஙளுக்கு பெருசா தெரியுற சாதி சனம், அப்போ கீர்த்திக்கு பெருசா தெரியும் இளம் வயசுல அப்படித்தான் பேச சொல்லும் ஆனா குடும்பம் பொருப்பு அது இதுன்னு வந்துட்டா அவளும் எங்கள மாதிரி மாறிடுவா” என்றார் இதெல்லாம் இங்கு சர்வ சாதரணம் என்பது போல்
ஒரு ஓரமாக நின்றிருந்த தாயின் பாதங்களில் சட்டென விழுந்த கீர்த்தி “அம்மா ப்ளீஸ் மா என்னை முத்துவுக்கே கட்டி வைச்சிடும்மா நீங்க பாத்து இருக்க இந்த கல்யாணத்துல எனக்கு துளிக் கூட விருப்பம் இல்லம்மா…. மாமா சொல்ற மாதிரி என்னால வேற ஒருத்தர் கூட சத்தியமா வாழ முடியாதும்மா…. அதுக்கு நான் செத்தே போயிடுவேன்மா…. ப்ளீஸ் மா…” என தேம்பி தேம்பி அழும் மகளை பார்க்க தாய்க்கும் வேதனையாக இருந்தது.
“ஏய்… என்ன இது?…” சத்தமாக அதட்டிய அவளுடைய மாமன் “ரஞ்சனி… கீர்த்தியை உள்ள இழுத்துக்கிட்டு போ” குரல் உயர்த்த முத்துவையும் சர்வேஷையும் பார்த்தபடி தயங்கி தயங்கி வந்த ரஞ்சனி கீர்த்தியை தூக்க, “அக்கா பீளீஸ்கா…. நீயாவது மாமாகிட்ட சொல்லுக்கா…. அவரு நல்லவருக்கா… என்னை நல்லா வைச்சி பாத்துக்குவாருக்கா…. அக்கா ப்ளீஸ் கா… எனக்கு இந்த நிச்சயம் வேண்டாம்.. கா…” என்றாள் கெஞ்சல் குரலில்.
“ஏய்… உள்ள இழுத்துக்கிட்டு போடி… இங்க என்ன வித்தையா காட்டுறாங்க? நிக்க வைச்சி வேடிக்கை காட்டிட்டு இருக்க…” மனைவியை பளார் என்று அறைய “ராஜாகண்ணு” என கீர்த்தியின் தாய் தம்பியை அதட்டி இருந்தார்.
அவருக்கும் இந்த நிச்சயம் பிடிக்கவில்லை தான் இருந்தும் தம்பியின் சொல்லையும் தட்ட முடியாமல், மகளின் தவிப்பையும் காண முடியாமல் இருதலை கொள்ளி எரும்பாக இருந்தவருக்கு, இப்போது கீர்த்தியின் வாழ்க்கையும் உயிரும் பெரிதாக தெரிய, “தம்பி கீர்த்தியை முத்துவுக்கு கொடுக்கலாம்பா” என்றார் மகளின் தலையே வருடிபடியே
“அக்கா அவனுக்கு எப்படிக்கா நம்ம கீர்த்தியை கொடுக்கறது?” சத்தமிட்டு தன் அதிருப்தியை அந்த கிடா மீசை வெளிப்படுத்த
“தம்பி… வாழ வேண்டிய பொண்ணுப்பா நாம அவசரப்பட்டு இவங்கள பிரிச்சி கல்யாணம் பண்ண வைச்சிட்டு, நாள பின்ன ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிக்கிட்டா அய்யோன்னாலும் வராது அம்மான்னாலும் வராதுப்பா எனக்கு இந்த சாதி பத்தியெல்லாம் கவலை இல்ல தம்பி… என் பொண்ணு நல்லா இருந்தா போதும்… அவங்களும் நம்மள விட எதிலும் குறைஞ்சவங்க இல்லைய்யா” தன்மையாகவே அவர் பக்க கருத்தை எடுத்துரைக்க
“அம்மா” என அவரை கட்டிக்கொண்டாள் கீர்த்தி. அத்தை என்று காலில் விழுந்தான் முத்து… “நல்லா இருப்பா” என ஆசி வழங்கியவர் “முறைப்படி பெரியவங்கள வீட்டுல வந்து பேச சொல்லுப்பா” முத்துவிடம் கூறிட
“சீக்கிரமே அத்தை அவங்க வந்து பேசுவாங்க” எனக் கூறியவன் கண்கள் கீர்த்தியிடம் காதல் மொழி பேசியது.
‘ரொம்ப தேங்கஸ் அத்தை… நீங்க இவ்வளவு சீக்கிரம் உங்க முடிவை சொல்லுவீங்கன்னு நான் எதிரப்பாக்கலை…” சர்வேஷூம் தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினான். கீர்த்தி சர்வேஷின் தாய் வழி சொந்தம் அதைக்கொண்டு கீர்த்தியின் அன்னையை அத்தை என அழைத்தான்.
“பிள்ளைங்க தானேய்யா எங்க உலகம் அதுங்க சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்” என்றார் வாஞ்சையாக கிடா மீசைக்குத்தான் சட்டென இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அக்காவையும் எதிர்த்து பேசிட முடியாமல், முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு இருக்க முத்துவும் சர்வேஷூம் அங்கிருந்து சந்தோஷமாக விடை பெற்று சென்றனர்.