வியர்த்த உள்ளங்கைகளை சட்டையில் தேய்த்துக் கொண்ட ஷக்தி,ஆடியன்ஸ் பக்கம் நோக்கினாள். அங்கிருந்தவர்களை பார்த்து படபடத்த அவள் முகம் அன்னையும்,அண்ணனும் காட்டிய தம்ஸப்பில் நிதானத்தை தத்தெடுத்து இதழில் புன்னகையை அரும்பச் செய்ய மாறாப் புன்னகையுடன் மேடை ஏறினாள்.
தன் தங்கைக்காவே பெங்களூரில் இருந்து வந்திருந்த சஞ்சய், பார்வதியையும் அவர் வீட்டில் இருந்து சற்று தூரத்தில் தன்னோடு ஏற்றிக் கொண்டான். ஷக்தி ஸ்டேஜ் செல்ல சற்று நேரத்தின் முன் தான் இருவரும் செட்டினுள் நுழைந்திருந்தனர்.
மனதை ஒரு நிலைப்படுத்தி, காலையில் கார்த்திக் காட்டிய கோபத்தை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு கண் மூடி கடவுளை வேண்டிக் கொண்ட ஷக்தி பாடத் தயாரானாள்.
மணி அண்ட் பேண்டிலிருந்து முதலில் கிட்டார் இசையின் மூலம் மேஸ்ட்ரோ இளையாராஜவின் எவர் கிரீன் பாடலின் பின்னணி இசை, இசைக்கப்பட அதைத் தொடர்ந்து வந்த பெண்கள் குழுவின் கோரசோடு அவள் குரலும் சேர்ந்து கொண்டது.
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்ற பாடல், அவள் குரலில் மென்மையுடன் செட் முழுவதும் ஒலித்து அனைவரையும் மெய்சிலிர்க்க மட்டுமன்றி,மெய் மறக்கவும் வைத்தது!
அந்திமாலையில் தூரலாக பெய்யும் மழையை வீட்டின் ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டிருப்பவரின் மேல்.. மழையின் சாரல் மேனி பட்டு மெய்சிலிர்க்க செய்ய.. சுட சுட இருக்கும் காபி கப்பை உள்ளங்கை இரண்டிலும் ஏந்தி.. கமகமவென வரும் காபியின் நறுமணத்தை கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்து விட்டு ஒரு சிப் பருகும் போது, பின்னணியில் இளையராஜாவின் இசை! ஹெவன்ல?
அடுத்து வந்த வரிகள் இயல்பாகவே அவள் முகத்தில் புன்னகையை மலரச் செய்ய,கண்களுக்குள் நிற்கும் கார்த்க்கின் விம்பத்தை விரட்டி அடிக்க விரும்பாது அதே நிலையில் பாடலை தொடர்ந்தாள்.
கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாதவெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம்
என்ற வரி முடிவில் கண்களை திறந்தவளின் விழிகள் அவள் போட்ட தடையை தகர்த்து விட்டு.. கீபோர்டுடன் விரல்களை உறவாட விட்டிருந்தவனை ஒரு முறை தழுவி வந்தது.
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
எனப் பாடிக் கொண்டிருந்தவளை இப்போ கார்த்திக்கின் கண்கள் தழுவிக் கொள்ள…இந்த சுற்றில் நிச்சயமாக தெரிவு செய்யப்படுவாள் என்பதில் ஐயமில்லை என அவள் பாடியதிலே தெரிந்து போனது அவனுக்கு.
அவள் குரலில் தொடர்ந்து ஒலித்த பாடல் மென்மையாக நின்று போக அரங்கையே அதிரச் செய்தது அனைவரினதும் கைதட்டல்கள். அத்தோடு நடுவர்கள் நால்வரிடமும் ஸ்டேண்டிங் அவேஷனை பெற்றவளுக்கு கமென்ட்களும் நல்லவிதமாகவே அமைந்தது.
