அவன்!கார்த்திக்கேய ராமச்சந்திரன்..!சுருக்கமாக கே.கே! சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியின் இசைக்குழுவை சேர்ந்தவன்,கடந்த ஐந்து வருடமாக இந்த சேனலிலும், இந்நிகழ்ச்சியிலும் வேலை செய்வதால் அவனை இலகுவாக இனம் கண்டு கொண்டார் அவர்.
தங்களை நெருங்கி வந்த கார்த்திக்கை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தார் பார்வதி.முதலில் பார்வதியை கண்டிராதவன் அவர் அருகில் சென்ற போது தான் அவர் முறுவலிப்பை கவனித்தான். அவனை டீவியில் பார்த்திருந்ததால் புன்னகைக்கிறார் என நினைத்துக் கொண்டவன், பதிலுக்கு தானும் புன்னகைத்தபடி அவர்களை கடந்து செல்ல முயன்றான்.
“தம்பி,ஒரு உதவி?”எனும் பார்வதியின் குரலில் அவரை பார்த்த கார்த்திக்,
“சொல்லுங்கம்மா..?”என பணிவுடன் வினவ,
“இது என் பொண்ணு ஷக்தி.ஆடிசனுக்காக வந்துருக்கோம். வழி தெரியல..கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?”என கேட்டார்.
அவர் ஷக்தியை கை காட்டியதில் தான் அங்கிருந்தவளை கவனித்தான் அவன்.
பதட்டத்தில் நகத்தை கடித்த படி செட் வாயிலேயே நோக்கிக் கொண்டிருந்தாள் ஷக்தி. அவள் பதட்டத்தை பார்த்து கோடாக சிரித்துக் கொண்டவன்,சரி என்பதை போல பார்வதியிடம் தலை அசைத்து முன்னால் செல்ல,
“கார்த்திக் தம்பி உதவி செய்யறார்னு சொல்லியிருக்கார் டி..!”
“கார்த்திக்கா..?”
“ஆமா..உங்க ஷோல வேலை செய்யறாரே அவர்!முன்னாடி போறார்!வா நம்ம போலாம்..!”என அவசரப்படுத்தினார் பார்வதி.
“மா..!அவர் கிட்ட நீ எப்போ பேசின?”தாயின் இழுப்புக்கு சென்றவாரு வினவினாள் அவள்.
“இப்போ தான். நீ எங்கே கவனத்தை வெச்சிருந்த.. அந்தா,அந்த தம்பி நம்மல தான் திரும்பி பார்க்குது ஷக்தி,வா!”
புருவம் மேலுயர ஆர்வப் பார்வையுடன் பார்வதி சென்ற திசையில் அவனை நோக்கினாள் ஷக்தி.
இவர்கள் இருவரும் வராமல் போகவும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் காரத்திக்.
அதில் குறிப்பாக ஷக்தியை பார்த்தவன் அவள் ஆர்வப்பார்வையை கண்டு கொண்டான்..அவனுக்கு பழகிப் போன பார்வை அது!சேனலில் வேலை செய்து வருவதால்.. பிரபலமாகி இருந்த இந்த நான்கு வருடங்களில் இது போல எத்தனையோ பார்வையை எதிர் கொண்டவன் தான் சிறியவர்கள்,இளைஞர்கள், பெரியவர்கள் உட்பட அவனை பிரபலமாக தெரிந்தவர்கள் அனைவரும் இதே பார்வையில் தான் முதலில் அவனை பார்ப்பார்கள்.சற்று முன்பு பார்வதியிடம் கூட இதே பார்வையை கண்டிருந்தான் அவன்.
அதனால் தான் ஷக்தியின் பார்வையைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் எதார்த்தமாக கடந்து விட்டான்.
ஆனால் ஷக்திக்கு தான் அவனைப் போல் அத்தனை இலகுவில் கடக்க முடியவில்லை. அவன் தன்னை நோக்கியதிலே கண்களை விரித்து.. அதிர்ச்சியையும்,ஆவலையும் வெளிப்படையாக காட்டிருந்தாள் அவள்.
