“நீங்க என்ன கேக்குறிங்கன்னு எனக்கு புரியல… எனக்கு எதுவும் தெரியாது…” வேலன் சொன்னதையே மறுபடியும் மறுபடியும் கூறிட சர்வேஷ் பொறுமை என்பதை முற்றிலுமாக தொலைத்து இருந்தான்.
“என்னடா திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ற… கேக்குற நான் உனக்கு கேனையன் மாதிரி தெரியறேனா?” சர்வேஷ் அவன் சட்டையை பிடித்து உலுக்கி கன்னத்தில் அறைந்து விட்டான்.
அதே சமயம் அறையினுள் நுழைந்த பைரவி அவர்களை கண்டு திடுக்கிட்டு சர்வேஷின் பிடியில் இருந்து வேலனை விலக்கி அவனை தள்ளி நிறுத்தினாள்.
சர்வேஷிற்கு ஒரு நிலைக்கு மேல் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை… அண்ணன் தந்தை என்பதையும் தாண்டி அண்ணியின் வாழ்க்கைக்கும், பிறக்காத குழந்தையின் எதிர்காலத்திற்கும் இவனால் மட்டுமே வழி கிடைக்கும் எனத் தெரிந்தும், வாயை திறக்காமல் சொன்னதையே சொல்லும் வேலனின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதே கோபத்துடன் பைரவியிடமிருந்து திமிறியவன்,
“பையூ விடு அவன் உண்மையை சொல்ற மாதிரி தெரியல… கொடுக்கறதை கொடுத்தா உண்மை வெளியே வரும் இவனை” சர்வேஷ் அவனை அடிக்க முன்னேறினான்.
“சார் சார் அவரை எதுவும் பண்ணிடாதிங்க சார்…. அவருக்கு எதுவும் தெரியாது சார்…” எங்கே கணவனை அடித்து விடுவார்களோ என் பயந்த வேலனின் மனைவி வள்ளி அவனை கையெடுத்து கும்பிட்டு கணவனுக்காக அழுதாள்..
சர்வேஷினை பிடித்திருந்த பைரவி “சர்வேஷ் கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்…” அவனை நிதானப்படுத்தியவள் வேலனை பார்த்தாள்.
அவன் முகத்தில் கலவரம் சூழ்ந்து கண்களில் பயத்தின் சாயல் வெளியே தெரிய மனைவியின் பின்னால் மிரண்டு போய் நின்றிருந்தான்.
மகளின் நிலை ஒன்றையே கருத்தில் கொண்டிருந்தவனுக்கு தான் யார் மீது இடித்தோம் எவர் எதிரில் வந்தார் எதுவும் கருத்தில் இல்லை… அதுவுமின்றி பணத்திற்கு அலைந்து கொண்டிருந்தவன் அலைபேசியில் பேசிக்கொண்டே அறைக்குள் வந்துவிட, பின்னால் வந்தது யார் என அறியவில்லை அப்படி தெரிந்திருந்தால் அடித்து பிடித்து அங்கிருந்து தப்பித்து இருப்பானே ஒழிய இப்படி மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நின்றிருக்க மாட்டான்… அதையே லட்சத்து ஒராவது முறையாக மனதில் எண்ணிக் கொண்டவனை கலைத்தது பைரவியின் குரல்.
“ஒரு நிமிஷம் இருங்கம்மா உங்க புருஷனை எதுவும் பண்ண மாட்டோம்…” வள்ளியிடம் உறுதியளித்த பைரவி அவளை விலக்கி விட்டு “இங்க பாருங்க வேலன், வீணா பொய் சொல்லி மாட்டிக்காதிங்க நீங்க சொல்றதுல ஒரு பார்சன்ட் கூட உண்மை இல்லன்னு நல்லாவே தெரியுது…”
“உங்க மேல தான் சந்தேகமா இருக்குன்னு போலீஸ்கிட்ட சொன்னா போதும், தூக்கி உள்ள வைச்சி விசாரிக்கற விதத்துல விசாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க” என்றதும் பயத்தில் அவனுக்கு வியர்த்து வழிந்தது.
தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை ஒற்றி எடுத்தவன் கலவரமாக அவளை பார்த்தான். இருந்தும் உண்மையை கூற துணிவு வரவில்லை…
“வேலன் நீங்க சொல்ற ஒரு உண்மையால எத்தனை பேரோட வாழ்க்கையை காப்பத்துறிங்க தெரியுமா? ப்ளீஸ் வேலன் உங்களுக்கு தெரிஞ்ச உண்மையை எல்லாம் சொல்லிடுங்க… செல்வபாண்டியன் இறப்பதற்கு முன்னாடி யார் யார் அவரை சந்திச்சாங்க… இல்ல யார்கிட்ட அவரு பேசினாருன்னு சொல்லுங்க… உங்களுக்கு தெரியாம இது நடக்க வாய்ப்பே இல்லை… அவரு முக்கியமா போற இடம் வர்ற இடம் எதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்… ஆனா ஏன் மறைக்கிறிங்க, யாரை காப்பாத்த மறைக்கிறிங்க, இதுக்கான பதிலை மட்டும் சொல்லிடுங்க போதும் உங்களை நாங்க பாத்துக்குறோம்” அவனிடம் நல்ல விதமாகவே எடுத்து கூறினாள்.
இதையெல்லாம் கேட்ட பிறகும் “இல்ல… இல்ல., எனக்கு எதுவும் தெரியாது… யாரை பத்தியும் தெரியாது… என்னை எதுவும் கேக்காதிங்க…” அவசர அவசரமாக அவள் கேள்விகளுக்கு மறுப்புடன் பதிலை கொடுத்தான் வேலன்.
அவனின் பதிலில் கடுப்பான பைரவி “சர்வேஷ் இது வேலைக்கு ஆகாது இனி நாம விசாரிக்க வேண்டாம்… அவனை கூட்டிட்டு வாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் அங்க அர்வி வைச்சி கேக்குற வழியில் கேட்ட எல்லா உண்மையும் வரும் ம் போலாம் வாங்க…” என்றதும்
“ஹேய் வாடா… பொய்யா சொல்ற பொய்யி வாய் இருந்தா தானே பொய்யின்னு ஒன்னு சொல்லுவ அதையே உடைக்கிறேன்” சர்வேஷ் அவன் சட்டையை பிடித்து இழுத்து செல்ல
“சார் சார் அவருக்கு எதுவும் தெரியாது அம்மா… அம்மா அவரை விட்டுடுட சொல்லுங்க அம்மா… யோவ் உனக்கு என்னய்யா தெரியும் அதையாவது சொல்லி தொலையேன்யா… அந்த அம்மா கையால் வாங்கி தின்னு இருக்கோம்… இந்த குழந்தையும் அந்தம்மா தானே படிக்க வைக்குது அந்த விஸ்வாசத்துக்காவது சொல்லுய்யா” வேலனின் மனைவி அழுதபடி தலையில் அடித்துக் கொண்டாள்.
அந்த சமயம் “வள்ளி” என அழைத்துக் கொண்டு கதவை திறந்து உள்ளே வந்தார் செல்வபாண்டியனின் மனைவி அமுதா.
அழுதுக்கொண்டு இருந்த வள்ளி அமுதாவை கண்டதும் “வாங்க வாங்க மா” அவரை உள்ளே அழைத்தவள் கலவரமாக அறையில் ஓரம் நின்றிருந்த சர்வேஷ் மற்றும் பைரவியை பார்த்தாள்.
அவளுக்கு எங்கே இது எல்லாம் அமுதாவிற்கு தெரிந்து விடுமோ தன்னையும் தன் கணவனையும் எங்கே தவறாக நினைத்து விடுவார்களோ என உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்து இருந்தது.
பைரவியும் சர்வுஷூம் அறைக்குள் பிரவேசித்த அமுதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அமுதா அவர்களை கவனிக்காமல் கட்டிலில் படுத்திருந்த குழந்தையின் அருகில் சென்றார்
கனிவு நிறைந்த முகத்துடன் குழந்தையை பார்த்தவர் “குழந்தைக்கு அடிப்பட்டு இருக்குன்னு கேள்விப்பட்டேன் அதான் பாக்கலாம்னு வந்தேன்… என்ன வள்ளி இது குழந்தைக்கு இப்படி அடிபட்டு இருக்கு… கவனமா பாத்துக்கறது இல்லையா?” அவளை கடிந்து கொண்டவர் “டாக்டர் என்ன சொன்னாங்க?” குழந்தையின் உடல்நலனை பற்றி விசாரித்தார்.
