பலவர்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்தததில் அந்த திருமண மண்டபமே தேவலோகமாய் மாறி காட்சி அளித்தது. அதற்கு ஏற்றாற் போலவே ஆங்காங்கே அழகு தேவதைகளின் மறு பதிப்புகளும் உலா வர இளம் காளையர்களோ கந்தர்வர்களாக உறுமாறிக் கொண்டிருந்தனர்.
வாசலிலேயே மணமகன் சர்வேஷ்வரன் மணமகள் பைரவி IAS என்ற பொன் எழுத்துக்களை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காதல் பறவைகளின் திருமண செய்தியை அறிவித்து கொண்டிருந்தது அந்த பெயர் பலகை..
ஆனால் அதற்கு நேற்மாறாக மண்டபத்தில் உள்ளே இருந்த அறையில் விஷ்வநாதன் சாரதாவிடம் கோபமாக பேசிக்கொண்டு இருந்தார்.
“உனக்கு எத்தனை முறை சொல்றது சாரதா… நான் சொல்றதை கேட்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருக்கிங்களா? நீயும் உன் புள்ளையும்?” கொதித்த விஷ்வநாதன் அவரை தீப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் .
“என்னங்க நீங்க… வேலை செய்றவளை இழுத்துக்கிட்டு வந்து என்னென்னம்மோ பேசிக்கிட்டு இருக்கிங்க… நீங்க என்ன சொன்னிங்க…, நானும் அவனும் என்ன கேக்கல?” என்றார் புரியாது.
“காலை பாருடி எப்படி வீக்கமா இருக்கு… கொஞ்சம் அப்படி உள்ள இருன்னு உட்கார வைச்சிட்டு போன உடனே ஆளை காணும்… எங்கேன்னு பார்த்தா அங்க இங்கன்னு பம்பரமா சுத்திக்கிட்டு இருக்க” என்றவர் மனைவியை முறைக்க
“அட என்னங்க நீங்க… இது என்ன அடுத்த வீட்டு கல்யாணமா நான் அப்படி ஓய்யரமா உட்கார்ந்து சாவகாசமா வேடிக்கை பார்க்க… இது நம்ம புள்ளை கல்யாணம்ங்க வேலை இருக்கத்தான் செய்யும்… கால் வலி கை வலின்னு பாத்தா ஆகுமா? நைட்டு தைலத்தை பூசி ரெண்டு மாத்திரையை போட்டா சரியா போகுது…” என்றவர் வெளியே செல்ல முயல,
அவரின் கை பிடித்து வலுக்கட்டாயமாக உட்கார வைத்தவர் கையோடு கொண்டு வந்த தைலத்தை வீக்கமான இடத்தில் தடவி, அவரது கால் வலி மாத்திரையையும் கொடுத்து “இதை போடு சாரதா” என்றார் கண்டிப்பு நிறைந்த குரலில்.
அதில் கூச்சத்துடன் நெளிந்தவர் “அய்யோ நீங்க ஏங்க என் காலை எல்லாம் பிடிச்சிக்கிட்டு… கொடுங்க நானே பூசிக்கிறேன்” விஷ்வநாதன் கரங்களில் இருந்து தன் காலை உறுவ முற்பட்டார் சாரதா.
“ஏண்டி உன் காலை உன் மகன் மட்டும் தான் பிடிக்கனுமோ?… நாங்க எல்லாம் பிடிச்சா ஒத்துக்க மாட்டியோ?… சிறு மிரட்டலுடன் தைலத்தை தேய்த்தவர் ஒழுங்க இந்த மாத்திரையை போடு” என்றார் அதட்டலாக
மனம் நிறைந்த புன்னகையுடன் கணவரை பார்த்தார் சாரதா “நீங்க ரொம்ப மாறிட்டிங்க” என்றபடி அவர் கூறியதை தட்டாமல் செய்தவர், “அவன் உங்க புள்ளைங்க ஏதோ சண்டைக்காரன பாக்குறா மாதிரி பாக்குறிங்க?…. எல்லார்கிட்டயும் சமரசமா போற நீங்க அவன் கிட்ட மட்டும் ஏன் வரிஞ்சி கட்டிக்கிட்டு இருக்கிங்க?… முகம் கொடுத்து பேச மாட்டுறிங்க?… இன்னும் அவன் மேல கோவமா தான் இருக்கிங்களா?” தகப்பனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியை நினைத்து கண்கள் கலங்கியது அந்த தாய் உள்ளம்.