ஒன்றரை மணி நேர சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெறும் பத்து நிமிடத்திற்கு குறைவாகவே கேமராக்கள் இவனை வெளிப்படுத்தினாலும் பெண் ரசிகர்கள் அதிகம் கார்த்திகேயனுக்கு.அதில் ஓரளவு அவளும் உள்ளடக்கம். அந்த மியூசிக் பேண்டில் மிகவும் இளையவன் இவன் தான் என்பதாலோ என்னவோ இவனுக்கு ஃபாலோவர்ஸ் அதிகம்.
அவனை நினைத்த படியே.. செட்டினுள் நுழைந்திருந்தாள் ஷக்தி. கண்களை கூசச் செய்த லைட்டிங்கில் கார்த்திக்கின் நினைவிலிருந்து வெளிவந்தவள், அங்கிருந்த செட்டை பார்த்து வாயை பிளந்தாள்.
டீவியில் பார்ப்பதை விட மிக பெரிதாக இருந்தது. இன்றைய நாள் ஆடிஷன் என்பதால் அதற்கேற்ப செட் தயாராகிருக்க,அந்த இடத்தை சுற்றி பத்துக்கும் குறையாத கேமராக்கள் இருந்தன.
பார்வையாளர்களுக்கான இடம் சிம்பிளாக இருந்தாலும்,படிகட்டு வரிசையில் மூன்று படிக்கட்டுகள் உள்ளவாறு அமைக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்களுக்கான இருக்கைகள்,நடுவர்கள் இருக்கையின் கீழ்..சிவப்பு பஞ்சு தலையணை போடப்பட்டு.. நீல நிறத்தில் கதிரை அமைக்கப்பட்டு இருந்தது. அதே போலவே நடுவர்கள் இருக்கையும் சிவப்பு நிறத்தில் வெல்வட் சோஃபாவாக போடப்பட்டிருந்தது. மொத்தத்தில் ஸ்டேஜ் தொடக்கம் அந்த செட்டே சிவப்பு,நீல நிறங்களில் தீம் செய்யப்பட்டு கண்களை பறித்தது.
தனக்கு இருக்கும் நீண்ட விழிகளை மேலும் மேலும் விரித்து அடங்கா ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷக்தி.தான் இங்கு தான் பாடப் போவாதாக நினைக்கும் போதே..அவள் உடலில் நடுக்கத்துடன் கூடிய சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
“ஆல் ஓகே..?”எனும் சத்தத்தில் சுயத்திற்கு வந்தாள் ஷக்தி. அந்த ஷோவின் டைரக்டர் பெண் தான் அங்கு வேலை செய்பவர்களை பார்த்து மைக்கில் கேட்டுக் கொண்ருந்தார்.
அதை பார்த்தபடி தன் பக்கத்தில் நின்ற பார்வதியை தேட அவரைக் காணவில்லை.
அங்கிருந்த அலங்காரங்களை ரசிக்கும் போது இல்லாத நடுக்கம் தாயைக் காணாததால் வந்தொட்டிக் கொண்டது அவளிடம்.
“மா..!பாரு..!”என சின்னகுரலில் அழைத்த படி.. அங்கிருந்தவர்களின் நடுவே தேடியவள் பயத்தோடு வந்த பதட்டத்தில் கலங்க பார்த்த விழிகளை சிமிட்டினாள்.
‘அடச்சே!நான் தான் அழுக மாட்டேனே..?எல்லாம் இந்தா பாருவால வந்தது..இப்படி புலம்பலோட அழுக விட்டுடுச்சி!! பார்வதிதிதி…… இந்த கைப்புள்ளையே கலங்க வெச்சிட்டல்ல..?’ அவள் மைண்ட் வாய்ஸோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்க,
“ஷக்தி”எனும் அழைப்பில் திரும்பினாள்.அவன் தான் நின்றிருந்தான்!கார்த்திகேயன்!
“சொ..சொல்லுங்க!”வாய் தந்தியடித்தது அவனை பார்த்து.
‘இது வேற கொழருதே!முருகா!’ – அவள் மனசாட்சி தான் இம்முறையும் அடங்காமல்.
அவள் முகத்தில் வந்து போகும் பாவனையை கண்டு முறுவலித்தான் அவன்.
