காதல் 21:
மகாவை மீண்டும் நேரில் பார்த்த பிறகு தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. பாண்டியனோ மகளின் பிடித்த கையை விடவேயில்லை. காயத்ரி ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தாள்.
“எனக்கு ஒண்ணுமில்லை காயத்ரி. எதுக்கு அழுதுகிட்டு இருக்க..? முதல்ல அழுகையை நிறுத்து..” என்றாள் மகா.
“இருந்தாலும் நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா..?” என்றாள் காயத்ரி.
“ரொம்ப நன்றி மகா. காயத்ரியையும் அவங்க கடத்தியிருந்தா, இந்நேரம் ஊருக்குள்ள பல மாதிரி பேசியிருப்பாங்க. வயசுப் பொண்ணு பேர் கெட்டுப் போயிருக்கும்..” என்றாள் மஞ்சரி. அவள் அப்படி சொன்னவுடன், ஈஸ்வரனை அர்த்தத்துடன் பார்த்தாள் மகா.
“யார் என்ன பேசினா என்ன சித்தி..? நம்ம பொண்ணு எப்படின்னு நமக்குத் தெரியாதா..?அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலும் நம்ம தான் சப்போர்ட்டா இருக்கணும்..” என்றாள் மகா.
“ஒரு திருஷ்ட்டி கழிஞ்ச மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான்..” என்று ஆளாளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.
‘நிவேதா இறந்த பிறகு அசோக் மகாவை திருமணம் செய்து வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினான். மகாவிற்கு அதில் விருப்பமில்லை. ஈஸ்வரனுடன் திருமணம் முடிந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், அசோக் அவளை கடத்தி விட்டான்.’
இப்படித்தான் தகவல் ஊருக்கும், குடும்பத்தில் மற்றவருக்கும் சொல்லப் பட்டிருந்தது. அவர்களும் அப்படித்தான் நினைத்தனர். ஈஸ்வரன் மறந்தும் யாரிடமும் சொல்லவில்லை. ஈஸ்வரன், மகா, பாண்டியனைத் தவிர வேறு யாருக்கும் நடந்தது தெரியாது. மகா கடத்தப்பட்டதற்கான உண்மை காரணமும் தெரியாது. ஈஸ்வரன் அதை சொல்லவும் விரும்பவில்லை. சரியோ தப்போ, அதனால் யாரும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று நினைத்தான்.
“சாரி சித்தப்பா..! என்னால தான் சாமிக்கு செய்ய வேண்டிய வேண்டுதல் தள்ளிப் போய்டுச்சு..” என்றாள் மகா.
“அதனால என்ன மகா. இப்பவும் உன்னை நல்ல முறையில வீடு வந்து சேர்த்ததுக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். இதை விட சிறப்பாவே வேண்டுதலை நிறைவேத்திடலாம்..” என்றான் சபரி.
அனைவரிடமும் பேசி, சமாதானப்படுத்தி, அவர்கள் அறைக்குள் வர இரவு பன்னிரெண்டு மணியைத் தொட்டிருந்தது. என்னதான் வீடு வந்து சேர்ந்துவிட்டாலும், மகாவிற்கு மனதிற்குள் இன்னமும் அந்த அழுத்தம் இருக்கத்தான் செய்தது.
குளித்து முடித்து வந்தவள் அப்படியே சோர்வாய் அமர்ந்து விட்டாள். யோசனைகள் மீண்டும் உருவெடுக்க,
“இப்ப எதுக்கு மறுபடியும் இப்படி உட்கார்ந்திருக்க மகா..?” என்றான் ஈஸ்வரன். அவனும் அப்போதான் குளித்து விட்டு வந்திருந்தான்.
“எனக்கு இன்னமும் மனசே ஆறலைங்க. நானும் அதைப் பத்தி நினைக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா, மறுபடியும் நடந்த விஷயமும், பார்த்த விஷயமும் தான் ஞாபகத்துக்கு வருது..” என்றாள்.
“நடந்ததை அப்படியே மறந்துடு மகா..போனதைப் பத்தி யோசிச்சுகிட்டே இருக்கிறதால எந்த பிரயோஜனமும் இல்லை..” என்றான்.
“என்னாலேயே தாங்க முடியலை. அப்பா எப்படிங்க இத்தனை நாள் யார்கிட்டயும் சொல்லாம, மனசுக்குள்ள எப்படியெல்லாம் வேதனைப் பட்டிருப்பார். இது தெரியாம நானும் அவரை ரொம்ப படுத்தி எடுத்துட்டேன்..” என்றாள்.
