கோவில் வாசலில் வந்து நின்ற இருவரையும் பார்த்த சர்வேஷ்வரனுக்கு ஆச்சரியம் என்றால் அதை கண்ட நாடராஜன் தாத்தாவிற்கு கண்கள் கலங்கியது…
கடந்த முப்பத்தைந்து வருடங்களாக இதுவரையிலும் எந்த விழாக்களிலும், கோவில் விசேஷங்களிலும் கலந்துக் கொள்ளாது இருந்த தன் மனைவி சுப்ரஜாவும் தன்னை ஒரு எதிரியாய் பாவித்துக் கொண்டு தன் குடும்பத்தை கண்டாலே ஒதுங்கி செல்லும் விஷ்வநாதனும் கோவில் வாசலில் ஒன்றாக வந்து நின்றதை பார்த்தவருக்கு ஒரு வேளை தான் நினைத்தது பிரம்மையோ என்று கண்களை கசக்கிக்கொண்டு அவ்விடம் பார்த்தார்.
பொய்யில்லை மாயதோற்றமுமில்லை அனைத்தும் உண்மையே… அனைவருக்குமே இது ஆனந்த அதிர்ச்சி தான்… ஒருவராலும் நம்ப முடியவில்லை சசீதரனுக்கு உணர்ச்சி பெருக்கில் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டது. கமலத்திற்கும் தாரணிக்கும் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, சுப்ராஜாவுடன் தன் கணவரை பார்த்த சாரதா வியப்பின் உச்சியில் இருந்தார்.
யாரையும் எதிர்க்கெள்ள முடியாது தயக்கமாக வெளியே நின்றிருந்த சுப்ராஜாவை “உள்ளே போலாம் வாங்க அத்தை” என கையை பிடித்து கோவிலுனுள் அழைத்து வந்தார் விஷ்வநாதன்.
சிலைபோல் அசையாமல் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த மனைவியை பார்த்த விஷ்வநாதன், “சாரதா… என்ன பார்த்துக்கிட்டே இருக்க?… அத்தை வந்திருக்காங்க அங்கயே நிக்குற வா… வந்து கூட்டிட்டு போய் மருமகளுக்கு நலங்கு வைக்க சொல்லு…” மனைவியை அழைத்து அத்தையை அவருடன் அனுப்பி வைத்தார்.
சாராதவிற்கு தன் புருஷன் தானா இது, இல்லை அவர் உருவத்தில் வேறு யாராவது வந்துள்ளனரா!… என சந்தேகமாக இருந்தது… விக்னேஷ்வரனும் கூட தான் கண்ணால் கண்டதை நம்ப முடியாமல் திகைத்தபடி நின்றான்.
அங்கிருப்பவர்களுக்கு தான் இந்த காட்சிகள் எப்படி என்று புரியவில்லை.. அரைமணி நேரத்திற்கு முன்னர் வரையிலும் அங்கு தான் நின்றிருந்தார் விஷ்வநாதன். அப்படி இருக்க இது அனைத்தும் எப்படி சாத்தியம் என
நினைத்து ஆச்சரியத்தில் வாய்ப்பிளந்து பார்த்தனர்.
அவருக்கு சிறைச்சாலை பாதி பாடம் கற்றுக்கொடுத்தது எனில் சொந்த பந்தங்கள் சிலதை கற்றுக்கொடுத்திருந்தனர். அதில் பெரும் பங்கு வகித்தது தங்களது தாய் மாமான் குடும்பம் தான். என்னதான் தான் ஒதுக்கினாலும் அவர்களை அவமானப்படுத்துவது போல பேசினாலும் தனக்கு ஒரு துன்பம் என்று வருகையில் தோள் கொடுத்து தன் பிள்ளைகளுக்கு உதவியது அவர்கள் தானே…
இனி இந்த வரட்டு பிடிவாதமும் வெட்டி பந்தாவும் எதற்கு… இருக்கும் வரை நல்வனாக இருந்துவிட்டு போகலாமே… என்ற முடிவிற்கு வந்தவர் அவர்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்பை வேண்ட நினைத்தார். அதற்காகவே மனைவி ஏற்பாடு செய்த எல்லாவற்றையும் ஒரு பார்வையாளராக பார்த்துக்கொண்டு இருந்தார்.
நடராஜன் தாத்தா குடும்பம் வரவும், அவரும் அனைவரையும் எதார்ப்பார்த்து தான் இருந்தார். ஆனால் தன் இளமை பருவத்தில் விட்ட வார்த்தையால் தன் அத்தை இந்த விசேஷத்திற்கும் வரவில்லை என்பது அவரது மனதை உறுத்த அவரை கையோடு அழைத்து வரவே சென்று விட்டார்.