அதன் பின்னர் நிகழ்ச்சி தொடர அனைவரும் பாடி முடித்ததும், வயில்ட் கார்ட்டில் தெரிவுசெய்யப்பட்டு செமி பைனலில் நுழைபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் நேரமும் நெருங்கியது. இம்முறை செமிபைனலின் பின் எளிமினேஷன் இல்லாததால் தெரிவு செய்யப்படுபவர்கள் இறுதிச் சுற்று (final) செல்வது உறுதியாகிருந்தது.
போன சுற்றில் மூன்று பேர் டிரக்ட் ஃபைனலிஸ்ட்டாக செலக்ட் செய்யப்பட்டிருக்க இன்னும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.. மொத்தமாக ஐந்து பேரே ஃபைனல் செல்வர். ஜட்ஜஸ் அனைவரும் மேடை நோக்கி இறங்கி வர,சீட்டின் நுனியிலிருந்து சீரியஸ் சீன் பார்ப்பது போல் பதட்டத்துடனே இருந்தனர் அங்கிருந்தவர்கள்.
மேடையிலிருந்து கண்டஸ்டன்ஸ் அருகில் நடுவர்கள் வந்து நிற்க, ஆனந்த் அறிவிக்கத் தொடங்கினான்.
“இந்த வயில்ட்கார்ட் ரவுண்ட்ல செலக்ட் ஆகி ஃபைனலுக்கு நுழையப் போறதை.. மக்களோட வாக்குகள் தான் தீர்மானிக்க போகுது!சோ, சூப்பர் சிங்கர் சீசன் எயிட்டோட நாலாவது ஃபைனலிஸ்ட் யாருன்னு சொல்லவேண்டிய நேரம் வந்தாச்சு!நீங்க ஆவலோட எதிர்பார்த்த அந்த ஃபோர்த் ஃபைனலிஸ்ட்…கவுன்டவுன் ஸ்டார்ஸ்,
ஃபைவ்!
ஃபோர்!
த்ரீ!
டூ!
ஒன்!
சூப்பர் சிங்கரோட ஃபோர்த் ஃபனலிஸ்ட் ஶ்ரீதர்!”என எல்லோரும் ஒன்றாக அறிவிக்க, கைதட்டக்களோடு மேடையில் படபடவென வெடி சத்தமும், மேலிருந்து தங்க நிற காகித துகள்களும் மழையாய் பொழிந்தன.
சக போட்டியாளர்கள் ஶ்ரீயை அணைத்து தங்களது வாழ்த்தை தெரிவிக்க, ஷக்தியும் ஆனந்தத்தில் கலங்கிய கண்களுடன் அவனை அணைத்து,
“யூ டிசேர்வ் இட் மச்சி!”என்றாள்.
பின் ஶ்ரீயிடம் இந்த தருணத்தை பற்றி கூறக் கேட்க,உணர்ச்சி வசப்பட்டிருந்தவனின் குரல் கரகரத்து ஒலித்தது..தான் கடந்து வந்த பாதைகளையும், இசைத் துறையில் தன் கனவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டவன்.. இந்த நிகழ்ச்சிக்கும், நடுவர்களுக்கும் நன்றி கூறினான்.. ஐந்தாவதாக இறுதிச் சுற்று செல்லவிருக்கும் போட்டியாளர் யார் என்பது பற்றி மீண்டும் அறிவிக்க..டாப் டென் சுற்றில் செலக்ட் செய்யப்பட்டு அதன் பிறகு நடந்த எலிமிநேஷன் சுற்றில் விலகிய அனு ஐந்தாவது போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டாள்.
இதை துளியேனும் எதிர் பார்த்திருக்கவில்லை கார்த்திக் மற்றும் ஷக்தி குடும்பத்தினர். இறுதியாக ஷக்தியே தெரிவு செய்யப்படுவாள் என நம்பிருந்தனர். ஷக்திக்கு போட்டியாக அனுவுமே நன்றாக பாடிருந்தாள் தான்..ஆனால் அவன் மனது அவளைத் தான் எதிர்பார்த்தது.