“நீ அவரை மட்டுமா படுத்தி எடுத்த..? என்னையும் தான் படுத்தி எடுத்த..? அந்த கவலை உனக்கு கொஞ்சமாவது இருக்கா..?” என்றான் ஈஸ்வரன்.
“எதுவுமே தெரியாம.. வாயை மட்டும் பேசிட்டு, நான் தான் அறிவாளின்ற மாதிரி இத்தனை நாள் முட்டாளா இருந்திருக்கேன். வீட்ல இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு, எதுவுமே தெரியாம ஜாலியா இருந்திருக்கேன். என்னை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு..” என்றாள் குற்ற உணர்வுடன்.
“என்னடி இப்படி சொல்லிட்ட..? அப்படி முழுசா உன்னை நீயே குற்றம் சொல்லிக்க முடியாது. உங்கப்பாவோட கடன் சுமைல நீ தோள் கொடுத்திருக்க. நிவேதா இறந்தப்ப, யாருக்கும் பயப்பாடாம போய் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்க. அசோக்கையும் அவன் அம்மாவையும் உண்டு இல்லைன்னு ஆக்கியிருக்க. நிவேதாவை போஸ்ட்மார்ட்டம் பண்ணி குடுத்த உடனே, தைரியமா முன்னாடி நின்னு எல்லாம் பண்ணியிருக்க. இறுதி காரியம் வரைக்கும் கூட இருந்திருக்க..துவண்டு போயிருந்த உன் அப்பா, அம்மாவை தூக்கி நிறுத்தியிருக்க. உனக்கு என்னை பிடிக்கவே இல்லைன்னாலும், உன்னோட எதிர்பார்ப்புக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லைன்னு தெரிஞ்சும் உன் அப்பா சொன்ன வார்த்தைக்காக என்னை கல்யாணம் பண்ணியிருக்க. என்ன தான் வாய் துடுக்கா பேசுனாலும், தப்புன்னு தெரிஞ்ச உடனே உன்னை நீயே கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு இருந்திருக்க. எல்லாத்துக்கும் கடைசியா பல பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சவனை உயிரோட ஏறிச்சிருக்க. இதுக்கு மேல என்ன செய்யணும் நீ. நிவேதா, அனிதா ஆத்மா கூட இப்ப நிம்மதியா இருக்கும் மகா. இத்தனை நாள் மகாவா இருந்த நீ, இன்னைக்குத் தான் பத்ராவா மாறியிருக்க..இப்படி நிறைய சொல்லலாம்டி..” என்றான்.
ஈஸ்வரன் சொல்ல சொல்ல அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது. அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள்,
“உங்களை எவ்வளவு பாடு படுத்தியிருக்கேன். ஆனா, நீங்க என்னோட நல்லதை மட்டும் தான் கவனித்தில் வச்சிருக்கிங்க..?” என்றாள்.
“எல்லாருக்குமே ரெண்டு பக்கம் இருக்கும் மகா. நாம ஏன் நமக்கு பிடிக்காத பக்கத்தை பிடிச்சுகிட்டு தொங்கணும். நமக்கு எந்த பக்கம் பிடிக்குதோ, அதை எடுத்துப்போமே. முழு நிறைவான மனிதன்னு இங்க யாருமே கிடையாது. எல்லார்கிட்டயுமே குறைகள் இருக்கும். அதை ஒதுக்கி நிறைவை மட்டும் பார்த்தாலே வாழ்க்கை அழகாயிடும் டி என் மயக்கி..” என்றான்.
“நீங்க சொன்னதுல ஒன்னு மட்டும் தப்பு. எனக்கு உங்களை சுத்தமா பிடிக்காதுன்னு சொல்ல முடியாது. மல்லு வேட்டி மைனரா இருந்தப்பவே கொஞ்சம் பிடிக்கும். என்ன…? கொஞ்சம் ஸ்டைலா இருந்திருந்தா இன்னமும் பிடிச்சிருக்குமோ என்னவோ..?” என்றாள் வேண்டுமென்றே.
“எனக்கு அப்படியில்லை..! எப்பவுமே மகாவை மட்டும் தான் பிடிக்கும்..” என்றான்.
“இதெல்லாம் வடிகட்டுன பொய்..” என்றாள்.