“ஏய் என்னம்மா இதுக்கு போய் கண்ணு கலங்குற? அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையன்டி அவன்… உன்னை எப்படி பாத்துக்கனும்னு பக்கம் பக்கமா எனக்கு பாடம் எடுத்தவன்… அவன் மேல எனக்கு என்னடி கோவம் இருக்க போகுது… ரொம்ப பெருமையா தான் இருக்கு, அவனை என் புள்ளன்னு சொல்லிக்க… இதெல்லாம் அப்படித்தான் அது ஒரு மாதிரி சந்தோஷம் டி… அது உனக்கு புரியாது…. புள்ளங்க வளர்றதை தூர பாத்தே ரசிக்கிறேன்டி கொஞ்சிக்கிட்டே இருந்தா தான் அவங்களை புடிக்கும்னு அர்த்தம் இல்லம்மா…. தூர இருந்து ரசிச்சாலும் அவங்கள புடிக்கும்… எப்பவும் என்னை முறைச்சிக்கிட்டு நிமிர்வா போற நம்ம புள்ளைய, எனக்கு ரொம்ப புடிக்கும்டி… என் கைய எதிர்ப்பாக்காம என்னை எதிர்த்தே வளர்ந்தவன்… அவன் கம்பீரம் ஆளுமை எல்லாமே ஒரு தனி அழகுடி இப்போ கூட பாரு மனசுக்கு புடிச்ச பொண்ண போராடி காத்திருந்து கல்யாணம் பண்றான்” என மகனை வாயார புகழ்ந்து, மனதார பாரட்டினார்…
விஷ்வநாதன் பேச பேச அவரை ஆச்சர்யமாக பார்த்த சாரதா, “உள்ளுக்குள்ள அவன் மேல அவ்வளவு அன்பையும் ஆசையும் வைச்சிக்கிட்டு வெளியே விரைப்பா இருக்கிங்களே… இது நல்லா இருக்கா?” வெடுக்கென முகத்தை திருப்பிக்கொள்ள,
“என்னடி இது… அவன் புடிக்கலன்னு நெனச்சிக்கிட்டு முன்னாடி முகத்தை திருப்பின… இப்போ புடிக்கும்னு சொன்னாலும் முகம் திருப்புற… நான் என்ன தான்டி செய்யனும்” விஷ்வநாதன் வெடிச்சிரிப்பு சிரிக்க,
“நீங்க ரெண்டு பேரும் எப்போ என் கண்ணு முன்னாடி சிரிச்சி பேசுவிங்கன்னு எனக்கும் ஆசை இருக்காதா…” ஏக்கத்துடன் கூறியவர் “என்னமோ போங்க எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு உங்களோட பேசினாலே அது பாட்டுக்கு நேரம் ஓடுது… போங்க போயி வேற வேலை இருந்தா பாருங்க” கணவரை விரட்டியவர் தானும் கல்யாண வேலையை பார்க்க சென்றார்.
அரங்கமே ஆரவாரத்துடன் விழாக்கோலம் பூண்டிருக்க, தான் கொண்ட காதலில் ஜெயித்த கர்வத்தோடு அலையலையாய் நெற்றியில் விழுந்த கேசத்தை தன் விரல் கொண்டு ஒதுக்கியவன் வெண்பட்டு வேட்டி சட்டையில் ஆணழகனாய் கம்பீரத்துடன் மேடையில் அமர்ந்திருந்தான் சர்வேஷ்வரன்.