ஷக்தி இதை எப்படி எடுத்துக் கொள்வாள்..?இறுதி வரை வந்த ஏமாற்றம் இருக்குமே என அவளை மட்டுமே சுற்றியது அவன் சிந்தனை. மகளை நினைத்து பார்வதிக்குமே கண்கள் எல்லாம் கலங்கி விட்டது.
தம் நேசத்துக்குறியவர்களுக்கு எது அதிக மகிழ்ச்சியை தருமோ அல்லது எது அவர்களின் பிடித்தமோ அது அவர்களுக்கு கிடைப்பதை பார்த்து சில உறவுகள் உவகை கொள்ளும். வேறொருவருக்கு இது ஒரு வகை சுயநலமாகத் தோன்றலாம்.ஆனால் இங்கு இதற்கு விதிவிலக்கானவர்கள் எவருமில்லை. அதில் சேர்த்தி தான் பார்வதியும், கார்த்திக்குமே!
பார்வதி அன்னையாய், தன் மகளுக்கு கிடைக்க வேண்டும் என நினைக்க,அவள் மேல் அன்பு வைத்த உள்ளமாய் அதை எதிர்பார்த்தான் கார்த்திக்! அவ்வளவே!(?)
கைகளால் முகத்தை அழுந்த துடைத்து விட்டு,தவிப்புடன் ஷக்தியை நோக்கியவனின் கண்கள் ஆச்சர்யத்தை காட்டி பெரிதாக விரிந்து கொண்டன.
அவள் முகத்தில்.. தான் இறுதி சுற்றில் நுழையவில்லை என சிறு வருத்தமோ,கவலையோ இருக்கவில்லை. மாறாக முகம் முழுவதும் தன் நண்பர்களுக்கான புன்னகையும்,பெருமையுமே! எதற்கெடுத்தாலும் கலங்கும் அந்த கண்கள் இன்று கலக்கமற்று சிரிப்பை ஏந்தி நின்று கார்த்திக்கை ஆச்சர்யப்பட வைக்க அவன் தவிப்பு மெல்லக் குறைந்து முகம் மென்மை பூசிக் கொண்டது.
அனுவும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி,உரையை முடித்திருக்க திடீரென நடுவர்களிடையே சலசலப்பு.
மைக்கை எடுத்துக் கொண்டு ஸ்டேஜின் முன் வந்து நின்றார் பாடகர் பென்னிடயால். கலகலத்த சத்தம் அடங்க அங்கிருந்த அனைவரினதும் பார்வையும் அவர் மேலே தான் இருந்தது.
சிரிப்புடன் போட்டியாளர்களை நோக்கிய பென்னி,“சூப்பர் சிங்கர் ஃபைனலிஸ்ட் அஞ்சு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள்!உங்க எல்லாருக்கும் ஒரு சப்ரைஸ் வெச்சிருக்கோம் நாங்க!எஸ்.. இந்த சீசனோட பைனலிட்ஸ் அஞ்சு இல்ல ஆறு!இது ஜட்ஜெஸான எங்க நாலு பேரோட ஆசைப்படி நாங்க செலக்ட் செய்திருக்கிற அந்த ஆறாவது ஆள், வித் த கவுன்டவுன்,
டென்!
நயின்….,
ஃபைவ்!
ஃபோர்!
த்ரீ!
டூ!
ஒன்!
ஷக்தி!!!!!”அவள் பெயரை அறிவிக்க, அரங்கமே அதிர்ந்தது..தன் பெயர் சொல்லப்பட்டதில் அதிர்ச்சியில் உறைந்து ஷக்தி சக போட்டியாளர்களின் அணைப்பிலேயே சுயத்திற்கு வந்தாள்.
