ஆர்கலி இப்படி பேசவும் ரவிக்கு ஒரு மாதிரியாகி விட, “ஆரு… அவங்க உன் அம்மா…” என்றான்.
“அதை எங்கிட்ட சொல்லாத நீ… உன் அத்தைக்கு ஞாபகப்படுத்து….” என்று ரவியிடம் கோபமாகப் பேச “ஆர்கலி…. என்ன பேசுற நீ….?” மாணிக்கம் மகளைக் கட்டுப்படுத்த நினைக்க,
ஆர்கலி விடவில்லை. அவ்வளவு கோபமும் அதை காட்டும் வேகமும் வர வார்த்தைகளால் விளாசினாள்.
“எதையும் மறக்கல ஆரு… இவ என் மனைவின்றதையும் மறக்கல… உன் அம்மான்றதையும் மறக்கல நான்… பழச விட்டுடுடா….” என்று மகள் மனதை மாற்ற மாணிக்கம் முயல…
ஆர்கலியோ, “இவங்களும் பழசு தான்ப்பா… அதான் விட்டுட சொல்றேன்…” என்றாள் தயவின்றி. இந்த வார்த்தைகள் ரவியை கோபம் கொள்ள செய்ய,
தன் அத்தைக்காகப் பேச நினைத்து, “ஆரு.. லெட் மீ டால்க் டூ யூ..” என்று சொல்ல
“வை ஷூட் ஐ..?” என்றாள் அவ்வளவு கோபத்தோடு.
கண்கள் கலங்கி இருக்க, கண்ணீர் வரவில்லை. அடக்கி இருந்தாள். அழுகையை விட ஆத்திரம் அணைக் கடந்திருக்க, அதையே காட்டினாள்.
“ஆரு…. அப்பா சொன்னா கேட்க மாட்டியா நீ..?”
“எதுவேணும்னாலும் சொல்லுங்க கேட்கிறேன் இது மட்டும் முடியாது… இதான் என் முடிவு…” என்று அழுத்தமாக சொல்ல
“ஓஹ்…. அப்பாவால ஒன்னும் முடியாது… நம்ம தயவுல இருக்கார்… நீ சம்பாரிச்சுக் கொடுக்கிற… அதனால இந்த வீட்ல இருக்க முடியாது சொல்றியா…?” என்று மாணிக்கம் பேச,அதுவரை அடக்கி இருந்த அழுகை அவளே அறியாது கன்னத்தில் இறங்கிட,
வார்த்தைகள் வதம் செய்ய வாடி நின்றாள். மாணிக்கத்திற்குத் தெரியும் இப்படி பேசினால் தான் அவள் வழிக்கு வருவாள் என, அவரது கடந்த காலம் மகளின் நிகழ்காலம் பாதிப்பதை அவர் அறிவார் தானே..? ஊரில் இருந்து வரும் வரன்களுக்கு இந்த விவரம் தெரிவதும் அதனால் விளையும் கேள்விகளையும் சந்திப்பது இவர்தான்.
‘பொண்ணோட அம்மா… உங்க கூட இல்லையாமே… என்ன விஷயம்…?’ என்ற கேள்விகளால் எத்தனை வரன் தட்டி போயிருக்கிறது என்பதை தெரிந்தவர் ஆயிற்றே..!
அவருக்கு மனைவி மீது அன்பு இருக்கிறது தான். அதையும் விட கோபம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மீகியது அவர் மகள் மேல் வைத்திருக்கும் அன்பு.
“எப்படிப்பா…. இப்படி பேச முடியுது உங்களால..?” அழுகையை அடக்கிக் கொண்டு ஆர்கலி கேட்க, அதுவரை அமைதியாக இருந்த வள்ளி, ஆர்கலியைப் பார்த்து,
“முடிஞ்சா அம்மாவை மன்னிச்சிடு ஆரு…. உன்னையும் அப்பாவையும் பார்க்கனும்னு ரொம்ப வருஷமா ஏங்கினேன்…. இன்னிக்கு நடந்திடுச்சு.. இனி செத்தாலும் எனக்கு சந்தோஷம் தான்..” என்றவர் கணவரைப் பார்த்து, “வேண்டாம்ங்க… எல்லாம் என்னோட முட்டாள்தனம்… எனக்காக நீங்க சண்டை போட வேண்டாம்… உங்க இரண்டு பேரையும் பார்க்க ஆசைப்பட்டேன்… அது போதும் எனக்கு… என்னால நீங்க அவக்கிட்ட இப்படி பேச வேண்டாம்… நான் போறேன்…” என்றார்.