“பார்வதி ஆண்ட்டி அங்க நிக்கிறாங்க.உன்னை அவசரமா வரச் சொன்னாங்க!நான் என் பிளேஸ்க்கு கிளம்பறேன். ஆல் தி பெஸ்ட் ஷக்தி”என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து அகன்று விட்டான்.
‘ச்சே..போயிட்டான்!ஒரு தேங்க்ஸ் சொல்லாம விட்டுட்டியே ஷக்தி!பார்த்து பத்து நிமிசம் கூட ஆகல..இந்த பார்வதியை ப்ரெண்ட்டாக்கிட்டான். சகஜமா வேற பழகறான்.குட் பாய்!’
“அடியே!என் பக்கத்துல வந்து நின்னும் என்ன யோசனையோட இருக்க..?அந்த கார்த்திக் தம்பி நமக்காக ஹெல்ப் செய்யுது!நீ பாட்டுக்கு பராக்கு பார்த்து நின்னுட்ட..!” யோசனையோடு தன் அருகில் நின்ற மகளை பார்த்து அதட்டினார் பார்வதி.
“ஒன்னுமில்லை மா!நீ தான் என்னை அம்போன்னு விட்டு போயிட்ட! கார்த்திகை வேற ஃப்ரெண்ட் பிடிச்சிட்ட போல..!”
“போமா, நீ வேற..!அவன் எனக்கு விஷ் பண்ணிட்டு நான் ஒரு தேங்க்ஸ் சொல்ல வரும் போதே அங்கிருந்து போயிட்டான்..!அப்போ இது ஆட்டிட்டியூட் இல்லையா..?”
“எதோ அந்த பையனை குறை சொல்லனும்னு சொல்லாதடி! தங்கமான பையன்”என்ற தாயிடம்,
“ரொம்ப சப்போர்ட் செய்யற மா நீ..?”எனப் பொரும,
“ஹ்க்கும்!!”என நொடித்துக் கொண்டார் பார்வதி.
அவள் பதில் பேச வருவதற்குள்,
“ஷோ ஸ்டார்ட் ஆக இன்னும் அரை மணிநேரம் தான் இருக்கு!சோ கண்டஸ்ட்டென்ட்ஸ் எல்லாரும் அவங்க இடத்துக்கு போங்க!”என நிகழ்ச்சியின் இயக்குனர் மைக்கில் அறிவிப்பு விட ஷக்தியின் பேச்சு நிறுத்தப்பட்டு மீண்டும் பாடுவதை நினைத்து பயம் பிடித்துக் கொண்டது.
“மா..!பயமா இருக்கு மா!!” என நடுங்கிய குரலில் தாயின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்வளுக்கு பயத்தில் கால்கள் தள்ளாடின.
பயத்தில் குளிர் பரவியிருந்த அவள் கைகளை அழுத்திய பார்வதி, “அடியே!! இதுக்கே இப்படி பயப்படுற..?!ஆனா என்கிட்ட மட்டும் வீர வசனம் பேசின..?!”என கேலிக் குரலில் அவளை வாரினார்.
காலையில் வீட்டிலிருந்து புறப்படும் போது ‘நான் பாடி செலக்ட் ஆகல..?!! என் பேரு ஷக்தி இல்ல!’ என சவால் விட்டதை நினைத்து நொந்து கொண்டவள்,
“மீ…!”தாயை பார்த்து பல்லை கடித்தாள்.
“ஆமா நான் தான்!!”நமுட்டுச் சிரித்தார் பார்வதி.
“ஹே.. ஹே…இப்ப நீ சொன்னது என்ன காமெடியா??!எனக்கு சிரிக்க டைமில்ல!”என்று கடுப்படிக்க,
“அப்ப கொஞ்ச நேரம் கழிச்சி சிரிச்சுக்க!”அடங்குவதாக இல்லை பார்வதி.
“மா…கொலை காண்டுல இருக்கேன் நான்!!!”
“அப்படியா..? இருந்துக்க!”
“எங்கயாவது இப்படி ஒரு தாய் இருப்பாங்களா..?!கடவுளே!!என் அப்பா பாவம்” என தாயை பார்த்து முறைத்தாள் அவள்.