அனுவின் அணைப்பிலிருந்தவளுக்கு உணர்ச்சிவசப்பட்டதில் கண்கள் கலங்கிக் கொண்டு வந்து கண்ணீரை பொழிய முயற்சிக்க, அதைத்தடுத்து விட்டு பெரிதாக புன்னகைத்தாள்.
ஷக்தியின் நிலமை இவ்வாறிருக்க, கார்த்திக்கோ அவளை விட திகைப்பிலும், மகிழ்ச்சியிலும் உச்சிக்கு சென்றவன் கண்கள் அவனை அறியாமலேயே மெலிதாகக் கலங்கியது.
“யூ டிசேர்வ் இட் மோளூ!”சிரிப்போடு அவன் இதழ்கள் முணுமுணுத்தது.
நடுவர்களும் அவளை அணைத்து வாழ்த்துக் சொல்ல,அதை ஏற்றுக் கொண்டவள் பார்வதியின் பக்கம் நோக்கினாள்.
சஞ்சய் தோள் சாய்ந்து ஆனந்தக்கண்ணீர் சிந்தியவாறு இருக்க அதற்கு எதிராக அவர் முகம் முழுவதும் சந்தோசம் பரவிக் கிடந்தது.
அவளை பார்த்து பார்வதி தம்ஸ் அப் காட்ட,பதிலுக்குத் தானும் கைகள் இரண்டையும் தூக்கி தம்ஸப் காட்டினாள். பின் ஆனந்த் அவளை அழைத்து மைக்கை கொடுத்து இந்த தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ளச் சொன்னான்.
“என்ன சொல்றதுன்னு தெரியல! சத்தியமா இந்த தருணத்தை எதிர்பார்க்கலை நான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. கை எல்லாம் நடுங்குது எனக்கு!”என்றவள் சிரிக்க அரங்கமும் சிரித்தது.
“நான் பைனலிஸ்ட் ஆனதை விட அனு,ஸ்ரீ இவங்க ரெண்டு பேரும் ஃபைனலிஸ்ட் ஆனது ரொம்ப ரொம்ப சந்தோஷம். தே ஆர் டிசர்வ்! ரொம்ப ரொம்ப நன்றி எனக்காக ஓட்டு போட்ட மக்கள் அனைவருக்கும். தேங்க்ஸ் டு மை டியர் ஜட்ஜெஸ் அண்ட் சூப்பர் சிங்கர் டீம்! இந்த ஷோக்கு வர காரணமா இருந்த எங்க அம்மா பார்வதி, ஐ லவ் யூ அம்மா!”என்றவள் அதிகம் உணர்ச்சிவயப்பட்டிருந்தாள்.
விழி மூடித்திறந்து ஒரு நொடி தயங்கி பின் அங்கிருந்தவர்களை பார்த்து,
“முக்கியமா…நான் இன்னொருத்தருக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஸ்பெஷல் பர்சன் டு மீ! ஹி இஸ் கார்த்திக். ஒரு வெல் விஷரா, ஒரு பிரண்டா ரொம்பவே சப்போட்டிவா இருந்தாரு! தேங்க்யூ சோ மச் கார்த்திக்!”என்று மென்மையாக பேசியவளின் பார்வை இப்போது அவனிடம். அவள் பார்வை மட்டுமன்றி சுற்றி இருந்த மக்களோடு பத்து கேமராக்களின் பார்வையும் அவன் மீது பதிந்தது.
ஷக்தியிடமிருந்து சத்தியமாக இதை எதிர்பார்த்திருக்கவில்லை கார்த்திக்.ஷக்தி அவனை பற்றி பேசியதிலே திகைப்பில் இருந்தவன்,அனைவரினதும் பார்வையும் தன் மேல் விழுவதைக் கண்டு,உடனே சாதாரணமாக முக பாவனையை மாற்றி அவள் நன்றியை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக தலையை அசைத்து ஒரு புன்னகை சிந்தினான். அங்கிருப்பவர்களிடம் இருந்து வேறந்த கேள்விகளும் எழும் முன் அதை தவிர்க்க நினைத்தான் அவன். அதனாலயே சிரிப்புடன் நிறுத்திக் கொண்டான்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட நினைக்கவில்லை டிஆர்பி ரேட்டிங்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இந்த மீடியக்காரன்.