“போயிடு… போயிடு வள்ளி… நீயும் போ… இவளும் போறேன் சொல்றா…. எல்லாரும் என்னை இப்படியே கொன்னுட்டுப் போயிடுங்க…. முதல்ல நீ… உங்கப்பா… அப்புறம் என் அப்பா…. இப்ப என் பொண்ணு…” என்றவர் கோபத்தில் கத்தியபடி தளர்ந்து உட்கார,
“அப்பா….!” என்று கத்தியவள் “உங்களுக்கு இவங்க இருக்கனும் அவ்வளவு தானேப்பா…. இருக்கட்டும்… உங்க மனைவியா இருக்கட்டும்….. ஆனா என்னோட அம்மாவா இதுவரைக்கும் இவங்க இருந்ததுமில்லை… இனியும் இருக்க வேண்டாம்….” என்று ஆவேசமாக சொன்னவள் வேகமாக நடந்து அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டாள்.
கட்டிலில் கீழே உட்கார்ந்தவள் மெத்தையில் தலைவைத்து அழுதாள். ஆழிப்போல் ஆர்ப்பாட்டம் எல்லாம் இல்லை. ஆழ்கடல் போல் அவ்வளவு அமைதியாக ஒரு அழுகை… இடியின்றி மின்னலின்றி மெல்லிய மழை போல் தடையில்லா அழுகை.
கற்பூரபாண்டியன் அவளைப் பள்ளியில் வந்து அழைத்த போது கூட அப்பாவை விட்டு போக விரும்பாத மகள் அவள். அப்பாவின் கஷ்டம் உணர்ந்து எப்போதும் அப்பாவின் உடன் நின்றவள். அவளால் இன்று மாணிக்கம் பேசிய வார்த்தைகளை தாங்க முடியவில்லை. அதன் தாக்கம் தாளவில்லை. அந்த நிலை மாளவில்லை. வீடே அமைதியாக இருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. பேசும் சூழலும் இல்லை. ரவிவர்மன் தான் அத்தையின் அருகில் சென்றவன்,
“அவளுக்கு இத்தனை வருஷம் கோபம் இருக்கும்தானே அத்தை… ஸோ அமைதியா இருங்க.. கண்ணைத் துடைங்க ஃப்ர்ஸ்ட் அடுத்தவங்க இஷ்டப்படி இருக்கறதை விட உங்களுக்கு இஷ்டப்படுறதை செய்ங்க அத்தை…. மாமா உங்களுக்காக இவ்வளவு பேசும்போது ஈசியா போறேன் சொன்னா எப்படி… பேச வேண்டிய இடத்துல பேசனும்….” என்று அதட்டியவனிடம்,
“இனிமே நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு… அவளை சமாதானம் பண்ண பாருங்க… எதுனாலும் நான் இருக்கேன்.. என்னைக் கூப்பிடுங்க…” என்று சொல்லி அவரது சூட்கேஸை காரில் இருந்து கொண்டு வந்து வைத்தவன்,
மாணிக்கத்திடம், “அத்தையைப் பார்த்துக்கோங்கன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல மாமா… அப்பா உங்கக் கிட்ட பேசனும்னு சொன்னார்…. இன்னிக்கு வேண்டாம்… எப்ப ப்ரீயோ சொல்லுங்க…. நான் வரேன்..” என்று சொல்லி அவன் கிளம்பிவிட, பத்து மணி ஆகியும் ஆர்கலி கதவைத் திறக்கவே இல்லை.