கையில் வயர் கூடை செய்யும் பொருட்களுடன் அமர்ந்திருந்த சுப்ரஜா வாசலில் யாரோ நிற்பது போல் தெரியவும் தலையை உயர்த்தி யார் என பார்த்தார்.
வயோதிகத்தின் காரணமாய் கண்கள் சற்று மங்களாக தெரிய அணிந்திருந்த கண்ணாடியை சற்று உயர்த்தி பார்த்தவருக்கு மனது திக்கென்று இருந்தது.
அதிர்ச்சியையும் மீறி கலவரமாக அவரை பார்த்தார் சுப்ரஜா… விசேஷத்திற்கு என்று போன இடத்தில் என்ன பிரச்சினை வந்ததோ…. இல்லை ஏதாவது அடிதடி ஆகிவிட்டதோ என மனதில் எழுந்த பயத்துடன் அவரை பார்த்தார்.
“உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன் உள்ளே கூப்பிட மாட்டாங்களா அத்தை” என்றார் விஷ்வநாதன் கரகரப்பான குரலில்.
இதுநாள் வரை யாரிடமும் தன் இடம் விட்டு இறங்கி செல்லாத மனிதர் தன்னிடம் நா தழுதழுக்க பேசியதை அவரால் நம்பமுடியாமல் பார்த்தார். இருந்தும், சில நொடிகளில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட சுப்ரஜா “வாங்க தம்பி… வாங்க உள்ள வாங்க” இதயம் படபடக்க அவரை உள்ளே அழைத்தார்.
இவரை தானே இத்தனை நாள் இத்தனை வருஷம் ஒதுக்கி வைத்தும், தாகாத வார்த்தைகளால் திட்டி வாட்டி வதைத்தோம்… கண்களில் படவிடாமல் விரட்டி அடித்தோம்… என நினைக்கையில் தன்னையே வெறுத்தவர் “அத்தை என்னை மன்னிச்சிடுங்க” சட்டென அவரது காலடியில் மண்டியிட்டு தன் மன்னிப்பை வேண்டினார் விஷ்வநாதன்.
விஷ்வநாதன் செய்த செய்கையில் பதறிய சுப்ரஜா என்ன செய்வது என அறியாது “அய்யோ தம்பி என்னது இது… என்ன செய்றிங்க தம்பி… தம்பி எந்திரிங்க… கடவுளே நான் என்ன செய்வேன் இந்நேரம் பார்த்து அவரும் இங்க இல்லையே” பதற்றத்துடன் தவித்தவர் “தம்பி எந்திரிப்பா” அவரை பிடித்து எழுப்பினார்.
“அத்த நான் பண்ண தப்புக்கு எல்லாம் மன்னிப்புன்னு ஒரு வார்த்தையை கேட்டு எல்லாத்தையும் மறக்க வைக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்… ஆனா இதை தவிர்த்து என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியல… நான் உங்களை ரொம்ப காயப்படுத்தி இருக்கேன்… அதுக்கெல்லாம் எதை செய்து பரிகாரம் தேடப்போறேன்னு தெரியல…
எனக்கே என்னை நினைச்சா அவமனமா இருக்கு அத்தை… என் மாமாவை என்னிடம் இருந்து பிரிச்சிட்டிங்கன்னு உங்க மேல வெறுப்பை வளரத்துக்கிட்டேன்… அதுவே நாளடைவில் பெரிய வன்மமா மாறி மனசுல பதிஞ்சிடுச்சி… உங்களை ஊருக்குள்ள தலை நிமிரவே விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தவன் நான்.
ஆனா இன்னைக்கு பைரவி செய்த உதவியாலதான் உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கேன்…. என்னை ஒரு மனுஷனா மாத்தினது பைரவியோட நல்ல குணமும் உங்களோட பொறுமையும் தான்” என தன்னை கையெடுத்து கும்பிடும் அவரை காண காண சுப்ரஜா பாட்டிக்கு கண்களில் நீர் அருவியாக கொட்டியது.
