தன் பணியை செவ்வனே முடித்த சூரியபகவான் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும் மாலை வேளையில் எளிமையாக கிளம்பி வந்த சாரதா, “ரேகா சாமி அறையில் இருந்து குங்கும சிமிழை எடுத்துட்டு வாம்மா.. முக்கியமான உறவு முறைக்கு எல்லாம் சொல்லிட்டு வந்துடுறேன்” என்றவர் வீட்டிற்குள் வந்த சர்வேஷினை பார்த்துவிட்டு தண்ணீரை கொண்டு வந்து மகனிடம் கொடுத்தார்.
தவித்த வாயிற்கு தண்ணீரை கொடுத்த அன்னையை வாஞ்சையாக பார்த்தவன் முகத்தில் இருந்த களைப்பையும் மீறி அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அதை மனதில் குறித்துக் கொண்ட சாரதா
“எங்கடா போயிருந்த? காலையில் இருந்து ஒரு போனை காணும்…. சாப்பிடவும் வீட்டுக்கு வரலை… ஆனா முகமெல்லாம் சந்தோஷம் நிறைஞ்சாப்போல இருக்கு?” என்றார் மருமகளை எதிர்ப்பார்த்தபடி.
“அதை ஏன் மா கேக்குற? காலையில் ஆரம்பிச்ச பிரச்சனை இப்போ தான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கு” என்றான் ஆஸ்வாசமாக இருக்கையில் அமர்ந்து.
பிரச்சனை என்றதும் பதறிய சாரதா “என்னப்பா என்ன பிரச்சனை?” என்றார் பதட்டத்துடன்.
அவர் பதற்றத்தை பார்த்ததும் விவரத்தை சரியாக கூறாத தன் தவறை நினைத்து தலையில் தட்டிக்கொண்டவன் “அம்மா ஏன் இப்படி பதறுறிங்க?… பிரச்சனை தான் ஆனா எனக்கு இல்ல முத்துவோட காதலுக்கு” எனக் கூறியவன் அவனுடைய கதையை கூறனான்.
“அப்படியா விஷயம்… பரவாயில்லைப்பா ஏதோ அந்த நடராஜர் கருணையால அவன் வாழ்க்கை நல்லபடியா இருக்கனும்” மனதார பிரார்த்தனை செய்துக்கொண்டவர் “முத்து வீட்டுல என்னப்பா சொன்னாங்க? அவங்க ஒத்துக்கிட்டாங்களா?” என்றார் சாரதா.
விஷயம் சற்று பெரியது என்பதால் எப்படி எடுத்துக் கொண்டனரோ வீட்டினர் என்று நினைத்து வினவி இருந்தார்.
“கீர்த்தி விட்டுலையே இப்படின்னா முத்து வீட்டுல எப்படின்னு யோசிங்கம்மா… கொஞ்சம் இல்ல ரொம்ப முரண்டு பிடிச்சாங்க பையன் ஒத்தக்கால்ல நின்னு கட்டுனா கீர்த்தியை தான் கட்டுவேன் இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டான்னு ஒரே போடா போட்டுட்டான்… அவங்க அப்பா ஆடிப்போயிட்டார் அப்புறம் என்னால முடிஞ்சதை நானும் சொல்லி சமாதனம் செய்தேன்… முத்து செல்ல புள்ளை சொல்லவா வேணும் நாள் கிழமை பாத்து கீர்த்தி வீட்டுக்கு போய் நிச்சயம் பண்ண எல்லோரும் சம்மதம் சொல்லிட்டாங்க… இப்போ அங்கிருந்து தான் வர்றேன் அதான் இந்த சந்தோஷம்” என்றான் மலர்ந்த முகத்துடன்.