ரஞ்சித் தான் “அக்கா ப்ளீஸ் கதவைத் திற….” என்று தட்ட கதவைத் திறந்தவள் அமைதியாக போய் பாய் விரித்துப் படுத்துக் கொள்ள, கதவை மீண்டும் சாற்றியவன் அக்காவின் அருகில் உட்கார்ந்து கொண்டு, “ஏன் அக்கா… இவ்வளவு கோபம்…?” என்றதும்,
“அக்கா பெரியப்பா பாவம்கா… அவரை நம்ம யோசிக்க வேண்டாமா… பெரியம்மாவும் அவ்வளவு அழுதாங்க அக்கா… பாவமா இருந்துச்சு…”
“ஓஹ்… அழுதா தான் பாவம் பார்ப்பீங்களா…? அப்படியெல்லாம் எனக்கு வராது….”
“அக்கா இப்போ நீ எங்கிட்ட பேசுற…. அது ஞாபகம் இருக்கா உனக்கு…?” ரஞ்சித்திற்கும் கோபம் வர அவன் இப்படி பேச, “ஆனா… நீ எனக்காகப் பேசல இப்போ… இத்தனை வருஷம் இல்லாம எங்க இருந்து வந்தாங்க இவங்க… தீடீர்னு….” என்று ஆர்கலி அவள் சந்தேகம் கேட்க,
ரஞ்சித் அன்று நெப்போலியன் தன்னிடம் பேசியதையும் அவன் தான் பெரியப்பாவுக்காக இவ்வளவும் செய்தான் என்று சொல்லவும் ஆர்கலிக்கு அழுததினால் மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் மீண்டுவிட, நெப்போலியன் மட்டும் கண்முன் இருந்திருந்தால் கன்னம் சிவந்திருக்கும். உள்ளுக்குள் அவ்வளவு வேகம் பொங்கியது. சினம் துளிர்த்தது.
ஆர்கலி அமைதியாக இருக்கவும், “வாக்கா…வந்து சாப்பிடுக்கா… யாரும் இன்னும் சாப்பிடல….” என்று சொல்ல,
“நீங்க சாப்பிடுங்கடா…. என்னால நிஜமா முடியல…. நீ கொஞ்சம் தண்ணி மட்டும் கொடு…” என்று சொல்லி தண்ணீர் பருகியவள் உறங்க ஆயத்தமாக, ரஞ்சித்தும் வெளியே வந்தான்.
மகள் சாப்பிடாமல் மாணிக்கத்திற்கும் சாப்பிட மனமில்லை. இப்படியே சிறியவர்கள் தவிர அனைவரும் சாப்பிடாமல் படுத்துவிட, வள்ளிக்கு இரவெல்லாம் உறக்கமே இல்லை. அருகில் அமைதியாக உறங்கும் கணவனைப் பார்த்தார். மகளை நினைத்து வருத்தமாக இருந்தது. அவள் நினைவில் உறக்கமில்லாமல் தவித்தவர் நள்ளிரவில் தான் தூங்கினார்.
அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட, மகளுக்குக் காபி கலக்கலாம் என்று நினைத்தவர் பால் இருக்க, அனைவருக்கும் காபி கலக்கி வைக்க, ஒவ்வொருவராக எழுந்திருக்க, ஆர்கலி குளித்து விட்டு வரும்வரை காத்திருந்தவர் அவளிடம்,
“ஆரு காபி எடுத்துக்கோடா…” என்று சொல்ல, அவரை வெறித்தவள் எதுவும் பேசாமல் அவள் அமைதியாக சென்று விட, வள்ளியின் முகம் வாடிப் போய் விட்டது.
அவர் கணவர் முகம் பார்க்க “அவ காபி டீ எதுவும் குடிக்க மாட்டா வள்ளி…. நீ எனக்குத் தா…” என்று அவர் வாங்கிக் கொண்டார்.