நிகழ்ச்சியின் டிரக்டர் குழுவிடமிருந்து கிடைத்த அறிவிப்பில்,உடன்பாடு இல்லையென்றாலும் அதை பிரியாவின் காதிலிருந்த ப்ளூ டூத் வழியே சொன்னான் பார்த்திபன்.
ஷக்தி,கார்த்திக் பற்றி பேசும் போதே,அடுத்து எவ்வாறு நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என திட்டத்தை போட்டு விட்டனர்.ஷக்தி உணர்ச்சிப் பெருக்கில் சொன்ன நன்றி வினையாகப் போவதை அறிந்திருக்கவில்லை அவள்.
கார்த்திக் கேள்விகளை தவிர்க்க நினைக்க,பிடித்துக் கொண்டாள் பிரியா.
“டேய்!கார்த்திக் எங்க எஸ் ஆக பார்க்கற?நாங்க கேக்கற கேள்விக்கு ஒழுங்க பதில் சொல்லு!”என பிரியா சிரிப்புடன் அதட்டி விட்டு,
“அவன்ட்ட மைக்கை கொடுங்க!”என்றாள்.
இல்லையென தலையாட்டிவனை கணக்கில் கொள்ளாமல் அவனிடம் மைக் கொடுக்கப்பட்டது.
பிரியா,”என்னடா நீ?அந்த பொண்ணு நன்றி சொல்லுது. மண்டையை மட்டும் ஆட்டற?”எனக் கேட்க,சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டானே தவிர பதிலளிக்கவில்லை அவன்.
“பிரியா!ஷக்தி மட்டும் எப்டி க்ளோஸ்னு கேளுங்க!” – பார்த்திபன் காதினுள் சொல்ல,
“கார்த்திக்!அது என்ன நீ ஷக்திக்கு மட்டும் வெல்விஷரா, ப்ரெண்டா இருக்கறது?எப்படி நீ ஷக்தியோட மட்டும் க்ளோஸ்?”எனும் பிரியாவின் கேள்வியில் அதிர்ந்து நின்றாள் ஷக்தி.
பிரியா சிரித்தபடி கேட்டிருந்தாலும் அந்த கேள்வியின் தொனியே வேறு மாதிரியாக இருந்தது.பார்வதி உட்பட பார்வையாளராக உள்ள அனைவருக்குமே அந்த கேள்வியின் உள்ள அர்த்தம் புரியாமலிருக்க, புரிந்து.. அதிர்ந்த ஷக்தி கார்த்திக்கை பார்க்க அவன் பார்வை, அவளைப் பார்ப்பதை தவிர்த்தது.
“இவன் சரி பட்டு வர மாட்டான்டா பசங்களா!தூக்கிட்டு வாங்கடா அவனை!”என பிரியா அதிரடியாக சொல்ல, வேண்டாம் என தலையசைத்தவன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து தானே ஸ்டேஜ் பக்கம் வந்து நின்று கொண்டான்.