சர்வேஷின் முகத்தில் இருந்த மலர்ச்சியை கண்டவருக்கு மனதில் சிறு வலி எழுந்தது, அவன் காதலை எண்ணி…, ‘எல்லாருக்கும் நல்லாதே நடக்கனும்னு நினைக்கிற என் பிள்ளைக்கு, ஒரு நல்ல வழியை காட்டக்கூடாதா? அவன் விரும்பின பொண்ணையே அவனுக்கு வாழ்க்கை துணையா அமைச்சிக் கொடுக்க கூடாதா ஈஸ்வரா?’ மகனை நினைத்து உருக்கத்துடன் அந்த தில்லை அம்பலவாணனை வேண்டிக்கொள்ள, தாயின் கவலைபடிந்த முகத்தில் இருந்த செய்தியை தெரிந்துக் கொண்டவன் முகமும் நொடியில் இறுகியது.
“அத்த இந்தாங்க குங்கும சிமிழ்” பூஜை அறையில் இருந்ததை எடுத்து வத்து கொடுத்தாள் ரேகா.
மகனின் முக மாற்றம் கண்டு உள்ளுக்குள் ஒரு தாயாய் கலங்கினாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல், “வாயேன் சர்வேஷ்.… நடராஜன் அய்யா வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடுவோம்”
“என்னம்மா… திடீர்னு அங்க?”
“நம்ம ரேகா, விசேஷத்துக்கு அழைக்கனும் இல்லையா சர்வேஷா?… நம்ம சொந்தம் என்பதை காட்டிலும் நல்ல மனுஷங்கய்யா… அவங்க வந்து வாழ்த்தினாங்கன்னா என் குடும்ப வாரிசுக்கு நல்லது” என்றார் பூரிப்புடன்
“அது சரிதான்… ஆனால் உள்ளே கௌரவத்துக்கு பொறந்தவர் இருக்காரே… வர்றவங்கள ஏதாவது சொல்லி கஷ்டப்படுத்திட்டா என்னம்மா பண்றது? கூப்பிட்டு வைச்சி அசிங்கப்படுத்தினா மாதிரி ஆகிடும்” என்றான் உள்ளார்ந்த பதைபதைப்புடன்.
“இதுல யார் சொன்னாலும் கேக்க மாட்டேன் சர்வேஷா… எனக்கு அந்த குடும்ப மனுஷங்க வேணும்… இத்தனை நாள் அவங்க அருமை தெரியல… ஆனா அது தெரிஞ்ச பிறகும் விலகி இருக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல… நமக்கு ஒரு கஷ்டம் வந்த போது தாங்கின மனுஷங்க அவங்களை தவிர்த்து எனக்கு யாரும் முக்கியம் இல்ல அப்படி அவங்க வர்றது மத்தவங்களுக்கு விருப்பம் இல்லனா தாராளமா இதுல கலந்துக்க வேண்டாம்…” கூறி தங்கள் அறையை ஒரு பார்வை பார்த்தார் உள்ளே விஷ்வநாதன் இருக்கிறார் என்று தெரிந்தும்
“இது நான் பெத்த புள்ளையா இருந்தாலும் சரி… எனக்கு தாலின்னு ஒரு மஞ்சள் கயிற்றை கட்டியவரா இருந்தாலும் சரி…. அதுக்கு நான் கவலைப்பட மாட்டேன்” எனறவர், “நீ வரியா?” என்றார் சர்வேஷிடம்
உள்ளே கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வநாதனின் செவிகளில் இவர்களின் சம்பாஷணைகள் தெளிவாக விழ புருவ முடிச்சுகள் ஒரு முறை சுருங்கி விரிந்தது. இருந்தும் அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் தானுன்டு தன் வேலை உண்டு என அவரது பணியை தொடர்ந்துக் கொண்டிருந்தார்.
தாயின் அழைப்பிற்கு சர்வேஷ் வருகிறேன் எனக் கூறுவதற்கு முன்னரே “அம்மா நான் வரேன்” விக்னேஷ்வரன் அவனுக்கு முன்னால் வந்து நின்றான்..