பாத்திரங்களை விளக்கிக் கொண்டு சமையல் அறையில் வள்ளி நின்று கொண்டு இருக்க, ஆர்கலி அதன் வாசலில் கைகட்டி நிற்க, முகத்தில் கோபம் அடக்கி இருப்பது தெரிய, “வள்ளி… ஆரு சமைக்கனும்… நீ வெளியே வா..” என்று மனைவியை மாணிக்கம் அழைத்துக்கொள்ள, ஆர்கலி அதன் பின்னே உள்ளே போனாள்.
அலுவலகத்திற்குக் கிளம்பியவள் ரஞ்சித்திடம், “ரஞ்சி ஆபிஸ் போயிட்டு வரேன்…” என்றவள் அப்பாவைப் பார்க்க, அவரோ மனைவியிடம் பேசிக் கொண்டிருக்க, ஆர்கலி சொல்லாமல் கிளம்ப, மகளின் மீது ஒரு கண்ணாக இருந்தவர்,
குரலின் பேதம் தெரிந்தாலும் அதற்காக காலையிலேயே வாதம் செய்ய விரும்பாமல், “சரிடா… பார்த்து போயிட்டு வா…” என்றார்.
எல்லாரும் போனதும், அதற்காகவே காத்திருந்த மாணிக்கம், “ஏன் வள்ளி…. உன்னை யாராவது வீட்டை விட்டு போகனும்னு சொல்லிக் கூப்பிட்டா போயிடுவ இல்ல… இல்ல யாராவது உன்னைக் கூப்பிட்டா தான் வருவியா என்ன..?” என்றார் கோபத்துடன்.
நேற்றெல்லாம் ஒரு வார்த்தை, ஏன் ஒரு பார்வை கூட கோபமாகப் பார்த்திராதவர் இப்பொழுது இப்படி பேச, வள்ளி அதிர்ச்சியாகி அவரைப் பார்க்க, “என்ன வள்ளி அப்படி பார்க்கிற..? நேத்து ஒரு வார்த்தை கூட பேசாதவன் இன்னிக்குப் பேசுறேன் பார்க்கிறியா? நீ வேணும்னா என்னை உங்கப்பாவுக்காக விட்டுக்கொடுக்கலாம், விட்டுப்போகலாம்…. ஆனா என்னால உன்னை சின்னப்பசங்க முன்னாடி விட்டுக்கொடுக்க முடியாது வள்ளி..
ஆரு ஏன் காஃபி குடிக்கல தெரியுமா….? நீ போனதுக்கு அப்புறம் ஒரு நாள் முல்லை ஆருவுக்குப் பூஸ்ட் கொடுக்க சொன்னப்போ பால் ரொம்ப கம்மியா விட்டு தண்ணி அதிகமா ஊத்திட்டா…. சொல்லப்போனா தண்ணில பால் இருந்துச்சு… அதுக்கு ஒரு பேச்சு நடக்க, அதில இருந்து காபி டீன்னு எதுவும் அவ குடிக்கிறதில்ல…” என்று அவர் வேதனையுடன் சொல்லவும் வள்ளிக்குக் கண்ணீர் நீர் தளும்பிட,
“தாயில்லாத உன் அண்ணன் பொண்ணைப் பார்த்த நீ… நம்ம பொண்ணை ஏன் பார்க்கல வள்ளி…?” என்றார் கோபமாக.
“நான் ஆருவை நினைக்காம ஒரு நாள் கூட இருந்ததில்லைங்க…..” என்றவர் தேம்பித் தேம்பி அழுதார்.
அவரும் என்ன செயவர். தந்தையின் ஈகோவிற்கு முன் தன் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு உயிரையும் மாய்க்கத் துணிய, எப்படியோ பிழைத்தவர் வாழ நினைத்ததே ரவிக்காகவும் ரத்னாவிற்காகவும் தான்.