“நிஜமாடி..! வேணும்ன்னா படிக்கிறவங்களை கேட்டுப் பாரு. அவங்க சொல்லுவாங்க. என்னைக்கு நிவேதான்னு நினைச்சு உன்னை முதல்ல பார்த்தேனோ, அன்னைக்கே நீ மனசுக்குள்ள பதிஞ்சுட்ட..” என்றான்.
“இதெப்ப..?” என்றாள்.
“காயத்ரி சடங்கு அப்பத்தான். நிவேதாவை கூப்பிட்டப்ப, நீதான் திரும்புன. உன்னைத்தான் நிவேதான்னு நினைச்சேன். உங்க அக்காவை பொண்ணுப் பார்க்க வந்தப்ப, உங்கப்பா அப்படி பேசுனது என்னோட ஈகோவை தூண்டுச்சே தவிர, உங்கக்காவை தர மாட்டேன்னு சொன்னது, என்னை எந்த வகையிலும் பாதிக்கலை. அப்ப கூட உன்னைத்தாண்டி பார்த்துட்டு வந்தேன்..” என்றான்.
“நிஜமாவாங்க..? அப்பறம் ஏன் அனிதாவை கல்யாணம் பண்ணிங்க..?” என்றாள் புரியாமல்.
“நிவேதாவுக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே சபரி மாமா எங்களுக்குத் தெரியாம மறுபடியும் உன்னை பொண்ணு கேட்டிருக்கார் உங்க அப்பாகிட்ட. அவர் மாட்டவே மாட்டேன்னு சொல்லவும், அந்த விஷயம் எப்படியோ மஞ்சு அக்காவுக்குத் தெரிஞ்சு போய்டுச்சு. அக்கா ஒரு ஆட்டம் ஆடித் தீர்க்க, அவங்க பிடிவாதத்துல நடந்தது தான் அந்த கல்யாணம். அக்கா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. அவங்க சொல்றதை என்னால தட்ட முடியலை. உங்கப்பாவும் அந்த அளவுக்கு பேசிட்டார். நமக்கு விதிச்சது தான் நடக்கும்ன்னு நினைச்சு தான் அனிதா கழுத்துல தாலியை கட்டுனேன். ஆனா, அந்த பொண்ணு சாகனும்ன்னு நான் நினைக்கவேயில்லை. நடந்த பிரச்சனையை என்கிட்டே சொல்லியிருந்தா, கண்டிப்பா நான் அவளை ஏத்துகிட்டு தான் இருந்திருப்பேன். ஆனா, கடவுள் என்னோட பேருக்குப் பக்கத்துல உன்னோட பேரை ஸ்ட்ராங்கா எழுதியிருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்..?” என்றான் ஈஸ்வரன்.
“இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..! அதான் அப்பா வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேட்கவும் உடனே சம்மதம் சொன்னிங்களா..?” என்றாள்.
“இல்லை மகா..! பாண்டியன் மாமா வந்து பேசுன உடனே, சத்தியமா எனக்கு அப்போ உடன்பாடு கிடையாது. உன்னை கட்டிக்கனும்ன்னு ஆசைப்பட்டேன் தான். அதுக்காக ரெண்டாம் தாரமா கட்டிக்கனும்ன்னு நினைக்கலை. எனக்கு இது சரிவராதுன்னு உறுதியா தோணுச்சு. நான் ஒரே முடிவா மாட்டேன்னு சொல்லிட்டேன்.. அப்பறமும் அவர் விடவேயில்லை. அவர் இந்த அளவுக்கு கெஞ்சுறார்ன்னு சொன்னா, ஏதோ பெரிய பிரச்சனை இருக்குன்னு எனக்கு அப்பவே தோணுச்சு. அப்பறம் தான் சரின்னு சொன்னேன்..” என்றான்.
“போனா போகுதுன்னு எனக்கு வாழ்க்கை குடுத்திருக்கிங்க..?” என்றாள் கிண்டலாய்.
“அப்படியெல்லாம் இல்லை. போனாலும் என்கிட்ட நீ வந்துடுவன்னு நினைச்சு தான் வாழ்க்கை குடுத்தேன்..நீ வேற அதிகம் படிச்ச மாப்பிள்ளை கேட்ட” என்றான்.
“அய்யா ராசா.. உங்க ரீல் அந்து போய் பல நாள் ஆச்சு.. அதனால ரீல் சுத்துறதை கொஞ்சம் நிறுத்துங்க..” என்றாள்.