கண்களை விரித்து தாயை பார்த்தவளிடத்தில், முன்னே இருந்த பயம் எங்கோ சென்றிருந்தது. இப்போது தான் பார்வதி இவ்வளவு சீரியஸான நிலையிலும் தன் பயம் போக்குவதற்காக வாயடித்திருக்கிறார் என புரிந்தது.. காலையிலும் அவர் செய்த சேட்டைகள் இதற்காகவே என புரிந்து கொண்டவள், கண்கள் பணிக்க தாயை ஏறிட்டாள்.
“அவ்வளவு சீனல்லாம் இல்ல..!”அவள் பார்வை உணர்ந்து பார்வதி கிண்டல் செய்ய,
பார்வதி அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை அவளுக்கு.தாயை முடிந்த மட்டும் முறைத்தவள் தங்களை தேடிக் கொண்டிருந்த தந்தையை அப்போது தான் பார்த்தாள்.
“அப்பா..அப்பா..!!இங்க இருக்கோம்!”சின்னக் குரலில் தந்தையை அழைத்தபடி வலது கையை மேல் நோக்கி அசைத்தாள். அங்கிருந்த கூட்டத்தால் ஷக்தியின் அழைப்பு அவர் காதில் விழவில்லை.
எதற்சையாக திரும்பிய கார்த்திக்கின் கண்களில் விழுந்தது அவள் செய்கை. இடது கையால் தாயின் தோளை பிடித்தபடி வலது கை மேலே உயர்ந்திருக்க.. நின்ற இடத்திலிருந்தே குதித்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. பக்கத்தில் இருந்தவரிடத்தில் ஏதோ கூறியவன்,அவன் இடத்தை விட்டு கீழிறங்கி அவளை நோக்கி வந்தான்.
“ஆண்ட்டி..!”கார்த்திக்கின் அழைப்பில் பக்கத்தில் உள்ளவரிடத்தில் பேசிக் கொண்டிருந்த பார்வதி திரும்பி பார்த்தார்.ஆனால் துள்ளிக் கொண்டிருந்தவளின் துள்ளல் குறையவில்லை.
“என்ன ப்பா கார்த்திக்..?எதுக்கு கூப்ட்ட?”
பக்கத்தில் எட்டி எட்டி குதித்துக் கொண்டிருந்தவளிடத்தில் அவன் பார்வை சென்றது.
கார்த்திக்கின் பார்வையை தொடர்ந்து பார்வதியின் பார்வையும் இப்போது அவளிடம்.
அப்போது தான் கவனித்தார் தன் மகள் குதித்துக் கொண்டிருப்பதை.
“ஷக்தி!!”கொஞ்சம் சத்தமாகவே அழைத்தார் அவர்.
“ப்ச்..என்ன மா!” என்று சலிப்புடன் துள்ளலை நிறுத்தியவள் தாயை திரும்பி பார்த்தாள்.பார்வதியுடன் அங்கிருந்தவனை கண்டவளிடத்தில் சங்கட புன்னகை ஒன்று ஒட்டிக் கொண்டது.
“நான் போய் அங்கிளை கூட்டிட்டு வரேன்!” மென்னகையுடன் இடையிட்டான் அவன்.
“இல்ல..இல்ல..நீங்க நிறைய ஹெல்ப் பன்ணீட்டீங்க!!” என தயக்கத்துடன் மறுத்தாள் ஷக்தி.
“ஆமா பா..!நானே போய் கூட்டிட்டு வரேன்!”சிரிப்புடன் பார்வதியும் மறுத்தார்.
“இட்ஸ் ஓகே ஆண்ட்டி. நானே போய் அவரை அழைச்சிட்டு வரேன்!”
என்று கூறி அவர்கள் இருவரின் பதிலை எதிர் பார்க்காமல் ஷக்தியின் தந்தையை நோக்கி சென்றவனுக்கு தன்னிலை புரிய யோசனை சூழ்ந்து கொண்டது.