மூக்கை உறிஞ்சிய படி முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்ட வள்ளி “அம்மா நா… நான் என்னன்னும்மா சொல்லுவேன் தலையில் அடிப்பட்டு ரொம்ப ரத்தம் போயிடுச்சாம்மா ஆப்ரேஷன் வேற செய்யனுமா… ஒரு லட்சம் கட்ட சொல்றாங்க அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போறது… எங்கேயோ கேட்டு இருக்காரும்மா அது கிடைக்குமான்னு கூட தெரியல ரொம்ப பயமா இருக்கும்மா” வள்ளி அழுதபடி கூறவும்
குழந்தையின் கையினை பிடித்திருந்த அமுதா “அழாத வள்ளி குழந்தைக்கு ஒன்னும் ஆகாது” என்றவர் கையோடு கொண்டு வந்திருந்த ஐம்பதாயிரத்தை வள்ளியிடம் கொடுத்து “இதை வைச்சிக்க வள்ளி என்கிட்ட இப்போதைக்கு இதுதான் இருக்கு… அய்யா இருந்தா கண்டிப்பா உங்கள தவிக்க விட்டு இருக்க மாட்டாரு…” நா தழுதழுத்த நிலையில் கூறியவர் “பணம் கிடைச்சிடும் தைரியமா இரு” என்றார் நம்பிக்கையுடன்.
அதுவரை எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்த வேலன் “அம்மா” என ஓடிவந்து அவரின் காலில் விழுந்து ஓவென்று கதறி அழுதான்.
அவன் அழுகவும் ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் தள்ளி நின்ற அமுதா “ஏய் வேலா என்ன இது இதுக்கெல்லாம் போய் யாராவது காலில் விழுவாங்களா? எந்திரிடா… எந்திரி வேலா…” எனக் கூறியும் அவன் எழாமல் அப்படியே இருக்க “ஹேய் வள்ளி ஹேய் அவனை எழுப்புடி நீயும் பாத்துக்கிட்டு இருக்க முதல்ல தூக்குடி” என்றார் அமுதா தவிப்புடன்
அமுதா வள்ளியை அழைத்து கூறிட சட்டென அருகில் வந்த வள்ளி “யோவ் எந்திரி… எந்திரி” அவன் கைபிடித்து எழுப்பிட
“அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா அய்யா சாவுக்கு காரணம் யாருன்னு தெரிஞ்சும் அந்த போலீஸ்க்காரனோட மிரட்டலுக்கு பயந்து சொல்லாம ஊரை விட்டே ஓடிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்கம்மா” அழுதபடியே வேலன் கூறிட வேலனின் திடீர் வாக்குமூலம் அனைவருக்கும் அதிர்ச்சியே
……..
அரவிந்தின் கூர் பார்வை கனகராஜினை துளைத்து கொண்டிருந்தது. கைகால்கள் கட்டிய நிலையில் சேரில் அமர்ந்திருந்தவன் அரவிந்தனை முறைத்துக் கொண்டு கோபத்தில் சேரை அசைத்து கொண்டிருந்தான்.
கடந்த இரு நாட்களாக அவனை கண்காணிக்க சொல்லியதில் அவனை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதுவுமின்றி தந்தையை விபத்துக்குள்ளாக்கியதும் இதற்கு மேலும் பொறுமையாக இருப்பது அர்த்தமற்றது என களத்தில் இறங்கி விட்டான் அரவிந்த். அதற்கு தோதாக சர்வேஷ் வேறு சாட்சியம் கொண்டு வர கனகராஜினை தங்களது இடத்திற்கு கொண்டு வந்துவிட்டான்.
ஆனால் அவன் வாயில் இருந்து உண்மை வரவேண்டுமே என எண்ணியவன் அவனை கடத்தி வந்து ஒரு இடத்தில் அடைத்து வைந்திருந்தான்.
“என்ன கனகராஜ் இடம் எல்லாம் வசதியா இருக்கா? வசதி போறலன்னா சொல்லு பக்காவா பண்ணி தரேன்” அவன் வாயில் இருந்த பிளாஸ்திரியை எடுத்தான் அரவிந்த்
“சார் தப்பு பண்றிங்க சார் நானும் போலீஸ்காரன் தான்… என்னை அக்கியூஸ்ட் மாதிரி கட்டி வைச்சி நடத்துறது நல்லா இல்ல சார்.. இதோட பின் விளைவுகள் ரொம்ப பெருசா இருக்கும்” கண்களில் குரோதத்துடன் உரைத்தவன் கட்டுக்களை அவிழ்க்க உடலை அசைத்தான்.