“பரவாயில்லையே.. என் பொண்டாடிக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே..?” என்றான் சிரிப்புடன்.
“ஏங்க இப்படி பண்ணிங்க..? நான் அப்படி உங்களை டீஸ் பண்ற மாதிரி பேசுனப்ப கூட நீங்க எதுவுமே சொல்லலையே…? எனக்கு தான் இப்ப குற்ற உணர்ச்சியா இருக்கு..?” என்றாள்.
“நான் இருக்குற மாதிரியே உனக்குப் பிடிக்கனும்ன்னு நினைச்சது தப்பா. நான் தான் நிஜம் மகா. படிப்பு, அந்தஸ்து எல்லாம் எனக்கு அடுத்து தான் வரும். இன்னைக்கு பொண்ணைப் பெத்தவங்க எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாய்டுச்சு. வசதியா இருக்கானா..? செட்டில்டான்னு பார்க்குறாங்களே தவிர,அவன் மனுஷனா இருப்பானா..? பொண்ணுக்கு நல்ல புருஷனா இருப்பானான்னு யாரும் பார்க்குறதில்லை..” என்றான்.
“நீங்க எங்கப்பாவைத் தான சொல்றிங்க..?” என்றாள்.
“உங்கப்பாவும் இதில் அடக்கம்ன்னு சொல்றேன். ஒருலட்சம் சம்பளம் வாங்கி, பத்து EMI கட்டுறவனுக்கு யோசிக்காம பொண்ணு குடுக்குறாங்க. அதே சமயம், பத்து பைசா கடன் இல்லாம, பத்து ஏக்கர் நிலம் சொந்தமா வச்சிருக்க ஒரு பையனுக்கு பொண்ணு தர அப்படி யோசிக்கிறாங்க. கேட்டா விவசாயம் பண்றது கவுரமா இருக்காதுன்னு பதில் வேற..? சில பல லட்சங்கள் சம்பளமா வந்தாலும், எதோ ஒரு நிறைவு இல்லாத மாதிரி ஒரு எண்ணம். அதான் என்னோட நிறைவைத் தேடி வந்துட்டேன். முதல்ல வீட்ல பயந்தாங்க. அப்பறம் அவங்க பயமெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு ஆயிடுச்சு. பெத்தவங்க கூடவே இருந்து, சொந்த ஊர்ல, சொந்த வீட்ல, சொந்த நிலத்துல இப்படி எல்லாமே சொந்தமா இருக்குறதை விட்டுட்டு, ஏன் சொந்தமே இல்லாத ஒரு இடத்துல போய் நாய் மாதிரி ஒருத்தனுக்கு வேலை பார்க்கணும். எனக்கு நான் தான் ராஜா..” என்றான்.
“நான் இப்படியெல்லாம் யோசிச்சதே இல்லைங்க.. ஆனா, இது கூட நல்லா இருக்கு..” என்றாள்.
“இப்படி பேசிட்டே இருந்தா உனக்கு நல்லாத்தாண்டி இருக்கும். காலையில நான் எவ்வளவு கனவோட இருந்தேன் தெரியுமா..? எல்லாம் அந்த அசோக் நாயால கெட்டு குட்டி சுவரா போச்சு..” என்றான் சோகமாய்.
“ஏங்க..? விடிஞ்சதும் போலீஸ் நம்மளைத் தேடி வருமா..?” என்றாள். அவளையும் மீறி கண்களில் ஒரு பயம் தென்பட்டது.
“கண்டிப்பா வராது.. அதைப் பத்தின பயமே உனக்கு வேண்டாம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மகா, உன்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்த பிறகு, திரும்பவும் அங்க போய் அவனுகளை முடிக்கிறது தான் என் பிளான். ஆனா, என் பொண்டாட்டி ஆசைப்பட்டாதால அவ கையாலேயே தீர்ப்பு எழுதியாச்சு..” என்றான்.
“ஏங்க..? அது அரசியல்வாதி கெஸ்ட்ஹவுஸ் வேற..? போலீஸ் இதெல்லாம் தூண்டித் துருவுவாங்க..” என்றாள் மகா.
“இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எனக்கும் தெரியும். அதுக்கு தான் எல்லாமே முன்னாடியே பண்ணிட்டேன்..” என்றான்.
“என்ன பண்ணிங்க..?” என்றாள் புரியாமல்.
