“துளா கொஞ்சம் அந்த பொண்ணுக்காக கன்சிடர் பண்லாம்ல?” கேள்வியாக துளசியின் முகம் நோக்கினார் விஜயேந்திரன்.
“என் பொண்ணுக்காக யாரும் யோசிக்கலையேங்க அப்புறம் … நான் மட்டும் ஏன் எல்லாருக்காகவும் யோசிக்கனும்…” ஆற்றமையுடன் கூறிய துளசி “என்கிட்ட பேசி முடியலைன்னு உங்களை தூது விட்டு இருக்காளா உங்க பொண்ணு?” என்றார் கோபமாக
தலையை இடவலமாக அசைத்து பெருமூச்சை வெளியேற்றியவர் “நானாதான் உன்கிட்ட வந்து கேட்டேன் துளா… பையூ எதுவும் சொல்லல… சரி இப்போ அனுப்ப மாட்டியா? இல்ல எப்பவுமே அனுப்ப மாட்டியா? அதையும் இப்போவே சொல்லிடு …” என்றார் ஒரு மாதிரியான குரலில்.
கணவரின் குரல் பேதத்தை உணர்ந்த துளசி அதில் அதிர்ந்தவராக கணவரின் முகம் பார்த்தார்.
“ஏங்க நீங்களும் அவளை மாதிரியே புரியாம பேசுறீங்க… நான் கோவப்படுறது மட்டுமே தான் உங்களுக்கு தெரியுதே தவிர எதுக்காக கோவப்படுறேன்னு தெரியல… சரி விடுங்க தப்பு என் மேலதான்… ஆனா நீங்க என்ன சொன்னாலும் இப்போதைக்கு அவள ஊருக்கு அனுப்ப மாட்டேன்னா மாட்டேன் தான்… இதுக்கு மேல என்கிட்ட வேற எதையும் எதிர்ப்பாக்காதிங்க” தீர்மனமாக உரைத்தவர் அறைக்குள் சென்றவிட்டார்.
தன் அறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு தாய் தந்தையரின் சம்பாஷணைகள் அரைகுறையாக காதில் விழுந்தது. அதில் துளசி கோவித்துக்கொண்டு சென்றது தெளிவாகவே கேட்க கலக்கமாக தந்தையிடம் வந்தவள்,
ம் என தலையசைத்தவர் “கேட்டதுதான் தாமதம் பொங்கிட்டு உள்ள போயிட்டா” ஆயசமாக கூறி அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தார் விஜயேந்திரன்.
“தெரியுது” என அவர் அருகில் அமர்ந்தாள் பைரவி.
“நீ எப்போ வந்த பையூமா”
“அம்மா கோவமா பேசிட்டு உள்ளே போகும் போதே வந்துட்டேன் பா”
“என்ன பண்றது… எதை சொன்னாலும் பந்தை என் பக்கமே வீசுறா… அந்த பொண்ணை பார்த்தும் பாவமா இருக்கு அதுக்குதான் கேட்டேன்” என்றார் மனத்தாங்களுடன்.
“எனக்கும் புரியுதுப்பா… ஆனா அவங்க கோபத்துல இருக்கும் போது ஏன் இதெல்லாம்.. அம்மாவை கொஞ்சம் ஃப்ரியா விடுங்கப்பா…. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகும்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றாள் தாயின் கோபத்தின் காரணத்தை அறிந்தவளாக
ம் என மகளின் தலையை வாஞ்சையாக வருடி “சரிடா நீ போய் தூங்கு… உன் அம்மாவை எதுவும் கேட்கல அவ போக்குலேயே போகலாம்…” என சமாதானம் கூறி மகளை அறைக்குள் அனுப்பி வைத்தவருக்கு மனது ஒரு நிலையில் இல்லை…
சாதரணமாகவே அந்த குடும்பத்தை வெறுப்பவளிடம் பைரவியின் காதல் கதையை கூறினால் என்ன ஆகுமோ! தன் மகளின் காதல் கை கூடுமா? கல்யாணம் வரை செல்லுமா? என்ற கலக்கம் ஒரு பக்கம் விஜயேந்திரனை வாட்ட அதே எண்ணத்துடன் தன்னுடைய அறைக்கு சென்றிருந்தாள் பைரவி.