“ப்ச் அழாத வள்ளிம்மா…. நீ அழனும்னு நான் சொல்லல… ஆனா ஆருவைப் புரிஞ்சிக்க… அவ கோபமா பேசினா வாங்கிக்கோ…. அவ அவ்வளவு கஷ்டப்பட்டா.. இப்பவும் படறா… அவ இயல்பையே தொலைச்சிட்டா…. அவளை அவ போக்குல விடு….” என்றவர் இன்னும் இருந்தால் எதாவது மனம் நோக பேசிவிடுவோம் என்று நினைத்து,
“நான் இங்க கடைக்கு வேலைக்குப் போறேன்…. வீட்ல சும்மா இருக்க முடியல…” என்று சொல்ல,
“தெரியும்ங்க… ரவி சொன்னான்… அந்த நெப்போலியன் தம்பி கடையில தான் வேலைப் பார்க்கிறீங்கன்னு…”
“ம்ம் ஆமா… பார்த்து இருந்துக்கோ வள்ளி.. இங்க பக்கத்துல தான் கடையில நான் இருப்பேன் எதுனாலும் கூப்பிடு…” என்று சொல்லிவிட்டு நெப்போலியனின் கடைக்குக் கிளம்பினார்.
கடைக்குச் சென்றவரை நெப்போலியன் கிண்டலாகப் பார்த்தவன் கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டிருந்த வரதனிடம்,
“டாடி…. ஒருத்தர் நம்ம கடைத் திறக்கறதுக்கு முன்னாடியே வருவார்… இப்ப பார் மணி பத்தாச்சு. வள்ளி வந்தாச்சு.. மாணிக் லேட்டாச்சு…….” என்று பாட, வரதராஜன் நமுட்டுச் சிரிப்போடு,
“சும்மா இருடா….” என்று சொல்ல
“அப்புறம் மாப்ள அச்சோ மாணிக்…. எப்படி இருக்கீங்க…?” என்று நெப்போலியன் மேலும் வம்பு செய்ய, “என்னப்பா நீ…!” என்று மாணிக்கம் சங்கோஜப்பட
“நீ எதுக்கு அலையனும்… நான் பேங்க் போயிட்டு வரேன்..” என்று நெப்போலியன் சொல்ல, “இல்லடா… நான் தான் போகனும்.. என் கையெழுத்துத் தேவைப்படும்.. ஆட்டோவுல தான் போகப்போறேன்… நீ கடையைப் பாரு… பார்த்துக்கங்க மாணிக்கம்..” என்று சொல்லி விட்டு அவர் கிளம்ப,
நெப்போலியனின் கையைப் பிடித்துக் கொண்ட மாணிக்கம், “ரொம்ப தேங்க்ஸ்…” என்றார்.
“நீங்க சந்தோஷமா இருக்கீங்க தானே… அது போதும் எனக்கு…” என்று சொல்லி புன்னகைக்க, “எனக்கொரு பையன் இருக்கான்னு தோண வைச்சிட்ட நீ..!” என்று நெகிழ்ந்து பேச,
“அட… இந்த கதையெல்லாம் கூடாது…. நான் எப்பவும் என் வரதனுக்குத் தான் பையன்… உங்களுக்கு ப்ரண்டா இருக்கேன் மாணிக்..” என்று சொல்ல, “என்னவா வேணும்னாலும் இரு…. அதை விடு எப்படி உனக்கு வள்ளி பத்தி தெரியும்…”
“எல்லாம் ஒரு நாள் ஒரு ஃபுல் அடிச்சீங்களே… அன்னிக்கு உளறினதுதான்… எப்பா…. என்ன புலம்பல்… வள்ளிம்மா வள்ளிம்மான்னு…. ஆனா அப்பக்கூட தோணல… அன்னிக்கு நான் ஷ்யாம்ட்ட பேசினப்போ பத்தாம் தேதி கேட்டுட்டு ஒரு பெர்மான்ஸ் கொடுத்தீங்களே அப்புறம் ரஞ்சித்தைக் கூப்பிட்டேன்… கேட்டேன்.. உங்க ப்ரண்ட் நம்பரை உங்க போன்ல இருந்து சுட்டேன்.