“நீ போலீஸ்காரனா!!! வெளியே சொல்லாத டா..” கையில் இருந்த லத்தியில் அவன் பக்கவாட்டில் ஒரு அடியை வைக்க வலியில் ஆவென கத்தியவன் “வேணா அரவிந்த் என்னை விட்று உன் நல்லதுக்கு தான் சொல்றேன் நீ என்னை பகைச்சிக்கிறது உனக்கு அழிவை தான் கொடுக்கும்” அரவிந்தனை மிரட்டியபடி கனகராஜ் பற்களை நறநறக்க
“அரசியல்வாதிக்கு கூஜா தூக்கும் நாயி நீ என்னை மிரட்டுறியா நீ உண்மைய சொல்லுடா… டிரைவர் வேலனை எதுக்கு மிரட்டி உண்மையை சொல்ல விடாம தடுத்த… அம்பலவாணனுக்கும் இந்த தற்கொலைக்கும் என்ன சம்மந்தம் செல்வப்பாண்டியன் வீட்டுல இருந்து எடுத்த பைல் எங்க இருக்கு? என்றான் அழுத்தம் நிறைந்த குரலில்.
அரவிந்திற்கு விஷயம் தெரிந்து விட்டது என்ற அதிர்ச்சியில் பதற்றத்துடன் அவனை பார்த்தான் கனகராஜ் இருந்தும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல்
“எந்த பையில், எந்த டிரைவரை நான் மிரட்டினேன் எனக்கு எதுவும் தெரியாது யாரையும் தெரியாது சார்… நீங்க வேணும்னே என்மேல பழியை போடுறிங்க இதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்” நல்லவன் வேஷம் போடும் கனகராஜின் கன்னத்தில் ஒரு குத்து விழ “ஆ… அம்மா” கத்தியபடி கட்டி இருந்த நாற்காலியுடன் தரையில் விழுந்து எழ முடியாது அப்படியே இருக்க, அருகில் இருந்த செல்வம் அவனை தூக்கி நிறுத்தி இருந்தார்.
செல்வத்தை கண்களால் முறைத்தபடியே “யோவ் என்னய்யா? இதுக்கு நீயும் உடந்தையா? உங்களையெல்லாம் மேலிடத்துல சொல்லி என்ன பண்றேன் பாருங்க” அனைவரின் மீதும் மிரட்டல் விடுக்க…
“யார்கிட்ட சொல்லனுமோ தராளமா சொல்லுடா … அதுக்கு முன்னாடி நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலை சொல்லிட்டு அப்புறம் போய் எங்கள பத்தி மேலிடத்துல சொல்லு” அரவிந்த் நக்கலுடன் கூற
“சார் என்மேல இருக்க கோபத்துல நீங்க என்னென்னமோ சொல்றிங்க பொய்யான பழியை என் மேல் போட்டு என் பிரமோஸனையும் கெடுத்து என் சர்வீசுக்கும் கெட்ட பெயரை கொடுக்க பாக்குறிங்க” அரவிந்தின் மேலேயே பழியை போட்டான்.
அதில் ஆத்திரத்துடன் அவன் கன்னத்தில் அறைந்த அரவிந்த் “உன்னை பேச விட்டதே தப்பு” செல்வம் என்றதும் அவர் சென்று வேலனை அழைத்து வந்து நிறுத்த கூடவே சர்வேஷ் மற்றும் பைரவியும் வந்தனர்.
சர்வேஷிற்கு கை முஷ்டிகள் இறுகி அவனை புரட்டி போடும் அளவிற்கு ஆத்திரமாக வந்தது இவ்வளவிற்கும் காரணம் யார் என தெரிந்தும் அவனை கைது செய்யாமல் இவனை விசாரிக்க வந்தது அரவிந்தின் மேல் பெரும் கோபத்தை உண்டு பண்ணி இருக்க பைரவி அவன் கரங்களை பிடித்து கொண்டிருந்தாள்.
“என்னை விடு பையூ நான் அவனை தேடி போறேன்… எத்தனை நாள் தூக்கம் கெட்டு அலைஞ்சி இருக்கேன் தெரியுமா? இப்போ இதுக்கு காரணமானவன் யாருன்னு தெரிஞ்சும் என்னை சும்மா இருக்க சொல்றியா?” கோபத்துடன் பைரவியிடம் இருந்து தன் கரங்களை உறுவிக் கொண்டவன் கனகராஜினை எட்டி உதைத்து அவன் கன்னங்களில் மாறி மாறி அறைந்து தன் கோபத்தை காட்டினான்.