பைரவியின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவுடன் பைரவியின் படிப்பு முடிந்த பின் தான் தங்களது திருமணம் என சர்வேஷ்வரன் உறுதியாக கூறியதும், அதை இரு வீட்டார்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர். பைரவிக்கும் அது சரியென்று பட தன் சம்மதத்தையும் தெரிவித்திருந்தாள்.
இந்த நான்கு ஆண்டுகளில் தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டை விரிவுப்படுத்தி ஐந்து மாடி கட்டிடமாக மாற்றியவன் இன்னும் வேறு சில ஊர்களில் அதன் கிளைகளையும் உருவாக்கிட தொடங்கி இருந்தான்.
பைரவியின் ஐ ஏ எஸ் கனவை நனவாக்க அவள் எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றியும் கண்டு விட . வீட்டார்கள் பேசிய படியே டிரைனிங் முடியவும் திருமணம் என கூறியதற்கு இணங்க இதோ இப்போது இந்த காதல் மனங்கள் ஒன்று சேரும் நேரமும் நெருங்கி விட்டது.
ஐய்யர் கூறிய மந்திரங்களை கர்ம சிரத்தையாக உச்சரித்துக் கொண்டு இருந்தாலும், மனமோ தன் இதயத்தை கொள்ளை கொண்டவளின் வருகையை காண வழி மீது விழி வைத்து காத்திருந்தது… நான்கு ஆண்டு காத்திருந்தவனுக்கு இந்த அரை நாழிகை காத்திருப்பு கூட அவஸ்த்தையை கொடுத்தது.
சர்வேஸ்வரனை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் கன்னியவளை அழைத்து வந்தனர். அழகிய மாம்பழ வண்ண காஞ்சி பட்டில் கரும் பச்சை வண்ண சரிகையிட்ட புடவை அவள் அழகை மேலும் எடுத்து காட்ட, வேல் விழியில் மையிட்டு இயற்கையாய் சிவந்த உதடுகளை மேலும் சிவக்க வைத்து மிதமான ஒப்பனையில் செதுக்கி வைத்த தங்க சிலையென அடிமேல் அடி வைத்து அன்னம் போல் நடை நடந்து அவன் அருகில் அமர்ந்த பைரவிக்கு,. தன்னவனை கண்டதும் கன்னங்கள் இரண்டும் செம்பருத்தி பூவாய் சிவந்துவிட்டது.
பார்வையை தழைத்து தன் வெட்கத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தவளின் வதனம் காண ஆசை கொண்டவனுக்கோ அது முடியாது போக யாரும் அறியாமல் மெல்ல அவள் புறம் நகர்ந்து அவளை உரசியபடி அமர்ந்தான். எப்போதும் அவனை சீண்டுபவளை மணமேடையில் வைத்து அவன் சீண்டிக்கொண்டு இருந்தான்.
தன் மீது ஒட்டி உரசிய அவன் ஸ்பரிசத்தில் விழிகள் விரிந்து வியப்பு மேலிட அதிர்ச்சியிலும் அவஸ்தையிலும் நெளிந்தபடி ரொம்ப தைரியம் வந்துடுச்சி ஓரக்கண்ணால் அவனை முறைப்பது போல் பார்த்த பைரவி “ஏங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“எது சும்மா இருக்கனுமா…. இனி உன் மாமா பர்ப்ஃபாமன்ஸ் மட்டும் பாரு” சத்தமின்றி அவள் காதில் ரகசியம் பேசி எவரும் அறியாமல் கண்ணடித்து காதல் மொழி பேசுபவனின் செய்கையில் அந்திவானமாய் சிவந்தவளுக்கு இருவரும் சென்ற பைக் பயணம் நினைவுக்கு வர, கள்ளப் புன்னகை ஒன்று உதட்டில் வந்து ஒட்டிக்கொள்ள கிண்டலாக அவனை பார்த்தாள்.