தங்களை புரிந்துக்கொள்ள வேண்டும் என இத்தனை நாள் அந்த தெய்வங்களிடம் எல்லாம் முறையிட்டவர் ஆயிற்றே இதோ கண் முன்னால் அந்த காட்சி அரங்கேறவும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றவருக்கு தன்னிடம் மன்னிப்பை வேண்டி நிற்கும் விஷ்வநாதன், திருமணமான புதிதில் இங்கு வரும் போது பார்த்த சிறு பிள்ளையாகவே கண்களுக்கு காட்சியளிக்க
“இல்லப்பா… நீ தப்பு பண்ணதாவே நாங்க நினைக்கலப்பா.. நீ எவ்வளவு வளர்ந்தாலும் அவருக்கும் எனக்கும் நீ இன்னும் சின்ன புள்ள தானே… அப்படித்தான் நாங்க நினைச்சோம்… நடந்ததை எல்லாம் நீயும் மறந்துடுப்பா… மன்னிப்பு எல்லாம் எதுக்குய்யா… உங்க மாமா கிட்ட நீங்க நல்ல பேசினாலே போதும் யா என வாஞ்சையாக விஷ்வநாதனை பார்த்தார் சுப்ரஜா பாட்டி.
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அத்த…” அவர் கரங்களை எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டவருக்கு இரு கண்களும் கலங்கி நீர் பளப்பளக்க அதை துடைத்துக்கொண்டவர்… “நீங்க என்னை உண்மையாவே உங்க மனசார மன்னிச்சிட்டாத இருந்தா இப்போவே என் கூட கோவிலுக்கு வாங்க” என்றார் விடாப்பிடியாக தான் செய்த தவறை தானே நேர் செய்ய நினைத்தார்.
தயக்கமாக விஷ்வநாதனை பார்த்தார் சாரதா. அதில் வரவேண்டுமே என்ற தவிப்பை பார்த்தார். அதற்கு மேலும் அவரை வருந்த வைக்காமல் அவருடன் கோவிலுக்கு வந்திருந்தவர், இதோ இப்போது ரேகாவின் கன்னத்தில் சந்தனத்தை பூசிவிட்டு அட்சதை தூவி அவளை ஆசிர்வதித்தார். எல்லோரும் வந்திருந்தனர். வரவே மாட்டார் என நினைத்த சுப்ரஜா பாட்டி கூட விஷ்வநாதனின் முயற்சியால் இங்கு வந்துவிட்டார். ஆனால் ரேகாவின் மனதில் பைரவி வரவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாகவே இருந்தது.
அதை தாரணியிடமும் வாய்விட்டு சொல்லி இருக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் பைரவியே வீடியோ காலில் அழைத்து விட்டாள்.
“ஹலோ ரேகா உங்க முகத்தை காட்டுங்க… செம… தாரணி அண்ணி என் பங்குக்கு இன்னும் ஒரு கை சந்தனத்தை எடுத்து அவங்களுக்கு கன்னத்துல பூசி விடுங்க” என்றாள் போனில் இருந்தபடியே,
“இதோ” என தாரணியும் அதே போல் பூசி விட்டு பொட்டை வைத்து அட்சதையும் தூவி சாதத்தை ஊட்டிட, “இங்க பாருங்க ரேகா… நான் வரலனாலும் என் பங்குக்கு ஆளை வைச்சி செஞ்சிட்டேன்… இப்போ உங்களையும் பாத்துட்டேன்… சீக்கிரமே ஜூனியரோட உங்களை எதிர்ப்பார்க்கிறேன் ஓகேவா.. நல்லா ஹெல்தியா சாப்பிடுங்க உள்ள இருக்க குட்டியை பத்திரமா பாத்துக்கோங்க” சில நிமிடங்கள் பேசியவள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னவனையும் கண்களில் நிரப்பிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள்.
இது எல்லாம் அவளுக்கு போதவில்லை, பைரவியின் கண்கள் கலங்கியது…. இப்போதே அவனை காண வேண்டும் என அவளது கண்களும் மனது ஏக்கம் கொண்டது… அவன் பிம்பத்தை வருடிட கைகள் கெஞ்சியது…கொஞ்சம் இளைத்தார் போல காணப்பட்டானோ, அப்போது இருந்த பூரிப்போ, மலர்ச்சியோ இப்போது கண்களில் சுத்தமாக இல்லையே… பெயருக்கு சிரிக்கிறானோ என்றெல்லாம் நினைத்து வருத்தப்பட்டாள். சீக்கிரமே எல்லாம் சரியாகனும் மானசீகமாக கடவுளுக்கு மனு ஒன்றை அனுப்பியவள்,
‘நீ எப்போ வருவ சர்வேஷ் என்னை எப்போ உன்னோட அழைச்சிட்டு போவ இல்ல இப்படியே நம்ம காதல் சொல்லாமலே மறைந்து போயிடுமா?’ அவனோடு மனதில் பேசியவள், அவன் நினைவுகளோடு மெத்தையில் சரிந்தாள்.