…..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். யாருக்கும் நிற்காமல் நாட்கள் அதன் வேகத்திற்கு பயணித்திட, ரேகாவின் விசேஷ நாளும் வந்தது.
“அங்க சாதம் எல்லாம் ரெடியாகிடுச்சான்னு தெரியலை… உறவுக்காறங்க எல்லாம் வந்துட்டு இருக்காங்க இந்த சர்வேஷ் பையன் எங்க போனான்” இளைய மகனை பற்றி விக்னேஷிடம் விசாரித்துக்கொண்டிருந்தார் சாரதா.
“தெரியலை மா… இங்கதான் இருந்தான் திடீர்னு காணும்… ஏதாவது வேலையா போய் இருப்பான்… இப்போ வந்துடுவான்.. நான் என்ன பண்ணனும் அதை சொல்லுங்க” என்றான் விக்னேஷ்வரன்.
“நீ போய் பூ ,மாலை எல்லாம் வந்துடுச்சா பாருப்பா” என்றவர் தன் வேலைகளை கவனிக்க சென்றார்.
தன் வீட்டின் அருகில் இருந்த கோவிலிலேயே விசேஷத்திற்கான ஏற்பாடு செய்திருந்தார் சாரதா.
சொந்தம் என்று சிலரை அழைத்திருக்க, அதில் தாரணியின் தாய் தந்தையும் அடக்கம். ஆளாளுக்கு ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். வந்தவர்களை வரவேற்று அமர வைத்து கொண்டிருந்தான் விக்னேஷ்வரன்.
கோபக்கனலுடன் சிவப்பேறிய கண்களால் தன் முன்னால் வளைய வரும் மனைவியை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் விஷ்வநாதன்.
நேரடியாக சொல்லவில்லை என்றாலும் கூட தன் மருமகள் மூலமும் மகன் மூலமும் மனைவிக்கும் மருமகளுக்கும் புடவைகள் நகைகள் வாங்க பணத்தை கொடுத்திருக்க, அதையெல்லாம் உதாசீனம் செய்வது போல் கழுத்தில் மஞ்சள் கயிறுடனும், சாதரண காட்டன் புடவையிலும் இருந்தவரை காண காண விஷ்வநாதனுக்கு ஆத்திரமாய் வந்தது.
முத்துவுடன் வெளியே சென்றிருந்த சர்வேஷ்வரன் கோவிலுக்குள் வேகமாக நுழைந்து தாயின் அருகில் வந்தான்..
மகனை கண்டதும் “டேய் சர்வேசா எங்கடா போன? எவ்வளவு வேலை இருக்கு” பேசிக்கொண்டு இருக்கும் போதே அவரது கரங்களில் ஒரு கவரை திணித்தவன் “இதை பிரித்து பாரும்மா” என்றான்
“என்னடா இது?” என்று கேள்வியாக மகனை பார்த்தார் சாரதா. நடப்பவற்றை எல்லாம் விஷ்வநாதனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
“நீயே பாரும்மா” என்றான் சர்வேஷ் ஆர்வத்துடன்
“என்ன சர்வேஷா இது விளையாட்டு…. வேலை இருக்கு டா….நேரம் வேற ஆகுது…” என்றுக் கூறிக்கொண்டே கரங்களில் இருந்த கவரை பிரித்து பார்த்தவர் கண்கள் கலங்கியது. “எனக்கு எதுக்குடா” என்றார் தழுதழுப்பாக
“அம்மா எனக்காக போடும்மா” என்றான் சர்வேஷ் கெஞ்சலாக
வீட்டில் சாதரணமாக இருப்பவர் விசேஷத்திற்காவது நகைகளை அணிந்து வருவார் என சர்வேஷ் நினைக்க, அவன் நினைப்பை பெய்யாக்கி உன்னை காட்டிலும் வைராக்கியத்தில் நான் கெட்டி என்று மெய்ப்பிப்பது போல எந்த நகையும் அணியாமல் எளிமையாக வந்தவரை காண முடியாமல் காலையிலேயே நண்பனுடன் நகை கடைக்கு சென்றான் சர்வேஷ்.