அதிர்ச்சியாக சாரதா மூத்த மகனின் முகம் பார்க்க, விரிந்த புன்னகையுடன் ரேகா விக்னேஷ்வரனை பார்த்தாள். சர்வேஷூம் உதட்டில் உறைந்த புன்னகையுடன் தமையனைத்தான் பார்த்திருந்தான்.
“என்னம்மா நம்ப முடியலையா? இது தான்மா நிஜம்… நானும் உண்மை எது பொய் எதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்… தாத்தாவையும் மாமாவையும் நேர்ல பார்த்து மன்னிப்பு கேக்கனும் வாங்க அப்படியே என் பொண்டாட்டியோட விசேஷத்துக்கு வாங்கன்னு கூப்பிடனும்” என்றவன்
“வாங்கம்மா” என முன்னால் நடக்க மனம் முழுங்க சந்தோஷத்துடன் சர்வேஷிடமும் ரேகாவிடமும் கூறிவிட்டு அவன் பின்னே நடந்தார் சாரதா.
…..
“அண்ணி நான் போன் பண்ணா பேசமாட்டா… நீங்களே பேசுங்க…”
“தம்பி அவங்க அம்மா போன் எடுத்துட்டா?”
“அண்ணி… இதுக்கு ஏன் பயப்புடுறிங்க?… உண்மையை சொல்லுங்க… அவங்களுக்கு உங்க மேல எல்லாம் கோவம் இல்ல அப்பா மேல தான் கோவம்… அதனால தன்மையா தான் பேசுவாங்க… சும்மா பயப்படாம பேசுங்க” ரேகாவை ஊக்கிக் கொண்டு இருந்தான் சர்வேஷ்.
“ஹலோ…. ” அவள் குரல் கேட்டதும் “இந்தாங்க அண்ணி” என சத்தமில்லாது ஸ்பீக்கரை ஆன் செய்து போனை ரேகாவிடம் கொடுத்து பேசுங்க என சைகை செய்தான்..
தயக்கமாக போனை வாங்கினாள் ரேகா,
“ஹலோ… ஹலோ ரேகா…. லைன்ல இருக்கிங்களா?” இரண்டு முறை பைரவியின் அழைப்புக்கு பின் தைரியம் வர , ஹங்… ஹலோ பைரவி ந…. நான்… தான் ரேகா பேசுறேன்… நீங்க நல்லா இருக்கிங்களா?” ரேகா ஆரம்பத்தில் தடுமாறினாலும் போக போக இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தாள்.
“நான் நல்லா இருக்கேன் ரேகா… நீங்க எப்படி இருக்கிங்க? அத்தை எப்படி இருக்காங்க? குழந்தை எப்படி இருக்கு?..செக்கப் போனிங்களா? ஜூனியர் உள்ள என்ன சொல்றார்?’ வரிசையாக கேள்விகளை அடுக்கிட
அவளது குரலையே ஆசையுடன் கேட்டுக்கெண்டு இருந்தவன், மனதில் மட்டும் அவளை வசைப்பாடிக் கெண்டான். ‘அண்ணியக் கேக்குறா… அம்மாவை கேக்குறா… ஒரு பேச்சிக்காவது என்னை கேக்குறாளா பாரு?’ என மனதில் நினைத்தாலும் அந்த குரலை ரசித்தான்.
“நல்லா இருக்கோம் பைரவி செக்கப் எல்லாம் கரெக்டா போயிட்டு வரேன்… அப்புறம் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” கூறிய ரேகா தயக்கமாக சர்வேஷின் முகம் பார்த்தாள். “பேசுங்க அண்ணி” சைகையின் மூலம் சமிக்ஞை செய்துக்கொண்டு இருந்தான் சர்வேஷ்.