“வெளிய அந்த நாலு பேர் மயங்கியிருந்தாங்கள்ள..?” என்றான்.
“ஆமா…”
அந்த காட்சியை விரிவு படுத்தினான் ஈஸ்வரன்.
ஒரு வழியாக கெஸ்ட் ஹவுசின் உள்ளே நுழைந்த ஈஸ்வரனுக்கு வெளியே இருந்த நாலு பேரை முதலில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான். அப்போது தான் அந்த மயக்க ஸ்ப்ரேவை எடுத்தவன், மூன்று பேர் முகத்தில் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அடித்தான். மீதி ஒருவன் முகத்தில் லேசாக அடிக்க, அவன் மட்டும் லேசான மயக்கத்திற்கு சென்றான். ஆனால் நினைவில் இருந்தான். அவனுக்குக் கேட்கும்படியாக போன் பேசுவதைப் போல் நடித்தான் ஈஸ்வரன்.
“ஆமா சார்..! எல்லாமே ஆதாரத்தையும் தர்றதா அசோக் ஒத்துகிட்டான்.எல்லாத்துக்கும் மூல காரணமே அந்த அரசியல் வாதி தானாம். இது அவனோட கெஸ்ட்ஹவுஸ் தானாம். இப்ப ஆதாரம் கைக்கு வந்த உடனே, நாளைக்கே அவனை அரஸ்ட் பண்ணிடலாம்..” என்றான் அவனுக்கு நன்கு கேட்கும் படி.
போனை வைத்துவிட்டு, அவனின் செயலை ஈஸ்வரன் கவனிக்க… சில நிமிடங்கள் அவனிடம் எந்த அசைவும் இல்லை.
“மயக்க மருந்தை ரொம்ப அடிச்சுட்டோமோ..? இப்ப என்ன பண்றது..?” என்று ஈஸ்வரன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவன் நினைத்தது சரிதான் என்பதைப் போல, மெதுவாக கண் விழித்த அவன் தன்னுடைய செல்லை எடுத்து மெதுவாக அந்த அரசியல் வாதிக்கு அழைத்து விட்டான்.
“என்னடா இந்த நேரத்துல…?” என்றது ஒரு குரல் எதிர்புறம்.
“அந்த அசோக் உங்களை மோசம் பண்ண போறான் அண்ணே..! உங்களுக்கு எதிரா எல்லாத்தையும் போலீஸ் கிட்ட குடுக்க போறானாம். ஒருத்தன் இங்க வந்திருக்கான். ஒருத்தனா இல்லை எத்தனை பேருன்னு தெரியலை. நம்ம ஆளுங்க மயங்கிக் கிடக்குறாங்க..” என்றான்.
“இப்ப அசோக் எங்கடா..?” என்றது எதிர்முனை குரல்.
“இன்னைக்கு ஒரு பொண்ணைத் தூக்கிட்டு வந்திருக்கான் அண்ணே. உள்ள தான் இருக்கான்..” என்றான்.
“நீ என்ன வேணும்ன்னாலும் செய். ஆனா, அவன் எந்த ஆதாரத்தையும் போலீஸ்கிட்ட குடுக்க கூடாது. அவனை முடிச்சுடு..” என்றது எதிர்முனை குரல்.
“எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை அண்ணே..! உங்களுக்கு ஒண்ணுன்னா, நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்..” என்று வீர வசனம் பேசிவிட்டு வைத்தான்.
பேசி முடித்தவன், தட்டுத் தடுமாறி எழுந்திருக்க, திடீரென்று அவன் முன்னால் போன ஈஸ்வரன், ஸ்ப்ரேவை நன்றாக அடித்தான். அவன் அப்படியே சாய, ஈஸ்வரனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது..”
ஈஸ்வரன் சொல்லி முடிக்க,
“அப்ப அஷோக்கை போட்டுத் தள்ளனும்ன்னு தான் வந்திங்களா..? இது தெரியாம நான் தான் ஓவரா சீன் போட்டுட்டேனோ..” என்றாள் வாயைப் பிளந்தபடி.
அவளின் வாயை மூடியவன்,
“இப்படியெல்லாம் ரியாக்ஷன் குடுத்து மனுஷனைப் படுத்தி எடுக்காதடி..” என்றான்.
“என்னங்க இப்படி பிளான் போடுறிங்க..?” என்றாள் ஆச்சர்யமாய்.