அவருக்கு கம்மல், வளையல், கழுத்துக்கு சங்கிலி என்று தன்னால் முடிந்ததை வாங்கியவன், போட சொல்லி அன்னையிடம் கொடுத்தான்.
அவருக்கும் மறுக்க தோன்றவில்லை
மகன் கொடுத்தாயிற்றே சந்தோஷமாகவே அணிந்துக் கொண்டவர் ஒரு மிளிர்வுடனே வலம் வந்தார்.
‘புருஷன் வாங்கிக் கொடுத்ததை போட முடியவில்லை புள்ளை கொடுத்தும் முகத்துல சந்தோஷத்தை பாரு’ உள்ளுக்குள் ஒரு நண்டு குடைந்துக்கொண்டு இருக்க, வெளியே தன்னுடன் பேசியவர்களிடம் காதை கொடுத்துவிட்டு தேமேனென்று அமர்ந்திருந்தார் விஷ்வநாதன்.
ரேகாவும் தயாராக இருக்க சாரதாவிடம் வந்த ரேகாவின் அன்னை “அண்ணி ரேகாவை அழைச்சிட்டு வந்து மனையில் உட்கார வைச்சிடலாமா? நல்ல நேரம் வந்துடுச்சி” என்றார்.
அவர் கூறியதும் சாரதா கோவில் வாசலை தவிப்புடன் பார்த்தார். சாரதாவின் தவிப்பை பார்த்த சர்வேஷ் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டு
“அம்மா நடராஜன் தாத்தா வீட்டுல சொன்னா சொல் தவற மாட்டங்க கண்டிப்பா வருவாங்கம்மா… நீங்க அண்ணிக்கு செய்ய வேண்டியதை செய்யுங்க… நான் அவங்க வந்தவுடனே அழைச்சிட்டு வந்துடுறேன்” என கூறிவிட்டு கோவில் முகப்பு வாசலிற்கு சென்றான்.
அன்று சாரதாவும் விக்னேஷூம் சென்று அழைக்க , நடராஜனும் தாத்தாவும், சுப்ரஜா பாட்டியும் இன்முகமாகவே அவர்களிடம் பேசினர்.
கமலமும் சசீதரனும் கூட அவர்களை மதித்து உபசரித்து தான் பேசினர். விக்னேஷ் தன் தவறை உணர்ந்து மனமார கேட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்கள் விஷேஷத்திற்கு வருவதற்கு மட்டும் தயக்கம் காட்டினர். சசீதரன் நேரிடைகயாகவே அதை சொல்லியும் இருந்தார்.
“நீங்க கூப்பிடுறிங்கமா, ஆனா உங்க கணவர் நாங்க வருவதை விரும்ப மாட்டார். அதுவும் இல்லாமல் நல்ல விசேஷம் நடக்கும் இடத்தில் வீணா மன உளைச்சல் தான் வரும்… நீங்க நல்லபடியா விழாவை நடத்துங்க எங்க ஆசிர்வாதம் எப்போவும் உங்க மருமகளுக்கு உண்டு…” தாங்கள் வரமுடியாத காரணத்தை விளக்கமாகவே கூறிட
” மறுத்துடாதிங்க தம்பி… நீங்க என் கூட பிறந்த பொறப்பா நினைச்சிதான் இங்க வந்தேன்… நீங்க எல்லோரும் வந்து நிறைஞ்ச மனசோட வாழ்த்தனும்… இது என்னோட ஆசை இத்தனை வருஷமா பேச்சு வார்த்தை இல்லை இப்போவாவது நாம ஒன்னா ஆகனும்னு நினைச்சிதான் வந்தேன்… அவர் நிச்சயம் எதுவும் சொல்ல மாட்டாரு…. அதுக்கு நான் உறுதி அளிக்கிறேன்…” என்றவர் சுப்ராஜவின் கரங்களை பற்றிக் கொண்டு “நீங்களும் வரனும்மா உங்க பொண்ணு கேக்குறான்னு நினைச்சிக்கோங்க உங்கள நிச்சயம் எதிர்ப்பார்ப்பேன்… அப்போதான் நீங்க எங்கள மன்னிச்சிதா அர்த்தம்” உணர்ச்சிப் பெருக்குடன் பேசியவரை
வருத்த வைக்க மனமின்றி தாங்கள் வருவதாக கூறி வழியனுப்பி வைத்தார்கள் நடராஜன் குடும்பத்தினர்.