அவர் ரொம்ப நல்லவர்…. எல்லா விஷயம் சொன்னார்… அப்புறம் வள்ளிம்மா திருச்சில அவங்க அப்பா வீட்ல இருந்தாங்கன்னு தெரிஞ்சது… விசாரிச்சேன்… இப்ப சென்னையில இருக்காங்கன்னு தெரிஞ்சது…. அவ்வளவுதான் சப்ப மேட்டர் சால்ட் வாட்டர்..” என்று கைத் தட்ட,
“உனக்கு சின்ன விஷயமா தெரியுது… ஆனா இந்த சின்ன விஷயத்தை செய்யனும்னு எங்களுக்குத் தோணவே இல்ல…. அவளும் என்னைத் தேடி வரல… எனக்கும் தேடி போக தோணல… என்னை விட்டுட்டுப் போயிட்டான்ற கோவம் போல…. ஒரு வேளை…” என்று ஆர்கலி பற்றி ஆரம்பித்தவர், தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு நெப்போலியன் செய்திருக்கும்போது இப்போது ஆர்கலிக்கு இது பிடிக்கவில்லை என்று சொன்னால் அவன் மனம் கஷ்டப்படும் என்று நினைத்து அதனை சொல்லாமல் விட்டார்.
அன்று மாலை வீட்டிற்கு வந்த ஆர்கலிக்கு மனம் மிகவும் பாரமாக இருக்க, யாரிடம் சொல்ல முடியும் அவளால்…? நெருங்கிய நட்பு என்று யாரையும் தேடிக்கொள்ளாதவள். அப்பாவிடமும் பேச பிடிக்கவில்லை. வீட்டில் மற்றவர்கள் சின்னவர்கள். திக்கற்றவளுக்குத் தெய்வம் துணையாக,கோவிலுக்குச் சென்றாள்.
கடவுளை வேண்டக் கூட தோன்றவில்லை. அகம் அழுத்திக் கொண்டிருக்க அதை இறக்கிட ஒரு ஆசுவாசம் தேடியவள் கோவிலின் குளக்கரைக்குச் சென்று அமர்ந்தாள். அந்த இரவும், அதன் ஈரமும், ஈரம் சுமக்கும் காற்றும், கடவுளின் வாசமும் ஒரு வித அமைதியைத் தர, கண்மூடி இருந்தாள்.
வழக்கம்போல் கோவிலுக்கு வந்த நெப்போலியன் கண்ணில் ஆர்கலி பட்டுவிட, அம்மா வீடு வந்து சேர்ந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறாள் என்று நினைத்து மகிழ்வோடு, அவன் மீது அதீத கோபத்தில் இருந்தவளின் முன்னே அவன் போய் நிற்க,
“அட மார்கழி…” என்று நெப்போலியன் ஆரம்பித்ததுதான் போதும், அமைதி வேண்டி வந்தவளை அவன் குரல் கலைத்துவிட, இவன் செயல் தானே இவையெல்லாம் என்ற எண்ணம் மேலோங்க,
“என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசில… கொஞ்சம் இடம் கொடுத்தா என் வீட்டு விஷயத்துல எல்லாம் தலையிடுவியா நீ…?” என்றாள் கோபமாக.
அவள் கோபமும் அவனுக்குப் புரியவில்லை.அதன் காரணமும் தெரியவில்லை. மாணிக்கம் இதைப்பற்றி அவனிடம் எதுவும் சொல்லவே இல்லையே. மகள் வருங்காலத்தில் மாறி விடுவாள் என்று அவர் இருக்க, அது தெரியாமல் இவன் அவளிடம் வாய் கொடுத்து விட, “என்னாச்சு ஏன் இப்படி பேசுற….?” என்றான்.
“வேற எப்படி பேசுவாங்க….?”