“கெட்டது செய்ய ஆயிரம் பிளான் அவனுங்க போடும் போது, நல்லது செய்ய ஒரு பிளானை நாம உருப்படியா போட மாட்டோமா என்ன..?” என்றான்.
“செம்ம போங்க. ஆனா, என்னைக் கடத்திட்டு போயிருக்கானே. அதை வச்சு போலீஸ் சந்தேகப்பட்டா,…?” என்றாள்.
“இந்த அசோக் இருக்கான் பாரு… அவன், நான் உன்னை கண்டு பிடிக்கக் கூடாதுன்னு எல்லாத்தையும் மறைச்சு பக்காவா பண்ணியிருக்கான். அதாவது ட்ராக் பண்ண முடியாது. அவன் வந்த காரோட நம்பர் பிளேட் பொய். இப்படியே எல்லாமே தரமா செஞ்சிருக்கான். இதெல்லாம் அவனுக்கு எதிராவே மாறிடுச்சு. அவனைக் கண்டு பிடிக்கக் கூடாதுன்னு அவன் செஞ்ச எல்லாமே, அவனைக் கண்டுபிடிக்க போற போலீஸ்க்கு போக்குக் காட்டும். அதுமட்டுமில்லாம இந்த கேஸை அந்த அரசியல் வாதியே பார்த்துப்பான். அசோக்கை பத்தி விசாரிச்சா அவனோட பித்தலாட்டம் எல்லாம் வெளிய வரும்ன்னு அவனுக்கு நல்லா தெரியும். தான் போட சொன்ன ஆளு தான் அஷோக்கைப் போட்டு தள்ளியிருக்கான்னு நினைச்சுட்டு இருப்பான். அதனால இந்த டீலிங்கை அவன் பார்த்துப்பான். நீ கவலைப் படாதடி பொண்டாட்டி..” என்றான் ஈஸ்வரன்.
“ஏங்க…?” என்று அவள் ஆரம்பிக்க,
“போதும்டி என் பொண்டாட்டி.. இன்னும் எவ்வளவு கேள்வி தான்டி கேட்ப..?” என்று நொந்து போனான் ஈஸ்வரன்.
“அது இல்லைங்க..!” என்று பேச ஆரம்பித்தவள் பேசிக் கொண்டேயிருக்க,
“அப்படித்தானங்க…?” என்று திரும்பிப் பார்க்க, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் ஈஸ்வரன்.
அவன் தூங்குவதைப் பார்த்து சிரித்த மகா,
“ஆபரேஷன் சக்சஸ்..!” என்று சிரித்தபடி, அவனின் முகத்தை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
“எல்லா பொண்ணுங்களுக்கும் இப்படி ஒரு புருஷன் கிடைச்சா எப்படி இருக்கும்..?” என்று அவனை ரசித்துக் கொண்டே அவள் பேசிக் கொண்டிருக்க,
“அவனுங்க எல்லாம் சீக்கிரம் சாமியாராப் போய்டுவானுக..” என்று சட்டென்று எழுந்தவன் சொல்ல,
“நீங்க தூங்கலையா..?” என்றவள் வாயைப் பிளக்க,
“இனி தூக்கமே கிடையாது. எல்லா நேரமும் ராப்பகலா உழைக்கப் போறேன்..எல்லா நாளுக்கும் சேர்த்து வைச்சு..” என்று அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன், அதற்குமேல் அவளை பேசவிடவில்லை.
“ஏங்க..?” என்ற சிணுங்கள் சத்தமும், கொலுசொலியும், வளையொலியும் அங்கே நிறைந்திருக்க, அவளுக்கு இல்லறப் பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தான் பிரகதீஸ்வரன். அவளும் விரும்பியே பாடம் கற்றுக் கொண்டிருந்தாள். பல எண்ணங்கள் அங்கே இளைப்பாறிக் கொண்டிருந்தன. பல ஏக்கங்கள் அங்கே ஏக்கத்தைத் தணித்துக் கொண்டிருந்தன. பல நாள் பிரம்மச்சாரி, பிரம்மன் படைத்த அழகியோடு வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
நம்பிக்கையையும், சந்தோஷத்தையும், வாழ்நாள் நிறைவையும் தருபவன் தானே வாழ்க்கைத் துணை. அவனே கணவன், அவனே துணைவன். ஈஸ்வரன் அவளுக்கு எல்லாமுமாக மாறிக் கொண்டிருந்தான். அவளின் பெற்றோருக்கும் புதியதொரு நம்பிக்கையை விதைத்திருந்தான்.