‘டேய் கார்த்திக். நீயே போய் இப்படி வாண்டட்டா ஹெல்ப் செய்யறது நல்லதுகில்ல!சுத்தி கேமரா இருக்கு!நீ இருக்கிற ஃபீல்ட் வேற எப்ப வேணாலும் உன்ன கீழ தள்ளி விடலாம். கண்ணு,காது வெச்சி பேசற இண்டஸ்ட்ரி இது!முதல்ல ஏதோ.. வழி தெரியாம கேட்டாங்க உதவி பண்ணிட்ட!ஆனா இப்போ நீ செய்யறது சரி இல்ல!ஷக்தி இதுகுள்ள மாட்டிக்க வாய்ப்பிருக்கு! கொஞ்ச நேரத்துக்கு முன்ன எப்படி அவளுக்கு விஷ் பண்ணிட்டு ஒதுங்கி போனியோ..அப்படியே இரு!’
வெள்ளித் திரையோ சின்னத்திரையோ,இந்த இண்டஸ்ட்ரியில் கார்த்திக் போல பிரபலமாக இருப்பவர்களை.. எப்போதுமே கேமராக் கண்கள் கழுகை விட மோசமாக சுற்றிக் கொண்டிருக்கும் அல்லவா? வீழ்த்துவதற்கென்றே கருப்பாடுகள் இருக்கும் மந்தை கூட்டமிது.
என்ன தான் ஷக்தியின் ஆர்வ பார்வையை இவன் சாதாரணமாக கடந்து சென்றாலும்.. அவனை அறியாமலே அவள் செட்டினுள் நுழைந்ததில் இருந்து ஷக்தியின் ஒவ்வரு அசைவுகளையும் கவனித்திருந்தான் இவன்.
பார்வதியை மறந்து அவள் இவ்விடத்தை பிரமிப்பாக பார்த்துக் கொண்டதை பார்த்தவனுக்கு,முதல் முதலில் மீடியாவிற்குள் நுழையும் போதிருந்த சிறு வயது கார்த்திக்கை பிரதிபலிப்பது போல் இருந்தது அவள் செய்கைகள்.
அதனால் தான் அவனே போய் பேசி அவளுக்கு விஷும் செய்திருந்தவன்,தான் இருக்கும் இடம் புரிந்து அவள் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றிருந்தான்.
ஆனால் மீண்டும் அவளிடம் தன்னை இழுத்து வந்ததென்ன..?அவளின் அதே செய்கை! ஹ்ம்ம்!!அவளை பார்த்தால் தன் விம்பம் தான் தோன்றுகிறது!இது சரியில்லை!
மனோகரை நோக்கி சென்றவன் அவர் தானா அவளின் தந்தை என உறுதிப்படுத்துவதற்கு, பின்னால் திரும்பி ஷக்தியை பார்க்க,
“அப்பா”என்பதை போல் கையால் மனோகரை சுட்டிக் காட்டினாள் அவள்.
சரி என்பது போல் தலையாட்டி கொண்டவன் மனோகரிடம் தன்னை அறிமுகம் செய்து, பார்வதி,ஷக்தி இருக்கும் இடத்தை கூறிவிட்டு அங்கிருந்து தன் இடத்திற்கு சென்று விட்டான்.
அதன் பின் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கு பற்றிருந்த சுமார் ஐம்பது பேரையும் அழைத்து..அவர்கள் பாடுவதற்கு வரிசையாக இலக்கங்கள் அடங்கி அட்டையை பேட்ச் போல இடது பக்க நெஞ்சில் குற்றிக் கொள்ள கொடுத்தார்கள். ஷக்திக்கு 27 ஆவது ஆளாக இலக்கம் கொடுக்கப்பட்டது.
நிமிடங்கள் கரைந்திருக்க ஆடிஷன் பற்றி விபரித்தான் அங்கு வந்த அசிஸ்டன் டைரக்டர் பார்த்திபன்.