“ப்ச்…. நீ கூட தான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அவ்வளவு உதவி செஞ்ச…” என்று அவன் அவள் அகம் அறியாமல், அதனுள் இருக்கும் கோபம் தெரியாமல் எதார்த்தமாகப் பேச, “லூசா நீ…? குழம்பு கொடுக்கிறதும் குடும்ப விஷயமும் ஒன்னா… என்ன தெரியும் உனக்கு…. எங்களைப் பத்தி…?” என்று அவள் பல்லைக் கடிக்க,
அந்த வார்த்தைகள் நெப்போலியனை வெகுவாகக் காயம் செய்தது. தத்தையின் பேச்சு அவனைத் தள்ளி நிறுத்த அது அவனைத் தகிக்கச் செய்தது. மாணிக்கத்தின் மேல் இருந்த மாசற்ற அன்பு அப்படி செய்ய வைக்க,
“உன் அப்பா உன் அம்மாவை நினைச்சு ஃபீல் பண்ணினார். அதுக்காகத் தான் பண்ணினேன்..” என்று அப்போதும் பொறுமையாக அவன் சொல்ல, அவளால் அது முடியவில்லை. அதற்கு அவள் முயலவில்லை. வார்த்தைகள் வேகத்தோடு வந்து விழுந்தன.
“என் அப்பா ஃபீல் பண்ணினார்னு உனக்குத் தெரியுமா…? அவர் பொண்ணு எனக்கு இல்லாத அக்கறை உனக்கு இருக்கா…?” என்று ஆத்திரத்தோடுப் பேச, அதுவரை தான் அவன் எல்லை.
அதற்கு மேல் முடியாமல், “வாயை மூடுடி…” என்று கத்தியவன்,
“என்ன உனக்கு உங்கப்பா மேல அக்கறையா… அக்கறை இருக்கறவ இப்படி பேச மாட்டா…. நான் இப்படி தான் டி…. என் இஷ்டப்படி எனக்குப் பிடிச்சவங்க இஷ்டப்படி தான் நினைப்பேன் நடப்பேன்….”
“அம்மா இருக்காங்க இல்ல உனக்கு.. அதான் இப்படி பேசுற…. இல்லன்னா தான் அதோட அருமை தெரியும் உனக்கு… இவ்வளவு திமிர் உனக்குக் கூடாதுடி….” என்றான் மிகுந்த கோபத்துடன்.
“என்ன சொன்ன..? ஃபீல் பண்ணினது தெரியுமாவா…? உன் அப்பாவுக்கு ஒரு குவார்ட்டர் வாங்கிக் கொடு டி…. வார்த்தைக்கு வார்த்தை வள்ளின்னு தான் அந்த மனுஷன் சொல்வார்… இது எதுவும் தெரியாம பெரிய இவ மாதிரி பேசற…. அப்பாவோட சந்தோஷம் எதுன்னே தெரியல… நீ பேசிறியா..?” என்று அவன் சீற,
ஆர்கலிக்கு அவன் பேச்சைத் தாங்கவே முடியவில்லை. முதலில் அப்பா, இப்போது இவன், அதுவும் அவன் வார்த்தைகள் அவ்வளவு வலிக்கச் செய்ய அழுதே விட்டாள். அவள் கண்ணில் இருந்து நீர் இறங்க, இதற்கு மேல் தாங்க முடியும் என்று தோன்றவில்லை.
பேசா மடந்தையாகி படிகளில் ஏறியவளின் கண்ணைக் கண்ணீர் மறைத்துவிட, தன் நிலையில்லாமல் இருந்தவள் அங்கிருந்த கோவில் தூணில் நன்றாக மோதிவிட, கன்னத்தில் கண்ணீரும், தலையில் செங்குருதியுமாக நின்றாள். அவள் அப்படி அவன் பேசும்போதே போகவும்,
“திமிர் பிடிச்சவ…” என்று சொன்னவன் அவள் மோதிக்கொண்டதும் பதறி அருகே ஒட, “பார்த்து வர மாட்ட நீ..?” என்று கடிந்தபடி அவள் நெற்றியைப் பார்க்க, ஆழமாக வெட்டி இருக்க, “வா… ஹாஸ்பிட்டல் போகலாம்..” என்று அழைக்க,
“நீ எனக்கு செஞ்சதெல்லாம் போதும்…..” என்று சொன்னவளுக்குத் தடுமாற்றமாக இருக்க, மயங்கியவளைத் தாங்கிக் கொண்டான் நெப்போலியன்.