மெல்ல அவள் புறம் குனிந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் ரகசிய குரலில் “என்னடா இவனுக்கு தைரியம் வந்துடுச்சான்னு தானே பாக்குற? அப்போ உன்னை தொடாம ஒதுங்கியது எனக்காக இல்லை… உனக்காக… இனி எவன் பார்த்தா என்ன ஜில்லுமா?… நமக்குள்ள ஒரு இன்ஞ் கேப் கூட இருக்கக்கூடாது அதான் இந்த டச்சிங் டச்சிங்… என்ன ஓகே வா கலெக்டர் மேடம்… இனி பைக்ல கூட இப்படியே தான் போகனும்” என்றவனது கூற்றில் இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள் அவனின் காதல் தேவதை. .
“ஹலோ அண்ணா இது மணமேடைன்னு நினைச்சியா? இல்ல பார்க் பெஞ்சின்னு நினைச்சியா? உட்கார்ந்து சாவகாசமா கதை பேசிக்கிட்டு இருக்க…. இப்போ உங்களுக்கு இங்க கல்யாணம் நடக்கப்போகுது அது நியாபகம் இருக்கட்டும்…” கிண்டலும் கேலியுமாய் தாரணி அவர்களை கலாய்க்க வெட்கம் கலந்த முறைப்பை தாரணியின் புறம் செலுத்திய சர்வேஷ்வரன், கண்ணடித்து தன்னவளையும் வியப்பில் அழ்த்திக் கொண்டிருந்தான்.
அத்தனை எதிர்ப்பிலும் கலங்காமல் எதிர்த்து நின்று தன் தங்கையை கரம் பிடித்த சர்வேஷ்வரனை கர்வமாய் நோக்கிய அரவிந்த் “அவ அப்படித்தான் மாப்ள நேரம் காலம் தெரியாமா பேசுவா… நீங்க இந்த மொமெண்டை என்ஜாய் பண்ணுங்க…” மாப்பிள்ளைக்கு பக்கபலமாய் அவன் நிற்க இளையவர்களின் பேச்சில் பெரியவர்களும் சிரித்தபடி அந்த நேரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர். சசீ விஜி கமலம் துளசி மாப்பிள்ளையின் அருகில் இருக்க விஷ்வநாதன் சாரதா நடராஜன் சுப்ரஜா தம்பதியினர் பைரவியின் புறம் நின்றிருந்தனர். ரேகாவும் விக்னேஷூம் தாரணி அரவிந்த்துடன் நின்றிருந்நனர்
இதோ அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகிய தருணம் அய்யர் மஞ்சள் பூசிய பொன் தாலியை தர அதை வாங்கிக்கொண்ட சர்வேஷ்வரனோ பைரவியை தான் பார்த்தான்.
என்னதான் படித்து பெரிய பதவியிலும் அதிகார பலத்தில் இருந்தாலும் கல்யாணப் பெண்ணுக்கே உரிய படபடப்பு பைரவியிடத்திலும் இருக்கத்தான் செய்தது. அதை உணர்ந்தானோ என்னவோ “ஜில்லு என்னை பாரு” என்றவனது அழைப்பில்
மெல்ல தலை உயர்த்தி அவனை பார்க்க கண்களால் சம்மதம் கேட்டவனுக்கு சரி என்னும் விதத்தில் தலையை ஆட்டி தன் சம்மதத்தை கொடுக்க அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டபடியே மங்களமேளம் முழங்கிட நாதஸ்வர ஓசை இசை எழுப்ப பெரியோர்களின் ஆசியுடன் சபை நிறைந்தோரின் வாழ்த்துக்களுடன் அந்த பார்வதி பரமேஸ்வரனை போல பைரவியின் கழுத்தில் மூன்று முடிச்சிக்களையிட்டு தன்னுள் சரிபாதியாக ஆக்கிக்கொண்டான் இந்த சர்வேஷ்வரன்.