“ஏய் மகா… மகா..!” என்று ருக்கு பாட்டிக் கத்திக் கொண்டிருக்க, அந்த சத்தத்தில் தான் மெதுவாக கண் விழித்தாள் மகா. கணவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு, ருக்கு பாட்டியின் குரல் கேட்டு ஆயாசமாய் வந்தது. ஈஸ்வரன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மெல்ல எழுந்தவள் குளித்து விட்டு வெளியே வர,
“வாடியம்மா..? இவ்வளவு நேரமா..?” என்றார் ருக்கு பாட்டி.
“ஐயோ அத்தை..! கொஞ்ச நேரம் பேசாம இருங்க அத்தை..” என்றார் வசுந்தரா.
“இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு..” என்றாள்.
“பார்த்து… சுளுக்கிக்கப் போகுது. இந்த வெட்டு வெட்டுறவ..?” என்றார் ருக்கு.
“உங்க காலத்துல நீங்க வெட்டாத வெட்டா..?” என்றாள் சிலுப்பிக் கொண்டு.
“நேரத்தைப் பாருடி..! மணி பத்தாகுது..” என்றார் ருக்கு.
“அதுக்கு என்ன பண்ண முடியும்..? பத்தே மாசத்துல கொள்ளுப் பேரன் வேணும்ன்னா, பத்துமணி என்ன..? பன்னிரெண்டு மணி கூட ஆகும்..” என்றாள் நக்கலாய்.
“அடியாத்தி..? கொஞ்சம் கூட இதென்னடி வெட்கமில்லாம என்கிட்டயே சொல்றவ..?” என்று பாட்டி சிரிக்க,
“ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்க வேண்டியது.ஆண்டு அனுபவிச்ச கிழவிக்கு இதெல்லாம் சொல்லாமத் தெரியனும்..” என்றாள்.
“தெரியாம சொல்லிட்டேண்டி ஆத்தா..!” என்ற ருக்கு பாட்டிக்கு மனம் நிறைந்து போனது. அவள் சொல்லாமல் சொன்ன விஷயத்தில் வசுந்தராவிற்கும் மனம் நிறைந்து போனது.
வேகமாய் அறைக்கு சென்றவள்,
“முதல்ல இந்த வீட்ல மாடியில ரூம் எடுக்கணும். இந்த ருக்குத் தொல்லை தாங்க முடியலை..” என்றாள் மகா.
அவளை இழுத்து அருகில் போட்டவன், மீண்டும் அவளுள் தேடலைத் தொடங்க…
“அங்க உங்க பாட்டி என் மானாத்தை வாங்குறாங்க.. எந்திரிங்க முதல்ல..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,
“அதான் வாங்கிட்டாங்கல்ல.. இனி உன்னை கூப்பிட மாட்டாங்க..!” என்றவன் அதற்கடுத்து அவளை பேசவிடவில்லை.
ஒரு மாதத்திற்குப் பிறகு…
“கிளம்பியாச்சா..?” என்று ஈஸ்வரன் கேட்டுக் கொண்டிருக்க,
“இதோ வந்துட்டேங்க…” என்றபடி வந்தவளைப் பார்த்து அவன் அப்படியே நிற்க,
“ஈஸ்வரா.. நாம கோவிலுக்குப் போறோம். வம்பு பண்ணாம வாங்க..!” என்றவள் வசுந்தராவின் அருகில் போய் நின்று கொண்டாள்.
அன்று செய்ய முடியாமல் போன, வேண்டுதலை நிறைவேற்ற கிளம்பிவிட்டார்கள் குடும்பம் சகிதமாய். பச்சைப் பட்டில் அவள் பசுமையாய் ஒளிர, அவளுக்கருகில் முகம் முழுவதும் சந்தோஷத்தில் இன்னமும் கொஞ்சம் கம்பீரமாய் மிளிர்ந்து கொண்டிருந்தான் ஈஸ்வரன். அவர்களை ஜோடியாகப் பார்த்த பாண்டியனுக்கும் கமலாவிற்கும் மனம் நிறைந்து போனது.
பெற்ற பிள்ளைகளின் நிறைவான வாழ்க்கையைத் தவிர வேறென்ன வேண்டும் பெற்றோருக்கு.
வாழ்த்தி விடை பெறுவோம்..