“சிரிக்காம,கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற கார்த்திக்?”என தொகுப்பாளினியாய் தன் கடமையை செவ்வனே செய்தவள் அவனை மிரட்டிக் கேட்க,
கேமராக்களுக்காக ஒரு புன்னகை சிந்தியவன்,”நம்ம சேனல்ல கடந்த அஞ்சு வருஷமா வொர்க் பண்றேன்!இந்த சேனல் தான் கார்த்திக்-ன்ற சாதாரண கீபோர்ட் பிளேயரை,இந்த மூனு வருசத்துல பிரபலம் செஞ்சது. இந்த லைம்லைட் (the center of public attention)ஆர் மீடியா பேர்சன் ஆன அப்பறம் நிறைய பேருக்கு நம்மல தெரீதுன்னு சந்தோசம் இருந்தாலும்,ஆனா ஏதோவொரு இடத்தில இப்படி இருந்திருக்க வேணாம்னு தோணும்!சுதந்திரமா வெளிய போக முடியாம இருக்கும் போது! சாதாரணமா ஒருத்தரை பார்த்து சிரிக்க கூட யோசிக்கும் போது!என் ஃபேமிலியே என்னோட வெளிய வர யோசிக்கும் போது-ன்னு.. நிறைய இடங்கல்ல!” என அவன் பேச,
“நான் கேட்டதுக்கு நீ என்ன சொல்ற கார்த்திக்?”என இடையிட்டாள் பிரியா.
அதற்கு இதழ் பிரியாமல் சிரித்து விட்டு, “என்னை கார்த்திக் ராமச்சந்திரனா பார்த்த பார்வைக்கும், கே.கேவா பார்க்கற பார்வைக்கும் இப்போ நிறைய வித்தியாசங்கள்!ஆவலா, ஆர்வமா என்கிட்ட ஒரு வாட்டியாவது பேசிடனும்,ஒரு செல்ஃபியாவது வாங்கிடனும்னு தான் இங்க நிறைய பேர் எதிர்பார்ப்பு!என்னை கேகேவா பார்க்கற நிறைய பேர் என்கிட்ட நட்பு பாராட்ட கூட யோசிப்பாங்க!மீடியா பெர்சன்னதால எப்போவுமே என்னை சுத்தி கேமரா வெளிச்சம் இருக்கும்னு பயம்!அது எதார்த்தம்! அவங்க பயம் கூட தப்பில்லை.. இங்க இருக்கற நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்!” என அங்கிருந்தவர்களை பார்க்க நடுவர்கள் உட்பட அனைவரும் ஆமோதிப்பதாக தலை அசைத்தனர்.
அவன் மேலும் தொடர்ந்தான்.
“ஹ்ம்ம்!!அதே சாதாரண கார்த்திக் தான் இப்பவும் இருக்கான்னு யாருக்கும் புரியரதில்ல.ஈவின் என் ரிலேடிவ்ஸ்க்கு கூட! ஆனா ஷக்தி மட்டும் அதுக்கு விதிவிலக்கானவங்க! அவங்களுக்கு மட்டும் தான் இந்த கே.கே கார்த்திக்கா தெரிஞ்சான். அதனால அவங்களுக்கு மட்டும் ஃப்ரெண்ட்டா வெல் விஷரா.. இருக்கிறது ஒன்னும் தப்பில்லையே?! கார்த்திக் மேல அவங்களுக்கு நம்பிக்கை.. கேமாரக்களும், பார்வைகளும் எங்க ரெண்டு பேருக்கான பிணைப்பை அழகான நட்பா தான் வெளிப்படுத்தும்னு! எனக்குமே நம்ம சேனல் மேல அளவு கடந்த நம்பிக்கை இருக்கு!”என சிரிப்போடு அழுத்தமாக முடித்தவன்,
“நான் சொல்றது சரிதானே பிரியா!”என்றான்.
அவன் பேசியதில் அசந்திருந்தவள், “டேய் கருப்பு சட்டை கார்த்திக்! கம்முன்னு இருக்கற நீயா இப்படி கருத்தா பேசறது? ஓஹ் மை காட்!என்னாமா கருத்தா பேசிட்டான் எங்க கார்த்திக்!”என்று ஆராவாரம் செய்ய அங்கிருந்தவர்களின் சிரிப்பலையுடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.