“மொத்தம் ஐம்பது கண்டஸ்ட்டென்ஸ் இருக்கீங்க.ஒருத்தருக்கு ஒரு தடவை தான் வாய்ப்பு, சோ மிஸ் செய்யாம கான்பிடன்ட்டா பாடுங்க.”என்றவாறு அவர்களை உற்சாக மூட்டியவன்,
“ஒருத்தர் பாட ரெண்டு நிமிஷம் கொடுக்கப்படும்.நீங்க உங்களுக்கு பிடிச்ச எந்த பாட்டு வேணா பாடலாம்.ஆனா பாட்டு பாட முன்னாடி.. என்ன பாட்டு பாட போறீங்கன்னு சொல்லிடுங்க!அப்போ தான் மியூசிக் பாண்ட் அவங்க வேலையை கரக்டா செய்ய முடியும்.உங்களுக்கு தந்த நம்பர் ஆர்டர் படி..நான் பேசி முடிச்சதும் என்கிட்ட உங்க பேரோட நீங்க பாடற பாட்டு பேரையும் சொல்லிட்டு போங்க!
அண்ட் இன்னொரு விசயம்!இந்த ஷோக்கு வர முன்னாடியே அக்ரீமெண்ட்ல இருக்கற டேர்ம்ஸ் அண்ட் கண்டிசென்ஸ் தெரிஞ்சிருக்கும்! ஓகே கைஸ்..!நான் சொல்ல வேண்டியது இவ்வளவு தான்.இந்த ஷோல எலிமினேட் ஆனாலும்..நீங்க உங்க ஹோப்பை விட்டுடாதீங்க!இதை விட பெட்டரான பெர்பாமெண்ட்ஸ் அடுத்த சீஸன்ல கொடுங்க!ஆல் தி பெஸ்ட் அகைன்!”
பார்த்திபன் பேசி முடித்த பின் அவனிடமும்,அவனோடு உதவிக்கு வந்திருந்த காஸ்டிங் அசிஸ்டென்ட்டிடமும் பெயர், இலக்கம்,பாடும் பாடல் என அனைத்தும் கொடுக்கப்பட்டது.
அவ்வாறு ஐம்பது பேரில் பத்து பேர் ஏ.ஆர் ரஹ்மானின் இசையிலுள்ள ஒரே பாடலையும்,இன்னும் மூவர் இளையராஜாவின் ஒரே பாடலையும்,அத்தோடு எட்டு பேர் அனிரூத்தின் ஒரே பாடலையும் கொடுத்திருந்தனர்.ஷக்தி சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளிவந்த “மாய நதி”பாடலை கொடுத்திருக்க அவளை போலவே அதில் கலந்து கொண்ட ஆதித்யா என்றொருவன் அதே பாடலை கொடுத்திருந்தான்.
அதில் ஷக்தியும்,ஆதியும் ஸ்நேகமாக புன்னகைத்துக் கொண்டதுடன் நண்பர்களாயினர்.
அவ்வாறே இவர்கள் டீமில் ஆதியின் நண்பர்கள் கலந்து கொள்ள ஷக்திக்கு இந்த முதல் அனுபத்தில் முதல் இனிப்பாக நட்பு சேர்ந்து கொண்டது. இப்படியாக அங்கு பல நட்புக்கள் மலர..நிகழ்ச்சியும் ஆரம்பமானது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உள்ளுக்குள் பதட்டம் இருப்பினும் சில பேர் மறைத்துக் கொண்டனர், இன்னும் சில பேர் இங்கு நடக்க போகும் நிகழ்வுகளையும், தாங்கள் டீவியில் வர போகிறோம் எனும் ஆர்வத்திலும் மறந்து போயினர்.
“ஓகே,ஸ்டார்ட் தி ஷோவ்!!”என ஏ.டி பார்த்திபன் மைக்கில் அறிவிக்க.. நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் இருவர் ஸ்டேஜின் பின்னால் இருந்து வெளிப்பட்டனர்.
“ஹாய்,ஹலோ,வணக்கம், வெல்கம் டு ஏசியன் பெயிண்ட்ஸ் வழங்கும் சூப்பர் சிங்கர் சீஸன் எயிட்!பவர்ட் பை கார்டியா அட்வான்ஸ் கடலை எண்ணெய் மற்றும் கே.ஏ.ஜே டைல்ஸ்!” – போடப்பட்ட பாடலுடன் ஆடிக் கொண்டு வந்த பெண் தொகுப்பாளர் பிரியா சொல்ல,
“கோ பிரசெண்டாட் பை ஏ.வி.டி கோல்ட் கப் டீ, கால்கேட் மற்றும் டாட்டா டி.எம்.டி கம்பிகள்!”என ஆண் தொகுப்பாளர் ஆனந்த் அவளை தொடர்ந்து கூறினான்.