அரவிந்த் பைரவியை பார்க்க “சர்வேஷ் சர்வேஷ் இங்க வாங்க அர்வி அவனை விசாரிப்பான்” கூறி செல்வத்தின் உதவியுடன் சர்வேஷினை இழுத்துக்கொண்டு தூரமாக சென்றவள்
“உனக்கு மட்டும் தான் கோவம் இருக்கா சர்வேஷ்…. அவன் என் சசீ அப்பாவை கொல்ல டிரை பண்ணி இருக்கான் எனக்கு கோவம் வராதா? அவன் அரசியல்வாதி… எந்த எவிடன்சும் இல்லாம அவனை எதுவும் செய்ய முடியாது… நாம இப்போ எதாவது செய்தாலும் நம்ம முன் விரோதம் காரணமாக அவன் மேல பொய் கேஸ் போட்டு இருக்கோம்னு சொல்லி தப்பிச்சி வெளியே வந்துடுவான்… அது இல்லாம இருக்கணும்னா நமக்கு இவன்கிட்ட இருக்குற ஆதாரம் வேணும்… அதுக்கு அவன் வாய் திறந்து சொல்லனும்… இப்படி போட்டு புரட்டி எடுத்தா அவன் வலி தாங்கம செத்து போயிடுவான்…” பைரவி தெளிவாக எடுத்து கூறவும்
தலையை கோதி தன்னை நிதானப்படுத்தியவன் “சரி சரி… நான் எதுவும் பண்ணல என்னை விடு… என்ன பண்ணனுமோ பண்ணி தொலைங்க” இடுப்பில் கைவைத்து கடுப்போடு திரும்பி நின்றுக்கொண்டான்.
“பார்த்தல்ல இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தா நீ பரலோகத்துக்கு பார்சல் ஆகி இருப்ப… காட்டு மிராண்டி கணக்கா கோபத்துல இருக்கான்… இந்தான்னு உன்னை அவன்கிட்ட கொடுத்த போதும் நீ அதோ கதிதான்…” அவனை அர்த்தமாக பார்த்தவன் “இப்போவாவது உண்மையை சொல்லு இவனை கூட யாருன்னு உனக்கு தெரியலையா?” அரவிந்த் டிரைவர் வேலனை சுட்டி காட்டி கேட்க
சர்வேஷினை ஒருமுறை திரும்பி பார்த்தான். அவன் கோவத்தில் சுவற்றில் குத்துவதும் காலை தரையில் உதைப்பதுமாய் இருப்பதை பார்க்க உள்ளுக்குள் குளிர் பரவியது… அந்த பயம் முகத்திலும் தெரிய “அது அது வந்து” கனகராஜ் பதட்டத்துடன் திக்கி திணரவும்,
“நான் சொல்லவா, செல்வபாண்டியனோட டிரைவர் இவன் இங்க இருந்தா எங்க சாட்சி சொல்லிடுவானோன்னு அவனை மிரட்டி ஊரை விட்டே ஓட வைச்சி இருக்க, அதுவும் இல்லாம செல்வபாண்டி வீட்டுல கிடைச்ச பைலை உன் ஆதாயத்துக்காக எங்கேயோ மறைச்சி வைச்சி இருக்க…” அவன் மேல் ஒவ்வொன்றாக சொல்லவும் மூச்சடைத்தது போல அப்படியே உறைந்து விட்டவனுக்கு பதற்றத்தில் வார்த்தைகள் வர மறுத்தது.
“என்ன அடைக்குதா… முன்னால் வந்த அரவிந்த் குளிர்ந்த ஐஸ் தண்ணீரை அவன் தலையில் கவிழ்ந்திட அந்த குளிரால் விடவிடத்த பற்கள் தன்னால் தந்தியடிக்க “எ… எனக்கு என்று மறுத்து கூற வர செல்வம் இன்னொரு ஐஸ் வாட்டர் பாக்கெட் எடுத்துக்கிட்டு அப்படியே சர்வேஷியைம் கூப்பிடுங்க” அரவிந்த் குரல் கொடுத்தான்,
அரவிந்த் மற்றும் சர்வேஷ் மாற்றி மாற்றி அடித்ததில் உடலில் உள்ள சக்தி அனைத்தும் இழந்து விட்டான். போதாதற்கு இந்த இரவு நேர குளிரில் ஊசியால் குத்தும் குளிர்ந்த நீரில் உடல் விறைத்து அப்படியே உறைந்து கொண்டு இருந்தவனுக்கு அந்த வார்த்தைகளை கேட்டதும் பயத்துடன் “சொல்றேன் சொல்றேன் எல்லாத்தையும் சொல்லிடுறேன்” தன் வாக்குமூலத்தை கொடுக்க ஆரம்பித்தான் கனகராஜ்.
அரவிந்தின் மிரட்டலில் வழிக்கு வந்த கனகராஜ் அனைத்து உண்மையையும் சொல்வதாக ஒத்துக்கொள்ள அவனிடமிருந்து வாக்குமூலம் வாங்கும் பணியை செய்தான் அரவிந்த்.
செல்போனில் வீடியோவை ஓடிவிட்டு அவன் பேசுவதை செல்வம் ஒளிப்பதிவு செய்தார்.