பிரியாவின் கேள்விகள் மூலம் டிரக்டர் குழு விரித்த வலையை அறிந்தே அவன் பதில்களும் வந்தன. சிரிப்புடனே அதற்கான கொட்டுக்களையும் வைத்திருந்தான் கார்த்திக். அவர்களே நினைத்தாலும் இனி மேல் கார்த்திக்,ஷக்தி பற்றி வேறு கோணத்தில் வெளியிட முடியாது. கார்த்திக் சொன்ன நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தை அதை தடுத்துவிட்டது.இவர்கள் இருவரையும் நண்பர்களாக இன்றி காதலர்களாக காட்ட முயற்சித்தால் வெளியே சேனலுக்கு எதிராக கேள்விகள் எழ வாய்ப்புண்டு. அதனாலே மேலும் கேள்விகளை கேட்காமல் நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.ஆனால் விதி செய்யும் சதி??!!!
வீடு நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த ஷக்தியின் மூளை முடுக்கெல்லாம் அவன் ஒருவனின் பேச்சே ஓடிக் கொண்டிருந்தது. அவன் பேச்சில் ஒரு முறை தன்னையே சுய அலசல் செய்து கொண்டாள்.இன்று நிகழ்ச்சியில் அவள் பேசியதை தனக்குள்ளே ஓட்டிப் பார்த்துக் கொண்டாள்.
ஃபைனல் செலெக்ட் செய்யப்பட்ட போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டிருந்தாள் தான்.. தனக்கு பக்க பலமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொன்னாள்..
அதே போல் தான்,அவள் துவண்டு போகும் நேரங்களில் துணையிருந்த கார்த்திக் பற்றி அந்த நேரத்தில் சொல்லவும் செய்தாள்.அவளுக்கு அந்த மேடை தான் அப்போது சரி என்றுபட்டது..ஆனால் இப்போது அது தவறோ என்று தோன்றாமலில்லை..
பிரியா கேட்ட கேள்வியில் தான்,அவள் பேச்சில் சறுக்கியதை உணர்ந்து கொண்டாள்.அவனை நண்பன், தனக்கு மட்டுமேயான ஸ்பெஷல் பெர்சன் என சொல்லாமல் இருந்திருந்திருந்தால் அந்த கேள்வியே எழுந்திருக்காதோ? பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டவள்,அவன் பேச்சில் ஒழிந்திருந்ததை அறிந்து கொண்டாள்.
கார்த்திக்,அந்த கேள்விக்கான பதிலை அவளை சாராது தன்னை மட்டும் சுற்றி இருப்பது போலவே சொல்லிருந்தான். எதிர்காலத்தில் அவளை பற்றி பேச்சுக்கள் பரவாதவாரு மறைமுகமாக பேசினான் என்று சொல்லலாம்.
அவன் பேசியது வேறு நடந்தது வேறு என அவளுக்கு தெரியும். ஷக்தி,அவனை கார்த்திக்காக பார்க்காமல் கேகேவாக அல்லவா பார்த்தாள்.அவள் பார்வையில் அவனைக் காணும் போது எப்போதும் ஆர்வமும் ஆவலும் தான் தோன்றும்!அவன் அதனால் தான் தன்னை விலக்கி நிறுத்தினான் என இப்போது புரிந்தது.
அவள் சாதாரணமாக அவனுடன் பழகிருந்தால் நிச்சயமாக அவளை விட்டு விலகுவதிலும்,அவளை விலக்குவதிலும் குறியாக இருந்திருக்க மாட்டான்.ஆம்! ஃபேமஸ் கீ போர்ட் பிளேயர் கே.கேவாக பார்க்கும் ஆர்வப் பார்வை அல்லாது இவள் இயல்பாக பேசும் தருணங்களில் அவனும் இயல்பாக இருந்திருக்கிறான். ஆனால் இன்று அவள் நன்றி சொன்னது அப்படியில்லை. அவள் வியந்து ஆர்வத்துடன் பார்க்கும் கே.கேவாக அவனை நினைத்து நன்றி நவிலவில்லை!அவளின் கார்த்திக்காக நினைத்தாள்!ஆம் அவள் விரும்பும், காதலிக்கும் கார்த்திக்!