ரேகாவின் அமைதியில் ஏதோ பிரச்சனை என நினைத்த பைரவி “சொல்லுங்க ரேகா… என்ன அமைதியா ஆகிட்டிங்க?… ஏதாவது பிரச்சனையா? இல்லை என்கிட்ட ஏதாவது சொல்லனுமா? என்கிட்ட பேச உங்களுக்கு என்ன தயங்கம் சொல்லுங்க ரேகா…”
“அது… பைரவி …. நீங்க வெள்ளிக்கிழமை கோவில்ல நடக்குற விசேஷத்துக்கு வரனும்” என்றாள் கெஞ்சலாக பைரவி வேறு ஏதோ என நினைத்திருக்க ரேகா விஷேஷத்திற்கு அழைக்கவும் தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு…. இருக்கும் பிரச்சனையில் இதுவும் சேர்ந்துக்கொண்டால் துளசியை மலை இறக்க முடியாது.. என நினைத்தவள்,
“தப்பா எடுத்துக்காதிங்க ரேகா… இப்போ வரக்கூடிய சூழ்நிலையில் நான் இல்லை… உங்களுக்கு வீட்டில் நடந்த விஷயம் தெரியும்னு நினைக்கிறேன்… உங்க மாமானார் பேசினது எல்லாம் அம்மாவுக்கு தெரிஞ்சி பெரிய பிரச்சனை ஆகிடுச்சி… அம்மா உங்க குடும்பத்து மேல மட்டும் இல்ல, எங்க தாத்தா பாட்டி சசீப்பா விமலம்மா எல்லார் மேலும் ரொம்ப கோவத்துல இருக்காங்க… இப்போ போயி நான் அங்க, அதுவும் உங்க வீட்டு விசேஷத்துக்கு, போறேன்னு சொன்னா வேற வினையே வேண்டாம்…” என்றாள் தன் நிலையை அவளுக்கு விளக்கி விடும் எண்ணத்துடன்,
“உங்களோட நிலமை புரியுது பைரவி.. நான் வேணா துளசி அம்மாக்கிட்ட பேசி பாக்கட்டுமா? எனக்காகன்னு சொன்னா அனுப்பி வைப்பாங்கல்ல?” என்றாள் ஏதோ ஒரு நம்பிக்கையில்
“வேண்டாம் ரேகா… அவங்க இருக்க கோவத்துல ஏதாவது சொல்லிட்டா மனசு கஷ்டம் ஆகிடும்… நான் வரலைன்னா என்ன?… என்னோட மனசு எப்பவும் நீங்க நல்லா இருக்கனும்னு தான் நினைக்கும்… எதை பத்தியும் நினைக்காம ஃபங்ஷனை என்ஜாய் பண்ணுங்க” என்றாள் அவளை சமாதானம் செய்யும் நோக்குடன்.
பைரவியின் பதிலில் அருகில் இருந்து சர்வேஷின் முகம் வாடியது… அவளது நிலமை புரிகிறது ஆனால் பாடாய் படும் இந்த காதல் கொண்ட மனதுதான் அவளின் வருகையை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறதே அதை என்ன செய்வது… கொழுந்தனின் முகவாட்டத்தை கவனித்த ரேகா,
“பைரவி நீங்க எதுக்கும் அம்மாக்கிட்ட ஒரு முறை போனை கொடுங்களேன் நான் பேசுறேன்… என்ன திட்டினாலும் பரவாயில்லை நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேனே?” ரேகா கேட்கவும் மறுக்க முடியாமல் அன்னையை தேடி சென்றவள் “அம்மா ரேகா லைன்ல இருக்காங்க” என கொடுத்தாள்.
மகளை கேள்வியாய் பார்த்தவர் “அதான் மா சர்வே…” என்று சொல்ல வந்தவள் அதை பாதியில் விட்டு “விஷ்வநாதன் அங்கிளோட மருமக” என்றாள் அன்னைக்கு புரியும் விதத்தில்.
பைரவி உச்சரித்த வார்த்தைகள் சர்வேஷின் முகத்தில் இளநகையை பூக்குவித்திருந்தது.
பைரவியிடம் மொபைலை வாங்கிய துளசி “ஹலோ சொல்லும்மா?” என்றார் சாதரணமாகவே
“அம்மா நான் ரேகா”
“அஹ்… தெரியுதும்மா… சொல்லுமா… என்ன விஷயம்?…” விஷ்வநாதனின் மேல் கொண்ட கோவத்தை ரேகாவிடம் காட்ட முடியவில்லை அதுவும் வயிற்றில் பிள்ளையுடன் இருப்பவளிடம் பகையை பாராட்டவும் முடியாமல் எப்போதும் போலவே அவளிடம் பேசினார் துளசி.
“அம்மா வர்ற வெள்ளிக்கிழமை எனக்கு கோவில்ல வைச்சி பூ முடிக்கிறாங்க, அதுதான் பைரவியும் உங்களையும் அழைக்கலாம்னு போன் பண்ணேன்… நீங்க வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் மா” என்றாள் சந்தோஷமான குரலில்
அவருக்கு அங்கு செல்வதில் விருப்பமில்லை என்பதால் “ரொம்ப நல்ல விஷயம் மா… சந்தோஷமா பண்ணுங்க… இப்போ வர்ற கூடிய சூழ்நிலையில் இல்ல” பட்டும் படாமலும் துளசி பதிலை கொடுத்தார்.
“அப்படி சொல்லிடாதிங்கம்மா நான் இப்போ இவ்வளவு சந்தோஷமா இந்த நிகழ்ச்சியில கலந்துக்குறேன்னா அதுக்கு முக்கியமான காரணம் பைரவி தான்… எனக்கு ஒரு நல்லது நடக்கும் போது அவங்க என் கூட இருக்கனும்னு ஆசைப்படுறேன்… கட்டாயம் நீங்களும் பைரவியும் வரனும்மா…” அன்புடன் அழைக்கும் ரேகாவின் மனதை காயப்படுத்த விருப்பமில்லை இருந்தும் அங்கு செல்ல விருப்பம் இல்லாதவர்
“தப்பா எடுத்துக்காதம்மா… வரேன்னு பொய்ய வாக்குறுதி கொடுத்து உன்னை ஏமாத்த விருப்பல… உங்க மாமானர் பண்ணி வைச்சிருக்க வேளைக்கு, அந்த ஊருக்கு வர கூட புடிக்கல.. உனக்கு நல்லபடியா ஃபங்கஷன் நடக்கட்டும்… எங்களோட ப்ளஸிங்ஸ் எப்பவும் உனக்கு இருக்கும்” என்றார் துளசி நயம்படவே.
அதை ஏற்றுக்கொள்ளாதவள் “அம்மா…. இதெல்லாம் நீங்க நேர்ல வந்து சொல்லுங்க… நீங்க கண்டிப்பா வரனும்… நீங்க வந்து என்னை வாழ்த்தனும்… உங்களையும் பைரவியும் நான் எதிர்ப்பார்த்துக்கிட்டே இருப்பேன்” என்றவள் அவர் மறுத்து பேசுவதற்கு முன்பே அலைபேசியை அனைத்து விட பைரவியை முறைத்தபடி துளசி அறைக்குள் சென்றுவிட்டார்.
“தம்பி பைரவியும் அவங்க அம்மாவும் வருவாங்களான்னே தெரியல அதுக்குள்ள இவ்வளவு சந்தோஷப்படுறிங்க?”
“அவ வரலைன்லும் பிரச்சனை இல்ல அண்ணி… அவ குரலை கேட்டதே போதும்… என்னைக்கு இருந்தாலும் அவ தான் இந்த வீட்டுக்கு சின்ன மருமக… இத்தனை நாள் அவ எப்படி இருக்காளோ? என்ன செய்றாளோன்னு. தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தேன்… இன்னைக்கு உங்க மூலமா அவ நல்லா இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டேன்… ரொம்ப தேங்கஸ் அண்ணி..” எ
ன கூறியவன் சந்தோஷத்தில் சாவியை விரலுக்குள் விட்டு சுற்றியபடி பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.