“இன்னைக்கு சீசன் எயிட்டோட ஆடிசன் செலக்சன்!சோ வெல்கம் நியூ பியூடிஃபுல்,கலர்புல் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்!பயப்படாம பாடுங்க!என்ஜாய் பண்ணுங்க!ஜாலியா ஜிம்கானா..!”என பிரியா சொல்ல அந்த இடத்தை பார்வையாளர்களினதும், போட்டியாளர்களினதும் கை தட்டல்கள் நிறைத்தது.
“இந்த வருஷமாச்சும் எனக்கு நல்ல ஆங்கர் கிடைப்பாங்கன்னு நினைச்சேன்!ஆனா அது ஆண்டவனுக்கு கூட பொறுக்கல போல..!மறுபடியும் இவளையே எனக்கு கோ – ஆங்கரா கோர்த்து விட்டார்!!”என வாரினான் ஆனந்த்.
அதற்கு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அவர்கள் இருவரும் மாறி மாறி வாரிக் கொண்டிருக்க,பின் அந்த சீசனின் நடுவர்களை அறிமுகம் செய்தனர்.
“ஜட்ஜ்ஸை கூப்பிடற நேரமாச்சு, லெட்ஸ் வெல்கம் அவர் லவ்லி ஜட்ஜ்ஜஸ் பெனிடயால் சார், ஸ்வேதா மேம்,உன்னிகிருஷ்ணன் சார் அண்ட் அனுராதா ஶ்ரீராம்!” – தொகுப்பாளர்கள் உற்சாகமாக வரவேற்க அங்கிருந்தவர்கள் கை தட்ட பேக் ஸ்டேஜில் இருந்து வெளிப்பட்டனர் நடுவர்கள்.
பின் நால்வரும் போட்டியாளர்களை வாழ்த்தியும், உற்சாகப்படுத்தியும் பேசியவர்கள் அவர்களுக்கான இடத்தில அமர.. முதலாவது கண்டஸ்டனின் “அன்பே அன்பே கொள்ளாதே!” ஜீன்ஸ் பட பாடலோடு சூப்பர் சிங்கர் ஆரம்பமானது.
சில,பல பிரேக்குகள் அதோடு ஆங்கரின் சில சொதப்பல்களோடு சென்ற டேக்குகளுமாக இரண்டு மணித்தியாலத்தின் பின் ஷக்தியின் பாடும் முறையும் வந்தது.
அதுவரையில் அங்கு பாடல் பாடுபவர்களின் திறமையை வியந்து பார்த்தும், இடையிடையே அங்கு சொல்லப்பட்ட நகைச்சுவைக்கு சிரித்தும், ப்ரேக் டைமில் கிடைத்த புது நட்புக்களும், தேர்வு செய்யபட்ட போட்டியாளர்களுக்கு சந்தோசமும், எலிமினேடட் செய்யப்பட்டவர்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டும் என தான் போட்டியாளர் என்பதை மறந்து பார்வையாளராக மாறி நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தவள் தன் பெயரை அறிவிக்கவும் பதட்டமானாள்.
இதயத்துடிப்பு வேகமாக அடிக்க ஒரு முறை பெற்றவர்களைப் பார்த்தவளின் கண்கள் நிகழ்ச்சியின் இடையே ரசித்த கார்த்திக் மீதும் இறுதியாக படிந்து மீண்டன.
அவன் இவள் பார்வையை கண்டு கொள்ளவில்லை, அங்கிருந்த இசைக்குழு தலைவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
ஆதித்யாவும்,அங்கு அவளுக்கு கிடைத்த நண்பர்களும் வாழ்த்து சொல்ல பார்வையை திருப்பிய ஷக்தி சின்ன சிரிப்புடன் தலை அசைத்தபடி ஸ்டேஜ்ஜை நோக்கி சென்றாள்.