அதை நினைத்த சர்வேஷ்வரன் நிச்சயம் அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் வாசலில் காத்திருந்தான்.
“சரி அண்ணி, ரேகாவை அழைச்சிட்டு வரச்சொல்லுங்க என்றவர், பெரியவர்களை நலுங்கு வைக்க அழைத்தார். ஐந்து வகையான சாதம், வளையல், பூ, தாம்பூலம், மாலை என அனைத்தும் தயாராக இருக்க பெரியவர்கள் ஒவ்வொருவராய் நலங்கு வைத்துக்கொண்டு இருந்தனர்.
அதே நேரம் கோவில் வாசலின் முன் நடராஜன் வீட்டு கார் வந்து நின்றது. அதற்குள் இருந்து முதலில் நடராஜனும் சசீதரனும் இறங்க பின்பக்கம் இருந்து கமலமும் தாரணியும் குழந்தை ஆதியுடன் இறங்கி வந்தனர்.
அவர்களை கண்டதும் விரிந்த புன்னகையுடன் அவர்களை நோக்கி சென்ற சர்வேஷ்வரன் “வாங்க தாத்தா…. வாங்க மாமா… வாங்க அத்தை… வா வா தாரணி…” என்று அனைவரையும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் வரவேற்றவனின் கண்கள் மற்றொருவரையும் தேடி அலைந்தது.
அவர்களும் இன்முகமாகவே கோவிலுக்குள் நுழைந்திட மெல்ல தாரணியின் அருகில் வந்தவன் தாரணி, பாட்டி எங்க?… அவங்க வரலையா?? என்றான் ஏமற்றத்துடன்
இல்லண்ணா பாட்டி வரலை அவங்க எப்போவுமே வெளி விசேஷத்துக்கு வரமாட்டங்களே உனக்கு தெரியாதா?” என்றவள் தன் குடும்பத்துடன் இணைந்து நடக்க ம் என பெருமூச்சு ஒன்றை விட்டவன் “சரி மச்சான் எங்க?” என்றான் அடுத்த கேள்வியாக
“ஏன் உங்க மாமன் மச்சன் ஃபைட் இன்னும் முடியலையா? என்னை ரெஃப்ரி வேலை பாக்க வைச்சிடாதிங்க ஏற்கனவே நான் ரொம்ப டையர்டா இருக்கேன்” கிண்டலாக கூறியவள் அவன் முறைப்பதை கண்டதும்
“அவருக்கு வேலை இருக்காம் எந்த கேள்வியும் கேக்காம எங்கள அனுப்பினதே பெரிய விசயம் இதுல நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டு வாங்கி கட்டிக்கவா?” என்றவள் கமலத்தோடு சேர்ந்து கொண்டு நடக்க
அவர்களை சபைக்கு அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்த சர்வேஷ்வரன் அன்னையை அழைக்க சென்றான்.
அங்கு இருப்பவர்கள் எல்லாருமே நடராஜன் குடும்பத்திற்கும் சொந்தமென்பதால் “வாங்க வாங்க” என மரியாதை நிமித்தமாக அழைத்தார்கள். சிலர் ஆச்சர்யப்பட்டனர். சிலர் வலிய வந்து பேசினார்… சிலர் தங்களுக்குள்ளாகவே இவர்கள் சமரசம் ஆகிவிட்டனரோ என பேசிக்கொண்டார்கள்… அவர்கள் வந்தது தெரிந்ததும், விஷ்வநாதனை தான் அனைவரும் பார்த்தனர். அவர் அங்கிருப்பதற்கான அறிகுறியே இல்லை
ஓட்டமும் நடையுமாய் புன்னகையுடன் நடராஜன் குடும்பத்தினர் அருகில் வந்தார் சாரதா. “வாங்கப்பா வாங்க தம்பி வா கமலா வா தாரணி வரவேற்ப்பாக ஒரு முறை அழைத்தவர் எங்க அம்மா வரலைப்பா? நான் அவ்வளவு தூரம் சொல்லிட்டு வந்தேனே!” என்றார் ஆற்றமையுடன்.
“தப்பா எடுத்துக்காத மா, சுப்பு எந்த விசேஷத்துக்கும் வரதில்லை… அதான் நாங்க வந்துட்டோமே… இப்போ சந்தோஷம் தானே… நீ நடக்க வேண்டியதை பாரும்மா” என்றார் புன்னகையுடனே.
“சரிங்கப்பா” அமோதிப்பாக தலை அசைத்தவர் “வா கமலா வந்து நலங்கு வை… தாரணி என்ன உட்காந்துட்டு இருக்க, உன் அண்ணன் பொண்டாட்டிக்கு நாத்தனாரா முறைக்கு நீதானே முன்னாடி செய்யனும்… போ போய் செய்… அப்பா நீங்களும் வந்து வாழ்த்துங்க.. சசீ தம்பி நீங்க கமலாவோட நின்னு வாழ்த்துங்க” என்றார் மகிழ்ச்சியாக.
அனைவரும் அவர் கூறியது போலவே நலங்கு வைத்து வாழ்த்தி வளையலிட்டு சாதம் ஊட்டினர்.
“என்ன பெரியம்மா பெரியப்பாவை ஆளே காணும்… நாங்க எல்லாம் வர்றதை பார்த்து பின்னங்கால் பிடறியில் அடிக்க பின்னாடி எகிறி குத்திச்சி ஓடிட்டாரா?” என சாரதாவை வம்பு இழுத்தாள் தாரணி
“அடியே உன்னை…” என அவள் காதை லேசாக பிடித்து திருகியவர் “உனக்கு ரொம்ப ஏத்தம் டி… அந்த மனுசன் காதுல விழுந்துச்சி கால்ல சலங்கையை கட்டாமலே சதிராடுவாறு… நீ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நல்ல நாள் அதுவுமா எதுக்கு வம்பை இழுத்து வைக்குற” என்றார் ரகசிய குரலில்.
“நீ யாருக்கு பயந்து இப்படி ரகசியமா பேசுற பெரியம்மா?” நக்கலாக சிரித்தவள்… “நீ பார்த்து பயப்புடுற டெரர் பீஸ் இங்க இல்ல… நான் நல்லா செக் பண்ணிட்டேன்… பார்ட்டி வேற எங்கேயோ பதுங்கி இருக்கு… நாங்க போனதும் வந்துடும்” அழகு காட்டிய தாரணி தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள்.
“பச் சரி விடு… நல்லதை எல்லாம் பார்க்க உங்க பெரியப்பாவுக்கு கொடுத்து வைக்கல… அவர் எப்படியோ போகட்டும் நீ அங்க நாத்தனார நின்னு வந்தவங்கள கவனி… என்ன புரியுதா… எல்லார் வாயும் பார்த்துக்கிட்டு நிக்காத” அவள் கன்னத்தில் குத்தி அனுப்பியவர் ‘இந்த மனுசனுக்கு புத்தியே இல்லை… வந்தவங்களா வாங்கன்னு ஒரு வார்த்தை கூப்பிட்டா என்ன மகுடம் இறங்கிடுமோ….’ கடுகடுப்புடன் நினைத்தவர் ரேகாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டார்.
“அண்ணி அவ்வளவு தான் போதும் ரேகாவை எழுப்பிடுவோமா?” ஒரு பெரிய பெண்மணி கேட்கும் சமயம் வாசலில் வந்து நின்ற இருவரை பார்த்த சர்வேஷ்வரனுக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது.